“முத்துச்செல்வி கிடைப்பாளா?”
ஆயிரமாவது முறை என் மூளையில் இக்கேள்வி எழுகிற மறுநொடியே, ‘கிடைத்து விடாமல் போய் விடுவாளோ?’ என, மனம் பல்லாயிரம் முறை விம்மி வெடிக்கிறதே!
ஒரு பாவமும் அறியாத அந்த முகம்! பிஞ்சு முகம்! அவளுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது! இல்லை...என்ன ஆனாலும், நீ எந்த நிலையில் இருந்தாலும் என்னோடு கூட்டி வந்திடுவேன்! உனக்காக...உன்னை நினைத்துத் தானே என் வாழ்க்கையை இப்படிச் செதுக்கி இருக்கேன்!
எனக்குள் நான் சொல்லி கொண்டாலும்...
“முத்துச் செல்வி கிடைப்பாளா?”
மறுபடியும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்க வைக்குதே நிஜத்தை உணரத் துடிக்கும் அறிவு!
என் மனமெல்லாம் அவளிடம் வியாபித்துக் கிடக்க...
“ஸார் பேக் பாக்தா...”
அந்த முரட்டுக் குரலில் நிகழ்வுக்கு வந்தேன். விமானப் பாதுகாப்பு அதிகாரி, பையை ஸ்கேனிங் மிஷின் சோதனைக்கு அனுப்புமாறு பெங்காலியில் சொல்லிக் கொண்டிருந்தார்.
பையை அவர் சுட்டிய இடத்தில் வைத்து விட்டு, நானும் பாதுகாப்புச் சோதனையை முடித்து விட்டு, போர்டிங் கேட் எதுவென்று பார்க்கலாமென அங்கே மிளிர்ந்த LED விமான அட்டவணைப் பலகையைப் பார்த்தேன்.
அதில் கொட்டை எழுத்துக்களில் பளிச்சிட்ட ‘நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் டொமெஸ்டிக் ஏர்போர்ட்’ டிற்குக் கீழே, ‘டம் டம் கொல்கத்தா’ என்ற பொடி எழுத்துக்களைப் பார்க்கும் பொழுதே என் முகம் ஒரு முறுவலை ஏந்தி நின்றது!
முன்னர் ‘டம் டம் ஏர்போர்ட்’ என்பது இதன் பெயர்!
‘கல்கத்தாவில் உள்ள டம் டம் விமான நிலையத்துக்கு, டம் டம் டமாரம்ன்னு நினைவு வைச்சுகோங்க, மறக்கவே மறக்காதுன்னு’ விஜி டீச்சர் சொல்லிக் கொடுத்த பாடம் தான் நினைவுக்கு வந்தது! விஜி டீச்சர் அம்மாவோட ஃப்ரண்ட்.
அம்மா, தலைமை ஆசிரியராய் இருந்ததில் இது ஒரு வசதி. வருஷா வருஷம் திட்டம் போட்டு எனக்கேத்த வாத்தியார்கிட்ட தள்ளி விட்டுடுவாங்க.
“போன வருஷம் பொன்னுச்சாமி ஸார்கிட்ட ஒழுங்கா வீட்டுப்பாடம் எழுதாம டிமிக்கி கொடுத்தேல? அதான், இந்த வருஷம் விஜி க்ளாஸ்ல போட்டு இருக்கேன்! வீட்டுப்பாடம் மட்டும் எழுதாமப் போய்ப் பாரு!”
அம்மா இதைச் சொன்னப்போ நான் நம்பலை! சும்மா பூச்சாண்டி காண்பிக்கிறாங்க... நம்ம வீட்டுக்கு வர்றப்போலாம் விஜி டீச்சர் எவ்வளோ பாசமாப் பேசுவாங்கன்னு நினைத்தேன்!
அப்படித் தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுசும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துட்டு.. வீட்டுப்பாடம் எழுதவே மறந்து போனேன்.
வீட்டுப்பாட நோட்டை, காலையில் வந்ததும் டேபிளில் அடுக்கி வைக்கணும். ஒன்னும் எழுதாம நான் எப்படி வைப்பேன்?
டீச்சர்கிட்ட, கையை கட்டி நின்னுகிட்டு மிகப் பாவமா முகத்தை வைச்சிட்டு, “நோட்டை வீட்டில் வைச்சிட்டேன் டீச்சர்” ன்னு பொய் சொன்னதும்,
அவங்க ஒரு நொடி என் முகத்தைப் பார்த்துட்டு, அடுத்து, பொம்பளை பிள்ளைங்க வரிசையில் முதல் ஆளா, கருப்பா, ஒல்லியா, குட்டையா, சிவப்பு ரிப்பன்ல கட்டின எலி வால் சைஸ் இரட்டைச் சடையோட இருந்தவளைப் பார்த்து,
“முத்துச்செல்வி, அவன் பையைப் பாரு!” கட்டளையிட்டுவிட்டார்.
இப்படி ஒரு குண்டைத் தலையில் தூக்கிப் போடுவாங்கன்னு நினைக்கவே இல்லை நான்! மிரண்டு போய்... முத்துச்செல்வியைப் பார்த்தேன்!
“சரிங்க டீச்சர்”
மண்டையை மண்டையை ஆட்டினாளே பார்க்கணும்... தலையே உருண்டு விழுந்திடும் போல இருந்தது!
முத்துச்செல்வி கூடச் சேர்ந்து, அதாவது, ஒரே செக்ஷன்ல படிக்கிற சந்தர்ப்பம் இதுவரை அமையலை. ஆனால், பார்த்திருக்கிறேன். அதுவும் மதிய வேளையில், பள்ளிக்கூடத்தின் வெளியே, தட்டு மிட்டாய் வாங்குவதை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன்!
இப்பொழுது டீச்சர் சொன்னதும் அத்தனை வேகமா ஓடி வந்து என் பையை உருட்டினாள். நல்ல காலமா யாரோ டீச்சரைப் பார்க்க வர, அவங்க அதைக் கவனிக்கப் போனப்போ... நான் நைசா... “டீச்சர்கிட்ட இல்லைன்னு சொல்லிடேன் ப்ளீஸ்”, அவகிட்ட குனிஞ்சு இரகசியமாக் கெஞ்சினேன்.
நிமிர்ந்து என்னைப் பார்த்தவள், முடியாதுன்னு தலையை உலுக்கினாள்.
“உனக்குத் தட்டு மிட்டாய் கூட வாங்கித் தர்றேன்”
அடுத்த பேரத்திற்கு இறங்கினேன். அதற்குள் டீச்சர் உள்ளே வந்து விட்டார். அவள் எதற்கும் மசியாமல், என் நோட்டை எடுத்துக் கொண்டு அவரிடம் ஓட, ‘சரி போ! இன்னைக்கு ஆப்பு உறுதி’ன்னு நான் நினைத்த பொழுது,
“நீங்க அங்குட்டு போனதும் என்னை நோட் இல்லைன்னு பொய் சொல்ல சொல்றான் டீச்சர்... பொய் சொன்னாத் தட்டு மிட்டாய் வாங்கிக் கொடுப்பேன்னு வேற சொன்னான் டீச்சர்”,
ஒன்று விடாமல் போட்டுக் கொடுத்துப் பெரிய ஆப்பாக்கி விட்டாள் முத்துச்செல்வி. அப்புறம், விஜி டீச்சர் பொங்கோ பொங்குன்னு பொங்கிட்டாங்க.
“எத்தனை பொய், என்ன திருட்டுத்தனம்! டீச்சர் பையனா இருந்துகிட்டு இந்த வேலை எல்லாம் செய்வேன்னு நினைக்கவே இல்லை பரத்!”
அன்னைக்கு டீச்சரிடம் அடி வாங்கியது கூடப் பெரிசாத் தோணலை. அவங்க அம்மாவை சொன்னது தான் மனசுலே எங்கோ அடி வாங்கினது. பாசம்ன்னா இது தானா?
அது நாள் வரை, தேவையைப் பூர்த்திச் செய்யத் தான் அதிகமா அம்மாவைத் தேடி இருக்கேன்! நான் செய்தது அம்மாவோட மரியாதையைக் கெடுக்கும்ன்னு உணர்ந்து தேடியது அன்னைக்கு தான்!
என்னைப் பொறுத்தவரை அப்பா தான் ஹீரோ! அப்பாக்கு விமானப்படையில் வேலை. டெஹராடூன்ல இருந்தாங்க. வருஷத்துக்கு இரண்டு மூணு தடவை வந்துட்டுப் போவாங்க. அப்பா வந்துட்டா அவங்க பின்னாலே தான் சுத்துவேன்! அவங்க போனதும் அடுத்து அப்பா எப்போ வருவாங்கன்னு ஏங்க ஆரம்பிச்சிடுவேன்.
ஆனா, விஜி டீச்சர் அப்படிச் சொன்னதும் என்னாலே தாளவே முடியலை.
அழுகை அழுகையாக வந்தது. பெல் அடிச்சதும் அம்மாகிட்ட ஓடினேன்.
நான் செய்ததை சொல்லி, “நான் தப்புச் செய்ததிலே உங்களுக்கும் கஷ்டம்...”ன்னு நான் அழுதேன்.
நான் சொன்னதும் அம்மா முகத்தில் அமைதி! அப்புறம் என்னை வாரி அணைத்து, என் கண்ணீரைத் துடைத்து விட்டு, “பொய் சொன்னாக் கஷ்டம் உனக்குத் தான் கண்ணா! அம்மாக்கு இல்லை! ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்’ நீ படிச்சது தானே?” என்றார்.
அம்மா என்ன சொன்னாலும், திருக்குறள் வந்து விடும்.
வாழ்வியலுக்கு அது ஒரு வழிகாட்டி; பின்னர், அனுபவத்தில் கண்ட உண்மை.
என்ன இருந்தாலும், ஆறுதலும், அக்கறையும், அறிவுரையும் அன்பில் தோய்த்துக் கொடுக்கும் அன்னைக்கு இணையாகுமோ எந்த ஏடும்?
அம்மாகிட்ட பேசிட்டு, எல்லாக் கவலையும் மறந்து பறந்து திரும்பும் போது, ஸ்கூலுக்கு வெளியே, தட்டு மிட்டாய் வாங்கிக் கொண்டிருந்த முத்துச்செல்வியைப் பார்த்துட்டேன். என்னை எப்படிக் கோல் மூட்டி விட்டாள்? இவளை ஏதாவது செய்யணும்ன்னு நான் நினைக்கிற நேரம் பார்த்தது மணி அடிக்க, நான் வகுப்புக்கு வேக வேகமாக ஓட... அவளும் என் பின்னாலே ஓடி வந்தாள். அப்போது “பொத்”தென்று விழுகிற சத்தம்! சட்டென்று திரும்பி பார்த்தேன்.
அவள் கீழே விழுந்து கையில் இருந்த தட்டு மிட்டாயும் மண்ணாகிப் போயிருந்தது!
அதைப் பார்த்தவுடன் என் மனசுலே அப்படி ஒரு பரவசம்! கடவுளாக் கொடுத்த வாய்ப்பு! அவள் முன்னாடிப் போய்க் கைக் கொட்டிச் சிரித்தேன்.
“வேணும் வேணும் நல்லா வேணும்!! முட்டைச்செல்வி! குட்டைச்செல்வி!”
நான் சீண்ட சீண்ட, அழுது கொண்டே எழுந்தவள், “நீ தான்டா புழுகு மூட்டைப் பரத்! புண்ணாக்கு மூட்டைப் பரத்!” ன்னு பதிலுக்குச் சண்டைக்கு வந்தாள்.
அன்றிலிருந்து எனக்கு அவள் முட்டை! அவளுக்கு நான் புண்ணாக்கு!
அவளோட பழக ஆரம்பித்த முதல் நாள் மூக்கை உறிஞ்சிகிட்டு என் கூட சண்டைக்கு வந்ததை இப்போ நினைத்தாலும் இனிக்குது. ஆனா...
அவளைக் கடைசியாப் பார்த்த அந்த நாள்! அவள் கதறல்! அத்தனை நினைவையும் அனுபவிக்க விடாம அழுத்துது!
பூப்பெய்தி ஒரு மாசம் கூட ஆகாதவளை என் கண் முன்னே... கதற கதற இழுத்துட்டுப் போனானுங்களே!
“பரத்! காப்பாத்து பரத்! என்னைக் காப்பாத்து பரத்!”
ஹைய்யோ! என் முட்டையின் குரல் இன்னும் செவிப்பறையில் மோதி மோதி எதிரொலிக்குதே!
‘உன்னைக் காப்பாத்த முடியாத... கையாலாகாதவனாப் போயிட்டேனே! இப்பவும் என் கண்ணுக்குள்ளே தான் நிக்குறா! நீ கிடைச்சிட்டா இனி உன்னை விட மாட்டேன்! விடவே மாட்டேன்! என் கண்ணுக்குளே வைச்சுக்குவேன்!’
மனம் தவித்த தவிப்பில், என் கண்ணுக்குளே வெள்ளம் வந்து விட்டதை நான் உணரும் வேளையில், ‘யாரும் பார்க்கிறதுக்கு முன்னே துடை!’ என் தன்மானம் கட்டளையிட்டது.
அது என்னைத் தைரியமான, கம்பீரமான ஆண் மகனாக உலகத்திற்குக் காட்ட நினைக்குது. அழுதால் கோழை அடையாளம் - இது எழுதப்படாத விதி! தன்மானத்தை அடகு வைத்து விட்டு நான் எங்கே போகுறது! அதற்குக் கட்டுபட்ட என் கைகள் கைக்குட்டையால் முகத்தை துடைத்த பொழுது...
“டாக்டர் பரத்”, தூரத்தில் ஒரு குரல் என்னை அழைப்பது போல... பரிச்சியமான குரல் என்று தோன்றிய அடுத்த கணமே கண்டு பிடித்து விட்டேன், அழைப்பது ஜெஸி என!
கொல்கத்தாவில் நான் கண்ட வீரத் தமிழச்சி! கல்லூரி மாணவி. சமூக நல ஆர்வலரும் கூட. ஒரு எயிட்ஸ் விழிப்புணர்வுக் கூட்டத்தில் தான் முதலில் அறிமுகமானவள்.
என்னிடம் என்ன ஈர்ப்பைக் கண்டாளோ? என்னைக் காதலிக்கிறேன் என்று விரட்டுகிறாள். இது இளம் பருவத்தில் வரும் ஈர்ப்பு! சொன்னாலும் புரியவில்லை அவளுக்கு! கஷ்டமே தெரியாதவள் என்றால் கூட பரவாயில்லை. என்னைப் போலே தாயை இள வயதில் இழந்து நிறையக் குடும்பப் பொறுப்புகளைச் சுமந்து கொண்டிருக்கிறாள்.
அவள் எண்ணத்திற்கு அறிவுரை சொல்ல முற்பட்டதும்,
“என்னை பொறுத்தவரைக்கும் யு ஆர் எ செலிபிரிட்டி! உங்க சேவை... நீங்க எடுக்கிற ரிஸ்க் உலகத்திலே எத்தனை டாக்டர்ஸ் எடுப்பாங்க? சத்தியமா அதுக்காகவாவது உங்களை லவ் பண்ணிட்டுப் போறேனே ப்ளீஸ்!” என்றே பதில் வந்தது.