• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 7

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 7

தன் வாழ் நாளில் எந்த நிலையில் அவளைப் பார்த்துவிடவே கூடாது என்று குணாளன் நினைத்திருந்தாரோ, அந்த நிலையில் பார்த்த மனிதர் துடித்துப்போனார். அவர் உள்ளத்தோடு சேர்ந்து உயிரும் அழுதது.

தன்னோடு சேர்ந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விட வேண்டும் என்று அவர் நினைத்த உண்மை, இப்படித் தன் மனைவியாலேயே வெளியில் வரும் என்று நினைக்கவே இல்லை.

அவளுக்குத் தெரிந்தது போதாமல் நிலன் வீட்டினருக்கும் தெரிந்துபோயிற்றே. அதை அவரால் இன்னுமே தாங்கிக்கொள்ள முடியவில்லை. இத்தனை வருடங்களாக இரகசியமாக இருந்த ஒன்று இனிப் பரகசியமாகிவிடும். அவர் சீராட்டிப் பாராட்டி வளர்த்த மகள், இனிப் பலர் வாயிலும் விழுந்து எழும்பப்போகிறாள். அதுவும் அந்தச் சக்திவேலர் ஒருவர் இதை அறிந்தால் போதுமே! இனி என்னவெல்லாம் நடக்குமோ! நினைக்கவே நெஞ்சு நடுங்கியது. மனைவியின்பால் ஆத்திரமும் வெறுப்பும் உண்டாயிற்று.

இப்படி பல விடயங்கள் புழையைப் போன்று அவருக்குள் முட்டி மோதினாலும், “அம்மாச்சி! ஆர் என்ன சொன்னாலும் நீ என்ர மகள்தானம்மா.” என்றார் கண்ணீரோடு.

அவர் என்னவோ நான் பெறாவிட்டாலும் நீ என் மகள்தான் என்று அடித்துச் சொல்லத்தான் அப்படிச் சொன்னார். அதன் மூலம் அவரும் அவரை அறியாமலேயே அவள் தன் மகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டதை உணரவில்லை. உணர்ந்தவள் அவள் நெஞ்சின் உள்ளே சுருக்கென்று ஆழமாய் எதுவோ பாய்ந்தது.

எப்போதும் எதிரில் நிற்பவர் தன் உணர்வுகளைப் படித்துவிடவோ, தன் மனத்தில் ஓடுவதைக் கணித்துவிடவோ கூடாது என்பதில் மிகுந்த கவனமாய் இருப்பாள் இளவஞ்சி. கம்பீரம் அவளது கவசமென்றால் நிதானம் எப்போதும் அவளோடு கூடவே இருப்பது.

இன்றைய அவளின் கட்டுப்பாடு உடைந்ததற்குக் காரணம், தன்னிடம் அவர்களின் தந்திரம் எடுபடவில்லை என்றதும் சுவாதியை வலை போட்டுச் சிக்கவைத்துவிட்டார்களே என்கிற சினம்.

காதல் என்கிற பெயரில் அவள் மனத்தைக் கலைத்தது போதாது என்று வயிற்றில் குழந்தையையும் கொடுக்கிற அளவுக்குக் குடும்பமே இறங்குமா என்கிற வெறுப்பு. இத்தனை கீழ்த்தரமான குடும்பத்தில் போய் அவள் வாழ்வதா என்கிற கோபம்.

முதலில் அவள் மிதுன் சுவாதியைக் காதலிப்பதாக நம்பவில்லை. அவன் சுவாதியை அப்படி நம்ப வைத்து ஏமாற்றியிருக்கிறான் என்றே உறுதியாக எண்ணினாள். அதனாலதான் அப்படிச் சொன்னாள்.

கடைசியில் என்னாயிற்று? அவள் இவளின் தங்கையே இல்லையாம். இல்லை, அப்படிச் சொல்வது கூடத் தவறு! இவள் அந்த வீட்டின் பிள்ளையே இல்லையாம்.

உள்ளே உள்ளம் அழ நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டாள்.

அப்படி நிலைகுலைந்து நின்றவளை நிலனால் பார்க்க முடியவில்லை. என்னவோ தானே நொடியில் யாருமில்லாமல் தனித்துவிடப்பட்டதுபோல் உணர்ந்தான். ஓடிப்போய், ‘யார் இல்லாவிட்டால் என்ன, நான் இருக்கிறேன் உனக்கு’ என்று சொல்ல நினைத்தான். தன் கைகளுக்குள் வைத்து அவள் மனத்தின் காயத்தை ஆற்றத் துடித்தான். அத்தனை பேரின் முன்னாலும் முடியாதே!

அதே நேரத்தில் அவள் சுவாதியின் தமக்கை இல்லை என்கிற உண்மை அவனுக்குள் பெரும் ஆசுவாசத்தத்தைத் தந்தது. இனி எப்படியாவது அவளைத் தன்னுடையவளாக்காமல் ஓய்வதில்லை என்று முடிவு கட்டிக்கொண்டான்.

அந்த முடிவு தந்த உந்துதலில், “வஞ்சி!” என்றபடி அவளிடம் வந்தான்.

அவ்வளவு நேரமாக நிமிர்ந்து நின்று அவர்களைப் பந்தாடிக்கொண்டிருந்தவள் வார்த்தைகள் அற்ற ஊமையாக அவனைப் பார்த்தாள். அப்போதுதான் அவன், அவர்கள் இங்கே வந்திருக்கும் காரணம், தன் நிலை, தான் இந்த இடத்தில் அதிகப்படி என்பதெல்லாம் உறைத்தன.

ஆழ மூச்சு ஒன்றை எடுத்துவிட்டுத் தன்னை நிதானப்படுத்தினாள். பின் பிரபாகரனை நோக்கி, “நான் கதைச்ச எல்லாத்துக்கும் சொறி அங்கிள். சுவாதிய என்ர தங்கச்சி எண்டு நினைச்சுத்தான் கதைச்சனான். ஆனா, எனக்கும் இந்த வீட்டுக்கும் உறவே இல்லை எண்டு இப்பதான் தெரிய வந்திருக்கு. அதால என்ன எண்டாலும் அவேயலோடயே கதச்சு முடிவெடுங்கோ.” என்று குணாளன் ஜெயந்தியைக் காட்டிச் சொல்லிவிட்டு நடந்தவள் நின்று, “சொறி மிதுன்!” என்று மிதுனிடமும் மன்னிப்பை வேண்டிவிட்டுப் போகவும் மிதுனுக்கே ஒரு மாதிரியாகிற்று.

குணாளன் உடைந்தே போனார். “அம்மாச்சி இளவஞ்சி!” தன்னை மறந்து அவளைத் தடுக்கப் போனவர் தடுமாறி விழப்போனார். ஓடிப்போய் அவரைப் பற்றி அமர்த்தினான் நிலன்.

“நீங்க இருங்க அங்கிள். நான் பாக்கிறன்.” என்றுவிட்டு அவன் வெளியே வந்து பார்ப்பதற்கிடையில் அங்கே வந்த விசாகனோடு காரில் புறப்பட்டிருந்தாள் இளவஞ்சி.

இன்னுமே அவள் உள்ளம், தான் அறிந்துகொண்ட உண்மையை ஜீரணிக்க முடியாமல் அல்லாடிக்கொண்டிருந்தது. நெஞ்செல்லாம் விண்டு விண்டு வலித்தது.

எத்தனை சாதாரணமாக ஆரம்பித்த நாள், எவ்வளவு பெரிய அதிர்ச்சிகளை எல்லாம் அவள் தலையில் கொட்டிவிட்டது? நான் தையல்நாயகியின் பேத்தி இல்லையா, குணாளனின் மகள் இல்லையா என்கிற கேள்விகளே இன்னும் அவளைப் போட்டு உலுக்கிக்கொண்டிருந்தன.

அவளின் அடித்தளமே ஆட்டம்கண்டுவிட்டதே. இனி என்ன செய்வாள்? நெஞ்செல்லாம் பெரும் இரைச்சல். தொண்டைக்குள் வெளியிட முடியா ஒரு துயர். அப்படியே தனக்குள் விழுங்க முயன்றுகொண்டிருந்தாள். முடிய வேண்டுமே!

அவள் சரியில்லை என்று காரில் ஏறுகையிலேயே விசாகன் கவனித்திருந்தான். அவளாக ஏதாவது சொல்வாள் என்று அவன் காத்திருக்க, அவள் இங்கேயே இல்லை என்பதை அதன் பிறகுதான் கண்டுகொண்டான்.

என்னாயிற்று? அதை எப்படிக் கேட்பது என்று அவன் யோசித்துக்கொண்டிருக்க, “விசாகன், உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? இந்தப் பூமிப் பந்தே எங்களுக்குச் சொந்தமில்லையாம். அப்ப சொந்தமெண்டு நாங்க நினைச்சுக்கொண்டு இருக்கிறதெல்லாம்?” என்றாள் அவள் திடீரெண்டு.

“மேம்!”

“ஆரை நம்புறது, ஆரைச் சொந்தம் எண்டு நினைக்கிறது எண்டு ஒண்டுமே விளங்கேல்ல விசாகன்.” என்றாள் விரக்தியோடு.

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாது அவளைப் பார்த்தான் விசாகன்.

இதற்குள் தொழிற்சாலை வந்திருந்தது. காரிலிருந்து இறங்கியவள் ஒரு கணம் அப்படியே நின்றாள்.

அங்கிருந்து ஓடி வந்துவிட்டாள். இங்கு மட்டும் அவளுக்கு உரிமை உண்டா என்ன? அவர்களுக்குச் சொந்தமான சொத்து சுகத்தை எல்லாம் ஆண்டு அனுபவிக்கிறவள் அவளாமே! அப்படி எதை ஆண்டு அனுபவித்தாள் என்று அவளுக்கு விளங்கவேயில்லை.

இப்படியே எங்காவது போய்விடலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். அப்படியே போவதாக இருந்தால் கூட அத்தனையையும் முறையாக அவர்களிடம் ஒப்படைக்காமல் முடியாதே!

தன்னைச் சமாளித்துக்கொண்டு உள்ளே நடந்தாள்.

எப்போதும்போல் அவளை வரவேற்க வாசலிலேயே புன்னகை முகமாகக் காத்திருந்தார் தையல்நாயகி. அவரைப் பார்த்த நொடியில் முற்றாக உடைந்துவிடப்பார்த்தாள் இளவஞ்சி.

‘என்னச் சுத்தி என்ன நடக்குது அப்பம்மா? நீங்க கூட இதைப் பற்றி ஒரு வார்த்த சொல்லேல்லையே?’ அவள் உள்ளம் அழுதது.

‘உங்கள நான் அப்பம்மா எண்டு சொல்லக் கூடாதோ? என்னை வளத்த அம்மா எண்டு சொல்லோணுமோ?’

சட்டென்று அவரைக் கடந்து சென்று, அவளின் அலுவலக அறைக்குள் நுழைந்து கைப்பையை வைத்துவிட்டு, தொழிற்சாலையினுள் விடுவிடு என்று நடக்க ஆரம்பித்தாள்.

இதுவரை காலமும் அவள் தையல்நாயகியின் பேத்தி. குணாளன் ஜெயந்தியின் மூத்த மகள். சுவாதி, சுதாகரின் தமக்கை. தையல்நாயகி ஆடைத் தொழிற்சாலையின் முதலாளி. மதிப்பும் மரியாதையும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்தவள்.

இன்றானால் இது எதுவும் அவள் அடையாளங்கள் இல்லையாம். அநாதையாம். எடுத்து வளர்த்தார்களாம். எல்லோரும் அவளைத் தையல்நாயகியின் வார்ப்பு என்பார்களே. அது பொய்யா என்ன?

நடையின் வேகத்தைக் கூட்டித் தன்னைத் துரத்தி துரத்தி வதைக்கும் மனத்தின் போராட்டத்திலிருந்து தப்பிக்க நினைத்தாள். முடியவேயில்லை.

இத்தனை வருடத்து வாழ்க்கையில் மேடு பள்ளங்களை அவள் பெரிதாகப் பார்த்ததில்லை. ஆனால், தொழிலில் வயதுக்கு மீறிய சவால்களைச் சந்தித்தவள். அத்தனையையும் நல்ல முறையில் கடந்து வந்தவளும் கூட.

ஆனால் இன்று, அவளுக்குக் கிடைத்த அதிர்ச்சி அவை அத்தனையையும் மீறியதாய் இருந்தது. மலையின் உச்சியில் இருந்தவளைப் பிடித்து யாரோ அதலபாதாளத்தில் தள்ளிவிட்டாற்போல் வலித்தது.

அவளைப் பெற்றவர்கள் யார்? அவளை ஏன் தூக்கி எறிந்தார்கள்? அவள் எப்படி இவர்கள் கையில் வந்தாள்? ஓராயிரம் கேள்விகள் அவளைச் சுற்றிவளைத்தன. அத்தனைக்குமான பதில்களைச் சொல்ல வேண்டியவர் குணாளன். ஆனால், அவளால் அவர் முகம் பார்த்து இதையெல்லாம் கேட்க முடியும் போல் இல்லை.

அங்கிருந்த யாரினதும் இரக்கப் பார்வையையோ, பரிதாபப் பார்வையையோ எதிர்கொள்ள இயலாமல்தான் மன்னிப்பைக் கேட்டுவிட்டு ஓடி வந்திருந்தாள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
ஆனால், அவளைக் கொல்லும் இந்தக் கழிவிரக்கத்தை என்ன செய்ய?

இன்னும் வேகமாக நடந்தாள். எதிர்ப்பட்ட ஊழியர்கள் மிகுந்த பணிவுடன் நடந்துகொண்டனர்.

இத்தனை நாள்களும் அதையெல்லாம் அன்போடு ஏற்றுக்கொண்டவளின் உள்ளம் இன்று, இதெல்லாம் உனக்கானது இல்லை, உனக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை, நீயும் இவர்களில் ஒருத்தி என்று அறைந்து சொன்னது.

அவள் யாரில் ஒருத்தியாக இருக்கிறாள் என்பது அவளுக்கு ஒரு விடயமே இல்லை. ஆனால், இத்தனை நாள்களும் என்னுடையது என்கிற சொந்தத்தோடும் உரிமையோடும் நடந்த இடத்தில் இன்று கால்கள் கூசின. உரிமையற்ற உணர்வொன்று அவளைச் சூழ்ந்தது.

சொல்லி ஆறுவதற்கோ, தோள் சாய்வதற்கோ யாருமே இல்லாமல் தனித்தே நிற்கிறாள். அப்படி யாரிடமும் சொல்வதோ, ஆறுதல் தேடுவதோ அவளுக்குப் பழக்கமும் இல்லாத ஒன்றாயிற்றே.


*****

இங்கே அவள் வீட்டில் யாருக்கு என்ன கதைப்பது என்று தெரியாத நிலை. குணாளன் மொத்தமாய் இடிந்து போயிருந்தார். ஜெயந்தியின் புறம் திரும்பவேயில்லை. சுவாதிக்குமே இளவஞ்சி தன் தமக்கை இல்லை என்கிற விடயம் பெரும் அதிர்ச்சியாய் இறங்கியிருந்ததில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

பிரபாகரன் குடும்பத்தினருக்கு வந்தபோது இருந்ததை விடவும் தற்போதைய நிலவரம் மிகுந்த இறுக்கமாக இருப்பது நன்றாகவே தெரிந்தது. அதைவிட இந்த நேரத்தில் திருமணம் குறித்துப் பேசுவது அநாகரீகம் என்று புரிந்துகொண்ட பிரபாகரன், “எல்லாம் சரியாகும் குணாளன். ரெண்டு நாள் போகட்டும். எல்லாரும் அமைதியா இருந்து கதைங்கோ.” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டார்.

இனி எதுவும் சரியாகும் என்கிற நம்பிக்கை குணாளனுக்கு இல்லை. அவருக்கு இளவஞ்சியைத் தெரியும். இனி அவர்களை எல்லாம் அரவணைத்துப் போன அந்த மகள் அவருக்குக் கிடைக்கவே மாட்டாள்!

கலங்கிப்போன மனமும் விழிகளுமாக அவர்களை நோக்கி, “உங்கட வீட்டில எல்லாரோடயும் கதைச்சு எவ்வளவு கெதியா ஏலுமோ அவ்வளவு கெதியா இந்தக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்ங்கோ. நடத்தி வைப்பம்.” என்று சொன்னார்.

“இளவஞ்சி?” என்றார் பிரபாகரன் கேள்வியாக.

“அவா என்ர மகள்தான். ஆனா இனி அது எனக்கு மட்டும்தான். அதால அவாட்ட இருந்து இனி ஒரு வார்த்த மறுப்பா வராது.” வேதனை மிகவுறச் சொன்னார்.

சரி என்பதுபோல் தலையசைத்த பிரபாகரன் நிலனைப் பார்த்தார். வரும்போது இளவஞ்சியை மணக்க அவ்வளவு பிடிவாதமாக இருந்தானே இனி என்ன செய்யப்போகிறான் என்று மிகுந்த மனக்கவலையோடு வந்தவர் இப்போது மகன் மனநிலை என்ன என்று தெரியாது நின்றார்.

நிலனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. அவன் தன் முடிவில் தெளிவாக இருந்தான். அதைவிட அவர்களிடம் மன்னிப்பைக் கேட்டுவிட்டுப் போனவள் பின்னாலேயே அவன் எண்ணம் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தது.

அந்த நிமிடமே அவளைப் பார்க்கத் துடித்தவன் தன் வீட்டினரை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.


ஆனால், அவன் நினைத்ததை அவனால் செயலாற்ற முடியவே இல்லை.

அவளின் அலுவலகத்திற்கே நேராகச் சென்றவனைச் சந்திக்க மறுத்தாள் இளவஞ்சி. அன்று மட்டுமன்று. அதன் பிறகு வந்த நாள்களிலும் அவனால் அவளைப் பார்க்க முடியவில்லை.

தன்னைத் தானே தனிமைச் சிறையில் போட்டுப் பூட்டியிருந்தாள்.

அன்று மாலை வீடு வந்தவள், “நான் இந்த வீட்டில இருக்கலாமா? இல்லை, வெளில போகோணுமா?” என்றாள் குணாளனிடம்.

துடித்துப்போனார் மனிதர். “அம்மாச்சி, அப்பா ஏற்கனவே நல்லா உடஞ்சிட்டனம்மா. நீங்களும் சேர்ந்து நோகடிக்காதீங்கோ. இப்பவும் சொல்லுறன். நீங்க எனக்குப் பிறக்காம இருக்கலாம். ஆனா என்ர பிள்ளதான். இளவஞ்சிதான் என்ர மூத்த மகள்.” என்றார் தழுதழுத்த குரலில்.

அதன் பிறகு அவள் அந்த வீட்டில் யாரோடும் எதுவும் கதைப்பதேயில்லை.

*****


நிலன் வீட்டில் ஜானகியால் பெரும் பூகம்பமே வெடித்திருந்தது. ஆசையாசையாகப் பெற்று, பார்த்து பார்த்து வளர்த்த மகனுக்கு இவர்கள் போய்த் திருமணம் பேசிவிட்டு வருவார்களா என்று கொதித்தார்.

“பெத்தவள் நான் என்ன செத்தா போயிட்டன்? இருக்கிற மொத்த சொத்துக்கும் பாதி சொந்தக்காரன் அவன். இன்னும் சொல்லப்போனா நாலுல ஒரு பங்குதான் உங்களுக்குச் சொந்தம். மிச்ச எல்லாத்துக்கும் ஒற்றை வாரிசு அவன். அவனுக்குப் போய் ஆரின்ர வீட்டில கலியாணம் பேசி இருக்கிறீங்க. கேவலம் கெட்ட கூட்டம். உடம்பக் காட்டி என்ர மகனை மயக்கி இருக்கிறாள்.” என்றவரின் பேச்சில் அதிர்ந்துபோனான் மிதுன்.

அன்னை கோபப்படுவார் என்று தெரியும். அவனைக் குறித்து ஓராயிரம் கற்பனைகளோடு இருக்கிறார் என்றும் அறிவான். மிகவும் சங்கடத்தோடுதான் அவரை எதிர்கொள்ள வந்தான். ஆனால், அவர் பேசும் விதம்? சுவாதியைக் கேவலமாகப் பேசியதுமல்லாமல் குடும்பத்தைப் பிரித்துவிடுவார் போலிருந்தது.

அவசரமாகத் தன் மாமன் குடும்பத்தைப் பார்த்தான். அவர்களுக்கும் ஜானகியின் வாயைத் தெரியும். அதனால்தான் நிலன் முதலில் தந்தைக்கு அழைத்து விடயத்தைச் சொல்லி, அந்தப் பக்கம் இந்தப் பிரச்னையை ஒரு நிலைக்குக் கொண்டு வந்துவிட்டு இங்கே வந்து இவரிடம் சொல்லலாம் என்று முடிவு எடுத்தான். ஆனாலும் சொத்தைக் குறித்தெல்லாம் பேசுவார் என்று எதிர்பார்க்கவேயில்லை.

கோபத்தோடு கூடிய ஆதங்கத்தோடு மகனைப் பார்த்தார் பிரபாகரன். அவர் அவருக்குப் பிறகு நிலன் என்று முழுமூச்சாக நின்று தொழிலை வளர்த்து, சொத்தைப் பெருக்கியவர்கள் அவர்கள். பேச்சு எப்படி மாறிவிட்டது? தங்கைதான் என்று விட முடியாமல் அவரும் இரண்டு பிள்ளைகளை வைத்திருக்கிறாரே!

அவர் தவிப்பை உணர்ந்த நிலன் வேகமாக அவர் அருகில் சென்று, அவரின் கரம் பற்றி அமைதி படுத்தினான்.

அதுவே அவர்கள் தனி, தான் தனி என்றாகிப்போனது போலாகிவிட, “என்ன கதையெல்லாம் கதைக்கிறீங்கம்மா?” என்று அதட்டினான் மிதுன்.
ஜானகி அடங்க வேண்டுமே! “என்னடா? என்னையே அதட்டுற அளவுக்குப் பெரிய மனுசனா நீ? இப்பிடிக் குரலை உயத்தச் சொல்லி அவளா சொல்லித் தந்தவள்? இல்ல அவளின்ர அக்கா சொல்லி அனுப்பினவளா? செய்தாலும் செய்வாள்.” என்றதும் மிதுனோடு சேர்ந்து நிலனும் பல்லைக் கடித்தான்.

இந்த நேரத்தில் தானும் கோபப்பட்டால் இன்னுமே துள்ளுவார் என்று அவன் வாயை இறுக்கி மூடிக்கொண்டிருந்தான்.

ஆனால், அங்கே சுவாதியின் மனத்தை உடைத்துவிட்டு வந்த மிதுன், இங்கே அவளுக்காகப் பேசினான்.

“கேவலமா கதைக்காதீங்க அம்மா. அவளத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. அவளைத்தான் கட்டப்போறன். நீங்க தலைகீழா நிண்டாலும் இது மாறாது!” என்றான் உறுதியாக.

“நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நடக்காது!” என்றார் அவன் அன்னை.

“அப்ப எனக்குக் கலியாணம் எண்டுற ஒண்டு நடக்கவே நடக்காது! ஆனா பிறக்கிற பிள்ளை என்ர பிள்ளைதான் எண்டு ஊருக்கே அறிவிப்பன்.” என்றான் அவனும் விடாமல்.

பயந்துபோனார் ஜானகி. பிறகு அவரின் மானம் மரியாதையெல்லாம் என்னாவது? ஆனாலும் மகனிடம் தன் பயத்தைக் காட்டிக்கொள்ள அவரின் தன்னகங்காரம் விடவில்லை. “என்னடா கதைக்கிறாய்? வெருட்டுறியா? உன்ன அப்பிடி ஒற்றையா பாக்கவோ படாத பாடெல்லாம் பட்டுப் பெத்து வளத்தனான்?” என்று அவனிடம் பதறியவர், “நீங்க ஏன் வாய மூடிக்கொண்டு இருக்கிறீங்க. உங்கட மகனுக்கு எடுத்துச் சொல்லுங்கோவன்!” என்று பாலகுமாரனையும் பிடித்து அதட்டினார்.

அவர் எதையும் பேசும் நிலையிலேயே இல்லை. அப்படி ஒரு அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தார். திரும்பவும் நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது. இத்தனை பேருக்கு முன்னால் நின்று இத்தனை உறுதியாகப் பேசும் மகனையே இமைக்க மறந்து பார்த்திருந்தார்.

ஜானகிக்கு அவரைக் கண்டு பற்றிக்கொண்டு வந்தது. “வாயே திறந்திடாதீங்கோ. தலைல இடையே விழுந்தாலும் ஊமை கோட்டான் மாதிரியே இருங்கோ. ஒண்டுக்கும் உதவாத மனுசன்!” என்று அவரையும் திட்டிவிட்டு, “அப்பா என்னப்பா நீங்களும் பேசாம இருக்கிறீங்க? தம்பிட்டச் சொல்லுங்கோப்பா. உங்களுக்குத்தான் அவளவேயப்(அவள்களை) பற்றி நல்லா தெரியும்.” என்றுகொண்டு தகப்பனிடம் போனார்.

அங்கே அவர் எத்தனைக்கு அதிர்வது என்று தெரியாது அமர்ந்திருந்தார். நெஞ்சுக்குள் இதயம் துடிக்கிற துடிப்பைப் பார்க்கையில் அது தன் துடிப்பை நிறுத்திவிடுமோ என்கிற அளவில் அவரே பயந்தார்.

நிலன் இளவஞ்சி இணைவையே எப்படி நடக்கவிடாமல் தடுக்கலாம் என்று அவர் யோசித்துக்கொண்டிருக்கிறார். இங்கானால் சின்ன பேரன் சுவாதியை விரும்புகிறானாம். அவன் குழந்தை அவள் வயிற்றிலாம். இதில் இளவஞ்சி அவர்கள் மகள் இல்லையாம். இரண்டு பேரர்களும் அவர் கையை விட்டு நழுவப் போகிறார்களா? அது மட்டுமா? அதைவிட… அதைவிட… மேலே யோசிக்கக் கூட முடியாமல் இதயத்தைப் பற்றிக்கொண்டார்.

மொத்தக் குடும்பமும் அவரிடம் ஓடியது.

அவரை வைத்தியசாலைக்குக் கொண்டுபோய், இரண்டு நாள்கள் வைத்தியர்களின் கவனிப்பிலேயே வைத்திருந்து, ஓரளவுக்குத் தேற்றிக்கொண்டு வந்தார்கள்.

இந்த மூன்று நாள்களும் தொண்டை அடைத்துப் போகிற அளவுக்குக் கத்தி தீர்த்திருந்தார் ஜானகி.

நீயெல்லாம் கூடப்பிறந்த தமையனா என்று பிரபாகரனைக் கேட்டார். என் மகன் வாழ்க்கையை மொத்தமாக அழிக்க வேண்டும் என்று எத்தனை நாள்களாகத் திட்டம் போட்டு வைத்திருந்தீர்கள் என்றார் சந்திரமதியிடம். என் பிள்ளைபோல் வளர்த்ததற்கு என் அடி மடியிலேயே கை வைத்துவிட்டாயா என்றார் நிலனிடம்.

கீர்த்தனா அவர் வாய்க்குப் பயந்து அவர் முன்னால் வருவதையே தவிர்த்து, ஒழித்து ஓடிக்கொண்டிருந்தாள்.

கடைசியில், “அவள் உன்ன வளக்கப் பாத்தது காணாம தங்கச்சியார வச்சு என்ற மகனைப் பிடிச்சிருக்கிறாள். கேடுகெட்டவள். ஏவல் எந்த நேரத்தில எப்பிடிப் பெத்துப்போட்டுப் போ…” என்றவரை, “வாய மூடுங்க அத்தை!” என்றிருந்தான் நிலன் அதற்குமேல் முடியாமல்.

தன் தமையனின் மகனா தன்னிடம் அப்படிச் சொன்னான் என்று நம்ப முடியாமல் பார்த்தார் ஜானகி. அவனுக்கும் அவருக்கும் அடிக்கடி முட்டிக்கொள்ளும்தான். என்றாலும் இப்படி எல்லாம் கதைக்க மாட்டான். இதுதான் முதல் தரம்.

அவர் அதிர்ந்து நிற்க, “இதையெல்லாம் செய்தது உங்கட மகன். என்ன கதைக்கிறதா இருந்தாலும் நீங்க அவனோட மட்டும்தான் கதைக்கோணும். அத விட்டுப்போட்டு இனி இன்னொருக்கா நீங்க என்ர அம்மாவையோ, அப்பாவையோ, இல்ல வஞ்சியையோ ஏதாவது கதைச்சீங்க எண்டு வைங்க! அத்த எண்டும் பாக்க மாட்டன்!” என்று சந்திரமதி தடுக்க தடுக்கச் சீறிவிட்டுப் போனான்.

பெத்த மகனுக்கு ஒப்பாகப் பேணிய மருமகனின் எடுத்தெறிந்து பேச்சு ஜானகியை மிக ஆழமாகக் காயப்படுத்திற்று. கூடவே அசையாத மகனின் பிடிவாதமும், வைத்தியசாலையிலிருந்து வந்த பிறகும் பேயறைந்தவர் போல் இருந்த தகப்பனின் நிலையம் அவரை அச்சுறுத்தின.

எல்லாவற்றையும் விட ஜானகியை அடக்கியது சக்திவேலரின் அந்தக் கனத்த அமைதிதான்.

அவரின் எதிர்ப்பையும் மீறி நடக்க ஆரம்பித்த சுவாதி மிதுன் திருமண வேலையைக் கண்டு பிரபாகரனிடம் பேச முயன்றார்.

“போதும் ஜானகி. அப்பாவை வேண்டாம் எண்டு சொல்லச் சொல்லு. இதோட நிப்பாட்டுறன். அதுக்கு மேல என்னோட என்ன கதைக்கவும் வராத!” என்று முடித்துவிட்டார் அவர்.

அவருக்கு அன்று ஜானகி சொத்தைக் குறித்துப் பேசியது மிகவும் பாதித்திருந்தது. இவ்வளவு பெரிய விடயம் ஜானகி மனத்தில் ஆழமாய் இருந்திருக்கிறது என்பதை அவர் இத்தனை காலமாக அறியவில்லை.

அவர்களின் சொத்துப் பறந்து விரிந்தது. அதில் நான்கில் ஒன்றுதான் உங்களுக்குத் சொந்தம் என்றால் என்ன பேச்சு? அவர் மனத்தில் பெரும் பிளவு விழுந்து போயிற்று.

*****

ஜெயந்திக்குப் பிரத்தியேகமாக இளவஞ்சி மீது எந்த வெறுப்பும் இல்லை. பெற்ற மகளாகத்தான் பாவித்தார். பாசமாகத்தான் வளர்த்தார். பிரிவினை காட்டியதும் இல்லை. ஆனால், உண்மை என்கிற ஒன்று எப்போதும் அடி நெஞ்சில் உறங்கிக்கொண்டேதானே இருக்கும். அதில் ஆத்திரத்திலும் அவசரத்திலும் நிதானமிழந்து வார்த்தைகளை விட்டுவிட்டார்.
 
Last edited:
Top Bottom