அத்தியாயம் 1
காலம் போட்டு வைத்திருக்கும் கணக்கு என்னவென்றே தெரியாது நீயும் நானும் காத்திருக்கிறோம் கனவுகளைச் சுமந்தபடி! காதல், இலவச இணைப்பாகக் காயத்தையும் சேர்த்துத்தான் தருமாம். அறிந்துகொள்!
வவுனியாவின் நகர்ப்புறத்தை ஒட்டிய வசதி படைத்தவர்கள் வாழும் பகுதி அது. அங்கிருந்த இரண்டு மாடிகள் கொண்ட ஒரு வீட்டின் முன்னே, அடர் சிவப்பு நிற பஜிரோ ஒன்று வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய அனந்தன், பின்னால் இருந்த ஒருவரைத் தரதர என்று இழுத்துக்கொண்டு வந்து, அந்த வீட்டு விறாந்தையில் வீசினான்.
கைப்பேசியில் யாரிடமோ அடக்கப்பட்ட சினத்துடன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்த சுந்தரலிங்கம், அழைப்பைத் துண்டித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தார்.
“ரெண்டு போட்டு ஆளைத் தூக்கியாச்சு மாமா! இனி என்ன செய்றது எண்டு நீங்கதான் சொல்லோணும்!”
அவ்வளவு நேரமாக அந்த மனிதனுக்காகக் காத்திருந்த சுந்தரலிங்கம், அவசரமாக அவனுக்கு எதையோ கண்ணசைவால் உணர்த்திவிட முயன்றார். கோபத்தில் இருந்த அனந்தனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “என்ன மாமா, இவ்வளவு நாளும் ஓடி ஒளிஞ்சவன இழுத்துக்கொண்டு வந்திருக்கிறன். நீங்க அசையாம நிக்கிறீங்க.” என்றபோதுதான் மாடியிலிருந்து யாரோ இறங்கி வரும் அரவம் கேட்டது.
இதை எதிர்பாராதவனின் முகத்தில் ஒருவித இறுக்கம் படர்ந்தது. அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பி அங்கே பார்த்தான். நிரல்யாவின் விழிகளுக்கு எரிக்கும் வல்லமை இருந்திருக்க அவனை அந்த இடத்திலேயே பொசுக்கி இருப்பாள். படிகளில் இறங்கிக்கொண்டு இருந்தவளின் பார்வை அப்படி இருந்தது.
அவன் அசையவில்லை. பார்வையையும் அவளிடமிருந்து அகற்றவில்லை. உன் கோபம் என்னை எதுவும் செய்யாது என்பது போன்று அப்படியே நின்றிருந்தான்.
படிகளை இறங்கி, விறாந்தைக்கு வந்து, அங்கே நின்றிருந்த தந்தையையும் திரும்பிப் பாராதவளின் விழிகள், அடிவாங்கி அலங்கோலமாகத் தலை குனிந்து நின்றவரில் தேங்கிற்று.
அவளின் வயதில் அவருக்குப் பிள்ளைகள் கூட இருக்கலாம். அந்த வயதிலிருக்கும் மனிதரை அடித்து, உதைத்து, இழுத்து வந்திருக்கிறான். காட்டுமிராண்டி! அவள் முகத்தில் அப்பட்டமான வெறுப்பும் கசப்பும். ஆனால், அவளால் என்ன செய்ய இயலும்? மனத்தில் திட்ட மட்டுமே முடியும்.
எதுவும் சொல்லாமல் அவர்களைக் கடந்து வாசலுக்குப் போனவளால் அந்த மனிதரை இலகுவாகப் புறம் தள்ள முடியவில்லை. தன்னைக் கண்டதும் முகம் கன்ற, அவர் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்த விதம் நெஞ்சை என்னவோ செய்யத் திரும்பி வந்தாள்.
அதுவரையில் அவளையே தொடர்ந்த அனந்தனின் விழிகள், அப்போதும் அசையாமல் அவள் முகத்திலேயே படிந்து நின்றது.
அந்த மனிதரின் முன்னே வந்து நின்று, “வட்டிக்கு எவ்வளவு வாங்கினனீங்க?” என்று விசாரித்தாள்.
அவர் முகம் இன்னுமே கன்றிப் போயிற்று. “ஒரு லட்சம்.” என்றார் அவளைப் பாராமல்.
“வாங்கி எவ்வளவு நாள்?”
“ஒரு வருசமாச்சம்மா.”
“ஏன் திருப்பிக் குடுக்கேல்ல?”
“அது… அது மகளுக்கு உடம்புக்கு ஏலாம வந்து… திருப்பித்தர எண்டு சேத்து வச்ச காச எடுத்துச் சிலவழிச்சிட்டன்.”
“ஓ!” என்றவள் ஒருகணம் யோசித்துவிட்டு, தன் கையில் இருந்த கைச்செயினை கழற்றப் போகவும், “அவன் ஆறுதலாவே தரட்டும். அதையெல்லாம் கழட்ட வேண்டாம்.” என்று வேகமாகத் தடுத்தார் சுந்தரலிங்கம்.
அதை அவள் காதிலேயே விழுத்தவில்லை. கைச்செயினைக் கழற்றி அவர் கையில் பொத்தி, “இத வித்துப்போட்டு அந்தக் காசக் கொண்டு வந்து குடுங்க.” என்றாள்.
நடப்பதை நம்ப முடியாமல் அருகில் நின்றவனையும் அமர்ந்திருந்தவரையும் மாறி மாறிப் பார்த்தார் அவர்.
அனந்தன் அழுத்தமாக அவளையே விடாமல் பார்த்தான் என்றால், சுந்தரலிங்கம் மகள் தன்மீது கோபம் கொண்டுவிடாத அளவில் இதைக் கையாள்வது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்திருந்தார்.
“போங்க, போய்ச் சொன்னதைச் செய்ங்க!” வார்த்தைகளுக்கு மெல்லிய அழுத்தம் கொடுத்துச் சொன்னாள் நிரல்யா.
பக்கத்தில் நின்றிருந்தவனைப் பார்க்கப் பயந்து, அமர்ந்திருந்தவரை என்ன செய்ய என்பதுபோல் பார்த்தார் அவர். போ என்பது போன்று மெலிதாகத் தலையை அசைத்தார் சுந்தரலிங்கம். ஒரே ஓட்டமாக ஓடிப்போனார் அவர்.
தன் ஸ்கூட்டியில் அங்கிருந்து வெளியேறிய நிரல்யாவுக்கு மனது ஒரு நிலையிலேயே இல்லை. வெளிக்காட்ட முடியாத கோபம், கசப்பு, வெறுப்பு, இயலாமை, பயம் என்று இன்னதென்று இல்லாமல் என்னென்னவோ உணர்வுகள் அவளைச் சூழ்ந்து, மனத்தைத் தளரச் செய்தன. இது ஒன்றும் அவளுக்குப் புதிதில்லை. இன்றைக்கு அவரைக் காப்பாற்றிவிட்டாள். அவ்வளவுதான். இப்படி இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவமானப்பட்டு, கேவலப்பட்டு, கூனிக்குறுகி நிற்பவர்கள் பலர். அவர்களுக்கெல்லாம் அவளால் என்ன செய்துவிட முடியும்? எதுவுமில்லை.
குறைந்த பட்சமாக நாளையிலிருந்து இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்ப்பதிலிருந்து விடுதலை என்பதில் அவளுக்குப் பெரும் ஆசுவாசம்.
*****
அந்த வீட்டின் மொட்டை மாடியைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த இடுப்பளவிலான சுவரில் கைகள் இரண்டையும் ஊன்றியபடி நின்றிருந்தான் அனந்தன். அடர்ந்த புருவங்கள் சுளித்திருக்க, தீர்க்கம் மிகுந்த விழிகள் எங்கோ நிலைகுத்தியிருந்தன.
அவன் பிறந்து வளர்ந்தது எல்லாமே யாழ்ப்பாணம், ஏழாலையில். அம்மா அப்பாவுக்கு ஒரே மகன். அதனாலேயே அவர்களுக்குச் செல்லப் பிள்ளை. அவனுடைய பதினெட்டாவது வயதில் இந்த உலகத்தையே சுழற்றியடித்த கொரோனா, அவன் வீட்டுக்குள்ளும் புகுந்து, ஈவிரக்கம் இல்லாமல் பெற்றோர் இருவரையும் ஒரு சில நாள்கள் வித்தியாசத்தில் காவு வாங்கியிருந்தது.
பள்ளிக்கூடப் படிப்பு முடிந்துவிட்டது, இனிப் பல்கலைக்குப் போக வேண்டும் என்று எதிர்காலக் கனவுகளில் திளைத்திருந்தவனை ஒரேயடியாகச் சுழற்றிப் போட்டிருந்தது காலம்.
கடைசியாக அவர்களின் முகங்களைப் பார்ப்பதற்குக் கூட அவன் அனுமதிக்கப்படவில்லை. அதனாலேயே உண்மைதானா, அம்மாவும் அப்பாவும் இனி வரவே மாட்டார்களா என்று நம்ப முடியாமல் திகைத்து நின்றிருந்தான். உயிரற்ற உடல்களாகப் பார்த்திருக்க அது மூளைக்குச் சென்று சேர்ந்திருக்குமோ என்னவோ!
இப்படி இருக்கையில் சுற்றியிருந்தவர்கள் இப்படி அனாதையாகிப் போனானே, இனி யார் அவனை வைத்துப் பார்ப்பார்கள், படிப்புக்கு என்ன செய்வான், சாப்பாட்டுக்கு என்ன செய்வான் என்று அவனைக் கட்டிக்கொண்டு ஒப்பாரி வைக்கவும் அது அவனுக்கு அடுத்த திகைப்பு. அம்மா அப்பா இறந்ததை எண்ணி அழக்கூட முடியாத அளவில் மருண்டு நின்றான்.
அதுவரையில் அவன் உலகம் அவன் வீடு மட்டுமே! இனி என்ன செய்வேன், என்னை யார் வைத்துப் பார்ப்பார்கள் என்று தெரியாது நின்றவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர் சுந்தரலிங்கம். பெரிதாகப் பழக்கம் இருந்தது இல்லையே தவிர, அம்மா வழியில் தூரத்து உறவுமுறையில் அவர் தனக்கு மாமா என்னும் அளவில் அறிந்து வைத்திருந்தான்.
எங்காவது கோயில் திருவிழாக்கள், விசேசங்களில் கண்டால் தேடி வந்து கதைத்து, நலன் விசாரித்துக்கொண்டு போகும் அளவிலான உறவு.
நீ என்னுடன் வா என்று அவர் அழைத்தபோது மறுக்கும் திடம் அவனுக்கு இருக்கவில்லை. பயந்துகொண்டு வந்தவனை அமிர்தவல்லியும் அரவணைத்துக்கொண்டதில் மெல்ல மெல்லத் திடம் பெற்றான்.
கூடவே, வவுனியா பல்கலையில் மேலே படிக்கவும் சேர்த்துவிட்டார். கூட்டிக்கொண்டு வந்து உணவும் உடையும் தந்து, வீட்டில் வைத்துப் பார்ப்பதே பெரிதாக இருக்கையில் மேலே படிக்க ஆசைப்படுகிறேன் என்று எப்படிக் கேட்பது என்று தெரியாமல் தவித்திருந்தவனுக்கு அழுகையே வந்துவிடும் போலாயிற்று.
இப்படி திடீர் இழப்பு, அது தந்த அதிர்ச்சி, அனாதையாகி நின்றுவிட்ட நிலை, மாமா என்றாலுமே அவரோடு ஒட்டிக்கொள்ள முடியாமல் அவர்களுக்குப் பாரமாக இருக்கிறோமோ, சினந்து விடுவார்களோ, வெளியில் அனுப்பி விடுவார்களோ என்கிற பயத்தில் இருப்பதே தெரியாமல் ஒடுங்கி இருந்தவனைச் சிரித்த முகமாக அணுகியவள், அன்று பதின்மூன்று வயதை எட்டித் தொடுவதற்கு நின்றிருந்த நிரல்யாதான்.
அவளின் சேட்டைகளைப் பார்க்க வேண்டுமானால் வீட்டில் சுந்தரலிங்கம் இல்லாமல் இருக்க வேண்டும். அதுவே அவர் இருந்தால் அவள் இருக்கும் இடம் கூடத் தெரியாது. பயமன்று. அவரைப் பிடிக்காது. ஒரு வெறுப்பு, விலகல்.
அவரின் தொழில் என்ன என்று கேட்டால் நகை அடகுக் கடை வைத்திருக்கிறார் என்பார்கள். ஆனால், அதன் பின்னே வட்டிக்குக் கொடுப்பதுதான் பிரதானமாக நடந்துகொண்டிருந்தது. வட்டி தராமல் ஏய்க்கும் மனிதர்களை அவர் கையாளும் முறை, அவரிடம் வேலை பார்க்கும் நான்கைந்து அடியாள்கள், அரசல் புரசலாக அவள் காதுக்கு அவரைப் பற்றி வந்து சேரும் மோசமான செய்திகள், கூடப் படிப்பவர்கள் விடும் வார்த்தைகள் எல்லாமே அவரிடமிருந்து அவளை முற்றிலுமாக விலக்கி வைத்திருந்தது.
கூடவே சுந்தரலிங்கத்துக்கும் அவள் ஒற்றை மகள். தன் தொழில் தனக்கு நிறைய எதிரிகளை உருவாக்கி வைத்திருப்பதை அவருமே அறிவார். அதனால் பள்ளிக்கூடம் தாண்டி அவள் வெளியே செல்வதற்குப் பெருமளவில் தடை விதித்துவிடுவார். டியூஷன் கூட ஸ்பெஷல் கிளாஸ் என்று வீட்டுக்கு வந்து கற்பித்துவிட்டுத்தான் போவார்கள். இப்போது இணைய வகுப்பு முறை வந்து இன்னும் அவர் பிரச்சசினையை இலகுவாகத் தீர்த்திருந்தது.
அப்படி ஒற்றை மகளாக வீட்டுக்குள் இருக்கும் அவளுக்கும் யாரும் இல்லாமல் நின்ற அவனுக்கும் நன்றாகவே ஒத்துப்போக ஆரம்பித்திருந்தது. மொட்டை மாடியில்
அவனோடு விளையாடுவது, அவனிடம் கேட்டுக் கற்பது, அவனோடு அரட்டை அடிப்பது என்று அடுத்த இரண்டு வருடங்கள் இருவருக்குள்ளும் அன்பு செழித்தோங்கி வளர்ந்திருந்தது.
அவளுக்கு எல்லாவற்றுக்கும் அவன் வேண்டும். கொறிப்பதற்கு ஏதாவது வாங்கித் தருவதிலிருந்து, தோழிகளுடன் போட்ட சண்டையைப் பகிர்வதில் தொடங்கி, சுந்தரலிங்கத்தின் மீதான கோபத்தைக் கொட்டுவதற்கு என்று அது போய்க்கொண்டே இருக்கும்.
சின்ன புன்னகையுடன் அவள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொள்வானே தவிர, சுந்தரலிங்கத்தைப் பற்றிப் பிழையாக ஒரு வார்த்தை உதிர்க்க மாட்டான். இன்றைக்கு அவன் நன்றாக இருப்பதற்கும் கற்பதற்கும் அவர்தான் காரணம். செலவுக்குப் பணம் கூட அவன் கேட்குமளவிலோ, எப்படிக் கேட்பது என்று தயங்கும் அளவிலோ வைக்கமாட்டார். ஒவ்வொரு மாதமும் தொடங்கும்போது மகளுக்கு எப்படிக் கைச் செலவுக்கென்று ஒரு தொகை கொடுப்பாரோ அப்படியே அவனுக்கும் தந்துவிடுவார். நல்ல உடைகள், அவனுக்கென்று ஒரு பைக், நல்ல கைப்பேசி, சுதந்திரமான ஒரு வாழ்க்கை என்று அவளுக்கும் அவனுக்கும் அவர் வேறுபாடு காட்டியதே இல்லை.
அப்படியானவர் அவனுக்கு மிகவும் முக்கியமானவர். அவர் மீதான நன்றியும் அன்பும் அவனுக்குள் சுரந்துகொண்டேயிருக்கும். அதேநேரம் அவளுக்கும் ஒன்றும் சொல்லமாட்டான். அவர் பார்க்கும் தொழிலும், அதனால் அவர் செய்யும் சில காரியங்களும் அவளுக்குப் பிடிக்காது என்று தெரியும்.
இப்படி இருக்கையில்தான் ஒருமுறை சுந்தரலிங்கத்தின் கார் பழுதாகி கராஜுக்கு போயிருந்தது. அவசரமாக எங்கோ செல்ல வேண்டும் என்று அவனைக் கொண்டுபோய் விடச் சொல்லியிருந்தார். அவனும் தன் பைக்கில் கூட்டிக்கொண்டு போனபோது, அவரால் பாதிக்கப்பட்ட ஒருவன் இன்னொருவனோடு அவரை அடிக்க வரவும், தடுத்துப் பிடித்து அவர்களுக்கு நன்றாகப் போட்டு அனுப்பியிருந்தான் அனந்தன்.
அவரே மிரளும் அளவில் இருந்தது இருபது வயதுகள் நிரம்பிய அனந்தனின் ஆக்ரோசம்.