• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 5

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 5

எல்லாளனுக்கு அடுத்த இரண்டு நாள்களும் சாமந்தியின் தற்கொலைக்கான துப்புத் துலக்குவதிலேயே கழிந்தன. அவள் படித்த கல்லூரி, சென்று வந்த டியூஷன் செண்டர், நண்பர்கள், அயலட்டை வீடுகள் என்று ஒன்று விடாமல் ஆராய்ந்துவிட்டான்.

முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்திற்கு இடமாக யாருமே சிக்கவில்லை. அவளின் லாப்டாப், ஃபோன் எதிலும் தவறான அழைப்பு, மெசேஜ், வீடியோ என்று ஒன்று கூட இல்லை. பின்னே?

தடயவியலாளர்கள் கூட அவள் வீட்டிலோ, பொருட்களிலோ சந்தேகத்திற்கு இடமாக எதுவுமே இல்லை என்று கையை விரித்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையும் வந்து சேர்ந்தது. போதைப் பழக்கம் இருந்திருப்பதை உறுதி செய்ததோடு, அவள் கன்னிப்பெண் அல்லள் என்று இருந்ததுதான் அவனை அதிர வைத்தது. கூடவே, வன்புணர்வு நடந்ததற்கான தடயங்களும் இல்லை என்றது அறிக்கை.

அவனுடைய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவள் வெளியே எந்த இடத்திலும் வழி தவறியதாகத் தெரியவில்லை. அப்படியானால் வீட்டிற்குள்ளா? அடுத்த நிமிடமே சாகித்தியன் விசாரணைக்கு அழைக்கப்பட்டான்.

*****

இருண்ட அறை. எங்கோ ஒரு மூலையிலிருந்து மெதுவாகக் கசியும் வெளிச்சம். நட்ட நடுவில் ஒரு மேசை. எதிரெதிரில் இரண்டு நாற்காலிகள். அதில் ஒன்றில் சாகித்தியன் அமர வைக்கப்பட்டிருந்தான்.

பூட்டிய கதவும் சத்தமே இல்லாத மயான அமைதியும் திகிலூட்டின. நெஞ்சுத் தண்ணீர் வற்றிப்போகும் அளவிலான அந்தக் கொடிய அச்சுறுத்தலைத் தாங்கும் சக்தியற்று அவன் நடுங்கிக்கொண்டிருக்கையில் கதவைத் திறந்துகொண்டு வந்தான் எல்லாளன்.

அன்று, நிதானமாக, மெல்லிய அனுதாபத்தோடு அவனை விசாரித்தவன் அல்லன் அவன்! கடுமை ஏறிய விழிகளும், நீதானே குற்றவாளி என்று நெஞ்சையே ஊடுருவும் பார்வையும், இளக்கம் மருந்துக்கும் இல்லாத உடல் மொழியும் அவனை வேறு ஒரு எல்லாளனாகக் காட்டின.

சாகித்தியனுக்குத் தொண்டைக் குழி ஏறி இறங்கிற்று.

“எனக்குத் தேவை உண்மை. அத மட்டும் சொல்லிட்டா அஞ்சு நிமிசத்தில இந்த விசாரணை முடிஞ்சிடும். இல்லையோ?” என்றவன் கையில் இருந்த கோப்பினைத் தூக்கி அவன் முன்னே வைத்தான்.

“உங்கட தங்கச்சி போற பள்ளிக்கூடம், படிக்கிற டியூஷன் செண்டர், பழகிற ஃபிரெண்ட்ஸ், தினமும் போய் வாற ரோட்டு எண்டு ஒண்டையும் விடேல்ல. அக்கு வேர் ஆணிவேரா விசாரிச்சாச்சு. வெளில எங்கயும் அவவுக்கு எந்தப் பிரச்சினையும் வரேல்ல. வீட்டுல தான்...” என்று நிறுத்திவிட்டுத் திரும்பவும் பார்வையால் அவனை ஊடுருவினான்.

என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தும் புரியாத நிலையில் நடுங்கினான் சாகித்தியன்.

“போதை மட்டுமில்ல. உங்கட தங்கச்சி சாகேக்க கன்னிப் பெண்ணும் இல்ல.”

அவன் சொன்னதைப் புரிந்து கொள்வதற்கே சாகித்தியனுக்குச் சில நொடிகள் எடுத்தன. புரிந்ததும், “சேர்…” என்றான் ஈனக்குரலில். அவன் தங்கையா? நம்ப முடியாமல் மனம் ஊமையாகக் கதறிற்று!

“சொல்லும்! இதுக்கெல்லாம் ஆர் காரணம்? நீரா?”

“நானா?” அவன் நெஞ்சு பதறிப் போனது. காதுகள் இரண்டும் கூசிப் போயின. “என்ன சேர் இப்பிடிக் கேக்கிறீங்க? அவள் என்ர தங்கச்சி.” கோபப்படக் கூட வலிமையற்றவனாகத் தழுதழுத்தான்.

“வேற ஆர் உங்கட வீட்டில ஆம்பிள?” என்றதும் பதறி நிமிர்ந்த சாகித்தியன், அவன் எங்கே வருகிறான் என்று புரிந்து மொத்தமாக உடைந்து போனான்.

“இல்ல இல்ல! நாங்க அப்பிடியான ஆக்கள் இல்ல. ஏற்கனவே ஒரு உயிரை இழந்திட்டு நிக்கிறோம். அதுல இருந்து எப்பிடி வெளில வாறது எண்டே தெரியேல்ல. இதுல இந்தப் பழியையும் தூக்கி எங்கட தலைல போடாதீங்க சேர்!”

“அப்ப வேற ஆர்? உங்கட வீட்டுக்கு வந்து போற ஆம்பிளைகள்? சித்தப்பா, பெரியப்பா, மாமா, மச்சான் எண்டு… இல்ல உங்கட நண்பர்கள்?”

“பெரியப்பா குடும்பம் மட்டும்தான் பக்கத்தில இருக்கினம் சேர். ஆனா, பெரியப்பாக்கு நல்ல வயசு. வேற என்ர ஃபிரெண்ட்ஸ் மட்டும்தான். அதுவும் எப்பயாவதுதான் வந்து போறவங்கள்.”

“ஆரு? அண்டைக்கு வந்திட்டுப் போனாங்களே. அந்த மூண்டு பேருமா?”

ஆம் என்று தலையை ஆட்டினான் சாகித்யன்.

அவர்கள் பற்றிய மொத்த விபரத்தையும் பெற்றுக்கொண்டு விட்டு, “எங்கயும் ஓடி ஒளியக் கூடாது. எப்ப கூப்பிட்டாலும் வர வேணும். விளங்கினதா? இல்லையோ, பிறகு நான் விசாரிக்கிற விதமே வேறயா இருக்கும்!” என்கிற அதட்டலோடு அனுப்பிவைத்தான்.

வெளியே வந்தவன் வியர்வையில் குளித்திருந்தான். மனம் முழுக்கப் புண்ணாகிப் போயிருந்தது. கூடப்பிறந்த தங்கையைப் போய்… மேலே நினைக்கக் கூட முடியாமல் வீதியில் நின்று வெடித்து அழுதான்.

அந்த மூவரையும் அன்றே விசாரணைக்கு எடுத்தான் எல்லாளன். எந்தப் பிரயோசனமும் இல்லை. அவனுடைய கிடுக்கிப்பிடிக் கேள்விகளுக்கு அணிந்திருந்த காற்சட்டை நனைந்துவிடுகிற அளவுக்குப் பயந்து நடுங்கினார்களே தவிர, வேறு எந்தச் சிறு துப்பும் கிடைக்கவில்லை. அவனுடைய சந்தேகம் கூட முகாந்திரம் அற்றது என்பதில், வாய் மிரட்டலோடு ஊர் தாண்டிப் போகக் கூடாது என்று உத்தரவிட்டு அவர்களையும் அனுப்பிவைத்தான்.

*****

தன் சிலுக்கின் மீது கொலை வெறியில் இருந்தாள் ஆதினி. சமீப நாட்களாக அவள் மனநிலையே சரியில்லை. இதில், அது வேறு அடிக்கடி வேலை நிறுத்தம் செய்துகொண்டிருந்தது. இன்றும் நண்பியின் வீட்டுக்கு வந்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் இடையில் நின்றுவிட்டது. யாரையாவது அழைத்து உதவி கேட்கக் கையில் கைப்பேசியும் இல்லை.

‘எல்லாம் அவனால! அண்டைக்கு ஷூட் பண்ணியிருக்கோணும். விட்டுட்டன்!’ அவனை வாய்க்குள் போட்டு மென்றபடி ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு நடந்தவளுக்கு மூச்சு வாங்கியது.

உச்சி வெய்யில் அடித்துக் கொளுத்தியதில் முகமெல்லாம் வியர்த்து வழிந்தது. வீதியோரமாக நின்ற மர நிழலின் கீழ் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, வியர்வையைத் துடைத்தாள். மிகுதித் தூரத்திற்குத் தள்ளுவதை நினைக்கவே நாக்கு வறண்டது.

‘எளியவன்! ஃபோன தந்திட்டுப் போயிருக்கலாம்.’ அழைத்து யாரிடமும் உதவி கேட்க முடியாமல் செய்துவிட்டானே!

ஆட்டோ ஏதாவது வந்தால் மறித்து உதவி கேட்போமா என்று எண்ணிக்கொண்டு நிற்கையில், அவள் முன்னே ஜீப்பை கொண்டு வந்து நிறுத்தினான் எல்லாளன்.

அவனுக்கென்று டிரைவர் இருந்தாலும் கூடப் பெரும்பான்மைப் பொழுதுகளில் அவனேதான் ஓட்டுவான். அப்போதுதான் தன் சிந்தனையின் வேகத்திற்கு ஏற்ப, வாகனத்தின் வேகமும் இருக்கும் என்று நினைப்பான்.

அப்படி ஒரு கேஸ் விசயமாகச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் ஆதினியைக் கண்டான்.

“ஏன் இங்க நிக்கிறாய்?” ஜீப்பிலிருந்து இறங்காமலேயே அவன் கேட்க, ‘எல்லாம் உன்னாலதான்டா!’ என்று அவனை முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆதினி.

ஸ்கூட்டி ஓரமாக நிற்பதிலேயே அதற்குத்தான் கோளாறு என்று விளங்கியது. இறங்கி வந்து அதை ஆராய்ந்தான். பெட்ரோல் இருந்தும் ஸ்டார்ட் ஆக மறுத்தது. அவனுக்குத் தெரிந்த வரையில் பார்த்தும் சரி வரவில்லை.

“கராஜுக்குத்தான் விடோணும். நீ ஜீப்பில ஏறு!” ஜீன்ஸ் பொக்கெட்டிலிருந்து கைப்பேசியை எடுத்தபடி சொன்னான்.

“எனக்கு ஆட்டோல போகத் தெரியும்! நீங்க போய் உங்கட வேலையப் பாருங்க!” வெடுக்கென்று சொன்னாள் ஆதினி.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
உச்சி வெய்யிலில் அவள் கருவாடாகிப் போனதற்குக் காரணமே அவன்தான். இதில், பெரிய அக்கறை காட்ட வந்துவிட்டான்!

கைப்பேசியில் அழைப்பை ஏற்படுத்தப் போனவன் அதைச் செய்யாமல் நிறுத்திவிட்டு, “உன்ன ஏறச் சொன்னனான்!” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அவ்வளவு அதிகாரமா? அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆட்டோ ஏதும் வருகிறதா என்று வீதியைக் கவனித்தாள். நல்ல நேரமாக ஒன்று வந்துகொண்டிருந்தது. மறிப்பதற்காக நீட்ட முயன்ற கையையே பற்றி இழுத்து வந்து, ஜீப்பின் கதவைத் திறந்து, “ஏறு!” என்றான் அவன்.

சொல்லாமல் கொள்ளாமல் அன்றைய நாள் கண் முன் வந்து நிற்க, ஆதினிக்குள் மெல்லிய பதட்டம். “கைய விடுங்க!” என்றாள் அவசரமாக.

“நீ முதல் ஏறு!”

“நீங்க விடுங்க!” தன் முழுப் பலத்தையும் திரட்டி, அவனிடமிருந்து கையை விடுவிக்க முயன்றாள்.

என்ன இது புதிதாக என்று யோசனையாகப் பார்த்தாலும் கையை விலக்கிக்கொண்டு, “சரி ஏறு!” என்றான் அப்போதும்.

அதற்குமேல் வாயாட முடியாமல் ஏறி அமர்ந்துகொண்டாள் ஆதினி. அதன் பிறகுதான் இயல்புக்குத் திரும்பினாள். அவன் கராஜ்காரனுக்கு அழைத்துச் சொல்வது காதில் விழுந்தது.

பத்து நிமிடத்தில் இருவர் வந்து, ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு போக, ஜீப்பை எடுத்தான் எல்லாளன்.

“ஒரு பிரச்சினை எண்டா கூப்பிட்டுச் சொல்லோணும் எண்டு தெரியாதா உனக்கு? உச்சி வெயிலில நடு ரோட்டில நிக்கிற. எத்தின நாள் சொல்லி இருக்கிறன், இப்பிடித் தனியாத் திரியிறது பாதுகாப்பு இல்லை எண்டு. கேக்கிறியா நீ? எதேற்சையா நான் வந்ததால பாத்தன். இல்லாட்டி?”

“இல்லாட்டி ஆட்டோவில நிம்மதியா வந்திருப்பன்.” என்று எரிந்து விழுந்தாள் அவள்.

“அதென்ன நிம்மதியா? இப்ப உன்ர நிம்மதிக்கு என்ன கேடு? நீ ஒண்டும் சாதாரண வீட்டுப் பிள்ளை இல்ல, இப்பிடி நடு ரோட்டில நிக்க. இதுல முன்னப்பின்னத் தெரியாத ஆட்டோல ஏறப் போறாளாம்!”

இப்படி அவன் வறுத்து எடுக்கையில் தப்பிக்க வழியே இல்லாமல் போய்விடும் என்றுதான் அவனுடைய ஜீப்பில் ஆதினி ஏறவே மாட்டாள். விதியானால் ஒவ்வொரு முறையும் அவனிடமே மாட்டி விடுகிறது. தன்னையே நொந்தபடி விதியே என்று அமர்ந்திருந்தாள்.

அவனுக்குக் கோபம் போகவே இல்லை. வழி நெடுக வறுத்து எடுத்துக்கொண்டே வந்தான். ஒரு கட்டத்தில் அவனுக்கே போதும் என்று தோன்றிவிட்டது போலும். திரும்பி அவளைப் பார்த்தான். முகம் வாடிப்போயிருந்தது. உடல் நிலை ஏதும் சரி இல்லையோ?

“ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” தன் கோபத்தை விடுத்துத் தணிந்த குரலில் விசாரித்தான்.

“...”

“நீ இப்பிடித் தனியா வாற ஆள் இல்லையே. எங்க உன்னோடயே திரியிற அந்த நாலஞ்சு அர டிக்கட்டுகள்?”

‘ஆரம்பிச்சிட்டான்! இவனும் இவன்ர விசாரணையும்! இதில அர டிக்கட்டாம்!’ எரிச்சல் உண்டாகப் பதில் சொல்லக் கூடாது என்கிற பிடிவாதத்தோடு, முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“ஆரோடயும் சண்டையா?”

“...”

“என்ன எண்டு சொல்லு ஆதினி. எனக்குச் சொல்லாட்டியும் அங்கிளுக்கோ அகரனுக்கோ எடுத்துச் சொல்லி…” எனும்போதுதான் அவளின் கைப்பேசி தன்னிடம் இருப்பது நினைவு வந்தது. கூடவே, இத்தனை நாள்களாக அதைப் பற்றி அவனிடம் அவள் கேட்கவில்லை என்பதும்.

அவனாகத் தரட்டும் என்று காத்திருக்கிறாளோ? அதுதான் கோபமோ? கோபமா? நிச்சயம் கொலை வெறியில் இருப்பாள். உதட்டோரம் மெல்லிய முறுவல் விரிய, “ஏதாவது வேணுமா?” என்று வினவினான்.

“இப்ப என்ன பிரச்சினை உங்களுக்கு? எனக்கு ஏதாவது வேணுமெண்டால் அப்பாட்டக் கேப்பன். இல்ல, அண்ணாட்டக் கேப்பன். நீங்க ஒண்டும் கேக்கத் தேவேல்ல. வாய மூடிக்…” அவனுடைய விடாத விசாரணை கொடுத்த சினத்தில் சிடுசிடுத்தபடி திரும்பியவளின் பேச்சு, சிரிக்கும் அவன் விழிகளைக் கண்டு அப்படியே நின்று போனது.

ஒரு கணம் அந்த விழிகளின் வசீகரத்தில் தடுமாறிப்போனவள் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள். இதென்ன புதிதாக அவன் கண்களை எல்லாம் கவனிக்கிறாள்? என்ன நடக்கிறது அவளுக்குள்? பேச்சு வேறு தடுமாறுகிறதே!

மூட்டப்படும் தீ, ஏதோ ஒரு கணத்தில் பற்றிக்கொள்வதைப் போல, அன்று அந்தக் கணத்தில் அவளுக்குள் நிகழ்ந்த மன நடுக்கம், அவளைப் பிரட்டிப்போட்டிருந்தது. அவளைத் தடுமாற வைக்கும் அந்த உணர்வு, அவன் அருகண்மையில் இன்னுமே வளர்வதாகப் பட்டது.

அதன் பிறகு அவன் விழிகளைச் சந்திப்பதைத் தவிர்த்தாள். ஏன், பேசுவதையே முற்றிலுமாக நிறுத்தியிருந்தாள்.

எல்லாளனுக்கு அவளின் நடவடிக்கைகள் அத்தனையும் வித்தியாசமாகத் தென்பட்டன. பேச்சை ஏன் இடையில் நிறுத்தினாள்? அவனைப் பார்ப்பதை ஏன் தவிர்க்கிறாள்? ஒரு நிமிடம் கூடக் கைப்பேசி இல்லாமல் இருக்க முடியாதவள், அவன் கொடுக்காததனால் துவக்கைத் தூக்கிக்கொண்டு வந்தவள், இவ்வளவு நேரமாகியும் அதைப் பற்றிக் கேட்கவே இல்லையே! அவ்வளவு கோபம் போலும். அன்றைக்கு அவனும் சற்றுக் கடுமையாகத்தானே நடந்தான்.

சற்று நேரத்தில் அவள் எப்போதும் வரும் கூல்பார் முன்னே ஜீப்பை நிறுத்தினான். “வா!” என்று அழைத்துச் சென்று, அவளுக்குப் பிடித்த ஐஸ் சேலட் வாங்கிக்கொடுத்தான்.

அன்றைய நாளுக்கான மறைமுக சமாதான நடவடிக்கை. இருந்தாலும், “ஒரு பவுல்தான்!” என்றான் அவளை அறிந்தவனாக.

அவள் என்றைக்கு அவன் சொன்னதைக் கேட்டு நடந்திருக்கிறாள்? அந்த பவுலை முடித்துவிட்டு, “இன்னுமொண்டு வேணும்!” என்று அறிவித்தாள்.

“உன்னப் பாவம் பாத்துக் கூட்டிக்கொண்டு வந்தது பிழையாப் போச்சு!” கடிந்துகொண்டாலும் இன்னுமொன்று வரவழைத்துக் கொடுக்கத் தவறவில்லை அவன்.

“வெயிலுக்க வேற நிண்டிருக்கிறாய். வருத்தம் வரப்போகுது.”

திரும்பவும் பேச்சுக்கொடுத்தான். ஒற்றைச் சொல் பதில்கள் அல்லது, முறைப்பு மட்டுமே கிடைத்தது. வேடிக்கையாக இருந்தது அவனுக்கு.

“உனக்கு என்னவோ பிடிச்சிட்டுது!”

சின்ன சிரிப்புடன் சொன்னவனை முறைக்க நிமிர்ந்தவளின் பார்வையில் சிரிக்கும் உதடுகளின் மேலே இருந்த மீசை பட்டது.

ஒரு கணம் கருத்தடர்ந்த கம்பீரமான அந்த மீசையில் அவள் பார்வை நிலைத்துவிட்டது. அடுத்த கணமே பதறிப்போய்த் தலையை ஐஸ் பவுலுக்குள் கவிழ்த்துக்கொண்டாள்.

“என்ன? மீசைல ஏதும் பிரண்டிருக்கா?” இந்த முறை இருவரும் எதிரெதிரில் அமர்ந்திருந்ததில் அவள் பார்வையை அவனும் கவனித்திருந்தான். இயல்பாகக் கேட்டபடி அவன் மீசையை நீவி விட, அவளுக்கு மூச்சடைத்தது.

அதற்குமேல் முடியாமல், “போதும், போவம்.” என்று எழுந்து வெளியே வந்திருந்தாள்.

விழுந்தடித்துக்கொண்டு ஓடியவளின் செய்கை ஒவ்வொன்றும் வித்தியாசமாகப் பட்டாலும் பணத்தைச் செலுத்திவிட்டு வந்தான் எல்லாளன்.

ஜீப்பிலும் அமைதிதான். அவன் பார்வை யோசனையோடு அவளில் படிந்து படிந்து மீண்டது.

“வேற ஏதும் வேணுமா?”

பிடிவாதமாக வெளியே பார்வையைப் பதித்திருந்தவளின் தலை மட்டும் இல்லை என்பதாக அசைந்தது.

தன் மன உணர்வுகளை மறைப்பதிலேயே கவனமாக இருந்தவள், அவன் கேள்வியின் பின்னிருந்த காரணத்தை யோசிக்க மறந்தாள்.
 
Top Bottom