அவள் ஆரணி -15

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 15


மாலை நேரத்தில் ஒரு பீட்ஸா ஹட்டில் டெலிவரி போயாகச் சேர்ந்திருந்தான் நிகேதன். அந்த வேலை மாலை ஐந்துக்குத் தொடங்கி இரவு பதினொன்று பன்னிரண்டு என்று பலமாதிரியும் முடிந்தது. காலையில் ராஜேந்திரனிடம் ட்ரைவர், மாலையில் டெலிவரி போய், யாராவது கேட்டுவந்தால் ஹயர் வேறு போய்வந்தான். ஓய்வு என்பதே இல்லை.

பக்கத்துவீட்டு ஷர்மிளா அக்கா புதுச் சீட்டுத் தொடங்குவதாக எதேற்சையாகச் சொல்லவும், நிகேதனிடம் கேட்டு தானும் ஒன்றுக்கு வருவதாகச் சொன்னாள் ஆரணி.

அமராவதி அம்மாவுக்கு அதில் மிகுந்த கோபம்.

“இப்பதான் ஆசைப்பட்ட கோயில், குளம் எண்டு போய்வாறோம். அது பிடிக்கேல்லையாமா அவளுக்கு?”

“வாற வருமானத்தை எல்லாம் செலவு செய்தா கயலுக்குக் கல்யாணம் கனவில மட்டும் தான் நடக்கும். பரவாயில்லையா?” பட்டென்று திருப்பிக் கேட்டாள் ஆரணி.

‘அண்ணா சுடிதார் வாங்கித் தாறீங்களா’, ‘ஹோட்டலுக்குப் போவோமா’, ‘எனக்குச் செலவுக்குத் தாறீங்களா’ என்று வாரத்துக்கு ஒரு செலவு கயலினி நிச்சயம் வைத்திருப்பாள். அமராவதி அம்மாவும் அப்படித்தான். நிகேதனும் அவர்கள் கேட்டால் என்ன இக்கட்டில் இருந்தாலும் கொடுத்துவிடுவான். தாய்க்கோ தங்கைக்கோ அவர்கள் கேட்டதைச் செய்துகொடுத்துவிட்டு வருகிற நிகேதனின் முகத்தில் தெரிகிற மலர்ச்சியையும் திருப்தியையும் பார்க்கிற ஆரணியால் அதைத் தடுக்கவும் முடிவதில்லை. ஆனால், இப்படியே போனால் அவர்கள் எங்கே முன்னேறுவது? ஆரம்பிக்காமலே இருக்கும் தாம்பத்தியத்தால் இரவுகளைக் கடக்கத் திணறும் நிகேதன் அவளின் வேதனையைப் பெருகிக்கொண்டே போனான். இதை யாரிடம் சொல்வது? அந்தக் கோபமெல்லாம் அவர் மீது பாய்ந்திருந்தது.

“என்ன சொல்லுறாள் எண்டு பாத்தியா? இதுதான் நீ கூட்டிக்கொண்டு வந்தவளின்ர லட்சணம். எங்க இருந்தடா பிடிச்சனி. கண்டறியாத பொம்பிளை!” என்றவர், விடுவிடு என்று அறைக்குள் சென்றுவிட, ஆரணியை முறைத்தான் நிகேதன்.

“கொஞ்சம் பாத்து கதைக்கமாட்டியா ஆரா?”

“பாத்துக் கதைச்சா கயலின்ர கல்யாணம் நடந்திடுமா? காசு இல்லாம கல்யாணமே நடக்காது எண்டு நீதானே சொன்னனீ நிக்கி. மறந்திட்டியா? இல்ல எங்கட கல்யாணத்துக்கு மட்டும் தான் அந்த ரூலா?”

பதில் சொல்லமுடியாத கேள்விகளைக் கேட்பதில் வல்லவள் ஆயிற்றே! சினம் பொங்க, “பேசாம போடி!” என்றான் தலையைப் பிடித்துக்கொண்டு.

“உள்ளதை சொன்னா என்ர வாய அடைக்கிறது.” அவனுக்குக் கேட்கும்படியே புறுபுறுத்துவிட்டுப் போய், இஞ்சித்துண்டு ஒன்றைத் தட்டிப்போட்டு பிளேன் டீயினைக் கொண்டுவந்து அவனிடம் நீட்டினாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தான் அவன். முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆரணி. “நீயும் உன்ர தேத்தண்ணியும்! வந்திட்டா முகத்தை நீட்டிப் பிடிச்சுக்கொண்டு!” எரிச்சலுடன் மொழிந்துவிட்டு எழுந்துபோனான், அவன்.

‘ஆடாதடா நிக்கி!’ என்று அவனை முறைத்தாலும், தன்னையே குட்டிக்கொண்டாள் ஆரணி. இன்றைக்கு அதிசயமாக வேலை குறைவாம் என்று நேரத்துக்கு வந்திருந்தான் அவன். அதற்குள் ஒரு சின்னச் சண்டையை உருவாக்கி, அவன் நிம்மதியைப் பறித்துவிட்டாள். ‘அறிவுகெட்ட ஆரா! மாமியாரோட சண்டை பிடிக்கிறதிலையே குறியா இருக்கிறத விட்டுட்டு கட்டினவனை கொஞ்சம் கவனி!’ என்று தன்னையே திட்டிக்கொண்டவள் வேகமாகக் கப்புடன் அறைக்குச் சென்றாள்.

அங்கே அவன் டெரசில் அமர்ந்து இருப்பது தெரிய, கப்பை வைத்துவிட்டு தானும் நெருங்கி அமர்ந்துகொண்டாள்.

“ஆரா கதைச்சது பிழைதான். நிக்கிக்கு கோவமா?”

அவனிடம் அசைவில்லை.

“ஆரா பாவமெல்லா. கொடுமைக்கார மாமியார், முறைக்கிற மச்சாள் எண்டு நாள் முழுக்கத் தனியா இருக்கிறவளோட நிக்கியும் கதைக்காம இருந்தா அவள் ஆரோடதான் கதைப்பாளாம்?” விளையாட்டுப்போல் சொன்னாலும் அதில் இருந்த உண்மையில் குரல் எழும்பாமல் போயிற்று அவளுக்கு.

மெல்ல அவளைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்தான் நிகேதன். அவளின் முகம் நிமிர்த்தி விழிகளுக்குள் கூர்ந்தான். காரணமற்ற அச்சமொன்று மனதினில் கலக்கத்தை உண்டாக்கியிருந்த போதிலும் சமாளிப்பாகப் புன்னகை புரிந்தாள் அவள். ஆனால், அந்த விழிகளில் தென்பட்ட அலைபாய்தலை கண்டுகொண்டான் அவளின் நாயகன்.

“தனியா இருக்க ஏலாம இருக்கா?”

அதைக் கேட்கையில் அவன் விழிகளில் படர்ந்திருந்த நேசத்தில் அவளுக்குக் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. வேகமாகச் சமாளித்துக்கொண்டு கண்ணைச் சிமிட்டினாள்.

அவனுக்குச் சிரிப்பு வந்தது. “சரியான போக்கிரியடி நீ!” என்றான் அவளின் கன்னம் கிள்ளி.

சில நொடிகளை அவனது கைகளுக்குள்ளேயே கரைத்துவிட்டு, “நான் கதைக்கிறது பிழை எண்டால் சொல்லு இல்ல பேசு. ஆனா என்னோட கதைக்காம இருக்காத நிக்கி.” என்றாள் ஆரணி. அவள் முகத்தையே கணநேரம் பார்த்துவிட்டு, அவளின் இதழ்களைத் தன் உதடுகளினால் பேசவிடாமல் செய்தான் அவன்.

விழிகளை விரித்தாள் அவள். இப்போதெல்லாம் அவளோடு சரசமாட அவன் வருவதில்லை. கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்கிற பயத்தில் விலகியே நிற்பான்.

“என்ன பார்வை?”

வேகமாகத் தானும் தன் இதழ்களை அவன் உதடுகளில் ஒற்றி எடுத்துவிட்டுச் சிரிப்புடன் புருவங்களை உயர்த்தினாள் அவள்.

பதிலுக்குப் பதில் கொடுக்காமல் விடவே மாட்டாள். அது எதுவா இருந்தாலும். மெதுவாக நகைத்தான் அவன். “நான் தந்தாத்தான் தருவியா?”

“தராட்டியும் தருவன்.”

“அப்ப தா.”

“நீ முதல் அறைக்க வாடா!”

அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டான் நிகேதன்.

-----------------

வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க என்று அவர்களின் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளியிருக்கும் குட்டி டவுனுக்கு நடந்து வந்திருந்தாள் ஆரணி. நான்கு கடை ஏறி இறங்கி, நல்லது கெட்டது ஆராய்ந்து பார்த்து வாங்குவதில், அவளுக்கு மிகுந்த பிடிப்பு உண்டாகியிருந்தது. நிகேதனுக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை. “தனியா போகாத. நான் வந்து வாங்கித் தாறன்.” என்பான். அவனுக்கு நேரமில்லை என்பதில் அவள் அதைக் காதில் விழுத்துவதில்லை.

இன்றும் இரண்டு கைகள் நிறைய மாலிகைச்சாமான்கள் வாங்கிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தாள். சிவப்பு நிற மினி கூப்பர் ஒன்று அவளைக் கடந்துபோனது. அவளிடம் இருந்த அதே வகை. அதைப் பார்த்ததும் உதட்டினில் முறுவல் அரும்பிற்று. இப்படி, உச்சி வெயிலில் இரண்டு கைகளும் வெட்ட வெட்ட பைகளைச் சுமந்துகொண்டு நடப்போம் என்று அப்போதெல்லாம் நினைத்தும் பார்த்ததில்லை.

எப்போதும் இளைப்பாறும் பெருத்து வளர்ந்த ஆலமரத்தைக் கண்டதும், அதன்கீழ் இருந்த வாங்கிலில் சென்று அமர்ந்துகொண்டாள். அது ஒரு நர்சரி வளாகம். வீதியோரமாகவே அமைந்திருந்தது. கூடவே, ஒன்றிலிருந்து மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டேக்கெயார் மாதிரி இணைத்து நடத்தினர்.

போதுமான பரப்பளவில் இடுப்பளவு உயரத்தில் சுற்றிவர கம்பி வேலி அமைத்திருந்தனர். அதில் வெளியே நின்று பார்க்கவே எல்லாம் தெரிந்தது. குழந்தைகளுக்குத் தேவையான சறுக்கி, ஊஞ்சல், மணலில் விளையாடும் திட்டி போன்றவை முன்னுக்கு இருக்க, ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் அளவான வெயிலை மட்டுமே உள்ளே விட, அதன் கட்டடங்கள் பிண்ணுக்காக இருந்தது. எப்போதும் ஏதோ ஒரு வயதினர் வெளியே விளையாடிக்கொண்டு இருப்பதில் அதிலிருந்து இளைப்பாறியதும் ஆயிற்று, குழந்தைகளை வேடிக்கை பார்த்ததும் ஆயிற்று என்று, அந்த இடத்தை ஆரணி தெரிவு செய்து வைத்திருந்தாள்.

சும்மா பார்வையைச் சுழற்றியபோது வேலைக்கு ஆள் தேடுவதாக நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்ததைக் கவனித்தாள். அனுபவம் இருந்தால் முன்னுரிமை உண்டாம். ஆனால் அவள் ஏன் முயற்சிக்கக் கூடாது? நொடியில் முடிவு செய்து அலுவலகம் சென்று விசாரித்தாள்.

பொறுப்பானவர் இல்லை என்று அடுத்தநாள் எட்டுமணிக்கு வரச்சொன்னார்கள். அன்று, நிகேதன் வர இரவு பதினொன்று தாண்டியிருந்தது. உணவை முடித்துக்கொண்டு சோர்வுடன் கட்டிலில் சரிந்து கண்ணை மூடியவனின் அருகில் சென்று அமர்ந்தாள், ஆரணி.

அந்தச் செய்கையிலேயே ஏதோ பேசப் பிரியப்படுகிறாள் என்று பிடிபட, “என்ன ஆரா?” என்றான் விழிகளைத் திறக்காமலேயே.

நடந்ததைச் சொல்லி, “நாளைக்குப் போய் வேலை கேக்கட்டா நிக்கி?” என்றாள் தயக்கத்துடன்.

அவன் விழிகளைத் திறந்து அவளைப் பார்த்தான். அவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. “உனக்கும் என்னில இருந்த நம்பிக்கை போயிட்டுது போல.” என்றான் அவன்.

அவனை நன்றாக முறைத்துவிட்டு படக்கென்று முதுகுகாட்டிப் படுத்துக்கொண்டாள் ஆரணி. சற்றுநேரம் இருவரிடமும் எந்தச் சத்தமும் இல்லை. அந்த அமைதி கொடுமையாக இருக்க அவளைத் தன்புறமாகத் திருப்பினான் அவன். அவள் மறுக்க, “நிக்கின்ர ஆராக்கு கோபம் எல்லாம் பெருசா வரும்போல இருக்கே.” என்றான் அவளின் பாணியில்.

அவளின் கோபம் கரைந்தே போயிற்று. அவன்புறமாகத் திரும்பிப் படுத்தாள். “லூசன் மாதிரி கதைச்சா கோவம் இல்ல கொலையே செய்வாள் நிக்கின்ர ஆரா.” என்றாள் முறைப்புடன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“சரியான ராங்கியடி நீ!” என்று கொஞ்சிவிட்டு, “இப்ப வேலைக்கு என்ன அவசரம் ஆரா? அதுதான் நான் ஒண்டுக்கு ரெண்டு வேலைக்குப் போறேனே. ஹயரும் வருது தானே.” என்றான் அவன்.

அதனால் தான் நானும் உழைக்க நினைக்கிறேன் என்று சொல்லவில்லை அவள். ஒருவருக்கு இருவராக ஓடினால் தூரம் பாதியாகிவிடுமே. “சும்மா தானேடா வீட்டுல இருக்கிறன். அதைவிட அந்தக் குழந்தைகளைப் பாக்க ஆசையா இருக்கு. பொழுதும் போகும். சம்பளம் எண்டும் ஒண்டு வரும். கஷ்டமா இருந்தாலோ பிடிக்காட்டியோ நானே நிண்டுடுவன்(நின்றுவிடுவேன்). முந்தியாவது நீ நாலுமணிக்கு வந்திடுவாய். இப்ப முழுநாளும் நீயுமில்லாம தனியா கஷ்டமா இருக்கு நிக்ஸ்.” அவன் மறுத்துவிடாதபடிக்குக் கெஞ்சினாள் அவள்.

அவளின் நிலை புரிந்தது. ஆனாலும் அவனால் சம்மதிக்க முடியவில்லை. “என்ன நினைக்கிறாய் எண்டு சொன்னாத்தானே எனக்கும் தெரியும்.” என்றாள் மீண்டும்.

“சும்மாவே வசதியா வாழ்ந்தவளை இங்க கொண்டுவந்து, அடிப்படை வசதிகூட இல்லாம வச்சிருக்கிறன் எண்டு மனம் குத்துது ஆரா. இதுல வேலைக்கும் அனுப்புறதா எண்டு இருக்கு. உன்ர அப்பா கேள்விப்பட்டா என்னைப்பற்றி இன்னும் மோசமா நினைப்பார்.” அவளிடம் மட்டும் தானே அவனாலும் மனத்தைத் திறந்து கதைக்க முடியும். அதில் உள்ளதைச் சொன்னான்.

“அப்பிடிப் பாத்தா, என்னாலதான் நீ படிச்ச படிப்புக்கு வேலை தேடாம கிடைச்ச வேலைய செய்றாய். என்னால தான் உன்ர அண்ணா உன்னைப் பேசினவர்(திட்டினவர்). மாமிக்கு உன்னில நம்பிக்கை இல்லாம போனதும் என்னாலதான். இதையெல்லாத்தையும் நினைச்சு நானும் கவலைப்படவா?” என்று நியாயம் கேட்டவளை நன்றாக முறைத்தான் அவன்.

“உன்னோட கதைச்சு வெல்லவே ஏலாது!”

“கதையை மாத்தாத நிக்கி. நானும் நீயும் ஒண்டு எண்டு நினைச்சா இப்பிடியெல்லாம் கதைக்கமாட்டாய். ரெண்டுபேரும் தான் காதலிச்சோம். ரெண்டுபேரும்தான் கல்யாணமும் கட்டினோம். ரெண்டுபேரும் தான் ஒவ்வொரு பிரச்சனையையயும் சமாளிக்கிறோம். அதேமாதிரி ரெண்டுபேருமே உழைச்சா கெதியா முன்னுக்கு வரலாம் தானே. வேலை செய்றதுக்கு ஒரு வழி இருந்தும் வறட்டுப் பிடிவாதத்தால அதை வீணாக்கிறது முட்டாள்தனமா புத்திசாலித்தனமா எண்டு நீயே முடிவு செய்திட்டுச் சொல்லு. இனி நான் இதைப்பற்றிக் கதைக்கமாட்டன்.” என்றுவிட்டு மீண்டும் திரும்பிப் படுத்துக்கொண்டாள் அவள்.

மீண்டும் அமைதி. தான் சொன்னவற்றைப் பற்றி யோசிக்கிறான் என்று புரிந்தது. உறங்கிவிடாமல் அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்தாள் ஆரணி. சற்று நேரத்தில் மீண்டும் அவளை வளைத்தது அவன் கரங்கள். ரகசிய முறுவல் புரிந்தாள் ஆரணி. “என்னை விடு!” முறுக்கிக்கொண்டு கோபமாய்ச் சொன்னாள்.

“நாடகமாடாம வாடி கிட்ட!” என்றவன் ஒரே இழுவையில் அவளைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்திருந்தான். “இந்த வாய் எவ்வளவு கதைக்குது? கட்டின மனுசன் எண்டுற மரியாதை இல்லாம வாயடிக்கிற வாய வாயாலேயே தைக்கவேணும்.” என்றவன், சொன்னதைச் செய்தான்.

மறுக்கவில்லை அவள். அவன் கேட்டதைக் கொடுத்தாள். அவனது பிடரி மயிருக்குள் நுழைந்த கரங்கள் அவன் செய்கையில் உண்டான தன் விருப்பத்தையும் அவனுக்கு உணர்த்திற்று! அவளின் பித்தனாகிப்போனான் நிகேதன்.

இதழ்கள் பிரிந்த பொழுதினில் இதயங்கள் இரண்டறக் கலந்து போயிருந்தன. சுகமான அமைதி. “ஓம் எண்டு சொல்லு நிக்ஸ்.” கெஞ்சலாய் கேட்டாள் ஆரணி.

“சரி போ! ஆனா, என்ன சின்னப் பிரச்சனை எண்டாலும் சொல்லவேணும்.” என்கிற நிபந்தனையோடு சம்மதித்தான் அவன்.

அடுத்தநாள் காலையில் அவர்கள் சொன்ன நேரத்துக்குச் சரியாக அலுவலகத்தின் முன் காத்திருந்தாள் ஆரணி. அதன் நிறுவனர் அபிராமி அவளின் தகமைகளை ஆராய்ந்தார். வேலைக்கான அனுபவம் இல்லை, இப்போதுதான் திருமணமாகி இருக்கிறாள், குழந்தைகள் வளர்த்த அனுபவமும் இல்லை என்று வெகுவாகவே தயங்கினார்.

“மிஸ், அனுபவம் இல்லை தான். ஆனா, ஆரம்பம் எண்டு ஒண்டு இருந்தா தானே அனுபவம் வரும். நான் கம்பனில வேலை செய்து இருக்கிறன். அந்த அனுபவம் இருக்கு. ஒண்டு அல்லது ரெண்டு கிழமை இங்க நான் வேலை செய்றன். என்ர வேலையை பாத்திட்டு தாறதா இல்லையா எண்டு நீங்க டிசைட் பண்ணுங்கோ.” எப்படியாவது இந்த வேலை கிடைத்துவிட வேண்டும் என்பதில் அவசரமாகச் சொன்னாள்.

“எங்க.. எந்தக் கம்பனி?”

ஒருகணம் தயங்கி, “ஆரணி இண்டஸ்ட்ரீஸ்.” என்றாள் மெல்ல.

அவரின் புருவங்கள் உயர்ந்தது. மன்னாரிலேயே முன்னணியில் நிற்கும் போட் தயாரிக்கும் தொழிற்சாலை. அப்படியே மீன்வளங்கள் அனைத்துமே அவர்களின் கைவசம் தான். அங்கிருந்து இங்கு வரவேண்டிய அவசியம்?

“அந்த வேலைய ஏன் விட்டீங்க மிஸஸ் நிகேதன்?” அவளின் பெயர் ஆரணி என்பது அவரின் பொறியில் இன்னும் தட்டாததால் விசாரித்தார்.

“அது.. திருமணத்துக்குப்பிறகு விட்டுட்டன்.” மழுப்பலாகப் பதில் சொன்னாள் ஆரணி.

கணவன் சம்மதிக்கவில்லை போலும் என்று எண்ணியபடி அவளின் தகமைகள் மீது மீண்டும் பார்வையை ஓட்டியவரின் விழிகள் ‘ஆரணி நிகேதனில்’ நிலைத்து வேகமாக நிமிர்ந்தது.

“நீங்க? ஆரணி..”

“அது என்ர அப்பா திரு சத்தியநாதன்ர நிறுவனம்.”

சற்றுநேரம் புருவங்களைச் சுருக்கி யோசித்தார். “பெரிய இடத்து பிள்ளையா இருக்கிறீங்கம்மா. இங்க உங்களுக்குச் சிரமமா இருக்கும் எண்டு நினைக்கிறன்.” அவளைப்பற்றி அறிந்துகொண்டவருக்கு அவளோடு பேசும் பாணியே மாறிப்போயிருந்தது.

“நான் திருமணமாகி போயிருக்கிறது மத்தியதர குடும்பம் தான். அதைவிட என்னால ஏலுமா எண்டு பார்க்காமலேயே இல்லை எண்டு சொல்லுறது.. கவலையா இருக்கு மிஸ். என்னால முடியும் எண்டு நான் நம்புறன். ஒரு சான்ஸ் தந்து பார்க்க மாட்டீங்களா? உங்களுக்குத் திருப்தி இல்லாட்டி அப்ப சொல்லுங்க, நான் போறன்.” என்றாள் அவள்.

அவளின் திடமான பேச்சு, தெளிவான விளக்கம் எல்லாம் அவரையும் கவர்ந்திருந்தது.

எனவே, “ஓகே! நாளையில இருந்து வாங்கோ. இங்க நான் வேலைய மட்டும் தான் பாப்பன். பெரிய இடத்துப்பிள்ளை எண்டுறதுக்காக எந்தச் சலுகைகளையும் எதிர்பார்க்கக் கூடாது. ஒவ்வொரு தாய் தகப்பனும் எங்களை நம்பி தங்கட குழந்தைகளைத் தந்திட்டுப் போறீனம். அதால நிறைய கவனத்தோட நாங்க நடக்கவேணும். குழந்தை பராமரிப்பு எண்டுறது சாதாரண விசயம் இல்லை. பொறுமை வேணும். நிதானம் வேணும். அவசரப்படக்கூடாது. எந்த நேரமும் குழந்தைகளைக் கவனிக்க வேணும். கை நீட்டக் கூடாது. சினக்கக் கூடாது. இந்த வளாகத்துக்கச் சின்னப்பிழை நடந்தாலும் அதுக்கு நாங்கதான் பொறுப்பு. அதை நான் விரும்புறேல்ல. இந்த ரெண்டு கிழமைக்கும் பேமெண்ட் இல்ல. அதுக்குப் பிறகு தொடர்ந்து வேலை தந்தால் அதுக்குச் சம்பளம் இருக்கு.” என்று தெளிவாகத் தன் விதிகளைச் சொல்லிமுடித்தார் அவர்.

அடுத்தநாள் அதிகாலையிலேயே எழுந்து நிகேதனோடு அவளும் புறப்பட, “எங்க போறீங்கள் ரெண்டுபேரும்?” என்று கேட்டார், அமராவதி.

கணவன் மனைவி இருவரின் பார்வையும் சந்தித்து மீண்டது. “ஆரணி டவுனுக்க இருக்கிற நர்சரில வேலைக்குச் சேர்ந்து இருக்கிறாள் அம்மா. இண்டைக்குத்தான் முதல் நாள்.” என்றான் நிகேதன்.

அமராவதி அம்மாவின் முகம் கடுத்தது. “அத என்னட்ட சொல்லவேணும் எண்டு அவள் நினைக்கேல்ல பாத்தியா? இதுதான் உன்ர அம்மாக்கு இவள் தாற மரியாதை. இதுக்கு நீயும் உடந்தை. அதுசரி, நாங்க எல்லாம் இப்ப செல்லா காசுதானே. எங்களுக்கு மதிப்பும் இல்ல. மரியாதையும் இல்ல!” கண்கள் கலங்கச் சொன்னவர் எழுந்து அறைக்குள் போய்விட, ஆரணியை முறைத்தான் அவன்.

“அம்மாட்ட சொல்லவேணும் எண்டு உனக்குத் தெரியாதா ஆரா?”

“ஒரு சந்தோசமான விசயத்தை நீ ஆரிட்ட சொல்ல ஆசைப்படுவ நிக்கி? நீ சொல்லுறதை கேட்டதும் சந்தோசப்படுற மனுசரிட்ட தானே? பிறகு எப்பிடி நான் மாமிட்ட சொல்லுவன். முதல் எங்க அவா என்ர முகம் பாத்து கதைக்கிறவா?” என்று படபடத்தாள் அவள்.

“நீ சொல்லாதது பிழை. அதை நியாயப்படுத்த காரணத்தை அடுக்காத.” என்றான் அவன்.

முதன் முதலாக வேலைக்குப் போகப்போகிறோம் என்கிற உற்சாகம் அவளுக்கு வடிந்து போயிற்று.

காரில் சென்றுகொண்டிருந்த இருவர் இடையேயும் என்றும் இல்லாத அமைதி. அது ஆரணியின் மனதை இன்னுமே கனக்கச் செய்தது. அவள் சொல்லாமல் இருந்தது தவறுதான். ஆனால், எப்படியும் அவரிடம் தன்னால் சொல்லியிருக்க முடியும் என்று இப்போதும் தோன்றவில்லை. மாமி மருமகள் என்றாலே உருவாகிப்போகிற விலகலா அல்லது அவள் அவருக்கு மருமகள் ஆனவிதம் பிசகியதாலா, இல்லை அமராவதி அம்மாவுக்கு அவளைப் பிடிக்காமலே போயிற்றா எதுவோ ஒன்று அவரும் அவளுமாக இருக்கும் தனிமைகளில் அவளைப் பொருட்படுத்தவே மாட்டார். முகம் கொடுக்கவே மாட்டார். அப்படியானவரிடம் என்ன சொல்வது என்கிற வீம்பு அவளுக்கும் இருந்ததுதான்.

எது எப்படியானாலும் இதோ நர்சரி வாசல் வரை வந்துவிட்ட பிறகும் ஒரு வார்த்தை பேசாத அவன் கோபம், அவளின் தொண்டையை அடைக்கச் செய்தது.

காரை விட்டு இறங்கப்போனவளின் கையைப் பற்றினான் அவன். அவள் ஆர்வத்துடன் திரும்பிப் பார்த்தாள். “எதைப்பற்றியும் யோசிக்காம சந்தோசமா போ ஆரா. குழந்தைகளோட நல்லா விளையாடு. இது எங்கட குழந்தைகளை வளக்கிறதுக்கு நீ எடுக்கிற ட்ரெயினிங்.” என்றான் அவன் குறுஞ்சிரிப்புடன்.

அவளின் அத்தனை மனச் சிணுக்கங்களும் பனியாய் கரைந்து போயிற்று. “கள்ள படவா! இவ்வளவு நேரமா இந்தச் சிரிப்பை காட்டாம ஆராவா கொடுமை படுத்திட்டியேடா!” என்று அவன் தலையில் தட்டிவிட்டு உற்சாகம் துள்ள விடைபெற்றுக்கொண்டாள் அவள்.
 

Goms

Member
சூப்பர். ஒரு வழியா கொஞ்சம் நிம்மதி கிடைக்கும், வெளியே வந்து வேலை பார்ப்பதால். அவன் பாரத்தையும் குறைக்கலாம். 😍😍😍
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom