சற்று நீ....ளமான சிறுகதை ஆனாலும் சலிப்பில்லாமல் படிக்க முடிகிறது.
இன்னொருவன் மீதான யாஸ்மினின் காதலின் காரணம் தொடப்பட்டுள்ளமை, கள்ளக் காதல் என வெறுப்பைக் கக்கிவிட்டு கடந்து செல்லும் மூடப் பழக்கத்தை நொருக்கியுள்ளது.
“யாஸ்மின் பேசி இருக்கலாமே” என்று வாசகனைப் பேசவிடாமல் இருக்க “விக்ரம் பேசுவதற்கு இடங்கொடுக்கவில்லை” என்ற வெளிப்பாட்டை கையாண்ட கதாசிரியரின் தந்திரம் மெச்சக் தக்கது.
ஜாஸ்மின் மூலம் வாழ்க்கையைப் படித்த விக்ரம் வாழ முடிவெடுத்திருப்பது நல்ல முடிவு. புதிய வாழ்க்கை யாஸ்மினுக்கு எதிர் மாறாய் இருந்து விட்டால்....?
பாலியல் தொழிற்சாலைக்கு அசோக் அழைத்துச் சென்றமை மன ஊடறுப்புத் தாக்குதல் போலும்..
நிறைவாக உள்ள கதையில் சிறு நெருடலாக, வெளிநாட்டில் பிறந்து, இந்திய திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்கள் பார்த்து வளரும் ஈழத்தமிழர் பேச்சு வழக்குப்போல், கதையும் இலங்கை-இந்திய வழக்குகளுக்குள் பயணிப்பது தெரிகிறது.
உண்மையிலேயே மிகவும் மகிழ்வாக இருக்கிறது, உங்களின் கருத்தினைப் படித்து. மிகவும் நன்றி. இது என்னுடைய முதல் சிறுகதை என்பதைவிட சிறுகதை முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். என் மகனின் நண்பனின் வீட்டுக்கு ஒருமுறை போகவேண்டி வந்தபோது, நான் பெற்றுக்கொண்ட அனுபவமே இந்தக் கதை உருவாகக் காரணம்.
யாஸ்மின் பேசி இருக்கலாமே.. ஹாஹா அது என் தப்பித்தல் என்று கூடிச் சொல்லலாம். அதோடு, கணவன் மனைவி அமர்ந்திருந்து ஆழ்மனதின் விருப்பு வெறுப்புக்களை எதிர்பார்ப்புக்களை பரிமாறிக்கொள்கிறார்களா என்றால் பெரிதாக இல்லை என்றுதானே தோன்றுகிறது. அதைத்தான் அந்த வடிவில் வெளிப்படுத்தி இருந்தேன்.
பாலியல் தொழிசாலைக்கு அசோக் அழைத்துச் செல்வது.. சத்தியமாக இன்று நினைக்கையில் அது எனக்குப் பிடிக்கவில்லை. அதை நான் தவிர்த்திருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஏனோ எழுதிவிட்டேன். தவறுகளோடேயே படைப்புகள் இருக்கவேண்டும். அப்போதுதான் என் எழுத்து மெருகேறியதை நானும் உணரலாம் என்று நினைப்பதால் அதைத் நிறுத்தவில்லை.
நீங்கள் தமிழ் பற்றிக் குறிப்பிட்டது மிக மிகப் பிடித்திருக்கிறது. உண்மைதான். ஆரம்பம், கதைகள் எழுதியபோது அதைப் பதிப்பகத்துக்கு அனுப்பியவேளை ஒரு சொல் நம் வழக்கு இருந்ததற்கே மாற்றவேண்டி இருந்தது. அதுவே காலப்போக்கில் மாறி, இன்று நம் பேச்சு வழக்கை மிக அதிகமாகவே பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன். இனியும் நிச்சயம் கவனத்தில் கொள்வேன். மிக்க நன்றி.