அவள் ஆரணி - 14

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 14



நிகேதனின் கையணைப்பில் தான் கண்விழித்தாள் ஆரணி. அதை உணர்ந்தநொடி நெஞ்சமெங்கும் சுகம் பரவிற்று. ஆசையாக தன் மனம் கொய்தவனின் முகத்தைப் பார்த்தாள். நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். உறக்கத்தில் மட்டும் தானோ இந்த நிம்மதி? ஏழ்மை அவனை எத்தனை இடத்தில் நெருக்குகிறது? எது எப்படியானாலும், அவள்மீது அவன் காட்டும் பாசத்துக்கு மட்டும் அளவேயில்லை.

முதல்நாள் இரவு, விருப்பமே இன்றி அவன் கையணைப்புக்குள் இருந்து விலகி, விறாந்தைக்குச் செல்ல எழுந்தவளைத் தடுத்து, அறைக்குள் அழைத்துக்கொண்டு வந்து, தரையிலேயே ஒரு விரிப்பை விரித்துவிட்டு அவளோடு சரிந்துவிட்டான், நிகேதன்.

ஆசை பொங்க அவன் கேசம் கோதி நெற்றியில் உதடுகளைப் பதித்தாள். மெல்ல அவன் கரங்களை விலக்கிவிட்டு எழுந்துபோய் முகம் கழுவிக்கொண்டு வந்தபோது அவனோடு சேர்த்துச் சின்னவர்களும் விழித்திருந்தனர்.

அவளைக் கண்டதும் சினேகமாக முறுவலித்தவர்களை கிணற்றடிக்கு அழைத்துக்கொண்டுபோய் முகம் கழுவி, உடை மாற்றி, தலைவாரி முகத்துக்கு பௌடர் போட்டுவிட்டாள். இதையெல்லாம் இளம் முறுவலுடன் பார்த்திருந்தான், நிகேதன்.

அவனின் பார்வையின் குறுகுறுப்பைத் தாங்கமுடியாமல், “உங்கட சித்தப்பா இண்டைக்கு எழும்பவே மாட்டார் போல இருக்கு. என்ன எண்டு பாருங்கடா!” என்று ஏவிவிட்டாள்.

அடுத்தகணமே, “எழும்புங்க சித்தப்பா!” என்றபடி அவன்மீது பாய்ந்திருந்தனர் பிள்ளைகள். சற்று நேரத்துக்கு அவர்கள் மூவரினதும் சிரிப்புச் சத்தமே அந்த அறையை நிறைத்தது.

“தேத்தண்ணி ஊத்தப்போறன். நீயும் முகத்தைக் கழுவிக்கொண்டு வா, நிக்கி.” என்றவள் சின்னவர்களோடு வெளியே வந்தபோது யாருமே எழும்பியிருக்கவில்லை.

ஒரு சுதந்திர உணர்வு தலைதூக்க, இருவரையும் சமையலறைக் கட்டில் ஏற்றி இருத்திவிட்டு, காலையில் பால் தேநீர் தான் என்று கேட்டுத் தெரிந்து ஆற்றிக்கொடுத்தாள்.

முதல் நாளே யு டியூபில் பார்த்து வைத்ததுக்கு ஏற்ப, மாவோடு வாழைப்பழம் கலந்து, கொஞ்சமாய்ப் பேக்கிங் பவுடர், உப்புச் சேர்த்து, அதில் பாலும் கலந்து தோசைப் பதத்தை விட மெல்லிய இறுக்கமான பதத்தில் கட்டியில்லாமல் கரைத்து எடுத்தாள். தோசைக்கல்லை இதமான சூட்டில் வைத்து பட்டர் தடவி பேன் கேக்கினை செய்தாள். அதன்மீது நுட்டெல்லாவும் பூசி பிள்ளைகளுக்குக் கொடுக்க, விரும்பிச் சாப்பிட்டனர்.

அதற்குள் நிகேதனும் வந்துவிட, அவனுக்கும் தேநீர் கொடுத்தாள்.

“உனக்கு?”

“நான் பிறகு குடிக்கிறன். நீ குடி.”

அங்கேயே நின்று கொஞ்சமாக அருந்திவிட்டு அவளிடமும் நீட்டினான். அவள் திரும்பிப் பார்க்க அவன் கண்கள் சிரித்தது. சத்தமில்லாமல் வாங்கிப் பருகினாள் ஆரணி. சின்னவர்களையும் வைத்துக்கொண்டு ஒரு ரகசிய விளையாட்டு! ஒரு கோப்பையே இருவருக்குமான தேநீராயிற்று.

அவனுக்கும் பேன் கேக் செய்துகொடுத்தாள். “இப்பவேவா? பசிக்கேல்ல ஆரா.” அவனுக்கு இனிப்பு வகை பெரிதாகப் பிடிக்காது. அதுவும் காலையில் என்றால் சாப்பிடவே மாட்டான்.

“இண்டைக்குத்தான் முதன் முதல் செய்திருக்கிறன். எப்பிடி இருக்கு எண்டு சொல்லன்.” அவள் கெஞ்சிக் கேட்டபோது சிரித்துக்கொண்டு வாங்கிச் சாப்பிட்டான்.

“உங்கட சித்தி, சமையல்ல வரவர பரவாயில்லாம வாறாளடா!” அவளின் கண்களின் எதிர்பார்ப்புக்குப் பிள்ளைகளிடம் பதில் சொன்னான் அவன். கரண்டியாலேயே அவனுக்கு ஒன்று போட்டாள் ஆரணி. சின்னவர்களுக்குப் பெரிய சிரிப்பு. “சித்தப்பாக்கு சித்தி அடிக்கிறாள். என்ன எண்டு கேக்காம சிரிக்கிறீங்களேடா.” என்று அவர்களுக்குக் கிச்சுக் கிச்சு மூட்டி இன்னுமே சிரிக்க வைத்தான் அவன்.

அவன் உண்டதிலும் பாதி அவள் வயிற்றுக்கு உணவானது அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த ரகசியம்.

அமராவதி அம்மாவோடு மற்றவர்களும் எழுந்துகொள்ள, அதுவரையிருந்த அந்தச் சந்தோசம் மங்கிப்போயிற்று! காலை உணவை முடித்துக்கொண்டு, பிள்ளைகளை நிகேதன் ஆரணியோடு விட்டுவிட்டு நால்வருமாகக் கடைக்குக் கிளம்பினர்.

இவர்களைத் தவிர்த்துவிட்டுச் செல்வதாக அவர்கள் காட்டிக்கொள்ள, நிம்மதியாகத்தான் உணர்ந்தனர் இருவரும். அந்தளவில் நேற்றைய ஒரு நாளிலேயே மனதளவில் மிகவும் காயப்பட்டுப் போயிருந்தனர். அன்று மாலையே பிறந்தநாளை முடித்துக்கொண்டு கிளம்புகிறார்கள் தான் என்றாலும், எப்போதடா அந்தப்பொழுது வரும் என்று காத்திருந்தனர்.

பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தோட்டத்துக்குச் சென்றான் நிகேதன்.

“நீயும் வாவன்.”

“சாப்பிடுறதுக்கு ஏதாவது எடுத்துக்கொண்டு வாறன். நீ போ!” என்று அவர்களை அனுப்பிவிட்டு, வாங்கி வைத்திருந்த மரவள்ளிப் பொரியலும் தண்ணீரும் எடுத்துக்கொண்டு சென்றாள். டெரெசில் அவள் அமர்ந்துகொள்ள மூவரும் ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கினர்.

பாத்திருந்த ஆரணிக்கு அத்தனை அழகாயிருந்தது அக்காட்சி. நான்கு எட்டில் அவர்களைப் பிடித்துவிடலாம் என்று தெரிந்தும் பொய்யாகத் துரத்தும் நிகேதன். அவர்களின் கையில் அகப்பட்டுக்கொண்டு முகத்தைச் சோகமாகச் சுருக்கும் நிகேதன். மீசைக்கடியில் மிளிரும் அவன் சிரிப்பு. சிலநேரங்களில் பெரியவன் நெருங்கிவிட அவனிடம் அகப்படாமல் உண்மையாகவே வேகமெடுத்து ஓடும் நிகேதன். சின்னவனைத் தோளில் தூக்கிக்கொண்டு ஓடும் நிகேதன். வாய்விட்டுச் சிரிக்கும் நிகேதன். வியர்த்து வழியும் நிகேதன் என்று அவளின் கண்களிலும் மனதிலும் நிறைந்துகொண்டிருந்தான் அவளின் நாயகன்!

இப்படித்தான் பல்கலைக்கழகத்திலும். விளையாட்டு என்று வந்துவிட்டால் பேய் மாதிரி விளையாடுவான். சளைப்பதும் இல்லை களைப்பதும் இல்லை. அவள் போய் நீண்டநேரமாகக் காத்திருந்தாலும், அவனை அங்கிருந்து இழுத்துக்கொண்டு வருவது என்பது சுலபமான காரியமே அல்ல. நன்றாக விளையாடு விளையாடு என்று விளையாடிவிட்டு, “சாப்பிட என்னடி இருக்கு?” என்று அருகில் இடித்துக்கொண்டு வந்து அமருவான். “டேய் குப்பையா! வேர்வை நாறுது தள்ளி இரடா.” என்று தள்ளிவிட்டாலும் விடமாட்டான். வேண்டுமென்றே அவளோடு உரசுவான்.

“அடேய்! விடுங்கடா என்ன!” என்ற குரலில் சிந்தனை கலைந்து பார்த்தாள். அவனை நிலத்தில் விழுத்தி, அவன் மேலே அமர்ந்திருந்து உள்ளங்கால்களிலும் கழுத்திலும் இடுப்பிலும் என்று அவர்கள் கிச்சுக் கிச்சு மூட்ட அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டிருந்தான் அவன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
‘இப்படித்தானே நம் பிள்ளைகளோடும் விளையாடுவான்..’ அவள் விழிகளில் அந்தக் கனவு அழகாய் விரிந்தது. ‘குறைஞ்சது நாலு பிள்ளையாவது வேணும். சும்மா எல்லாரையும் மாதிரி ஆண் ஒண்டு பெண் ஒண்டு எல்லாம் காணாது.’ அவனின் குழந்தைகள் நால்வரும் அவனைச் சுற்றி நின்று ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? இதழ்களில் புன்னகை அரும்பிற்று அவளுக்கு!

“எதுக்காம் இந்தச் சிரிப்பு?” அவளை உரசிக்கொண்டு அமர்ந்தபடி கேட்டான் அவன். பார்வை மட்டும் ஒருவரை ஒருவர் பிடிக்க என்று ஓடித்திருந்த சின்னவர்களின் மீது இருந்தது.

“நமக்கே நமக்கு எண்டு நாலு பிள்ளைகள் வேணும் நிக்கி. ஆசையாசையா நீயும் நானும் சேர்ந்து கண்ணுக்க வச்சு வளக்கவேணும். நல்லா படிப்பிக்கவேணும். அவேக்கு நாங்க நல்ல அம்மா அப்பாவா இருக்கோணும். இது எல்லாத்துக்கும் முதல் கயலின்ர கல்யாணம் நடக்கவேணும்.” அவள் சொல்வதை எல்லாம் சின்னப் புன்னகையோடு கேட்டிருந்தவனின் உடல், கடைசி வரியில் இறுகிப்போனது.

அப்படி அவள் சொன்னதற்குக் காரணம், நேற்று தாயிடம் அவன் கொடுத்த வாக்கு! வேதனையோடு விழிகளை அவன் மூடித் திறக்க, அவளின் விரல்கள் தேடிவந்து அவனுடைய விரல்களோடு பின்னிப் பிணைந்துகொண்டது! ஆறுதல் சொல்கிறாள்! அவளை அவன் எப்படி ஆற்றுப்படுத்தப் போகிறான்?

“இந்த நிலம நிறையக்காலத்துக்கு நீடிக்காது ஆரா! உன்ர நிகேதனை நீ நம்புற தானே?” அவள் முகத்தில் தன் விழிகளை நிறுத்தித் தீவிரமான குரலில் கேட்டான் அவன்.

“நான் நம்புற எல்லாத்துக்கும் இன்னொரு பெயர் என்ர நிக்கி!” என்றாள் அவள் தெளிவான புன்னகையோடு.

பிறந்தநாள் விழா அவர்களுக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாகவே நடந்தது. இரவு உணவையும் முடித்துக்கொண்டு ஒரு வழியாகப் புறப்பட்டனர். அதற்கு முன், “உங்கட அண்ணாவுக்கும் வயசு போகுது நிகேதன். எங்களுக்கும் ரெண்டு பிள்ளைகள் இருக்கினம். இனியாவது பொறுப்பா நடவுங்க. எல்லாத்திலையும் அவசரப் பட்ட மாதிரி பிள்ளை குட்டி பெறுகிறதிலையும் அவசரப்பட்டுடாதீங்க.” என்று நேராகவே சொல்லிவிட்டுப் போனார், மாலினி.

அறிவினால் சிந்தித்துப்பார்த்தால் அவர் சொன்னதில் பெரிய தவறில்லைதான். ஆனால், அவன் என்ன பெண்ணுக்கு ஆசைப்பட்டு மணந்தானா? இல்லை பொறுப்பற்று மணந்தானா? அவனுக்குத் தெரியாதா இந்த நிலையில் குழந்தை இன்னுமே அதிகப்படி என்று. இக்கட்டான சூழ்நிலையில் அவனைக் காலம் நிறுத்தியதை ஏன் யாருமே விளங்கிக்கொள்ள மறுக்கின்றனர்? டெரசில் நின்றிருந்தவனின் கொந்தளிக்கும் மனதைக் குளிர் காற்றாவது ஆற்றுமா என்று பார்த்தான். இல்லை என்று புரிந்து ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டான்.

அப்போது, மெல்லப் பின்னிருந்து அவனை அணைத்தாள் ஆரணி. அப்போதும் அவனிடம் அசைவில்லை.

“என்ர நிக்கிக்கு இந்த நேரத்தில என்ன யோசனை?” அவனுடைய வெற்று முதுகில் முத்தம் ஒன்றைக் கொடுத்துவிட்டுக் கேட்டாள்.

அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.

“அவனுக்குப் பிடிச்சமாதிரி சாரமும் சட்டையும் போட்டுக்கொண்டு நிக்கிறாள் அவனின்ர ஆரணி. ஆனாலும் பாக்காம நிக்கிறான். அவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்?” தனக்குத்தானே சொல்வதுபோலச் சொன்னவளின் பேச்சில் உதட்டினில் முறுவல் அரும்பப் பின்னால் கையைக்கொண்டுபோய் அவளை முன்னுக்குக் கொண்டுவந்தான் அவன்.

“ஆரான்ர நிக்கி எல்லாத்தையும் பாத்திட்டுத்தான் வந்தவன்.”

“என்னது? பாத்திட்டும்.. வந்தவனா? அவனுக்கு எவ்வளவு தைரியம்?” இருளிலும் ஈரலிப்பில் மின்னிய செவ்விதழ்கள் சிரித்துவிடத் துடித்தன. “இனி ஆரணி சாரமும் கட்டமாட்டாள் சட்டையும் போடமாட்டாள்.” என்றாள் அறிவிப்பாக.

அவளின் இடையோடு கைகளைக் கோர்த்தபடி, “நிக்கின்ர ஆராக்கு அவனுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்யத் தெரியுமாம்.” என்றான் அவன்.

“பிறகு என்னத்துக்காம் அவளின்ர நிக்கி யோசிக்கிறானாம்? அவன் கவலைப்பட்டா ஆரா தாங்கமாட்டாள் எண்டு தெரியாதாமா?” சொல்லும்போதே அவளின் குரல் உள்ளே போயிற்று.

மார்போடு தன்னவளைச் சேர்த்தணைத்துக்கொண்டான் அவன். மாலினி வார்த்தைகளால் எவ்வளவோ குத்தியும் திருப்பிக் கதைக்கவே இல்லையே. காரணம் அவன் சொன்ன ஒரு வார்த்தை! ‘என்ர ஆரா…’ அவன் நெஞ்சம் உருகிற்று.

“வாழ்க்கையில நிறையத்தூரம் நாங்க ஓடவேணும் போல இருக்கு ஆரா.” கனத்துவிட்ட குரலில் சொன்னான் நிகேதன்.

“ஓடுவம். எல்லாருமே மலைச்சுப்போய்ப் பாக்கிற அளவுக்கு ஓடுவம். ஆனா சேர்ந்து ஓடுவம். என்னை விட்டுட்டுத் தனியா ஓடாத. நான் தாங்கமாட்டன்.” என்றவளின் விழிகளிலும் தீவிரம்.

“உன்ன விட்டுட்டு நான் எங்கயடி போக?”

“இப்ப அறைக்க என்னை விட்டுட்டு நீ இங்க வர இல்லையா?” அந்தச் சின்ன விலகல் கூட அவளைக் காயப்படுத்தியிருக்கிறது. அதை ஈடுகட்டுகிறவன் போல அவளின் முகம் நோக்கிக் குனிந்து, தன் உதடுகளால் மருந்திட்டான். அறைக்குள் வந்து அவளுடனேயே கட்டிலில் சரிந்தான்.

“லைட் நிப்பாட்ட இல்ல.”

“பிறகு நிப்பாட்டு.” என்றவனின் நெருக்கம் இன்றைக்கு என்றுமில்லாத அளவில் இருந்தது.

“டேய்! இப்பிடியே போன எண்டு வை, அடுத்த மாசமே நீ ஒரு பிள்ளைக்கு அப்பா ஆகிடுவாயடா! விடு!” என்று, கிட்டத்தட்ட தன்னை அவனிடமிருந்து பிய்த்துக்கொண்டாள் ஆரணி.

நீண்ட நேரமாகியும் இருவரும் உறங்கவே இல்லை.
“என்ன யோசிக்கிறாய் நிக்கி?” அவன் மார்பில் தலை சாய்த்திருந்த ஆரணி மெல்லக் கேட்டாள்.

“பாக்கிற வேலை காணாது ஆரா. பின்னேரத்தில(மாலை) பார்ட்டைமா வேற வேலை ஏதும் பாக்கவேணும். அதுதான் என்ன செய்றது எண்டு யோசிக்கிறன்.” என்றான் அவன்.

இப்படியே போனால் படித்த படிப்புக்கான வேலை கிடைக்காமலேயே போகப்போகிறது. அதைத் தாங்கிக் கொள்வானா?

“உனக்குக் கவலையா இல்லையா?”

“உழைக்கவேணும் எண்டுறதை தவிர இப்ப வேற எந்த எண்ணமும் இல்லை.” என்றான் உறுதியான குரலில்.

தன்னையே உருக்கப்போகிறானா தன்னவன்? நெஞ்சில் பாரமேற, உனக்கு நான் இருக்கிறேன் என்று காட்டுகிறவளாக அவன் வயிற்றை இறுக்கிக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தாள் ஆரணி.

அடுத்தநாள் மாலை, கோதுமை மாவில் வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை எல்லாம் சின்னச் சின்னதாக வெட்டிப்போட்டு, உப்பும் போட்டு ரொட்டிக்குக் குழைத்து வைத்திருந்தாள் ஆரணி. அனைத்தும் ரோசிகஜனின், ‘vvs cuisine’யின் உபயம். நிகேதனுக்குச் சுடச்சுட ரொட்டியும் உடன் சம்பலும் என்றால் மிகவுமே பிடிக்கும். எனவே, வேலை முடிந்துவந்து, உடம்பு கழுவி, ஹாலில் அமர்ந்தபிறகு அவனுக்கு ஒரு தேநீரை அருந்த கொடுத்துவிட்டு, ரொட்டி சுட ஆரம்பித்தாள்.

“கயல் வா சமையல் பழக.”

ஆரணி அழைத்தது காதில் விழாதது போன்று போனில் கவனமாக இருந்தாள் அவள்.

“சமையல் தெரியாம நான் மாமிட்ட பேச்சு வாங்குற மாதிரி நாளைக்கு நீயும் உன்ர மாமிட்ட பேச்சு வாங்கக் கூடாது. அதுதான் வா!” என்றவள், சமையல் கட்டில் இருந்தே நிகேதனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினாள்.

வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு முறைத்தான் நிகேதன். அண்ணியோடு சேர்ந்து அம்மா கதைத்தவற்றுக்குப் பழி வாங்குகிறாள். ‘பேசாம சமையடி!’ கண்ணாலேயே அவளை அடக்கினான். அவள் அடங்கினாள் தானே. “எனக்குச் சமையல் தெரியாது எண்டுறதுக்காக எவ்வளவு கதை கதைக்கினம். நாளைக்கு உன்ர மனுசன் வீட்டுல என்ர மாமிய பிழையா கதைச்சா எனக்குக் கோவம் வந்திடும்.” என்றாள் அவள் அப்போதும்.

“நீயும் வா நிக்கி! வந்து ஹெல் பண்ணு.” என்று அவனையும் விடவில்லை.

அவன் முறைக்க, “முந்தி(முன்னர்) மாதிரி நீ தனிப்பெடியன் இல்ல. குடும்பஸ்தன். பொறுப்பா இருக்கப் பழகு நிக்கி! வாவா வந்து வெங்காயத்தை வெட்டித்தா! கயல் நீ வந்து தேங்காயை துருவு. மாமியும் என்ர அம்மா மாதிரியே உங்களையெல்லாம் பொறுப்பில்லாம வளத்து வச்சிருக்கிறா!” என்றவளின் பேச்சில் பயந்துபோய்த் தாயைப் பார்த்தான் அவன்.

அவரோ கடுத்துவிட்ட முகத்தோடு எந்தக்கணமும் வெடிக்கலாம் என்கிற நிலையில் இருந்தார். இனியும் விட்டால் இது பிரச்சனையாக வெடித்துவிடும் என்று தெரிந்து சமையலறைக்கு விரைந்தான். “உனக்கு இப்ப என்னடி வேணும்?” அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் அவன் பல்லைக் கடிக்க, வராந்தாவை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு உதடுகளைக் குவித்துக் காட்டினாள் அவள்.

தேங்காய் துருவ வந்த தங்கையிடம், “நான் அவளுக்கு ஹெல்ப் செய்றன். நீ போய்ப் படி!” என்று அனுப்பிவைத்தான். சொன்னதுபோலவே அவன் வெங்காயம் வெட்டிக்கொடுத்து, தேங்காயும் துருவிக்கொடுக்க, அதற்குள் ரொட்டி சுட்டு சம்பலும் அரைத்து முடித்தாள் ஆரணி.

அமைதியாகவே கழிந்தது அன்றைய இரவு உணவு.


 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom