• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 4


அவளோடு வந்த கூட்டத்தினர் புறப்பட்ட பிறகுதான் ஜீப்பை எடுத்தான் எல்லாளன். அவன் முகத்தில் மிகுந்த இறுக்கம். கண்களில் அனல் தெறிக்கும் கோபம். அதைக் கண்டாலும், ‘போடா டேய்!’ என்று எண்ணிக்கொண்டு, தன் தோழிகளுக்குக் கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்ப ஆரம்பித்தாள் ஆதினி.

எல்லாளனுக்கு அவளின் இந்தப் பொறுப்பற்ற தனத்தின் மீது மிகுந்த சினம் உண்டாயிற்று. “படிக்கிற பிள்ளை தற்கொலை செய்திருக்கிறாள். அதுக்கு உன்னோட வந்தவனில எவனாவது கூடக் காரணமா இருக்கலாம். இதையெல்லாம் யோசிக்காம, துக்கம் விசாரிக்கக் கூட்டம் சேர்த்துக்கொண்டு வந்து நிக்கிறாய். அறிவில்லையா உனக்கு?” என்று சீறினான்.

விசுக்கென்று நிமிர்ந்தாள் ஆதினி. “ஆருக்கு அறிவில்ல? உங்களுக்குத்தான் அறிவில்ல. மண்டைக்கையும் ஒண்டும் இல்ல. எங்க எப்பிடி நடக்கோணும் எண்டுற நாகரீகமும் இல்ல. இல்லாட்டி, என்ர ஃபிரெண்ட்ஸுக்கு முன்னால என்னைக் கேவலப்படுத்தி இருப்பீங்களா?” என்று தானும் பாய்ந்தாள்.

“பெரிய ஃபிரெண்ட்ஸ். எல்லாம் ஒண்டுக்கும் உதவாததுகள். இதுக்க சோகம் விசாரிக்கிறாளாம்!”

“ஏன் விசாரிச்சா என்ன? சாகி அண்ணாக்கு ஏதும் ஹெல்ப் தேவைப்படலாம். அவரின்ர அம்மா அப்பாவைத் தனியா விட்டுட்டுப் போக ஏலாம இருக்கலாம். நாங்க போனா ஏதாவது செய்யலாம் எண்டு நினைச்சுத்தான் வந்தனாங்க. அதவிட, என்னோட வந்த எல்லாரும் ஆரோ இல்ல. சாகி அண்ணான்ர ஃபிரண்ட்ஸ்.”

“அதாலதான் சந்தேகமே!” என்றான் அவன். “நடக்கிற இப்பிடியான விசயங்களுக்குப் பின்னால, எங்களுக்கு நெருக்கமான ஒருத்தன்தான் நிச்சயம் காரணமா இருப்பான். இல்லையோ, அவனை வச்சு எவனோ ஒருத்தன் செய்திருப்பான். நல்லாப் பழகின மனுசரத்தான் நம்புவம். அந்த நம்பிக்கைய வச்சுத்தான் அவங்கள் தங்கட வேலையக் காட்டுறது. சாதாரணமா ஒரு இறப்பு நடந்த வீட்டுக்குப் போய் விசாரிக்கிறதில அர்த்தம் இருக்கு. நடந்தது தற்கொலை. அதுவும் குமர்ப்பிள்ளை. போதைப் பழக்கம் வேற இருந்திருக்குப் போல. நாலு பக்கத்தாலயும் யோசிச்சு நடக்கிறத விட்டுட்டு நீயெல்லாம் என்ன சட்டம் படிக்கிறாய்?” என்று வறுத்து எடுத்தான்.

“போதைப் பழக்கமா?” அதிர்ந்துபோய்ப் பார்த்தாள் ஆதினி. அவளுக்கு இது தெரியாதே!

அவனுக்கு அது இன்னும் கோபத்தைக் கிளப்பியது.

“அதுதான்! என்ன நடக்குது எண்டே தெரியாது. ஆனா, கும்பலக் கூட்டிக்கொண்டு வந்திடுவா! முதல், சும்மா தெரிஞ்ச முகத்தையெல்லாம் என்ன நம்பிக்கையில கூட்டிக்கொண்டு திரியிறாய்? நாளைக்கு உனக்கு ஒண்டு நடந்தா என்ன செய்வாய்? இல்ல, உன்னோட வந்தவங்கள் எப்பிடியானவங்கள் எண்டு உனக்கு என்ன தெரியும்?”

அவனுடைய அர்ச்சனையில் அவளுக்குத் தலைவலி வரும் போல் இருந்தது. “அப்பிடியெல்லாம் இருக்காது!” என்றாள் எரிச்சலுடன்.

“அப்ப நீயே சொல்லன், ஏன் அவள் தூக்குல தொங்கினவள் எண்டு. நீதான் பெரிய அறிவு வாளியாச்சே!”

“ஹல்லோ! என்ன நக்கலா? நான் லோயராகி, நீங்க எடுக்கிற கேஸுக்கு எதிர் வக்கீலா நிண்டு, உங்கள நாக்குத் தள்ள வைக்கேல்ல, நான் ஆதினி இளந்திரையன் இல்ல!” பொங்கி எழுந்து சூளுரைத்தாள்.

அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஆரு? நீ? எனக்கெதிரா? கிழிப்பாய்! முதல் படிப்பை முடிக்கிறியா எண்டு பார். எப்ப பார், ஊர் சுத்துறதும் எவனோடயாவது சண்டைக்குப் போறதும். இதுல வக்கீலாகப் போறாவாம் வக்கீல்! வண்டு முருகனாக் கூட ஆக மாட்டாய்!”

எவ்வளவு பெரிய அவமானம். விழிகளாலேயே அவனை எரித்தாள் ஆதினி. அவனைப் பிடித்து ஜீப்பிலிருந்து தள்ளிவிடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. அதைச் செய்ய முடியாத இயலாமையில், “டேய் எள்ளுவய! ஆகத்தான் கேவலமாக் கதைக்காத! பிறகு என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

அந்த விரலிலேயே பட்டென்று ஒரு அடியைப் போட்டான், அவன். “உனக்கு எத்தின தரம் சொல்லுறது, மரியாதையாக் கதைச்சுப் பழகு எண்டு. நான் என்ன உன்னோட சுத்துற அரை லூசு எண்டு நினைச்சியா?”

“ஓ! துரைக்கு மரியாத வேணுமோ மரியாதை? தர மாட்டன்! என்னடா செய்வாய்?” அவன் தன்னை அளவுக்கதிகமாக மட்டம் தட்டிய கோபத்தில் சீறினாள்.

“இப்ப கைல போட்டத வாயிலையே போடுவன். பிறகு பல்லில்லாமத் திரிவாய். என்ன போடவா?”

“எங்க, தைரியம் இருந்தாப் போடுங்க பாப்பம். என்ர அண்ணாவும் அப்பாவும் உங்களைச் சும்மா விடுவினமா?”

“அந்தத் திமிர்தானே இவ்வளவு கதைக்க வைக்கிறது?” வாகனத்தைச் செலுத்திக்கொண்டே திரும்பிப் பார்த்தான். அவள் கையில் இருந்த கைப்பேசி கண்ணில் பட்டது. எட்டிப் பறித்து பொக்கெட்டில் போட்டுக்கொண்டான். “ஃபோன காணேல்ல எண்டு உன்ர அண்ணாட்ட கேஸ் குடுத்து, உன்ர அப்பாட்டத் தீர்ப்பை வாங்கிக்கொண்டு வா. தாறன்!” என்றான் எள்ளலாக.

இதை அவள் எதிர்பார்க்கவில்லை. கைப்பேசி இல்லாமல் இருப்பதா? அதை விடக் கொடுமை வேறு எதுவுமில்லையே!

“விளையாடாமத் தாங்க!” மிரட்டும் தொனியில் சொல்ல நினைத்தாலும் முடியாமல் குரல் தாழ்ந்து வந்தது.

அவன் உதட்டோரம் மெல்லிய சிரிப்பு. “என்னது? கேக்கேல்லை?” காதை இவள் பக்கமாகச் சரித்தபடி கேட்டான்.

ஆதினிக்கு அவன் முகத்திலேயே குத்த வேண்டும் போலிருந்தது. அதை அடக்கி, “எனக்கு ஃபோன் இல்லாம இருக்கேலாது. தாங்க! இல்ல, அப்பாட்டச் சொல்லுவன்.” என்றவளுக்கு ஒரு அளவுக்கு மேல் அவனிடம் பணிந்து போகவும் முடியவில்லை.

“சொல்லு எண்டுதானே நானும் சொல்லுறன்!”

இதற்குள் அவர்களின் வீடு வந்திருந்தது. வாசலில் ஜீப்பை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தான் எல்லாளன்.

ஆதினிக்கு எரிச்சலும் சினமும் பொங்கின. “என்ர ஃபோன தந்திட்டுப் போங்க!” என்று அவனை நோக்கிக் குரல் கொடுத்தாள்.

“தரேலாது போடி!”

அவனுக்கு அவளின் இந்த மரியாதையற்ற நடத்தையும் பேச்சும் பிடிக்கவே பிடிக்காது. இதுவே, வேறு யாராகவும் இருந்திருக்கச் செவிட்டிலேயே போட்டு விடுவான். அவனுடைய மரியாதைக்குரிய இளந்திரையன் அங்கிளின் மகள் என்பதும், உற்ற நண்பனின் தங்கை என்பதும்தான் இவளின் சேட்டைகளை எல்லாம் பொறுத்துப் போக வைப்பன.

அவளுக்கும் அது தெரியும். கூடவே, இயல்பான துடுக்குத் தனமும் அவனைக் கோபமேற்றிப் பார்ப்பதில் கிடைக்கிற இன்பமும் அவளையும் அமைதியாகப் போக விடுவதில்லை.

எல்லாளன் வீட்டுக்குள் வந்து சோஃபாவில் அமரக் கூட இல்லை. அதற்குள், “நில்லுங்க பபா!(Baba - Baby) துவக்கத் தாங்க, பபா!” என்று அவர்களின் வீட்டுப் பாதுகாப்புக்கு நிற்கும் காவலாளி சமனல நாயக்கவின் பதட்டக் குரல் கேட்டது.

எல்லாளன், அகரன், சியாமளா மூவரும் வேகமாகத் திரும்பிப் பார்த்தனர். அவரின் துப்பாக்கியோடு எல்லாளனை நோக்கி வந்துகொண்டிருந்தாள் ஆதினி. அனைவருக்குமே ஒரு முறை திக் என்றது.

அவள் மட்டும் எந்தப் பதட்டமும் இல்லாமல் எல்லாளனைக் குறி வைத்தபடி, அவன் முன்னே வந்து நின்றாள்.

“என்ர ஃபோன தாங்க!”

“தராட்டி?” நிதானமாக வினவினான் எல்லாளன்.

அகரனுக்குத் தங்கையையும் தெரியும், நண்பனையும் தெரியும். அதில், “ஆதிக்குட்டி, இது என்ன பழக்கம்? அவன் தருவான். நீ கையக் கீழ இறக்கு.” என்றான் நயமாக.

“அவர முதல் ஃபோன தரச் சொல்லு. என்ர ஃபிரெண்ட்ஸ்க்கு முன்னால வச்சு எவ்வளவு கேவலப்படுத்தினவர் தெரியுமா? கேஸ நீ நடத்தப் போறியா எண்டு கேக்கிறார். துக்கம் நடந்த வீடாப் போச்சே எண்டு வாய மூடிக்கொண்டு வந்தா, ஜீப்ல ரெத்தம் வாற அளவுக்கு அட்வைஸ். சரி, எதையாவது சொல்லிப்போட்டுப் போகட்டும் எண்டு பாத்தா, ஃபோனை பறிச்சு வச்சுக்கொண்டு, உன்னட்ட கேஸ் குடுத்து, அப்பாட்டத் தீர்ப்பு வாங்கிக்கொண்டு வரட்டாம் எண்டு சொல்லுறார். எவ்வளவு திமிர்? மரியாதையா மன்னிப்புக் கேக்கச் சொல்லு. இல்லையோ, என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது!” சொன்னவளின் விழிகளில் பயமும் இல்லை, துப்பாக்கியைப் பற்றியிருக்கிறோமே என்கிற பதட்டமும் இல்லை.

ஆனால், சியாமளாவுக்கு நெஞ்சுக்கூடே நடுங்கியது. அவள் கண்ட கோரக் காட்சிகள் போதாதா? அனுபவித்த துன்பங்கள்தான் கொஞ்சமா? இது என்ன கொடுமை?

நெஞ்சு பதற, ஓடி வந்து தமயனுக்கும் அவளுக்குமிடையில் நின்று, “அண்ணா கதைச்சது பிழைதான். அவருக்காக நான் மன்னிப்புக் கேக்கிறன். நீ கையக் கீழ இறக்கு!” என்று கெஞ்சினாள்.

“இவள் எல்லாம் ஒரு ஆள் எண்டு! நீ தள்ளு! அவள் எப்பிடிச் சுடுறாள் எண்டு நானும் பாக்கிறன்!” என்று தங்கையை நகர்த்தி விட்டுவிட்டு, “ஷூட் பண்ணு!” என்றபடி அவள் முன்னே வந்து நின்றான் எல்லாளன்.

அவளும் பயப்படவில்லை. “சும்மா வெருட்டுறன் எண்டு நினைக்காதீங்க! ஃபோன் தராட்டிக் கட்டாயம் ஷூட் பண்ணுவன்!” அசையாமல் நின்றபடி சொன்னாள்.

“சுடு எண்டுதானே நானும் சொல்லுறன்!” என்று சொல்லி முடிக்கும் முன்னேயே, அவளைச் சுழற்றித் தன் கைகளுக்குள் கொண்டுவந்து, அவள் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கினான் எல்லாளன்.

அத்தனையும் மின்னல் விரைவில் நடந்து முடிந்திருந்தது. இதை மருந்துக்கும் எதிர்பாராத ஆதினி, அவனுடைய இறுக்கமான பிடிக்குள் அசையக் கூட மறந்தவளாக நின்றிருந்தாள்.

*****

பொழுது இரவைத் தொட்டிருந்தது. கட்டிலில் படுத்திருந்தாள் ஆதினி. அவள் சிந்தனை முழுவதும் அன்றைய மாலைப் பொழுதினில் தொலைந்து போயிருந்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ஆரம்ப நாள்களில் நீதிபதி இளந்திரையனின் பெண் என்று மிகுந்த மரியாதையோடும் அளவோடும்தான் பழகுவான் எல்லாளன். அவளுக்குத்தான் அது பிடிப்பதில்லை. நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா என்று கேட்டு, அவள் விட்ட சேட்டைகள்தான் இப்படி அதட்டி உருட்டும் அளவுக்குக் கொண்டு வந்தது.

அதன் பிறகெல்லாம் அவர்கள் இருவருக்குள்ளும் வாய்ச் சண்டை வருவது இயல்பாயிற்று. முட்டிக்கொள்வதும் மோதிக் கொள்வதும் கூட எப்போதும் நடப்பதுதான். ஏன், இவள் அவன் முதுகில் கை வைத்துத் தள்ளி விடுவதோ, அவன் அவள் கை பற்றி இழுத்துச் செல்வதோ, நகர்த்தி நிறுத்துவதோ நடப்பதுதான்.

ஆனால் இன்று?

நடந்தது நொடி நேர நிகழ்வு. அவனும் எதையும் வேண்டுமென்று செய்யவில்லை. பல குற்றவாளிகளைக் கையாண்டு பழகிய இலாவகத்தோடு, நொடியில் அவளைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்து, மின்னல் விரைவில் துப்பாக்கியைப் பறித்துவிட்டு, அதே வேகத்தோடு விடுவித்தும் இருந்தான்.

அவள்தான் தடுமாறிப் போனாள். அந்த நொடி நேரத்தில் கூட, அவள் உணர்ந்த அவன் கரத்தின் வலிமையும், கழுத்தில் மோதிய மூச்சுக் காற்றின் வேகமும், மிக நெருக்கத்தில் பார்த்த அந்தக் கண்களின் அனலும் அவளை நிலைகுலைய வைத்திருந்தன.

இப்போது வரையில் அதிலிருந்து வெளிவர முடியாமல் நிற்கிறாள். என்னவோ, அவனை முன்பின் பார்த்ததே இல்லை போலவும், அவன் அவளுக்குப் புதியவன் போலவும் நெஞ்சு படபடத்துக்கொண்டே இருந்தது.

இந்த அதிர்வில் தன் கைப்பேசியைக் கூட வாங்க மறந்திருந்தாள்.

*****

கணவனின் தம்பிக்குத் தூக்குத் தண்டனை தீர்ப்பாகி இருக்கிறதாம் என்று அறிந்ததிலிருந்து, முற்றிலுமாகக் கலங்கிப்போயிருந்தாள் தமயந்தி. அவளுக்கும் சத்தியநாதனுக்கும் திருமணம் நடந்த அன்றுதான், அந்தக் கைது நடந்திருந்தது.

அவள் வந்த நேரம்தான் என்று சொல்லிவிடுவார்களோ என அவள் வீட்டினர் மிகவுமே பயந்தனர். அது வீண் என்று சொல்வதுபோல் கணவனோ, அவன் வீட்டினரோ அப்படி ஒரு வார்த்தை சொல்லவே இல்லை.

ஆனால், நடந்த கைதும் அதற்குச் சொல்லப்பட்ட காரணமும் அவளுக்குத் திகிலூட்டின. கணவனிடம் கேட்டபோது, இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்றிருந்தான். புது மனைவியாக அதற்கு மேல் அதைப் பற்றி விசாரிக்கவும் தயங்கினாள்.

கணவன் வீடும் அவள் வீடும் ஏதோ ஒரு வகையில் தூரத்து உறவினர்களாம். அது இரு தரப்புக்கும் தெரியாது. இரு வீட்டுக்கும் பொதுவான திருமணம் ஒன்றில் இவளைப் பார்த்துவிட்டு, விசாரித்துப் பார்த்துச் சொந்தம் என்று அறிந்து, அவர்களாகவேதான் பெண் கேட்டு வந்திருந்தார்கள்.

செல்வாக்கு நிறைந்த குடும்பம், அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களாகவே பெண் கேட்டு வந்த போது, மிகவும் பெருமையாக உணர்ந்திருந்தாள். அதில், அவர்கள் குடும்பம் பற்றி விசாரித்தபோது, அரசல் புரசலாகக் காதுக்கு வந்த செய்திகள், பெரும் பாதிப்பை நிகழ்த்த மறுத்தன.

கூடவே, கொஞ்சம் பெரிய இடம் என்கையில் இப்படித்தான் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிப் பெயரைக் கெடுப்பார்கள் என்று அவர்கள் சொன்னதும் ஏற்றுக்கொள்ளும் படியாகத்தான் இருந்தது.

இது எல்லாவற்றையும் விட, அவளிடம் கொடுக்கப்பட்ட ஃபோட்டோவில் களையும் கம்பீரமுமாக இருந்த சத்தியநாதன், சிறு புன்னகையிலேயே மனத்தைப் பறித்தான். ‘இவனுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?’ என்று நினைத்து நினைத்துப் பூரித்தாள்; அடிக்கடி கண்ணாடி பார்த்தாள்; தன்னை அழகுபடுத்திக்கொண்டாள்.

இதில், திருமணப் பேச்சு ஒரு முடிவுக்கு வர முதலேயே, அவனாகவே அவள் நம்பரை தேடிப்பிடித்து அழைத்து, காதோரமாகக் கதை பேசி விட, மொத்தமாக மயங்கிப் போனாள் தமயந்தி.

அவனை மறுக்கும் இடத்தில் அவன் அவளை நிறுத்தவில்லை. அதுதான் உண்மை. நேரம் கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் அழைத்து, காதலர்களுக்குரித்தான பிரத்தியேகப் பேச்சுகளை நிகழ்த்தி, அவனைத் தாண்டிய அத்தனை சிந்தனைகளையும் அவளிடமிருந்து அகற்றியிருந்தான்.

அது, அவன் மீது சொல்லப்பட்ட கரும் புள்ளிகளை எல்லாம் பெரிதாக எடுக்க விடாமல் செய்திருந்தது; அவன் வார்த்தைகளை மாத்திரமே நம்ப வைத்தது. அதன் பிறகு, எங்கே அறிவைக் கொண்டு அலசி ஆராய்வது? மனத்தின் பாதையிலேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருந்தாள்.

இன்று வரையில் அவள் எடுத்த முடிவு தவறு என்று எண்ணும் வகையில் அவனும் நடந்து கொண்டதில்லை. அன்பான கணவன்; அவள் மீது ஆசையாக இருந்தான்; சின்ன சின்னச் சண்டைகளும் ஊடல்களும் கூட அழகான கூடல்களாகவே நிறைவுற்றன. இப்படி இருக்கையில்தான், அவன் தம்பிக்குத் தூக்கு என்று தீர்ப்பு வந்திருக்கிறது.

அவனுடைய பெற்றவர்கள் தனியாக இருக்க, அவனும் அவளுமாகத் தனி வீட்டில்தான் வசிக்கிறார்கள். மாமியார் வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதலாக இருந்துவிட்டு வந்திருந்தாள். அவள் கணவனுக்கு அவன் வீடு வருகிற போது அவள் இருந்தே ஆக வேண்டும். இல்லையானால் கோபம் வந்துவிடும்.

என்ன மனநிலையில் இருக்கிறானோ, இனி என்னாகுமோ என்று அவள் பயந்துகொண்டு இருக்க, நன்றாக நேரம் செல்ல வந்தவனிடமிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளாகப் பேச வாயெடுத்தபோது கூட, “அத விடு!” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டு, எப்போதும் போல அவளை நெருங்கி, அணைத்து, ஆலிங்கனம் செய்தான் அவன்.

முதன் முதலாக, கணவனின் குணம் என்ன என்று யோசித்துக் கலங்கி நின்றாள் தமயந்தி.

*****

நேரம் இரவு பத்தைக் கடந்திருந்தது. வீடு, தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டிருந்ததால் சாகித்தியனின் குடும்பம், அதே ஊரிலேயே இருக்கும் அவனின் பெரியம்மா வீட்டிற்கு வந்திருந்தனர்.

அவனது குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. அப்பாவுக்குத் தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை. அம்மா இல்லத்தரசியாக இருந்தாலும் காணியிலேயே தோட்டம் வைத்து, வீட்டுக்கும் எடுத்துக்கொண்டு, தன் கைச் செலவையும் அதிலேயே முடித்துக்கொள்பவர். ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள்; நன்றாகப் படிக்கிறவர்கள். அவர்களுக்குக் குறை என்றோ, ஏக்கங்கள் என்றோ பெரிதாக எதுவும் இல்லை. அழகான அமைதியான குடும்பம். எதிர்காலம் கூட, கலங்களற்றுத் தெளிந்த வானமாகத்தான் தெரிந்துகொண்டிருந்தது.

அப்படி இருக்கையில்தான் இடியைப் போன்று தலையில் இறங்கியிருந்தது, சாமந்தியின் தற்கொலை. ஏன், எதற்கு என்று காரண காரியம் புரியாத திகைத்த நிலை.

அப்போது, சாகித்தியனின் கைப்பேசி சத்தமில்லாமல் சிணுங்கிற்று. எடுத்துப் பார்த்தான். காண்டீபன் என்று விழுந்தது. அவனுடைய வரலாற்று விரிவுரையாளன்(Lecturer). அவனுக்கு மிகமிகப் பிடித்த பண்புள்ளம் கொண்ட மனிதன். அவன் பெயரைப் பார்த்ததுமே துக்கம் பெருகித் தெரிய, வேகமாக வீட்டுக்கு வெளியே வந்து அழைப்பை ஏற்றான்.

“சாகித்தியன், என்னென்னவோ எல்லாம் கேள்விப்பட்டன். உண்மையா?” காண்டீபனின் குரலில் தெரிந்த மெய்யான பதட்டம், இவன் கண்களைக் கலங்க வைத்தது.

“ஓம் சேர்.” மேலே பேச வராமல் அடைத்த குரலில் சொன்னான்.

“என்ன சொல்லுறீர்?” என்று அதிர்ந்தவன், அடுத்த பத்தாவது நிமிடம் அவன் முன்னே நின்றான். வீட்டுப் பெரியவர்களுக்குத் தன்னால் முடிந்த ஆறுதலைச் சொன்ன பிறகு, சாகித்தியனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

“உமக்கேதும் டவுட் இருக்கா?” தெருவோர விளக்கின் வெளிச்சத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்று வினவினான்.

“இல்லையே சேர். அப்பிடி எந்த டவுட்டும் எங்க மூண்டு பேருக்கும் வரவே இல்லை. அந்தளவுக்கு நாங்க அவளைக் கவனிக்கேல்லையா? இல்ல, அவள் எங்களிட்ட மறைச்சிட்டாளா? ஒண்டும் விளங்குது இல்ல. இனி எப்பிடி அந்த வீட்டுக்குப் போறது? தங்கச்சின்ர அறையப் பாத்துக்கொண்டே எப்பிடி வாழுறது? எல்லாத்தையும் யோசிக்க யோசிக்கப் பைத்தியம் பிடிக்கும் போல இருக்கு.” என்றவன் உடைந்து அழுதான்.

அவன் முதுகைத் தடவிக்கொடுத்தான் காண்டீபன். ஒரே வீட்டில் குடும்பமாக வசித்தும் எல்லோரும் தனித்தனித் தீவுகளாக மாறிப் போனதன் விளைவு கண் முன்னே! இல்லாமல், வீட்டில் மற்றவர்கள் இருந்தும் இப்படி ஒரு உயிர் அநியாயமாகப் போயிருக்குமா?

“போலீஸ் என்னவாம்?”

“போஸ்ட் மோர்ட்டம் ரிப்போர்ட் ரெண்டு நாளில வந்திடுமாம். அதுக்குப் பிறகு சொல்லுறன் எண்டு சொல்லி இருக்கிறார் ஏஎஸ்பி சேர்.”

“எந்த ஏஎஸ்பி?”

“எல்லாளன் சேர்.”

“ஓ!”

மீண்டும் அவர்களுக்குள் அமைதி.

“திடீரெண்டு பிடிச்சு நடுக் கடலுக்க தள்ளிவிட்ட மாதிரி மூச்சடைக்குது சேர்.” பெரிய மூச்சை இழுத்து விட்டுவிட்டுச் சொன்னான் சாகித்தியன்.

அவன் உள்ளத்து உணர்வுகளை விளங்கிக்கொள்ள முடிந்ததில், “ஒரு ரெண்டு நாளைக்கு அப்பிடித்தான் இருக்கும். ஆனா, நீர் உடையக் கூடாது! இனி காரணத்தைத்தான் கண்டுபிடிக்கலாமே தவிர, போன உயிர் வரப் போறேல்ல. உம்மட அம்மா அப்பாக்கு இருக்கிறது நீர் மட்டும்தான். உம்மையும் தைரியமா வச்சுக்கொண்டு, அவேயையும் பாக்க வேண்டிய பொறுப்பு உமக்கு வந்திருக்கு.” என்று கனிவுடன் சொன்னான் காண்டீபன்.

“இதில இருந்து வெளில வாறது ஈஸி இல்ல எண்டு எனக்குத் தெரியும். ஆனா, நீர் வந்துதான் ஆகோணும். அந்த வீட்டுக்குத் திரும்ப எப்பிடிப் போறது எண்டு கேக்கிறீரே, கொஞ்சக் காலத்துக்கு முதல் எங்கட நிலமே ரெத்தக் காடாத்தானே கிடந்தது. எத்தின சொந்த பந்தங்களைக் கொத்து கொத்தா இழந்தோம்? அதையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு நாங்க வாழேல்லையா? அப்பிடித்தான், எல்லாத்தையும் கடந்து வரோணும். விளங்குதா?”

மெல்லிய தலையசைப்பின் மூலம் அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டான் சாகித்யன்.

“வேற என்ன? இனி நான் வெளிக்கிடோணும். என்ன உதவி எண்டாலும் யோசிக்காமக் கேளும்.”

வீட்டுக்குப் புறப்பட்ட காண்டீபனின் மனம் முழுவதும் பாரம் ஏறிப்போய்க் கிடந்தது. ஒரு குடும்பமே சீர் குழைந்து போயிற்று. அது மீள்வதற்கு எத்தனை காலமெடுக்கும்? முதலில், முழுமையாக மீள முடியுமா?

இன்றைய இளம் சமுதாயத்தின் மீது வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்பட்ட வன்மத்தில் இந்தப் போதைப் புழக்கமும் ஒன்று. அதை உணர்ந்து, தவிர்த்து, தாம் யார் என்று உணர்த்தி வாழ்வதை விட்டுவிட்டு, இந்த இளம் சமுதாயமும் நாளுக்கு நாள் அதற்கு அடிமையாகிக்கொண்டே போவதுதான் பெரும் வேதனை!
 

Goms

Active member
என்னம்மா ஆதினி டக்குன்னு துப்பாக்கியைத் தூக்கிட்ட? நீ பேசாம வக்கீலுக்குப் பதிலா police ஆகிடலாம்.
 
Top Bottom