அவள் ஆரணி -18

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 18


நாட்கள் மின்னலாய் நகர்ந்துகொண்டிருந்தது. சுகிர்தன் இப்போதெல்லாம் நல்ல நண்பனாக மாறியிருந்தான். அவன் கார்மெண்ட்ஸ் பெண்களை அழைக்கப்போகும் நேரத்தில் இவளைக் கண்டால் கொண்டுவந்து இறக்கிவிட்டுவிட்டுப் போனான்.

அன்றைக்கு நிகேதனுக்குச் சம்பள நாள். வரும்போதே கைநிறையப் பைகளோடு வந்தான். பார்த்தால் தின்பண்டங்கள். கொஞ்சமில்லை ஒரு தொகை. கூடவே அவன் வேலை செய்யும் இடத்திலேயே ஆளுக்கொரு பிட்சா வாங்கிக்கொண்டு வந்திருந்தான். பில்லை பார்த்தவளுக்குத் தலை சுற்றிவிடும் போலிருந்தது. அவர்களின் வாழ்வாதாரம் இருக்கும் நிலையில் இதெல்லாம் அதிகப்படியில்லை. அதற்கும் மேலே!

“என்ன நிக்கி இதெல்லாம்?”

அவனுக்கும் விளங்காமல் இல்லை. ஆனால், ஆசையாகக் கேட்ட தங்கையிடம் எப்படி மறுப்பான்? “இண்டைக்கு ஒரு நாளைக்குத்தான். விடு!” என்றான் சமாளிப்பாக.

“அவளுக்கு அதுவும் பொறுக்க இல்லையாம்.” என்றார் அமராவதி. எல்லாவற்றிலும் கணக்குப் பார்த்து கவனமாக இருக்கிற அவள் மீது அவருக்கு எப்போதுமே கோபம் தான். அதை இன்று காட்டினார்.

“இப்பிடி வீண் செலவு செய்றது சரி எண்டு சொல்லுறீங்களோ மாமி?” அவரிடம் நேராகவே கேட்டாள் ஆரணி.

“எங்களை மாதிரி ஆட்களுக்குச் சம்பளம் வாற திகதி மட்டும் தான் ஆசைப்பட்டதை வாங்கிச் சாப்பிடுற நாள். அதுவும் உன்ர கண்ணுக்கு குத்திட்டுது போல!” என்றார் அவர்.

“எல்லாம் சரி மாமி, எனக்கு விளங்குது. ஆனா, இதையே சொல்லி ஒவ்வொரு மாதமும் செலவு செய்தா எப்பதான் இந்த நிலமைல இருந்து வெளில வாறது? நாள் போகப்போக விலைவாசியும் செலவும் கூடுமே ஒழிய வாற வருமானம் கூடப்போறது இல்ல. அப்ப இப்பவே சேமிச்சு முன்னுக்கு வந்தாத்தானே உண்டு. ஒரு.. ஒரு வருசம் இறுக்கிப் பிடிச்சா கொஞ்சம் நாங்க முன்னேறலாம். பிறகு மாதத்துல ஒருநாள் சாப்பிட்டத பத்துநாள் சாப்பிடலாம் எல்லா.”

உழைப்புக்கு மாற்றுவழி ஒன்றைக் கண்டுபிடித்து நிகேதனை ராஜேந்திரனிடம் இருந்து வெளியே கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற வேகம் அவளைப் பேச வைத்தது. அவளின் மனதில் இருப்பதை அறியாத மாமியாரோ, “அவள் தானும் உழைக்கிறன் எண்டுற திமிர்ல கதைக்கிறாள். நீயும் கேட்டுக்கொண்டு இருக்கிறாய்.” என்றார் மகனிடம்.

‘வாய மூடு ஆரா!’ கண்ணாலேயே அதட்டினான் நிகேதன். அவனுக்கு இப்படி சாப்பாட்டு விசயத்துக்காகப் பிரச்சனை உருவாவது பிடிக்கவே இல்லை.

ஆரம்பித்துவிட்டதை அவளால் இடையில் விட முடியவில்லை. எப்படியாவது விளங்கப்படுத்தினால் அடுத்த மாதத்தில் இருந்தாவது இது மாறுமே. “ஒரு காலம் உங்கட மூத்த மகன் அனுப்பின காசுக்க வாழ்ந்தீங்க தானே. அப்ப நிக்கின்ர படிப்புச் செலவையும் பாத்து குடும்பச் செலவையும் நடத்தின எங்களுக்கு ஏன் இப்ப கூடுதலா வருமானம் வந்தும் மிச்சம் பிடிக்க முடியேல்ல? இப்பிடியே எல்லாத்தையும் செலவு செய்தா கயலினிக்கு கல்யாண செலவுக்கு என்ன செய்வீங்க?” என்று, விடாமல் கேட்டாள்.

“பாத்தியா, அவளுக்கு உன்ர தங்கச்சிக்கு செய்யப்போற கல்யாண செலவுதான் கண்ணுக்க குத்துது. எப்ப பாத்தாலும் அதையே சொல்லிக்காட்டுறாள். நீ செலவே செய்யவேண்டாம் தம்பி. நான் பெரியவனிட்ட கேக்கிறன். மாலினின்ர கால்ல விழுந்து எண்டாலும் அவளின்ர கல்யாணத்த செய்துவைப்பன். நீ உன்ர குடும்பத்தைப் பார். நல்லா மிச்சம்பிடி. முன்னுக்கு வா. நாங்கதான் உங்களை உருப்பட விடாம பிடிச்சு வச்சிருக்கிறோம். ஆசைப்பட்ட சாப்பாடு; அதை வாங்கினதுக்கு இந்தப் பாடா?” கண்கள் கலங்கிவிடச் சொன்னார் அமராவதி.

நிகேதனுக்கு ஆரணி மீதுதான் மிகுந்த கோபம். அடக்கிக்கொண்டு, “அவள் தான் என்னவோ கதைக்கிறாள் எண்டா நீங்களும் அத தூக்கிப்பிடிக்காம பாக்கிற வேலையைப் பாருங்கம்மா!” என்று அவரைச் சமாதானம் செய்தான்.

“இல்ல தம்பி. இது சும்மா கதைக்கிற கதையில்ல. எப்ப பாத்தாலும் அவளின்ர கல்யாணத்தைப் பற்றித்தான் கதை வருது. காசை மிச்சம் பிடிக்கோணும், நான் நல்லாருக்கோணும் எண்டு உங்கட அப்பா போனபிறகு நான் நினைச்சிருந்தா நீங்க மூண்டுபேரும் படிச்சு இருப்பீங்களா? இல்ல, தன்னைப்பற்றி மட்டுமே உன்ர அண்ணா நினைச்சிருந்தா நாங்க வாழ்ந்து இருப்போமா? ஒரு வேலைக்குப் போற திமிர்ல என்ன எல்லாம் கதைக்கிறாள் எண்டு நீயே பாக்கிறாய் தானே. அவளின்ர காசில நாங்க சாப்பிடுறதுக்குப் பதிலா பட்டினி கிடக்கலாம். உன்னால முடிஞ்சா ஒரு பிடி சோறு உன்ர காசுல போடு. இல்லாட்டி இப்பிடியே இருந்து செத்துப்போறன்.”

“என்ன கதைக்கிறீங்க..” என்றவளை பேசவிடாமல், “போதும் ஆரா!” என்று அதட்டி அடக்கினான் நிகேதன்.

“என்ன போதும்? அப்ப மாமி சொன்ன மாதிரித்தான் நான் நினைக்கிறன் எண்டு நீயும் நினைக்கிறியோ?”

அதோடு நிகேதனின் பொறுமை முற்றுப் பெற்றிருந்தது! “வாயை மூடிக்கொண்டு போடி உள்ளுக்கு!” என்றான் சத்தமாக.

அவனுடைய கோபத்தில் ஒருகணம் அதிர்ந்து நின்றுவிட்டாள், ஆரணி.

“எல்லாம் நீ குடுக்கிற இடம். உன்ர சொல்லுக்கு ஒரு மதிப்பில்ல. இனியாவது கொஞ்சம் கவனமா இரு! இல்ல உழைக்கிறன் எண்டுற துணிவில இன்னும் கதைப்பாள்!” வாய்க்கு வாய் காட்டுகிற அவளின் குணம் அமராவதி அம்மாவுக்குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. இன்று மகனே அதட்டிவிட்டதில் தைரியமாகச் சொன்னார்.

“உழைக்காட்டியும் கதைப்பன் மாமி!” என்று அவரிடம் சொல்லிவிட்டு, “இனி என்ர சம்பளக்காச நான் தரமாட்டன் நிக்கி. அதேமாதிரி, ஹயர் போற காசும் அப்பிடியே என்ர கைக்கு வரவேணும். ராஜேந்திரன் அங்கிளிட்ட வாங்குற சம்பளத்தில் என்னவாவது செய்ங்கோ!” என்று அறிவித்துவிட்டு அறைக்கு நடந்துவிட்டாள் ஆரணி.

அவன் அறைக்குள் வந்தபோது அவள் இல்லை. வெளியே கொடியில் காய்ந்திருந்த உடைகளை எடுப்பது தெரிந்தது. வேண்டுமென்றே கதவு நிலையில் கையைக் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றான். உடைகளைக் கையில் அள்ளிக்கொண்டு வந்தவள் அவன் முகத்தைப் பாராமல் நின்றாள். அவன் வழிவிடவில்லை. அவளைக் கதைக்க வைக்க முயல்கிறான் என்று புரிந்துவிட, ஒரு முறைப்பு முறைத்துவிட்டு அவனைப் பிடித்துத் தள்ளினாள். அவன் அசையாமல் நின்றான். விடாமல் அவள் தள்ள சிறு சிரிப்புடன் விலகினான்.

எப்போதுமே அவளின் கோபங்கள் அவனை வசீகரிப்பவை! இன்றும் அவளையே பார்த்திருந்தான்.

உடைகளைக் கட்டிலில் போட்டுவிட்டு, அயர்ன் பண்ணும் ஸ்டாண்டை எடுத்துவைத்து அயர்ன் பண்ண ஆயத்தமானாள். அவளின் ஒவ்வொரு செய்கையிலும் அவன் மீதான கோபம் தெறித்தது. இந்தக் கோபம் எவ்வளவு நேரத்துக்கு என்று பார்ப்போமே! கட்டிலில் கிடந்த உடைகளின் மீதே மல்லாந்து விழுந்தான் நிகேதன். கைகள் இரண்டையும் தலைக்குக் கொடுத்தபடி சிறு சிரிப்பும் ரசனையுமாக அவளையே பார்த்தான்.

ஆரணிக்கு வேலையே செய்ய முடியவில்லை. அவன் பார்வை போகுமிடங்கள் மிகவுமே தொந்தரவு செய்தது. இவன! வந்த ஆத்திரத்துக்கு நன்றாக நான்கு அடி போடவேண்டும் போல் கை துறுதுறுத்தது. அதைவிட எவ்வளவு நேரமாகத்தான் ஒரே பாண்ட்டை அயர்ன் பண்ணமுடியும்?

அவன் முகம் பாராமல் போய் மற்றதை எடுக்க முயல, அதற்கு விடாமல் அப்படியே கிடந்தான் அவன். அவளும் அவனைப் பாராமல் இழுத்து இழுத்துப் பார்த்தாள். இம்மியளவும் அசைக்கமுடியவில்லை.

அவள் கோபத்துடன் திரும்ப முயல, கையைப் பிடித்து இழுத்துத் தன்மேல் போட்டுக்கொண்டான்.

அவன் முகம் பாராமல் விடுபட முயன்றாள் ஆரணி. அதற்கு விடாமல் புருவங்களை உயர்த்தி என்ன என்று கேட்டான் நிகேதன்.

“நான் உன்னோட கோவம்!”

“என்னத்துக்குக் கோவமாம்?”

“மாமி கயலின்ர கலியாணத்தைப்பற்றி சொன்னதுக்குப் பேசாம இருந்தனி தானே. நீயும் என்னை அப்பிடித்தான் நினைக்கிற என்ன?”

“அமைதியா இருக்கிறதுக்கு அது மட்டும் அர்த்தமில்லை ஆரா. என்ர ஆராவைப்பற்றி எனக்குத் தெரியும் எண்டுறதும் வரும்.” என்றான் அவன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவள் அவனையே பார்க்க, “எனக்கு உன்னிலதான் கோவம் வந்தது. அவா கதைச்சா அதையே நீ என்னட்டையும் கேப்பியா? என்ர நிக்கிக்கு என்னைப்பற்றித் தெரியும் எண்டு நினைக்க மாட்டியா?”என்று கேட்டான்.

அவள் மெல்ல உதட்டைக் கடித்தாள். தன் தவறு புரிவது போலிருக்க, “அப்ப என்னிலதான் பிழையா?” என்றாள் உள்ளே போய்விட்ட குரலில்.

“உன்னில ஒரு பிழையும் இல்ல. இனி அப்பிடிக் கேக்காத எண்டு சொல்லுறன். அதைவிட, சாப்பிடுற சாப்பாட்டுக்கு சண்டை வாறது ஒரு மாதிரி கேவலமா இருக்கு ஆரா.” என்று தன் மனதைச் சொன்னான் அவன்.

அவளுக்கும் புரிந்தது. ராஜேந்திரன் மூலம் உருவான ஒருவிதக் கோபம் தானே அவளுக்குள்ளும் புகைந்துகொண்டு இருப்பது. அதை அவனிடம் சொல்ல முடியாதே. “இனி இப்பிடி கதைக்கேல்ல.” என்றவள், “சம்பள விசயம் நான் சொன்னது சொன்னதுதான்!” என்றாள் அழுத்தமாக.

அவன் உதட்டினில் முறுவல் மலர்ந்தது. “சரியடி வாயாடி! ஆனா இந்தக் காசையெல்லாம் வச்சு என்ன செய்யப்போறாய்?” என்று வினவினான்.

“காரணம் சொன்னாத்தான் தருவியோ?” கோபத்துடன் கேள்வி எழுப்பியவளின் சிவந்திருந்த மூக்கைப் பிடித்து ஆட்டினான் நிகேதன். “என்ன ஆளடி நீ? சூடேறினாத்தான் கடுகு கூட வெடிக்குது. உன்ன லைட்டா தட்டினா காணும் போல இருக்கே.” என்று கேலி செய்து சிரித்தான்.

-------------------

அன்று அவர்களின் கலைநிகழ்ச்சி. நிகேதனையும் விடுமுறை எடுக்கவைத்து அழைத்துக்கொண்டு டேக்கெயார் செண்டருக்கு வந்திருந்தாள் ஆரணி. பார்க்கும் இடமெங்கும் பலவண்ண மலர்களாய் குழந்தைகள். பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை நிகேதனுக்கு. கூடவே, மிகுந்த கவனத்துடன் ஓடி ஓடி அவர்களைக் கவனித்த ஆரணியையும் தனக்குள் வியந்து பார்த்தான். அதுவரை, அவள் அவனுக்குச் செல்லப் பெண்டாட்டி. இங்கோ பொறுப்புள்ள பெண்ணாக மிடுக்குடன் மிளிர்ந்தாள்.

மண்டபத்தில் பெற்றோர்களோடு ஒருவனாக அவனும் அமர்ந்திருக்க, அடுத்ததாக அவளின் நிகழ்ச்சி தொடங்க இருந்ததில் மேடையின் அருகில் குழந்தைகளோடு நின்றிருந்தாள் ஆரணி. இத்தனை நாட்களாகச் சொல்லிக் கொடுத்தத்தை மறக்காமல் செய்வார்களா இல்லை மேடையில் நின்று திருதிரு என்று விழிப்பார்களா என்கிற பதட்டம் அவளுக்கு. கூடவே, அவள் பொறுப்பெடுத்த நிகழ்வு ஒன்று முதன் முதலாக மேடையேறப்போகிற பரபரப்பும்.

நிலா நிலா ஓடிவா பாடல் தான் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. நிலாவாக, மலையாக, மல்லிகைப்பூவாக, பட்டமாக, பம்பரமாக என்று குழந்தைகளே உருமாறி இருந்தனர். அந்தந்தப் பாத்திரம் ஏற்றவர்கள் பாடிக்கொண்டே அதற்கேற்ப நடிக்கவும் வேண்டும்.

ஒரு வழியாக அவளின் குழந்தைகள் மேடையேறினர். அவர்கள் விட்ட குட்டிக் குட்டித் தவறுகளும், மறந்துபோனதில் வாயில் கையை வைத்துக்கொண்டு விழித்ததும் பேரழகைக் கொடுத்துவிட, அவர்களின் மேடையேற்றம் கண்கொள்ளாத காட்சியாக அமைந்துபோயிற்று. என்னவோ தன் சொந்தக் குழந்தையே மேடை ஏறியது போன்று ஆரணிக்குச் சொல்லில் வடிக்க முடியாத சந்தோசம்.

அவர்கள் மேடையிலிருந்து இறங்கியதுமே நிகேதனைத்தான் திரும்பிப் பார்த்தாள்.‘வாவ் ஆரா!’ என்று விரல்களால் அபிநயித்துக் காட்டினான் அவன். அதில் மலர்ந்து சிரித்தாள் ஆரணி. ஒருவழியாக நிகழ்ச்சிகள் முடிய, பெற்றவர்களோடான நட்புடன் கூடிய உரையாடல்கள், உபசரிப்புக்கள் எல்லாம் முடிந்து கையில் ஒரு இரண்டு வயது சுட்டியுடன் நிகேதனிடம் வந்து சேர்ந்தாள் ஆரணி.

குழந்தையை இடுப்பில் பாந்தமாக வைத்திருந்தவளின் தாய்மையில் அவன் மனம் சிக்குண்டது. “மாமாட்ட வாறீங்களா செல்லம்?” ஆசையோடு கையை நீட்டிக் கூப்பிட்டான்.

அவள் மறுத்து இவளின் கழுத்தில் முகம் புதைக்க, “எனக்கு எப்ப பேபி பெத்துத் தரப்போறாய் ஆரா?” என்று, ஏக்கமும் ஆசையுமாகக் கேட்டான் நிகேதன்.

அவள் மனமும் ஏங்கிற்று. “எனக்கும் ஆசையாத்தான் இருக்கு நிக்கி.” என்றாள் கையிலிருந்த குழந்தையைப் பார்த்தபடி.

“பெறுவமா?” என்று கேட்டவனை வேதனையோடு ஏறிட்டாள் ஆரணி. கணவன் மனைவி இருவருக்குமே குழந்தை மீதான ஆசை வந்திருந்தாலும் காலம் இன்னும் அதற்கு வழிவகுக்கவில்லையே.

“பெத்தா, நான் வேலைக்குப் போகேலாது. உனக்கு வீட்டுல நிக்கவே நேரமில்லை. பிறகு எப்பிடிடா பிள்ளையச் சந்தோசமா வளப்பம்?” நிகழ்காலத்தின் நிதர்சனத்தை எடுத்து உரைத்தாள் ஆரணி. அவனுக்கும் புரிந்தது. தன் இயலாமை கொடுத்த சினத்தில் அதுவரை இருந்த மலர்ச்சி குன்ற முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

ஆரணிக்கும் அவன் மனநிலை விளங்கிற்று! “மாமாட்ட போறீங்களா செல்லம்?” அவனைச் சமாளிக்க எண்ணிக் கொடுக்கப்போக அவளோ மறுத்து இவளை இன்னுமே இறுக்கிக் கட்டிக்கொண்டு உதடு பிதுக்கினாள்.

“சரிசரி! நீங்க அழவேண்டாம்!” என்று சமாதானம் செய்துவிட்டு, “மாமா கூடாது என்ன? அவருக்கு அடிப்பமா? பிள்ளையை அழவைக்கிறார்.” என்றபடி அவள் அடிக்க, அவன் விலக, இவள் துரத்தி அடிக்க, இதைப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தையோ வட்ட விழிகள் விரிந்து மின்ன சிரிக்கத் தொடங்கியிருந்தாள்.

அதில் நிகேதனின் மனவாட்டமும் மறைந்துபோய் முகத்தில் சிரிப்பு வந்திருந்தது. “நான் அடிவாங்கினா உங்களுக்குச் சிரிப்பா இருக்கா டார்லிங்!” அவளைக் கிச்சுக் கிச்சு மூட்டி இன்னும் சிரிக்க வைத்தான்.

“இவ்வளவு ஆசை இருக்கிறவே சொந்தமா ஒரு குழந்தைக்குச் சொந்தக்காரர் ஆகவேண்டியது தானே.” என்று ஒரு குரல் பின்னிருந்து கேட்டது.

இருவரும் திரும்பிப் பார்க்க அங்கே சுகிர்தன் வந்துகொண்டிருந்தான்.

“நிக்கி, இவர்தான் சுகிர்தன். சுகிர்தன் இவ..” என்று அவள் சொல்லும்போதே, “உங்கட அவன் அவர்.” என்றான் அவன்.

“சுகிர்தன்ன்ன்ன்..”

“ஓகே ஓகே நான் ஒண்டும் சொல்லேல்ல!” என்று அவளைச் சமாதானப்படுத்திவிட்டு, “ஹாய் நிகேதன், நான் சுகிர்தன். உங்கட வைஃப்போட சண்டை பிடிச்சவன்.” என்று கரம் நீட்டினான் அவன்.

“அந்த வைஃபை கட்டின பாவப்பட்ட புருசன் நான்தான்.” என்று தானும் கையைக் கொடுத்தான் நிகேதன்.

பக்கென்று சிரித்துவிட்டிருந்தான் சுகிர்தன்.

“நிக்க்கி!” என்று ஆரணி பல்லைக்கடிக்க, “சுகிர்தன்! நீங்க சும்மா சும்மா என்ர ஆராவ பகிடி செய்றேல்ல சரியோ? எனக்குப் பிடிக்காது!” என்று, முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு மெய்போலவே சொன்னான் நிகேதன்.

“நடிக்காதடா நீ! உன்னைப்பற்றி எனக்குத் தெரியும்!” என்று கணவனின் முதுகிலேயே ஒன்று போட்டாள் ஆரணி.

“என்ன அநியாயம் இது? ஆண்வர்க்கம் அடிவாங்கியே வாழவேணும் போல இருக்கே. யார் போட்ட சாபம் இது?” என்று நிகேதனுக்காகக் குரல் கொடுத்தான் சுகிர்தன்.

“ஹல்லோ! ரெண்டுபேருக்கும் என்னைப் பாத்தா எப்பிடித் தெரியுது? என்னை வச்சுத்தான் உங்க ரெண்டு பேருக்கும் பழக்கமே வந்திருக்கு. இப்ப என்னையே போட்டுத் தாக்குறீங்களா? இருங்க சேர்த்த மாதிரியே ரெண்டுபேருக்கையும் சண்டையை போட்டு பிரிச்சு விடுறன்!” என்று கருவினாள் அவள்.

ஒருவரை ஒருவர் வாருவதும் சிரிப்பதுமாய் நட்புடன் கூடிய உரையாடல் வெகு இயல்பாய் அவர்களுக்குள் உருவாகிப்போக, நிகேதனை சுகிர்தனுக்கும் சுகிர்தனை நிகேதனுக்கும் மிகவுமே பிடித்துப் போனது.

“ஒரு நிமிசம் நிக்கிறீங்களா? நான் கூட்டிக்கொண்டு போற பிள்ளைகள் எல்லாம் ரெடியா எண்டு பாத்துக்கொண்டு வாறன்.” என்று நடந்தவனிடம், “அவே பி ப்லோக்ல நிப்பினம் எண்டு நினைக்கிறன் சுகிர்தன்; பாருங்கோ.” என்று சொல்லியனுப்பினாள் ஆரணி.

அவன் போனதும், “நிக்கி, அந்த வேன் எவ்வளவுக்கு வாங்கினவர், என்னென்டு வாங்கினவர் எண்டு அவரிட்ட ஒருக்கா விசாரி.” என்றாள் ஆரணி.

கேள்வியாக அவன் பார்க்க, “அவரின்ர குடும்பமும் எங்களை மாதிரித்தான். முழுக்காசும் குடுத்து வாங்கியிருக்க மாட்டார். ஒருக்கா ஏதோ கதையில லோன் ஓடுது எண்டு சொன்னவர். நீ ஒருக்கா வடிவா விசாரி.” என்று மீண்டும் சொன்னாள் ஆரணி.

காரணம் பிடிபடாதபோதும், சுகிர்தன் வந்தபோது விபரம் கேட்டுக்கொண்டான் நிகேதன்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom