• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 6

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 6

எல்லாளன், அகரன் இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள். இளம் வயதினர். பதவியும் கிட்டத்தட்ட ஒன்று என்றதில், காவல்துறைக் கூட்டம் ஒன்றில் முதன்முறையாகச் சந்தித்தவர்கள் இலகுவாகவே நண்பர்களாகிப் போயினர்.

ஆதினிக்குத் தன் பிறந்தநாள்களைப் பரிசில்களோடு கொண்டாட மிகமிகப் பிடிக்கும். அப்படி வந்த அவளின் பதினாறாவது பிறந்தநாள் விழாவுக்கு நண்பனைக் குடும்பத்தோடு அழைத்திருந்தான் அகரன்.

எல்லாளனும் தங்கையோடு வந்திருந்தான். அன்று ஆரம்பித்த அகரன், சியாமளா அறிமுகம், பின் வந்த நாள்களில் காதலாக மலர்ந்து போயிற்று. நல்ல, பொறுப்பான பிள்ளைகள் என்று கண்டுகொண்டதில் இளந்திரையனும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவர்களின் பெற்றோரின் கொலை வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால், அவர்கள் இருவரையும் திருமணம் பேச வரச்சொல்லியிருந்தார்.

இதோ, அண்ணனும் தங்கையும் புறப்பட்டிருந்தனர். சியாமளாவுக்கு மனதெங்கும் சந்தோசப் பரபரப்பு. கூடவே, எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற பயமும் பதட்டமும் சேர்ந்திருந்தன.

“ஆதினி என்ன குட்டையைக் குழப்புவாளோ எண்டு பயமா இருக்கண்ணா.” அவளின் அன்றைய செய்கை உண்டாக்கிய அச்சத்திலிருந்து முற்றிலுமாக வெளியே வந்திராததில் சொன்னாள் சியாமளா.

“அப்பிடி என்ன செய்யப் போறாள்? அண்டைக்கு நானும் கொஞ்சம் கூடத்தான் அவளைப் பேசிப்போட்டன். அந்தக் கோபம்தான் அது. அதவிட, ஒரு போலீஸ்காரனின்ர தங்கச்சி, இன்னொரு போலீஸ்காரனுக்கு வைஃப் ஆகப்போறாய். இதுக்கெல்லாமா பயப்பிடுறது?” என்று கேட்டு அவளுக்குத் தைரியமூட்டினான் எல்லாளன்.

அந்தச் சின்ன வயதிலேயே தாய் தந்தையரின் கோரச்சாவைக் கண் முன்னே கண்டவள் அவள். அதனாலோ என்னவோ தமையனின் தைரியத்தில் நூற்றில் ஒரு மடங்கு கூட அவளிடத்தில் இருப்பதில்லை. இப்போதும் அவன் என்ன சொல்லியும் காரணமறியா அந்த மனப் பயம் அவளை விட்டு அகல மாட்டேன் என்றது.

“மச்சி, வா வா வா!” இவர்களைக் கண்டுவிட்டு வாசலுக்கே வந்து வாய் நிறைய வரவேற்றான் அகரன்.

அவனுக்கும் ஒரு தங்கை இருப்பதாலோ என்னவோ, பொது இடங்களில் வைத்துப் பார்வையில் கூடச் சியாமளாவிடம் நெருக்கத்தைக் காட்டமாட்டான். அவனுடைய நேசம் வெளிப்படுவது அவர்களுக்கான தனிமையில் மாத்திரமே. அதனால், அவளிடமும் மலர்ந்த முகத்துடன், “வா!” என்றான்.

அதற்கான எதிரொலியைக் கொடுக்காமல் சென்று அமர்ந்துகொண்டாள் சியாமளா. அன்றைக்கு ஆதினியைக் கண்டிக்காத அவன் மீது உண்டான மனத்தாங்கல் இன்னுமே தீராமல் இருந்தது.

அதை உணர்ந்திருந்தவனின் பார்வை ஒரு நொடி அவளிடம் தங்கினாலும் வேறு பேசவில்லை.

“சாந்தி அக்கா, எல்லாளன் வந்திருக்கிறான். தேத்தண்ணி தாறீங்களா?” சமையலுக்கு என்று இருக்கும் பெண்ணிடம் குரல் கொடுத்துவிட்டு, “இரு மச்சி, அப்பாவைப் பாத்துக்கொண்டு வாறன். வந்திட்டீங்களோ எண்டு அப்போத கேட்டவர்.” என்றபடி உள்ளே நடந்தான்.

இளந்திரையனின் அலுவலக அறை பெரிதாக இருந்தது. நடுவில் மேசை. அவரைச் சுற்றி இருந்த சுவர்கள் முழுக்க ராக்கைகள் அமைக்கப்பட்டு அத்தனையிலும் சட்டப் புத்தகங்களும் வழக்குகளின் கோப்புகளும் நிறைந்து வழிந்தன. மேசையின் முன்னிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்து, ஏதோ ஒரு வழக்குப் பற்றிய கோப்பினை வைத்துப் படித்துக்கொண்டிருந்தார்.

ஐம்பத்தி ஒன்பது வயது நிரம்பிய மனிதர். நரைத்தடர்ந்த கேசம். அடர்ந்த மீசை. அவரின் வயதுக்கேயுரிய கண்ணாடி. இடைவிடாத உடற்பயிற்சியின் பயனாக இன்னுமே உடையாத திடகாத்திரமான தேகம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று எதிலிருந்தும் வழுவமாட்டேன் என்று சொல்லும் சீரிய முகம்.

“அப்பா!”

வாசித்துக்கொண்டிருந்த கோப்பிலிருந்து முற்றிலும் விடுபடாத முகத்தோற்றத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தார்.

“எல்லாளன் வந்திட்டான்.”

“ஓ!” அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்துவிட்டு, களைப்புற்றிருந்த கண்களை ஒரு முறை இரண்டு கைகளாலும் அழுத்திக் கொடுத்தார்.

“இருக்கச் சொல்லுங்கோ, வாறன்!” என்று விட்டு, பார்த்துக்கொண்டிருந்த கோப்பில் பேனையை எடுத்து எதையோ குறித்து வைத்தார். அப்படியே அதை மூடி வைத்தவரின் பார்வை, சிறிய சட்டத்துக்குள் அடைக்கப்பட்டு, மேசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மனைவியில் சில நொடிகள் தங்கிற்று.

மங்களேஸ்வரி அருமையான துணைவி. அகரனுக்குப் பிறகு அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. சரி, ஒரு பிள்ளையே போதும் என்று விட்டுவிட்டனர். ஏழு வருடங்கள் கழித்து ஆதினி உண்டானது, இருவருக்குமே இனிய அதிர்ச்சி. சந்தோசமாகவே பெற்றுக்கொண்டனர்.

என்ன, அவளுக்கு மூன்று வயதாக இருந்தபோது, மலேரியாக் காய்ச்சல் வந்து மங்களேஸ்வரி இறந்துபோனார். அவர் இல்லாமல் கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் ஓடியே போயிற்று.

இதோ, இன்று அவர்கள் மகனுக்குத் திருமணம் பேசப்போகிறார்.

பழைய சிந்தனைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவர்களிடம் வந்தார். சற்று நேரம் பொதுவாகப் பேச்சு நகர்ந்தது. சாமந்தியின் கேஸ் பற்றியும் கேட்டுக்கொண்டார்.

“வரவர போதைப்பழக்கம் கூடிக்கொண்டு வருது எல்லாளன். கொஞ்சம் கவனமா கவனிங்கோ.” என்றவர், மெல்லிய சிரிப்புடன், “பிறகு?” என்றார் தன் வருங்கால மருமகளைப் பார்த்து.

“அங்கிள்?” என்றவளுக்கு முகத்தில் மெலிதாகச் செம்மை ஏறிற்று. என்ன சொல்லுவது என்று தெரியாமல் தடுமாறினாள்.

அகரனின் விழிகள் குறுகுறுப்புடன் அவள் மீது படிந்தன. அப்போதும் அவள் அவனைப் பார்ப்பதைத் தவிர்க்க, “ஆதிய நான் பேசேல்லையாம் எண்டு ஆள் என்னோட கோவமா இருக்கிறா அப்பா.” என்று, வேண்டுமென்றே போட்டுக்கொடுத்தான்.

இப்படிச் செய்வான் என்று எதிர்பாராத சியாமளா அதிர்ந்துபோனாள். அவரின் முன்னே அவனை முறைக்கவும் முடியவில்லை. மருமகளாக வர முதலே மச்சாளை வெறுக்கிறாளே என்று நினைத்துவிடுவாரோ என்று வேறு கலங்கினாள்.

அதற்கு மாறாக, அன்று நடந்ததை அறிந்திருந்தவர், “அவவின்ர கோபம் சரிதானே தம்பி.” என்றார் மகனிடம்.

சியாமளாவுக்கு மனம் சற்றே ஆசுவாசமுற்றது. “அது அங்கிள், அண்ணாக்கு கன்ன(Gun) நீட்டினதும் எனக்குப் பயத்தில உயிரே போயிற்றுது. அதுதான்... எனக்கு எனக்கு... இதெல்லாம் விளையாட்டுக்குக் கூடப் பாக்கேலாது அங்கிள்.” என்று தன்னை விளக்கினாள்.

பெற்றவர்களின் கொடூர மரணத்தைக் கண்ணால் பார்த்தவளின் மனநிலையை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதில், தலையை அசைத்து அவள் சொன்னதை ஆமோதித்துக்கொண்டார்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
கூடவே, “வயசு 21 ஆகப்போகுதே தவிர ஆதினிக்கு இன்னும் சின்ன பிள்ளைக் குணம் தானம்மா. ஆனாப் பாருங்கோ, இன்னும் ரெண்டு வருசம் போக உங்கள மாதிரிப் பொறுப்பா வந்திடுவா.” என்றார் மகள் மீதான கனிவு சொட்டும் குரலில்.

“பிறகு சொல்லுங்கோ, கலியாணத்தை எப்ப எப்பிடி வைப்பம்? ஏதாவது ஐடியா இருக்கா?” மூவரையும் பொதுவாகப் பார்த்து வினவினார்.

“எங்களுக்குச் சிம்பிளா, ஆர்ப்பாட்டம் இல்லாம நடந்தாப் போதும் அப்பா. நாளையும் தள்ளிப்போட வேண்டாம்.” என்றான் அகரன்.

‘நீ என்ன சொல்கிறாய்?’ என்பது போல் எல்லாளனைப் பார்த்தார் இளந்திரையன்.

“அவே ரெண்டு பேரின்ர விருப்பம்தான் அங்கிள் எனக்கும். அப்பிடியே சீதனம்...” அவருக்கு இதெல்லாம் பிடிக்காது என்று தெரியும். ஆயினும், பெண்ணின் பெற்றவர்களின் இடத்தில் இருக்கிறவன் கேட்க வேண்டுமே என்று மெல்லிய தயக்கத்துடன் வினவினான்.

‘அடேய்!’ என்று பல்லைக் கடித்த அகரன், வேகமாகத் திரும்பித் தந்தையைப் பார்த்தான்.

அவர் முகத்தில் கோபத்திற்கான எந்தச் சாயலும் இல்லை. மாறாக, பெரிய முறுவல் ஒன்று விரிந்திருந்தது. “எனக்குச் சீதனம் வேணும்தான்.” என்றார் அதே முறுவலோடு.

அகரன் விழிகளில் வியப்பு!

“சொல்லுங்க அங்கிள், என்ர சக்திக்கு மீறி எண்டாலும் செய்வன்!” மிகுந்த ஆர்வத்துடன் முன் வந்தான் எல்லாளன்.

“பேச்சு மாறக் கூடாது!”

“இல்ல. மாற மாட்டன்!”

“உண்மையாவோ?”

“உண்மையாத்தான் அங்கிள்!” ஏன் இந்தளவில் உறுதிப்படுத்த விழைகிறார் என்கிற கேள்வி எழுந்தாலும் தயங்காது சொன்னான்.

“அப்ப, பெண் குடுத்துப் பெண் எடுப்பம்.”

அவர் என்னவோ மிகுந்த இலகு குரலில்தான் சொன்னார். கேட்ட மூவருமே திகைத்துப் போயினர்.

எல்லாளன் இதை மருந்துக்கும் எதிர்பார்க்கவில்லை. ஆதினியை அப்படி ஒரு கோணத்தில் யோசித்ததே இல்லை. இப்போதும் யோசிக்க முடியவில்லை. மறுக்க நினைத்தான். ஆனால், வாக்குக் கொடுத்துவிட்டானே! மறுப்பான் என்று தெரிந்துதான் முதலில் வாக்கை வாங்கினாரோ?

“அப்பா, ஆதி சின்ன பிள்ளை. அதைவிட, அவளை விட இவனுக்கு ஏழு வயசு கூட.” முதல் மறுப்பை அண்ணனாகத் தெரிவித்தான் அகரன்.

“ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா வயசெல்லாம் ஒரு விசயம் இல்ல தம்பி. அதவிட, இப்பவே கலியாணம் எண்டு ஆர் சொன்னது? சிம்பிளா மோதிரம் மாத்தி விடுவம். பிள்ள படிச்சு முடிச்ச பிறகு கலியாணத்தை வைக்கிறதுதானே?”

அவர் பதில் சொன்ன விதமே எல்லாவற்றையும் முதலே யோசித்திருக்கிறார் என்று சொல்லிற்று.

“எண்டாலும் அப்பா…” எல்லாளனைப் போல் நல்ல மாப்பிள்ளையைத் தேடிப் பிடிப்பது இலகுவான காரியமல்ல என்றாலும், இத்தனை வயது வித்தியாசத்தில் தேவையா என்று நினைத்தான் அகரன்.

மகனுக்குப் பதிலைச் சொல்லாது, “நீங்க சொல்லுங்கோ எல்லாளன். என்ர பிள்ளையை வேண்டாம் எண்டு சொல்லுவீங்களா?” என்று உரிமையோடு வினவினார் அவர்.

இப்படி நேரடியாகக் கேட்பவரிடம் மறுப்பது எப்படி? அதைவிட, அவர் கேட்பது தங்கைக்கான சீதனமாயிற்றே! சியாமளாவைப் பார்த்தான். அவள் முகம் இதை எதிர்பாராத ஆனந்த அதிர்ச்சியில் மலர்ந்திருந்தது.

“செல்லமா வளர்ந்தவா. தெரியாத ஒருத்தன்ர கைல குடுத்து நாளைக்கு ஒண்டு எண்டா என்னால தாங்கேலாது. நீங்க அருமையான பிள்ளை. எனக்குப் பிடிச்ச துறையில இருக்கிற, நேர்மையான, திறமையான உங்கள இழக்க மனமில்லை எண்டுறதும் ஒரு காரணம். இது நடந்தா கடைசி வரைக்கும் அவாவும் என்னோடயே இருப்பா. உங்களுக்கும் உங்கட தங்கச்சியோட காலம் முழுக்க இருக்கலாமே.” என்றவரின் பேச்சு அவரளவில் சரிதான்.

ஆனால், அவனால் எப்படி? எங்கெங்கோ தொலைய ஆரம்பித்த மனதை இழுத்துப் பிடித்தான். சிறுவயதின் கனவுகள் எல்லாம் கலைந்து போகிற கோலங்கள் என்று தெரிந்தும் மருகுவதில் அர்த்தம் இல்லையே!

“எங்கட வீட்டுக்கு மருமகனா வர இவ்வளவு யோசினையா? கரும்பு தின்னக் கூலி கேப்பீங்க போலயே?” தன் மீசைக்கடியில் மலர்ந்த குறுஞ்சிரிப்புடன் வினவினார் அவர்.

என்ன சொல்லுவான்? உங்களுக்குத்தான் உங்கள் மகள் கரும்பு. எனக்கு வேப்பங்காய் என்றா? மனதில் இப்படி நினைப்பது தெரிந்தாலே அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிவிட மாட்டாரா? அர்த்தமற்று ஓடிய சிந்தனையைக் கண்டு சிரிப்பு வந்துவிட்டது அவனுக்கு.

“டேய் என்னடா? பதில் சொல்லாமச் சிரிக்கிறாய்.” தந்தையின் விடாத கேள்வியில் அவர் ஒன்றும் இதைத் திடீரென்று முடிவு செய்யவில்லை என்று அகரனுக்குப் புரிந்தது. தந்தையின் சொல் கேட்டு நடக்கும் தனயன் அவன்.

கூடவே, வயது வித்தியாசத்தைத் தவிர வேறு என்ன குறையைத்தான் அவனாலும் சொல்லிவிட முடியும்? அதில், அவனும் தன் முடிவை மாற்றிக்கொண்டிருந்தான்.

அப்போதுதான் வெளிப்படையாகவே சிரித்திருக்கிறோம் என்று எல்லாளனுக்கும் புரிந்தது. கூடவே, வேகமாக யோசித்தான்.

எப்படியோ திருமணம் என்கிற ஒன்றை அவனும் செய்யத்தான் போகிறான். வருங்காலத் துணையின் மீது கற்பனைகளோ, கனவுகளோ எதுவும் இல்லை. அதோடு, வேண்டவே வேண்டாம் என்று நினைக்கிற அளவுக்கு அவள் குணம் சரியில்லாத பெண்ணும் இல்லை.

பக்குவமற்ற விளையாட்டுத்தனமான செய்கைகள்தான் சினமூட்டுபவை. அவள் படிப்பை முடிக்க இன்னும் மூன்று, அல்லது நான்கு வருடங்கள் இருக்கின்றன. அதற்குள் மாறிவிட மாட்டாளா என்ன?

அவனுக்குத் தேவை நிம்மதியான ஒரு வாழ்க்கை. அது அமைந்தால் போதும். காலத்துக்கும் தங்கையும் தன்னுடனேயே இருப்பாள் என்பதும் பெரும் காரணமாகத் தெரிந்தது.

இது எல்லாவற்றையும் விட, முதலே வாக்கைப் பெற்று, மறுக்க முடியாத நிலையில் நிறுத்தி, சம்மதம் கேட்பவரிடம் சம்மதிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவனிடம்.

அதில், “அதுதான் கரும்பு தின்னக் கூலியா எண்டு நீங்களே கேட்டுடீங்களே அங்கிள்.” என்றான் தன் முடிவைச் சொல்கிறவனாக.

இளந்திரையனின் முகம் மலர்ந்து போயிற்று.

“உறுதியான முடிவுதானே?”

“உறுதியான முடிவுதான் அங்கிள்!” இப்போது அவனிடத்தில் எந்தத் தடுமாற்றமும் இல்லை.

“அப்ப, நானும் பிள்ளையோட கதைச்சுப்போட்டுச் சொல்லுறன். அவாவும் ஓம் எண்டு சொன்னா நாலு பேருக்கும் வசதியான நாளாப் பாத்து நிச்சய மோதிரம் மாத்துவம். அகரன் சியாமளா கலியாண நாளை, கோயில் ஐயாட்டக் கேட்டு முடிவு செய்வம்.” என்று முடித்துக்கொண்டார் இளந்திரையன்.

ஆக, தன்னோடான ஆதினியின் திருமணத்தில் வெகு தீவிரமாகவே இருக்கிறார் என்று புரிந்துகொண்டான் எல்லாளன்.
 

Goms

Active member
நீங்க மூன்று பேரும் முடிவு எடுத்தா போதுமா? முக்கியமான ஆள், என்ன ஆட்டம் ஆடப் போகிறாளோ?🤩🤩🤩
 
Top Bottom