• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 3

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 3


அது ஒரு அளவான வீடு. பெரிதாக யாரின் கண்களையும் கவராத வகையில், ஊரின் உட்புறமாக, சுற்றிவர அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த மதில்களுக்குள் இருந்தது.

பெரிய சத்தம் சந்தடிகள் இருக்காது. மகன் வெளிநாட்டில் இருக்க, அன்னையும் தந்தையும் அங்கு வசிக்கிறார்கள். பெரிதாக ஆட்களின் நடமாட்டமும் இருக்காது. இதுதான் அந்த வீடு பற்றிய அயலட்டை மனிதர்களின் கணிப்பு.

ஆனால், அந்த வீட்டில் வைத்து ஒருவன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் யாழ்ப்பாணத்தையே உலுக்கும்; வெடி குண்டுகளாக வெடிக்கும். அப்படி இன்றைக்கும் ஒரு முடிவை எடுப்பதற்காக, அந்த வீட்டின் விறாந்தையில் சாய்ந்தாடும் நாற்காலியில் அமர்ந்திருந்து, ஒரு வித லயத்தில் ஆடிக்கொண்டிருந்தான் சத்தியநாதன்.

இருபத்தியொன்பது வயது. திருமணமாகி கொஞ்ச நாள்களே ஆகின்றன. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை என்று கம்பீரமும் களையும் நிறைந்த முழுமையான ஆண்மகன். மது அருந்துவதில்லை; புகைப்பதில்லை; வேறு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால், அத்தனையையும் இந்த ஊருக்குள் பரப்பிவிட வேண்டும் என்பதுதான் அவன் போதையே!

தமிழ் அரசியல் கூட்டணிக் கட்சியின் தலைவரின் மகன்; அடுத்த அரசியல் வாரிசு. அதிலெல்லாம் அவனுக்குப் பெரிய ஈடுபாடு இல்லை. ஆனால், பதவியும் அது தருகிற அதிகாரமும் அவன் தொழிலுக்குத் தேவை என்பதில் அரசியலுக்குள்ளும் தலையை நீட்டி வைத்திருக்கிறான். அவன் தம்பி சத்தியசீலனுக்குத்தான் தூக்குத் தண்டனை தீர்ப்பாகி இருக்கிறது.

எட்டு வருடங்களாகக் காப்பாற்றி வந்தவன், கடைசி நிமிடத்தில் பிடி கொடுத்துவிட்டான். திருமணம் முடிந்த பிறகு நானே மனைவியோடு இந்தியாவுக்கு வருகிறேன் என்று இவன் சொன்னதைக் கேட்காமல், எட்டு வருடங்களாக நாட்டைப் பிரிந்து இருந்த ஏக்கமும், ஒற்றை அண்ணனின் திருமணத்தைப் பாராமல் இருப்பதா என்கிற பாசமும் சேர்ந்துகொள்ள, இருவரும் அவன் சொல்லை மீறி வந்திருந்தனர். அது இன்றைக்கு அவர்களில் ஒருவனைத் தூக்குக் கயிற்றுக்குத் தூக்கிக் கொடுத்திருந்தது.

அவன் நெஞ்சுக்குள் பெரும் எரிமலைச் சீற்றம். அந்த எல்லாளனை நடுச்சந்தியில் வைத்து உயிர் போகும் வரை அடித்துத் தொங்க விடும் அளவுக்கு வெறி உண்டாயிற்று. அவன் முகத்தில் இது எதுவும் தெரியாத ஆழ்ந்த அமைதி. அப்படியே கடந்தவை எத்தனை நிமிடங்களோ! மெல்ல விழிகளைத் திறந்தவன், “காலம் கனியட்டும்.” என்றான், தன் முன்னே நின்றிருந்த கடுமையான முகங்களிடம்.


*****


கதிரவன் சொன்ன அந்தத் தெருவுக்குள் நுழையும் போதே எல்லாளனின் விழிகள் கூர்மை பெற்றுக்கொண்டன. மத்திய தர வகுப்பினர் வாழும் இடம் என்று பார்க்கவே தெரிந்தது. சற்றுத் தள்ளி ஜீப்பை நிறுத்திவிட்டு, தன் வேக நடையில் அந்த வீட்டை நெருங்கினான்.

காவல்துறை வாகனங்கள், பிணத்தைப் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்லும் வண்டி, தடயவியலாளர்களின் வாகனங்கள், காக்கிச் சட்டைகளின் அதீத நடமாட்டம் என்று, அந்த இடமே அசாதாரணச் சூழ்நிலையைச் சுமந்திருந்தது.

அயலட்டையினர் மிதமிஞ்சிய அச்சத்தையும் கவலைக் கோடுகளையும் முகத்தில் சுமந்தபடி ஆங்காங்கே நின்றிருந்தனர். முதல் வேலையாக கொன்ஸ்டபிள் ஒருவரை அழைத்து, கூட்டத்தைக் கலைக்க உத்தரவிட்டான். இவனைக் கண்டுவிட்டுக் கதிரவன் ஓடி வந்து சல்யூட் அடித்தான்.

“விடியக் காலம காய்ச்சல் இருந்திருக்கு. தாய், பனடோல் குடுத்திருக்கிறா. பள்ளிக்கூடம் போகேல்ல எண்டு சொல்லிப்போட்டுப் படுத்திட்டாவாம். பகல் எழுப்பிச் சாப்பாடும் குடுத்திருக்கிறா. இப்ப கொஞ்சத்துக்கு முதல் காய்ச்சல் விட்டுட்டுதா எண்டு பாக்கப் போன தாய்தான் முதல் பாத்திருக்கிறா.” இவனின் வேகநடைக்கு ஈடுகொடுத்து நடந்தபடி இரத்தினச் சுருக்கமாக விடயத்தைப் பகிர்ந்துகொண்டான் கதிரவன்.

எல்லாளனின் விழிகள் அந்த வீட்டை மிகுந்த கவனத்துடன் அலசின. எங்கும் எதுவும் கலைந்திருக்கவில்லை. எந்த இடத்திலும் அசம்பாவிதம் ஒன்று நடந்ததற்கான அறிகுறியே இல்லை. வெள்ளை உடையில் தம்மை முழுவதுமாகப் போர்த்தியிருந்த தடயவியலாளர்கள், எதையும் கலைக்காமல் தடயங்களைத் திரட்டிக்கொண்டிருந்தனர்.

அந்தப் பெண் பிள்ளையின் சடலம், அவளின் அறை வாசலிலேயே எதிர்ப்பட்டது. தொங்கிய கயிற்றிலிருந்து இறக்கியிருந்தனர். போர்வையை விலக்கிப் பார்த்தான்.

பூப்போன்ற அழகிய முகம். “பெயர் என்னவாம்?” சடலத்தில் கீறல்கள், காயங்கள் ஏதும் கண்ணுக்கு எட்டுகிறதா என்று ஆராய்ந்தபடி வினவினான்.

“சாமந்தி.”

“உடம்பில வேற ஏதும் காயம்?”

“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சின்னக் கீறல் கூட இல்ல, சேர்.”

“அனுப்பி விடுங்க!” என்று விட்டு வாசலில் நின்றபடியே அவளின் அறையை ஆராய்ந்தான்.

தடயவியலாளர்கள் தரையெங்கும் ஷோக்பீஸ் கோடுகள் வரைந்திருந்தனர். விரல் ரேகைகள் எடுப்பதற்காகத் தூவப்பட்டிருந்த இரசாயன மருந்தின் நெடி மூக்கை நிரடியது. பொருட்கள் பல பரவிக் கிடந்தன. ஆங்காங்கே கோடுகள், கீறல்கள் என்று அவர்களின் மொழியில் எதையெதையோ குறித்திருந்தனர். எதையும் கலைக்காமல், கவனமாகக் காலடிகளை எடுத்து வைத்து, நிதானமாக அறைக்குள் தாவினான்.

அவளுக்கு அவளின் அறையை மிகவும் பிடிக்கும் போலும். அவ்வளவு நேர்த்தியாக, மிக அழகாகப் பராமரித்திருந்தாள். பொருளாதார ரீதியிலும் எந்தக் குறையும் இருப்பது போல் தெரியவில்லை. அவள் பயன்படுத்திய லாப்டப், கைப்பேசி என்று அனைத்தையும் கையகப்படுத்தினான்.

கையுறை அணிந்து அங்கிருந்த புத்தகங்கள், அவளின் கப்போர்ட், மேசையின் இழுப்பறைகள் என்று அனைத்தையும் அலசினான். வீட்டின் பின் பக்கம், முன் பக்கம் என்று எல்லா இடமும் சுற்றிப் பார்த்தான். சந்தேகத்திற்கிடமாக எதுவுமே அகப்படவில்லை.

ஒரே ஒரு கடிதம் மட்டும். அதில், “அம்மா, அப்பா, அண்ணா சொறி. நான் போறன். எனக்கு வாழ விருப்பம் இல்ல.” என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது.

பிரேத பரிசோதனைக்குச் சடலத்தை அனுப்பிவிட்டு வந்த கதிரவனிடம், “இங்க இருக்கிற புக்ஸ் எல்லாத்தையும் கவனமாப் பாக்கச் சொல்லுங்க. முன் பக்கம், பின் பக்கம் எண்டு ஏதாவது எழுதி இருக்கலாம். ஒரு சின்ன சாட்சி கூடத் தவறக் கூடாது! அயலட்டையில விசாரிங்க. முக்கியமா சின்னாக்கள் இருப்பினம். அவேயப் பிடிங்க!” என்று உத்தரவிட்டுவிட்டு அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றான்.

அழுதழுது ஓய்ந்து, முழுச் சக்தியையும் இழந்து, ஏன் இப்படி ஆனது என்கிற கேள்வியைச் சுமந்து அவனைப் பார்த்தனர்.

“நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்கட மகள் ஏன் இந்த முடிவுக்கு வந்தவா எண்டு ஏதும் தெரியுமா? இல்ல, உங்களுக்கும் அவவுக்கும் ஏதும் சண்டை நடந்ததா?”

தாய் மளுக்கென்று கண்ணீர் உகுத்தார். முற்றிலுமாக உடைந்து போயிருந்த தந்தை, பெரும் சிரமத்துக்கு மத்தியில் இல்லை என்று தலையை அசைத்தார்.

“வேற ஏதாவது சந்தேகம் மாதிரி?”

அக்கேள்விக்கு என்ன விதமாகப் பதில் சொல்வது என்று தெரியாது மூவரும் அவனையே பார்த்தனர்.

“நல்லாப் படிப்பாள். டொக்டருக்கு படி பிள்ளை எண்டு நான் சொல்லியும், இல்ல டீச்சராகப் போறன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்தவள். இப்பிடித் தலையில மண்ணை அள்ளிப் போடுவாள் எண்டு நினைக்கவே இல்ல.” என்று அழுதார் அன்னை.

“யாரும் ஏதும் மிரட்டின மாதிரி, வெளில போகப் பயந்த மாதிரி, இல்ல, அடிக்கடி ஃபோன்ல கதைக்கிறது இப்பிடி ஏதாவது? வழமையாச் செய்றதை விட வித்தியாசமா ஏதும் தெரிஞ்சதா? நல்லா யோசிச்சுச் சொல்லுங்கோ!”

இல்லை என்று மறுத்துத் தலையை அசைத்தார் தகப்பன்.
“ஒவ்வொரு நாளும் ஒழுங்காப் பள்ளிக்கூடம் போவா. டியூசனும் போகாம நிக்கிறேல்ல. இண்டைக்கு மட்டும்தான். அதுவும் நல்ல காய்ச்சல் எண்டுதான் போகேல்ல. ஓடி ஓடிப் படிக்கிற பிள்ளை, அதுதான் காய்ச்சல் வந்திட்டுது போல, ரெண்டு நாள் ஓய்வா இருக்கட்டும் எண்டு நினைச்சம்.” என்றவருக்கும் மேலே பேசமுடியாமல் போயிற்று. வாழ்நாள் முழுமைக்குமான ஓய்வை அல்லவோ எடுத்துக்கொண்டாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“பிறகு எப்பிடிப் போதைப் பழக்கம் வந்தது?”

அந்த வார்த்தையைக் கேட்டதும் துடித்துப் போனார் அன்னை. “இல்ல, என்ர பிள்ளைக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்ல! நான் அப்பிடி என்ர மகளை வளக்கேல்ல.” கண்ணீருடன் அவசரமாகச் சொன்னார்.

பொத்தி பொத்தி வளர்த்த மகள் உயிரை மாய்த்துக் கொண்டதும் அல்லாமல், இப்படி ஒரு அவப் பெயரை வாங்கி விடுவாளோ என்று பதறினார்.

“தம்பிதான் அப்பிடிச் சொல்லுறான். அதுவும் இண்டைக்குத்தான் சொன்னவன். ஆனா, நான் ஒவ்வொரு நாளும் அவளின்ர அறைய கிளீன் பண்ணுறனான். தட்டிக் கூட்டுறனான். அப்பிடி ஒரு நாளும் மணக்கவும் இல்ல, நான் பாக்கவும் இல்ல. எங்கட பிள்ளை அப்பிடியான பிள்ளை இல்ல.”

அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவர்களின் மகனைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தான் எல்லாளன்.

“பெயர் என்ன?”

“சாகித்தியன்.”

“படிக்கிறீரா?

“ஓம், கம்பஸ் செக்கண்டியர். ஆர்ட்ஸ்.”

தன்னைத் திடமாகக் காட்டிக்கொள்ள முயன்றாலும் உள்ளுக்குள் முற்றிலுமாக உடைந்துபோயிருக்கிறான் என்று அவன் முகமே சொல்லிற்று.

“தங்கச்சிக்கு காதல், இல்ல ஆரும் பெடியலாள(boys) பிரச்சினை எண்டு ஏதும் தெரியுமா?”

இல்லை என்று தலையசைத்தான் அவன்.

“உமக்கு ஏதும் சந்தேகம் இருக்கா?”

அதற்கும் இல்லைதான்.

“போதைப் பழக்கம் எண்டு சொன்னது?”

“எனக்கும் வடிவாத்(ஒழுங்கா) தெரியாது சேர். ஆனா, சந்தேகமா இருக்கு. இண்டைக்குத் தூக்குல தொங்கி இருந்ததைப் பாத்ததும் பதறிப்போய் உயிர் இருக்கா எண்டு அவளைப் போட்டு உலுக்கினனான். அப்பத்தான் அவளின்ர கைல பாத்தனான். ஊசி ஏத்தின அடையாளம் இருந்தது. அதுக்குப் பிறகு யோசிச்சுப் பாத்தா, இப்ப கொஞ்ச நாளா அவள் முழுக்கை இல்ல முக்காக்கை உடுப்புகள்தான் போடுறவள் எண்டு தெரிஞ்சது. முந்தி மாதிரி எங்களோட வந்திருந்து கதைக்கிறதும் குறைவு. அறைக்கையே இருப்பாள். எப்பவும் கொஞ்சம் சோம்பலா இருப்பாள். ஏஎல் எக்ஸாமுக்கு இரவிரவாக் கண் முழிச்சுப் படிக்கிறதால அப்பிடி எண்டு நாங்களும் பெருசாக் கவனிக்கேல்ல. இப்ப யோசிக்க யோசிக்க அப்பிடி இல்லையோ எண்டு இருக்கு.” குரல் அடைக்கச் சொன்னான் அவன்.

தைரியம் கொடுக்கும் விதமாக அவன் தோளில் தட்டிக் கொடுத்தான் எல்லாளன். “பிரேத பரிசோதனை(postmortem) ரிப்போர்ட் வரட்டும். என்ன எண்டு கண்டு பிடிக்கலாம். வேற ஏதும் நினைவு வந்தாலோ, இல்ல, இனி ஏதாவது சந்தேகப்படுற மாதிரி நடந்தாலோ, உடன எங்களுக்குச் சொல்லோணும், சரியா?”

அவன் சரி என்று தலையை ஆட்டினான்.

தற்காலிகமாக அந்த வீட்டை சீல் வைக்க ஏற்பாடு செய்துவிட்டு, தடயங்களை யாராவது அழிக்க முற்படலாம் என்று இரு கொன்ஸ்டபிள்களை காவலுக்கு நிறுத்தினான். அவர்களின் அறிவிப்பு வருகிற வரைக்கும் ஊரை விட்டு வெளியே எங்கேயும் போகக் கூடாது என்று வீட்டினருக்கு அறிவித்தான்.

மிகுதி வேலைகளைக் கதிரவனைக் கவனிக்கச் சொல்லிவிட்டு அவன் வெளியே வந்தபோது, ஸ்கூட்டியில் இன்னொரு பெண்ணுடன் வந்தாள் ஆதினி. கூடவே, இன்னும் இரண்டு பைக்குகளில் நான்கு ஆண்கள்.

புருவத்தைச் சுருக்கினான் எல்லாளன்.

“என்ர ஃபிரெண்ட்ஸ், சேர்.” அவசரமாக ஓடி வந்து சொன்னான் சாகித்யன்.

அப்போதும் எல்லாளனின் விழிகள் அவளைத்தான் உறுத்து விழித்தன. அதைக் கண்டு உள்ளுக்குள் அலறினாலும் காட்டிக்கொள்ளாமல் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அவனிடம் வந்தாள் ஆதினி.

“சாமந்தி எங்கட ஸ்கூல். எனக்குத் தெரியும். சாகி அண்ணாவையும் பழக்கம்தான்.”

எப்போதும் துரு துரு என்று இருக்கும் அவள் முகம், இன்று கலங்கியிருப்பதைக் கண்டு மனம் சற்றே இளகினாலும் காட்டிக்கொள்ளவில்லை எல்லாளன்.

“எதுவா இருந்தாலும் இப்ப என்னத்துக்கு இங்க வந்தனி?” என்று குரலைத் தணித்து அதட்டினான்.

இப்போது அவள் விழிகளிலும் மெல்லிய கோபம் படர்ந்தது. “இப்பதான் கேள்விப்பட்டனாங்க. அதுதான், என்ன நடந்தது எண்டு கேக்க வந்தனாங்க.” என்றாள் அவனை முறைத்தபடி.

“கேட்டு என்ன செய்யப் போறாய்? கேஸ நீ விசாரிக்கப் போறியா?”

“நாங்களும் சட்டம்தான் படிக்கிறம். இன்னும் நாலஞ்சு வருசத்துல நாங்களும் விசாரிப்பம்!” ரோசத்தோடு சொன்னாள் அவள்.

“இப்பிடியே திரிஞ்சியோ கட்டாயம் நடக்கும்!”

அப்படி அவன் மட்டம் தட்டியதில் நண்பர்களுக்கு மத்தியில் அவமானமாகப் போயிற்று அவளுக்கு. பதில் சொல்லாமல் அவனை முறைத்தாள்.

அதைப் பொருட்படுத்தாமல், “இதெல்லாம் ஆரு?” என்று அவளோடு நின்றவர்களைக் காட்டி வினவினான். அவளின் கூட்டத்தை அவனுக்கும் தெரியும். இந்த முகங்கள் அத்தனையும் புதிதாக இருந்தன.

“அது… சாகி அண்ணான்ர ஃபிரெண்ட்ஸ்.”

“ஓ! நீ இருந்தா போலீஸ்காரன் எவனும் கேள்வி கேக்க மாட்டான். அதைப் பயன்படுத்தித் தைரியமா வந்திட்டுப் போகலாம் எண்டு பிளான் போட்டீங்களோ?”

உண்மை அதுதான் என்பதில் பதில் சொல்லத் திணறினாள் ஆதினி.

அவளை ஒரு பார்வை பார்த்தவன், “அஞ்சு நிமிசம்தான் டைம். அதுவும் எனக்கு முன்னாலதான் என்ன கதைக்கிறதா இருந்தாலும் கதைக்கோணும்! அதுக்கு மேல ஒரு கணம் கூட இஞ்ச நிக்கக் கூடாது!” என்று முடித்துவிட்டு அங்கேயே நின்றுகொண்டான்.

அவன் அரட்டிய அரட்டிலேயே எல்லோரும் நடுங்கிப்போயிருந்தனர். இதில், அவன் முன்னிலையில் பேசு என்றால் என்னத்தைப் பேசுவது? ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனரே தவிர, ஒரு வார்த்தை வெளியில் வரவில்லை.

இலங்கையின் முக்கிய நீதிபதிகளில் ஒருவரின் மகள். அவருக்கான ஆபத்துகள் அவளைச் சூழ்வதற்குச் சாத்தியங்கள் அதிகம். கவனமாக இரு என்று எத்தனையோ முறை சொல்லியாயிற்று. எல்லாமே எருமை மாட்டுக்கு மேல் பெய்த மழைதான்!

எல்லாளனிடம் என்னவோ சொல்ல வந்த கதிரவன், இவளைக் கண்டதும் ஒரே ஓட்டமாகத் திரும்பி வீட்டுக்குள் ஓடியிருந்தான். கவனித்தாலும் கருத்தில் கொள்ளவில்லை எல்லாளன். ஐந்து நிமிடங்கள் முடியவும் கையைத் திருப்பி நேரம் பார்த்தான்.

புறப்படு என்கிறான். அவளுக்கு எரிச்சல் மண்டியது. பார்வையால் எரித்து விட்டு, “வாறம் அண்ணா. ஏதும் ஹெல்ப் வேணும் எண்டால் கேளுங்கோ!” என்று சாகித்தியனிடம் சொல்லிவிட்டு, அவனைத் திரும்பியும் பாராமல் நடந்தாள்.

அவர்களின் பின்னாலேயே வந்த எல்லாளன், அவள் ஸ்கூட்டியின் பக்கம் திரும்பவும், “ஸ்கூட்டியை அந்தப் பிள்ளையிட்டக் குடுத்திட்டு நீ போய் ஜீப்பில ஏறு!” என்றான் உத்தரவாக.

சும்மாவே ஆதினிக்கு எதிலும் பொறுமை இல்லை. இன்றைக்கு இறப்பு வீடு என்று அவனுடைய அத்தனை அதட்டல்களுக்கும் அடங்கிப் போனது வேறு உள்ளுக்குள் நின்று எரிந்து கொண்டிருந்தது. இப்போது உத்தரவு வேறு போடுகிறான். “அப்பிடியெல்லாம் வரேலாது. நான் என்ர சிலுக்கிலதான் வருவன்!” என்று பிடிவாதக் குரலில் மறுத்துரைத்தாள்.

அதற்கெல்லாம் அசராமல் அவள் கையில் இருந்த திறப்பைப் பறித்து, அவளின் நண்பியிடம் கொடுத்தான். “ஆள் வந்து உங்கட வீட்டில ஸ்கூட்டியை எடுக்கும். இப்ப நீங்க வெளிக்கிடுங்க.” என்றுவிட்டு, இவள் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு ஜீப்பை நோக்கி நடந்தான்.

அவளின் மறுப்பையோ, கையை உருவப் பார்த்தத்தையோ பொருட்டில் கொள்ளாமல், ஜீப்பின் கதவைத் திறந்துவிட்டு, “ஏறு!” என்றான்.

அவன் இடுப்பில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து, அவன் நெற்றியைப் பதம் பார்த்தால் என்ன என்கிற அளவுக்குக் கோபம் வந்தது அவளுக்கு. “எள்ளுவய, உனக்கு இருக்கடா!” பக்கத்தில் யாருமில்லை என்கிற தைரியத்தில் வாய் விட்டுச் சீறிவிட்டு, ஏறி அமர்ந்துகொண்டாள்.
 

Goms

Active member
சட்டம் படிக்கிற பிள்ளை மாதிரியா இருக்கு?🤩
 
Top Bottom