• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 15

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 15

காண்டீபனின் வீடு ஊருக்குள் சற்று உள்ளே அமைந்திருந்தது. ஆதினியைக் கண்டதும் வளர்ந்த பெரிய நாய் ஒன்று குரைத்துக்கொண்டு ஓடி வந்தது. இவள் பயந்து நிற்க, “அது கடிக்காது. நீ வா!” என்று இன்முகமாக வரவேற்றான் காண்டீபன்.

அத்தனை நேரமாக இல்லாத தயக்கம் ஒன்று அவனைக் கண்டதும் அவளைக் கவ்விப் பிடித்தது. அதுவும் இத்தனை நாள்களாக முழுக்கை ஷேர்ட், ஜீன்ஸ் என்று ஒரு விரிவுரையாளனாக மட்டுமே பார்த்துப் பழகியவனை இன்றைக்கு சாதாரண ட்ராக் பாண்ட், டீ ஷேர்ட்டில் பார்க்கையில் சற்றே சங்கடமாக உணர்ந்தாள்.

அப்போதுதான் இங்கே வந்தது சரியா என்கிற கேள்வியும் எழுந்தது. இதில் அவனைத் தவிர்த்து வேறு யாரையும் காணவும் இல்லை என்றதும் முற்றத்திலே நின்றாள்.

சும்மாவே அவளைப் பொறுப்பில்லை, கவனமில்லை, பக்குவமில்லை என்கிறார்கள். இதில் இப்படி இங்கு வந்ததை அறிந்தால் இன்னும் என்ன சொல்லுவார்களோ? வந்திருக்கக் கூடாதோ?

அவள் தயக்கத்திற்கான காரணம் புரியாமல் காண்டீபனின் புருவங்கள் ஒரேயொரு நொடிதான் சுருங்கி மீண்டன. காரணம் பிடிபட்டுவிடவும் உதட்டை முறுவல் ஆக்கிரமித்துக்கொள்ள, சுவாரசியமாக அவளை நோக்கினான்.

“என்ன? இந்த வாத்தியப் பற்றி ஒண்டும் தெரியாது. வா எண்டதும் வெளிக்கிட்டு வந்திட்டமே, என்ன நடக்குமோ எண்டு யோசிக்கிறியோ?” குரலில் மெல்லிய கேலி இழையோட வினவினான்.

அவன் தன்னைக் கண்டுகொண்டதில் அவள் முகம் இலேசாகச் சிவந்தது. ஆனாலும் சமாளித்து, “அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்ல. உங்கட வைஃப் இல்லையா சேர்?” என்று சாதாரணமாகக் காட்டி விசாரித்தாள்.

“அதென்ன சேர்? அண்ணா எண்டே சொல்லு.” விரிந்த சிரிப்புடன் சொன்னவன், “வைஃப் மட்டும் இல்ல. அப்பா இருக்கிறார். மாமி இருக்கிறா. ஜிம்மி இருக்கு. பயப்பிடாம வா!” என்றான் மீண்டும்.

இப்போது அவனை நேரடியாகவே முறைத்தாள் ஆதினி. “நான் பயப்பிடுறன் எண்டு உங்களுக்கு ஆர் சொன்னது? அண்டைக்குச் சொன்னனீங்கதானே, அதுதான் கேட்டனான்.” என்றாள் வேகமாக.

“ஓ! அப்ப பயமில்லை?” அவன் கண்கள் விடாமல் அவளைச் சீண்டிச் சிரித்தன.

“இல்ல இல்ல இல்ல!” முகம் சிவக்க அழுத்தம் திருத்தமாகச் சொன்னவளுக்குள் தைரியம் மீண்டிருந்தது. அப்படி என்ன செய்துவிடுவான் என்றுதான் பார்ப்போமே! நேராக நிமிர்ந்து நின்று அவனையே பார்த்தாள்.

தவறாக நடந்துதான் பாரேன் என்று சவால்விட்ட அந்த விழிகளைக் கண்டு, அதற்குமேல் அடக்க முடியாமல் சத்தமாகச் சிரித்தான் காண்டீபன்.

முகம் இரத்தமெனச் சிவக்க, “சேர்!” என்று அதட்டினாள் அவள்.

செல்லமாக அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு, “மிதிலா! ஆர் வந்திருக்கிறா எண்டு இஞ்ச வந்து பார்.” என்று வீட்டைப் பார்த்துக் குரல் கொடுத்தான்.

“வந்திட்டாவா?” என்றபடி வீட்டுக்குள்ளிருந்து விரைந்து வந்தாள், அந்த மிதிலா.

அவளைப் பார்த்ததும் பார்த்தபடி நின்றுவிட்டாள் ஆதினி. அழகென்றால் அழகு அத்தனை அழகு.

“இவாதான் நான் சொன்ன முக்கியமான ஆள். வீட்டுக்க கூப்பிடு. ஆள் என்னைப் பாத்துப் பயப்பிடுது.” என்றான் வேண்டுமென்றே.

“சேர்ர்ர்ர்! நான் பயப்பிடேல்லை எண்டு உங்களுக்கு எத்தினை தரம் சொல்லுறது?” சிரிப்பும் முறைப்புமாக அதட்டினாள் ஆதினி.

மிதிலாவின் முகத்திலும் மெல்லிய சிரிப்பு. “நீர் வாரும். அவர் அப்பிடித்தான், சும்மா விளையாடுவார்.” என்று அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.

அங்கே, அவர்களின் விறாந்தையிலேயே ஒரு கரையாகக் கட்டில் ஒன்று போடப்பட்டிருக்க, அதில் படுத்திருந்தார், ஒரு வயதானவர். இவளைக் கண்டதும், “வாம்மா!” என்றார் கனிந்த முகத்தோடு.

“இவர்தான் என்ர அப்பா.” என்று அறிமுகம் செய்துவிட்டு, “இப்பப் பயம் போயிருக்குமே.” என்றான் காண்டீபன்.

உண்மையிலேயே அப்போதுதான் அவளின் இறுக்கம் தளர்ந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல், “ஹல்லோ சேர், நான் என்னத்துக்குப் பயப்பிட? நீங்க சேட்டை விட்டீங்க எண்டா ஒரு ஃபோன்கோல் போதும். அடுத்த நிமிசமே போலீஸ் வந்து நிக்கும், தெரியுமா?” என்று மிரட்டினாள்.

“பாத்தீங்களாப்பா, ஆள் எப்பிடி வெருட்டுது எண்டு? எங்கட வீட்டுக்கு வந்திருக்கிறா எண்டதும் ஆளைச் சாதாரணமா நினைச்சிடாதீங்க. நீதிபதி இளந்திரையன் சேரின்ர ஒரேயொரு மகள்.” என்று அவன் சொன்னதும் அவரின் கண்கள், அவனிடம் உண்மையா என்று வினவிற்று. அவனும் ஆம் என்பதாகத் தலையசைத்தான்.

“அது மட்டும் இல்ல. ஏஎஸ்பி எல்லாளனின்ர வருங்காலத் திருமதி.” என்று கூடுதல் தகவலும் தந்தான்.

அவர் முகம் விகசித்துப் போயிற்று. கண்கள் கூட இலேசாகக் கலங்க, “என்ர செல்லம்! இஞ்ச வாங்கோம்மா.” என்று அழைத்து, அவளின் கையைப் பற்றிக்கொண்டார்.

அவர் விழிகள் அவள் முகத்தைச் சொல்லிலடங்காப் பாசத்தைச் சுமந்து மொய்த்தன. “சந்தோசம் ஆச்சி. நல்ல சந்தோசம். ரெண்டு பெரும் எண்டைக்கும் நல்லாருக்கோணும்.” என்றார் பரிதவித்து நெகிழ்ந்த குரலில்.

ஆதினிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், கண்ணுக்குத் தெரியாத பாசவலை ஒன்று, அவளைச் சுற்றிப் படர்வதை உணர்ந்து, நெகிழ்ந்து நின்றாள்.

“அப்பா சுகமா இருக்கிறாராமா? எல்லாளன் என்னவாம்? உங்களுக்கு ஒரு அண்ணாவும் இருக்கோணுமே?”

அந்தக் கேள்விகளில் வீட்டில் நடந்தவை எல்லாம் நினைவில் வந்தன. முகம் கசங்கிப் போக, வலி நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. வேகமாகச் சமாளித்துக் கொண்டு, “எல்லாரும் சுகமா இருக்கினம் அங்கிள்.” என்று முறுவலிக்க முயன்றாள்.

“எப்ப கலியாணம்?”

“அது... அது சும்மா பேச்சு மட்டும்தான் நடந்தது. இப்ப நிப்பாட்டியாச்சு. கலியாணம் அண்ணாக்குத்தான் நடக்கப்போகுது.” அவர் முகம் பார்ப்பதைத் தவிர்த்தவாறு சொன்னாள்.

காண்டீபன் யோசனையோடு அவளைப் பார்த்தான்.

“உன்ர அப்பா என்ன சொன்னவர்?” என்று விசாரித்தான்.

“அப்பாக்கு என்ன எண்டாலும் என்ர விருப்பம்தான்.”

“ஓ! அப்ப உனக்குத்தான் விருப்பம் இல்லை?”

“எனக்கு இஞ்ச இருக்கவே விருப்பம் இல்ல.”

உண்மையில் அப்படித்தான் உணர்ந்துகொண்டிருந்தாள் ஆதினி. அவளால் இனியும் அவர்களின் முகங்களைப் பார்த்துக்கொண்டு, அவர்களோடே இருக்க முடியும் போல் இல்லை. ஒரு விலகல் அவசரமாகத் தேவைப்பட்டது.

அவள் எல்லாளனைப் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை என்பதைக் குறித்துக்கொண்டான் காண்டீபன்.

அதற்குள் அவர்கள் மூவருக்கும் தோடம்பழ(ஆரஞ்சு) ஜூஸ் கொண்டுவந்தாள் மிதிலா. தட்டைப் பற்றியிருந்த அவள் கைகளில் மெல்லிய நடுக்கம். வேகமாக எழுந்து சென்று, தட்டினைத் தான் வாங்கிக்கொண்ட காண்டீபன், ஒன்றை எடுத்து ஆதினிக்குக் கொடுத்தான். மற்றையதை மிதிலாவுக்கு நீட்டினான்.

“அது உங்களுக்கு.”

“நான் இப்பதானே சாப்பிட்டனான். நீ குடி.”

“இல்ல. எனக்கும்...” என்று ஆரம்பித்தவள், அவன் பார்வையில் சொல்ல வந்ததைச் சொல்லாமல் விட்டுவிட்டு, ஜூஸை எடுத்துக்கொண்டாள்.

அடுத்த கிளாஸை எடுத்து, கையெட்டும் தூரத்தில் இருந்த மேசையில் வைத்துவிட்டு, தந்தையின் அருகில் அமர்ந்து, அவரை எழுப்பித் தன் தோளில் சாய்த்துக்கொண்டு, ஜூஸை எட்டி எடுத்து அவருக்கு அருந்தக் கொடுத்தான்.

எல்லாவற்றையும் சற்றே வித்தியாசமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆதினி.

“அப்பாவும் ஒரு காலத்தில் இன்ஸ்பெக்டரா இருந்தவர்தான். ஆக்சிடென்ட் ஒண்டில இடுப்புக்குக் கீழ இயங்காமப் போயிட்டுது.” அவள் கேட்காத கேள்விக்குப் பதில் சொன்னான் அவன்.

“சொறி அங்கிள்.” மனம் கனத்துவிட, என்ன சொல்வது என்று தெரியாது சொன்னாள் ஆதினி.

“அதெல்லாம் எப்பவோ நடந்ததம்மா. அத விடுங்கோ. நல்ல மகன், அருமையான மருமகள், நிம்மதியான வாழ்க்கை. அதால இதெல்லாம் பெரிய குறையாத் தெரியிறேல்ல.” என்றார் அவர்.

சட்டென்று அணிந்திருந்த டீ ஷேர்ட்டின் கொலரை பெருமையாகத் தூக்கிவிட்டான் காண்டீபன்.

ஆதினிக்குச் சிரிப்பு வந்தது. இதனால்தானே பெரிதாகப் பழக்கம் இல்லாத போதும் அவனைத் தேடி வந்தாள்.

என்னவோ அவளின் காயத்துக்கான மருந்து அவனிடம் இருப்பது போல் ஆழ்மனது நம்பிற்று. சிரிப்புடன் மிதிலாவைத் திரும்பிப் பார்த்தாள். அவளும் மென் முறுவலுடன் அவனைத்தான் பார்த்திருந்தாள்.

அந்தக் குட்டிச் சிரிப்பு அவளின் முகத்துக்கு மிகுந்த பொலிவைக் கொடுத்தது. ஆதினியால் அவளிடமிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை.

“என்ன, அப்பிடிப் பாக்கிறாய்?” அவளைக் கவனித்து விசாரித்தான் காண்டீபன்.

“மிதிலாக்கா நல்ல வடிவு.”

“அதாலதான் துரத்திப் பிடிச்சுக் கட்டினான்.” மிதிலாவிடம் கண்களால் சிரித்தபடி சொன்னான் அவன். “சரி சொல்லு, அப்ப நான் வடிவில்லையா?”

“அக்காவோட ஒப்பிடேக்க...” என்று இழுத்துவிட்டு குறுஞ்சிரிப்புடன் இல்லை என்று குறுக்காகத் தலையை அசைத்தாள் ஆதினி.

சத்தமாக நகைத்தான் காண்டீபன். “உன்ர அக்காவக் கேட்டுப் பார், நான்தான் வடிவு எண்டு சொல்லுவாள்.”

“அப்பிடியா அக்கா? சேர் வடிவா? இல்லை எல்லா! நீங்க ஏன் போயும் போயும் இவரைக் கட்டினனீங்க?”

“எங்க விட்டாத்தானே. வேற வழியில்லாமக் கட்டினதுதான்.”

மனைவியின் பதிலைக் கேட்டுக் காண்டீபனின் முகத்தில் இருந்த இளநகை மங்கவில்லை. ஆனால், பார்வை ஒரு நொடி அவளில் படிந்து மீண்டது.

மிதிலாவினுள் சட்டென்று ஒரு தடுமாற்றம். அவர்கள் அருந்தி முடித்த கிளாசுகளை பொறுக்கிக்கொண்டு உள்ளே நடந்தாள்.

தந்தையை மீண்டும் கட்டிலில் சரித்து, அவருக்கு ஏற்ற வகையில் படுக்க வைத்துவிட்டு எழுந்த காண்டீபன், “வா! கொஞ்சம் நடந்திட்டு வருவம்.” என்று அவளை அழைத்தான்.

“என்னத்துக்கு?” தான் ஏன் வந்தோம் என்பதையே மறந்து வினவினாள் ஆதினி.

“சும்மாதான். வா!”

“மிதிலாக்கா, நீங்களும் வாறீங்களா?”

அவள் காண்டீபனைப் பார்க்க, “அவள் சாப்பிட ஏதாவது செய்யட்டும். நீ வா!” என்று இவளை மட்டும் கூட்டிக்கொண்டு போனான் அவன்.

“என்ன பிரச்சினை?” வீட்டை விட்டு வெளியே வந்ததும் வினவினான்.

திரும்பி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் ஆதினி.
அவள்தான் எதையும் காட்டிக் கொள்ளவில்லையே. பிறகும் எப்படிக் கண்டுபிடித்தான்?

“எல்லாளனோட உனக்கு என்ன சண்டை?” என்றான் திரும்பவும்.

அப்போதும் பதில் சொல்லாமல் நடந்தாள் ஆதினி.

“அவன் சீரியஸ் டைப். நீ விளையாட்டுப் பிள்ளை. ரெண்டு பேருக்கும் முட்டிட்டுதா?”

அவனிடம் ஆறுதல் தேடித்தான் வந்தாள். அதற்கென்று வீட்டில் நடந்தவற்றைச் சொல்லவும் தயங்கினாள்.

“ஆதினி, நான் உனக்கு அண்ணா மாதிரி. என்னை நம்பினா நீ தாராளமாச் சொல்லலாம். என்னட்ட இருந்து என்ர மனுசிக்குக் கூடக் கத போகாது. நீ சொல்லாட்டியும் பரவாயில்ல. நான் ஒண்டும் நினைக்க மாட்டன், சரியா? ஆனா, எதையும் மனதுக்க போட்டு அழுத்தாத.” என்றான் ஆறுதல் தரும் வகையில்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அதற்கே அவளுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. முகத்தை எதிர்ப்புறத்தில் திருப்பித் தன்னைச் சமாளிக்க முயன்றாள்.

அதுவே ஆழமாகக் காயப்பட்டு, உடைந்த மனநிலையில் இருக்கிறாள் என்று காட்டிக்கொடுக்க, ஒன்றும் சொல்லாமல் திரும்பவும் அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டான் அவன்.

“சேர்! நீங்க நெடுக(எப்பவும்) என்ர தலையைக் குழப்புறீங்க!” என்று முகத்தைச் சுருக்கினாள் அவள்.

“ஏற்கனவே அது குருவிக்கூடு மாதிரித்தான் இருக்கு. இதுல புதுசா நான் வேற குழப்போணுமா?” என்றான் சிரிப்புடன்.

அதன் பிறகு அதைப் பற்றி அவன் ஒன்றும் கேட்கவில்லை. வேறு பேசிக்கொண்டு வந்தான். ஆதினிக்குத்தான் அவன் பேச்சில் லயிக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில், “அவருக்கு என்ன, என்ர குணங்களைப் பிடிக்காது. அப்பா கேட்டதும் விருப்பம் இல்லை எண்டு சொல்லேலாம ஓம் எண்டு சொல்லிட்டார். அப்பிடி விருப்பம் இல்லாம ஒரு கலியாணம் என்னத்துக்கு? அதான் நான் வேணாம் எண்டு சொல்லிட்டன்.” என்றாள் ஒரு வேகத்துடன்.

அதன் பிறகு பேசுவது இலகுவாக இருக்க மேலோட்டமாக நடந்தவற்றைச் சொன்னாள்.

“முதலாவது விசயம், உனக்கு அடிச்சது உன்ர அண்ணா. அதையெல்லாம் பெருசா எடுக்கக் கூடாது. அவரே வந்து மன்னிப்பும் கேட்டிருக்கிறார். பிறகு என்ன? ரெண்டாவது, சியாமளா சொன்னத நீ ஏன் பிடிச்சுக்கொண்டு தொங்குறாய்? ஒவ்வொருத்தரும் எங்களைப் பற்றி ஒவ்வொரு மாதிரித்தான் கதைப்பீனம். அதையெல்லாம் காதில விழுத்திறதா?” என்றான் மென் குரலில்.

அவளும் அப்படித்தான் நினைக்கிறாள். என்னைப் பற்றிக் கதைக்க இவர்கள் யார், நானும் அதை நினைத்து வருந்துவதா என்று அதிலிருந்து வெளியில் வரத்தான் விரும்புகிறாள். முடிந்தால் தானே?

அதுவரையில் அவளைப் பற்றிய சுய அலசலை அவள் செய்ததில்லை. ஆனால், அன்றைக்குப் பிறகு அது அடிக்கடி நடக்கிறது. அதும் நேர்மறையாக அல்லாமல் எதிர்மறையாக.

“என்னம்மா?” அவள் சிந்தனையில் இடையிட்டான் காண்டீபன்.

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தவள், அவனிடமிருந்து பார்வையை அகற்றிக்கொண்டு, “நான் அப்பிடித்தானோ எண்டு எனக்கே படுது அண்ணா.” என்றாள் உடைந்த உரலில்.

“அவர்… எல்லாளன்… அவரா எதையும் சொல்லேல்லத்தான். ஆனா, அவரின்ர தங்கச்சி சொன்னதுக்குக் கண்டிச்சவரே தவிர, நான் அப்பிடி இல்லை எண்டு சொல்லேல்ல. அதின்ர அர்த்தம், அவரும் என்னை அப்பிடி நினைக்கிறார் எண்டுறதுதானே?” என்றவளுக்கு மூக்குச் சிவந்து, விழிகள் கரித்துக்கொண்டு வந்தன.

“அவன் கிடந்தான் விசரன்!” என்றான் இவன் உடனேயே.

“என்ன?” திகைத்துத் திரும்பி அவனைப் பார்த்தவள், அவன் கண்களில் தெரிந்த சிரிப்பைக் கண்டு, தானும் பக்கென்று சிரித்தாள்.

“இதுதான் எங்கட ஆதினிக்கு நல்லாருக்கு. இத விட்டுப்போட்டுக் கண்ணைக் கசக்கிறது எல்லாம் என்ன பழக்கம்?”

முறுவல் மாறாமல் அவனைப் பார்த்தாள் ஆதினி. எப்போதெல்லாம் அவள் உடைகிறாளோ, அப்போதெல்லாம் எதையாவது சொல்லிச் சிரிக்க வைத்துவிடுகிறவனின் மீது, அவள் மனதிலும் ஒரு விதப் பாசம் படர்ந்தது.

“சரி, நான் கேக்கிறதுக்குப் பதில் சொல்லு! எப்பவும் ஒரு போலீஸ் சொல்லுறதைத்தான் சாதாரண மக்கள் கேப்பினம். அது, அந்தப் பதவிக்கான மரியாதை, பயம் இப்பிடி எதுவாவும் இருக்கும். ஆனா, அண்டைக்கு எட்டுச்செலவு வீட்டில நீ சொன்னதத்தான் ஒரு போலீஸ்காரன் கேட்டவன். அது எப்பிடி? உன்னட்ட அப்பிடி ஏதும் அதிகாரம் இருந்ததா? நீ ஏதும் பதவில இருக்கிறியா? இல்ல, உண்மையாவே அவன் உனக்குப் பயந்துதான் நீ சொன்னதைச் செய்தவனா?”

அவன் என்னவோ சாதாரணமாகத்தான் வினவினான். ஆனால், அவன் கேட்ட கேள்விகள் முகத்தில் அறைந்த உண்மையில் ஆதினி நிலைகுலைந்து போனாள். அவள் முகத்திலிருந்த சிரிப்பு, துணிகொண்டு துடைத்தது போன்று மறைந்து போனது.

“உன்ர அப்பா, அண்ணா, எல்லாளன் மூண்டு பேருக்கும் இருக்கிற பதவியும், அதால அவேட்ட இருக்கிற அதிகாரமும்தானே உன்னை அப்பிடி நடக்க வச்சது? அந்தப் போலீஸ்காரனையும் உனக்கு அடங்கிப்போக வச்சது. அது சரி எண்டு நினைக்கிறியா? இதுவே, ஒரு சாதாரண ஆதினி, என்னதான் தைரியசாலியா இருந்தாலும் அப்பிடி நடந்திருப்பாளா? நடந்திருந்தா, அந்தப் போலீஸ் அடங்கித்தான் போயிருப்பானா?”

அவனுடைய எந்தக் கேள்விக்கும் ஆதினியிடம் பதில் இல்லை. இதுவரையில் அவள் இப்படி யோசித்ததும் இல்லை. இப்போது தன் செய்கைகளைக் குறித்தே வெட்கப்பட்டாள்.

கதிரவனை முதன் முதலாகப் பார்த்த நாளில் கூட எவ்வளவு அதிகாரமாக நடந்தாள். பொறுப்பான பதவியில் இருந்த அவனை அடக்கிவிட்டுத்தானே ஓய்ந்தாள். அதில் ஒரு பெருமை வேறு!

அவளைப் பற்றி என்ன நினைத்திருப்பான்? முகம் கன்றிவிட, காண்டீபனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நின்றாள்.

அவளை அப்படிப் பார்க்க அவனுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், சிலவற்றைப் பேசாமல் விளங்காதே!

“நீ இன்னும் சின்ன பிள்ளைதான். ஆனா, இதையெல்லாம் யோசிக்காம நடக்கிற அளவுக்குச் சின்ன பிள்ளை இல்ல. விளங்குதா?” என்றான்.

அவள் விழிகள் கலங்கிப்போயின. கண்ணீரை உள்ளுக்கு இழுத்தபடி தலையை மேலும் கீழுமாக அசைத்தாள்.

அவளையே பார்த்தான் காண்டீபன். அவள் தன் தவறுகளை உணர்ந்து, திருத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் எடுத்துச் சொன்னான். ஆனால் இப்போது, அடி வாங்கிய குழந்தையாகக் கலங்கி நிற்பவளைக் கண்டு உள்ளம் பிசைந்துவிட, “நீ அழுறதப் பாக்க நல்லாருக்கே. இன்னும் கொஞ்சம் அழு, பிளீஸ்!” என்றான் வேண்டும் என்றே.

“அண்ணா!” அவனை முறைக்க முயன்று முடியாமல் கண்களில் நீருடன் சிரித்தாள் ஆதினி.

அவன் முகமும் மலர்ந்து சிரித்தது. ஆசையோடு அவளின் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டான். மீண்டும் திரும்பி வீடு நோக்கி நடந்தனர்.

“இப்ப சரியாகிட்டியா? மனதில இருந்த பாரமெல்லாம் போயிட்டுதா?”

“பாரம் போயிட்டுதா தெரியேல்ல. ஆனா, என்ர பிழைகள் விளங்குது.” உணர்ந்து சொன்னாள் ஆதினி.

“இப்போதைக்கு இதே போதும். இனியும் இங்க இருக்க விருப்பமில்ல, அது இது எண்டு சொல்லுறதை விட்டுட்டு நல்லாப் படி. சந்தோசமா இரு!”

“இல்ல அண்ணா. எனக்கு உண்மையாவே கொஞ்சம் விலகி இருக்கோணும் மாதிரித்தான் இருக்கு. என்னால இப்போதைக்கு அண்ணாவோட சமாதானம் ஆகேலாது. நான் அவரோட கதைக்காட்டி, அந்தக் கோபத்தை அவர் அண்ணில காட்டப் பாப்பார். பிறகு, அவேன்ர வாழ்க்கையும் சந்தோசமா இருக்காது. வேண்டாம் எண்டு சொன்ன கலியாணமும் வேண்டாம்தான். அதால நான் விலகிப் போறதுதான் சரியா இருக்கும். அதுக்கு என்ன செய்றது எண்டுதான் தெரியேல்ல.”

எல்லாளனோடு திருமணம் வேண்டாம் என்பதில் அவள் உறுதியாக இருப்பது கவலையைத் தோற்றுவித்தாலும் நாளடைவில் எல்லாம் மாறும் என்று நம்பினான்.

அதில், அதை விட்டுவிட்டு, “எங்க போறதா இருந்தாலும் இந்த செமஸ்டர் முடியோணும்தானே. அதுவரைக்கும் பொறு. அப்பவும் இதே முடிவுதான் எண்டா கொழும்பில போயிருந்து படி. அது, நீ உன்ர துறைல இன்னுமே கெட்டிக்காரியா வாறதுக்கும் உதவியா இருக்கும்.” என்றான் அவன்.

அவளும் அப்படித்தான் யோசித்துக்கொண்டு இருந்தாள். அதில், சரி என்று தலையை அசைத்துக் கேட்டுக்கொண்டாள்.

அவர்கள் காண்டீபனின் வீட்டை நெருங்கியபோது, பயத்தில் கத்திக் கூக்குரலிடும் பெண்ணின் குரல் ஒன்று கேட்டது. திகிலுற்ற ஆதினி குழப்பமும் கேள்வியாகக் காண்டீபனை நோக்கினாள்.

அதுவரையில் மென் சிரிப்பில் மலர்ந்திருந்த அவன் முகம் இறுகிற்று. நடையை எட்டிப் போட்டு வீட்டுக்குள் விரைந்தான். என்னவோ என்று மனத்தினில் கலவரம் சூழத் தானும் ஓடினாள் ஆதினி.

அவர்களின் வீட்டு விறாந்தையில் சற்றே வயதான பெண்மணி ஒருவர் தலை கலைந்து, உடை நலுங்கி இருக்க, “என்னை விடு! நீ என்னைக் கொல்லப் போறாய். விடடி!” என்று ஆக்ரோசத்தோடு மிதிலாவிடமிருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தார்.

“அம்மா, ஒண்டும் இல்லை அம்மா. பயப்பிடாதீங்க. நான் மிதிலாம்மா...” கண்ணீருடன் அவரைப் பிடித்து வைக்க முயன்றுகொண்டிருந்தாள் மிதிலா. அவள் கைகளில் நகக் கீறல்கள். அதிலிருந்து இரத்தம் மெதுவாகக் கசிய ஆரம்பித்திருந்தது.

காண்டீபனின் தந்தை சம்மந்தன், எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் பரிதவித்திருந்தார்.

ஓடிச் சென்று அந்தப் பெண்மணியைப் பற்றிச் சமாளிக்க முயன்றபடி, “மாமி! இஞ்ச பாருங்கோ! நான் காண்டீபன். இந்தா வந்திட்டன். எங்க போகப் போறீங்க?” என்றவனின் கனிந்த குரலில் நிமிர்ந்து பார்த்தார் அவர்.

அவனை இனம் கண்டதும்தான் அவரின் போராட்டம் அடங்கியது. “தம்பி!” என்று கதறியபடி அவன் மார்பிலேயே தன்னை மறைத்துக்கொண்டார். அவர் தேகம் மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக நடுங்கியது.

“ஒண்டும் இல்ல மாமி. ஒண்டுமில்ல. என்னத்துக்குப் பயப்படுறீங்க. அதுதான் நான் இருக்கிறன்தானே?” மென் குரலில் அவரின் பயத்தைப் போக்க முயன்றவனின் ஒரு கை, அவர் தலையை வருடிக்கொடுத்தது.

பார்வை, கண்ணீருடன் பரிதவித்து நின்ற மனைவி மீதினில். அவள் முதுகையும் தட்டிக் கொடுத்து, பார்வையால் அவளின் கைகளைக் காட்டிக் கவனி என்றான்.

ஆதினிக்கு அங்கு நடப்பது ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றிருந்தாள். மெல்லிய பயமும் உண்டாயிற்று.

காண்டீபன் மெல்ல அவரை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றான். அவரை அவன் சமாதானம் செய்வதும், எதற்கோ பயந்து நடுங்குபவரைத் தேற்றுவதும் கேட்டது. மிதிலா உணவு எடுத்துச் சென்றாள். சற்று நேரத்தில் வெறும் தட்டும் உணவு அள்ளிக்கொடுத்த கையுமாக வெளியே வந்தான் காண்டீபன்.

இதையும் அவள் எதிர்பார்க்கவில்லை.

“அவாக்குக் கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லையம்மா. சில நேரங்கள்ல இப்பிடித்தான். மற்றும்படி சாதாரணமாத்தான் இருப்பா.” அவளை உணர்ந்து சொன்னார் சம்மந்தன்.

ஆதினிக்கு வாய் திறக்கவே முடியவில்லை. அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பது போலிருந்தது.

காண்டீபன் மீண்டும் அந்த அறைக்குச் சென்றான். சற்று நேரத்தில் அவர் உறங்கிவிட்டார் போலும். மெதுவாகக் கதவைச் சாற்றிவிட்டு வந்தவனின் புருவங்கள் சுளித்திருந்தன.

அவரோடு பட்ட சிரமங்களினால் உண்டான களைப்பு, அவன் முகத்தில் அப்படியே தெரிந்தது. நாற்காலியில் அமர்ந்து, தலையைத் தன் இரு கைகளாலும் பற்றிக்கொண்டான்.

எல்லோரிடமும் கனத்த மௌனம். ஆதினிக்கு அங்கிருப்பது சங்கடத்தைக் கொடுத்தது. “சேர், நான் வெளிக்கிடப் போறன்.” என்றாள் மெல்லிய குரலில்.

நிமிர்ந்து அவளைப் புரியாத பார்வை பார்த்தான் காண்டீபன். அதிலேயே அவன் சிந்தை இங்கில்லை என்று புரிந்தது.

ஆதினி தயக்கத்துடன் எழுந்துகொள்ள, ஒரு பெரிய மூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்து, “அவளுக்குச் சாப்பிட ஏதாவது குடுத்தியா?” என்றான் மிதிலாவிடம்.

அவள் பதில் சொல்வதற்கிடையில், “இல்ல சேர். எனக்குப் பசி இல்ல. அதவிட, இனி நான் வெளிக்கிடோணும். அப்பா வந்திடுவார்.” என்று, தற்சமயம் அவளுக்கு உணவளிக்கும் நிலையில் அந்த வீடு இல்லை என்பதை உணர்ந்து சொன்னாள் ஆதினி.

தன் கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்தான் காண்டீபன். உண்மையில் நேரமாகித்தான் இருந்தது.

“சரி, இன்னொரு நாளைக்குச் சாப்பிட வா.” என்றுவிட்டு, அவளுடன் கூடவே வந்தான். ஹெல்மெட்டை மாட்டி, ஸ்கூட்டியில் அமர்ந்து, அதனைக் கிளப்பும் வரையிலும் தொடர்ந்த அவனது மௌனம், மீண்டும் அவன் எண்ணங்கள் இங்கில்லை என்று சொல்லிற்று.

“வாறன் சேர்.” மெல்லிய முணுமுணுப்புடன் ஸ்கூட்டியை நகர்த்தினாள்.

அப்போதுதான் அவளைக் கூர்ந்து நோக்கினான் அவன். அவள் முகமே சரியில்லை என்று கண்டு, “டோய்! என்ன?” என்றான் தனக்கே உரித்தான சிரிப்புடன்.

ஆதினியின் முகம் தானாகவே மலர்ந்தது. இருந்தும் ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தாள்.

“பயந்திட்டியா?”

இல்லை என்று முதலில் ஆட்டியவள் பின் தயக்கத்துடன் ஆம் என்று அசைத்தாள்.

அவனிடத்தில் வருத்தம் மிகுந்த சின்ன முறுவல் ஒன்று உண்டாயிற்று. “அவா என்ர மாமி. மிதிலான்ர அம்மா. திடீர் எண்டு அவாவை அப்பிடிப் பாத்ததால பயந்திட்டாய் போல. எப்பவாவதுதான் இப்பிடி. மற்றும்படி எங்களை மாதிரியே எல்லாரோடயும் நல்லாக் கதைப்பா. நீ இதைப் பற்றி எல்லாம் யோசிக்காத. மனதை எதுலயும் அலைபாய விடாம, படிக்கிறதுல மட்டும் கவனமா இரு!” என்று சொல்லி அனுப்பிவைத்தான்.
 

Goms

Active member
ஓரளவு மனசு ரிலாக்ஸாக உணர்ந்தாளா ஆதினி?🤩
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom