பூவிதழை ஒத்த அந்தப் பஞ்சு விரல்களைப் பற்றி இழுத்தது ஒரு முரட்டுக்கரம். நான்கு சுவர்கள் மட்டுமே அங்கு. ஒரு பக்கச்சுவரில் இருந்த கதவைத் தாழிட்ட பின், அவ்வுருவின் பார்வை அவளை நோக்கிப் பாய்ந்தது. அந்தப் பார்வையிலேயே ஐம்புலன்களும் அடங்கியது, அவளுக்கு. அப்பட்டமாய்ப் பயத்தைப் பிரதிபலித்தன, அவள் விழிகள். அவள் உடம்பெங்கும் சிவப்பு வர்ணம் தீட்டி ஓவியம் வரைந்தது, அவன் இடுப்பிலிருந்த பெல்ட்!
“அம்மா...!” அலறி விழித்தாள் கீதாஞ்சலி.
‘காலங்காத்தால என்ன கனவிது?
அந்தத் திமிர்பிடிச்சவன் நிஜத்தில தான் உயிரை வாங்குறான் எண்டா, இப்பக் கனவிலையும் என்ர நிம்மதியைக் கெடுக்கிறானே! பாவி! ஏனடா... உன்ன விரும்பினது பிழையா?
நீ சொன்னதுக்கெல்லாம் மறு பேச்சில்லாம தலையாட்டுவனே... என்னை விட்டுட்டுப் போக உன்னாலை எப்பிடி முடிஞ்சது? நீ தான் எல்லாமெண்டு நினைச்சனே கடவுளே!’
அவள் அலறைலைக் கேட்டு ஓடி வந்தாள் மலர்.
“என்னாச்சுடி அக்கா? ஏனிப்ப அழுறாய்? சொல்லன்டி...” என்றபடி அவள் முறைத்த முறைப்பில், “இல்லையடி.. அவர்... அவர்... கனவு...” மென்று துப்பினாள், கீதாஞ்சலி.
“நீ என்னடி நினைச்சுக் கொண்டிருக்காய்? அவன் தான் உன்னை வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டானே! பிறகும் ஏனடி நீயும் கஸ்ரப்பட்டு அம்மா, அப்பாவையும் ஆக்கினை செய்யிறாய்?” கடிந்தாள், தங்கை.
அதையும் மீறி, அந்தக் குழந்தை முகத்தைத் திட்ட முடியவில்லை அவளால். “அக்கா” என்றபடி, அணைத்துக்கொண்டாள்.
அவன் மீது கண் மண் தெரியாத கோபம் வந்தது மலருக்கு. அவன் வேறுயாரும் இல்லை, ஜீவன். ஒரு காலத்தில், “என் அத்தான் சொன்னாச் சரி தான்.” என, அந்தளவு மரியாதை அவனுக்கு.
‘இப்ப என்னத்தைச் சொல்லுறது? அவனால தானே அக்காக்கு இந்த நிலைமை? ஏன் மாறினவன்?’
அவளுக்குமட்டுமல்ல, யாருக்குமே விடை தெரியவில்லை.
எல்லாருக்கும் கீதா அவள். அவனுக்கு மட்டும் குட்டிம்மா.
“கீதாம்மா எழும்பிட்டியா? பள்ளிக்குக் கிளம்பலையா? ரீயைக் குடிச்சுட்டுப் போய்க் குளி!”
“சின்னவள் வெளிக்கிட்டிட்டாளே…?”
“மலர்... டிபன் பொக்ஸ் எங்க வச்சனி?”
அடுக்களைக்குள்ளிருந்து பறந்து வந்தது, அம்மாவின் குரல்.
“அம்மா... அக்காவை விடுங்கோ. அவள் ரீச்சர். நான் அப்பிடியே? கொஞ்சம் லேட் ஆனாலும் அந்த மேடம் அந்தக் குலை குலைக்கும். பத்தாததுக்கு ‘ஒரு பிரிஃபெக்ற் (மாணவத்தலைவி) நீ. மற்றவைக்கு முன்னுதாரணமா இருக்கோணும்.’ என்று கழுத்தறுக்கும்.” புலம்பியபடி சொக்சைத் தேடினாள் மலர்.
“இதோ வாறன் அம்மா...” கடகடவெனப் பல்தேய்த்துவிட்டு அழுதசுவடே தெரியாமல் விறாந்தைக்கு வந்தாள் கீதாஞ்சலி.
“அப்பா தோட்டத்துக்குப் போய்ட்டாரோ அம்மா…?”
“ஓமம்மா. வெள்ளனவே போய்ட்டார். இண்டைக்குச் சந்தைக்கு மரக்கறி கொண்டு போகவேணும் எண்டவர்.” என்ற மரகதம், “நீ வெளிக்கிடு!” என்றுவிட்டு, அடுத்த வேலையைக் கவனிக்கப் போனார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி தான் இவர்களின் பூர்வீகம்.
விவசாயம் தான் தொழில். அப்பா சர்வநாதன் தோட்டம், வயல் என முழுநேர உழைப்பாளி. மரகதமும் தன் பங்குக்குச் சும்மா இருக்கவில்லை. பத்துக் கோழிகளும் இரண்டு பசுக்களும் வீட்டிலேயே வளர்க்கிறார். அதனால், பால், தயிர், முட்டை என்று குறைவில்லாமல் இருக்கும். நிறைவான வருமானம் தான். சந்தோசத்துக்குச் சாட்சியாக இரண்டு கண்களாய்ப் பிள்ளைகள். மூத்தவள், இப்போது தான் கல்லூரி முடித்திருக்கிறாள், ஆசிரியர். இளையவள், உயர்தர முதல் வருட கணிதப்பிரிவு மாணவி(பதினோராம் வகுப்பு)
தேநீர் கோப்பையைக் கையில் பிடித்தபடி முற்றத்திற்கு வந்தாள் கீதாஞ்சலி.
வாசலில் அன்றலர்ந்த மலர்கள் தலை சாயத்து வரவேற்றன. புலர்ந்தும் புலராத அந்தக் காலை கூட அவள் மனக்காயங்களுக்கு மருந்தாகவில்லை. சுற்றிலும் பரவிய மல்லி வாசமும் தான்.
தூரத்தில் ஒலித்த பிள்ளையார் கோயில் மணியோசையில் கலைந்தவள், கிணற்றடி நோக்கி நடந்தாள். தன் எஜமானியின் வேதனை புரிந்தது போல ரைகரும் மௌனமாய் வாசலில் படுத்திருந்தது.
அதன்பின் பரபரவென்று தயாராகி, “அம்மா வாறன்...” என்றபடி, பாக்கைத் தோளில் போட்டுவிட்டுச் சைக்கிளை எடுத்தாள், கீதாஞ்சலி.
“பள்ளிக்கூடம் பக்கம் தானே? எனக்குச் சைக்கிளே காணும் அப்பா.” என, ஸ்கூட்டி எடுக்கவிருந்த தந்தையையும் தடுத்துவிட்டாள்.
அவளது அந்தப் புரிந்துணர்வும், குடும்பத்தின் மீதான பாசமும், அமைதியான சுபாவமும், குழந்தைத்தனம் மாறா முகமும் தான் அவனைக் காலடியில் விழுத்தியது.
ஜீவன்…
அவன் தான் அவளுயிரில் கலந்தவன். ஒரே ஊர் தான். இவளை விட மூன்று வயது பெரியவன். ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவன். தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளர்.
தமிழர்கள் அங்கு விரிவுரையாளராவதென்றால் மிதமிஞ்சிய அறிவாற்றல் இருக்க வேண்டும். அவனோ, சரஸ்வதியின் முழுக்கடாட்சம் பெற்றவன். கல்வி மட்டுமல்ல, கவித்துவத்தையும் அள்ளிக்கொடுத்திருந்தாள், அந்தக் கலைமகள்.
விழிகளாலேயே கவி படிப்பவன். அவள் உயர்தரம் கற்றபொழுதில் தான் பழக்கம். பக்கத்து வீடென்றாலும் அவனோடு பழகியது குறைவு. அவன் பார்வையிலேயே, திமிர்பிடிச்சவன் என்று விலகிப்போவாள்.
“அன்ரி” என்று, அவன் தாய் கலாவோடு தான் நல்லமாதிரி. அவருக்குப் பொம்பிளைப்பிள்ளையில்லை. கீதாவும் மலரும் தான் உயிர். அவன் தந்தை ரங்கநாதனும் கலாவுக்குச் சளைத்தவர் இல்லை. “அஞ்சலிம்மா” என்று கொள்ளைப்பிரியம்.
ஆனாலும், கீதாஞ்சலிக்கு அவனைப் பார்க்கும்போதெல்லாம் இன்னதென்று தெரியாத உணர்வொன்று ஆக்கிரமிப்பதுண்டு.
அன்று, கீதாஞ்சலிக்கு உயர்தரப் பெறுபேறுகள் வந்திருந்தது. பல்கலைக்கழகத்திற்குப் போதுமாயிருந்தது, கூடுதல் மகிழ்வு அவளுக்கு.
“அன்ரி அன்ரி!” என்று, கத்தினபடி ஓடி வந்தாள் அவள்.
“என்னடாம்மா? வா வா! எனக்குத் தெரியும், என்ர செல்லம் கம்பஸ் போகுமெண்டு!” என, உச்சிமோந்தார் கலா.
“ஓம் அன்ரி, மட்டக்களப்புத் தானே. ஆனாலும், கொஞ்சம் பயமா இருக்கு. யோசிப்பம். இந்து நாகரிகத்துக்குத் தான் கிடைச்சிருக்கு அன்ரி. பார்ப்போம்.” என்றபடி திரும்பியவள், சுவற்றில் சாய்ந்து, கைகளைக் கட்டிக்கொண்டு நின்ற ஜீவனைக் கண்டு திகைத்தாள்.
“இவனெப்ப கம்பஸ்சால வந்தவன்? ஐயோ! ஏன் இப்பிடிப் பாக்கிறான்?”
அந்நேரம் பார்த்து “கலா… கலா…” என்று ரங்கநாதன் கூப்பிடவும், “நில்லம்மா, மாமா தோட்டத்துக்க நிக்கிறார்; தேத்தண்ணி குடுத்திட்டு வாறன்.” என்றபடி விரைந்தார் அவர்.
“அய்யோ…! பிள்ளையாரப்பா…! இவனிட்டயா நான் மாட்டோணும்? முருகா!” என்றபடி விழித்தவளை, “ என்ன மேடம், என்னோட கதைக்க மாட்டியள் போல?” கேட்டவன் குரலிலிருந்த கடினம், மருந்துக்கும் முகத்தில் இல்லை.
“இல்லை அண்ணா…” என்று இழுத்தவளைக் கண்டு அதிர்வது ஜீவனின் முறையானது.
“என்னடி அண்ணாவா?”
“ஏன்டி, என்ர அப்பா உனக்கு மாமா, அம்மா அன்ரி, நான் அண்ணாவாடி உனக்கு?”
“இல்லை அண்… ஜீவன்...” அவள் திணறியதும் நகைப்போடு பார்த்தவன், “சரி, என்ன செய்யப் போறாய்?” என்று ஆரம்பித்தான்.
ஏற்கனவே அவனைக் கண்டுத் தடுமாறி நின்றவளாச்சே! என்ன கேட்கிறான் என்று உண்மையிலேயே புரியவில்லை.
முழியை உருட்டிக் கொண்டு நிற்பதைத் தவிர வேறென்ன செய்யலாம்?
அவனோ அதைக் கவனியாது, சொல்ல வந்ததைச் சொல்லிவிடும் வேகத்தில் தொடர்ந்தான்.
“நான் சொல்றதக் கேப்பாய் தானேடா?” அவன் வார்த்தைகளில் இருந்த நெருக்கம் அவளுக்குள் என்னவோ செய்வித்தது. தொடர்ந்து சொல்வதைக் கேட்க முனைந்தாள்.
“உனக்குக் கம்பஸ் வேணாம்மா. மட்டக்களப்பு எல்லாம் சரிவராது. அதுவும் நீ பயந்த சுபாவம் வேற. ராக்கிங் பண்ணியே கொண்ணுடுவாங்கள்.” என்றவன், “கொலிஜ் போ! மூன்று வருசம் தானே? வெளிய வரும்போதே ரீச்சர்...” என்றான்.
அவன் படபடவென்று சொல்லிக்கொண்டே போகவும், சத்தியமாய்த் திடுக்கிட்டு விட்டாள் அவள்.
‘இப்போதுதானே பல்கலைக்கழகம் கிடைத்திருக்கு என்று மகிழ்ந்தேன்! என்ன இவர்? இத்தனை உரிமையாய்ப் போகாதே என்கிறார்!’ அவளுள்ளம் இப்படித்தான் முதலில் எண்ணியது.
‘இவர்மட்டும் பேராதனை போவாராம். நான் போகக் கூடாதாம்.’ சிணுங்கவும் செய்தது. ஆனாலும், மனதில் உள்ளதைச் சொல்லிவிட்டுத் தன் சம்மதத்திற்காக நம்பிக்கையோடு காத்து நின்றவனின் ஊடுருவும் பார்வை, சட்டென்று ‘சரி’ எனத் தலையசைக்க வைத்துவிட்டது.
மலர்ந்துவிட்டான் அவன். விழிகள் பளிச்சிட, “ம்ம்… ஏன்டி அந்தக் கண்ணை உருட்டுறாய்? வாயத் திறந்து பேசன். புட்டுக்கட்டியா வாயில வச்சிருக்காய்?” சீண்டினான்.
“உனக்கு என்னப்பாத்து என்ன பயம்டி?” என்றவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை, அவனவள்.
“இல்ல… நான் போகோணும். அம்மா தேடுவா…” முணுமுணுத்தாள். அவனது சென்ட் மணம்வேறு அவள் நாசி தொட்டு ஏதேதோ செய்தது.
“சரி, போ! ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லீட்டுப் போ!” என்றான் அவன், அழுத்தமாக.
“என்ன?” என்று நிமிர்ந்தவளின் விழி பார்த்து, “என்னைக் கல்யாணம் செய்யிறியா குட்டிம்மா?” வெகு சாதாரணமாகக் கேட்டுவிட்டான்.
“என்ன?” என்று அதிர்ந்தவளின் விழிகள் தன்னாலே நீரைச் சொரிந்தது. அது ஆனந்தத்திலா அதிர்ச்சியிலா என்று அவளுக்கேத் தெரியவில்லை. அதைப் புரிந்தவன் போல, நெருங்கி, மிக மெதுவாக நெஞ்சோடு சாய்த்துக்கொண்டான் அவன்.
“உன்னப் பாத்ததில இருந்து நான் உன்ன விரும்புறன். உனக்கும் என்னில விருப்பம் என்று நல்லாவே தெரியும். உன் படிப்பைக் குழப்பக் கூடாதெண்டு தான் பேசாமயிருந்தன். இனியும் பேசாமலிருந்தா, அந்தக் கிருபா தாலியக் கட்டிக் கூட்டிக்கொண்டு போய்டுவான் போலக் கிடக்கு…” என்றான், ஆழ்ந்த குரலில்.