இன்றைய இணைய உலகில், ‘பகிர்வு’ எனும் பதம் நம் எல்லோருடைய விரல் நுனிகளோடும் மிக மிக நெருங்கிய தொடர்புள்ளது தானே? இதை யாராலும் மறுக்கவே முடியாதல்லவா? ஓரோர் சமயத்தில் எதைப் பகிர்கிறோம் என்றில்லாது அந்தச் செயலைச் செய்துவிட்டு, மலையைப் புரட்டிய உணர்வில் நெஞ்சை நிமிர்த்திச் செல்வோம் தானே?
கடந்த நாட்களில், இதே பகிர்வுகளால் பல இக்கட்டான சூழல்களில் இருந்து தப்ப, தப்புவிக்க, காப்பாற்ற என்பனவும் நிகழ்ந்துள்ளதுதான்.
இருந்தும், பல வேளைகளில் கண்மூடித்தனமான பகிர்வுகள் மிகுந்த எரிச்சல் கொள்ள வைக்கின்றது. ‘இத்தகைய பகிர்வுகளால் பலர் அசௌகரியங்களைச் சந்திக்கிறார்கள் என்பதை பகிருபவர்கள் அறியாமலா இருக்கிறார்கள்?’ என்ற கேள்விக்கு விடையாக, ‘அதெப்படித் தெரியாதிருக்கும்?’ என்ற கேள்வி மட்டுமே எழுகின்றது.
என்ன செய்யலாம்?
சிறு உதாரணங்கள். ஹ்ம்ம்... உண்மையாகவே சிறிதானதா என்று நீங்களே சற்றுச் சிந்தித்துப் பாருங்களேன்.
முதலாவதாக அண்மையில், ஒரு சிறுமியின் பூப்புனித நிராட்டுவிழாவின் சில நிமிடங்களைத் தன்னகத்தே கொண்ட வீடியோப் பகிர்வோன்று வாட்சப்பில் உலவிச் சென்றது. இப்பவும் உலவிக் கொண்டிருக்கும். ஆடம்பரத்துக்கு எவ்விதப் பங்கமும் இன்றி, உச்ச கட்டமென்றே சொல்லவேண்டும், அப்படி நடத்தப்பட்டிருந்த விழாவின் சிறு நிமிடங்களைக் காவித் திரிந்தது அந்தப் பகிர்வு; தனியே அதுமட்டுமின்றி, பல எதிர்மறையான விமர்சனங்ளையும்.
உதாரணமாக, அந்தச் சிறுமியின் பெற்றோருக்கு இந்த ஆடம்பரத்துக்கான பணம் எப்படி வந்திருக்கும் என்ற கேள்விக்குப் பதில்களாக, மக்களைச் சாட்டி ஊரானிடம் கொள்ளையடித்த... ம்ம் பிச்சை ...இல்ல... உன் மக்களைக் காப்பது உன் தார்மீகப் பொறுப்பு என்ற மறைமுக மிரட்டலில்... களவு...என்று பலவிதமாகக் குறுக்கு வழிகளில் வந்திருக்கலாம் என்ற கண்டுபிடிப்புகள். இதெல்லாம் உண்மையாகவே இருக்கலாம். இருக்கும். அந்தப் பகுதியை இங்கு நான் ஆராய வரவில்லை.
அடுத்து, அவன் மகள் கலியாணத்துக்குத் தயார் என்று தம்பட்டம் அடித்துக் கூறவேண்டிய அவசியம் இந்தக் காலத்திலும் உண்டா என்ற விவாதங்கள்...அந்தச் சிறுமியை மையமாகக் கொண்ட கருத்தாடல்கள்.
இப்போதெல்லாம் வெளிநாடுகளில், பாடசாலைகளில் நடைபெறும் சிறுசிறு நிகழ்வுகளிளும் எடுக்கப்படும் மாணவர்களின் புகைப்படங்களை அப்பாடசாலைக்குரிய இணையதளத்திலோ அல்லது முகநூலிலோ பகிர்வதற்கு முதல், ஒவ்வொரு பெற்றோரிடமும் அனுமதி கேட்கும் வழக்கத்தை மிகவும் தீவிரமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
சுற்றுலா என்று செல்கையில் மற்றவர்களோடு சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை நீங்கள் பகிர முதல் அனுமதி கேளுங்கள் என்று பெற்றோருக்கும் வலியுறுத்துகிறார்கள். இந்த விசயத்தில் ஆழமான விழிப்புணர்வை உருவாக்குறார்கள்.
அப்படியிருக்க, நாம் என்ன செய்கிறோம்? ஒரு நிகழ்வுக்குப் போய் நன்றாக வயிறு வேண்டவே வேண்டாம் என்று அழுது குழறும் வரை, ஏன் அதையும் மீறியே உண்டு குடித்துவிட்டு "போயிட்டு வாறோம்!" என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்லி விடைபெற்று வெளியேறிய மறுகணம், அவர்களைச் சுற்றிச் சுழன்று கேலி செய்கிறோம்; விமர்சிக்கிறோம். அதுவும் அவர்களின் அனுமதியில்லாது புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்தபடி. இது எவ்வளவு கீழதரமான செயல் இல்லையா? நாளை நமக்கும் இது நடவாது என்று என்ன நிச்சயம்?
அண்மையில் நியுஸிலாந்தில் நடந்த கொடூரம் பற்றி எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஒரு கொடிய ஜந்து தான் செய்யும் அரிய செயலை முகநூலில் நேரடி ஒலிபரப்பு விட்டான். ஏனென்றால் பகிர்வு மோகம் கொண்டவர்களில் கொண்ட அளப்பரிய நம்பிக்கை! நீங்கள் "ஐயோ!" என்று கண்ணீரோடு பதறித் துடித்து உச்சுக் கொட்டிப் பார்த்தாலும் அது அவனுக்கு பெரும் போதை, தூண்டுகோல். எதிர்காலத்தில் இப்படியான கொடூரங்கள் நடந்தேற இவன் ஒரு முன்னோடி என்றால், அதைப் பகிர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் அவன் செயலைப் பாராட்டியவர்களாவீர், வருங்காலத் தீமைகளுக்கு வழி செய்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். பெரியவர்களே இப்படிப்பட்ட முட்டாள்தனமான பகிர்வுகளைச் செய்தால், அவர்களால் இளையவருக்கு எப்படி வழிகாட்ட முடியும்?
முகம் சுழிக்க வைக்கும் கேலிகிண்டல் வீடியோக்கள் இன்று அதிகரித்துக்கொண்டு செல்வதற்கும் உங்கள் பகிர்வுகள்தானே காரணம்? பகிர்கிறீர்கள், கண்டனத்தோடு! இதில் எதைச் சாதிக்க நினைக்கிறீர்கள்?
அவற்றுக்கு விளம்பரம் தேடித் தருவதே நீங்கள் என்றது கூடவா புரியாது?
இது எல்லாமே சுற்றிச் சுற்றி நாளை நம்மிடமும் நமக்கும் வரக் கூடும். மறந்து போகாதீர்கள்!
வீட்டில் குழந்தைகளிடம் பகிர்வுகள் பற்றிய விழிப்புணர்வை விதைக்கவும் மறக்காதீர்கள் . அதிக வசதி வாய்ப்புகள் உருவாக்கிக் கொண்டே செல்கின்றது என்றதுக்காக அதில் ஏறியமர்ந்து உள்ளே குதித்து நீச்சல் அடித்து வினையை நாமே விதைக்க வேண்டாமே!
பகிர்வுகளில் ஏற்படும் விழிப்புணர்வு எத்தனையோ பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
சிறிசிறுவிடயங்களிலும் நம்மையும் நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுவோம்!