அத்தியாயம் 31
தன்னைத் துரத்தும் எதிலிருந்தோ தப்பித்து ஓடும் நிலையில் இருந்தான் எல்லாளன். மனம், உடல், மூளை அனைத்தும் களைத்திருந்தன. கொஞ்சமேனும் உறங்கி எழுந்தால்தான் தெளிவாகச் சிந்திக்க முடியும் எனும் நிலை.
வீட்டுக்கு வந்து, குளித்துவிட்டுக் கட்டிலில் விழுந்தான். மனதினுள் பெரும் புயல் அடித்துக்கொண்டிருக்கையில் உறங்குவது எப்படி?
நேற்று அவன் நடத்தியது கிட்டத்தட்ட ஒரு சுற்றிவளைப்பு. எதிராளிக்கு விழித்துக்கொள்ளக் கூட அவகாசம் கொடுக்கக் கூடாது என்கிற பிடிவாதத்தோடு செய்து முடித்திருந்தான்.
சாகித்தியன் சொன்னதை வைத்து மாதவனையும், அவன் சொன்னதை வைத்து அஞ்சலியையும் தேடி ஓடியவனின் விசாரணையில், தன் உயிரே மாட்டிக்கொள்ளும் என்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை.
அதைவிட, விசாரணையின்போது அவன் சொன்னவைகள்? இத்தனை வருடங்களாக இறுக்கமாகப் பற்றியிருந்த இவன் கோபத்திற்கு அர்த்தமே இல்லை என்றுவிட்டானே!
காண்டீபன், அவன், மிதிலா மூவரும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள். மிதிலா கைக் குழந்தையாக இருக்கும் போதே, சந்தேகத்தின் பெயரில் அவளின் தந்தையைப் பிடித்துக்கொண்டு போன இலங்கை இராணுவம், கடைசி வரையில் அவரை விடவேயில்லை.
அவள் அன்னை வேலைக்குப் போக, பள்ளிக்கூடம் முடிந்து வருகிறவள் அயலட்டையில் இருக்கும் இவர்களின் வீடுகளில்தான் இருப்பாள். பெரும்பாலும் எல்லாளனின் வீடுதான் அவளின் புகலிடம்.
காண்டீபனும் அன்னையையும் சகோதரனையும் இரண்டாயிரத்து ஒன்பதில் நடந்த கடைசி யுத்தத்தில் பறி கொடுத்திருந்தான்; அப்பா காவல்துறையில் வேலை. அதில், அவனும் எல்லாளனின் வீட்டில்தான் இருப்பான்.
உணவு, உறக்கம், படிப்பு என்று எல்லாமே அங்கேதான். பெரும்பான்மை நாள்களில் மூன்று வீட்டுக்கும் சேர்த்தே எல்லாளனின் அன்னை சமைத்துவிடுவார். இரு வீட்டினரும் பொருட்கள் வாங்கிக் கொடுப்பார்கள். அவர்களின் இளமைக்காலம் இப்படித்தான் இருந்தது.
ஆண்கள் இருவரையும் விட மிதிலா சின்னவள். அழகும் துடுக்குத்தனமும் நிரம்பியவள். பயம் சிறிதும் இல்லை. அவள் கொஞ்சமாவது பயப்படுவது எல்லாளனுக்கு மாத்திரமே.
அதுவும், அவன் படிக்க வா என்று அழைத்து விட்டால் போதும், அழ ஆரம்பித்துவிடுவாள். தன் அதட்டலுக்கும் உருட்டலுக்கும் பயந்து நடுங்குகிறாள் என்பதே, அந்த இளம் பிராயத்தில் எல்லாளனுக்கு அவளைப் பிரத்தியேகமாகப் பிடித்துப்போகக் காரணமாயிற்று. அவள் பெரியபிள்ளையானதும் அவனது கவனமும் கவனிப்பும் அதிகரித்துப்போனது.
எதையும் இலகுவாக எடுத்து, சிரிப்பும் கலகலப்புமாகக் கொண்டுபோகிற காண்டீபனின் கேலி கிண்டலுக்கே சிலிர்த்துக்கொண்டு சண்டைக்குப் போகிறவள், எல்லாளனின் கட்டுப்பாட்டு வளையத்திலிருந்து திமிற என்றைக்கும் விரும்பியதில்லை. அதனாலேயே அவளுக்கும் தன்னைப் பிடிக்கும் என்பது, அவனின் ஊகம்.
“என்ன மச்சான், காத்துக் கொஞ்சம் அந்தப் பக்கம் கூடுதலா அடிக்கிற மாதிரி இருக்கு.” என்று காண்டீபனே கேலி செய்திருக்கிறான்.
முகம் சிவந்தாலும், “சும்மா இரடா! அவள் சின்ன பிள்ளை.” என்று இவனும் பொய்யாக அதட்டியிருக்கிறான்.
இப்படி இருந்தபோதுதான் அந்த நாள் வந்து, அவர்கள் வாழ்வில் அனைத்தையும் பிரட்டிப் போட்டுவிட்டுப் போனது. கண் முன் அவன் உலகமே தலைகீழாயிற்று. தோள் கொடுப்பான் என்று நம்பிய தோழனைக் காணவில்லை. கூடவே, அவன் அப்பாவும் மறைந்து போனார்.
அவர் போலீஸ் என்பதில் அவர் மூலம் அம்மா அப்பாவைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்துவிடலாம் என்று மலைபோல நம்பிய எல்லாளன், அந்த நாள்களில் மொத்தமாக ஒடிந்தே போனான்.
உற்ற சொந்த பந்தங்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் எல்லோருமே நடந்த கொடூரக் கொலைகளுக்குப் பயந்து, தமக்கும் ஏதும் நடந்து விடுமோ என்று அஞ்சி, அவன் உதவி கேட்டுப் போனபோது கூட விலகி ஓடிவிட்டதில், அந்த நேரம், இவர்களையும் அப்படித்தான் அவனால் யோசிக்க முடிந்தது.
திக்கற்று நின்ற நேரத்தில் உதவாத யாரும் இனி என்றைக்கும் வேண்டாம் என்கிற கோபம், அவனுக்குள் பெரு மலையாக வளர்ந்து நின்றது. அந்த ஊரை வெறுத்தான்; அங்கிருந்த மனிதர்களை அறவே வெறுத்தான்.
அதனால்தான் யாருக்குமே சொல்லாமல் கொள்ளாமல் சியாமளாவோடு புறப்பட்டிருந்தான். திரும்பவும் ஊருக்குச் செல்லவோ, பழையவற்றை மீட்டிப் பார்க்கவோ விரும்பாததற்கும் காரணம் அதுதான்.
நிச்சயமாகக் காண்டீபன் காவல்துறையில்தான் பணி புரிந்துகொண்டிருப்பான் என்று இத்தனை நாள்களாக நம்பியிருந்தான். அந்தளவில் அவனுக்கு இந்த வேலை எவ்வளவு பெரிய கனவு என்று தெரியும். வாய் ஓயாமல் காவல் துறையைப் பற்றி, அதில் சேர்ந்து அவன் செய்யப்போகும் சட்ட நடவடிக்கைகள் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பான்.
சட்டம், ஒழுங்கு, குற்றங்கள் போன்றவற்றின் மீதுதான் அவனுடைய தேடல்கள் இருக்கும். அப்படி, அவன் திணித்தவைதான் இவன் நாடி நரம்பு எங்கும் இவனறியாமலே சென்று சேர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் வேலை என்று யோசித்ததுமே காவல் துறைக்குள் நுழைந்திருந்தான்.
அந்தளவில் காவல்துறைப் பணியை நேசித்தவனின் காலை உடைத்து, கையை உடைத்து அனுப்பியிருக்கிறார்களே!
பாரம் கூடிய பொருளைத் தூக்கினால் கை உணர்வை இழந்துவிடும் என்றானே. இவனையே தோளில் தூக்கிச் சுமக்கும் அளவுக்கு வலுக் கொண்டிருந்தவனின் இன்றைய நிலை இதுதானா? ‘காண்டீபா…’ நெஞ்சு தாங்கமாட்டாமல் துடித்தது.
அன்றைய எல்லாளன் அல்லன் நான், என்னிடமிருந்து எந்த மென்மையான பக்கத்தையும் எதிர்பார்க்காதே என்று காட்டுவதற்காகத்தான் அறைந்தான். அதன் பிறகு அவன் பார்த்த பார்வை? அவன் விழிகளில் தெரிந்த சிவப்பு? பட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டான் எல்லாளன்.
அவனை அப்படி எதிர்கொள்ள முடியாமல்தானே விசாரணையை முழுமையாக முடிக்காமல் ஓடி வந்தான்.
இப்போதும் அந்தக் கலங்கிய விழிகள் இரண்டும் அவனைத் துரத்தின. உதடு கூட வெடித்து இரத்தம் வந்ததே. ஒற்றைப் பாயில் உறங்கி, உருண்டு புரண்டு அடிபட்டு, தோள்கள் உரச நடந்து, ஒருவரின் உடையை மற்றவர் போட்டு வளர்ந்தவர்கள் இன்றைக்கு எதிரெதிரே நிற்கிறார்கள்.
தன் கையாலேயே அவனைச் சிறைக்குள் அடைக்கும் தைரியம் அற்றுப் போனதால்தான், கதிரவனிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஓடி வந்தான். இனி? நண்பனாக நிற்பானா? காவலனாகக் கடமையைச் செய்வானா? பெரும் போராட்டம் ஒன்று அவனுக்குள் நிகழ ஆரம்பித்தது.
தன்னைத் துரத்தும் எதிலிருந்தோ தப்பித்து ஓடும் நிலையில் இருந்தான் எல்லாளன். மனம், உடல், மூளை அனைத்தும் களைத்திருந்தன. கொஞ்சமேனும் உறங்கி எழுந்தால்தான் தெளிவாகச் சிந்திக்க முடியும் எனும் நிலை.
வீட்டுக்கு வந்து, குளித்துவிட்டுக் கட்டிலில் விழுந்தான். மனதினுள் பெரும் புயல் அடித்துக்கொண்டிருக்கையில் உறங்குவது எப்படி?
நேற்று அவன் நடத்தியது கிட்டத்தட்ட ஒரு சுற்றிவளைப்பு. எதிராளிக்கு விழித்துக்கொள்ளக் கூட அவகாசம் கொடுக்கக் கூடாது என்கிற பிடிவாதத்தோடு செய்து முடித்திருந்தான்.
சாகித்தியன் சொன்னதை வைத்து மாதவனையும், அவன் சொன்னதை வைத்து அஞ்சலியையும் தேடி ஓடியவனின் விசாரணையில், தன் உயிரே மாட்டிக்கொள்ளும் என்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை.
அதைவிட, விசாரணையின்போது அவன் சொன்னவைகள்? இத்தனை வருடங்களாக இறுக்கமாகப் பற்றியிருந்த இவன் கோபத்திற்கு அர்த்தமே இல்லை என்றுவிட்டானே!
காண்டீபன், அவன், மிதிலா மூவரும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள். மிதிலா கைக் குழந்தையாக இருக்கும் போதே, சந்தேகத்தின் பெயரில் அவளின் தந்தையைப் பிடித்துக்கொண்டு போன இலங்கை இராணுவம், கடைசி வரையில் அவரை விடவேயில்லை.
அவள் அன்னை வேலைக்குப் போக, பள்ளிக்கூடம் முடிந்து வருகிறவள் அயலட்டையில் இருக்கும் இவர்களின் வீடுகளில்தான் இருப்பாள். பெரும்பாலும் எல்லாளனின் வீடுதான் அவளின் புகலிடம்.
காண்டீபனும் அன்னையையும் சகோதரனையும் இரண்டாயிரத்து ஒன்பதில் நடந்த கடைசி யுத்தத்தில் பறி கொடுத்திருந்தான்; அப்பா காவல்துறையில் வேலை. அதில், அவனும் எல்லாளனின் வீட்டில்தான் இருப்பான்.
உணவு, உறக்கம், படிப்பு என்று எல்லாமே அங்கேதான். பெரும்பான்மை நாள்களில் மூன்று வீட்டுக்கும் சேர்த்தே எல்லாளனின் அன்னை சமைத்துவிடுவார். இரு வீட்டினரும் பொருட்கள் வாங்கிக் கொடுப்பார்கள். அவர்களின் இளமைக்காலம் இப்படித்தான் இருந்தது.
ஆண்கள் இருவரையும் விட மிதிலா சின்னவள். அழகும் துடுக்குத்தனமும் நிரம்பியவள். பயம் சிறிதும் இல்லை. அவள் கொஞ்சமாவது பயப்படுவது எல்லாளனுக்கு மாத்திரமே.
அதுவும், அவன் படிக்க வா என்று அழைத்து விட்டால் போதும், அழ ஆரம்பித்துவிடுவாள். தன் அதட்டலுக்கும் உருட்டலுக்கும் பயந்து நடுங்குகிறாள் என்பதே, அந்த இளம் பிராயத்தில் எல்லாளனுக்கு அவளைப் பிரத்தியேகமாகப் பிடித்துப்போகக் காரணமாயிற்று. அவள் பெரியபிள்ளையானதும் அவனது கவனமும் கவனிப்பும் அதிகரித்துப்போனது.
எதையும் இலகுவாக எடுத்து, சிரிப்பும் கலகலப்புமாகக் கொண்டுபோகிற காண்டீபனின் கேலி கிண்டலுக்கே சிலிர்த்துக்கொண்டு சண்டைக்குப் போகிறவள், எல்லாளனின் கட்டுப்பாட்டு வளையத்திலிருந்து திமிற என்றைக்கும் விரும்பியதில்லை. அதனாலேயே அவளுக்கும் தன்னைப் பிடிக்கும் என்பது, அவனின் ஊகம்.
“என்ன மச்சான், காத்துக் கொஞ்சம் அந்தப் பக்கம் கூடுதலா அடிக்கிற மாதிரி இருக்கு.” என்று காண்டீபனே கேலி செய்திருக்கிறான்.
முகம் சிவந்தாலும், “சும்மா இரடா! அவள் சின்ன பிள்ளை.” என்று இவனும் பொய்யாக அதட்டியிருக்கிறான்.
இப்படி இருந்தபோதுதான் அந்த நாள் வந்து, அவர்கள் வாழ்வில் அனைத்தையும் பிரட்டிப் போட்டுவிட்டுப் போனது. கண் முன் அவன் உலகமே தலைகீழாயிற்று. தோள் கொடுப்பான் என்று நம்பிய தோழனைக் காணவில்லை. கூடவே, அவன் அப்பாவும் மறைந்து போனார்.
அவர் போலீஸ் என்பதில் அவர் மூலம் அம்மா அப்பாவைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்துவிடலாம் என்று மலைபோல நம்பிய எல்லாளன், அந்த நாள்களில் மொத்தமாக ஒடிந்தே போனான்.
உற்ற சொந்த பந்தங்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் எல்லோருமே நடந்த கொடூரக் கொலைகளுக்குப் பயந்து, தமக்கும் ஏதும் நடந்து விடுமோ என்று அஞ்சி, அவன் உதவி கேட்டுப் போனபோது கூட விலகி ஓடிவிட்டதில், அந்த நேரம், இவர்களையும் அப்படித்தான் அவனால் யோசிக்க முடிந்தது.
திக்கற்று நின்ற நேரத்தில் உதவாத யாரும் இனி என்றைக்கும் வேண்டாம் என்கிற கோபம், அவனுக்குள் பெரு மலையாக வளர்ந்து நின்றது. அந்த ஊரை வெறுத்தான்; அங்கிருந்த மனிதர்களை அறவே வெறுத்தான்.
அதனால்தான் யாருக்குமே சொல்லாமல் கொள்ளாமல் சியாமளாவோடு புறப்பட்டிருந்தான். திரும்பவும் ஊருக்குச் செல்லவோ, பழையவற்றை மீட்டிப் பார்க்கவோ விரும்பாததற்கும் காரணம் அதுதான்.
நிச்சயமாகக் காண்டீபன் காவல்துறையில்தான் பணி புரிந்துகொண்டிருப்பான் என்று இத்தனை நாள்களாக நம்பியிருந்தான். அந்தளவில் அவனுக்கு இந்த வேலை எவ்வளவு பெரிய கனவு என்று தெரியும். வாய் ஓயாமல் காவல் துறையைப் பற்றி, அதில் சேர்ந்து அவன் செய்யப்போகும் சட்ட நடவடிக்கைகள் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பான்.
சட்டம், ஒழுங்கு, குற்றங்கள் போன்றவற்றின் மீதுதான் அவனுடைய தேடல்கள் இருக்கும். அப்படி, அவன் திணித்தவைதான் இவன் நாடி நரம்பு எங்கும் இவனறியாமலே சென்று சேர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் வேலை என்று யோசித்ததுமே காவல் துறைக்குள் நுழைந்திருந்தான்.
அந்தளவில் காவல்துறைப் பணியை நேசித்தவனின் காலை உடைத்து, கையை உடைத்து அனுப்பியிருக்கிறார்களே!
பாரம் கூடிய பொருளைத் தூக்கினால் கை உணர்வை இழந்துவிடும் என்றானே. இவனையே தோளில் தூக்கிச் சுமக்கும் அளவுக்கு வலுக் கொண்டிருந்தவனின் இன்றைய நிலை இதுதானா? ‘காண்டீபா…’ நெஞ்சு தாங்கமாட்டாமல் துடித்தது.
அன்றைய எல்லாளன் அல்லன் நான், என்னிடமிருந்து எந்த மென்மையான பக்கத்தையும் எதிர்பார்க்காதே என்று காட்டுவதற்காகத்தான் அறைந்தான். அதன் பிறகு அவன் பார்த்த பார்வை? அவன் விழிகளில் தெரிந்த சிவப்பு? பட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டான் எல்லாளன்.
அவனை அப்படி எதிர்கொள்ள முடியாமல்தானே விசாரணையை முழுமையாக முடிக்காமல் ஓடி வந்தான்.
இப்போதும் அந்தக் கலங்கிய விழிகள் இரண்டும் அவனைத் துரத்தின. உதடு கூட வெடித்து இரத்தம் வந்ததே. ஒற்றைப் பாயில் உறங்கி, உருண்டு புரண்டு அடிபட்டு, தோள்கள் உரச நடந்து, ஒருவரின் உடையை மற்றவர் போட்டு வளர்ந்தவர்கள் இன்றைக்கு எதிரெதிரே நிற்கிறார்கள்.
தன் கையாலேயே அவனைச் சிறைக்குள் அடைக்கும் தைரியம் அற்றுப் போனதால்தான், கதிரவனிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஓடி வந்தான். இனி? நண்பனாக நிற்பானா? காவலனாகக் கடமையைச் செய்வானா? பெரும் போராட்டம் ஒன்று அவனுக்குள் நிகழ ஆரம்பித்தது.