அவள் ஆரணி - 51

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 51


மூன்று மாடிகள் கொண்ட தனிவீடு வாங்கி இருந்தார் சகாதேவன். சமையலறை, விறாந்தை, விருந்தினர் அறை, பாத்ரூம் என்று கீழே இருந்தது. மேலே மூன்று அறைகளும் அதற்கு மேலே இரண்டு அறைகளும் மொட்டை மாடியுமாக வீடு மிக நேர்த்தியாகவே இருந்தது.

அமராவதி அம்மாவுக்கு மனமெல்லாம் மிகுந்த பூரிப்பு. காலம் முழுக்க அவர்களுக்காக உழைத்த மகன், இன்றைக்குத் தானும் தனக்கென்று ஒன்றைத் தேடிக்கொண்டதில் வெகு சந்தோசம். அன்று, நிகேதன் சொன்னதுபோல அவரின் மக்கள் மூவரும் நன்றாக இருப்பதைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார்.

குடிபூரலுக்கு என்று நிறைய நாட்களுக்குப் பிறகு சேலை அணிந்திருந்தாள், ஆரணி. அளவான நகைகளோடு, கழுத்தில் தாலிக்கொடியும் மின்ன, பூவினியையும் வைத்துக்கொண்டு நின்ற அவளின் தோற்றம் நிகேதனின் நெஞ்சைக் களவாடியது.

அதே நேரம், நன்றாக மெலிந்துபோயிருக்கிறாள் என்பதும் சேலையில்தான் வெளிப்படையாகத் தெரிந்தது. அவர்களுக்குள் நடந்த பிரச்சனையிலும், அதிகப்படியான வேலையிலும் அவளைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்று எண்ணிக் கவலை கொண்டான். அவனுடைய மகள் வேறு இப்போதெல்லாம் அவளை இருக்க நிற்க விடுவதில்லையே. “பூவம்மாவ என்னட்ட தா! நான் வச்சிருக்கிறன்.” என்று தான் வாங்கிக்கொண்டான்.

ஆரணியும் கொடுத்துவிட்டு மாலினிக்கு உதவியாக நின்றுகொண்டாள்.

ஒருவழியாகக் கோயிலில் இருந்து சுவாமிப்படம் கொண்டுவரப்பட்டு, பூசையும் நல்லபடியாக முடிந்து, பால் காய்ச்சி என்று குடிபூரலும் எந்தக் குறையும் இல்லாமல் மிகச் சிறப்பாகவே நடந்து முடிந்தது.

ஹோட்டலில் இருந்து தருவித்த மரக்கறி(காய்கறி) சாப்பாடும் முடிந்ததும் எல்லோருக்குமே கண்ணைச் சுழற்றியது. களைப்பும் அயர்ச்சியுமாய் அவரவர் இருந்த இடத்திலேயே முடங்கினர். மாலினிக்கு வீட்டை ஒதுக்க உதவினாள் ஆரணி.

என்ன தோன்றியதோ செய்துகொண்டிருந்த கைவேலையை நிறுத்திவிட்டு, “என்ன ஆரணி, ஏதாவது விசேசமா?” என்று திடீரென்று கேட்டார், மாலினி.

பாத்திரங்களை ஒதுக்கிக்கொண்டு இருந்த ஆரணி அப்படியே நின்றாள். எல்லோரின் பார்வையும் அவளில் குவிந்தது. பதில் சொல்ல முடியாமல் அவள் தடுமாற, நிகேதனின் பார்வை கூர்மையாயிற்று.

“இவ்வளவு நேரமும் வேலையில கவனிக்க இல்ல. நல்லா மெலிஞ்சு இருக்கிறீர். ஆனாலும் முகத்தில ஒரு பளபளப்பு. கழுத்து கருத்து இருக்கு. எனக்கு என்னவோ ஏதோ விசேசம் போலத்தான் தெரியுது. உண்மையா?” என்றார் அவர் சிரித்துக்கொண்டு.

“அது.. அக்கா இப்பதான் மூண்டு மாதம்.”

மாலினி விளையாட்டுக்குக் கேட்கிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். அதற்கு மாறாக ஆரணியும் மூன்று மாதம் எனவும் அமராவதி உட்பட எல்லோருமே அதிர்ந்து போயினர்.

“இந்த நிலமையிலயா கொழும்புக்கு வெளிக்கிட்டு வாறது? கொஞ்சமாவது யோசிக்கிறது இல்லையே. நடக்கக் கூடாது ஏதும் நடந்தா என்ன செய்வீங்கள்?” அமராவதிக்கு உண்மையிலேயே பதறியது. பெரும் கோபம் வந்தது. சமீப காலத்தில் கற்றுக்கொண்ட பாடமும், மாலினியின் பெற்றோரும் இருந்ததிலும் அதற்குமேல் பேசாமல் வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

நிகேதனால் அசையக்கூட முடியவில்லை. நம்ப முடியாத அதிர்வில் சிலையாகிப்போனான். ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை கூடச் சொல்லவே இல்லையே? அவ்வளவு கோபமா? அந்தளவில் வெறுப்பா? நேற்றைய நாள் இனி எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையைத் தந்ததே. வீட்டுக்குப்போய் மனம்விட்டுப் பேச வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வேறு எண்ணியிருந்தானே. எல்லாமே பொய்யா?

“என்னடா? இதையெல்லாமா சொல்லாம இருப்பாய்? முதல், இப்பிடி எண்டு தெரிஞ்ச பிறகு என்னத்துக்கு அவளையும் கூட்டிக்கொண்டு வந்தனீ?” என்றார் சகாதேவன்.

நிகேதனுக்குப் பேச்சே வரவில்லை. மூன்று மாதங்கள். முழு மூன்று மாதங்கள் பிள்ளை உருவானதைக்கூடச் சொல்ல முடியாத அளவுக்கா அவன் தாழ்ந்து போனான். நெஞ்சின் கசப்பை நெஞ்சுக்குள்ளேயே போட்டு அடைத்தான். அவமானங்களும் காயங்களும் அவனுக்கென்ன புதிதா? அல்லது எல்லாவற்றையும் மென்று முழுங்குவதுதான் புதிதா?

“இதெல்லாம் மறைக்கிற விசயமா, அண்ணா? எல்லாருக்கும் முன்னால வச்சுச் சொல்லுவம் எண்டுதான் முதலே சொல்ல இல்ல. நாங்க சொல்ல முதல் அண்ணி கண்டு பிடிச்சிட்டா.”

தன்னைக் காட்டிக்கொடுக்காத அவனுடைய பொய் ஆரணியின் மனதை அறுத்தது. தவிப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் அவளைப் பார்க்க மறுத்தான்.

“அவள் வரேல்ல எண்டுதான் சொன்னவள். நான்தான்… அண்ணா வீட்டு விசேசத்துக்கு நிக்கோணும் எண்டு கூட்டிக்கொண்டு வந்தனான்.” வரவில்லை என்று அவள் சொன்னது உண்மைதானே. அப்போதுகூடச் சொல்லவே இல்லையே. பூவினிக்கு எப்படிச் சொன்னாள். இருவருமாக அந்த நாளைக் கொண்டாடிய இனிமை இன்னுமே மறைந்துவிடவில்லையே. பயணம் செய்து குழந்தைக்கு ஏதும் நடந்தாலும் பரவாயில்லை அவனிடம் மட்டும் சொல்லிவிடக் கூடாது என்று நினைத்தாளா? நிகேதன் என்கிற மனிதன் அடிக்குமேல் அடிவாங்கி மரத்துப்போயிருந்தான்.

“சரி விடுங்கோ! எல்லாம் சந்தோசமான விசயம் தானே.” என்று சமாளித்தார் மாலினியின் அன்னை.

அவளை இன்றுதான் முதன் முதலாகப் பார்க்கிறார். ஆனால், அவளைப் பற்றிய எல்லாமும் மாலினியின் வாயிலாகச் சுடச்சுட தெரியும். அதில், இன்னதுதான் என்று சொல்லத் தெரியாத பிடித்தம் அவருக்கு அவள்மேல் உண்டாகியிருந்தது. இங்கு வந்தும் கயலினியைப் போல் பிள்ளையை மட்டுமே தூக்கிக்கொண்டு இருக்காமல், கூட நின்று உதவி செய்தவளை இன்னுமே பிடித்துப் போயிருந்தது. அதில், சூழ்நிலையை இலாவகமாகச் சமாளித்தார்.

அதுதானே என்று எல்லோருக்குமே தோன்ற, சகாதேவன், ராகவன், மாலினியின் தந்தை என்று எல்லோருமே கைகொடுத்து அவனுக்கு வாழ்த்தினர். ஆரணியையும் வாழ்த்தினார்கள். “இந்த முறை நாங்க லேட் போல இருக்கே.” என்றான் ராகவன் சிரிப்புடன்.

“பாத்தீங்களா, யாருமே கண்டு பிடிக்க இல்ல. ஆனா நான் கண்டு பிடிச்சிட்டேன்.” என்ற மாலினியும் வாழ்த்தினார்.

பயணம் செய்ததில் அவளுக்கு உடம்புக்கு ஏதும் செய்கிறதா என்று விசாரித்தார் மாலினியின் அன்னை. விழிகள் தவிப்புடன் நிகேதனிடம் சென்று மீள, இல்லை என்று தலையைச் சிரமப்பட்டு அசைத்தாள், ஆரணி.

“எண்டாலும் கொஞ்ச நேரம் போய்ப் படுத்து எழும்புங்கோமா. திரும்பவும் பயணம் செய்யவேணும் எல்லோ.” என்று அவளை ஓய்வெடுக்க அனுப்பிவைத்தார்.

உறக்கம் தேவையோ இல்லையோ அவளுக்குத் தனிமை தேவைப்பட்டது. மூன்று மாதம் என்று அவள் சொன்னதும், நம்ப முடியாத அதிர்வுடன் தன்னை வெறித்தவனின் முகம்தான் கண்ணுக்குள்ளேயே நின்று வதைத்தது. எதையும் விளக்கவோ பேசவோ முடியாத நிலையில் நிற்கிறாள்.

இரவு மீண்டும் அவர்கள் புறப்பட்டபோது அவளின் இருக்கையின் அருகில் கிண்டர் சீட் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. பார்த்தவளுக்கு விழிகள் பனித்துப் போயிற்று. அவள் மீண்டும் தாய்மை அடைந்திருக்கிறாள் என்று அறிந்த நொடியிலிருந்து பூவினையைத் தூக்க கூட அவன் விடவில்லை. அவனேதான் கொண்டு திரிந்தான். ஆனால், அவளின் முகம் பார்த்துக் கதைக்கவேயில்லை.

இந்தக் கரிசனையையும் காதலையும் என்ன செய்து மீட்கப் போகிறாள்? செய்வதறியாது பரிதவிப்புடன் மகளருகில் வந்து அமர்ந்தாள், ஆரணி.

“கொஞ்ச நேரம் நான் ஓடவா? பின்னுக்குப்போய் நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கோவன்.” என்று, இந்தமுறை ராகவன் நிகேதனிடம் கேட்டான். ஆனால், நிகேதன் கொடுக்கவில்லை. முழுக்க முழுக்க அவனேதான் ஓடினான். தன்னை வருத்தித் தன் மனதின் அழுத்தத்தினைக் குறைக்க முயன்றான்.

வீட்டுக்கு வந்தபிறகாவது அவன் ஏதும் கேட்பான், கோபப்படுவான் என்று கலக்கத்துடன் காத்திருந்தாள், ஆரணி. அவனோ குளித்துவிட்டு வந்து பேசாமல் கட்டிலில் போய் மகளருகில் படுத்துக்கொண்டான். ஆரணிக்கு அவனுடைய இந்த அமைதியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி. இப்படித்தானா அவன்? எல்லாவற்றையும் தனக்குள்ளேயே போட்டுப் புதைத்துக்கொள்வானா? அவளின் நிக்கியைப் பற்றி அவளுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்திருந்தாளே. அப்படி இல்லையோ?

இல்லை. அப்படி இல்லை. மற்றவர்களிடம் எப்படியோ அவளிடம் அவன் திறந்த புத்தகமாகத்தான் இருந்திருக்கிறான். பல்கலையில் படித்த நாட்களில் கூட, மாலினியைப் பற்றி அவளிடம் மனம் திறந்து பகிர்ந்திருக்கிறான். சில நேரங்களில் மிகுந்த அவமானமாக உணர்ந்ததைக்கூட சொல்லியிருக்கிறான். படித்து முடிக்கிறவரைக்கும் எல்லாவற்றையும் பொறுத்துத்தான் போக வேண்டும் என்று மிகுந்த மனக்கவலையோடு சொல்லியிருக்கிறான்.

திருமணமான பிறகும், அம்மாவைப் பற்றித் தங்கையைப் பற்றித் தன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து என்று அனைத்தையும் அவளிடம் பகிர்ந்துதான் இருக்கிறான். அப்படி இருந்தவன் எப்போதிலிருந்து இப்படி மாறிப்போனான்?

சரியோ பிழையோ மனதில் இருப்பதைக் கொட்டுவதற்கு ஒருவர் இல்லாத நிலை எவ்வளவு பெரிய கொடுமை? அதை நெஞ்சுக்குள்ளேயே போட்டு அடைப்பது எவ்வளவு பெரிய துன்பம்.

உறங்கிவிட்டவனை எழுப்பிப் பேசவும் முடியவில்லை. ஒரு பக்கம் தயக்கமென்றால், பகல் ஹயருக்கு அவன் போக வேண்டும் என்று தெரியும். அதில், அவன் உறக்கத்தைக் கெடுக்கவும் மனமில்லை.

சோபாவிலேயே சுருண்டு இருந்தவள் எப்போது எப்படி உறங்கினாள் என்று தெரியவில்லை. ஏதோ சத்தத்தில் விழிகளைத் திறந்தபோது, அவன் வெளியே செல்லத் தயாராகியிருந்தான். அவள் விழித்துவிட்டாள் என்றதும், “அறைக்க போய்ப்படு. பூவம்மா இன்னும் நித்திரை.” என்று முகம் பாராமல் சொல்லிவிட்டுப் போனான் அவன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அதன் பிறகு அவள் உறங்கவில்லை. இவர்களின் நடமாட்டத்தை அறிந்து பார்வதி அம்மா வந்தார். சிந்தனை முழுக்க அவனிடம் இருந்தபோதும் தன்னைச் சமாளித்துக்கொண்டு அவரோடு கதைத்துக்கொண்டு இருந்தாள். பயணத்தைக் பற்றி அவரிடம் தெரிவித்தாள். தான் தாய்மை உற்றிருக்கும் செய்தியையும் சொல்லி அவரிடமும் பேச்சு வாங்கிக் கொண்டாள்.

அன்றைக்கு எட்டு மணிக்கே வீட்டுக்குத் திரும்பி வந்த நிகேதன் உடையைக்கூட மாற்றவில்லை. தான் பெற்ற மகளைக்கூடத் தூக்கிக் கொஞ்சவில்லை. தலையைப் பிடித்துக்கொண்டு சோபாவிலேயே அமர்ந்திருந்தான். பூவினி தானாகவே அவன் மடியில் ஏறி, அவனோடு விளையாடி, அவளாகவே மீண்டும் இறங்கியும் போயிருந்தாள். அது எதையும் உணராமல் விண் விண் என்று தெறித்த தலையைப் பற்றியபடியே இருந்தான் அவன்.

நான் அப்பாவானதை தெரிந்துகொள்ளக் கூடத் தகுதியற்றவனாகிப் போனேனா என்கிற கேள்வி அவனுடைய நிம்மதியை மொத்தமாகப் பறித்துக்கொண்டது. மனதில் அமைதியில்லை. சிந்தனையில் தெளிவில்லை. வாழ்வில் பற்றில்லை. ஒற்றை நாளில் கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனாகவே மாறிப்போயிருந்தான் நிகேதன்.

அவன் நிலை கண்டு ஆரணிக்கு அழுகையே வந்துவிட்டது. கலைந்த தலை, கசங்கிய உடை, உயிர்ப்பை இழந்து போயிருந்த முகம் என்று சுயத்தை முற்றிலும் இழந்து போயிருந்தான் அவன்.

அவளுக்கு எப்படிச் சகலமுமாக அவனிருக்கிறானோ அப்படி அவனுக்கும் அவள்தான் எல்லாமே என்பதும் அவள் அறிந்ததுதான். தயக்கமாய் இருந்தாலும் அவனோடு பேசிவிட எண்ணி அவள் நெருங்க, “நான் செய்த பிழைக்கு இதுதான் நீ எனக்குத் தாற தண்டனையா ஆரா?” என்றான் அவளை நிமிர்ந்து பார்த்து.

ஆரணி திகைப்புடன் அவனைப் பார்த்தாள். இரத்தச் சிவப்பாய்ச் சிவந்துபோயிருந்த விழிகளும் கறுத்துக் களைத்துப்போயிருந்த முகமும் அவள் நெஞ்சையே பதற வைத்தது.

“பிளீஸ் நி…”

“இதைப் பற்றி எதுவுமே கதைக்கக் கூடாது எண்டுதான் நினைச்சனான் ஆரா. ஆனா என்னால முடியேல்ல. நெஞ்சுக்க என்னவோ கிடந்து குடையுது!” என்றவனின் கைகள் மீண்டும் தலையைத் தாங்க, பார்வை தரையில் இருந்தது.

“நான் செய்தது பிழை எண்டு எனக்குத் தெரியும் ஆரா. என்னை மட்டுமே நம்பி வந்தவள் நீ. உன்னட்ட கோபப்பட்டு இருக்கக் கூடாது. கையை ஓங்கி இருக்கக் கூடாது. எல்லாருக்கும் முன்னுக்கு வச்சு உன்ன நோகடிச்சிருக்கக் கூடாது. வீட்டை விட்டு வெளில போ எண்டு சொல்லியே இருக்கக் கூடாது. நான் சின்னதா முகம் திருப்பினாலே நீ தாங்கமாட்டாய் எண்டு தெரிஞ்சும் நான் அப்பிடி நடந்தது பிழைதான். அதுதான் வந்து மன்னிப்பு கேக்க இல்ல. செய்றதை எல்லாம் செய்துபோட்டு வந்து மன்னிப்பு கேட்டா சரியா எண்டு நினைச்சன். நீ என்னை விலக்கி வச்சாலும் நான் நெருங்கி வராம நிண்டதுக்குக் காரணம் உன்ர காயம் ஆறட்டும் எண்டுதான். ஆனா அதுக்காக…” என்றுவிட்டு மீண்டும் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவனின் விழிகளில் பெரும் பரிதவிப்பு. “நான் அப்பா ஆகிட்டேன் எண்டுறதை அறிஞ்சுகொள்ளுற தகுதி கூட எனக்கில்லாம போச்சா ஆரா?” என்றான்.

“நிக்கி…” ஆரணியின் குரல் தழுதழுத்தது.

“நீ நிகேதன் எண்டே கூப்பிடு.” என்றான் அவன்.

“நிக்கி…” அவளின் ஒற்றைக் கன்னத்தில் கண்ணீர் கோடாக இறங்கியது.

“எங்களுக்கு எண்டு எதுவுமே இல்லாம, அந்தச் சின்ன அறைக்க சாப்பிடுறதுக்குக் கூட ஒழுங்கான சாப்பாடு இல்லாம இருந்த காலத்தில கூட நான் இப்பிடி கலங்கினது இல்ல ஆரா. இப்ப என்னட்ட எல்லாமே இருக்கு. ஆனா எதுவுமே இல்லாம அனாதையா நிக்கிற மாதிரி இருக்கடி. நான் ஏன் வாழுறன் எண்டே தெரியாம இருக்கு. இதுதான் நீ எனக்குத் தர நினைக்கிற தண்டனையா?” என்றான் மீண்டும்.

ஆரணி துடித்துப்போனாள். “நிக்கி, என்ன கதைக்கிறாய்?” என்றவள் வேகமாக மண்டியிட்டு அவன் முன்னே அமர்ந்தாள். “நான் சொல்லுறதை கொஞ்சம் கேளு நிக்கி. எனக்கு உன்னில நிறையக் கோபம் இருந்தது. நீயா என்னை இந்தளவுக்கு நோகடிச்சது எண்டுற கவலை இருந்தது. அந்தக் கோபத்தையும் கவலையையும் மனதில வச்சுக்கொண்டு, என்னவோ பத்தோட பதினொண்டு மாதிரி உன்னட்ட வந்து எங்களுக்கு இன்னுமொரு பிள்ளை பிறக்கப்போகுது எண்டு சொல்ல முடியேல்லடா. என்னால உன்னோட கடமைக்கோ கட்டாயத்துக்கோ வாழ ஏலாது நிக்கி. அதாலதான் சொல்ல இல்ல. அங்கேயும் மாலினி அக்காவா கேட்டிருக்காட்டி உன்னட்ட சொல்லாம ஆருக்குமே சொல்லியிருக்க மாட்டன். மாலினி அக்கா கேட்ட பிறகு என்னால பொய் சொல்ல ஏலாம போச்சு. என்னை என்ன செய்யச் சொல்லுறாய்?” என்று கேட்டாள் கண்ணீரோடு.

அவள் முகத்தில் இருந்த அவன் பார்வை மாறவே இல்லை. அவள் சொல்கிறவற்றை உள்வாங்கி, ஆராய்ந்து உணருகிற நிலையிலும் அவன் இல்லை.

“இந்த மூண்டு மாதத்தில ஒரு நாள் கூடவா உனக்கு என்னட்ட சொல்ல ஏலாம போனது? இல்ல இவனுக்கெல்லாம் ஏன் சொல்லவேணும் எண்டு நினைச்சியா? என்ன இருந்தாலும் அம்மா, தங்கச்சி எண்டு வந்தா மனுசிய பற்றி யோசிக்க மறக்கிறவன் தானே நான்.” என்றவன் தன் முகத்தை இரு கைகளாலும் அழுத்தித் துடைத்தான். அவன் விழிகள் எங்கு என்றில்லாமல் வெறித்தது. ஆரணிக்கு அவனைக் பார்க்க அடிவயிறு கலங்கியது.

“பொறுப்பில்லை, வேலைக்குப் போகேல்ல, உழைக்கேல்ல எண்டு எல்லாரும் சொல்லிச் சொல்லி அது என்ர மனதில ஆழமா பதிஞ்சு போச்சு போல ஆரா. அதாலதான் அம்மாவோ கயலோ ஒண்டு கேட்டா என்னால மறுக்க முடியிறேல்ல. நீ கேட்டா கூட ஏன் நாளைக்கு உன்ர அப்பா வந்து கேட்டா கூட என்னால மாட்டன் எண்டு சொல்ல ஏலாது. என்னால முடிஞ்சதை செய்யத்தான் நினைப்பன். இதுதான் நான். ஆனா, அதுக்காக உன்ன நோகடிச்சதில, உனக்குச் சொல்லாம செய்ததுல எந்த நியாயமும் இல்லை எண்டுறதும் தெரியும் எனக்கு.” என்றவன் பெரிய மூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு அவளைப் பார்த்தான்.

“ஓகே. பரவாயில்ல. நீ தந்த எதையுமே நான் வேண்டாம் எண்டு சொன்னது இல்ல. காதலை தந்ததும் நீதான். கலியாணத்தைத் தந்ததும் நீதான். உழைக்க வழி காட்டினதும் நீதான். சந்தோசத்தைத் தந்ததும் நீதான். என்னை அப்பா ஆக்கினதும் நீதான். இந்த வசதி, காசு, வாழ்க்கை எல்லாமே நீ தந்ததுதான். இதையெல்லாம் அனுபவிக்கிற நான் நீ தாற தண்டனையை மட்டும் எப்பிடி வேண்டாம் எண்டு சொல்லுவன்?” என்று அமைதியாகச் சொல்லிவிட்டு எழுந்து குளிக்கச் சென்றான்.

என்னவெல்லாம் சொல்லிவிட்டுப் போகிறான் இவன்? அசையக்கூட மறந்தவளாக அப்படியே தரையிலேயே அமர்ந்திருந்தாள் ஆரணி.

அவன் குளித்துவிட்டு வந்தான். “பசிக்குது ஆரா.” என்றான் மேசையில் அமர்ந்தபடி.

ஒருவித அதிர்வுடன் அவனையே பார்த்தாள் ஆரணி. சில நிமிடங்களுக்கு முதல்தான் தன் கட்டுப்பாட்டை இழந்து புலம்பினான். இப்போது என்னவோ அவர்கள் ஆதர்ச தம்பதிகள் போலும், அவர்களுக்குள் எதுவுமே நடக்கவில்லை போலும் நடக்கிறானே.

எல்லாவற்றையும் தன் மனதுக்குள் புதைக்கிறவன் இதையும் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டானா? என்னவாய் ஆகிக்கொண்டிருக்கிறான் அவளின் நிக்கி? மனம் துடித்தது. விழிகளில் கண்ணீர் அரும்பியது. துடைத்துக்கொண்டு எழுந்து சென்று உணவை போட்டுக் கொடுத்தாள்.

அவன் சாப்பிட்டான். வயிறு முட்டச் சாப்பிட்டான். “நீயும் சாப்பிடு!” என்றவிட்டு எழுந்துபோய்க் கட்டிலில் படுத்துக்கொண்டான்.

ஆரணி அப்படியே சமைந்துபோய் அமர்ந்திருந்தாள். அவளுக்குச் சற்று நேரம் எதையும் சிந்திக்கவோ செயலாற்றவோ முடியாமல் போயிற்று. தன்னைத் தேற்றிக்கொண்டு பூவினிக்கு உடம்பு துடைத்து, உடை மாற்றி, உணவு கொடுத்து, சற்று நேரம் விளையாட விட்டு, உறக்கத்துக்குச் சிணுங்கியவளைத் தட்டிக்கொடுத்து உறங்க வைக்கிற வரைக்கும் அந்த வீட்டில் வேறு சத்தமே இல்லை.

பூவினியும் உறங்கிப்போனாள். வீடு மயான அமைதியில் திளைத்து இருந்தது. ஆரணிக்கு ஒரு கட்டத்துக்குமேல் நிகேதனின் அமைதியும் போக்கும் பொறுக்கவே முடியாமல் போயிற்று. அவனை மாற்றிவிடு. உன்னைவிட்டால் அவனுக்கும் வேறு யாருமில்லை என்று மனம் உந்தியது.

எழுந்துவந்து அவன் பக்கத்தில் படுத்தாள். அவன் விழித்துப் பார்த்தான். அவள் அவனோடு ஒன்றினாள். அவன் கைகள் தானாக அவளை அரவணைத்துக்கொண்டது. ஆரணி அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்தாள். “சொறி நிக்கி.” என்றாள்.

ஒன்றும் சொல்லாமல் அவளின் தலையை வருடிவிட்டான் நிகேதன். அவன் செவிகளை நனைத்துக்கொண்டு கண்ணீர் ஓடியது. அவளறியாமல் புறங்கையால் துடைத்துக்கொண்டான். ஆனால், அவனை உணர்ந்துகொண்ட ஆரணியின் அணைப்பு இறுகியது. அவளின் கண்ணீர் அவன் மார்பை நனைத்தது.

“அழாத ஆரா! காலம் எல்லாத்தையும் மாத்தும்!” என்றான் அவளின் கண்ணீரையும் துடைத்துவிட்டபடி.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom