• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 27

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 27

பொழுது புலரும் முன்னேயே கரைக்கு வந்தாயிற்று. பொருட்களையும் காரில் ஏற்றியாயிற்று என்றதும் அவனுக்குள் பெரும் மமதை! தம் இடம் நோக்கி வாகனத்தைச் சீறவிட்டபடி விழுந்து விழுந்து சிரித்தான்.

“இதுக்காடா அண்ணா அவ்வளவு பயந்தவர்?” அவன் பேச்சில் மிகுந்த எள்ளலும் துள்ளலும்.

அவன் கூட்டாளிகளுக்கும் கொண்டாட்டமே. “அவனெல்லாம் சம்பளத்துக்கு வேல பாக்கிறவன். நேர்மையா கடமையைச் செய்றவன் மாதிரி நடிப்பானா இருக்கும் அண்ணா.” என்றவர்களின் பேச்சு, நட்டநடு வீதியில் ஹெட்லைட்டை ஒளிர நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பின் மேல் அமர்ந்திருந்த எல்லாளனைக் கண்டதும் அப்படியே நின்று போயிற்று.

எல்லோர் முகத்திலும் பெரும் கிலி. யோசிக்கக் கூட நேரமில்லை. “ஒரே பக்கமா ஓடாம ஆளுக்கு ஒரு பக்கமாத் தப்பி ஓடுங்கடா!” என்ற சதீஸ்வரன், வாகனத்திலிருந்து குதித்து ஓடினான்.

நூறு மீற்றர்கள் கூட ஓடியிருக்க மாட்டான். எல்லாளனின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வந்த குண்டு, அவன் பின் மண்டையைத் துளைத்தது.

கூடவே, மரங்களின் மேலேயும் மறைவுகளிலும் ஏற்கனவே தயாராக நின்ற காவல் படை, மொத்தக் கூட்டத்தையும் அப்படியே வளைத்துப் பிடித்தது.

அன்றைய நாளின் கிழக்கு வெளுத்ததே, ‘தமிழ் அரசியல் கூட்டணிக் கட்சித் தலைவரின் மகன் சதீஸ்வரன், பெரும் தொகைப் போதைப் பொருட்களோடு தப்பியோட முயன்றதில் போலீஸ் சுட்டுக்கொலை!’ எனும் தலைப்புச் செய்தியோடுதான்.

இதை அறிந்த சத்தியநாதன் கொதித்து எழுந்தான். “எல்லாளா! இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகோணும்!” என்று, அந்த இடமே அதிரும் வண்ணம் ஆங்காரமாகக் கத்தினான்.

“ஏனடா அவனை விட்டீங்க? ஏன் என்னட்ட இதுக்குத்தான் போறான் எண்டு சொல்லேல்ல? இருந்த ஒருத்தனையும் கொன்றுட்டீங்களேடா!” சுற்றி நின்ற அத்தனை பேரையும் வெறி கொண்டு தாக்கினான்.

ஒன்றுக்கு இரண்டு தம்பிகளோடு சிங்கமெனச் சுற்றி வந்தவன், இன்றைக்கு இருவரையும் பறி கொடுத்துவிட்டான். காரணம் அந்த எல்லாளன்!

“எல்லாளாஆஆஆ !” அடித் தொண்டையிலிருந்து கத்தினான். எவ்வளவு கத்தியும் ஆத்திரம் அடங்கேன் என்றது.

செய்தி அறிந்த தமயந்திக்கு இதயம் துடிப்பதையே நிறுத்திவிட்டதோ எனுமளவில் அச்சமாயிற்று. அவர்கள் குடும்பத்தில் இப்படி ஒவ்வொருவராகக் குறைந்துகொண்டு வருகிறார்களே. அடுத்தது யார்? அவளா, கணவனா? பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கினாள்.

இவ்வளவு காலமும் கணவனோடு தனியாகத்தான் வசித்துவந்தாள். அந்தத் தனிமை இனிமையாய் இருந்தது போய், அடிவயிற்றைக் கலக்கச் செய்தது. அவள் கணவன் வீட்டினர் அப்படி என்னதான் செய்கிறார்கள்? இதைக் கேட்டாலும் உனக்குத் தேவை இல்லை, என்னை மட்டும் பார் என்று சொல்லுகிறவனிடம் இன்னும் எதை, எப்படிக் கேட்பது என்று தெரியவும் இல்லை.

பெற்றவர்களோடு எடுத்துக் கதைத்தாள். அவர்கள் அவளுக்கு மேலால் பயந்து நடுங்கினர். ஒற்றைப் பெண்ணை அல்லவா நம்பிக் கொடுத்துவிட்டார்கள். அவளைக் கொழும்புக்கு அழைத்துக்கொள்ளலாமா என்று கேட்க எண்ணி, சத்தியநாதனுக்கு அழைத்தனர்.

“என்ன?” அவன் உறுமிய விதமே வாயைக் கட்டிப்போட்டது.

அதற்கென்று பின்வாங்கவா முடியும்? மாட்டிக்கொண்டிருப்பது மகளாயிற்றே!

“இல்ல… கொஞ்ச நாளைக்குப் பிள்ளையை இஞ்ச கூட்டிக்கொண்டு வந்து வச்சிருக்கட்டுமோ தம்பி?” நயமாகக் கேட்டார் அவள் தந்தை.

“அவள் என்ர மனுசி. அவளை அங்க அனுப்பிப்போட்டு இஞ்ச நான் என்ன செய்றது?” என்றவனின் கேள்வியில் கூசிப்போனார் மனிதர்.

மேலே என்ன பேசுவது என்று தெரியாது சங்கடப்பட்டு நின்றவரிடம், “வைங்க ஃபோன!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.

செய்தி கேள்விப்பட்டதும் பயந்துபோய் எல்லாளனுக்கு அழைத்தாள் ஆதினி. வியப்பில் புருவங்கள் உயர உடனேயே அழைப்பை ஏற்றான் அவன். “என்னடியப்பா, அதிசயமாத் தேடி எல்லாம் எடுக்கிறாய்?” என்றான் நம்ப முடியாத ஆனந்தத்தோடு.

அவனுக்கு எதிரான மனநிலையில் இருந்தவள், “உங்களுக்குக் கையையும் காலையும் வச்சுக்கொண்டு சும்மா இருக்கவே ஏலதா?” என்று படபடத்தாள்.

அந்தக் கேள்வியில் என்னென்னவோ பதில்கள் எல்லாம் மனதுக்குள் ஓட, அவன் உதட்டோரம் விசமச் சிரிப்பொன்று உதயமாயிற்று. இருந்தும் அவள் முகத்தில் தெரிந்த தீவிரத்தில், “என்ன நடந்தது? ஏன் இவ்வளவு கோபம்?” என்றான், மெய்யாகவே காரணம் அறிய விரும்பும் குரலில்.

“என்ன நடந்ததா? சும்மாவே அவன் அப்பாவக் கொல்லப் பாத்தவன். இதில நீங்க அவன்ர மற்றத் தம்பியையும் சுட்டு இருக்கிறீங்க. இனி அவன் விடுவானா? ஏன் இந்த வேல பாத்தனீங்க?”

அதற்கே அவன் முகம் மாறிப் போனது. ஆனாலும், கோபப்படாமல், “அதுக்கு என்ன செய்யச் சொல்லுறாய்? அவனுக்குப் பயந்து, அவன் செய்றதை எல்லாம் பாத்துக்கொண்டு சும்மா இருக்கச் சொல்லுறியா?” என்றான் பொறுமையாகவே.

“அதுக்கெண்டு சுடுவீங்களா? நீங்க நினைச்சிருந்தா அவனை உயிரோட பிடிச்சு, ஜெயிலுக்க போட்டிருக்கலாம். மிச்சத்தை கோர்ட் பாத்திருக்கும். அதுதான் முறையும். ஆனா, நீங்க முறையா பிளான் பண்ணி முடிச்சு இருக்கிறீங்க. இனி, அவன்ர டேர்ன். எங்கட பக்கம் ஆருக்கு என்ன நடக்குமோ எண்டு நான் பயந்து சாகோணும்.”

அதோடு அவன் பொறுமை பறந்து போயிருந்தது. “ஏய் வையடி ஃபோன! வந்திட்டா கேள்வி கேட்டுக்கொண்டு! நானும் என்னவோ ஒரு நாளும் இல்லாத அதிசயமாத் தேடி எடுக்கிறாளே எண்டு சந்தோசப்பட்டா, எனக்கே ஓடர் போடுவியா நீ? அப்ப, எங்கட குடும்பம் மட்டும் பாதுகாப்பா இருந்தாக் காணும் உனக்கு. ஊர்ச் சனத்துக்கு என்ன நடந்தாலும் பரவாயில்ல. அப்பிடித்தானே? நீயெல்லாம்… இஞ்ச பார், என்ர வேலைல மூக்கை நுழைக்கிறது இதுதான் முதலும் கடைசியா இருக்கோணும். இல்லையோ தெரியும் உனக்கு!” என்றவன் பட்டென்று அழைப்பைத் துண்டித்தான்.

உண்மையிலேயே அவனுக்கு அத்தனை இடத்திலிருந்தும் பெரும் அழுத்தம். யாழ்ப்பாணம் முழுவதும் தமிழ் அரசியல் கூட்டணிக் கட்சி பெரும் போராட்டம் நடத்தியது. ஆங்காங்கே அடிதடி சண்டைகள் கூட வெடித்தது.

பைக்குகளை, ஆட்டோக்களை அடித்து உடைத்தனர். மொத்த யாழ்ப்பாணமும் தன் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்து நின்றது. அவனுடைய மேலதிகாரிகள் வேறு அவனை ஒரு கை பார்த்தனர். விசாரணை எனும் பெயரில் கேள்விகளாகக் கேட்டுக் குடைந்து எடுத்தனர். இன்னொரு பக்கம் பேப்பர் ரிப்போர்ட்டர்ஸ்.

இத்தனையையும் ஒற்றை ஆளாக நின்று சமாளித்துக்கொண்டிருக்கிறான். இளந்திரையன் கூட, “அவசரப்பட்டிட்டீங்களோ எண்டு இருக்கு எல்லாளன். கோர்ட்ல நிப்பாட்டி இருக்க, காலத்துக்கும் வெளில வரேலாத அளவுக்குத் தண்டனை கிடைச்சிருக்கும்.” என்று சொல்லியிருந்தார்.

அது அவனுக்கும் தெரியும். பெரும் தொகைப் போதைப் பொருட்களோடுதான் சதீஸ்வரனைப் பிடித்தான். மரண தண்டனை கிடைப்பதற்கான சாத்தியம்தான் அதிகம். ஆனால், அவனுக்குத்தான் விட மனமில்லை. பெற்றவர்களின் வழக்கில் அவன் தப்பிவிட்ட கறல் இருந்ததில் தன் கையாலேயே பழி தீர்த்துக்கொண்டான்.

இதனால் இன்னும் எவ்வளவு இடர்கள் வந்தாலும் தாங்குவான்.

இப்படி இருக்கையில்தான் அவள் அழைத்தாள். அந்த நிமிடம் அவள் ஆதரவை, தட்டிக்கொடுக்கும் வார்த்தைகளை அவன் மனம் வெகுவாக எதிர்பார்த்தது. கவனமாக இரு என்றிருக்கலாம். எப்படி இருக்கிறாய் என்று கேட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு இன்னொரு அதிகாரியாக மாறிக் கேள்விகளாகக் கேட்கிறாள்.

இன்னுமே எரிச்சல் மேலோங்கிற்று. எந்த வேலையையும் பார்க்க முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தான். தன் கோபம் ஒரு பக்கம், அவளிடம் கத்தியிருக்க வேண்டாமோ எனும் எண்ணம் இன்னொரு பக்கம் என்று சலிப்பாயிற்று.

அப்போது ஒரு கோப்பைத் தேநீரோடு வந்தான் கதிரவன். “இதெல்லாம் நீங்க பாக்காததா சேர். எல்லாம் வெல்லலாம்.” என்று நீட்டினான்.

“உங்களுக்கு?” வாங்கியபடி வினவினான்.

“வெளில இருக்கு சேர்.”

“இஞ்சயே கொண்டு வாங்க.”

அவனும் தன்னுடையதோடு வர, இருக்கையைக் காட்டினான். இருவரும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. தலைவலிக்கு இதமாக இரண்டு மூன்று மிடறுகளைப் பருகிவிட்டு நிமிர்ந்த எல்லாளன், உதட்டோரம் மின்னும் சின்ன சிரிப்புடன் தன்னையே பார்த்த கதிரவனைக் கண்டு, “என்ன?” என்றான்.

“ஒண்டுமில்ல சேர்.” என்றவனின் முறுவல் பெரிதாயிற்று.

இப்போது, எல்லாளன் முகத்திலும் அது தொற்றிற்று. இருவர் மனத்திலும் சதீஸ்வரனைச் சுற்றிவளைத்துப் பிடித்த காட்சியே மின்னி மறைந்தது. அவ்வளவு நேரமாக அழுத்திய அழுத்தமெல்லாம் நொடியில் மறைந்து போக, வாய் விட்டுச் சிரித்தபடி ஒரு கையை முன்னே நீட்டினான் எல்லாளன்.

விழிகளில் மெல்லிய வியப்பொன்று வந்து போக, கதிரவனும் முன்னே வந்து, ‘ஹைஃபை’ கொடுத்தான்.

*****

அன்று இரவு, அகரன் வீட்டுக்கு எல்லாளன் வந்தபோது, வீடியோ கோலில் மகிழினியோடு கதைத்துக்கொண்டிருந்தாள் ஆதினி. அப்போதுதான் காலையில் அவளிடம் கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தது அவனுக்குத் திரும்பவும் நினைவில் வந்தது.

மகிழினியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தவனின் பார்வை, திரையில் தெரிந்தவளைத் தீண்டியது.

வேண்டுமென்றே அவனைப் பாராது, “மகிழ் குட்டி, அத்த வச்சிட்டுப் பிறகு எடுக்கிறன்.” என்று அழைப்பைத் துண்டிக்கப்போனாள் அவள்.

“ஏன், உங்கட அத்த மாமாவோட கதைக்க மாட்டாளாமா? என்ன எண்டு கேளுங்கோ செல்லம்.” என்று தடுத்தான் எல்லாளன்.

“சிடுமூஞ்சிகளோட எல்லாம் நாங்க கதைக்கிறேல்ல எண்டு சொல்லுங்க செல்லம்.”

யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, “அத்த இஞ்ச வந்தா, மாமா மற்ற முகங்களையும் காட்டுவாராம் எண்டு சொல்லுங்க குட்டி.” என்று குரலைத் தணித்துச் சொன்னவனிடத்தில் மிகுந்த நகைப்பு.

குழந்தையை வைத்துக்கொண்டு என்ன கதை இது? அவனைப் பயங்கரமாக முறைத்தாள் ஆதினி. அதற்குள் சியாமளா தமையனின் குரல் கேட்டு வந்தாள். மகிழினியை அவளிடம் கொடுத்துவிட்டு, கைப்பேசியுடன் வெளியே வந்தான் எல்லாளன்.

அங்கே, அவள் சிலுக்கு ஒரு ஓரமாக நின்றிருந்தது. அதில் சாய்ந்து நின்றுகொண்டு, “பிறகு?” என்றான்.

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆதினி. காலையில் அவன் காட்டிய கோபப்பட்டதினால் உண்டான ஆதங்கம் அவளிடத்தில் இன்னுமே குறையாமல் இருந்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவனுக்கும் அது புரிந்தது. இரவு நேரக் குளிர் காற்றோடு சேர்ந்து, அவள் கோபமும் இதமாகத் தாலாட்ட, “ஓய் கோவக்காரி!” என்றான் சிரிப்புடன்.

அவள் அசையவே இல்லை.

“முகத்தக் கொஞ்சம் இந்தப் பக்கம் திருப்பிறது.”

அவள் திரும்பவேயில்லை.

“அடியேய் சிலுக்கு!”

சிலுக்கா? அதிர்ந்து திரும்பியவள் முகத்தில் அப்பட்டமான திகைப்பு.

“என்ன பார்வை? நீ அச்சு அசல் சிலுக்குத்தான்!” என்றான் கண்களால் அவளை ரசித்துக்கொண்டே.

படக்கென்று வீடியோ கோலை துண்டித்த ஆதினி, ஏதும் அரைகுறையாகக் காட்சி கொடுத்துவிட்டோமோ என்று வேகமாகத் தன்னை ஆராய்ந்தாள். சின்னவளோடு கதைக்க என்று அழைப்பெடுத்ததில் உடை பற்றிய கவனம் அவளிடம் இருக்கவில்லை. அப்படி எதுவும் இல்லை என்ற பிறகுதான் கொஞ்சமேனும் மூச்சை இழுத்துவிட்டாள்.

அவன் விடவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தான்.

ஒரு கட்டத்துக்கு மேல் விடமாட்டான் என்று தெரிந்துவிட, கட்டிலில் கிடந்த போர்வையை எடுத்துத் தன்னை முழுவதுமாகப் போர்த்திக்கொண்டு அழைப்பை ஏற்றாள்.

பார்த்தவன் அடக்கமாட்டாமல் நகைத்தான். “அறிவு வாளியடி நீ!” என்றான் அந்த நகைப்பினூடு.

“இப்பிடியே சிரிச்சீங்க எண்டு வைங்க. பல்லக் கழட்டிக் கைல தந்திடுவன், சொல்லிப்போட்டன்!” என்றாள் கோபத்தில் முகம் சிவக்க.

அதன் பிறகுதான் கொஞ்சமேனும் அடங்கினான் எல்லாளன்.

இருவரிடத்திலும் ஒரு மௌனம். பார்வை மற்றவரிடத்திலேயே இருந்தது. தொலைதூரத்தில் அவள். ஆனால் அந்த இரவும், அது வீசிய சில்லிடும் காற்றும், கண்முன்னே அவளும் என்னவோ அவள் தொட்டுவிடும் தூரத்திலேயே இருப்பதுபோலிருக்க, “திரும்பிற பக்கமெல்லாம் விசாரணை எண்டுற பெயர்ல கேள்வியாக் கேட்டுச் சாகடிக்கிறாங்கள். ஆறுதலாக் கதைப்பாய் எண்டு எடுத்தா நீயும் கத்துறாய். அதான் கோவம் வந்திட்டுது.” என்றான் தன் செயலுக்கான விளக்கமாக.

தன்னிடம் ஆறுதலை எதிர்பார்த்தானா? திகைப்போடு பார்த்தாள் ஆதினி. எப்போதுமே அவர்கள்தானே அவளைப் பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் அடைகாப்பார்கள். அதற்கே பழக்கப்பட்டவள் அவன் தன்னிடம் ஆறுதலைத் தேடுவான் என்று யோசிக்கவில்லை.

ஆனால் இப்போது யோசிக்கையில் யோசித்திருக்க வேண்டுமோ என்றிருந்தது. நெஞ்சில் ஏதோ ஒரு பாரம் ஏறி அமர்ந்துகொள்ள, “எனக்குப் பயமா இருக்கு…” என்றாள், அமர்ந்திருந்த கட்டிலின் மெத்தையில் ஒற்றை விரலால் சுரண்டியபடி.

இப்போது அவனால் கோபப்பட முடியவில்லை. அந்தப் பயம் கூட அவன் மீதிருந்த அக்கறையால் விளைந்தது என்று விளங்க, “என்ன நடந்தாலும், நாளைக்கு நானே இல்லை எண்டுற ஒரு நிலை வந்தாலும் பயப்பிடக் கூடாது ஆதினி. தைரியமா இருக்கப் பழ…” மிகுதியை அவன் துண்டிக்கப்பட்ட கைப்பேசியிடம்தான் சொல்லிக்கொண்டிருந்தான்.

‘இவளொருத்தி!’ என்று தலையை அழுத்திக் கோதிவிட்டவனுக்கும் தான் இல்லாத அவள் வாழ்க்கையை யோசிக்க முடியவில்லை. ஆனால், இதுதானே வாழ்க்கை. திடீரென்று ஒரு நாள் அவனும் சியாமளாவும் தாய் தந்தை இல்லாத அனாதைகளாக நின்றார்களே!

ஒரு நெடிய மூச்சுடன் இரவுணவை அங்கே முடித்துக்கொண்டு தன் குவார்ட்ஸுக்கு சென்றவன், “எனக்கும் உன்னோட நிறையக் காலம் வாழோணும். குறைஞ்சது மூண்டு பிள்ளைகளாவது எங்களுக்கு வேணும். எனக்கு நீ விட்ட சேட்டை எல்லாத்தையும் என்ர பிள்ளைகள் உனக்குச் செய்றதப் பாத்து நான் ரசிக்கோணும். இது எல்லாத்துக்கும் ரெடியா இரடி சிலுக்கு!” என்று எழுதி அனுப்பிவிட்டான்.

அவ்வளவு நேரமாக அரும்பிவிட்ட கண்ணீரோடு அவன் சொல்ல வந்ததை ஜீரணிக்க முடியாமல் அல்லாடிக்கொண்டிருந்தவளுக்கு அவன் எழுதிய அனுப்பியதைக் கண்டு கோபமும் சிரிப்பும் சேர்ந்து வந்தது.

‘என்ர பிள்ளைகள் எனக்குச் சேட்டை விடுவினமா? என்னைப் போலப் பத்து மடங்கு உங்களுக்கு அரியண்டம் தர வைக்கேல்ல நான் ஆதினி இல்ல!’ என்று மனத்தில் கருவிக்கொண்டாள்.

*****

அடுத்த நாள் காலை, தன்னுடைய காவல்நிலைய அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் எல்லாளன். யாரின் அனுமதியையும் பெறாது, படார் என்று கதவைத் திறந்துகொண்டு வந்து நின்றான் சத்தியநாதன். அவன் விழிகள் செவ்வரி ஓடிப்போய்க் கிடந்தன. முகத்தில் கொலைவெறி தாண்டவமாடிற்று.

“இத நீ செய்திருக்கக் கூடாது எல்லாளன். தண்டனையை வாங்கிக் குடுத்திட்டு உயிரோட விட்டிருக்கலாம். அவனைக் கொன்டு பெரிய பிழை விட்டுட்டாய். இதுக்கு நிச்சயமாக் கவலப்படுவாய்!” என்று விரல் நீட்டிச் சூளுரைத்தான்.

அன்று மரியாதை தந்து நகைத்துப் பேசியவனின் இன்றைய கட்டுப்பாட்டை இழந்த நிலை கண்டு மிகுந்த திருப்தி கொண்டான் எல்லாளன்.

தன் நாற்காலியில் நிதானமாகச் சாய்ந்தமர்ந்துகொண்டு, “அந்தளவுக்கு அவன் நல்லவனா சத்தியநாதன்?” என்று வினவினான்.

“நல்லவனோ கெட்டவனோ அவன் என்ர தம்பி. ஏற்கனவே ஒரு தம்பியோட விளையாடிட்டாய். அதுக்கே இன்னும் நான் கணக்கு முடிக்கேல்ல. இதுக்க அடுத்தவனையும் முடிச்சிட்டாய். இது நடந்திருக்கக் கூடாது எல்லாளன். நடந்தே இருக்கக் கூடாது! பதில் வாங்க ரெடியா இரு!” என்று எச்சரித்தான்.

“சரி சந்தோசம், போயிட்டு வா!” என்றான் எந்த மிரட்டலுக்கும் அசராது.

அவனையே இமைக்காமல் சில கணங்கள் பார்த்துவிட்டுச் சிறிதாய்ச் சிரித்தான் சத்தியநாதன். அவன் மேசையில் இரண்டு கைகளையும் ஊன்றி, “வலிக்க வலிக்க அடிச்சா எப்பிடி இருக்கும் எண்டு உனக்குத் தெரியாது என்ன? தெரிய வரும்! தெரிய வைக்கிறான்! ஓகே!” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

‘போடா டேய்!’ என்று அலட்சியமாக அவனை ஒதுக்கிவிட்டு வேலையைப் பார்த்தாலும் அந்தப் பார்வையும் சிரிப்பும் எல்லாளனை எச்சரித்தன. உடனேயே குணசேகரனுக்கு அழைத்தான். இங்கு நடந்தவற்றைச் சொல்லி, ஆதினிக்கான பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தச் சொன்னான்.

*****

ஒரு தம்பி இனித் திரும்பி வரவே போவதில்லை என்றானதும் மேல் முறையீடு செய்து, மற்றவனுக்கான தண்டனையைக் குறைப்பதற்கான வேலையில் மும்முரமாக இறங்கினான் சத்தியநாதன்.

அந்த இடைவெளியில் ஆதினி மூன்றாவது வருடத்தையும் நிறைவு செய்து, எட்டு வருடங்களுக்கு மேல் சட்டத்தரணியாகப் பணிபுரியும் குணசேகரனிடமே முறையான பயிற்சிச் சட்டத்தரணியாகச் சேர்ந்து, தன் பயிற்சியையும் ஆரம்பித்திருந்தாள்.

இந்த மூன்று வருடங்களும் அவளுக்குக் கற்பித்தவை நிறைய நிறைய! சட்டம் கற்கும் மாணவியாக மட்டுமே இருந்திருந்தால் கூட இந்தளவு அனுபவத்தைப் பெற்றிருப்பாளா தெரியாது. குணசேகரனிடம் கிட்டத்தட்டப் பயிற்சிச் சட்டத்தரணி போலவே கற்றுக்கொண்டதில் எத்தனை எத்தனையோ வழக்குகளைப் பார்த்திருந்தாள்.

துரோகங்கள், பொய்கள், ஏமாற்றுகள், கொலை, கொள்ளை கண்ணீர், கதறல் என்று ஒவ்வொரு வழக்கிலும் அவள் கற்றுக்கொண்டவை ஏராளம்.

வாழ்க்கை என்பது என்ன என்றும், அந்த வாழ்க்கையில் இருக்கிற துன்பங்கள் எல்லாம் எத்தகையது என்றும் அவள் அறிந்துகொண்ட மூன்று வருடங்கள். உன் வாழ்க்கையில் நடந்தது எல்லாம், ‘ப்பூ’ என்று ஊதித் தள்ளிவிட்டுப் போகும் தூசுகள் என்று சொல்லித்தந்த நாள்கள் அவை!

இந்த மூன்று வருடங்களில் முடிகிற போதெல்லாம் தன் மொத்தக் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு, அவளைப் பார்க்க வந்துவிடுவான் காண்டீபன்.

அப்படி வருகிற பொழுதுகளில் எல்லாம் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத்தான் அவளை வரவழைப்பான். அவள் எவ்வளவோ அழைத்தும் குணசேகரன் வீட்டுக்கு வர மறுத்து விடுவான். அதற்குக் காரணமாக இயலாத தந்தையையும் மாமியாரையும் காட்டி, அடுத்தவர்களுக்குத் தொந்தரவாக இருக்க விருப்பமில்லை என்பான். அதை நம்ப மறுத்தாள் அவள்.

இந்தமுறை அழைத்தும் அவன் வரவில்லை என்றதும், “அண்ணா, முதலுமே எனக்கு இந்த டவுட் இருந்தது. இப்பவும் சொல்லுறன், உங்களிட்ட என்னவோ சரியில்ல. என்ன எண்டு சொல்லிடுங்க. இல்லையோ, நானே கேச போட்டு உள்ளுக்குத் தள்ளிப்போடுவன்!” என்றதும் ஒரு கணம் அதிர்ந்து நின்றுவிட்டு, பின் சத்தமாக நகைத்தான் காண்டீபன்.

அவள் பேச்சே அவளின் முதிர்ச்சியைக் காட்டிற்று. மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்த அதேவேளை, இவள் முன்னே குற்றவாளியாக நிற்கும் நிலை வந்துவிடுமோ என்று எண்ணிக் கலங்கியும் போனான்.

தன்னைச் சமாளித்துக் கொண்டு, “பாத்தீங்களாப்பா, ஆள் லோயர் ஆகிட்டா எண்டு காட்டுறா!” என்று பேச்சை மாற்றினான்.

“இப்பவும் சிரிச்சுச் சமாளிக்கிறீங்களே தவிர உண்மையச் சொல்லுறீங்க இல்ல. மிதிலாக்கா, அண்ணாவைக் கொஞ்சம் கவனிங்க. இன்னும் எண்ணி ஆறு மாதம்தான். பிறகு நான் அங்க வந்திடுவன். அதுக்குப் பிறகு அண்ணாவைக் கண்காணிக்கிறதுதான் எனக்கு வேலையே!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

அன்றிலிருந்து மெல்லிய கலக்கத்துடனேயே நடமாடிக்கொண்டிருந்தான் காண்டீபன். அப்போதுதான் இனிய செய்தியாக மிதிலா கருவுற்றாள். அந்த வீடே புதிதாகப் பிறந்து, மலர்ந்து, மணம் வீசியது.

ஆதினியும் ஆறுமாதப் பயிற்சிக் காலம் முடிந்து, இன்னும் ஒரு வாரத்தில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்குத் தயாரானாள்.
 

Goms

Active member
மேற்கொண்டு படிக்கவே பயமா இருக்கு. 🥺
 
Top Bottom