அமைதியான வாழ்வுக்கு மிக மிக முக்கியமானதொன்று உடல் ஆரோக்கியம். சகலவித செல்வங்களும் வசதிவாய்ப்புகளும் நம்மிடமிருந்தாலும் உடல் ஆரோக்கியமில்லையெனில் நிறைவான மகிழ்வென்பது அங்கே கேள்விக்குறியாகி விடுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் என்னதான் தொழில்நுட்ப, விஞ்ஞான வளர்ச்சி எம்மை முன்னேற்றப் பாதையில் கை பிடித்து அழைத்துச் சென்றாலும், நோய்களின் பாதிப்பு அதுவும் புதிது புதிதானவை, மிக இளம் வயதிலேயே எம்மைச் சீண்டிச் செல்வதை, திக்குமுக்காட வைப்பதையும் தவிர்க்க முடியாதுள்ளது.
இதற்கான முக்கிய காரணங்கள் யாதென்று சற்றே யோசித்தாலும் வாழ்க்கைமுறை, சூழல் பாதிப்பு என்பவற்றோடு போட்டிபோட்டுக்கொண்டு நம் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முன்னணியில் வந்து நிற்பதையும் தவிர்க்க முடியாது.
பொதுவாக இன்றைய நாட்களில் எமது உணவுப்பழக்கமானது நோய் எதிர்ப்புச்சக்தியை எமக்கு வழங்கும் தன்மையற்றதாக இருப்பதே, உடலைப் பாதிக்கக்கூடிய கிருமிகளின் வீரியத் தாக்கத்துக்கு நாம் ஆழாவதன் முதல் காரணமாக இருக்கிறது.
நோய் எதிர்ப்புச்சக்தியை பிறப்பிலிருந்தே பெற்றுக்கொள்வது ஒருவகையென்றால், தேவையான சத்துகள் கொண்ட உணவு மற்றும் சீரான, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் அவற்றைத் தக்கவைத்துக் கொள்ளவோ அதிகரிக்கவோவும் முடியும்.
அப்படி, தேவையான சத்துகள் கொண்ட உணவு மற்றும் சீரான ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் நோய் எதிர்புச்சக்தியை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம், அதிகரிக்கலாம் என்பதை இங்கே பார்ப்போமா.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்:
மஞ்சள்:
மஞ்சள் ஒரு இயற்கையான ஆன்டிபயாட்டிக் என்பதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிரிக்க உதவும். இரத்தத்தைச் சுத்திகரிக்கும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களில் இருந்து காக்கும்.
இஞ்சி:
நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்திகொண்ட இஞ்சி, உடலை காக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களை அதிகம் கொண்டுள்ளது.
பூண்டு:
ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட பூண்டிலுள்ள அல்லிசின் என்ற உட்பொருள் தரும் பல நன்மைகளில் ஒன்றாக பாக்டீரியாக்களை, தொற்றுக்களை எதிர்த்து அழிக்கவல்லதாகும். அதுவும் பச்சையாக உட்கொள்கையிலேயே அல்லிசின் பயன் எமக்கு முழுமையாகக் கிடைக்கும்.