இதயத் துடிப்பாய்க் காதல் - 25

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-25


“இதுவரை நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் நான் பொறுமையாகத்தான் கேட்டிருக்கிறேன்..” என்றாள் சனா. அதைக் கோபமாகத்தான் சொல்ல நினைத்தாள். அது முடியாமல் குரல் அடைத்தது. எவ்வளவு முயன்றும், அன்று அவன் பேசியவைகளையும், அதனால் உண்டான வலியையும் இன்றும் அவளால் மறக்க முடியவில்லை.

“அதேபோல, இன்றும் கேள் என்றுதான் சொல்கிறேன்.” என்றவன், அவளருகில் வந்து, அவளைப் போலவே கையைக் கட்டிக்கொண்டு காரில் சாய்ந்து நின்றான்.

சட்டென்று தள்ளி நின்றாள் சனா. அதைப் பார்த்தவனுக்கு மனதில் வலித்தது. முன்னரும் அவனை தள்ளி நிற்கச் சொல்வாளே தவிர, என்றும் அவள் தள்ளி நின்றதில்லை. இன்றோ எல்லாம் தலைகீழ் மாற்றம். அதை உண்டாக்கியவன் அவனே!

ஒன்றும் சொல்லாது, தானும் கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டான் சூர்யா.

பிறகும் சட்டென்று அவன் பேச்சை ஆரம்பித்து விடவில்லை. எதையோ யோசித்தபடி நின்றான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவளுக்கு பொறுமை பறந்தது. இவன் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான். எவ்வளவு நேரம்தான் இப்படியே நிற்பது என்று சினத்தோடு அவன் புறமாக திரும்பியவளின் விழிகளில், நெரித்த புருவங்களும், இறுகிய தாடையுமாக சிந்தனையில் ஆழ்ந்தவனின் முகம் பட்டது.

அடர்ந்த கேசம் இன்னும் கருப்பாகவே இருக்க, மீசை அடர்த்தியாக வளர்ந்திருந்தது. சிவந்த அவன் நிறம் மங்கித்தெரிந்தது. மிக மிகச் சோர்ந்து தெரிந்தான்.

இதுவரை அவனை அவள் இப்படிப் பார்த்ததில்லை. கடைசியாக அவர்கள் சந்தித்துக்கொண்ட அன்றுகூட அவன் முகம் உணர்ச்சிகள் அற்று இருந்ததே தவிர இப்படி இருண்டு, இறுகி இருந்ததில்லை. எப்போதும் பளிச்சென்று இருப்பான். மலர்ந்த முகத்தோடு நினைத்ததைச் செய்து, நினைத்தபடி வாழ்ந்து வந்தவன். அவன் வாழ்வில் அவள் வந்தது தவறோ..

அவளின் பார்வையை உணர்ந்தோ என்னவோ, அவன் அவள் புறமாகத் திரும்ப, வேகமாகத் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டாள் சனா.

“இந்த மூன்று மாதங்கள்.. நீயில்லாமல் நான் வாழ்ந்த கொடிய நாட்கள் லட்.. சனா.” என்றான் ஆழ்ந்த குரலில்!

அதைக் கேட்டவளுக்கு, அதுவரை அவன் தோற்றத்தைப் பார்த்ததில் உண்டான நெருடல் மறைய, ஆத்திரம்தான் வந்தது.

“இப்படிப் பேசிப் பேசித்தானே என்னை நம்ப வைத்துக் கழுத்தறுத்தீர்கள். திரும்பவும் எதற்கு இந்த நடிப்பு..?” என்று வெடித்தாள்.

“இல்லை. இது நடிப்பில்லை. இதுமட்டுமல்ல எதையுமே நான் பொய்யாகச் சொன்னதில்லை..” என்றவனின் பேச்சில், அவளுக்கு வலித்தது.

ஆக, அன்று சொன்னதும் பொய்யில்லை என்கிறான். அவள் விழிகள் வலியில் கலங்கியது.

அவனைக் குற்றம் சாட்டிய அந்த விழிகளைப் பார்க்கமுடியாமல், பார்வையைத் திருப்பிக் கொண்டான் சூர்யா. அவளிடம் தன்னை எப்படிப் புரிய வைக்கப் போகிறோம் என்று நினைத்தவனுக்கு, நெஞ்சில் பாரம் ஏறி அமர்ந்துகொண்டது.

“உன்னைப் பிரிந்து, நீயில்லாமல் நான் நானாகவே இல்லை சனா. நானே வெறுமை ஆனது போல்.. உள்ளத்தின் வெற்றிடம் என்னைக் கொன்றுகொண்டே இருக்கிறது. நீ வேண்டும். நீ மட்டும்தான் வேண்டும் என்றுதான் தவிக்கிறேன்..” என்று உள்ளார்ந்த குரலில் அவன் சொல்ல, அவளுக்கு உள்ளம் கொதித்தது.

“மிக நன்றாக வசனம் பேசுகிறீர்கள். பேசாமல் நடிக்கப் போய்விடுங்கள். உங்களை மிஞ்ச ஒருவருமே இருக்கமாட்டார்கள் நடிப்புலகில்...” என்றாள் ஏளனமாக!

“என் மனதில் பட்டதைத் தான் நான் என்றுமே பேசியிருக்கிறேன். அன்று.. அன்று நான் பேசியவைகள் அனைத்தும் சரியென்றுதான் அன்று தோன்றியது. அதனால்தான் உன்னிடமும் சொன்னேன். ஆனால், உன்னைப் பிரிந்தபிறகுதான் நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதையே உணர்ந்தேன்.” என்று அவன் ஆரம்பிக்க, இவளுக்கு நெஞ்சடைத்தது.

“நான் சுதந்திரமாக வாழ்ந்து பழகியவன். உன்னைக் காதலிக்கத் தொடங்கியபிறகு, அந்த சுதந்திரத்துக்குப் பெரும் தடையாக இருந்தாய் நீ…” என்றவனின் பேச்சைக் கேட்டு அவள் உள்ளம் மீண்டும் அடிவாங்கியது. கண்கள் கலங்க அவனை வெறித்தாள்.

அவள் முகத்தைப் பார்த்தவனுக்கும் பெரும் வேதனையாக இருந்தது. கொட்டிவிட்ட வார்த்தைகளை மறுபடியும் அள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அது முடியாதே! தான் கொடுத்த காயத்துக்கு தானே மருந்திட முயன்று, “அன்றைய என் பேச்சுக்காக என்னை மன்னித்துக்கொள்.” என்றான் அவள் முகம் பார்த்து, உள்ளார்ந்த குரலில்!

முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சனா. அவன் வேதனையோடு தொடர்ந்தான்.

“அப்படித்தான் அன்று நினைத்தேன். தாத்தா பாட்டி, அம்மா அப்பா, அண்ணா அண்ணி, நண்பர்கள், வேலை என்று நான் உடுத்தும் உடை முதற்கொண்டு என்னுடைய அனைத்து விசயங்களிலும் நீ இடை புகுந்தாய். உன்னை என் மனம் விரும்பினாலும், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ” என்றான் தன்மையாக.

“எதையும் முகத்துக்கு நேரே சொல்லும் எனக்கு இதை ஏனோ உன்னிடம் சொல்லவும் முடியவில்லை. அதுவும் நீ அன்று உன் பெற்றோர்களைப் பற்றிக் சொல்லி அழுத பிறகு, உன் மனதை நோகடிக்க முடியவில்லை. என்னால் முடிந்தவரைக்கும் பொறுத்துத்தான் போனேன்.” என்று அவன் சொன்னபோது, அவமானமாக உணர்ந்தாள் சனா.

தான் தன்னைப் பற்றிச் சொல்லி அழுது, அவனிடம் அனுதாபத்தைத் தேடி, அவனைத் தன் கைக்குள் போட்டுக்கொள்ளப் பார்த்தது போலல்லவா இருக்கிறது அவன் பேச்சு!

“என் மனதை நோகடிக்க முடியாமல் தான் ஒரேடியாக சாகடித்து விட்டீர்கள் போல…” என்று, தன் மீதிருந்த கோபத்தையும் அவனிடம் காட்டினாள்.

“அப்படிச் சொல்லாதே!” என்றான் சூர்யா, ஒருவித பரிதவிப்புடன்.

“நல்லவன் போல் வேஷம் போடாதீர்கள்!” என்று சீறியவள், அவனை முறைத்துவிட்டுப் பார்வையைத் திருப்பிக்கொண்டாள், அலட்சியமாக!

“நான் சொல்வதை நம்பு சனா. அன்று உன்னிடம் சொல்வது எனக்கும் இலகுவாக இருக்கவில்லை. ஆனால் இந்த உறுத்தலோடு, வெளியே தெரியாத மனவேறுபாடோடு எத்தனை நாட்களுக்கு நாம் சந்தோசமாக இருக்கமுடியும்? என்றாவது ஒருநாள் அது நிச்சயம் வெடிக்கும் என்று தெரியும். அன்று நான் சொன்னது போலவே, திருமணத்திற்குப் பிறகு அது நடப்பதற்குப் பதில், திருமணத்திற்கு முதல் நடந்தால் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது என்று தோன்றியது. வேதனையாக இருக்கும் என்றும் தெரியும். ஆனால், காலப்போக்கில் அது மறைந்துவிடும் என்றுதான் நினைத்தேன்..” என்றவனிடம்,

“அதுதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே.. காலப்போக்கில் எல்லாம் மறைந்துவிடும் என்று. நானும் இந்த வாழ்க்கைக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன். பிறகு எதற்கு இந்தச் சந்திப்பு, விளக்கம் எல்லாம்? நான் கேட்டேனா உங்களிடம்?” என்று கேட்டாள் சனா.

“இல்லை! எதுவுமே மறையவில்லை. நீ, உன்னோடு பழகிய நாட்கள், நாம் சந்தோசமாகக் கழித்த நிமிடங்கள் எதுவுமே என் மனதை விட்டு மறையவே இல்லை. இன்று மட்டுமல்ல என்றுமே மறையாது! நீ என் காலம் முழுமைக்கும் வேண்டும் என்றுதான் என் உள்ளம் கிடந்தது தவிக்கிறது.” என்றவனின் பேச்சைக் கேட்டு, அவளிதயம் ஒரு நொடி துள்ளிக் குதித்தது.

அவள் தோற்றுவிடவில்லை. அவள் காதலும் தோற்கவில்லை. அவனும் அவளைப் போலவே தவித்திருகிறான். இன்னும் தவிக்கிறான். ஆனால் இந்தத் தவிப்பு எத்தனை நாட்களுக்கு?

ஒருவரின் இயல்பு மாறப்போவதில்லை. இதோ இன்றுவரை வெளி வேஷம் போட்டாலும், அவனுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராகத்தான் அவள் இருக்கிறாள். ஆக, அந்த அன்பு, அவன் சொன்னதுபோல் இனியும் அவனை மூச்சு முட்டத்தான் வைக்கும். விலங்காகத்தான் இருக்கும்.

அவர்கள் திரும்ப இணைந்தாலும், மீண்டும் ஒரு பிரிவு நிச்சயம். அந்தக் காயத்ததைத் தாங்கும் வலு அவளிடம் இனி இல்லை.

அவள் சிந்தனைகளை, தொடர்ந்த அவன் பேச்சுத் தடுத்தது.

“அன்று, பிரிவை உன்னிடம் சொல்லிவிட்டுப் போன அன்றே என்னால் உன்னை விட்டுவிட்டு இருக்க முடியவில்லை. அதுநாள் வரை, இந்தக் கட்டிலிருந்து வெளிவந்துவிட வேண்டும் என்று துடித்த மனது, ஏன் அப்படி வெளியே வந்தோம் என்று தவிக்கத் தொடங்கிவிட்டது. இங்கேயே இருந்தால் உன்னை மறக்கமுடியாது என்றுதான், தாத்தா பாட்டியையும் இழுத்துக்கொண்டு இலங்கைக்குச் சென்றுவிட்டேன்.” என்றான் அவளைப் பார்த்து.

அவள் முகத்தில் பலவித உணர்வுகளின் கலவைகள். அது கோபமா, ஆத்திரமா, வேதனையா, வலியா, அல்லது இயலாமையா.. அல்லது எல்லாமா.. அவள் மனம் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

அவள் எதுவும் சொல்வாளோ என்று அவன் பார்க்க, அவளோ அவனைத் திரும்பியும் பாராமல் நின்றாள்.

ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், “ஒருமாத லீவில் தான் போனேன். ஆனால், உன்னை மறக்கமுடியாமல், மறந்துதான் ஆகவேண்டும் என்கிற பிடிவாதத்தில் மூன்று மாதங்கள் அங்கேயே சுற்றினேன். என் முடிவில் நானே உறுதியாக நிற்க வேண்டாமா என்கிற பிடிவாதம் ஒருபுறம். ஆனால் எவ்வளவு முயன்றும் என்னால் உன்னை மறக்க முடியவே இல்லை. உன்னை மறக்கவேண்டும் என்று நினைத்து நான் செய்த அத்தனை காரியங்களிலும் நீதான் இருந்தாய். எந்தளவுக்கு என்னில் நீ இரண்டறக் கலந்துவிட்டாய் என்பதை நானே உணர்ந்துகொண்ட நாட்கள் அவை.” என்றவனின் விழிகள், ஆசையோடு அவளைத் தழுவியது.

அவன் உயிரில் உறைந்துவிட்டவளை, நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டவனின் கண்கள் அவளைக் களவாடியது.

அதை உணராமல், அசையாமல், கல்லாக சமைந்து நின்றாள் சனா. அவளை மறக்க முயன்றானே என்று எண்ணித் துயர் கொள்வாளா? அல்லது அதில் தோற்றுவிட்டான் என்று எண்ணி ஆனந்தம் கொள்வாளா? இனம் காணமுடியா உணர்வுகளின் தாக்கங்கள் அவள் மனதில்!

அவனுடைய தன்னிலை விளக்கம் தொடர்ந்தது.

“எதிலும் உறுதியாக நிற்பவன் நான். முதன்முதலாக என்னைத் தடுமாற வைத்தவள் நீதான். எனக்கே என்னைப் பிடிக்காமல் போனது. மறுபடியும் உன்னிடமே வந்து உன்னை என்னவளாக்கிக் கொள்ள வேண்டும் என்று உள் மனம் துடித்துக்கொண்டே இருந்தது. என் மனதோடு நான் போராடிக்கொண்டு இருந்தபோதுதான், ஒரு சம்பவம் என் கண்ணில் பட்டது. அன்றுதான் எனக்குப் பெரும் கண்திறப்பு என்று கூடச் சொல்லலாம்...” என்றான்.

அப்படி என்ன பெரிய கண்திறப்பு என்கிற கேள்வியோடு அவள் அவனை விழியுயர்த்திப் பார்க்க, அவன் முகத்தில் சின்னப் புன்னகை ஒன்று தோன்றியது.

அதில் அவள் மனம் பலகீனப் படுவதை உணர்ந்தவள், வேகமாகத் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள். எவ்வளவு பட்டும் இந்த பாழாப் போன மனது அவனிடமே மயங்குகிறதே!

“அங்கே எப்போதும் உன் நினைவாக இருந்தது. பாட்டி வேறு, எப்போது ஜெர்மனி போகலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருந்தார். வீட்டில் இருக்க முடியாமல், வெளியேறி, கண்ணில் பட்ட ஒரு பூங்காவுக்குள் புகுந்துகொண்டேன். அங்கே நம்மைப் போலவே ஒரு அழகான ஜோடி…” என்று சொல்லிக்கொண்டு இருந்தவன், அவள் முறைப்பதை உணர்ந்து புரியாமல், “என்ன..?” என்று கேட்டான்.

ஜோடியாக இருந்த நம்மை நீயே பிரித்துவிட்டு பிறகென்ன நம்மைப்போல என்கிறாய் என்று கேட்கத் துடித்த நாவை அடக்கி, “ஒன்றுமில்லை. உங்கள் கதையைச் சொல்லுங்கள்..” என்றாள் சனா.

“அவர்களிடமிருந்து என்னால் கண்ணை எடுக்கவே முடியவில்லை. பார்ப்பது தவறு என்று தெரிந்தாலும்.. அவ்வளவு அழகாக இருந்தது அவர்களைப் பார்க்க. என் கண்தான் பட்டதோ தெரியவில்லை. கொஞ்சத் தூரத்தில் இரண்டு பெண்கள் வந்துகொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெண் அந்த ஆணுக்கு தெரிந்தவள் போல. அவள் இவனைப் பார்த்துச் சிரித்தாள். இவனும் சிரித்து, தலையை ஆட்டினான். அவ்வளவுதான் நடந்தது. அதுவரை அவன் கையோடு கை கோர்த்தபடி நின்ற அவன் காதலி, கையைப் பறித்துக்கொண்டு சென்றுவிட்டாள்.” என்றவனுக்கு, அதை நினைத்துச் சின்னப் புன்முறுவல் பூத்தது.

“எனக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது சனா. தெரிந்த பெண்ணைப் பார்த்துச் சிரிப்பதில் என்ன இருக்கிறது? அதற்கே அந்தப் பெண் அப்படி முறுக்கிக் கொண்டாள். அவன் எவ்வளவு கெஞ்சியும் கதைக்கவில்லை. சைக்கிளை எடுத்துக்கொண்டு போய்விட்டாள். ஏதோ ஒரு நம்பிக்கையில் அடுத்த நாளும் அங்கு போனேன். நான் எதிர்பார்த்தது போலவே வந்திருந்தார்கள். அன்றும் அவன் கெஞ்ச, ‘நான் இருக்கும் போதே இன்னொரு பெண்ணைப் பார்த்து நீங்கள் எப்படிச் சிரிக்கலாம். நீங்கள் எனக்கு மட்டும்தான். என்னைப் பார்த்து மட்டும்தான் சிரிக்க வேண்டும்.’ என்று அந்தப் பெண் அவனை ஒரு வாங்கு வாங்கிவிட்டாள். அவனும் காலில் விழாத குறையாகக் கெஞ்சி சமாதானப் படுத்தினான். முதலில் இதென்னடா கொடுமை என்று எனக்குச் சிரிப்பாக இருந்தது.” என்றவனின் முகத்தில், அந்தச் சிரிப்பு இப்போதும் ஒட்டியிருந்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“நடந்ததை பாட்டியிடம் சொன்னபோதுதான், அவர்கள் சொன்னார்கள். நம் பெண்கள் எதையும் விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் காதலன் அல்லது கணவன் மேல் காட்டும் அன்பில் மட்டும் அவர்கள் சுயநலவாதிகள். அதில் சின்னச் சறுக்கலைக் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்று. அப்போதுதான் உன் அன்பும் புரிந்தது எனக்கு. உன் அக்கா வீட்டு விசயங்களில் கூட ஒதுங்கிப் போகும் நீ, என்னுடைய எல்லா விசயத்திலும் தலையிட்டாய் என்றால், என்னை உன் சொந்தமாக நினைத்திருக்கிறாய்.
அது புரியாமல் நான் என்னென்னவோ உளறிவிட்டேன்...” என்றவன், அத்தோடு அதை நிறுத்திக்கொண்டான். அவனுக்குமே இப்போது அன்று சொன்னவைகளைத் திருப்பிச் சொல்லப் பிடிக்கவில்லை.

“ உனக்கு முன் எத்தனையோ பெண்கள் என்னை அணைத்திருக்கிறார்கள். நான் அணைத்திருகிறேன். அப்போதெல்லாம் உன் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பது இப்போது புரிகிறது. ஆனாலும் நீ அதை என்னிடம் ஒருநாள் தன்னும் காட்டிக்கொண்டதில்லை. அப்போதுதான் புரிந்தது உன் அன்பு எவ்வளவு பெரியது என்று. அது புரிந்த உடனேயே தாத்தா பாட்டியையும் இழுத்துக்கொண்டு உன்னைப் பார்க்கும் ஆவலில் இங்கு ஓடி வந்துவிட்டேன்..”
என்றவனைத் தீர்க்கமாகப் பார்த்தது சனாவின் விழிகள்.

“அந்த அன்புதானே உங்களுக்கு விலங்காக இருந்தது. அதில் மூச்சு முட்டித்தானே என்னை உதறிவிட்டு ஓடினீர்கள். இப்போது வந்து கதை அளக்கிறீர்கள்.” என்றாள், குறையாத ஏளனத்தோடு.

“அதுதான், நான் பேசியது எல்லாம் தப்பு என்று சொல்கிறேனே சனா. இன்னும் அதையே பிடித்துக்கொண்டு தொங்குவாயா..? இனி உன்னை என்னிடமிருந்து யாராலும்.. ஏன் என்னாலும் கூட பிரிக்க முடியாது.” என்றவனின் பேச்சை, “என்னால் முடியுமே..” என்று இடை வெட்டினால் சனா.

“ஏன் இப்படிச் சொல்கிறாய் சனா? என்னைப் புரிந்துகொள்ளவே மாட்டாயா?”

“புரிந்துகொள்ளாமல் என்ன, உங்களை மிக நன்றாகப் புரிந்துகொண்டேன். அதனால்தான் இதைச் சொல்கிறேன். புதிதாக ஒன்றும் இல்லை. அன்று நீங்கள் சொன்னதுதான். எனக்கும் உங்களுக்கும் என்றும் சரியாக வராது…” என்றாள் கடினப்பட்ட குரலில்.

“அப்படியானால் என்னை மறந்துவிட்டாயா நீ..?” அன்று ஜெயன் கேட்ட அதே கேள்வியை, இன்று சூர்யா கேட்டான்.

‘ஆமாம். உன்னை மறந்துவிட்டேன்..’ என்று சொல்லு என்று அவள் மனம் துடித்தாலும், அன்று போலவே இன்றும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

அவளின் மௌனத்தில் அவன் முகம் மலர்ந்தது. “இல்லைதானே! என்னைப் போலவே உன்னாலும் என்னை மறக்கமுடியாது. எனக்குத் தெரியும். நான் உன்மேல் வைத்த காதலை விட நீ என்மேல் கொண்ட அன்பு ஆழமானது. அந்த நம்பிக்கையில் தான் உன்னிடம் திரும்ப வந்திருக்கிறேன். நான் பேசியவைகள் அனைத்தும் மூடத்தனமானவை. இன்று அதை உணர்ந்துவிட்டேன். என்னை மன்னித்து மறுபடியும் ஏற்றுக்கொள்வாயா லட்.. சனா” என்று, ஆழ்ந்த குரலில் ஆவலோடு அவன் வேண்டியபோது, ஒருநொடி அவளும் தடுமாறித்தான் போனாள்.

ஆனால், இதுநாள் வரை அவள் பட்ட பாடுகள் கண் முன்னால் வலம்வர, ஆவேசம் கொண்டது அவள் மனது.

“இல்லை! முடியாது! என்னால் உங்களை ஏற்றுக்கொள்ள முடியாது! அன்று சொன்னதை இன்று தவறென்று சொல்கிறீர்கள். இன்று சொன்னதை நாளை தவறென்று சொல்ல மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?” என்று, கிட்டத்தட்ட ஆத்திரத்தில் கத்தினாள் சனா.

“நிச்சயமாக மாறமாட்டேன். இந்த ஜென்மத்தில் எனக்கு நீ மட்டும்தான். என்னை நம்ப மாட்டாயா?”

“எப்படி நம்பச் சொல்கிறீர்கள்? அன்று உங்களை மலைபோல நம்பினேனே.. என் வாழ்க்கையே நீங்கள் என்று நினைத்தேனே.. இனி எல்லாம் சுகம்தான் என்று கனவு கண்டேனே.. அனைத்தையும் ஒரு நொடியில் தவிடுபொடியாக்கவில்லை நீங்கள்? மீண்டும் எந்த நம்பிக்கையில் உங்களை நம்பச் சொல்லிக் கேட்கிறீர்கள்?”

“தயவு செய்து என்னை புரிந்துகொள் சனா. அன்று என்னை நானே அறிந்துகொள்ளாமல் பேசியது அது. உன்னைப் பிரிந்தபிறகுதான் நீ எனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்பதையே உணர்ந்தேன். இலங்கையில் தாத்தா பாட்டி என்னைக் கவனித்துக் கொண்டார்கள். சொந்த பந்தங்கள் என்னைச் சுற்றி இருந்தார்கள். அம்மா அப்பா, நண்பர்கள் எல்லோரும் தினமும் என்னோடு தொலைபேசியில் பேசினார்கள். ஆனாலும், என் மனம் உன்னை மட்டும்தான் நாடியது. உன்னோடு கதைக்கமாட்டோமா? உன்னோடு கைகோர்த்து நடக்கமாட்டோமா என்றுதான் தவித்தேன். என்னருகில், என் காதலியாக, மனைவியாக நீயிருந்தால் மட்டுமே என் வாழ்க்கை பூரணமாகும்! அதை மட்டும்தான் என் இதயம் ஏற்கும் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நான் உணர்ந்துகொண்டேன். எல்லோரும் இருந்துமே, நீ இல்லாமல் ஒன்றுமே இல்லாததுபோல் தான் இவ்வளவு நாளும் இருந்தேன்.” என்றவனை, சிறு திகைப்போடு நோக்கினாள் சனா.

அவளும் இதேமாதிரி நினைத்திருக்கிறாள். எல்லோரும் இருந்தும், அவன் இல்லாமல் யாருமே இல்லாதது போல் அவளும் உணர்ந்திருக்கிறாள்.

நினைவுகளில் கூட அவர்களுக்குள் எவ்வளவு ஒற்றுமை. ஆனால்.. என்ன ஒற்றுமை இருந்து என்ன பிரயோசனம்? அவனோடு வாழ அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லையே. தொண்டை அடைத்தது.

“இல்லை. நீங்கள் என்ன சொன்னாலும், இனி நமக்குள் எதுவும் சரிவராது. பிரிந்தது பிரிந்ததாகவே இருக்கட்டும்..” என்றாள், குரலடைக்க.

“ஏன்?” என்றவனின் குரலில், அவனது பிடிவாதம் மீண்டிருந்தது.

“என்ன ஏன்? ஐந்தறிவு படைத்த பூனையே ஒருதடவை சூடு பட்டால் அந்த இடத்துக்கு மறுபடியும் போகாது. நான் என்ன அந்தப் பூனையை விடக் கேவலமானவளா? எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் மீண்டும் மீண்டும் உங்களை நம்ப?

“ஏன் சனா இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாய்?”

“இது பிடிவாதம் அல்ல. என்னுடைய இயலாமை. இனியும் உங்களை நம்பி ஏமாறும் சக்தி எனக்கில்லை. சுதந்திரமாக வாழ்ந்து பழகிய உங்களுக்கு, என் செயல்கள் விலங்கு.. விலங்காக..” அந்த வார்த்தைகளைச் சொல்லவே அவளுக்குத் தொண்டை அடைத்தது.

அவளின் தவிப்பைத் தாங்க முடியாமல், “அந்தப் பேச்சு வேண்டாமே..” என்றான் சூர்யா.

ஒருவித பிடிவாதம் முகத்தில் தோன்ற, “இல்லை, இன்றாவது இருவரும் பேசித் தீர்த்துவிடலாம். என் செயல்கள், நான் காட்டிய அன்பு உங்களுக்கு விலங்காக இருந்திருந்தால், நீங்கள் அதை என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமா? நீங்கள் எதைச் சொன்னாலும் நான் கேட்டிருப்பேனே.. யாருமே இல்லை என்று தவித்துக் கொண்டிருந்த எனக்கு, நீங்கள்தான் விடிவெள்ளியாகத் தெரிந்தீர்கள். அதனால்தான் என் உள்ளத்து அன்பு முழுவதையும் உங்கள் மீது கொட்டினேன். அது ஒரு தப்பா?” என்று கேட்டவளின் விழிகளில் கலங்கியது.

“அது தப்பில்லை சனா. ஆனால், அதை நான்தான் உணர்ந்துகொள்ளவில்லை.” என்றான் தவிப்போடு.

அவன் பேச்சு அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. இவ்வளவு நாளும் உள்ளே குமுறிய மனக்குமுறலை கொட்டிக் கொண்டிருந்தாள்.

“அன்று என்னவெல்லாம் சொன்னீர்கள்? அடக்குமுறை என்றீர்கள், அடிமைப் படுத்துகிறேன் என்றீர்கள், இன்னும் சினமூட்டுகிறேன், உங்களை என்னிடம் கெஞ்ச வைக்கிறேன் என்று என்னவெல்லாம் சொன்னீர்கள்? எப்படி அப்படிச் சொல்ல முடிந்தது உங்களால்? உங்கள் அம்மா உங்களைக் கண்டித்தால், இனி எனக்கு அம்மா வேண்டாம் என்று அவர்களையும் பிரிந்து விடுவீர்களா?” என்று அவள் கேட்டபோது, அதிலிருந்த உண்மை அவனைப் பலமாகத் தாக்கியது.

“என்னிடம் உங்களை இன்றுபோல் அன்று விளக்கியிருக்க வேண்டாமா? பிரிந்துவிடலாம் என்று எவ்வளவு இலகுவாகச் சொன்னீர்கள். அன்று என் நிலையைக் கொஞ்சமாவது யோசித்தீர்களா? சுயநலமாகத்தானே முடிவெடுத்தீர்கள்? அந்த முடிவு எனக்கும் நல்லது என்று, நீங்களாக எப்படி முடிவு செய்தீர்கள்? உங்களுக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது?” அவளின் ஒரு கேள்விக்குக் கூட அவனிடம் பதிலில்லை. வாயடைத்து நின்றான்.

“யாரோடும் ஆத்மார்த்தமாக ஒட்டமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தவள், உங்களைக் கண்டதும் இனி எல்லாமே நீங்கள்தான் என்று நினைத்தேனே, அதற்கு நீங்கள் தந்த பரிசு என்ன? நான் இறந்தாலும் மாறாத மனக்காயம். உங்களுக்கு எல்லாச் சொந்தமும் இருந்தது. அதனால் உங்கள் அன்பை எல்லோருக்கும் பங்கு போட்டீர்கள். ஆனால் எனக்கு? நீங்கள் மட்டும்தானே மொத்த சொந்தமாகத் தெரிந்தீர்கள். அதனால்தானே நேசம், பாசம், அன்பு, காதல், கோபம் என்று அனைத்தையும் உங்களிடம் கொட்டினேன். இந்த உலகில் என்னைப் புரிந்துகொண்டவர் நீங்கள் மட்டும்தான் என்று இருந்தவளின் தலையில், மின்னாமல் முழங்காமல் இடியை அல்லவா அன்று போட்டீர்கள். இன்று எந்த முகத்தோடு வந்து என் முன் நிற்கிறீர்கள்?” வேதனையில் முகம் கசங்க, கண்களில் கண்ணீர் வழிய, ஆவேசத்தோடு அவனைப் பார்த்து அவள் கேட்க, சூர்யா துடித்துப் போனான்.

எந்தளவுக்கு அவனை அவள் நேசித்திருக்கிறாள். மூடன் போல் அதைப் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டானே.

“உன்னுடைய எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதிலில்லை சனா. ஆனால், இனி என்னால் என்றும் உன்னை விடமுடியாது. விடமாட்டேன்!” என்றான் உறுதியான குரலில்.

“நீங்கள் என்ன என்னை விடுவதும் விடாததும்? நான் விடுகிறேன் உங்களை! நீங்கள் வேண்டாம் எனக்கு!” என்றாள், உறுதியான குரலில்.

“பொய் சொல்லாதே! உன் மனதிலும் என் மீது அன்பு இருக்கிறது என்பதற்குச் சாட்சி நீ வடிக்கும் இந்தக் கண்ணீர். பிறகும் ஏன் இந்த வீண் பிடிவாதம்?” என்று நயமாகக் கேட்டான் சூர்யா.

“இந்தக் கேள்விக்கு ஏற்கனவே பதிலைச் சொல்லிவிட்டேன், உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதாக” என்றவள், அதற்கு மேல் அவனைப் பேசவிடாது, “எனக்கு நேரமாகிறது. நான் வீட்டுக்குப் போகவேண்டும்.” என்றுவிட்டுக் காருக்குள் ஏறினாள்.

அவனுக்கும் அதற்கு மேல் அவளைக் கஷ்டப் படுத்த இயலவில்லை. அவன் செய்த செயலுக்கு, உடனேயே அவள் மனம் மாறும் என்று எதிர்பார்க்க முடியாமல், “என்னை பெட்ரோல் செட்டில் விட்டுவிடு..” என்றபடி, அவனும் ஏறிக்கொண்டான்.

காரை இயக்கியவளுக்கு அதனை ஓரடி கூட நகர்த்த முடியவில்லை. இதுநாள் வரை மனதுக்குள்ளேயே வைத்துக் குமுறியவைகளை வெளியே கொட்டியதாலோ என்னவோ, கைகால்கள் நடுங்கியது. வீதியில் பார்வையைப் பதித்தால், கண்ணீர் அதை மறைத்தது.

கியரில் கையை வைத்தவளின் கை நடுக்கத்திலிருந்தே அவளின் நிலையை நொடியில் ஊகித்துக்கொண்டான் சூர்யா. உள்ளம் வலித்தது. அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியது தான்தான் என்கிற உண்மை சுட, “நீ இறங்கு. நான் ஓட்டுகிறேன்..” என்றான் மென்மையாக.

“தேவையில்லை!” என்றாள், அப்போதும் வீம்பாக.

அவள் பேச்சைக் காதில் விழுத்தாது, இறங்கி அவள் புறமாக வந்தவன், அவள் கையைப் பிடித்து, “வெளியே வா..” என்றான்.

அவனிடமிருந்து தன் கரத்தை உருவ முயன்றபடி, “மாட்டேன்..” என்றாள் அடமாக.

அவளின் அடத்தில் அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“நீ இறங்காவிட்டால், உன்னைத் தூக்கிக்கொண்டுபோய் அந்தப் பக்கம் இருத்துவேன். அதுதான் உன் விருப்பம் என்றால், எனக்கும் ஓகே..” என்றபடி அவன் குனிய, அவனை முறைத்துவிட்டு இறங்கி, அந்தப் பக்கம் ஏறிக்கொண்டாள் சனா.



 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom