• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வாழவே என் கண்மணி - 5

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 5


பத்து நாட்கள் கடந்திருக்கும். எப்போதும்போல அன்று மாலையும் கோயிலுக்கு வந்திருந்தாள் கண்மணி. மனதார வணங்கிவிட்டுக் கண்களைத் திறந்தபோது, திடீரென்று தன் முன்னால் வந்து நின்றவனை அதிர்ந்துபோய்ப் பார்த்தாள். என்னவிதமாகப் பிரதிபலிப்பது என்றுகூடத் தெரியாமல் பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டாள்.

இப்படி ஓடிவந்து நிற்கிறானே. இதென்ன கொஞ்சநஞ்சத் தூரமா? என்ன செய்கிறான் இவன்? பின்னால் பார்க்க, யாருமில்லை.

“நான் மட்டும் தான் வந்தனான்!” முறைத்துக்கொண்டு சொன்னான்.

‘ஏன்?’ அதிர்ச்சி இன்னும் முழுவதுமாக நீங்கி இராததால், அவளால் கண்களால் மட்டுமே கேள்வி எழுப்ப முடிந்தது.

“நீ சந்தோசமா வாழுறியோ? எங்க காட்டு உன்ர சந்தோசத்தை? நான் பாக்கவேணும்!” பெரும் கோபத்தில் இருக்கிறான் என்று நன்றாகவே புரிந்தது.

“நிர்மலன், ப்ளீஸ்! கொஞ்சம் கோபப்படாம கதைங்கோ. இது என்ன சின்னப்பிள்ளைகள் மாதிரி? தொட்டத்துக்கும் இங்க வந்து நிக்கிறீங்க? உஷா பாவம் எல்லோ. அவவைப் பற்றியும் கொஞ்சம் யோசிங்கோ.”

“அதெல்லாம் எனக்குத் தெரியும்! நீ சந்தோசமா வாழுற வாழ்க்கையை முதல் எனக்குக் காட்டு!” என்று அதிலேயே நின்றான் அவன். அவனுக்குத்தானே தெரியும், அந்த வார்த்தைகள் அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் சுழற்றி அடித்தது என்று.

இன்றுவரை அவன் படும் துன்பங்களுக்கு அந்த வார்த்தைகள் தானே மூலகாரணம்.

அவளுக்கோ தீராத அவனது கோபத்தில் நெஞ்சடைத்தது. பதில் சொல்லவும் தெரியவில்லை. பேசாமலேயே அமர்ந்திருந்தாள். கலங்கிய கண்களைச் சிமிட்டியபடி இருந்தவளைப் பார்க்க, அவனுக்கும் நெஞ்சில் வலித்தது.

அன்று, அவளைக் கண்டபோது எதிர்கொள்ள முடியாத கோழையாக ஓடிவிட்டான். இன்று, கோபம் கொடுத்த உந்துதலில் அவள் முன்னே வந்து கேள்வியும் கேட்டுவிட்டான். இப்போது வெகு அருகில் அவளைப் பார்த்தபோது, முகமெல்லாம் வாடி, பொலிவிழந்து, மெலிந்து, ஒரு காலும் இல்லாமல், தன்னில் கவனமென்பதே இல்லாமல், சக்கரநாற்காலியில் முடங்கிப்போனவளைப் பார்க்கமுடியவில்லை.

அந்த மழைநாளில் மெல்ல மெல்ல பாதம் வைத்து நடந்து வந்தவள் நினைவில் வந்தாள். எப்படி இருந்தவள் இப்படி ஆகிப்போனாளே. விதி வஞ்சித்தது ஒருபாதி என்றால் அவனும் அல்லவோ வஞ்சித்துவிட்டான்.

“ஏன் கண்மணி இப்பிடி இருக்கிறாய்? உனக்காகவும் கொஞ்சம் வாழப்பழகு!” ஆற்றாமையுடன் மனத்தாங்கலாய்ச் சொன்னான் நிர்மலன்.

கோபத்தைத் தாங்கிவிடலாம் போல. வலி நிறைந்த அவன் குரல் நெஞ்சை என்னவோ செய்தது.

விழிகளில் நீர் அரும்ப, அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தாள். “நான் நல்லா..த்தான் இருக்கிறன். எனக்கொரு கு..குறையுமில்லை..” அவன் கண்களைப் பார்த்துச் சொல்ல முடியாமல் வார்த்தைகள் திக்கிற்று!

அவனைப் பார்த்து அவனிடமே எப்படி அவளால் பொய்யுரைக்க முடியும்?

‘இவள் சரிவரமாட்டாள்.’ என்பதுபோலத் தலையசைத்தான் அவன். என்ன சொன்னாலும் விளங்கிக்கொள்ளப் போவதில்லை. தலைக் கேசத்தைக் கோதிக்கொண்டு யோசித்தான்.

“நீ வா, வீட்டை போவம்!” என்றான் ஒரு முடிவோடு.

“ஆரின்ர வீட்டை?”

“எங்கட வீட்டை.”

“அங்க நான் வரமாட்டன்.” பதறியடித்துக்கொண்டு சொன்னாள்.

அவன் சுருங்கிய புருவங்களோடு ஏறிட்டான். “தயவுசெய்து சொல்லுறதை கேளுங்கோ. உங்களைப் பாத்தது சந்தோசம். அந்தளவும் காணும். கடைசிவரைக்கும் அங்க வரமாட்டன்.” முடிவாகச் சொன்னாள்.

“ஏன்?”

“என்னை இப்பிடியே விட்டுடுங்கோ நிர்மலன். இனி இதுதான் என்ர வாழ்க்கை!” அசையவே மறுத்தாள் அவள்.

“அதுக்குத்தான் அங்க இருந்து இங்க வந்து நிக்கிறன் பாரு!” கோபமாய்ச் சொன்னான்.

‘எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்று சொல்ல சொல்லக் கேட்காமல் வந்துவிட்டு இப்படிச் சொல்கிறவனிடம் என்ன சொல்லுவாள்?

அசையாமல் இருந்தவளை ஒன்றுமே செய்யமுடியாத நிலை இன்னும் கோபத்தைக் கிளப்பியது. அதை அவளிடம் காட்டும் தைரியமும் அவனிடம் இல்லை. “உனக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது கண்மணி!” என்றான்.

அப்போதும் அவள் அசையவில்லை.

“சரி…! நட, உன்ர வீட்டுக்கே போவம்.” என்றான் முடிவாக.

“அங்க நீங்க என்னத்துக்கு?” அந்த ‘வீட்டை’ பார்த்தாலும் ஏதாவது சொல்லுவானே என்கிற பதட்டத்தோடு கேட்டாள்.

அவன் முறைத்தான். “இப்ப நீ அங்க வரவேணும். இல்ல, நான் உன்ர வீட்ட வருவன். ரெண்டுல ஒண்டு!” என்றான் முடிவாக.

அதற்குமேல் முடியாமல் தன் ‘வீட்டுக்கே’ அழைத்துப்போனாள்.

நடந்து செல்லும் தூரம்தான் என்பதில் அவள் சக்கரநாற்காலியில் வர அவன் அருகே நடந்துவந்துகொண்டிருந்தான். அவள் பார்வை அடிக்கடி அவனிடம் பாய்ந்தது. சிந்தனையில் ஆழ்ந்திருந்தவன் அதைப் பிறகுதான் உணர்ந்தான்.

“என்ன பாக்கிறாய்?”

“இல்ல.. முந்தி சின்னப் பெடியன் மாதிரி இருந்தீங்க..” அவள் இழுக்க அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

“இப்ப?” சிரிப்போடு வினவினான்.

“வளந்த மனுசன் ஆக்கிட்டிங்க.” அவனை ஒருமுறை விழிகளால் முழுவதும் அளந்துவிட்டுச் சொன்னாள்.

வாய்விட்டுச் சிரித்தான் நிர்மலன்.

“பிறகு? ரெண்டு பிள்ளைகள் இருக்கடியப்பா. எப்பவும் சின்னப் பெடியன் மாதிரியே இருக்கேலுமா? வயசு போகுதெல்லோ.” இலகுவான புன்னகையோடு சொன்னான்.

“காலம் எவ்வளவு வேகமா போகுது பாத்தீங்களா?” அவனோடு இப்படி உரையாடுவது அவளுக்கு மிகவுமே நன்றாக இருந்தது.

“ம்ம்.. உண்மைதான்.”

இதே பத்து வருடங்களுக்கு முதல் அவர்கள் இளமையின் ஊஞ்சலில் ஆடியவர்கள். இன்று, நிதானம் கொண்டு சிந்தித்துச் செயலாற்றும் மனிதர்களாக மாறிவிட்டார்கள். அதே பத்து வருடத்துக்குப் பிறகு, அவர்களது பிள்ளைகள் அதே இளமையில் ஊஞ்சலாடுவார்கள். இவர்கள் வயதானவர்கள் ஆகிவிடுவார்கள். இதுதானே வாழ்க்கை!

“ஆரனும் மானசியும் எப்பிடி இருக்கீனம்?”

அவளின் கேள்விகளுக்கு இலகுவாகப் பதிலளித்தபடி சென்று அவளின் ‘வீட்டை’ பார்த்தவனுக்குத் தொண்டை அடைத்தது. முதலில் இது என்ன வீடா? என்ன வாழ்க்கை வாழ்கிறாள் இவள்?

இதை வைத்துக்கொண்டுதான் ‘எனக்கு ஒண்டும் வேண்டாம், நான் நன்றாக இருக்கிறேன்’ என்றாளா? இதில் ‘சந்தோசமாக’ வாழ்கிறாளாம்! கிடுகிடு என்று ஏறிய கோபம் உச்சியைத் தொட்டுவிட முகம் இறுகிப்போய் நின்றிருந்தான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
வறண்ட நிலத்தில் ஒரு கிணறு இல்லை, மலசலகூடம் இல்லை. எல்லாவற்றுக்கும் பக்கத்துவீட்டுக்குப் போகவேண்டும். இரவில் வயிறு சரியில்லை என்றால் என்ன செய்வாள்? நெஞ்சில் இரத்தம் வடிந்தது.

அவனது கண்மணி என்ன வாழ்க்கை வாழ்கிறாள்? இப்படி அவளிருக்க, அவன் வெளிநாட்டில் மனைவியோடு இனிமையான இல்லறம் நடத்திக்கொண்டு இருக்கிறான். அவனை அவனே வெறுத்தான்!

“சாப்பாட்டுக்கு என்ன செய்றாய்?” குரலடைக்கக் கேட்டான்.

“பக்கத்தில இருக்கிற அந்தக் குடும்பத்துக்கு மூண்டு பிள்ளைகள். ஒவ்வொருநாளும் பாடம் சொல்லிக் குடுப்பன். அதுக்குப் பதிலா சாப்பாடு தருவீனம்.”

அதற்குமேல் எதையும் அவளிடம் கேட்கும் தைரியம் அவனுக்குத்தான் இல்லை.

“இங்கேயே இரு!” என்றவன் வேகமாகச் சென்று அன்றைக்குத் தேவையான உணவை வாங்கி வந்தான். தன்னால் இயன்றதாக வீட்டின் வாசல் கதவுக்கு ஒரு பூட்டினைப் போட்டான்.

“இது என்னத்துக்கு?” அவனது செய்கையால் உண்டான சின்னச் சிரிப்புடன் கேட்டாள் அவள்.

“இரவில எவனாவது வந்தா?”

“என்னட்ட என்ன இருக்கு எண்டு வரப்போறான்?”

“நீ இருக்கிறியேடி விசரி!” கோபம் தான் வந்தது. ஆனால், அதைச் சொல்லி அவளைப் பயமுறுத்த மனமில்லை.

இத்தனை நாட்களாக அவள் இப்படித்தானே வாழ்ந்திருக்கிறாள். இன்று வந்து அவன் பதை பதைத்தால் மட்டும் எல்லாம் மாறிவிடுமா என்ன? மனம் கேளாமல் பக்கத்துவீட்டுக்குச் சென்று பார்த்துக்கொள்ளும்படி சொன்னான்.

ஒருவாரம் கடந்தது. கண்மணிக்கு இவன் இங்கேயே நிற்பதில் சற்றே பயம்தான். அதைவிடத் தினமும் அவளையும் வந்து பார்த்து, அவளோடு நேரமும் செலவழித்துக் கொண்டிருந்தான்.

உஷா என்னெண்டு விட்டவா? என்ன சொல்லிப்போட்டு வந்தனீங்கள்? பிள்ளைகள் உங்களைத் தேட மாட்டீனமா? ஏன் இங்கேயே நிக்குறீங்கள் என்று எவ்வளவோ கேட்டுவிட்டாள்.

எதற்கும் பதில் இல்லை.

திரும்பத் திரும்பக் கேட்டால், “நான் சொன்னதை நீ கேட்டியா? நீ கேக்கிறதுக்குப் பதில் சொல்ல.” என்று கேட்டு வாயை அடைத்துவிடுவான்.

ஒருநாள் அதிகாலையிலேயே ஒரு வாகனத்தைப் பிடித்துக்கொண்டு பரபரப்பாக வந்துவிட்டான். அவள் அதிர்ந்து விழிக்க, “வெளிக்கிடு வெளிக்கிடு!” என்று துரத்தினான். அங்கிருந்த பொருட்களை எல்லாம் வாகன ஓட்டியோடு சேர்ந்து ஐந்து நிமிடங்களில் வாகனத்துக்குள் அள்ளி எறிந்தான்.

“நிர்மலன், ப்ளீஸ் நான் உங்கட வீட்டை வரமாட்டன்.” சட்டென்று நின்றவன் முறைத்த முறைப்பில் கப்சிப் ஆனாள் கண்மணி.

“உன்ர வீட்டுக்கு வரலாம்தானே!”

அவளின் தேகம் ஒருமுறை அதிர்ந்தது.

“என்னால ஏலாது. அம்மா, அப்பா, அண்ணா எண்டு வாழ்ந்த அந்த வீடு ஆருமே இல்லாம பாழடைஞ்சு கிடைக்கிறத என்னால பாக்கேலாது. ப்ளீஸ் விடுங்கோ!” கண்ணீரோடு கெஞ்சினாள்.

“நான் இருக்கிறன் தானே. வா!” கோபம் கரைத்துவிட ஆதரவாகச் சொன்னான் நிர்மலன்.

அவளுக்கு அது மட்டுமா பிரச்சனை? அந்த ஊரிலிருக்கும் அத்தனையும் மற்ற எல்லாவற்றையும் விட அவனைத்தான் அதிகமாக நினைவூட்டும். அதனால்தானே அந்தப் பக்கமே எட்டியும் பார்க்கவில்லை. அவனோ அதை உணராமல் வா என்கிறான். அவளோ அசையவில்லை. தன்மையாகக் கதைத்து இவளை வழிக்குக் கொண்டுவர முடியாது என்று தெரிந்துபோயிற்று அவனுக்கு.

“இப்ப நீயா வரேல்லையோ நடக்கிறதே வேற!” அவன் பொறுமையும் பறந்துவிட்டது என்று தெரிந்து அடங்கிப்போனாள் கண்மணி. அங்கே கொண்டுபோய்ச் சேர்க்காமல் அவன் இங்கிருந்து சுவிஸ் போகப் போவதில்லை என்பதும் இத்தனை நாட்களுக்குள் புரிந்திருந்தது.

மெல்லத் தன் சக்கர நாற்காலியில் வாகனத்தை நெருங்கியவளுக்கு அழுகை வரும்போலாயிற்று! எப்படி அதில் ஏறுவாள். வாகன ஓட்டியும் என்ன செய்ய முடியும்? நிர்மலனைப் பார்க்க, அவன் நெஞ்சிலும் பாரம்!

என்ன நிலையில் இருக்கிறாள் அவனது கண்மணி? வேகமாகச் சென்று அவளை அப்படியே பூவைப்போல அள்ளினான்.

விழிகள் வெளியே தெறித்துவிடுமோ என்கிற அளவில் அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள் அவள். அந்தச் சாரதி தூக்கியிருந்தால் கூட அதிர்ந்திருக்க மாட்டாள். நிர்மலன்.. அவன் நிர்மலன்.. அவளைத் தூக்கியிருக்கிறான்.

விழிகள் நான்கும் நேர்கோட்டில் சந்தித்துக்கொள்ள, இருவராலும் பிரிக்க முடியாமல் போயிற்று! மெல்ல அப்படியே சீட்டில் அவளை அமர்த்தினான்.

“இரு வாறன்!” என்றுவிட்டு, இறங்கிச் சென்று அவளது நாற்காலியையும் பின்னால் தூக்கி வைத்துவிட்டு வந்து அவளருகிலேயே அமர்ந்துகொண்டான்.

எப்போதுமே முழு நீட்டுப் பாவாடை அணிந்துதான் பார்த்திருக்கிறான். அத்தனை அதிகாலையில் அவன் வருவதில்லை என்பதாலோ என்னவோ அரைப்பாவாடை அணிந்திருந்தாள். அதைத் தாண்டித் தெரிந்த கால் சூம்பி முடிந்திருந்தது. விழிகளில் நீர் கோர்த்துவிட்டது அவனுக்கு.

கைகள் நடுங்க முழங்காலுக்குக் கீழ் பகுதியை மெல்லத் தடவிக்கொடுத்தான். அதிர்ந்து அவள் திரும்ப, அவனால் பேச இயலவில்லை.

ஆண் என்பதையும் மறந்து கதறிவிடுவான் போலிருந்தான். அதுநாள் வரை நடமாடித்திரிந்த காலை திடீரென்று இழப்பது என்றால் எப்படி இருக்கும். அவனது கால்கள் நடுங்கின. அந்தக் கசப்பான நிஜத்தை உள்வாங்கிக்கொள்ள மனதளவில் எவ்வளவு போராடியிருப்பாள்? காலை இழந்தகணம் எப்படி இருந்திருக்கும்? காயம்பட்ட வலி ஒரு பக்கம், கால் இனி இல்லை என்கிற நிஜம் மறுபக்கமாய்த் துடித்திருப்பாளே!

அவளின் எந்தத் துன்பத்தின்போதும் அவளருகில் அவன் இல்லை. விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்தான்.

வாகனம் அவர்களின் ஊருக்குள் நுழையும்போதே கண்மணியின் தேகம் நடுங்கத் துவங்கியிருந்தது. உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு அவள் இந்தப் பக்கம் வரவேயில்லை. பயம்.. தன்னால் அதையெல்லாம் தாங்க முடியாது என்கிற நடுக்கம்.

அந்த ஊர், அங்கே நண்பிகளோடு அவள் வாழ்ந்த வாழ்க்கை, அந்தத் தெரு, அதிலே அவனது வீடு, அவன் மீது கொண்ட காதல், அந்த வீதியில் ஒருவரை மற்றவர் கடக்கையில் பரிமாறிக்கொள்ளும் பார்வை.. ஐயோ ஐயோ என்று நெஞ்சு தகித்தது. எல்லாம் போச்சு.. அந்த நாட்கள் எல்லாம் போயே போச்சு.. இழப்பின் அளவு படு பயங்கரமாக அவளைத் தாக்க, உதடு நடுங்க அவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டாள்.

அதுவரை தன் மனப்போராட்டத்தில் இருந்தவன் திரும்பிப் பார்த்தான். முகமெல்லாம் சிவந்து, விழிகள் குளமாகியிருக்க, நடுங்கும் உதட்டைப் பற்களால் பற்றியபடி, வெளிப்புறத்தை வெறித்தவளின் நிலையை அப்போதுதான் வலியோடு உள்வாங்கினான்.

“ஒண்டுமில்லம்மா..” தன் மற்றக் கையால் அவள் கரத்தைப் பொத்திக்கொண்டான்.

அவனது வீடு.. அதன் முன்னே நின்ற அந்தக் கொண்டல் மரம்.. அதிலே அவர்கள் தங்களது கடிதங்களை மறைத்து வைத்து எடுக்கும் இடம்.. அதைக் கண்டபோது அவளையும் மீறி விசித்துவிட்டவளை நெஞ்சில் துயரோடு தன் மீது சாய்த்துக்கொண்டான் நிர்மலன். மறுக்கக் கூட முடியாமல் சரிந்து விம்மினாள் அவள். அவனது விழிகளில் இருந்து வீழ்ந்த கண்ணீர் துளிகள் அவள் தலைமீது விழுந்து சிதறிப்போயின; அவர்களின் காதலைப் போலவே!
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom