• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 13

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 13


எல்லாளனுக்குக் காவல் நிலையத்துக்குப் போக வேண்டும். அந்த மாணவர்களை விசாரிக்க வேண்டும். இந்தத் தனியார் கல்வி நிறுவனத்தையும்(டியூசன் செண்டர்) கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவற்றோடு சேர்த்துப் புதுப் பிரச்சனை ஒன்றை ஆரம்பித்துவைத்திருக்கிறாள் சியாமளா.

எல்லாவற்றையும் தீர்த்துத்தான் ஆக வேண்டும். ஒரு தடவை ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டுவிட்டு அகரனுக்கு அழைத்தான். அவன் ஏற்கவில்லை. திரும்ப திரும்ப அழைத்தும் பிரயோசனம் இல்லை. எல்லாளனுக்குக் கோபம் வந்தது. முசுட்டுப் பிடிவாதம் ஒன்றுடன் விடாமல் அழைத்துக்கொண்டேயிருந்தான்.

ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அழைப்பை ஏற்றுவிட்டுப் பேசாமல் இருந்தான்.

“டேய்!”

“...”

“இருக்கிற பிரச்சினைகள் காணாது எண்டு நீயும் எரிச்சலக் கிளப்பாத அகரன்.”

“...”

“அகரா!” பல்லைக் கடித்தான் எல்லாளன்.

அப்போதும் அவன் அசையவில்லை என்றதும், “நீ வை! நான் நேராவே வந்து கதைக்கிறன்.” என்று அழைப்பைத் துண்டிக்கப் போக, “நீ இஞ்ச வர வேண்டாம்!” என்றான் அகரன் வேகமாக.

“ஏன் வரக் கூடாது? நான் வருவன்!”

“இப்ப என்னத்துக்கு இந்த நல்லவன் வேசம் எல்லாளன்? எல்லாம் முடிஞ்சுது. சோ நீ இனி நிம்மதியா உன்ர வேலையைப் பார்! உனக்குப் பொருத்தமான ஒருத்தியாப் பாத்துக் கட்டு!” என்றதும் கொதித்துப்போனான் எல்லாளன்.

“வித்தியாசமாக் கதைக்காத அகரா! என்ர பக்கமும் பிழை இருக்கிறதாலதான் பொறுமையாய்ப் போறன். அதுக்காக என்னவும் கதைக்கலாம் எண்டு நினைக்காத!” என்று எச்சரித்தான்.

அதற்குமேல் அகரானால் முடியவில்லை. “அவள் சின்ன பிள்ளையடா. விருப்பம் இல்லாட்டி வேண்டாம் எண்டு சொல்லியிருக்கலாம். உன்ன நான் பிழையா நினைச்சிருக்கவே மாட்டன். அப்பாக்கும் விளங்கியிருக்கும். அத விட்டுப்போட்டு… உன்னட்ட நான் இத எதிர்பாக்கேல்ல மச்சி.” அதுவரையில் யாரோ போன்று பேசிக்கொண்டிருந்த அகரன், மிகுந்த வருத்தத்தோடு சொன்னான்.

அவனுடைய கோபத்தை எதிர்கொண்ட எல்லாளனால் இந்த வருத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் போனது.

“இப்ப எங்க அவள்?”

“மேல. அவளின்ர அறைல.”

“அங்கிளும் வீட்டிலதானே நிக்கிறார்? நான் இப்ப வாறன் கதைக்க.” அப்போதே அனைத்தையும் பேசி முடித்துவிட நினைத்தான் எல்லாளன்.

“இல்ல மச்சான். இண்டைக்கு வேண்டாம். நாங்க மூண்டு பேருமே ஏதோ ஒரு விதத்தில மனதளவில உடஞ்சுபோய் இருக்கிறம். இப்ப என்ன கதச்சாலும் அது பிழையாத்தான் போகும்.” அவசரமாக அவனைத் தடுத்தான் அகரன்.

எல்லாளனுக்கும் அகரன் சொல்வது சரியாகத்தான் பட்டது. சியாமளா அவசரப்பட்டதினால் உண்டானதுதான் இத்தனையும். அவனும் அதே தவறைச் செய்யக் கூடாது.

ஆனால், நண்பனிடமாவது மனம் விட்டுப் பேச விரும்பினான். யாரில் சரியோ பிழையோ, இன்றைக்கு அவர்கள் மூவரும் இப்படி உடைந்துபோய் இருப்பதற்கு அவன்தான் முக்கிய காரணம்.

“அப்ப, நாங்க வழமையா போற டீக்கடைக்கு வா. எனக்கு உன்னோட கதைக்கோணும்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அகரன் அங்கே போனபோது, இருவருக்கும் தேநீருக்குச் சொல்லிவிட்டு, இவனை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான் எல்லாளன்.

“முறைக்க வேண்டியவன் நான்!” என்றபடி அவன் முன்னே அமர்ந்தான் அகரன்.

“இங்க பார் மச்சான். அண்டைக்கு அப்பிடி அங்கிள் கேப்பார் எண்டு நான் எதிர்பாக்கேல்ல. அது அதிர்ச்சியா இருந்தது உண்மை. அது வரைக்கும் அவளை நான் அப்பிடி யோசிச்சதும் இல்லை. ஆனா, அவர் கேட்ட பிறகு மறுக்கேலாமப் போச்சு. எப்பிடியோ ஒருத்தியக் கட்டத்தான் போறன். அது ஆதினியா இருந்தா உங்க எல்லாரோடயும் காலத்துக்கும் ஒண்டாவே இருக்கலாம் எண்டு நினைச்சன். இனி எனக்கு அவள்தான் எண்டு முடிவு செய்த பிறகுதான் ஓம் எண்டு சொன்னனான்.” என்றவன் ஒரு கணம் நிறுத்தித் தலையைக் கோதிவிட்டுத் தொடர்ந்தான்.

“அதே நேரம், யோசிக்காம நடக்கிற அவளின்ர குணம் எனக்குப் பிடிக்காது. அது உனக்கும் தெரியும். முந்தி அதையெல்லாம் சாதாரணமா ஒதுக்கிப்போட்டுப் போகக் கூடிய மாதிரி இருந்தது. அதுக்குக் காரணம், அப்ப அவள் எனக்கு உன்ர தங்கச்சி மட்டும்தான். இனி எதிர்காலத்தில நானும் அவளும் ஒரு வாழ்க்கையை வாழப்போறம் எண்டு முடிவான பிறகு, அவளின்ர குணம் எனக்குச் சரியா வருமா எண்டு யோசிச்சது உண்மைதான். இல்லை எண்டு சொல்லேல்ல. அவள் கொஞ்சம் மாறி, சேட்டைக் குணத்தை எல்லாம் விட்டா நல்லாருக்கும் எண்டு நினைச்சதும் உண்மைதான். அதுக்காக என்ர முடிவை மாத்துவமா எண்டு இப்ப வரைக்கும் நான் நினைச்சதே இல்ல. இனியும் நினைக்க மாட்டன்.” என்று தன் நிலையைத் தெளிவாக உரைத்தான்.

ஆனால், எந்த இடத்திலும் அவளைப் பிடித்திருப்பதாகச் சொல்லவில்லை. எப்படியோ ஒருத்தி வரப்போகிறாள், அதற்கு இவள் இருக்கட்டும் என்கிறான். அந்த இடத்திலா அவன் தங்கை இருக்கிறாள்?

ஆக, நேற்று அவள் கேட்ட கேள்விகளில் தவறில்லை! தேநீர்க் கோப்பையின் விளிம்பை ஒற்றை விரலினால் வருடிக் கொண்டிருந்த அகரனிடம் மிகுந்த இறுக்கம்.

“டேய் என்னடா? ஏதாவது சொல்லு!” பதிலற்ற அவன் மௌனத்தைப் பொறுக்க முடியாமல் கேட்டான் எல்லாளன்.

“என்ன சொல்லச் சொல்லுறாய்? அவள் ஒண்டும் புதுசா இப்பிடி இல்ல. எப்பவுமே இப்பிடித்தான். அது பிடிக்காட்டி வேண்டாம் எண்டு நீ தாராளமாச் சொல்லியிருக்கலாம். இல்லையா, கட்டுறன் எண்டு சொன்னபிறகு, நீயும் உன்ர தங்கச்சியும் வாய மூடிக்கொண்டு இருந்திருக்கோணும். இதுல, உன்ர தங்கச்சியும் நல்ல நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறாள். அவளைக் கண்டிக்காம நீ எனக்கு வந்து விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்கிறாய்.” கசப்புடன் சொன்னான் ஆதினியின் தமையன்.

“அவளை நான் கண்டிக்கேல்லை எண்டு கண்டியா நீ? உன்ர தங்கச்சியக் கூப்பிட்டுக் கேள். ஒட்டுக் கேட்டவள் நான் கண்டிச்சதையும் கேக்காமையா இருந்திருப்பாள்.” என்று எரிந்து விழுந்தான் எல்லாளன்.

“அண்ணனும் தங்கச்சியுமாச் சேர்ந்து கண்டதையும் கதைச்சுப்போட்டு, அவளைக் குறை சொல்லுறியா நீ? அவள் என்ன, உன்ர தங்கச்சிய மாதிரித் திட்டம் போட்டு ஒட்டுக் கேக்கிறதுக்கு எண்டு மினக்கெட்டு வந்தவளா?” என்று பதிலுக்குத் தானும் சீறினான் அகரன்.

“டேய்! எங்கட வீட்டில வச்சு, நானும் அவளும் மட்டும்தான் எண்டுற நினைப்பில அவள் கதைச்சதடா. அத, ஆதினி கேப்பாள் எண்டு ஆரடா நினைச்சது?”

கசப்புடன் சிரித்தான் அகரன். “அவள் கேட்டதாலதானே உங்க ரெண்டு பேரின்ர மனதிலயும் என்ன இருக்கு எண்டுறது தெரிய வந்திருக்கு. இல்லாட்டி எல்லாத்தையும் மறச்சு, ஒரு பொய்யான வாழ்க்கையத்தானே அவளுக்கு நீ குடுத்திருப்பாய். இதே வேலைய உன்ர தங்கச்சிக்கு நான் செய்தா உனக்கு எப்பிடி இருக்கும்?”

“அகரன், திரும்பவும் எனக்கு எரிச்சலக் கிளப்பாத!” என்றான் எல்லாளன் சுள்ளென்று. “அப்பிடி ஒரு பொய்யான வாழ்க்கையை அவளோட வாழ்ந்துதான் ஆகோணும் எண்டு எனக்கு என்னடா கட்டாயம்? வேண்டாம் எண்டா வேண்டாம் எண்டு சொல்லத் தெரியாத அளவுக்குக் கோழை எண்டு நினைச்சியா என்னை?”

இடமும் வலமுமாகத் தலையை அசைத்தான் அகரன். “உனக்கு விளங்கேல்ல மச்சான். இங்க பிரச்சினை அது இல்ல. இப்ப சொன்னியே, எவளையோ கட்டுறதுக்கு அவளைக் கட்டிப்போட்டுப் போறன் எண்டு. அது! அது அவளுக்கு எவ்வளவு பெரிய அடியா இருந்திருக்கும் எண்டு உனக்கு விளங்கேல்லையா? உன்ர தங்கச்சி, தனக்காகவும் அப்பாக்காகவும்தான் நீ ஓம் எண்டு சொல்லியிருக்கிறாய் எண்டு சொல்லியிருக்கிறாள். அது அவளை எந்தளவுக்குப் பாதிச்சிருக்கும் எண்டு யோசி. எவனும் கட்டி வாழமாட்டான் எண்டு சொல்லுற அளவுக்கு என்ர தங்கச்சி எந்தப் பக்கத்தால குறைஞ்சு போய்ட்டாள் எண்டு எனக்கே கோபம் வருதடா. அப்ப அவளுக்கு?”

அது உண்மைதான். சியாமளா பேசிய விதம் குறித்து அவனுக்கே கோபம் வந்ததே! இதில், அதை ஆதினியே கேட்டாள் எனும்போது எப்படி இருந்திருக்கும்?

அவளின் சுயமரியாதை மொத்தமாக அடி வாங்கியிருக்கும். சிறு புறக்கணிப்பைக் கூட அறியாமல் வளர்ந்தவள். மொத்தமாக உடைந்து போயிருப்பாள். இதனால்தான் நிச்சய மோதிரம் எடுப்பதற்குக் கூட வராமல் இருந்திருக்கிறாள்.

மனத்தில் கனமேற, “நீயும் சியாமி சொன்னதை மனதில வச்சிருந்து, நேரம் பாத்து, ஆதினிக்குப் புத்தி சொல்லியிருக்கோணும். அதைச் செய்யாமம கோபப்பட்டு, கைய நீட்டிப் பிரச்சினையைப் பெருசாக்கி வச்சிருக்கிறாய்!” என்று கடிந்தான் எல்லாளன்.

“உண்மதான். நான் செய்ததும் பெரிய பிழைதான். என்ன, உன்ர தங்கச்சி ஓதின எல்லாத்தையும் கேட்டு, அவளுக்கு அண்ணன் எண்டுறதை மறந்து, உனக்கு நண்பனா நிண்டு யோசிச்சிட்டன். அதால வந்ததுதான் இவ்வளவும். அதை அவளுக்கு அடிச்ச அந்த நிமிசமே உணந்திட்டன். ஆனா, அவள் உடைஞ்சிட்டாளேடா. எல்லாருமாச் சேந்து அவளை உடைச்சிட்டோம். அம்மா இருந்திருந்தா இப்பிடியெல்லாம் நடந்திருக்குமா எண்டு கேட்டவள். அப்பா நொருங்கியே போய்ட்டார்.” என்றவனுக்கு மேலே பேச்சு வரவேயில்லை.

பார்வையை அகற்றி, எங்கோ வெறித்துத் தன்னைச் சமாளிக்க முயன்றான்.

தலையில் வைத்துக் கொண்டாடியவளைத் தரையில் போட்டால் எப்படி நொருங்கிப்போவாள் என்பதைத்தான் கண்ணால் பார்த்தானே! யார் என்ன சொல்லியிருந்தாலும் அவன், அவன் தங்கைக்காக நின்றிருக்க வேண்டாமா?
 

நிதனிபிரபு

Administrator
Staff member
இத்தனையையும் கேட்ட பிறகும் என் அண்ணா எனக்காக நிற்பான் என்று நம்பியிருக்கிறாள். அவள் மனத்தை உணராமல், அதிலிருந்த காயத்தை அறியாமல், என்ன வேலை பார்த்துவிட்டான்?

விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்தான். அவனையே பார்த்திருந்த எல்லாளனுக்கும் கதைக்க முடியாமல் போனது. மேசையில் இருந்த நண்பனின் கரத்தை அழுத்திக்கொடுத்தான்.

பார்வை இவனிடம் திரும்ப, “தெரிஞ்சோ தெரியாமலோ எல்லாருமாச் சேந்து பெரிய பிழை செய்திட்டம் மச்சான்.” என்றான் உடைந்துபோன குரலில்.

எல்லாளனுக்கும் புரிந்தது. அன்றைக்கு அவன் கையை ஓங்கிய போதும் கலங்கி நின்றாளே. கண்ணீர் கூட வந்ததாக நினைவு. திருமணத்திற்குச் சம்மதம் சொல்லிவிட்டு, கையை ஓங்கிக் கொண்டு வருகிறானே என்றெண்ணிக் கவலைப்பட்டிருப்பாளோ? தம்மை அறியாமலேயே அடுத்தடுத்து அவளைக் காயப்படுத்தி இருக்கிறார்கள். அதனால்தான் மொத்தமாக உடைந்து விட்டாளோ?

“நான் ஒருக்கா அவளோட கதைக்கப் போறன்.” என்றான் எல்லாளன்.

அகரன் மறுத்துத் தலையசைத்தான். “இல்ல மச்சி, வேண்டாம். அதுக்கு நானே விடமாட்டன். உனக்கு அவளைப் பிடிக்கேல்ல. அவளும் உன்ன வேண்டாம் எண்டு சொல்லிட்டாள். இது இப்பிடியே முடியட்டும், விடு.” என்றான் முடிவாக.

சுர் என்று சிறு கோபம் மூண்டது எல்லாளனுக்கு. “அப்பிடியெல்லாம் விடேலாது. எனக்கு அவளோட கதைக்கோணும். நான் கதைப்பன். ஆரம்ப காலம் நீ சியாமியோட கதைக்கேக்க நானும் உனக்கு இதையேதான் சொன்னனான். அப்ப நீ கேட்டியா?” ஒருவிதப் பிடிவாதத்துடன் நியாயம் கேட்டான் அவன்.

“தூவும் இதுவும் ஒண்டில்ல எல்லாளன். எனக்கு அவளைப் பிடிச்சிருந்தது. அவளுக்கும் என்னைப் பிடிச்சிருந்தது. அதாலதான் நீ சொல்லியும் நான் கேக்கேல்லை. அது வேற. சரி, நீ சொல்லு, உனக்கு என்ர தங்கச்சியப் பிடிச்சிருக்கா? அவள்ல விருப்பம் இருக்கா? அப்பிடி இருந்தாச் சொல்லு, நான் கதைக்க விடுறன்.”

முகத்திற்கு நேராகக் கேட்ட நண்பனிடம் பொய்யுரைக்க முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான் எல்லாளன்.

அகரனுக்கு வலித்தது. பிடிக்காதவனைப் பிடித்து வைக்கவும் பிடிக்கவில்லை.

“யோசிக்காமச் சொன்ன சம்மதத்துக்காக அதையே பிடிச்சுக்கொண்டு நிக்க நினைக்காத. அது இன்னுமின்னும் பிரச்சினையைப் பெருசாக்குமே தவிரக் குறைக்காது. அதால, இது இதோடயே முடியட்டும்!” என்றான் மீண்டும்.

திரும்ப திரும்ப அவன் அதையே சொல்லவும் எல்லாளனுக்கு எரிச்சலாயிற்று.

“இங்கப் பார்! இனி என்ன நடந்தாலும் எனக்கு அவள்தான். அவளுக்கு நான்தான். இந்தக் காதல் கத்தரிக்காய் எல்லாம் இருக்கா எண்டா இல்லதான். அதுக்கு இப்ப அவசரமும் இல்ல. கலியாணம் பேசியாச்சு எண்டதும் காதலிக்க நான் என்ன மெஷினா? இல்ல, சின்ன பிள்ளையா கனவில மிதக்க? பிடிப்பு, காதல் எல்லாம் போகிற போக்கில வந்து சேரும். விளங்கினதா உனக்கு? அந்த விசரிக்கும் வயசு இருக்கு. முதல் அவளைப் படிச்சு முடிக்கச் சொல்லு. அதுக்குப் பிறகு அவளை மூச்சு முட்டக் காதலிக்கிறன். வந்திட்டினம் அண்ணனும் தங்கச்சியும் ஆளுக்கொரு கேஸ் ஃபைலை தூக்கிக்கொண்டு!” என்றுவிட்டு எழுந்து போனான் அவன்.

*****

வைத்தியசாலை நோக்கித் தன் ஜீப்பை செலுத்திக்கொண்டிருந்தான் எல்லாளன். அதிக போதையில் இருந்த மாணவனின் நிலை மோசமாக இருந்ததில் அவர்கள் இருவரையும் வைத்தியசாலையில் சேர்த்திருப்பதாகத் தெரிவித்திருந்தான் கதிரவன்.

அங்கே, அவனை மூன்று ஆண் செவிலியர்கள் தடுத்துப் பிடித்தபடி நின்றிருந்தனர்.

“ஒரு இடத்தில இருக்கிறார் இல்ல சேர். ஓடப் பாக்கிறார்.” இவனைக் கண்டதும் செவிலியர்களில் ஒருவர் சொன்னார்.

அப்போதுதான் அவனை நன்றாகக் கவனித்தான் எல்லாளன். வைத்தியசாலையின் கட்டிலில் அமர்ந்திருந்தான். யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. இடப்புறம் வலப்புறம் என்று முகத்தை மாற்றி மாற்றித் திருப்பிக்கொண்டிருந்தான்.

கண்கள் ஓரிடத்தில் நில்லாமல் அலைபாய்ந்தது. தேகம் முழுவதிலும் ஒரு நடுக்கம். கை விரல்கள் ஒவ்வொன்றும் அதுபாட்டுக்குக் காற்றில் அலைந்துகொண்டிருந்தன. முகத்தில் அளவுக்கதிகமான பதட்டம். அவன் எந்தளவு தூரத்துக்குப் போதைக்கு அடிமையாகி இருக்கிறான் என்று, எல்லாளனுக்கே அப்போதுதான் புரிந்தது.

“இவனுக்கு என்ன பெயர்?” என்றான் மற்றவனிடம்.

“அருள் சேர்.”

“அருள்!” சற்றுச் சத்தமாக அழைத்தான்.

விழுக்கென்று நிமிர்ந்து இவனைக் கூர்ந்து பார்த்தான். யார் என்று இனம் கண்டு கொண்டதும் வேகமாக எழுந்தான். “எனக்கு இப்ப மருந்து வேணும். ஊசியாவது இருக்கா? ஆரக் கேட்டாலும் நீங்க வந்தாத்தான் தருவம் எண்டு சொல்லினம். கொண்டு வந்தனீங்களா?” என்று படபடத்தான்.

“நீ முதல் அமைதியா இரு. உனக்கு ஏன் இவ்வளவு பதட்டம்?”

“நான் எங்க பதட்டப்படுறன்? நல்லாத்தான் இருக்கிறன். எங்க மருந்து? எத்தின நாளா அலையிறது? எனக்கு இப்ப வேணும். இல்லையோ, என்ன செய்வன் எண்டு தெரியாது.” என்று மிரட்டினான்.

இதற்குள் அங்கே வைத்தியர் வந்தார். அருளை விட்டுவிட்டு அவரோடு தனியாகச் சென்று கதைத்தான் எல்லாளன்.

“கிட்டத்தட்ட இருபத்திநாலு மணித்தியாலமும் போதைலயே இருந்து பழகி இருக்கிறான். இப்ப அது இல்லாம அவனால இருக்கவே ஏலாது. ஆள் நிதானத்திலேயே இல்ல. இனியும் இப்பிடியே விட்டா ஆபத்திலதான் முடியும்.” என்று வைத்தியர் சொல்லி முடிக்க முதலே, அறைக்குள் களேபரம்.

அங்கிருந்த செவிலியர்களை எல்லாம் தள்ளி விழுத்திவிட்டு ஓடி வந்தான் அருள்.

“இப்ப எனக்கு ஊசி ஏத்தப் போறீங்களா இல்லையா?” எல்லாளனைப் பார்த்துக் கத்திவிட்டு, வேகமாக அவன் இடையில் இருந்த துப்பாக்கியினை உருவ முயன்றான்.

அடுத்த நொடியே அவனைத் தன் கைகளுக்குள் சுருட்டி மடக்கியிருந்தான் எல்லாளன்.

அவனின் கிடுக்குப் பிடியைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதான் அருள். “எனக்கு வேணும் சேர். அது இல்லாம என்னால இருக்கேலாது. தொண்ட வரளுது. வயிறெல்லாம் எரியுது.” என்று கெஞ்சினான்.

அதற்குப் பதில் சொல்லாது, “இவ்வளவு நாளும் இதெல்லாம் உங்களுக்கு எங்க இருந்து கிடைச்சது?” என்று தன் விசாரணையை ஆரம்பித்தான்.

“அது... அது தெரியாது சேர்.” நிதானத்தில் இருந்தவன் சொன்னான்.

“ஓ! தெரியாது. ஓகே! போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கொண்டு போய் விசாரிச்சாத் தெரியவரும்தானே?” எல்லாளன் இலகுவாகச் சொல்ல, அவனுக்கு நடுங்கியது.

“சத்தியமா சேர், ஆர் என்ன எண்டு தெரியாது. கறுப்பு பைக்ல கறுப்பு ஹெல்மெட்டால முகம் மறைச்சு, ஒரு ஆள் வரும். அவர் சொல்லுற காசக் குடுத்தா, லொலி, டேப்லெட்ஸ், ஊசி எது எண்டாலும் தருவார். அதுவும் எப்ப எப்பிடி எண்டெல்லாம் தெரியாது. அந்தச் சந்தில நிப்பம். வந்தா வாங்குவம். இல்லாட்டி இல்ல. குரலை வச்சுத்தான் ஆம்பிளை எண்டே தெரியும் சேர். இப்ப கொஞ்ச நாளா ஆள் வரேல்ல சேர். அதுதான்…” என்று இழுத்து நிறுத்தினான் மற்றவன்.

யார் அந்தக் கறுப்பாடு? கண்டுபிடித்தே ஆக வேண்டும்! அருளைப் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்து கதிரவனுக்கு அழைத்தான்.

“நான் நினைக்கிறது சரியா இருந்தா, சாமந்திக்கு போதை மருந்து வித்தவன் இடத்தை மாத்திட்டான். இல்ல, ஒரு குரூப்பா டியூஷன் செண்டர்ஸை குறி வச்சிருக்கிறாங்கள். நாங்க அந்த டியூஷன மட்டுமே காவல் காத்தாக் காணாது. முடிஞ்சவரைக்கும் எல்லா டியூஷன் செண்டர்ஸுக்கும் ஆள் போடுங்க. அதச் சுத்தி இருக்கிற சந்தி, பெட்டிக்கடை, பிள்ளைகள் கூடுற மரத்தடியா இருந்தாக் கூட விடாமக் கண்காணிங்க. வொலண்டியரா வேர்க் பண்ணுற ஆக்கள் எல்லாரையும் ரெடி பண்ணுங்க. இது ஒரு அண்டர்கிரவுண்ட் ஒப்பரேஷன் மாதிரி இருக்கட்டும். பதினொண்டு, பன்னிரண்டு வகுப்புகளுக்கு கிளாஸ் எடுக்கிற டீச்சர்ஸ கவனிச்சு, அவேன்ர வீட்ட செக் பண்ணோணும். அது, ஒரே நாள்ல ஒரே நேரத்தில நடக்கோணும் கதிரவன். அவன் உசாராக முதல் நீங்க வேலைய முடிக்கோணும்!” என்று உத்தரவிட்டான்.

அவன் சொன்ன வேகத்திலேயே அதன் தீவிரத்தை உணர்ந்து, “ஓகே சேர்! இப்பவே எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்றன். வேலைய முடிச்சிட்டுச் சொல்லுறன்!” என்றான் கதிரவன்.

*****

இங்கே, ஆதினியின் மெயிலைப் பார்த்திருந்தான் காண்டீபன். புருவம் சுருக்கி யோசித்துவிட்டு, ‘ஹாய் மா, நாளைக்குப் பின்னேரம் வீட்டுக்கு வா.’ என்று எழுதி, கூடவே தன் வீட்டு விலாசத்தையும் கைப்பேசி இலக்கத்தையும் சேர்த்து அவளுக்கு அனுப்பிவிட்டான்.
 

Goms

Active member
கதையின் விறுவிறுப்பு ஆரம்பிச்சுடுச்சு...
 
Top Bottom