ஆசை யாரைத்தான் விட்டது?
இதற்கு நானும் விதிவிலக்கில்லை என்பதற்கான சிறு உதாரணம் கீழேயுள்ள சிறுகதை.
இணையதளம் ஒன்றில் தை 2014 இல், மாதம் ஒரு சிறுகதை எவரும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதுவரை நான் வாசித்த கதைகளுக்குச் சின்னதாக ரிவ்யூக்கள் எழுதி இருந்த நான், ஒரு சிறு ஆவலில் எழுதிய என் முதல் படைப்பு இது .
இன்னும் எத்தனை எத்தனை கதைகள் என்னால் எழுத முடிந்தாலும், இச்சிறுகதை எழுதிய சூழ்நிலையையும், மனநிலையையும், இதைப் பார்த்துவிட்டு என்னை ஊக்கப்படுத்தி தொடர்ந்து சீரியல் கதை எழுத வைத்த இணையத்தில் அறிமுகமான என்றும் இனிய நட்புக்களையும் எப்போதுமே என்னால் மறக்கவே முடியாது.
திருவிழா!
''அன்னம், எல்லாவற்றையும் மேசையில் எடுத்து வைத்து விட்டாயா?'' சாந்தாவின் அதிகாரக் குரல் ஓங்கி ஒலித்தது.
அதைக் கேட்டதும் சமையலறையிலிருந்து விரைந்து வெளிபட்ட அன்னமோ ஆமென்பதாகத் தலையை ஆட்டினாள்.
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இவ்வீட்டின் சமையலறை அன்னத்தின் பொறுப்பு. சாந்தாவின் அதிகாரப் போக்கு அவளுக்கு அத்துபடி! இலாவகமாக ஈடுகொடுத்து அமைதியாகச் சென்று விடுவாள்.
வீட்டின் மாடியிலிருந்து வந்த சுந்தரம், இரவுணவிற்காக மேசையில் அமர, சுந்தரம் சாந்தா தம்பதியினரின் பிள்ளைகளான ராகவனும், ரதினியும் அவரைத் தொடர்ந்து வந்தமர்ந்தனர். இவர்களுடன் சாந்தாவும் இணைந்து கொண்டார் .
என்னவேலை என்றாலும் இந்த வீட்டிலே இரவுச் சாப்பாட்டுக்கு எல்லோரும் ஒன்றாக அமர்வர்.
ஏதோ தீவிர சிந்தனையோடு உணவுண்ணும் தந்தையை யோசனையோடு பார்த்தான் மகன் ராகவன்.
''அப்பா ...என்னப்பா முகமே சரியில்லை; ஏதாவது...''
சட்டென்று நிமிர்ந்து அலட்சியப் பார்வையால் கணவரை வருடிவிட்டு உண்பதைத் தொடர்ந்தார் சாந்தா.
கேள்வியுடன் தன் முகம் பார்த்திருக்கும் பிள்ளைகளை நோக்கிய சுந்தரம், ''இல்லப்பா, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை; நீங்க சாப்பிடுங்க.” தானும் உண்பதில் முனைந்தார்.
மாறாக அவர் மனமோ, தன் சொந்த ஊரையும் பெற்றவர்களையும் நாடி ஓடியது.
இலங்கையின் வடக்கே அங்காங்கே அள்ளித் தெளிக்கப் பட்டிருந்த சப்த தீவுகளில் ஒன்றான அனலைதீவைச் சேர்ந்தவர் சுந்தரம். ஆரம்பக் கல்வியை அங்குதான் படித்தார். கல்வியில் தம் ஒரே மகனுக்கிருக்கும் ஆர்வம் கண்ட அத்தீவின் பெரும் தனகாரரான இவர் தந்தை யாழ்பாணத்தில் இந்துக் கலூரியில் சேர்த்து மகனுக்கு கல்வியைக்கொடுத்தார் .
‘கல்வியை மட்டுமா நான் கேட்டு எதையுமே அவர்கள் மறுக்கவில்லை!’ பெற்றோர் நிவைல் அவர் கண்கள் கலங்கவா என்று கேட்டது சட்டென்று மனைவியைப் பார்த்தார் சுந்தரம். அவரோ தன் உணவில் மும்மரமாக இருந்தார் .
சாப்பாடு முடிய வெட்டிய அப்பில் துண்டுகளுடன் ஹாலில் வந்து அமர்ந்தனர் நால்வரும் .
''இம்முறை கோவில் திருவிழாவுக்கு ஊருக்கு போக வசதிப்படாது போலிருக்கு சாந்தா “ மனைவியைப் பார்த்துரைத்தார் சுந்தரம்..
இருந்த இடத்தை விட்டு விறுக்கென்று எழுந்த கொண்டார் சாந்தா.
''இது நடக்கும் என்று எனக்குத் தெரியுமே! உங்களுக்கு இதுவே வேலையாப் போச்சு! திருவிழாவுக்கு கனடாவில் இருந்து என் சினேகிதி தன் குடும்பத்தோட வந்திருக்கிறாள். அவள் அந்தக் காலத்திலேயே ரொம்ப அலட்டுவாள் . இப்ப கனடாவில் வேற இருக்கிறாளா ...ஏதோ தான் மட்டும் தான் மகராணி வாழ்வு வாழுற மாதிரி அலட்டுறாள்.. அவளை திரும்பிப் போகும் போது நம்ம வீட்டுக்கும் கூப்பிட்டு இருக்கிறேன் ..அவளுக்கு நான் உன்னைவிட கொழும்பிலேயே நல்லா இருக்கிறேன் என்று காட்ட வேண்டாமா? அதனால தான் ஐயனார் திருவிழாவுக்கு நாங்க அங்க நிற்கும் ஐந்து நாளுக்கும் விதம் விதமா உடுப்பு நகை என்று ஒரு மாதமா அலைந்து திரிந்து வாங்கி வைத்திருக்கிறேன் .. இப்ப போய் போக முடியாது என்றால்...எனக்குத் தெரியாது.. நாம குடும்பமா அனலைதீவுக்கு போறம்..அவ்வளவுதான்.''என்ற கத்தலுடன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
தந்தை கூறியவுடன் , தாயின் கத்தலைக் கேட்ட பிள்ளைகள் இருவருக்கும் ‘ஹைய்யோ பாட்டி வீட்ட போக முடியாதா ?’ என்ற கவலை ஒரு புறம்,
‘இந்த அம்மாவின் அலம்பல் தாங்க முடியல்லையே!!’ என்ற ஆதங்கம் மறுபுறமாக தம் தந்தையை பார்த்தனர் .
அவரோ, ''இல்லப்பா, முக்கியமான கருத்தரங்கு இருக்கு; அதற்கு நான் கட்டாயம் போகவேண்டும் இன்னுமொரு டாக்டரிடம் கேட்டிருக்கிறேன் ,. அவர் இன்னும் முடிவு சொல்லவில்லை; சரி பார்ப்போம் நீங்க போய்ப் படுங்க.” என்ற படி வெளியில் இறங்கி , குளு குளு காற்றை சுவாசித்தபடி தோட்டத்தில் நடக்கத் தொடங்கினார் .
அவர் நினைவுகளும் தம் நடையைத் தொடங்கின..
இலங்கையின் வடபகுதியில் உள்ள தீவுகளில் மிக அழகுள்ள தீவான அனலைதீவின் பெரிய குடும்பபத்தின் ஒரே வாரிசு இவர் .
கொழுப்பில் குழந்தை நல மருத்துவராக அரசு ஆஸ்பத்திரியிலும் , அதே வேளை சொந்தமாகவும் கிளினிக் வைத்து நடத்துகிறார்.மகன் மூ
இவர். மகன் ராகவன்மகன் கொழும்பு பல்கலைகழக 3 ஆம் வருட மருத்துவபீட மாணவன், மகள் கொழும்பு மெதடிஸ் கல்லூரியில் இல் உயர்தரம் படிக்கிறாள்.
வாழ்வில் எத்தனையோ சாதித்த இவரால் திருமணமாகி 22 வருட மணவாழ்வில் மனைவியை மட்டும் வெற்றி கொள்ள முடியவில்லை .. தான் வைத்தது தான் சட்டம், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்றிருப்பவளிடம் ..குடும்ப அமைதிக்காக குழந்தைகளின் நலனுக்காக அடங்கிப் போய்விட்டார் சுந்தரம் .
இதனால் இவர் பெரிதாக இழந்தது ...தன் வயோதிபப் பெற்றோரை தன்னுடன் வைத்திருக்க முடியாமல் போனது தான் .
அவர்களும் தம் மரியாதையை காப்பாத்திக் கொண்டு ஊரிலேயே இருந்து விட்டனர் . அவர்களுக்கு பண வசதிக்குக் குறைவில்லை. மகன் பேரப் பிள்ளைகளுடன் வயோதிபக் காலத்தில் இல்லையே என்ற குறைதான் ... இதுதானே பெரிய குறை!!
ஆனால் ஒவ்வொரு வருடமும் ஐயனார் கோவில் திருவிழாவை ஒட்டி, ஒரு கிழமை குடும்பத்துடன் அங்கு செல்வது அவர் வழக்கம் . சாந்தாவும் தன் வசதி வாய்ப்பை மற்றவர்களுக்கு காட்டவும் , மாமனார் ,மாமியை வறுத்தெடுக்கவும் ஆசையாகப் புறப்படுவார் .
அது என்னமோ கோவில் திருவிழா என்று சொன்னாலும்,எத்தனை பேருக்கு அந்த நாட்களின் நினைவுகள் வருடம் முழுதுக்குமான மனச் சந்தோசம் .
வெளிநாடுகளில் வாழ்வோரும் திருவிழாவை மையமாகக் கொண்டு ஊருக்கு வருவார்கள் . பலருக்கு அது வேடிக்கை ,பொழுது போக்கு , ஆனால் சிலருக்கு அதுவே வாழ்வின் ஆதாரம்...
இப்படி நினைத்த சுந்தரம், ‘எப்படியும் நாளைக்கு யாரையாவது கருத்தரங்குக்கு ஒழுங்கு செய்திட்டு நாம ஊருக்குப் போக வேணும் ...’ என்று நினைத்தபடி வீட்டுக்குள் வந்தார்.
___________