அத்தியாயம் 3
திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவானதும் நிகேதன் பார்த்தது தன்னுடைய பர்சினைத்தான். இரண்டாயிரத்துச் சொச்சங்களில் தான் காசிருந்தது. அதுவும், எதற்கும் வைத்துக்கொள் என்று அன்னை காலையில் இண்டர்வியூக்காக கொடுத்ததும் அவனிடம் ஏற்கனவே இருந்த கொஞ்சமும் தான். முகம் இறுகிப்போயிற்று. முடிவுகளை எந்தச் செலவுகளும் இல்லாமல் எடுத்துவிடலாம். அதனைச் செயலாற்றக் காசு வேண்டுமே!
‘காசேதான் கடவுளப்பா. கடவுளுக்கே அது தெரியுமப்பா’ இந்த வார்த்தைகளின் வலிமையை உணர ஆரம்பித்த நேரம், ஆரணியும் பர்சினை எட்டிப் பார்த்து சூழ்நிலையை உள்வாங்கிக்கொண்டாள்.
“மச்சி! இங்க பார்! போட்டிருக்கிற உடுப்புக் காணும். நான் கழுத்தில போட்டிருக்கிற செயின் மூண்டு பவுன் வரும். கைச்செயின் இருக்கு. மோதிரங்கள் இருக்கு. எல்லாத்தையும் குடுத்துப்போட்டு தாலிக்கொடியும் தாலியும் வாங்குவம். கோயில்ல வச்சு அதை நீ எனக்கு கட்டினா நான் உனக்கு மனுசி; நீ எனக்கு மனுசன். விசயம் முடிஞ்சது!” அவள் சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை அவனுக்கு. அதெல்லாம் அவளின் தந்தை வாங்கி கொடுத்தவை. அவனுடைய உழைப்பு அல்ல. அவளே அவரின் மகள் தான் என்கையில் இதில் ரோசம் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்று புத்திக்குப் புரிந்தாலும் ரோசம் கொண்ட மனம் முரண்டியது.
அவள் ஒரு முக்கால் காற்சட்டையும் சட்டையும், அவன் ஒரு ஜீன்சும் சேர்ட்டும் அணிந்திருந்தனர். திருமண ஆடைகளா இவை? அவசரத்தில் செய்தாலும் அந்தரத்தில் செய்தாலும் திருமணம் திருமணம் தானே. என்ன செய்வது?
“பிரெண்ட்ஸ் ஆரிட்டையும்(யாரிடமும்) கேட்டுப்பாப்பம்.” அதைச் சொல்லவே நாக்கூசியது. அதுவரை எந்த நிலையிலும் ஒரு ரூபாய் கூட யாரிடமும் மாறியதில்லை. சுயமரியாதையை இழக்காதவன். இன்று.. அவனுடைய பிடிவாதம் வெல்லும் நேரமல்ல இது என்று எண்ணியபடி ஃபோனை எடுத்தான்.
உடனேயே கையைப் பிடித்துத் தடுத்தாள் ஆரணி. “வேண்டாம் நிக்ஸ். கடனோட எங்கட வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டாம். இருக்கிறதை வச்சு சமாளிப்பம்.”
“இதுக்குத்தான் சொன்னனான்..” பொங்கிய சினத்துடன் ஆரம்பித்தவன் உடனேயே நிறுத்திவிட்டான். முடிவெடுத்த பிறகு கதைப்பதில் பிரயோசனமில்லை. “இந்த ரெண்டாயிரத்த வச்சு என்னடியப்பா செய்றது? ஒரு சாரி கூட வாங்கேலாது.” கையாலாகாத கோபத்தில் மொழிந்தான் அவன்.
“அப்பிடி எண்டு ஆரு சொன்னது உனக்கு? நீ வா, நான் வாங்கிக் காட்டுறன்!” என்று கடைக்கு அழைத்துச் சென்றாள் அவள்.
அங்கே, ‘திருமணச் சேலைகள்’ என்கிற பிரிவில் அவனது மொத்தக் காசுக்கும் கூடச் சேலை இல்லை. பொதுவான பகுதிக்கு வந்து விலை குறைந்ததாகத் தேடித் தேடி அவள் பார்ப்பதைப் பார்க்க முடியாமல் வெளியே வந்துவிட்டான் நிகேதன். ஒரு திருமணச் சேலையைக்கூட வாங்கிக் கொடுக்க வழியில்லை. இதில் அவளைத் திருமணம் செய்யப்போகிறான்.
அவனை நம்பி வந்தவள் அந்த நிமிடத்தில் காலில் அணிந்திருப்பதின் விலையே பல ஆயிரங்களில் இருக்கும். திருமணத்துக்காக அணியப்போகும் சேலையை ஐநூறுக்குள் தேடிக்கொண்டிருக்கிறாள். எதிர்காலத்தின் மீதான பயம் மெல்லப் பிடித்துக்கொண்டது. இனிவரும் நாட்கள் அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது? வீட்டினர் என்ன சொல்லுவார்கள்?
“என்னடா? இங்க வந்து நிக்கிறாய்?” மக்களால் நிறைந்து வழிந்துகொண்டிருந்த அந்தக் கடைவீதியை வெறித்துக்கொண்டிருந்தவனின் கரம் பற்றிக் கேட்டாள், ஆரணி.
ஒன்றும் சொல்லாமல் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவனுக்குள் ஓடும் பல கேள்விகளில் ஒன்று கூட அவளுக்குள் ஓடவில்லை போலும். நிர்மலமான முகத்தில் நம்பிக்கை நிறைந்திருக்க, அவனைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்தாள். எது கொடுத்த திடம் அவளை இப்படி நிற்க வைத்திருக்கிறது?
“என்ன நம்பிக்கைல திருமணம் வரைக்கும் வந்து நிக்கிறாய் ஆரா?”
“உன்ன நம்பித்தான்!” பளிச்சென்று பதில் சொன்னாள் அவள்.
எப்படி உணர்ந்தான் என்று சொல்லத்தெரியாமல் அப்படியே நின்றான் நிகேதன். வேலை இல்லை. ஓரளவுக்கு வசதி என்று சொல்லும் அளவிலும் இல்லை. அண்ணனின் தயவில்தான் வாழ்கிறான் என்று நன்கு தெரியும். இருந்தும் நம்புகிறாள். கர்வம் கொள்வானா? இல்லை இந்த நம்பிக்கையை எப்படிக் காப்பாற்றுவேன் என்று கலங்குவானா?
அவன் கரத்தை அழுத்திக் கொடுத்தாள் ஆரணி.
“கண்டதையும் யோசிக்காத நிக்ஸ். ரெண்டுபேரும் படிச்சிருக்கிறம். புத்தி இருக்கு. உடம்புல பலம் இருக்கு. எல்லாம் சமாளிக்கலாம். இப்ப நான் எடுத்த சாரி நல்லாருக்கா எண்டு பார்!” என்று கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.
குங்கும நிறத்தில் ஒரு கொட்டன் சேலை. தோளில் போட்டுக் காட்டினாள். அவளின் நிறத்தை இன்னுமே தூக்கிக் காட்டியதுதான். ஆனாலும், வெகு சாதாரணம். அவனுக்குப் பிடிக்கவேயில்லை. ஒன்றுமே சொல்லாமல் நின்றான்.
“அடேய்! என்னைச் சத்தியநாதனின்ர மகளா பாக்காத! இனி அவரே அப்பிடி நினைக்கமாட்டார். வேலை வெட்டி இல்லாத நிகேதனின்ர மனுசியா பார். நல்லாருக்கும்.” என்றாள் கண்ணடித்து.
அவன் உதட்டிலும் சிரிப்பு முளைத்தது. இருக்கும் மிக மோசமான நிலமையைக் கூடி கேலிபேசிச் சிரிக்க அவளால் மட்டுமே முடியும். நெஞ்சில் நேசம் பொங்கப் பார்த்தான். பேரழகியாகத் தெரிந்தாள்.
உள்ளத்தின் அழகை ஆடைகள் கூட்டிக் குறைத்துவிடுமா என்ன? “வடிவா இருக்கடி!” அவள் காதோரமாய்க் கண்களில் காதல் மின்னச் சொன்னான் அவன்.
அவள் முகம் பூவாக மலர்ந்து போயிற்று!
“நிக்ஸ்! இருக்கிறத வச்சு வாழுறது தான்டா வாழ்க்கை. இப்ப எங்களிட்ட இருக்கிறது இவ்வளவுதான். கட்டாயம் ஒருநாள் நல்லா வருவம். அப்ப வாங்கித்தா, கட்டுறன். இது முடிவில்ல ஆரம்பம். அதால சிரிச்சமாதிரியே இரு!” உற்சாகத்தோடு சொன்னவள், அந்தச் சேலைக்குப் பொருந்தும் ரெடிமேட் பிளவுஸ், அவனுக்கு வேட்டி சட்டை என்று ஆயிரத்தி ஐநூறுக்குள்ளேயே தேவையானவற்றை எடுத்து முடித்தாள்.
திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவானதும் நிகேதன் பார்த்தது தன்னுடைய பர்சினைத்தான். இரண்டாயிரத்துச் சொச்சங்களில் தான் காசிருந்தது. அதுவும், எதற்கும் வைத்துக்கொள் என்று அன்னை காலையில் இண்டர்வியூக்காக கொடுத்ததும் அவனிடம் ஏற்கனவே இருந்த கொஞ்சமும் தான். முகம் இறுகிப்போயிற்று. முடிவுகளை எந்தச் செலவுகளும் இல்லாமல் எடுத்துவிடலாம். அதனைச் செயலாற்றக் காசு வேண்டுமே!
‘காசேதான் கடவுளப்பா. கடவுளுக்கே அது தெரியுமப்பா’ இந்த வார்த்தைகளின் வலிமையை உணர ஆரம்பித்த நேரம், ஆரணியும் பர்சினை எட்டிப் பார்த்து சூழ்நிலையை உள்வாங்கிக்கொண்டாள்.
“மச்சி! இங்க பார்! போட்டிருக்கிற உடுப்புக் காணும். நான் கழுத்தில போட்டிருக்கிற செயின் மூண்டு பவுன் வரும். கைச்செயின் இருக்கு. மோதிரங்கள் இருக்கு. எல்லாத்தையும் குடுத்துப்போட்டு தாலிக்கொடியும் தாலியும் வாங்குவம். கோயில்ல வச்சு அதை நீ எனக்கு கட்டினா நான் உனக்கு மனுசி; நீ எனக்கு மனுசன். விசயம் முடிஞ்சது!” அவள் சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை அவனுக்கு. அதெல்லாம் அவளின் தந்தை வாங்கி கொடுத்தவை. அவனுடைய உழைப்பு அல்ல. அவளே அவரின் மகள் தான் என்கையில் இதில் ரோசம் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்று புத்திக்குப் புரிந்தாலும் ரோசம் கொண்ட மனம் முரண்டியது.
அவள் ஒரு முக்கால் காற்சட்டையும் சட்டையும், அவன் ஒரு ஜீன்சும் சேர்ட்டும் அணிந்திருந்தனர். திருமண ஆடைகளா இவை? அவசரத்தில் செய்தாலும் அந்தரத்தில் செய்தாலும் திருமணம் திருமணம் தானே. என்ன செய்வது?
“பிரெண்ட்ஸ் ஆரிட்டையும்(யாரிடமும்) கேட்டுப்பாப்பம்.” அதைச் சொல்லவே நாக்கூசியது. அதுவரை எந்த நிலையிலும் ஒரு ரூபாய் கூட யாரிடமும் மாறியதில்லை. சுயமரியாதையை இழக்காதவன். இன்று.. அவனுடைய பிடிவாதம் வெல்லும் நேரமல்ல இது என்று எண்ணியபடி ஃபோனை எடுத்தான்.
உடனேயே கையைப் பிடித்துத் தடுத்தாள் ஆரணி. “வேண்டாம் நிக்ஸ். கடனோட எங்கட வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டாம். இருக்கிறதை வச்சு சமாளிப்பம்.”
“இதுக்குத்தான் சொன்னனான்..” பொங்கிய சினத்துடன் ஆரம்பித்தவன் உடனேயே நிறுத்திவிட்டான். முடிவெடுத்த பிறகு கதைப்பதில் பிரயோசனமில்லை. “இந்த ரெண்டாயிரத்த வச்சு என்னடியப்பா செய்றது? ஒரு சாரி கூட வாங்கேலாது.” கையாலாகாத கோபத்தில் மொழிந்தான் அவன்.
“அப்பிடி எண்டு ஆரு சொன்னது உனக்கு? நீ வா, நான் வாங்கிக் காட்டுறன்!” என்று கடைக்கு அழைத்துச் சென்றாள் அவள்.
அங்கே, ‘திருமணச் சேலைகள்’ என்கிற பிரிவில் அவனது மொத்தக் காசுக்கும் கூடச் சேலை இல்லை. பொதுவான பகுதிக்கு வந்து விலை குறைந்ததாகத் தேடித் தேடி அவள் பார்ப்பதைப் பார்க்க முடியாமல் வெளியே வந்துவிட்டான் நிகேதன். ஒரு திருமணச் சேலையைக்கூட வாங்கிக் கொடுக்க வழியில்லை. இதில் அவளைத் திருமணம் செய்யப்போகிறான்.
அவனை நம்பி வந்தவள் அந்த நிமிடத்தில் காலில் அணிந்திருப்பதின் விலையே பல ஆயிரங்களில் இருக்கும். திருமணத்துக்காக அணியப்போகும் சேலையை ஐநூறுக்குள் தேடிக்கொண்டிருக்கிறாள். எதிர்காலத்தின் மீதான பயம் மெல்லப் பிடித்துக்கொண்டது. இனிவரும் நாட்கள் அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது? வீட்டினர் என்ன சொல்லுவார்கள்?
“என்னடா? இங்க வந்து நிக்கிறாய்?” மக்களால் நிறைந்து வழிந்துகொண்டிருந்த அந்தக் கடைவீதியை வெறித்துக்கொண்டிருந்தவனின் கரம் பற்றிக் கேட்டாள், ஆரணி.
ஒன்றும் சொல்லாமல் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவனுக்குள் ஓடும் பல கேள்விகளில் ஒன்று கூட அவளுக்குள் ஓடவில்லை போலும். நிர்மலமான முகத்தில் நம்பிக்கை நிறைந்திருக்க, அவனைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்தாள். எது கொடுத்த திடம் அவளை இப்படி நிற்க வைத்திருக்கிறது?
“என்ன நம்பிக்கைல திருமணம் வரைக்கும் வந்து நிக்கிறாய் ஆரா?”
“உன்ன நம்பித்தான்!” பளிச்சென்று பதில் சொன்னாள் அவள்.
எப்படி உணர்ந்தான் என்று சொல்லத்தெரியாமல் அப்படியே நின்றான் நிகேதன். வேலை இல்லை. ஓரளவுக்கு வசதி என்று சொல்லும் அளவிலும் இல்லை. அண்ணனின் தயவில்தான் வாழ்கிறான் என்று நன்கு தெரியும். இருந்தும் நம்புகிறாள். கர்வம் கொள்வானா? இல்லை இந்த நம்பிக்கையை எப்படிக் காப்பாற்றுவேன் என்று கலங்குவானா?
அவன் கரத்தை அழுத்திக் கொடுத்தாள் ஆரணி.
“கண்டதையும் யோசிக்காத நிக்ஸ். ரெண்டுபேரும் படிச்சிருக்கிறம். புத்தி இருக்கு. உடம்புல பலம் இருக்கு. எல்லாம் சமாளிக்கலாம். இப்ப நான் எடுத்த சாரி நல்லாருக்கா எண்டு பார்!” என்று கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.
குங்கும நிறத்தில் ஒரு கொட்டன் சேலை. தோளில் போட்டுக் காட்டினாள். அவளின் நிறத்தை இன்னுமே தூக்கிக் காட்டியதுதான். ஆனாலும், வெகு சாதாரணம். அவனுக்குப் பிடிக்கவேயில்லை. ஒன்றுமே சொல்லாமல் நின்றான்.
“அடேய்! என்னைச் சத்தியநாதனின்ர மகளா பாக்காத! இனி அவரே அப்பிடி நினைக்கமாட்டார். வேலை வெட்டி இல்லாத நிகேதனின்ர மனுசியா பார். நல்லாருக்கும்.” என்றாள் கண்ணடித்து.
அவன் உதட்டிலும் சிரிப்பு முளைத்தது. இருக்கும் மிக மோசமான நிலமையைக் கூடி கேலிபேசிச் சிரிக்க அவளால் மட்டுமே முடியும். நெஞ்சில் நேசம் பொங்கப் பார்த்தான். பேரழகியாகத் தெரிந்தாள்.
உள்ளத்தின் அழகை ஆடைகள் கூட்டிக் குறைத்துவிடுமா என்ன? “வடிவா இருக்கடி!” அவள் காதோரமாய்க் கண்களில் காதல் மின்னச் சொன்னான் அவன்.
அவள் முகம் பூவாக மலர்ந்து போயிற்று!
“நிக்ஸ்! இருக்கிறத வச்சு வாழுறது தான்டா வாழ்க்கை. இப்ப எங்களிட்ட இருக்கிறது இவ்வளவுதான். கட்டாயம் ஒருநாள் நல்லா வருவம். அப்ப வாங்கித்தா, கட்டுறன். இது முடிவில்ல ஆரம்பம். அதால சிரிச்சமாதிரியே இரு!” உற்சாகத்தோடு சொன்னவள், அந்தச் சேலைக்குப் பொருந்தும் ரெடிமேட் பிளவுஸ், அவனுக்கு வேட்டி சட்டை என்று ஆயிரத்தி ஐநூறுக்குள்ளேயே தேவையானவற்றை எடுத்து முடித்தாள்.