“என்னத்துக்கு அவனோட கதைக்கவேண்டாம் எண்டு சொன்னீங்க? அதுக்கு பதிலைச் சொல்லுங்கோ முதல்!” அவளுக்கும் பதில் தெரிந்தே ஆகவேண்டியிருந்தது.
“பக்கத்தில நானிருக்கிறன், வந்ததுல இருந்து என்னட்ட ஒண்டும் சொல்லாம அவனிட்ட சொல்லுறாய் என்ற கோபத்தில நான் ஏதோ லூசு மாதிரிக் கதைச்சா.. அதுக்கு நீ இப்படித்தான் கதைப்பியா?”
இந்தச் சின்ன விஷயத்துக்கா அவ்வளவு கோபப்பட்டான்? நம்பமுடியாமல் அவனையே பார்த்தாள் அவள்.
வேகமாக வந்து அவளருகில் மீண்டும் அமர்ந்துகொண்டு சொன்னான் அவன். “இங்க பாரு ஷர்மி. சொல்லாம கொள்ளாம நீ உங்கட வீட்டை போனது எனக்கு சரியான கோபம். அதுக்குப்பிறகும், என்ன நடந்தது எண்டு ஒரு வார்த்த எடுத்துச் சொல்லேல்ல நீ. நகையை அடவு வைக்கிறது எல்லாம் என்ன பழக்கம் சொல்லு? கோபத்தில ஒரு வார்த்த சொன்னதுக்கு ரோசப்பட்டுப்போய் நகையை வித்திருக்கிறாய். இதெல்லாம் எனக்கு அறவே பிடிக்கிறேல்ல. நீயா எடுத்து விளக்கம் சொல்லவேணும் எண்டு எதிர்பாத்தனான். ஆனா, கடைசிவரைக்கும் நீ எடுக்கவே இல்ல. அதுக்குக் காரணம் உன்ர வீட்டாக்கள் எண்டு நினைச்சன். முக்கியமா உதயன். அவனும் நீயும் நல்ல ஒட்டு எண்டு தெரியும். முதல் முதல் உன்னோட கதைக்க வரேக்க அவன் தடுத்ததே எனக்குக் கோபம். அதெல்லாம் இப்ப இல்லதான். எண்டாலும், அவனைவிட நீ என்னட்டத்தான் எல்லாத்தையும் சொல்லோணும், உனக்கு நான்தான் எல்லாமா இருக்கோணும் எண்டுதான் நினைப்பன். இது சந்தேகம் இல்ல.. அப்படிச் சந்தேகம் இருந்தா கொழும்பில அவன்ர பொறுப்பில உன்ன விடுவனா சொல்லு?” என்று அவன் வினா எழுப்பியபோது, இது உரிமைப்போராட்டம் என்று தெளிந்தாள் அவன் மனைவி.
“ஆரம்பத்தில இருந்தே நீ எங்கட வீட்டோட ஒட்டேல்ல. அபியும் அம்மாவும் கதைக்கேல்லதான் எண்டாலும், நீயும் விலகித்தான் போனாய். ‘எண்டைக்கும் இந்த வீட்டு மருமகளா இருக்கவேணும்’ எண்டு நான் சொல்லிப்போட்டு வந்தும் நீ இப்படியெல்லாம் செய்தா கோபம் வராதா? எதையும் சமாளிச்சுப்போய் எல்லோ இருக்கவேணும். இல்ல என்னட்ட சொல்லி இருந்தா நான் என்ன ஏது எண்டு கதைச்சிருப்பன். அதுக்குமுதல், எப்பயாவது உன்ன வீட்டில வீட்டுக் குடுத்திருக்கிறனா சொல்லு? அம்மா என்ன சொன்னாலும் உன்ர விருப்பப்படிதான் எல்லாத்தையும் செய்ய விட்டிருக்கிறன். ‘என்ர மனுசிய நான் சந்தோசமா வச்சிருக்க வேணும்’ எண்டுதான் எப்பவும் நினைச்சிருக்கிறன். அப்படி இருந்தும் நீ உன்ர பிரச்னையை என்னட்ட கொண்டுவரேல்ல என்றதே எனக்கு பெரிய அடியா இருந்தது. இதில, அம்மா வார்த்தைக்கு வார்த்தை நீ தேடின பொம்பிளை அப்படி செய்திட்டாள், இப்படி செய்திட்டாள் எண்டு ஒவ்வொருநாளும் ஒவ்வொண்டா சொல்லக் சொல்ல, உன்னையும் விட்டுக்குடுக்க முடியாம, உன்னில வந்த கோபத்தையும் காட்ட முடியாம விசர்தான் வந்தது எனக்கு. நீ போனதைவிட, அம்மா உன்னைப்பற்றிக் குறையாக் கதைக்க இடம் குடுத்திட்டியே என்ற கோபம் தான் பெருசா இருந்தது. நீ அங்க செய்யிற ஒவ்வொரு விசயத்தையும் அடுத்த நிமிசமே எனக்கு போனை போட்டுச் சொல்லுவா? அப்ப எல்லாம் வரும் பார் ஒரு விசர்.. அம்மாட்டையும் கத்த முடியாம உன்னோடையும் கதைக்க முடியாம கடவுளே.. அது நரகம் ஷர்மி.”
நடந்த விஷயங்களுக்கு இப்படி ஒரு பக்கமும் இருந்திருக்கிறது என்கிற திகைப்பில் இருந்தாள் அவள். அவனோ ஆரம்பித்துவிட்டதை இடையில் நிறுத்தாமல் தன் மனதை விளக்க முயன்றான்.
“எயாபோர்ட்ல உன்னைப் பாத்ததும் திகைச்சுப்போனன். இந்த நிலமைல இருக்கிறவளோடையா கதைக்காம இருந்தன் எண்டு என்னிலேயே கோபம் கோபமா வந்தது. இதுல நீ உதயனிட்ட அழவும் உனக்கு எப்பவும் அவன்தான் பெருசு என்ற விசர்ல.. ப்ச் எல்லாத்தையும் சேத்து உன்னில காட்டீட்டன். அது சரியான பிழைதான். எண்டாலும் அதுக்குப்போய்.. என்ன ஷர்மி நீ? எங்கட குழந்தை எல்லா அது?” அவளின் வார்த்தைகள் உண்டாக்கிய வலியை வெளிப்படுத்தக்கூடத் தெரியாமல் அவன் தலையை கோதிக்கொண்டு தவிக்க, அத்தனை மனப்பாரமும் இறங்கிப்போனது அவளுக்கு.
இந்தளவும் போதும் அவளுக்கு! அவன் வேறு எதற்காகக் கோபம் கொண்டாலும் தாங்கிக்கொள்வாள், தழைந்து போவாள்.
மெல்ல நகர்ந்து அவன் கரத்தை தன் இரு கரங்களாலும் இறுக்கிக் கட்டிக்கொண்டு, “சாரிப்பா..!” என்றபடி அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
அவனுக்கும் அந்த மன்னிப்புத் தேவையே இல்லை. அவள் தன் தோள் சாய்ந்ததே போதுமாயிருந்தது.
“இது மட்டும் தான் எனக்கு வேணும் ஷர்மி!” குரலடைக்கச் சொன்னவன் மனைவியை அணைத்து, நெற்றியில் அழுத்தமாக உதடுகளைப் பதித்தான். பதித்த கணத்தில் கண்களைக் கண்ணீர் நனைத்தது!
அவளுக்கு அனைத்துமாக அவனிருக்க வேண்டும்! அது ஒன்றே அவனது ஆசையாயிருந்தது. எதிர்பார்ப்பாயிருந்தது. அதை உணர்ந்து அவன் தோள் அவள் சாய்ந்தபோது, மனதிலிருந்த அத்தனை குறைகளும் நீங்கிப்போயிற்று!
கண்ணீர் முத்துக்கள் கன்னங்களில் சிதற, அவளும் கணவனின் முகமெங்கும் இதழ்களைப் பதித்தாள். எத்தனை நாள் ஏக்கம்? அவளின் முத்தமழை ஓய்வதாயில்லை. அவனோ சுகமாக நனைந்துகொண்டிருந்தான்.
“நான் இன்னும் என்ர பிள்ளைய கொஞ்சவே இல்லை.” குரல் கமரச் சொன்னவன், அவள் வயிற்றுலும் ஆசையாசையாய் பல முத்தங்களை இட்டான். கூச்சத்தில் அவனைத் தள்ளிவிட்டபோது கூட விடவில்லை.
“சாரி செல்லம்! அப்பா கொஞ்சம் இப்படித்தான். அம்மாவை மாதிரி நீங்களும் அப்பாவை மன்னிச்சு விட்டுடுங்கோ..”வயிற்றின் மீது முகத்தைப் புதைத்தவனுக்கு கண்கள் கசிந்துபோயிற்று!
“என்ன இது? நீங்க என்ன செய்தனீங்க? கோபப்பட்டீங்களே தவிர வேற ஒண்டும் செய்யேல்ல. உங்கட சொல்லுக் கேக்காம அவசரப்பட்டுச் செய்தது எல்லாம் நான்..” என்று கண்ணீரோடு தேம்பியவளை அதட்டினான் அவன்.
“இதென்ன தொட்டத்துக்கும் அழுகை? சும்மா இரு!” என்றவன், அவள் கண்களைத் துடைத்துவிட்டு, நேசத்தோடு நெற்றியில் உதடுகளைப் பதித்தெடுத்தான். கணவனின் கைகளுக்குள் அடங்கியபோது சொர்க்கத்தில் மிதப்பது போலிருந்தது அவளுக்கு!
“ஏன் அப்படிக் கேட்ட ஷர்மி?” மனைவி மீது மனத்தாங்கல் எதுவுமே இல்லைதான். என்றாலும் பிள்ளையைப் பற்றி அவள் சொன்ன வார்த்தைகள் அவன் மனதை தைத்துத்தான் இருந்தது. “நான் கோவக்காரன்தான். ஆனா, சந்தேகக்காரன் எண்டு நினைச்சியா?” அவனைப்பற்றி அவள் கொஞ்சமுமா அறிந்துவைத்திருக்கவில்லை? அது தெரியவேண்டுமாயிருந்தது அவனுக்கு.
அதைப்பற்றிச் சொல்லப்போனால் மாமி கதைத்ததைப் பற்றிச் சொல்லவேண்டிவரும். அவள் கேட்டதற்கே மனமாறாமல் துன்புறுகிறவன் அதை இன்னுமே தங்கமாட்டான். தாய் மீது பாசம் கொண்ட மனிதன். எனவே, “நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். ப்ளீஸ்.. எனக்காக அத அப்படியே மறந்திடுங்கோ..” என்றாள் கெஞ்சலாக.
பதில் சொல்ல மறுப்பவளை யோசனையோடு நோக்கினான்.
“அம்மாக்கும் உனக்கும் என்ன பிரச்சனை?” இந்த வினாவும் முதல் வினாவின் விடையை நோக்கித்தானே நகரும்.
“அது எனக்கும் என்ர மாமிக்கும் இடைல நடந்த பிரச்சனை. அது முடிஞ்சும் போச்சுது. நாங்க சமாதானமும் ஆயிட்டோம். அதைப்பற்றி நீங்க கேட்கக்கூடாது!” என்று அழகாய்ப் புன்னகைத்தாள் அவன் மனைவி.
மற்றது எல்லாம் மறக்க கண் சிமிட்டவும் மறந்து பார்த்தான் சீராளன். இந்தப் பெண்ணிடம் தான் அவன் தொலைந்தான். ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டி கருங்கூந்தல் தோகை விரிக்க, காற்றில் அசைந்தாடி அவன் உள்ளத்தைப் பறித்தவள் இவள்தான்! இவளைத்தான் இத்தனை நேரமாய் ஒழித்து வைத்துக்கொண்டு அவனைப் பந்தாடினாள் அவன் மனைவி! ஆசையாய் அவளை மடியிலேந்தி, செவ்விதழ்களைச் சிறை செய்தான். கிறங்கிய விழிகள் மூடிக்கொள்ள, தன்னை மறந்தாள் மனைவி. தகித்த தேகத்தின் தாபமடங்க அவன் விடுவித்தபோது, குங்குமமாய் சிவந்துவிட்ட முகத்தை அவன் மார்பினில் மறைத்துக்கொண்டாள் ஷர்மினி.
“‘கண்டபாட்டுக்கு அங்கேயும் இங்கயும் திரியாத எண்டு சொன்னதுக்கு பெட்டியை கட்டிக்கொண்டு போய்ட்டாள். அவளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை நீ மட்டும் தான் வேணும். நாங்க இல்ல..’ எண்டு அம்மா சொல்லேக்க, நீ ஏன் போனாய் என்றதைவிட, அம்மா இப்படி கதைக்கிற அளவுக்கு நடந்திட்டாயே எண்டுதான் எனக்கு கோவம் வந்தது. பிறகும் அவா ஒவ்வொன்றும் சொல்லக் சொல்ல..” என்றவனின் உதடுகளில் தன் மென் விரல்களை வைத்துத் தடுத்தாள்.
“நீங்க ஒரு விளக்கமும் சொல்லவேண்டாம். எனக்கே உங்கட மனம் விளங்குது. மாமியையும் குறையா நினைக்காதீங்கோ. நானும் சமாளிச்சுப் போயிருக்க வேணும். ஆரம்பத்தில இருந்தே மாமிக்கு விருப்பமில்லை, மாமி அப்படி சொல்லிப்போட்டா, அத செய்துபோட்டா எண்டு எல்லாத்தையும் மனதில சுமந்து சுமந்துதான் சின்ன விஷயமும் பெருசா எனக்குப் பாதிச்சது. அபி கதைக்காம இருந்ததும் ஒரு காரணம். ஆனாப்பா, அந்த நேரம் நான் அங்க இருந்து வெளிக்கிடாம இருந்திருந்தா மனதளவில் இன்னுமே பாதிக்கப்பட்டிருப்பன். அந்தளவுக்கு காயப்பட்டுப்போனன். ஆனா என்ன, உங்களோட கதைச்சிருக்க வேணும். நடந்ததச் சொல்லியிருக்க வேணும். நீங்க எடுப்பீங்க எண்டு நானும், நான் எடுப்பேன் எண்டு நீங்களும் காத்திருந்து பிரச்னையை பெருசாக்கிப்போட்டோம். அவ்வளவுதான்.” என்றவளை மார்போடு அணைத்துக்கொண்டான் அவன்.
அவளின் மனதைப் பெரிதாகப் பாதிக்கிற அளவுக்கு என்னவோ நடந்திருக்கிறது. அதில் அவனது பிள்ளையையும் சம்மந்தப்படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் அவளிடமிருந்து அந்தக் கேள்வி வந்திருக்கிறது. ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தபோது அவன் தேகம் விறைத்து நிமிர்ந்தது.
சிலவற்றை அப்படியே கடப்பதுதான் உறவுகளைக் காக்க எடுக்கும் மிகச்சிறந்த முடிவாயிருக்கும். ஆழ மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டான் சீராளன்.
எதையும் காட்டிக்கொள்ளாமல் தன் கை வளையத்துக்குள் சுகமாய்ச் சாய்ந்திருந்தவளின் முகத்தையே பார்த்தான்.
“என்ன?” கன்னங்களில் சிவப்பேறக் கேட்டாள்.
ஒற்றைப் பார்வைக்கே சிவந்தவளின் வெட்கம் ஈர்க்க, சன்னச் சிரிப்புடன் கண்ணடித்து அழைத்தவனின் அழைப்பில் வெட்கி விலகப் பார்த்தவளை விடாமல் வளைத்து, “என்னட்ட என்ன வெக்கம்?” என்று கேட்டு, கழுத்து வளைவில் உதடுகளை அழுத்தமாகப் பதித்தான் சீராளன்.
“எல்லாம் மறந்துபோச்சு..!” அடங்காமல் அவள் மேனியில் அலைந்த கரங்களும், முகமெங்கும் ஊர்வலம் நடத்திய உதடுகளும் தன்னிலை மறக்கச் செய்ய, கணவனின் கைகளில் சந்தோசமாய்க் கரைந்தாள் ஷர்மினி!
Super story seeralanin view correct than sharmiyum paavam analum devaki varthaigal over udhayan characterin purithal arumai innum konjam story extend pannirikkalam ungal ezhuthu kathaikkul vazha vaikkirathu