• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 15

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 15


பார்வையைக் கொஞ்சமும் அசைக்காது அவனையே பார்த்தாள் இளவஞ்சி. அன்றும் இப்படித்தான். அவன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் பார்வையாலேயே அவனை அடக்கியிருந்தாள்.

இன்றும் அதையே அவள் செய்ய, “திமிர் பிடிச்சவளே, கொஞ்சமாவது அசஞ்சு குடுக்கிறியாடி!” என்று கடுப்புடன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் நிலன்.

“நீங்க மட்டும்? நான் கேட்ட கேள்விக்குப் பதில…” என்றவளை வேகமாக இடையிட்டு, “அந்தக் கேள்வியக் கேட்டியோ உன்னக் கொன்டுடுவன் ராஸ்கல்!” என்று விரல் நீட்டி எச்சரித்தான் அவன்.

சட்டென்று சிரித்துவிட்டாள் இளவஞ்சி. அவனும் அதை அவளிடம் சொல்லாமல் வைத்துக்கொண்டு சந்தோசமாக இல்லை என்று புரிந்தது.

ஆனால், காலம் அவள் இரகசியத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் நாளாக அந்த நாளை நிர்ணயித்திருந்தது போலும். ஆனந்தியிடமிருந்து குறுந்தகவல்கள் படபடவென்று வந்து விழ ஆரம்பித்தன.

முகத்திலிருந்த சிரிப்பு மறைய வேகமாக அதை எடுத்துப் பார்த்தாள். பார்த்தவள் உள்ளம் மட்டுமில்லை முகமும் சேர்ந்து கொதித்தது.

பட்டென்று அவனிடமிருந்து விலகி, “உங்கட கார எடுக்கிறன்.” என்றபடி மேசையில் இருந்த அவன் கார் திறப்பை எடுத்துக்கொண்டு விரைந்தாள்.

“எங்க போறாய்? நில்லு! நான் கூட்டிக்கொண்டு போறன்.” என்று பின்னால் வந்தவனிடம், “இல்ல, நீங்க வர வேண்டாம்!” என்றுவிட்டுத் தனியாகவே புறப்பட்டாள்.

அப்படி அவளைப் போக விட்டுவிட்டு அவனால் இங்கே நிம்மதியாக இருக்க முடியவில்லை. அந்தளவில் மலர்ந்து சிரித்தவள் முகம் நொடியில் சிவந்து கொதித்ததைக் கண்டு, என்னவோ என்று அவன் மனமும் அந்தரித்தது.

ஜீன்ஸ் பொக்கெட்டினுள் இருந்த கைப்பேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான். அவள் எடுக்கவில்லை. குறைந்த பட்சமாக எங்கே போகிறேன் என்றாவது சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். அவன் நிம்மதியாக வேலையையாவது பார்த்திருப்பான்.

அவள் அங்கிருந்து போனதைக் கண்ட பிரபாகரன் மகனுக்கு அழைத்து, அந்தப் பிள்ளைகள் வந்து காத்திருப்பதைத் தெரிவித்தார். அப்படியே அதைச் சொல்லத்தான் சற்று முன் தான் வந்ததாகவும் சொல்லிவிட்டு அவர் வைக்க, அந்தப் பிள்ளைகளிடம் போனான் நிலன்.

இளவஞ்சியை எதிர்பார்த்திருந்தவர்கள் இவனைக் கண்டுவிட்டு மருண்டு விழித்தனர்.

தான் அவளின் கணவன் என்று அறிமுகம் செய்துகொண்டு, அவர்களின் பயத்தைப் போக்கி, இவ்வளவு நேரமும் அவர்களுக்காகக் காத்திருந்த இளவஞ்சி அவசர அலுவலாக வெளியே போயிருக்கிறாள் என்று சொன்னான். அங்குப் பணிபுரியும் இரண்டு வயதான பெண்களை அழைத்து, அவர்களோடு தானும் சென்று, அவர்கள் பார்க்க வேண்டிய வேலைகளைச் சொல்லிவிட்டு வந்தான்.

இத்தனை வேலைகளையும் பார்த்தாலும் இளவஞ்சி பற்றிய யோசனை அவனுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அதற்கு மேலும் பேசாமல் இருக்க முடியாமல் அன்னைக்கு அழைத்து விசாரித்தான். அவள் அங்கே வரவில்லை என்று சொன்னார் அவர். சில கணங்களுக்கு யோசித்துவிட்டு மிதுனுக்கு அழைத்தான்.

அவன் அங்கே தையல்நாயகியில் இருந்தான். இளவஞ்சி வரவில்லை என்று சொன்னவன் சக்திவேலர் அங்கிருப்பதைச் சொல்லவும் இவன் புருவங்கள் சுருங்கின.

“அவருக்கு அங்க என்னடா அலுவல்?”

“இப்ப ரெண்டு மூண்டு நாளா அவர் இஞ்சதானே அண்ணா வாறவர். உங்களுக்குத் தெரியாதா?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

நிலனுக்கு இது புதுச் செய்தி. கூடவே சக்திவேலர் அங்குப் போனதை அவன் விரும்பவும் இல்லை. இளவஞ்சி விலகிவிட்டாள்தான். அதற்காக அது ஒன்றும் இவர்களுக்குச் சொந்தமானது இல்லையே.

கூடவே இளவஞ்சி கோபமாகப் போனதன் பின்னால் சக்திவேலர் அங்குப் போனதுதான் காரணமோ என்று தோன்றிற்று. மிதுனை வைக்கச் சொல்லிவிட்டுத் தன் தந்தைக்கு அழைத்து விசாரித்தான்.

“அங்க போறதப் பற்றி அப்பப்பா உங்களிட்ட ஏதும் சொன்னவராப்பா?”

“மிதுனும் சுவாதியும் சின்னாக்கள். அதுவும் ஷோர்ட் பிலிம் எடுக்கிறன் எண்டு சுத்திக்கொண்டு திரிஞ்ச மிதுனைப் பிடிச்சு அங்க விட்டிருக்கிறம். என்ன செய்யினம் எண்டு பாத்துக்கொண்டு வரப்போறன் எண்டு அண்டைக்குச் சொன்னவர் தம்பி. ஆனா, அதுக்குப் பிறகு ஒண்டும் சொல்லேல்ல.” மகன் ஏன் இதைக் கேட்கிறான் என்று விளங்காதபோதும் தனக்குத் தெரிந்ததைச் சொன்னார் பிரபாகரன்.

இப்போது இளவஞ்சி போனதற்கும் அவருக்கும் நிச்சயமாகத் தொடர்புண்டு என்று உறுதியாகத் தெரிந்துபோயிற்று. அதன் பிறகு அவன் தாமதிக்கவில்லை. பிரபாகரனின் காரை எடுத்துக்கொண்டு தானும் புறப்பட்டான்.

ப்ளுடூத்தை காதில் கொழுவிக்கொண்டு திரும்பவும் மிதுனுக்கு அழைத்து, தையல்நாயகியில் நடப்பதைப் பற்றி விசாரித்தான். அப்போதுதான் சக்திவேல் ஐயா தையல்நாயகியின் வரவு செலவு முதற்கொண்டு அது இயங்கும் விதம் அனைத்தையும் தோண்டித் துருவி விசாரித்திருக்கிறார் என்று தெரியவந்தது.

அவர் மீது கோபம் எழுந்த அதே நேரத்தில் இவை எல்லாம் நிச்சயம் இளவஞ்சியின் காதுக்கும் வந்திருக்கும் என்று கணித்தான். ஆனாலும் கோபமாகவேனும் அவனிடம் அவள் கேட்டுக்கொண்டு வரவில்லை.

ஆனால், உள்ளுக்குள் நிச்சயம் உடைந்துபோயிருப்பாள். அவளின் தனித்துவத்தையும், அது வரும் வழியையும் இவர்கள் அறிந்துகொண்டு, அதை இவர்களின் தொழிலில் புகுத்தினால் தையல்நாயகி மொத்தமாக அடிபட்டுப் போகும்.

இதே நிலை அவனுக்கு வந்தால் விடுவானா? மனம் கனக்க, “வேற என்ன செய்தவர்? அதுவும் இண்டைக்கு?” என்று குறிப்பாக இன்றைய நாளைக் குறித்து வினவினான்.

“அது அண்ணா…” அவன் தயங்க, “எதையும் மறைக்க நினைக்காத மிதுன். இவ்வளவு காலமும் அவே ஆரோ, நாங்க ஆரோ. இனி அப்பிடி இல்ல. அவே எங்கட சொந்தம். நாங்க அவேன்ர சொந்தம். ரெண்டு வீட்டு மரியாதையும் மானமும் எந்தக் காரணத்துக்காகவும் போயிடக் கூடாது. அதால ஒழுங்கா உண்மைய சொல்லு!” என்று அதட்டினான்.

அதன் பிறகு மிதுன் தயங்கவில்லை. உண்மையில் ஆடைத் தொழிற்சாலை பற்றி அரிச்சுவடி கூட அவனுக்குத் தெரியாது. நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கும் மனநிலையோடு அல்லாடும் சுவாதியை, அவள் வயிற்றில் இருக்கும் அவன் குழந்தையை, குழப்பத்துடன் இருக்கும் இரு வீட்டு நிலை எல்லாம் சரியாகும் வரையில் எதையும் குழப்ப வேண்டாம் என்கிற முடிவோடுதான் அவன் தையல்நாயகிக்குப் போய்வருவதே.

அப்படியான அவனுக்கே சக்திவேலரின் செய்கை உறுத்தியதில், “அண்ணா அது தையல்நாயகி அம்மான்ர ஃபோட்டோ வாசல்ல இருந்தது. நீங்களும் பாத்திருப்பீங்க எண்டு நினைக்கிறன். அதை எடுத்திட்டார் அப்பப்பா. அதுக்குப் பதிலா இனி அவரின்ர போட்டோவை வைக்கப்போறாராம். பெயரையும் மாத்தப்போறாராம்.” என்றதும் சட்டென்று பிரேக்கை அழுத்தி காரை நிறுத்தியிருந்தான் நிலன்.

தையல்நாயகியில் தையல்நாயகிக்கே இடமில்லை என்றால் என்ன இது? ஒரு பெண் படாத பாடெல்லாம் பட்டு, தன் மொத்த வாழ்நாட்களையும் அதற்காய்ச் செலவழித்து, ஒரு தொழில் நிறுவனத்தை வளர்த்துவிட, குறுக்குவழியில் புகுந்து மொத்தமாக வாரிச் சுருட்டிக்கொள்ள நினைப்பதெல்லாம் என்னமாதிரியான செய்கை?

தனக்குள் வெட்கிப்போனான் நிலன். இனி எப்படி இளவஞ்சியின் முகம் பார்ப்பான்? என்ன நினைப்பாள் அவர்களைப் பற்றி? அவரைத் தெய்வமாகவே எண்ணித் தினமும் வணங்குவாள் என்று விசாகன் மூலம் அறிந்திருந்தான். அப்படியானவரின் புகைப்படத்தைத் தூக்கி எறிவது என்றால்?
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அதுதான் அவளுக்கு அவ்வளவு கோபம் வந்திருக்கிறது. நிச்சயம் இதைச் சும்மா விடமாட்டாள் என்று விளங்க, அவள் அங்கே வந்தால் தன்னிடம் தெரிவிக்கும்படி சொன்னான். கூடவே சக்திவேலரை அழைத்துக்கொண்டு அப்போதே அங்கிருந்து புறப்படும்படியும் சொல்லிவிட்டு குணாளன் வீட்டுக்குக் காரை விட்டான்.

*****

வெளிப்பார்வைக்கு மிகுந்த அமைதியாகத் தெரிந்தார் குணாளன். ஆனால், அவருக்குள் நடந்துகொண்டிருப்பவை மிகப்பெரும் போராட்டம். யாரிடமும் பகிர முடியாத, அவரோடு மடிந்துவிட வேண்டும் என்று நினைக்கிற பல பொல்லாத இரகசியங்களை தனக்குள் வைத்து அல்லாடிக்கொண்டிருந்தார்.

அதோடு சேர்த்து இளவஞ்சியின் முற்றிலுமாக ஒதுக்கம் அவரைப் போட்டு வாட்டியது. அன்று விருந்திற்கு வந்துவிட்டுப் போனதிலிருந்து அவள் இந்தப் பக்கம் வரவும் இல்லை.

என்றும்போல் அன்றும் அவளை எண்ணிக் கவலையுற்றவாறு அவர் அமர்ந்திருக்க, புயலின் வேகத்தோடு உள்ளே நுழைந்தாள் இளவஞ்சி.

அவளைக் கண்டதும் அவர் முகம் பூவாக மலர்ந்து போயிற்று.

“அம்மாச்சி, இப்பதானம்மா என்ர பிள்ளை என்னைப் பாக்க வரவே இல்லை எண்டு கவலைப்பட்டுக்கொண்டு இருந்தனான். அதுக்கிடையில கண்ணுக்கு முன்னால வந்து நிக்கிறீங்க.” என்றார் குழந்தையைப் போலப் பூரித்துக்கொண்டு.

ஆனால், அவள் அவரை உணரும் நிலையில் இல்லை. “நான்தான் நீங்க பெத்த மகள் இல்ல. கடனைத் தீத்துப்போட்டுப் போ எண்டு விட்டுட்டீங்க. ஆனா அந்த மனுசி உங்களைப் பெத்த தாய்தானே? அவாவையும் விட்டுடீங்களா? தையல்நாயகிய அவ்வளவு ஈஸியா நானும் விடமாட்டன் எண்டு அண்டைக்கு என்னவோ பெருசா சொன்னீங்க. இண்டைக்கு உங்களால என்ன செய்ய முடிஞ்சது? இதுக்குத்தானா அப்பம்மா அந்தப்பாடு பட்டுத் தையல்நாயகிய வளத்தவா? இப்பிடி எல்லாம் நடக்கும் எண்டு தெரிஞ்சுதானே இந்தக் கலியாணம் எல்லாம் வேண்டாம் எண்டு சொன்னனான். கேட்டீங்களா?” என்று தன் மனத்தின் கொதிப்பை எல்லாம் அவரிடம் தங்குதடையின்றிக் கொட்டினாள்.

குணாளனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. என்னவோ நடக்கக் கூடாத எதுவோ நடந்துவிட்டது என்று மட்டும் புரிந்தது. நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பிக்க, “என்னம்மா சொல்லுறீங்க? எனக்கு ஒண்டும் விளங்கேல்ல பிள்ளை. கோவப்படாம சொல்லுங்கோ.” என்றார் தவிப்புடன்.

“என்ன தெரியாது உங்களுக்கு? சக்திவேலர் தையல்நாயகிக்கு வாறது தெரியாதா? இல்ல, அப்பம்மான்ர போட்டோவை எடுத்துப்போட்டு அவரின்ர போட்டோவை வைக்கப் போறாராம். பெயரையும் மாத்தப் போறாராம். அது தெரியாதா?” என்றவள் சீற்றத்தில் நெஞ்சைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டார் அவர்.

அவர் மனம் கொதித்தது. கோபம் கொண்டு சினந்தது.

அப்போது சரியாக அங்கே வந்த சுவாதியைப் பார்த்தவரின் விழிகளில் வெறுப்பும் கசப்பும்.

அவள் தலை தானாகக் குனிந்தது.

“அக்கா சொல்லுறது உண்மையா?”

பதில் சொல்லும் வகையறியாது நின்றாள் அவள்.

“சொல்லு சுவாதி! அக்கா சொன்னது எல்லாம் உண்மையா?” இயலாத அந்த நிலையிலும் ஆத்திரத்திலும் ஆவேசத்திலும் அவர் குரல் உயர்ந்தது.

“ஐயோப்பா, கொஞ்சம் அமைதியா கதைங்கோ. இப்பிடி உணர்ச்சிவசப்படுறது உங்களுக்குக் கூடாது!” என்றுகொண்டு ஓடி வந்தார் ஜெயந்தி.

“உனக்கு இதைப் பற்றி ஏதும் தெரியுமா?” என்றார் அவரிடம்.

பதறிப்போனார் ஜெயந்தி. “அந்த நல்லூரான் சத்தியமா தெரியாது.” என்றார் அவசரமாக.

குணாளனின் பார்வை திரும்பவும் சின்ன மகளிடம் தாவிற்று.

அவளைத் துரத்திக்கொண்டிருப்பது ஒருவித அவமானம். திருமணத்திற்கு முதலே வயிற்றில் குழந்தை என்கிற விடயம், மிதுன் வீட்டினரை நிமிர்ந்து பார்க்க அவளை விடுவதில்லை. அதுவும் ஜானகி பாசமாகப் பேசுவதுபோல் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவளைக் குத்தீட்டியாய்க் குத்திக்கொண்டிருந்தது.

இப்படி இருக்கையில்தான் தையல்நாயகிக்குச் சக்திவேல் ஐயா வந்தார். வந்தவர் ஒவ்வொன்றாக அவளிடம் கேட்டு கேட்டு அறிந்துகொண்டு, ஒவ்வொரு மாற்றங்களாகக் கொண்டு வருகையில் அதைத் தடுக்கும் தைரியம் அவளுக்கு இல்லாது போயிற்று.

எப்படியாவது அவருக்குப் பிடித்ததுபோல் நடந்து, அந்த வீட்டின் மதிப்பு மரியாதையைப் பெற்றுவிட மாட்டோமா என்கிற நினைப்பில்தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தாள். வீட்டில் கூட யாரிடமும் சொல்லவில்லை.

ஆனால் இன்றைக்கு அவர் அவளின் அப்பம்மாவின் படத்தைக் கழற்றியபோது, தையல்நாயகி ஆடைத் தொழிற்சாலை முற்றிலுமாக வெறுமையாகிப் போனதுபோல் ஆயிற்று அவளுக்கு.

அப்போதுதான் தான் என்ன செய்து வைத்திருக்கிறோம் என்பதும், அதன் பாரதூரம் என்ன என்பதும், தான் அமைதியாக இருந்ததினால் சக்திவேல் ஐயா எதுவரைக்கும் துணிந்துவிட்டார் என்பதும் புரிந்தன. நொடி நேரம் கூட அங்கிருக்க முடியாமல் ஓடி வந்துவிட்டாள்.

வந்தவள் வீட்டினரிடம் சிக்கிக்கொண்டாள்.

“சொல்லு சுவாதி. இதெல்லாம் நடக்கேக்க நீயும் அங்கதானே இருந்தனி? கொஞ்சம் கூடவா உனக்கு மனம் துடிக்கேல்ல. நீ இந்த வீட்டுப் பிள்ளைதானே? அந்த மனுசி உன்ர அப்பம்மாதானே? அந்தப் பாசமும் கோவமும் உனக்கு வரேல்லையா?” என்று அவளிடமும் கொதித்தாள் இளவஞ்சி.

அவள் சத்தமே போடவில்லை.

“எப்பிடி அப்பா இப்பிடி விட மனம் வந்தது உங்களுக்கு? நான் இல்லாட்டியும் நீங்க எல்லாரும் இருக்கிறீங்க எண்டு நம்பித்தானே விட்டுட்டுப் போனனான். மொத்தமா அழிச்சிட்டிங்களே!” என்றவளின் அழிச்சிட்டீங்களே என்ற வார்த்தையில் விழுக்கென்று நிமிர்ந்தார் குணாளன்.

என்னென்னவோ காட்சிகள் எல்லாம் கண்முன்னே மின்னி மறைந்தன. அவரின் இரத்தம் கொதித்தது. சினமும் சீற்றமும் அவர் நெஞ்சில் எரிமலையெனப் பொங்கிற்று. இறந்தகாலத்திற்கான நியாயத்தை வாங்கிக்கொடுக்கிறேன் என்று என்ன செய்துவிட்டார்?

சக்திவேலரின் இந்த ஆணவமும் அகங்காரமும்தானே அவர் தங்கையின் உயிரைப் பறித்ததும். இனியும் பொறுப்பதில் அர்த்தமே இல்லை.

அவரைப் பிடிக்க வந்த மனைவியின் கையைக் கூட உதறிவிட்டு, தானே மெல்ல மெல்ல நடந்துபோய், ஒரு சிறு கொப்பி(நோட் புக்) போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து இளவஞ்சியிடம் கொடுத்தார்.

கை தானாக அதை வாங்கிக்கொண்டாலும் அட்டை கிழிந்த, இலேசாகக் கறையான் அரித்த அந்தக் கொப்பியையும் அவரையும் மாறி மாறிப் பார்த்தாள் அவள்.

“நடந்தது எல்லாம் முடிஞ்சதாவே இருக்கட்டும் எண்டு நினைச்சனம்மா. வாழ வேண்டிய பிள்ளைகளின்ர மனதில தேவை இல்லாம கசப்பையும் வெறுப்பையும் விதைக்க வேண்டாம் எண்டு நினைச்சன். ஆனா…” என்றவர் நிறுத்திவிட்டு அவள் முகத்தைத் தன் கைகளில் தாங்கினார்.

கண்ணீரால் நிறைந்துகிடந்த விழிகளால் அவளை நோக்கி, “நீங்க என்ர சொந்த மகள் இல்லதானம்மா. ஆனா அது மட்டும்தான் உண்மை. மற்றும்படி நீங்க இந்த வீட்டுப் பிள்ளைதான். இந்த வீட்டுப் பிள்ளை மட்டுமில்லை அந்த வீட்டுப் பிள்ளையும்தான். இன்னுமே சொல்லப்போனா ரெண்டு வீட்டிலயும் உங்களுக்கு இல்லாத உரிமை வேற ஆருக்கும் இல்லை. என்ர தங்கச்சி வாசவிக்கும் சக்திவேல் ஐயான்ர மருமகன் பாலகுமாரனுக்கும் பிறந்த பிள்ளை நீங்க.” என்றார் குணாளன்.
 
Last edited:

sarjana

Member
இந்த கெழட்டு பூனை சக்திவேலருக்கு பெரிய சூடா கொடுக்க வேண்டும்.
எப்படியும் வயதான காலத்தில் அவரை எல்லோரும் ஒதுக்கி வைப்பது உறுதி
 
Top Bottom