காந்தி கிராமப் பல்கலைக்கழகத் துணை வேந்தர், பள்ளி ஆண்டு விழாவில் காந்தியத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைத்த பொழுது அது எத்தனை பேரைக் கவர்ந்ததோ தெரியாது… ஆனால், பன்னிரண்டு ‘ஆ’ பிரிவு மாணவி சௌந்தரவடிவின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது உண்மை.
பொது வாழ்வில் தூய்மை, கொண்ட கொள்கையில் பிடிப்பு, சத்தியத்திலிருந்து பிறழாமை, நேரந் தவறாமை, நேர்மை போன்ற கருத்துக்கள் அவள் மனதில் ஆழமாகப் பதிந்து போயின.
காந்தியின் பிடிவாதம் அவளுக்கும் பிடித்தமாய் இருந்தது. தடியடியோ, சிறைவாசமோ அவரை, கொண்ட கொள்கையிலிருந்து இம்மி அளவு கூட பிறழச் செய்ய முடியவில்லை என்பது அவளுக்கு ஆச்சரியத்தைத் தந்ததோடு, அந்த மாமனிதன் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்கிறோமே என்று பெருமையாகவும் இருந்தது.
‘ரத்தம் சிந்தாத யுத்தம்’ என்ற சித்தாந்தத்தை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய அந்தப் பொக்கை வாய்க் கிழவனின் வாழ்க்கை முழுதிலும் அறத்தின் சாரம் மட்டுமே நிரம்பி வழிந்ததாக அவள் உணரலானாள்.
பள்ளி ஆண்டு விழா முடிந்து வீட்டிற்கு சென்ற சௌந்தரவடிவு மறுநாள் முதல் செய்ய வேண்டிய சில பணிகளை திட்டமிட்டுக் கொண்டாள். அந்த வாரத்தின் இறுதியில் ஒத்த கருத்துடைய தன் சக தோழிகள் சிலருடன் சேர்ந்து ‘காந்தி மன்றம்’ என்றொரு அமைப்பை ஏற்படுத்தினாள். அது இயங்கத் தொடங்கிய இடம் அவள் வீட்டு மொட்டை மாடி. அதற்காக தன் அப்பாவின் அனுமதியைப் பெற்றிருந்தாள்.
தன் மகளை நினைத்து பொன்வண்ணனுக்கு அளவில்லாத பெருமை. ‘’இந்தச் சின்ன வயசுல இவளுக்குத்தான் காந்தியக் கருத்துக்களில் எவ்வளவு ஈடுபாடு!’’ என்று அடிக்கடி வியப்பார்.
பொன்வண்ணன் ஒரு அரசாங்க அதிகாரி. வருவாய்த் துறையில் முக்கிய பதவியில் பணிபுரிந்து வந்தார். ‘பொழைக்கத் தெரியாதவன்’ என்று நண்பர்கள் வட்டாரத்தில் அறியப்படுபவர். சக அதிகாரிகளின் மதிப்பீட்டில், அவர் நடைமுறைக்கு ஒத்துவராத, கிறுக்குத்தனமான சில கொள்கைகளை கட்டி அழுது கொண்டிருந்தார். பெரும்பாலான அதிகாரிகள் அத்தகைய காலாவதியான கொள்கைகளுக்கு ஈமச் சடங்கு நடத்தி விட்டனர். அந்தப் பாவப்பட்ட கொள்கைகள் பின்வருமாறு: நேர்மை, நாணயம், நியாயம், சத்தியம், உழைப்பு.
பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த பொன்வண்ணனுக்கு இயற்கையாகவே அற உள்ளம் அமைந்திருந்தது. ஒட்டு மொத்தக் குடும்பமும் அவருடைய ஒரு சம்பளத்தில் ஜீவித்து வந்தது. அவருடைய முதல் இரண்டு பெண்களும் கல்லூரியில் பட்ட வகுப்பிலும் மூன்றாவது பெண்ணான சௌந்தரவடிவு பன்னிரண்டாம் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தனர். அடுத்த ஆண்டு சௌந்தரவடிவை கல்லூரியில் சேர்க்க வேண்டும்.
குடும்பச் செலவுகள், கல்லூரிக் கட்டணங்கள், பஸ் கட்டணம், இதரச் செலவுகள் என்று பணம் தண்ணீராய்ச் செலவழிந்து கொண்டிருந்தது. பிரமப் பிரயத்தனம் செய்து தான் ஒவ்வொரு மாதத்தையும் ஓட்ட வேண்டி இருந்தது.
நேர்மையான அதிகாரியான பொன்வண்ணனுக்கு வாழ்க்கையைச் சமாளிக்க கடனாளி ஆவது தவிர்த்து வேறு வழி புலனாகவில்லை. சாண் ஏற முழம் வழுக்கும் வாழ்க்கையில் ஒருவரால் வேறென்ன செய்ய இயலும்?
அலுவகத்தில் எல்லா வித நல நிதிகளிலும் கடன் வாங்கியாகி விட்டது. வைப்பு நிதியிலிருந்தும் முன்பணம் எடுத்தாயிற்று. எப்போதோ வாங்கிப் போட்ட ஐந்து சென்ட் காலி மனையையும் தங்கவில்லை. மனைவிக்கு கல்யாணத்தின் பொழுது போட்ட கொஞ்ச நகையும் அடமானத்தில். அப்படியும் போதாமல் பொன்வண்ணன் மூன்று வட்டிக்கு பணம் புரட்டி இருந்தார். இத்தனைக்கும் அதிகம் ஆசைப்படாத மகள்கள். சிக்கனமாகக் குடும்பம் நடத்தும் மனைவி. எப்பொழுது வேண்டுமானாலும் கவிழ்ந்து போகலாம் என்ற நிலையில் தான் அவர்களின் வாழ்க்கைக் கப்பல் ஓடிக் கொண்டிருந்தது.
அலுவலகத்தில் சகப் பணியாளர்கள் எப்பொழுதும் கலகலப்பாக அரட்டையடித்துக் கொண்டிருக்க, பொன்வண்ணன் மட்டும் ‘’என் கடன் பணி செய்து கிடப்பதே’’ என மாங்கு, மாங்கென்று வேலை செய்து கொண்டிருப்பார். அவர்களின் வாரிசுகள் அநேகமாக பொறியியல், மருத்துவம், மற்றும் கணினியியல் படித்துக் கொண்டிருந்தார்கள். திருமணம் போன்ற விசேசங்களுக்கு வரும்பொழுது அவர்களின் மனைவியரும், குழந்தைகளும் ஆடம்பரமான உடைகளுடனும், நவீனபாணி நகைகளுடனும் அமர்க்களமாக காட்சியளிப்பார்கள். உணவு விடுதிகளில், திரை அரங்குகளில், விசேச நாட்களில் மதுக்கடைகளில் பணத்தை வாரி இறைப்பார்கள். அவர்களில் யாரும் கடன் வாங்கியதாகவோ, காலி மனைகளை விற்றதாகவோ, நகைகளை அடகு வைத்ததாகவோ பொன்வண்ணன் ஒருநாளும் கேள்விப்பட்டதில்லை. எப்படி அவர்களுக்கு பணம் வந்து குவிகிறது என்று அரசல், புரசலாக அவருக்கு செய்திகள் வரும். ‘’சீ..நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’’ என்பதாகக் கருதி அவற்றை ஒதுக்கி விடுவார்.
இவ்வளவு பெரிய நாணயஸ்தரும் கூட வாட்டி ‘வளவு’ எடுத்த பொருளாதார நெருக்கடியில் கொஞ்சம் சபலத்திற்கு ஆளாக நேர்ந்தது.
ஒரு நாள் மதியம் பொன்வண்ணன் தன் நண்பர் ஒருவருடன் தனி அறையில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சொந்த விசயங்களை பரிமாறிக் கொள்ளுமளவுக்கு நெருக்கமான நண்பர்.
“கடவுள் ரொம்பவும் சோதிக்கிறாரப்பா. ஒவ்வொரு மாதமும் கடைத்தேறுவதற்குள் கண்ணாமுழி இரண்டும் நட்டுப்போகுது.’’ என்று அங்கலாய்த்துக் கொண்டார் பொன்வண்ணன்.
“நீயே கஷ்டங்களை வருவிச்சுக்கிட்டு, அப்புறம் புலம்பி என்ன பயன்? மற்றவங்க மாதிரி கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் பாரு...கஷ்டங்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்துரும். நட்டமா நின்னு ஒடிஞ்சி போறத விட நாணலைப் போல வளைஞ்சி போவதே அறிவுடைமை. நமது அலுவலகத்தில் நிறையப் பேர் தேவையானவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்து கனத்த பைகளோடு வீட்டிற்குப் போகிறார்கள். வீட்டில் அவர்களுக்கு ஏக மரியாதை. நேர்மையா இருந்து பெருசா என்ன சம்பாதிச்சிருக்கே, கடனாளிங்கற பட்டத்தைத் தவிர?
ரொம்ப நல்லவனா இருப்பது எப்பவுமே ஆபத்து.’’ என, புத்திமதி(?) கூறினான் நண்பனாகப்பட்டவன்.
அவனும் கூட ஒரு புது அபார்ட்மென்ட் வாங்கி இருப்பதாக அலுவகத்தில் பேசிக்கொள்வது அவர் காதுக்கும் எட்டியிருந்தது. நண்பனின் புத்திமதி அதை உறுதிப்படுத்தியது. ஏனோ அவனுடைய பேச்சு திரும்பத் திரும்ப அவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது.
நண்பன் மட்டுமல்ல, காலையில் அவரிடம் வந்த ஒரு வியாபாரியும் பொன்வண்ணனின் மனதில் கல்லெறிந்துவிட்டுப் போயிருந்தார்.