• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 4



அவன் அதிர்ந்து நிற்பது புறக்கண்ணில் விழுந்தாலும் அதைப் புறக்கணித்து மூன்றாவது மாடிக்கு ஏறினாள் இளவஞ்சி. ஒன்றுமே நடவாதது போன்ற அவனின் பேச்சும் நடத்தையும் அந்தளவில் அவளுக்குள் எரிச்சலை மூட்டியிருந்தன.

அவளோடு பேச வேண்டுமாமே! வரட்டும்!

மூன்றாவது மாடியில்தான் பிரபாகரனும் மிதுனும் நின்றிருந்தார்கள். அவர்கள் இறுக்கமற்று இலகுவாகப் பேசிச் சிரித்தபடி நிற்பதை வைத்து, நகரசபைத் தலைவர் புறப்பட்டுவிட்டார் என்று கணித்தாள் இளவஞ்சி.

அன்றைய நாளுக்கான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாலோ என்னவோ அந்தத் தளத்தில் எந்த உடைகளும் இல்லை. ஒரு புறமாக விதம் விதமான உணவு வகைகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்க, அவரவர் அவரவருக்கு விருப்பமானதை எடுத்துச் சாப்பிடுவதுபோல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்படியே வட்ட வட்ட மேசைகள் போடப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் நால்வர் இருந்து உண்பதுபோல் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

நேராக உணவு வைக்கப்பட்டிருக்கும் இடம் நோக்கி நகர்ந்த இளவஞ்சி திரும்பி விசாகனைப் பார்த்தாள். அடுத்த கணமே, “மேம்!” என்று அவள் முன்னே வந்து நின்றான் அவன்.

“நீங்களும் சாப்பிடுங்க. சாப்பிட்டதும் வெளிக்கிடுவம்.” என்று அவனிடம் சொல்லிவிட்டுத் தனக்குத் தேவையானவற்றைப் போட்டு எடுத்துக்கொண்டு சென்று அமர்ந்தாள்.

விசாகணும் தனக்கான உணவோடு வேறொரு மேசையில் சென்று அமர்ந்துகொண்டான்.

அவளைத் தனியாகப் பிடிப்பதற்கென்றே காத்திருந்த இருவர் வந்து அவளெதிரில் அமர்ந்தனர். புடவைக் கடைக்காரர்கள். முக்கியமாக அவளிடம் கொள்வனவு செய்பவர்கள்.

இயல்பு போன்று நல விசாரிப்புகள் எல்லாம் கடந்தபிறகு, “இளவஞ்சி, உடனடியா பலன்ஸ் எல்லாம் பே பண்ணச் சொல்லி மெயில் வந்திருக்கு. அதப் பற்றி உங்களோட கதைக்க ட்ரை பண்ணினனான். உங்கட பிஏ நீங்க பிஸியாம் எண்டு சொன்னவா. எப்பவும் ஆறு கிழமை டைம் தந்து பே பண்ணுறதுதானே வழமை. அதே மாதிரியே இந்த முறையும் டைம் தந்தா நல்லாருக்கும்.” என்றார் அவர்களில் ஒருவர்.

“எப்பவும் மாதிரி நான் நடக்கிறதுக்கு நீங்க எப்பவும் மாதிரி இல்லையே.” அவளை விடச் சற்றே வயதில் பெரியவராக இருந்தாலுமே எந்தப் பணிவும் குழைவும் இல்லாமல் நேராகவே சொன்னாள்.

“இல்…லையே. எதுவும் மாறேல்லையே. உங்கட அப்பம்மான்ர காலத்தில இருந்து இப்பவரை எல்லாமே அப்பிடியேதானே இருக்கு.” தையல்நாயகியின் பெயரை இழுத்தால் அவள் கொஞ்சம் மசிவாள் என்றெண்ணிச் சொன்னார் அவர்.

“ஓ! அதான் எங்களிட்ட வாற ஓர்டர் குறையுது. அதுக்குப் பதிலா சக்திவேல் பிராண்ட் உடுப்புகள் உங்கட கடைல தொங்குதா?” என்றவள் கேள்வியில் அதிர்ந்து விழித்தார் மனிதர்.

வேகமாக அவர் சமாளிக்க முயல, அதற்கு இடம் கொடாமல் தன் கைப்பேசியில் ஒரு புகைப்படத்தை எடுத்து அவர் புறமாகத் திருப்பி வைத்தாள்.

அதில் சக்திவேல் பிராண்ட் பெண்கள் ஆடைகள் அவர் கடையில் தொங்கிக்கொண்டிருந்தன.

கையும் களவுமாகப் பிடிபட்டுக்கொண்ட நிலை அவருக்கு. “இல்ல அது சாம்பிலுக்கு…” என்று இழுத்தார்.

“ஓ! நல்லா போகுதா?”

இரண்டு சொற்கள் கொண்ட ஒற்றைக் கேள்வி. அதைவிடக் கூர்மையாக அவரைக் கூறுபோட்ட அவள் பார்வை. இரண்டினாலும் பதிலே வராமல் திணறினார்.

“நீங்க ஒண்டு செய்ங்க. என்ர பேமெண்ட்ட முடிச்சுவிட்டுட்டு முழு ஓடரையும் அங்கயே குடுங்க!” என்றாள் அவள் பார்வையில் தீர்மானத்தோடு.

“இல்ல அது…” என்று ஆரம்பித்தவருக்கு அவளை எப்படி மலையிறக்குவது என்றே தெரியவில்லை.

பெண்களின் உடைகளின் தரத்தில் அவளுடையதை அடித்துக்கொள்ளவே முடியாது. அப்படியிருக்க முழு ஓர்டரையும் சக்திவேலுக்கு மாற்றினால் அவர் கடைதான் படுத்துக்கொள்ளும். அவர்களுடையதில் ஆண்களின் உடைகள் நல்ல தரம். ஆனாலுமே நிலனைப் பகைத்துக்கொள்ள முடியாமல்தான் அவர்களுடையதிலும் கொஞ்சமாக எடுத்தார்.

அது பார்த்தால் அவருக்கே வினையாக முடிந்திருக்கிறது.

“இனி எப்பவும் போல உங்களிட்டயே வாங்கிறன் இளவஞ்சி. பேமெண்ட் டேட்டை மட்டும் பழைய மாதிரியே மாத்திவிடுங்க.” அவரை விடவும் வயதில் சின்ன பெண். அவளிடம் கெஞ்சும் நிலைக்கு ஆளாகிப்போனோமே என்று உள்ளூரக் குறுகியபடி கெஞ்சினார்.

அவள் அசையவில்லை. “சொறி. இனி அது ஏலாது.” முகத்துக்கு நேராகவே மறுத்துவிட்டு மற்றவரைப் பார்த்தாள்.

அவர் ‘லாவண்யா ஆடையகம்’ என்கிற பெயரில் இலங்கை முழுக்கக் கிளைகள் வைத்திருப்பவர். அவருமே இவருடன் சேர்ந்து நிலனிடம் கொள்வனவு செய்தது அவளுக்குத் தெரியும்.

அவருக்கு அனுப்பிவைக்க வேண்டிய ஆர்டரை, ‘மூலப்பொருள்கள் தட்டுப்பாடாக இருக்கிறது’ என்கிற காரணத்தைச் சொல்லி நிறுத்திவைத்துவிட்டு, அவரின் போட்டிக் கடைக்குக் கொடுத்திருந்தாள்.

“அவரை மாதிரி நானும் சாம்பிலுக்குத்தான் எடுத்தனான். இனி எடுக்கமாட்டன்.” அவள் கேட்கும் அவசியமே இல்லாமல் அவசரமாகச் சொன்னார் அவர்.

“அது உங்கட விருப்பம் அங்கிள். ஆனா, சக்திவேல் பிராண்ட் இருக்கிற இடத்தில தையல்நாயகி இருக்காது.”

“விளங்குதம்மா. இனி அப்பிடி நடக்காது. நீங்க சாப்பிடுங்கோ!” என்றுவிட்டு மெதுவாக மற்றவரோடு அவளை விட்டு நகர்ந்தார் மனிதர்.

அவர்களை இப்படி அவளைத் தேடி வர வைத்ததே அவள்தான். அவ்வப்போது அவர்களிடம் கொள்வனவு செய்யும் புடவைக் கடைகளுக்குச் சென்று, விற்பனை எப்படிப் போகிறது, என்ன மாதிரியான உடைகள் நன்றாகப் போகிறது, ட்ரெண்டில் இருப்பவை என்ன, என்ன டிசைன்ஸ் புதிதாக வந்திருக்கிறது போன்ற தகவல்களைத் திரட்டிக்கொண்டு வருவதற்கு என்றே ஒரு குழுவை வைத்திருக்கிறாள் அவள்.

தையல்நாயகி அம்மா ஆரம்ப காலங்களில் அவரே ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி, எது நன்றாகப் போகிறது என்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவற்றையே தானும் தைத்துக் கொடுத்ததாகச் சொன்னதை நினைவில் வைத்து, அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தாள்.

இவர்களைப் போன்றவர்கள் அவளிடம் கொள்வனவு செய்யும் அளவைக் குறைத்தபோதே அந்தக் குழுவை அனுப்பித் தகவல்களை முழுமையாகப் பெற்றுக்கொண்டிருந்தாள்.

அதே நேரத்தில் அவளாக அவர்களைத் தேடிப்போய்ப் பேச முயற்சிக்கவில்லை. அது அவளைக் குறைத்து எடை போடுவதற்கு அடிகோலிவிடும்.

அவர்களை அவளைத் தேடி வர வைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தபோதுதான் நிலன் இந்த விழாவிற்கு அழைப்பு விடுத்தான்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல், அவனால் உண்டான சறுக்கலை அவன் கடை திறப்பு விழாவில் வைத்தே முடிக்கிறேன் என்று திட்டமிட்டுவிட்டாள்.

அதன்படி யாரெல்லாம் அவளிடமிருந்து அந்தப் பக்கம் நழுவிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற லிஸ்டை எடுக்கச் சொல்லி, அதில் இந்த விழாவுக்கு வருவார்கள் என்று கணித்த இவர்கள் இருவரையும் வட்டமிட்டு ஆனந்தியிடம் கொடுத்ததே இவள்தான்.

இவர்கள் கொஞ்சம் பெரும் தலைகள். இவர்களுக்குக் கொடுக்கிற கெடுபிடியால் மற்றவர்களும் சுருண்டுவிடுவார்கள் என்று அவளுக்குத் தெரியும்.

அதே போன்று, அவர்களுக்கு மெயில்களை அனுப்பிய பிறகு, தன்னோடு கதைப்பதற்கு நிச்சயம் முயற்சி எடுப்பார்கள் என்று சொல்லி, அதற்கு அனுமதிக்கவே கூடாது என்று உத்தரவிட்டதும் அவள்தான்.

அவர்கள் அவளை இங்கே நேரில் கண்டு மட்டுமே பேச வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். நெருக்கடியைக் கொடுத்து அவர்களைக் கலங்க வைத்துவிட்டு, அந்தக் கலக்கத்தை நொடியில் தீர்க்க விடக் கூடாது!

ஏனடா தேவை இல்லாத உத்தியோகம் பார்த்தோம் என்று யோசிக்க வைத்து, இனி இப்படியான வேலைகளைச் செய்யவே கூடாது என்கிற நிலைக்கு அவர்களைத் தள்ளுவதற்கு, அவளைத் தொடர்புகொண்டுவிட முடியாமல் தவிக்கும் இந்த இடைப்பட்ட நாள்கள் அவளுக்குத் தேவையாய் இருந்தன.

கடைசியில் அவள் திட்டமிட்டபடியே அவர்களும் வந்து பேசிவிட்டுப் போகிறார்கள்.

சீற்றத்துடன் தனக்குள் சிரித்துக்கொண்டாள் இளவஞ்சி. பெண், அதுவும் இளம் பெண் எப்படியும் விளையாடலாம் என்று நினைத்துவிட்டார்கள் போலும். தரம் மிகுந்த பொருள் அவள் கையில் இருக்கையில் அவள் எதற்கு யோசிக்க? அதுதான் இறங்கி அடித்தாள்.

இத்தனையையும் அங்கே சற்றுத் தள்ளி மற்றவர்களோடு பேசிக்கொண்டிருந்த பிரபாகரன் கவனிக்காததுபோல் கவனித்துக்கொண்டு இருப்பதை அவள் கவனிக்காமல் இல்லை. கவனித்தால் கவனிக்கட்டுமே!

அவள் உண்டு முடியும் தறுவாயில் தனக்கான உணவோடு அவள் முன்னே வந்து அமர்ந்தான் நிலன். இனி இவனா என்று சினம் பொங்க, “உங்கட கடைத் திறப்புவிழாக்கு என்னைத் தவிர வேற ஆரையும் நீங்க கூப்பிடவே இல்லையா?” என்றாள் எரிச்சலை மறையாமல்.

சிறிதாக முறுவலித்து, “அவே எல்லாரையும் கவனிக்க அப்பா, அம்மா, அத்தை, மாமா எண்டு எல்லாரும் இருக்கினம். உன்ன நான்தானே கவனிக்கோணும்.” என்றான் அவன்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
இந்தப் பேச்சிற்கெல்லாம் மயங்க அவள் என்ன பச்சைக் குழந்தையா? “என்ன ட்ரை பண்ணுறீங்க நிலன்?” என்று அவனை நேராகப் பார்த்து வினவினாள்.

“பெருசா என்ன? உன்னோட கதைச்சு, எங்கட கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்ல வைக்க ட்ரை பண்ணுறன்.”

“இதுக்கு உங்கட குடும்பத்து மொத்த உருப்படியும் ஓம் எண்டு சொன்னவையா என்ன?” இதழோரம் இலேசாக வளைய வினவினாள்.

“நீ என்ன என்ர மொத்தக் குடும்பத்தையுமா கட்டப்போறாய்? என்னத்தானே? எனக்கு உன்னைப் பிடிச்சா காணாதா?”

“ஓ அப்ப உங்களுக்கு என்னைப் பிடிக்கும்?”

“ஏன் பிடிக்காமப் போக? வடிவான, அறிவான, புத்திசாலியான உன்னை எப்பிடிப் பிடிக்காம இருக்கும்?” இளஞ்சிரிப்புடன் இலகுவாக வினவினான் அவன்.

அதற்கு ஒன்றும் சொல்லாது அவனையே பார்த்தாள் அவள்.

அந்தப் பார்வை அடி நெஞ்சையே சென்று துளைப்பது போலிருக்க, “வஞ்சி, என்ன பார்வை இது?” என்றான் உணவில் கவனம்போல் காட்டி.

“திரும்பவும் கேக்கிறன். என்ன ட்ரை பண்ணுறீங்க நிலன்?”

“எனக்கு உண்மையாவே உன்னைக் கட்ட விருப்பம் இருக்கு வஞ்சி.” அவள் முகம் பார்த்துச் சொன்னான் அவன்.

“ஆனா எனக்கு இல்லையே!”


“அப்பிடி எப்பிடி இல்லாமப் போகும்? கம்பஸ்ல சீனியர் சீனியர் எண்டு எனக்குப் பின்னால சுத்தினவளுக்கு என்னைப் பிடிக்காதா? என்னை உனக்குப் பிடிக்கும் எண்டு அந்த நேரமே எனக்குத் தெரியும்.” என்ற அவனின் பதிலில் உள்ளே சுருக்கென்று தைத்தது.

கூடவே, இதை நிச்சயம் சொல்லிக்காட்டுவான் என்று அவள் கணித்து வைத்தது போலவே பேசுகிறவன் மீது கடுஞ்சினம் பொங்கிற்று.

“என்ன, இப்பிடி நீங்க கேட்டதும் ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு அப்பிடியெல்லாம் இல்லை எண்டு சொல்லுவன் எண்டு நினைச்சீங்களா?” என்று கேட்டுவிட்டு, “அந்த வயதில வாட்டசாட்டமா, கண்ணைக் கவருற மாதிரி, கம்பஸே ஹீரோவா கொண்டாடின ஒருத்தரை நான் பாத்தது உண்மைதான். அவருக்குப் பின்னால சுத்தினதும் உண்மைதான். அதெல்லாம் அந்த வயதில வந்த சின்ன ஈர்ப்பு. ஆனா வெளித்தோற்றம் அழகா இருந்தா மனதும் அழகாவே இருக்கும் எண்டு நினைக்க நான் என்ன இன்னும் இருவது வயசுப் பிள்ளையா?” என்றாள் சின்ன முறுவலோடு.

முகம் இறுக ஒரு கணம் அவளையே இமைக்காது பார்த்துவிட்டு, “மனம் அழுக்கா இருந்திருந்தா என்னைச் சுத்தினை உன்னை அந்த நேரம் நான் என்னவும் செய்திருக்கலாம் வஞ்சி.” என்றான் அவன் அழுத்தமாய்.

“சோ அப்பிடிச் செய்யாததாலேயே நீங்க நல்லவன். அப்பிடியா?” எள்ளலாக அவள் கேட்க, இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று பார்த்தான் நிலன்.

“இன்னொரு விசயம். என்னதான் உங்களுக்குப் பின்னால சுத்தினாலும் நீங்க சொல்லுற அளவுக்கெல்லாம் உங்களுக்கு இடம் குடுத்திருக்க மாட்டன் நிலன். நீங்க ஆர் எண்டு தெரிஞ்ச நிமிசத்தில இருந்து உங்களத் திரும்பியே பாக்காம இருந்தவள் நான்.” என்றாள் நிமிர்வாக.

“நான் ஆர் எண்டு தெரியாமயே இருந்திருந்தாலோ, இல்ல உண்மையாவே நான் சக்திவேல் வாரிசா இல்லாம இருந்திருந்தாலோ அந்த ஈர்ப்புக்கு என்ன நடந்திருக்கும் வஞ்சி?” என்று கேட்டவனையே இமைக்காது பார்த்தாள் இளவஞ்சி.

நிச்சயம் உயிர் நேசத்தில்தான் முடிந்திருக்கும். அவளால் அதை அறுதியிட்டுச் சொல்ல முடியும்.

இன்று அதையெல்லாம் தாண்டி வந்த பக்குவப்பட்ட பெண் அவள். காதல் மட்டுமே வாழ்க்கை என்று நினைக்கிற இடத்தில் அவள் இல்லை. வாழ்வின் ஒரு பகுதிதான் காதல் என்கிற தெளிவும் உண்டு. அதே போன்று, முழு மனத்தோடுதான் தனக்கான துணை சரியான ஒருவனாக இருக்க வேண்டும் என்று தேட ஆரம்பித்திருக்கிறாள்.

ஆனால் அன்று, அந்த ஈர்ப்பு நீடித்திருந்தால் நிச்சயம் காதலில்தான் முடிந்திருக்கும். அத்தனை ஆழமாயும் தீவிரமாயும் அவன் மீதான பிடிப்பு அவளுக்குள் விழுந்திருந்தது.

யாழ்ப்பாணம், வவுனியா என்று எங்கு அவளைப் படிக்க அனுப்பினாலும் இவர்கள் பார்வையில் பட்டுவிடச் சாத்தியம் உண்டு என்றுதான், அவளைப் பிரிந்திருப்பது நெஞ்சையே அறுக்கும் வாதையைத் தந்தபோதும், மட்டக்களப்புப் பல்கலையில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டிருந்தார் தையல்நாயகி.

அவரின் கெட்ட காலமா, இல்லை இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமா தெரியாது. அங்கே இளவஞ்சி முதலாமாண்டு மாணவியாகச் சென்று சேர்ந்தபோது நிலன் கடைசி வருட மாணவனாக இருந்தான்.

என்னதான் அந்த வயதிலேயே தொழிலில் ஆர்வம் வந்துவிட்டிருந்தபோதிலும் அந்த வயதிற்கே உரிய ஆசாபாசங்களும் அவளுக்குள் இருந்திருக்கின்றன. அது அவரோடு இருந்தவரை நடந்ததில்லை.

அதுவே மட்டக்களப்பில் தனியாகத் தங்கியிருந்து படிக்க ஆரம்பித்தபோது, அதுவரை காலமும் அவளுக்குள் இருந்த குறும்புத்தனங்களும் விளையாட்டுக் குணங்களும் முழுமையாக வெளியே வர ஆரம்பித்திருந்தன.

அதனால் அவனிடம் அவள் விட்ட சேட்டைகளுக்கு அளவேயில்லை.

அவனைப் பார்த்த முதல் நிமிடத்தில் இருந்தே அவளுக்குள் பாதிப்புத்தான். அவனையே சுற்றி சுற்றி வருவது, வலியப் போய்ப் பேச்சுக்கொடுப்பது, கேண்டீனில் அவனுக்குப் பிடித்த உணவை வாங்கிக்கொடுப்பது, தன்னைக் கவனித்து அலங்கரித்துக்கொண்டு வந்து அவனைக் கவர முயல்வது, அவன் கிரவுண்டில் விளையாடினால் போயிருந்து பார்த்து, கை தட்டி ஊக்கப்படுத்துவது என்று அத்தனை பைத்தியக்காரத்தனங்களையும் தாராளமாகப் பார்த்திருக்கிறாள்.

அவனுக்கு அவளிடம் அந்த மாதிரி எந்த வகையான ஈடுபாடும் இல்லை என்று அன்றைய இளவஞ்சிக்கே தெரியும். ஆனாலும் அவன் மனத்தில் இடம் பிடித்துக் காட்டுகிறேன் என்று அவனை விடாமல் சுற்றியிருக்கிறாள்.

ஒருமுறை எதற்கோ அவனை அழைத்துச் செல்லச் சக்திவேல் நேரிலேயே வந்தபோதுதான் முகத்தில் சுடுநீரை அடித்தது போன்று அதிர்ந்து நின்றுவிட்டாள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
தையல்நாயகி மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்தவர். அதனாலேயே அத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தபோதிலும் பல்கலைக்கு வருகிற வரையில் அவளிடம் கைப்பேசியோ, கணணியோ இருந்ததில்லை. தேவைக்கு அதுவும் அலுவலகத்தில் அவர் முன்னால் அங்கிருக்கும் கணணியை அவள் பயன்படுத்தலாம். அவ்வளவே. அதனாலேயே அப்பம்மாவின் தொழில் எதிரியான சக்திவேலை அறிந்து வைத்திருந்த இளவஞ்சிக்கு நிலனைப் பற்றித் தெரியாமல் போனது.

சக்திவேலின் முன்னேயே சென்று நின்று ‘யார் இவர்?’ என்று அவனிடம் கோபமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, “மறச்சிட்டீங்க என்ன?” என்று சீறிவிட்டு வந்தவள் அதன் பிறகு அவன் புறம் திரும்பவே இல்லை.

அவனும் தேடிவந்து பேச முயற்சிக்கவில்லை. விட்டது தொல்லை என்று நினைத்தது ஒரு காரணமென்றால், அப்படி அவனிடம் கோபமாக வந்து பேசிவிட்டுப் போன அவளை யார் என்று கேட்டுத் தெரிந்துகொண்ட சக்திவேல், அவள் பக்கம் திரும்பவே கூடாது என்று அவனிடம் கடுமையாக எச்சரித்துச் சென்றதும் இன்னொரு காரணமாயிற்று.

அவள் எப்படி அப்பம்மாவின் செல்லப் பேத்தியோ அப்படியே அவன் அவனுடைய அப்பப்பாவின் செல்லப் பேரன்.

“சொல்லு வஞ்சி, அந்த ஈர்ப்பு எங்க வந்து நிண்டிருக்கும்?” விடாமல் திரும்பவும் கேட்டான் அவன்.

உண்மை என்று அவன் நினைக்கிற ஒன்றை எப்படியாவது அவள் வாயால் வரவழைத்துவிட அவன் முயல்வது போலிருக்க, அவளுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலாயிற்று.

அதில், “காலத்துக்கும் எனக்கு உண்மை தெரியாம இருந்திருக்கப் போறதும் இல்ல, நீங்க சக்திவேலரின்ர வாரிசு எண்டுறது மாறுற விசயமும் இல்ல. அதால எப்பயா இருந்தாலும் அது ஒண்டுமில்லாமத்தான் போயிருக்கும்.” என்று சொல்லிவிட்டு, எழுந்துபோய் உண்டு முடித்த தட்டினை அதற்கான இடத்தில் வைத்துவிட்டுக் கையைக் கழுவினாள்.

பின்னால் அவனும் வந்து கையைக் கழுவிவிட்டு, “வா, இஞ்சயே நிக்காம கீழ போவம்.” என்று அழைத்துக்கொண்டு போனான்.

அவளுக்கும் இன்றைக்கு இதைப் பேசி முடித்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றிவிட மறுக்கவில்லை.

இரண்டாவது தளத்திற்கு வந்ததும், “ஆனா எனக்கு விளங்காத விசயம், உங்களுக்குப் பின்னால சுத்தின நானே நீங்க எனக்கு வேண்டாம் எண்டு விலகி வந்திட்டன். அப்பிடியிருக்க அப்பவே என்னில அப்பிடி எந்த அபிப்பிராயமும் இல்லாம இருந்த நீங்க, ஏன் திடீரெண்டு என்னத்தான் கட்டியே தீருவன் எண்டு நிக்கிறீங்க? தையல்நாயகி வளந்துகொண்டு போறதப் பாக்கப் பயமா இருக்கா? தொழில்ல நேரடியா மோதி வெல்லேலாது எண்டு இப்பிடி ஒரு குறுக்கு வழி முயற்சியா? ஆனா மிஸ்டர் சக்திவேலர் என்னைப் பாக்கிற பார்வையப் பாத்தா இதில அவருக்கு விருப்பம் இல்லை போல இருக்கே.” என்றாள் நேராகவே.

இந்தக் கொஞ்ச நேரத்திற்குள்ளேயே சக்திவேலரைக் கணித்துவிட்டவளின் புத்திகூர்மை இலேசாகத் திகைக்க வைத்ததோடு சேர்த்து, அவள் கேட்டதில் இருந்த உண்மையும் சுட்டுவிட, “வஞ்சி! என்ன பேச்சு இது? அப்பப்பாக்கு எத்தின வயசு? அவரை மரியாதை இல்லாமப் கதைப்பியா?” என்று அதட்டினான்.

“நான் எங்க மரியாதை இல்லாமக் கதைச்சனான். மிஸ்டர் சக்திவேலர்ர்ர்ர் எண்டு போதுமான மரியாதை தந்துதான் கதைச்சனான்.”

“ப்ச் அத விடு! ஏன் இப்பிடி வேண்டவே வேண்டாம் எண்டு நிக்கிறாய். அதச் சொல்லு!”

“நான்தான் வேணுமெண்டு நீங்க ஏன் நிக்கிறீங்க? உங்களுக்கு இந்த ஊர்ல வேற பொம்பிளைகளே இல்லையா?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.

அவனால் அவன் நிலையை அவன் வீட்டிலேயே வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்கையில் அவளிடம் எப்படிச் சொல்லுவான்?

அதில், “நான் கேட்டதுக்கு முதல் நீ பதிலச் சொல்லு!” என்று மெலிதாக அதட்டினான்.

அவனையே ஒருமுறை பார்த்துவிட்டு, “பாம்பு எத்தின முறை செட்டைய மாத்தினாலும் பாம்பு பாம்புதான் நிலன்.” என்றாள் நிதானமாக.

“வஞ்சி!”

“அண்டைக்கு நீங்க ஆர் எண்டு உண்மையச் சொல்லாம ஏமாத்தினீங்க. இண்டைக்கு நான் பேசி முடிச்ச கார்மெண்ட கூடக் காசு குடுத்து வாங்கி இருக்கிறீங்க. நடுவுக்க என்ர கஷ்டமர்ச உங்கட பக்கம் இழுக்கப் பாக்கிறீங்க. இப்பிடி என்னை நசுக்க நினைக்கிற ஒருத்தர் எனக்கு வேண்டாம் நிலன். எனக்கு நிம்மதியான, சந்தோசமான, அமைதியான ஒரு வாழ்க்கை வேணும். அதுக்கு நீங்க எனக்குப் பொருந்தி வர மாட்டீங்க.” என்றவளைக் கோபத்துடன் முறைத்தான் அவன்.

“கம்பஸ்ல நான் உனக்கு சீனியர், நீ எனக்கு ஜூனியர். அவ்வளவுதான் எனக்கும் உனக்குமான தொடர்பு. எனக்குப் பின்னாலேயே சுத்துற உன்ர குணமும் அப்ப எனக்கு ஒருவித எரிச்சலத்தான் தந்திருக்கு. அத நான் உன்னட்ட நேரடியாக் காட்டியும் இருக்கிறன். இப்பிடிப் பின்னால சுத்தி படிப்பை விட்டுடாத எண்டு சொல்லியும் இருக்கிறன். இதத் தாண்டி உன்னட்ட வந்து என்னப் பற்றிச் சொல்லோணும் மாதிரி எனக்கு இருக்கேல்ல. அப்பிடிச் சொன்னா நீ என்னை விட்டு ஓடியிருப்பாய் எண்டு தெரிஞ்சிருந்தா, முதல் வேலையா அதத்தான் செய்திருப்பன். இதுதான் அப்ப இருந்த என்ர மனநிலை.”

அவளால் இதை முழுவதுமாக ஒப்ப முடியவில்லை. தொழில் போட்டியால் இரு குடும்பத்திற்கிடையேயும் நல்ல நிலை எந்தக் காலத்திலும் இருந்ததேயில்லை. அப்படியிருக்க அவன் அதைத் தன்னிடம் ஏதோ ஒரு வகையில் அறிய வைத்திருக்க வேண்டும் என்றே எண்ணினாள்.

அதே நேரத்தில் அவளே தூக்கிப் போட்டுவிட்ட, கடந்து வந்துவிட்ட ஒன்றைப் பற்றி இன்றைக்குப் பேசுவதில் அர்த்தமே இல்லை என்று தோன்றிற்று.

அதில் அதற்கு அவள் எதையும் சொல்லப்போகவில்லை.

ஆனால், “இது தொழில் வஞ்சி. முடிஞ்சவரை கஸ்டமரை பெருக்க நினைக்கிறதும், தொழிலைப் பெருப்பிக்கப் பாக்கிறதும் சாதாரணமான ஒண்டு. அதுக்காக வாழ்க்கைலயும் அப்பிடித்தான் இருப்பன் எண்டு நினைப்பியா?” என்று கேட்டவனுக்குப் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“அது பிழை இல்லை. ஆனா அத எப்பிடிச் செய்றீங்க எண்டுறது முக்கியம். அடுத்தவன்ர வயித்தில அடிச்சோ, இல்லை அடுத்தவன் கண்ட கனவுக்கு மேல உங்கட கோட்டையக் கட்டுறதோ எந்த விதத்திலையும் நியாயம் இல்ல.” என்றவள் அவன் என்னவோ சொல்ல வரவும் கையை நீட்டித் தடுத்து, “அவரவர் நியாயம் அவரவருக்கு. தொழில்ல நீங்க என்ன செய்தாலும் அத எதிர்த்து நிக்க நான் தயார். சோ அதுக்கான பதில் எனக்குத் தேவை இல்ல. எனக்குத் தெரிய வேண்டியது ஒண்டே ஒண்டுதான். நானேதான் வேணும் எண்டு நிக்கிறதுக்குப் பின்னால இருக்கிற உண்மையான காரணம் என்ன?” என்றாள் தீர்க்கமாக அவனை நோக்கி.

“அத என்னால இப்ப சொல்லேலாது.” என்றான் அவளிடமிருந்து பார்வையைத் திரும்பியபடி. அதோடு, “அதுக்காகப் பிழையான நோக்கம் ஏதுமோ எண்டு நினைச்சிடாத. அப்பிடி எதுவுமே இல்ல. அதே நேரம் எனக்கு உன்னை இப்ப பிடிச்சுத்தான் இருக்கு.” என்றவனைப் பார்த்து இலேசாக முறுவலித்தாள் அவள்.

காலம் எப்படிச் சுழல்கிறது என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அப்படியே, “எனக்கு உங்களோட ஒரு வாழ்க்கை வேண்டாம் எண்டுறது நான் எப்பவோ எடுத்த முடிவுதான். இப்பவும் அதில மாற்றமில்லை.” என்றுவிட்டுப் புறப்பட ஆயத்தமானாள்.

புத்தியில் அது பட்டாலும் அவளையே பார்த்து நின்றான் அவன்.

இவ்வளவு நேரமாக இருவரும் பேசியது அவர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்து. ஆனால், ஒரு தொழில்துறை பேச்சு வடிவத்தில் மட்டுமே நடந்திருந்தது. உள்ளங்களின் மென் உணர்வுகள் அங்கே குறுக்கிடவே இல்லை.

அதுவும் அவள் தன் உணர்வுகளை நடுவுக்குள் கொண்டு வரவேயில்லை. உற்சாகமும் துள்ளலும் துடிப்பும் நிறைந்த பழைய வஞ்சி கண்முன்னே வந்து நிற்க, “எனக்குப் பழைய வஞ்சியப் பாக்கோணும் மாதிரி இருக்கு.” என்றான்.

உனக்கு என்ன விசரா என்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஓடர் போடுங்க. தயாரிச்சு அனுப்புறன்.” என்றாள் கேலியாக.

உதட்டோரம் குமிழியிட்ட குறுஞ்சிரிப்புடன் அவளையே பார்த்தான் நிலன்.

அவள் முகத்தைத் திருப்ப, “உன்ன மாதிரியே ஒரு ஜூனியர் நீதான் தயாரிச்சுத் தரோணும். அது சரிதான். அதுக்கு முதல் எங்களுக்குக் கலியாணம் நடக்கோணும்.” என்றான் கண்களால் நகைத்தபடி.

பார்வையாலேயே அவனை எரித்துவிட்டு விடுவிடு என்று கீழ்த்தளம் நோக்கிப் போனவள் அப்படியே சந்திரமதியிடம் சொல்லிக்கொண்டு வெளி வாசலையும் நோக்கி நடக்க, “அப்பப்பாக்கு சொல்லிப்போட்டு போ வஞ்சி!” என்று தடுத்தான் அவன்.

அவள் முகத்தில் மறுப்பைக் காட்ட, “கோபதாபம் வேற. வயதான மனுசனுக்குக் குடுக்கிற மரியாதை வேற. வந்து சொல்லிப்போட்டுப் போ!” என்று பிடிவாதமாக அழைத்துக்கொண்டு போனான்.

அவளும் மரத்த குரலில் அவரிடம் வந்து புறப்படுவதாகச் சொன்னாள்.

அப்போதும் சரி என்று தலையைக் கூட அசைக்காமல் அவளையே கூர்மையாகப் பார்த்தார் மனிதர்.

சட்டென்று தொற்றிக்கொண்ட சினத்துடன், “நாறல் மீனைப் பூனை பாக்கிற மாதிரி என்னையே என்னத்துக்குப் பாக்கிறீங்க? உங்கட பேரனக் கட்டுற ஐடியா எனக்குக் கொஞ்சமும் இல்ல. ஆனா, அவசரமா ஆராவது ஒருத்தியப் பாத்து அவருக்குக் கட்டி வைங்க. இல்ல வேலிக்க நிக்கிற மாடு எங்கயாவது பாஞ்சிரப் போகுது.” என்றுவிட்டு நடந்தாள் அவள்.

சக்திவேலர் பேரனைத்தான் முறைத்தார். அவனால் அவள் பேச்சினால் அரும்பிவிட்ட முறுவலை மறைக்க முடியாமல் போனது. இது பழைய வாஞ்சியின் சாயல். “ஒரு நிமிசம் அப்பப்பா.” என்றுவிட்டு அவளுக்கென்று எடுத்து வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு அவளிடம் விரைந்தான்.

அதற்குள் அவள் கார் புறப்படத் தயாராகியிருந்தது. அவள் பக்கக் கதவைத் திறந்து, “இந்தா, இது உனக்கு.” என்று நீட்டினான்.

அப்போதுதான் திறப்புவிழா கண்ட கடையில் முறைக்கு என்று எதுவுமே அவள் வாங்காமல் வந்துவிட்டதே புத்திக்கு உரைத்தது.

“சொறி, இத நான் மறந்திட்டன்.” என்றுவிட்டு கைப்பையிலிருந்து அவள் பணம் எடுக்கப் போக, “கோபம் வர வைக்காத வஞ்சி!” என்று அதட்டி, அவள் மடியிலேயே பையை வைத்துக் கதவைச் சாற்றி, விசாகனை எடுக்குமாறு கையால் காட்டினான்.

அவள் கார் மெல்ல நகர்ந்து, அவன் பார்வையிலிருந்து மறைந்து போனது.





தொடரும்...

ஹாப்பி வீக்கெண்ட் மக்களே,

இந்த வாரம் 3 எபிதான் போட்டு இருக்கிறன். ஆனா, தினமும் எபி போட்டே ஆகோணும் என்கிற பிரஷரோட கதை எழுத வேண்டாமே எண்டு நினைச்சன்.

அதுக்காக நிச்சயம் இழுத்தடிக்க மாட்டேன். முடிஞ்சவரைக்கும் வேகமா முடிக்கப் பாக்கிறன் சரியா?

கதை எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க.

 
Last edited:
Top Bottom