• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 22

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 22


இளந்திரையனின் முன்னால் காண்டீபன் தந்த அட்மிஷன் ஃபோர்மை வைத்தாள் ஆதினி.

அருகிலிருந்த கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு, அதன் மீது பார்வையை ஓட்டியவர் வேகமாக நிமிர்ந்து, “என்னம்மா இது?” என்றார்.

“எனக்குக் கொழும்பில படிக்க விருப்பமா இருக்கப்பா.” நிச்சயமாக இதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று தெரிந்ததால், மெல்லிய தயக்கத்தோடு சொன்னாள்.

“இதென்ன திடீரெண்டு? முதல், அப்பிடி எப்பிடியம்மா கொழும்புக்கு, அதுவும் தனியா விடுறது? அதெல்லாம் சரி வராது.” யோசனையே இல்லாது மறுத்தார் அவர்.

“அப்பா! இன்னும் கொஞ்ச நாளில எனக்கு இருபத்தியொரு வயசாகப் போகுது.” என்று சிரித்தாள் அவள்.

அந்தச் சிரிப்பில் கலந்துகொள்ளாமல், “அப்பாவில இருந்த கோபம் போகேல்லையாமா? இல்ல, அம்மாதான் இல்ல, இனி அப்பாவும் வேண்டாம் எண்டு நினைக்கிறீங்களா?” என்று கவலை தோய்ந்த குரலில் அவர் கேட்கவும் கலங்கிப்போனாள் ஆதினி.

“அப்பா என்னப்பா?” என்றாள் தொண்டை அடைக்க.

“எல்லாளனை உங்களுக்குக் கட்டி வைக்க நினைச்சதுக்கு இன்னொரு காரணம், காலத்துக்கும் எனக்குப் பக்கத்திலேயே நீங்க இருப்பீங்க எண்டுறது. அப்பிடி நான் நினைச்சா, நீங்க விலகிப் போறன் எண்டு சொல்லுறீங்கம்மா. அதுதான் உங்கட விருப்பம் இல்லாம, இனி எதுவும் நடக்காது எண்டு சொல்லிட்டேன்தானே? பிறகும் என்ன?” என்றவருக்கு மகளின் இந்த முடிவில் மிகுந்த வருத்தம்.

“அப்பா ப்ளீஸ்!” என்றாள் ஆதினி கெஞ்சலாக. “அதுக்காகப் போகேல்ல. இது எனக்கு விருப்பமா இருக்கு. இன்னும் ஒரு ரெண்டரை மூண்டு வருசம்தான். அது பாத்துக்கொண்டிருக்க ஓடிடும். படிச்சு முடிச்சிட்டு இஞ்சதான் வருவன்.”

“இவ்வளவு காலமும் இல்லாமத் திடீர் எண்டு இந்த முடிவு எடுக்க என்ன காரணம்? எனக்கு உண்மை வேணும்!” விழிகளில் தீர்க்கமும் குரலில் உறுதியுமாக வினவினார் அவர்.

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் திணறினாலும் தன்னை விளக்காமல் சம்மதிக்க மாட்டார் என்று அவளுக்கு விளங்கிற்று.

“இங்க என்ர அடையாளம் நீதிபதி இளந்திரையன்ர மகள், ஏஎஸ்பி அகரனின்ர தங்கச்சி எண்டுறது அப்பா. இவ்வளவு காலமும் எனக்கும் அது நல்லாத்தான் இருந்தது. இப்ப இப்ப அது பிடிக்கேல்ல. இங்க என்னால நானே நினைச்சாக் கூட அந்த அடையாளங்கள் இல்லாம இருக்கேலாது. அதோட… உங்க எல்லாரையும் விட்டுக் கொஞ்சம் விலகி இருக்கோணும் மாதிரியும் இருக்கு.” என்று, கடைசி வார்த்தைகளை அவர் முகம் பாராமல் சொல்லி முடித்தாள்.

நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவளை இந்தளவு தூரத்துக்குப் பாதித்திருக்கிறது என்பது அவருக்குள் மெல்லிய அதிர்ச்சியாக இறங்கிற்று. இல்லாமல், இத்தனை நாள்கள் கழித்தும் விலக நினைத்திருக்க மாட்டாள்.

அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு, முகத்தைக் கைகளால் துடைத்தார்.

ஆதினிக்கு விழிகள் இலேசாகக் கலங்கின. “சொறி அப்பா.” என்றாள் அடைத்த குரலில்.

“இந்த விலகல் தற்காலிகமா, இல்ல, நிரந்தரமா?” என்றார் எந்த உணர்வையும் காட்டாது.

“அப்பா, என்னப்பா நீங்க? என்னாலயும் நிறைய நாளைக்கு உங்களை எல்லாம் விட்டுட்டு இருக்கேலாது. என்னவோ விலகி இருக்கோணும் மாதிரியே இருக்கு. எனக்கான அடையாளத்தை நானே தேடோணும் எண்டு நினைக்கிறன். இதுதான் நான் எண்டு சொல்லுற மாதிரி, என்னைப் பற்றி எனக்கே தெரிய வேண்டி இருக்கு. இவ்வளவு ஸ்ட்ரோங்கா என்ர மனம் இதுக்கு முதல் இப்பிடி எதையும் நினைச்சதே இல்ல. ஒருக்காப் போய்த்தான் பாக்கிறேனே. நீங்க ஆரும் இல்லாத வெறும் ஆதினியா மட்டுமே வாழ்ந்து பாக்கிறேனே.” என்று அவள் தெளிவாகச் சொன்னபோதுதான், அவருக்குள்ளும் ஒரு தெளிவு உண்டாயிற்று.

அவள் தன்னைத் தேட ஆரம்பிக்கிறாள்; தன் சுயத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறாள். அதற்கு மேல் அவர் மறுக்கவில்லை. இத்தனை நாள்களாகத் தன் சிறகுகளுக்குள் வைத்துப் பாதுகாத்தார். அதன் பிறகு எல்லாளனின் கைகளுக்குள் கொடுக்க எண்ணினார்.

இப்போது யோசித்துப் பார்க்கையில் அது தவறு என்றே தோன்றிற்று. அவள் அவளாக மிளிர்வதுதானே அழகு? செல்லப்பெண்; அவளைப் பிரிந்திருப்பது இலகுவான காரியமல்ல; அந்த வீடு அவளில்லாமல் அதன் சோபையை இழந்து விடும்; துள்ளலை மறந்துவிடும். ஆனாலும் வேறு வழியில்லை. அவள் தன்னைத் தேடி எடுத்துக்கொண்டு வரட்டும் என்று எண்ணிச் சம்மதித்தார்.

அன்றைய இரவு உணவின்போது அவள் முடிவை அறிவித்தார் இளந்திரையன். அகரனுக்கு மிகுந்த அதிர்ச்சி. “அப்பிடியெல்லாம் விடேலாது ஆதி!” என்று உடனேயே மறுத்தான்.

“முதல், இஞ்ச என்ன குறை எண்டு அங்க போகக் கிடக்கு? அது பாதுகாப்பும் இல்ல. அங்க நீ என்ன செய்றாயோ, எப்பிடி இருக்கிறாயோ எண்டு தெரியாம, இஞ்ச என்னால நிம்மதியா இருக்கேலாது.” அதை யோசிக்கக் கூட முடியாதவனாகச் சொன்னான் அவன்.

அவள் ஒரு வார்த்தை பேசவில்லை. அவன் எவ்வளவோ சொல்லியும் உணவில் மட்டுமே கவனம் செலுத்தினாள்.

இயலாமையுடன் தந்தையை நோக்கினான் அகரன்.

“அவள்தான் யோசிக்காமக் கேட்டாள் எண்டா நீங்க ஏனப்பா ஓம் எண்டு சொன்னனீங்க? பயம் இல்லையா? முதல், நீங்க எப்பிடி அவள் இல்லாம இருப்பீங்க?”

ஒரு நெடிய மூச்சுடன், “ஆசைப்படுறா. ஏன் தடுக்க? அதைவிட, என்ர நண்பன் குணசேகரன் கிரிமினல் லோயரா கொழும்பிலதானே இருக்கிறான். அவன்ர வீட்டிலேயே தங்கிப் படிக்கட்டும். பயமில்லை.” என்றார் அவர்.

ஆக, அவருக்கும் சம்மதம்தான். மீண்டும் தங்கையிடம் திரும்பி, “ஏன் ஆதிம்மா, அண்ணாவில இருக்கிற கோபம் உனக்குப் போகவே போகாதா? அண்டைக்குப் பிறகு நீ என்னோட பழைய மாதிரிக் கதைக்கிறதே இல்ல. போக போகச் சரியாகிடுவாய் எண்டு நம்பிக்கொண்டு இருந்தனான். ஆனா நீ… இது நீ எனக்குத் தாற தண்டனையா?” என்று கேட்டவனுக்குக் குரலே எழும்பமாட்டேன் என்றது.

ஆதினிக்கும் தொண்டை அடைக்காமல் இல்லை. ஆனால், அவள் வாழ்க்கையில் அவளாக முதன்முறை எடுத்த முடிவு இது. அதை மாற்ற விருப்பமில்லை. அதில், “எண்ட்ரன்ஸ் எக்ஸாமுக்குப் போட்டுட்டன்.” என்று அறிவிப்புப் போல் சொன்னாள்.

ஆக, அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டுத்தான் சொல்லி இருக்கிறாள். உன் பேச்சுக்கு இங்கே மரியாதை இல்லை என்கிறாள்.

சின்ன விசயத்துக்கும் அண்ணா அண்ணா என்று அவன் காலைச் சுற்றியவள் இன்று, தன் வாழ்வின் முக்கியமான முடிவு ஒன்றை எடுக்கும்போது அவனைக் கேட்கவும் இல்லை; அவன் கருத்தைப் பொருட்படுத்தவும் இல்லை.

கூர் ஈட்டியாக நெஞ்சுக்குள் எதுவோ பாய, சாப்பிடக் கூட முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தான் அகரன்.

சியாமளாவுக்குக் கணவனின் நிலை கண்டு கண்ணீரே வரப் பார்த்தது.

“இதெல்லாம் என்னாலதானே ஆதினி? அதுதான் சொறி சொல்லிட்டேனே. இப்பவும் சொல்லுறன், அண்டைக்கு நான் அப்பிடியெல்லாம் கதைச்சிருக்கக் கூடாது. உன்ர அண்ணாவும் உனக்குக் கை நீட்டி இருக்கக் கூடாது. எங்க ரெண்டு பேரையும் மன்னிச்சுக்கொள்ளு. ஆனா, எங்களை விட்டுட்டுப் போகாத பிளீஸ். இது என்னக் காலத்துக்கும் குற்ற உணர்ச்சில தள்ளப் போகுது. அதுதான் உன்ர விருப்பமா?” என்றதும் விழுக்கென்று கோபத்துடன் நிமிர்ந்தவள், புதிதாகப் பயில முயன்றுகொண்டிருக்கும் பாடமாகத் தன்னை அடக்கி, நிதானமாகப் பேசினாள்.

“தயவு செய்து ஆளாளுக்கு என்னாலயா என்னாலயா எண்டு கேக்காதீங்க! என்னவோ எனக்கு நான் செய்யவே கூடாத ஏதோ ஒண்டச் செய்ற மாதிரி இருக்கு. எனக்கு இந்த உலகத்தைத் தனியா எதிர்கொள்ள விருப்பமா இருக்கு. எப்பிடியும் நான் லோயர் ஆகோணும் எண்டால், ஃபைனல் எக்ஸாம் எழுத கொழும்புக்குப் போகத்தான் வேணும். அத இப்பவே செய்றன். அதவிட, நான் ஒண்டும் நிரந்தரமா இஞ்ச இருந்து போகேல்ல. சோ பிளீஸ், இனி ஆரும் இதப் பற்றிக் கதைக்க வேண்டாம்!” என்றுவிட்டுப் போனாள் அவள்.

அதுவரையில் ஒற்றை வார்த்தை கூடப் பேசாமல், உண்பதில் மாத்திரம் கவனம் செலுத்திய எல்லாளன் மீது, எல்லோர் பார்வையும் குவிந்தது. அவனோ, “அந்தப் பருப்பில கொஞ்சம் போடு.” என்று தங்கையிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அகரன், தன் பார்வையாலேயே அவனை எரித்தான். அவனோ உணவை முடித்துக்கொண்டு, எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

மகனையே கவனித்துக்கொண்டிருந்த இளந்திரையன், “தம்பி, இஞ்ச பாரப்பு! ஏதோ ஒரு விதத்தில அவாக்கு மனம் விட்டுப் போயிற்று. எங்க எல்லாரிட்டை இருந்தும் விலகி இருக்க ஆசைப்படுறா. வலுக்கட்டாயமாப் பிடிச்சு நிப்பாட்டி, இன்னுமின்னும் வெறுப்பை வளக்கிறத விட, இப்பிடி விட்டுப் பாசத்தை வளக்கலாம். கொழும்பு ஒண்டும் பெரிய தூரமில்ல. நாங்களும் போகலாம். அவாவும் வரலாம். அதால ஒண்டும் கதைக்காதீங்கோ!” என்றுவிட்டுத் தானும் உணவை முடித்துக்கொண்டு எழுந்தார்.

இப்போது, கணவனும் மனைவியும் மட்டுமே எஞ்சியிருக்க, “உண்மையா சொறி அகரன். இந்தளவுக்கு இதெல்லாம் வரும் எண்டு நான் யோசிக்கவே இல்ல.” என்று கண்ணீருடன் சொன்னவளை, “ப்ச் விடு! நீயும் இன்னும் எத்தின தரம்தான் மன்னிப்புக் கேப்பாய்!” என்றுவிட்டு எழுந்து போய்க் கையைக் கழுவினான் அவன்.

எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுச் சியாமளா அவர்களின் அறைக்கு வந்த போது, “நான் அவளத்தான் கட்டுவன் கிழிப்பன் எண்டெல்லாம் சொல்லிப்போட்டு, அவள் கொழும்புக்குப் போறன் எண்டு சொல்லுறாள், உனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை எண்டுற மாதிரி போற நீ. நீயெல்லாம் என்னடா மனுசன்?” என்று அகரன் சீறிக்கொண்டிருந்தான்.

அங்கே எல்லாளனோ, “இதை அவள் உன்ர கலியாணத்தில வச்சே எனக்குச் சொன்னவள் மச்சான். நான்தான் இந்தளவுக்கு யோசிக்கேல்ல. அங்கிளும் ஓம் எண்டு சொல்லியிருக்கிறார் எண்டா யோசிக்காமச் சொல்லியிருக்க மாட்டார். மூண்டு வருசம்தானே. விடு பாப்பம்.” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு வைத்தான்.

“என்னடியப்பா இவன்? எனக்கு இருக்கிற கோவம் கூட இல்லாம இருக்கிறான்.” என்று புலம்பினான் அகரன். அவனுக்கு எப்படியாவது அவளைத் தடுத்துவிட முடியாதா என்கிற ஆதங்கம்.

ஆனால் அங்கே, இவன் எண்ணியது போலல்லாமல் கொதித்துப்போயிருந்தான் எல்லாளன். இப்படி விலகிச் செல்கிற அளவுக்குப் போவாள் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. எல்லோரையும் வைத்துக்கொண்டு, அவளிடம் கோபப்பட வேண்டாம் என்றுதான் அமைதியாக இருந்துவிட்டு வந்திருந்தான்.

மெய்யாகவே அவனை அவளுக்குப் பிடிக்காமல் போயிற்றோ? அந்தளவில் வெறுப்பாளாக இருந்தால், அவன் பிடிவாதமாக நிற்பது சரியாக வராது. இன்றைக்கு இதற்கு ஒரு முடிவைக் கண்டே ஆக வேண்டும் என்று மனம் சொல்லிவிட, அவளுக்கு அழைத்தான்.

அவள் ஏற்கவில்லை.

“ஆதினி எடு! எனக்கு உன்னோட கதைக்கோணும்!” என்று ‘வொயிஸ் மெசேஜ்’ அனுப்பிவிட்டு மீண்டும் அழைத்தான்.

“என்ன வேணும் இப்ப உங்களுக்கு?” என்றுதான் அழைப்பையே ஏற்றாள் அவள்.

“உண்மை வேணும்.”

“என்ன உண்மை?”

“உண்மையாவே உனக்கு நான் வேண்டாமா?”

“இல்ல! வேண்டாம்!”

“ஓ! ஒரு செக்கன்ட் கூட யோசிக்காமப் பதில் சொல்லுற அளவுக்குத் தெளிவா இருக்கிறியா நீ? அப்ப, அங்கிள் சத்தியமா என்னை உனக்குப் பிடிக்கேல்ல எண்டு சொல்லு!”

இதை எதிர்பாராதவள் ஒரு கணம் பதிலற்று நின்றுவிட்டாள். அடுத்த நொடியே, “என்ன விசர்க் கதை கதைக்கிறீங்க? அப்பிடியெல்லாம் சத்தியம் செய்யேலாது!” என்று சீறினாள். மனம் பதற்றத்தில் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

“இங்க பார், இவ்வளவு நாளும் கோவத்துல முறுக்கிக்கொண்டு திரியிறாய், கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியா வரும் எண்டுதான் நினைச்சிருந்தனான். இப்ப பாத்தா, பிடிக்கவே பிடிக்காத ஒருத்திய வற்புறுத்திற மாதிரி இருக்கு. அப்பிடி, உனக்கு உண்மையாவே என்னைப் பிடிக்கேல்லை எண்டா, நான் விலகிப் போறன். அதுக்கு நீ எனக்கு உண்மையச் சொல்லோணும். எனக்குத் தெளிவான பதில் வேணும். அதாலதான் கேக்கிறன்.அங்கிள் சத்தியமா உனக்கு என்னைப் பிடிக்காது எண்டு சொல்லு, இதைப் பற்றி உன்னோட நான் கதைக்கிறது இதுதான் கடைசித் தரமா இருக்கும்.” என்றான் அவன் தெளிவாக.

“எனக்கு உங்களப் பிடிக்காது பிடிக்காது பிடிக்காது! போதுமா? இதுக்காக எல்லாம் சத்தியம் பண்ணேலாது! எனக்கு என்ர அப்பா முக்கியம்.” என்று வெடித்தாள் அவள்.

“சரி, என்னில சத்தியம் செய்!”

“உங்களுக்கு என்ன விசரா? சத்தியம் சத்தியம் எண்டு சாகிறீங்க. என்னால ஏலாது.” என்று அதற்கும் எரிந்து விழுந்தவளுக்குப் பதட்டத்தில் குரல் நடுங்கியது.

இதுதானே அவனுக்கு வேண்டியது! அவள் பிடிவாதக்காரி. தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று நினைக்கிறவள். அப்படியானவளின் கட்டுப்பாட்டை உடைத்தால் மாத்திரமே உண்மை வரும் என்று தெரிந்ததால், “ஏன் ஏலாது? உனக்குத்தான் என்னைப் பிடிக்காதே. அதோட, உண்மையைத்தான் சொல்லப் போறாய். பிறகும் என்னில சத்தியம் செய்றதுக்கு என்ன?” என்று நின்றான்.

அவன் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு வந்த ஆத்திரத்தை அடக்கி, “உங்களுக்குத் தேவையான பதில நான் சொல்லிட்டன். திரும்ப திரும்பக் கேட்டுக்கொண்டு இருக்காதீங்க. வைங்க ஃபோன!” என்று அழைப்பைத் துண்டிக்கப் போனவளை, “வச்சியோ அங்கேயே வந்து நிப்பன்!” என்றவனின் கூற்று, சினத்தின் உச்சிக்கே கொண்டுபோனது.

“என்ன, வெருட்டுறீங்களா?” என்று சீறினாள்.

“இல்ல. எனக்குத் தேவை உண்மையான பதில். அது கிடைக்கிற வரைக்கும் உன்ன விடமாட்டன் எண்டு சொல்லுறன்.”

“அதுதான் சொல்லீட்டனே. பிறகு என்ன?”

“அதத்தான் உறுதியாச் சத்தியம் பண்ணிச் சொல்லு எண்டு சொல்லுறன். அதுக்கு என்னத்துக்கு இவ்வளவு மல்லுக்கட்டுறாய்? நீ பொய்ச் சத்தியம் செய்து, எனக்கு ஏதும் நடந்திடுமோ எண்டு பயப்பிடுறியா?”

“பயமா? எனக்கா? உங்களுக்கு என்ன நடந்தாத்தான் எனக்கென்ன?” என்று அலட்சியம் காட்டிச் சொன்னாலும் அவள் குரல் இலேசாக நடுங்கிற்று.

“ஓ! நாளைக்கு எனக்கு என்ன நடந்தாலும் உனக்கு ஒண்டும் இல்ல. இந்த உலகத்தில நான் இல்லாமப் போனாலும் பரவாயில்ல. அந்தளவுக்கு உனக்கு என்னப் பிடிக்காது. அப்பிடியா?”

அதற்குமேல் ஆதினியால் முடியவில்லை. தேகமெல்லாம் நடுங்கியது. கைகால்கள் எல்லாம் உதற ஆரம்பித்தன.

அவன் விடவில்லை. “சொல்லு ஆதினி. எனக்கு என்ன நடந்தாலும் உனக்குக் கவலை இல்லையா? என்னை உனக்குப் பிடிக்காதா? பிடிக்காமத்தான் கலியாணத்துக்கு ஓம் எண்டு சொன்னியா? அப்பிடி, உனக்குப் பிடிக்காத எதையாவது இதுக்கு முதல் நீ செய்து இருக்கிறியா?”

அவனுடைய விடாத கேள்விகளில் மொத்தமாக உடைந்தாள் ஆதினி.

“பிடிக்கும்! எனக்கு உங்களைப் பிடிக்கும். நிறைய நிறையப் பிடிக்கும். இது எப்ப, எப்பிடி நடந்தது எண்டு எனக்குத் தெரியாது. ஆனாலும் நீங்க எனக்கு வேண்டாம். என்னை இந்தளவுக்கு நோகடிச்ச, என்னை அழவச்ச நீங்க எனக்கு வேண்டவே வேண்டாம். என்னை மதிக்காத, என்னைக் கேவலமா நினைக்கிற நீங்க எனக்கு எண்டைக்கும் வேண்டாம்!” ஆவேசமாகக் கத்தியவள், “நான் எங்கயடி...” என்றவனின் பேச்சைக் கேட்காமல் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

என்ன வார்த்தையெல்லாம் கேட்டுவிட்டான்? அவனுக்கு என்ன நடந்தாலும் அவளுக்கு ஒன்றுமே இல்லையா? அழக் கூடாது என்கிற பிடிவாதத்தோடு அமர்ந்திருந்தாலும் கண்களிலிருந்து கண்ணீர் அது பாட்டுக்கு வழிந்தது.

உடனேயே திருப்பி அழைத்தான். அவள் ஏற்கவில்லை. திருப்பி திருப்பி முயன்றும் பலன் சுழியமே! கிட்டத்தட்ட அவன் உயிரைக் காட்டி மிரட்டி, அவள் வாயிலிருந்து உண்மையைப் பிடுங்கி இருக்கிறான்.

நிச்சயம் அந்தக் கோபத்தில் இருப்பாள். ஆனபோதிலும் அவள் வாயிலிருந்தே அவள் மனத்தை அறிந்து கொண்டதில் மெல்லிய ஆசுவாசம். கூடவே, தன்னை அந்தளவு தூரத்துக்குப் பிடித்தும் வேண்டாம் என்று நிற்கிறவளின் அந்த மறுப்பு, அவனை மிரட்டித்தான் பார்த்தது.
 

Goms

Active member
சரிதான். ஒரு பொருள் கைவிட்டுப் போகும்போதுதான் அதன் அருமை புரியும்.
 
Top Bottom