You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பிளேக் நோய் (Plague ) பற்றிய சில செய்திகள் - வி.இ.குகநாதன்

ரோசி கஜன்

Administrator
Staff member
1585548466582.png

இன்று கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரசுகள் (SARS, MERS, Covid-19) கட்டம் கட்டமாக வந்து தாக்குவது போன்று, அன்று பிளேக் என்று ஒரு நோய் பல கட்டங்களாக உலகினைத் தாக்கியிருந்தது. ஆறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கிய நோய் "Justinian Blake" என்று அழைக்கப்பட்டது. இது பல மில்லியன் மக்களைப் பலியெடுத்தது. அடுத்து 14ஆம் நூற்றாண்டில் பரவிய "பிளாக் டெத்" (The Black Death ) என்று குறிப்பிடப்படும் பிளேக் நோய் ஏறத்தாழ 50 மில்லியன் மக்களைக் காவு கொண்டது. அப்போது எல்லாம் மருத்துவ வசதிகளில்லாத காரணத்தாலும், மக்கள் தாங்கள் கடவுளால் சபிக்கப்பட்டதாலேயே இறப்பதாகக் கருதியதாலும், இந்த இழப்புகள் பெருமளவில் ஏற்பட்டன.

"த கிரேட் லண்டன் பிளேக்" (The Great London Plague) 1664-66 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் பரவியது. இதன் போது நோய்ப் பரம்பலைத் தடுக்க ஒரு ஊரே தங்களது உயிர்களை ஈகை செய்த வரலாறு இதன் போதே படைக்கப்பட்டது. இங்கிலாந்தின் டெர்பிசெயரிலுள்ள (Derbyshire) ஒரு ஊரான இயம் (Eyam) இனைச் சேர்ந்த மக்களே அந்த அருஞ் செயலினைச் செய்திருந்தார்கள். அதாவது, அந்த ஊரில் நோயினால் மக்கள் இறக்கத் தொடங்கிய போது, மக்கள் ஊரினை விட்டு வெளியேறத் தொடங்கியிருந்தார்கள். அப்போது William Mompesson என்ற இளைஞன் பின்வருமாறு கூறினார்.

“நோயானது நமது ஊரில் மட்டுமேயுள்ளது, நாம் வெளியேறினால் நோயும் ஏனைய இடங்களிற்கும் பரவும். எனவே நாம் வெளியேறக் கூடாது”.

அதனை ஏற்று மக்கள் அங்கேயே தனிமைப்பட்டிருந்து, பலர் மெல்ல மெல்ல இறந்து போனார்கள். இதுவே அந்த ஊர் செய்த ஈகை. இதன் பொருட்டே ஆகஸ்ட் (August) மாத இறுதி ஞாயிறு ஆனது "கறுப்பு ஞாயிறு" (Black Sunday) என நினைவு கூரப்படுகின்றது.

1585548506231.png

இந்த ஊர்(Eyam) நான்கு நூற்றாண்டுகளிற்கு முன் செய்த ஈகைச் செயலினை, இன்று தனிமைப்படுத்தலிற்கு ஒளித்து ஓடும் நோய்க்காவிகளும், முதலாளித்துவ நலன்களிற்காக நாட்டை முடக்கிப் போடுவதனைத் தள்ளிப்போடும் அரசுகளும் நினைவிற்கொள்ள வேண்டும்.

இதிலுள்ள துன்பம் யாதெனில் நோயானது இலண்டலிருந்தே அந்த ஊரிற்குச் சென்று உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருந்தது (முதல் உயிரிழப்புகள் அந்த Eyam ஊரிலியே இடம்பெற்றன). போதிய தொடர்பாடல் சேவைகள் இல்லாத காரணத்தால், அவர்கள் இலண்டன் தொற்றினை அறிந்திருக்கவில்லை. பின்பு இலண்டனிலும் இழப்பிகள் ஏற்பட்டன. பின்னர் நோய் முடிவிற்கு வந்தது ஒரு எதிர்பாராத நிகழ்வாலேயே ஆகும். இலண்டனில் ஏற்பட்ட 'மாபெரும் இலண்டன் தீ'யினால் (The Great London Fire), (1666 செப்டம்பர் 2 லிருந்து 5 வரை) தலைநகரில் பிளேக் கட்டுக்குள் அடங்கியது.

இப் பாடல் தெரியுமா!

A ring-a-ring o roses
A pocket full of posies
A tishoo! A tishoo!
We all fall down.

இதில்

A ring-a-ring o roses = நோயாளிக்கு இளஞ்சிவப்பு நிற தழும்புகள் தோன்றல்

A pocket full of posies = மலர்கள் மணத்தினைப் போக்குதல்

A tishoo! A tishoo! = நோயின் அறிகுறிகளின் ஒன்றான தும்மல்

We all fall down = எல்லோரும் இறத்தல்.

ஆனாலும் மானிடம் அழியவில்லை. அதுவும் கடந்து போனது.

இந்தியாவிலும், பிளேக் 19 - 20-ம் நூற்றாண்டுகளில் நாட்டின் பல இடங்களில் பரவி ஆயிரக்கணக்கில் மக்களின் உயிரை வாரிச்சுருட்டிக்கொண்டு போயிற்று. நாற்பதுகளில் இந்திய நாட்டில் இறந்தவர்களில் 2.11 விழுக்காட்டினர் (2.11%) பிளேக்கால் மடிந்தவர்கள் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்போது நடைபெற்ற ஒரு சுவையான நிகழ்வு வருமாறு.

எலிகளினாலேயே இந்த நோய் பரவுவதால், எலிகளை ஆங்கிலேயர்கள் அழிக்க முயன்றார்கள். அப்போது எலிகளை அழிப்பதற்குச் சில இந்தியர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் {தெள்ளுப் பூச்சிகளே (Xenopsylla cheopis) பிளேக்கிற்கு காரணமாகும்; இவை எலிகளைத் தொற்றுவதால் எலிகளே முதலில் பிளேக் நோய்க்கு ஆளாகின்றன}. மிகவும் படித்த திலகர் போன்றவர்களே எதிர்த்தார்கள். அவர்கள் சொன்ன காரணம் யாது தெரியுமா? `எலி விநாயகரின் வாகனம், எனவே எலியினை அழிக்கக்கூடாது`. ஏறத்தாழ இன்று கொரோனாவிற்கு கோமியம் குடிப்பது போல. அவர்களின் எதிர்ப்புகளையும் மீறி ஆங்கிலேயர்கள் எலிகளை அழித்து நோயினைக் கட்டுப்படுத்தினார்கள்.
பிளேக் போலவே, Covid-19 உம் கட்டிற்குள் வரும். அதற்குத் தேவை மூடநம்பிக்கையற்ற அறிவியல் வாழ்வும், தன்நலமற்ற ஈகைத் தனமுமே (e.g- Eyam village).

வி.இ. குகநாதன்
20/03/2020
 
Top Bottom