அத்தியாயம் 4
இலங்கைப் பல்கலைக்கழகம் என்கிற பெயரில் இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகமாகக் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டு, பின்னர் பேராதனைக்கு இடம் பெயர்ந்து, பேராதனை நகரம் முழுவதிலும் அதன் பீடங்களும் நிறுவகங்களுமாகப் பரவிக் நிற்கிறது பேராதனைப் பல்கலைக்கழகம்.
சுற்றுலா பயணிகளைத் தனக்குள் சுருட்டிக்கொள்ளும் பேராதனை நகரத்தின் அழகு சொல்லி மாளாது. மெலிதான மலைப்பிரதேசத் தன்மையும், கலையாமல் கவிந்தே கிடைக்கும் கருமேகக் கூட்டங்களும், மரக்கூட்டங்களை மேவி நிற்கும் பனிப் புகாரும், பெரு மரங்களோடு பின்னிப் பிணைந்து காதல் மொழி பேசிக் கழித்திடும் பசும் பச்சைக் கொடிகளும், பல்கலையினூடாகச் சலசலக்கும் நதியோடையும், திரும்பும் திசையெங்கும் பூத்துக்கிடந்து போதையேற்றும் பலவர்ண மலர்களும் என்று பேராதனையின் அழகைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்தப் பிரதேசத்தின் குளிர்மை நிரல்யாவின் உள்ளத்தினுள்ளும் புகுந்து, இத்தனை காலமாக அழுத்தி வைத்திருந்த எதிர்மறை உணர்வுகளை எல்லாம் அவளுக்குள்ளிருந்து வெளியேற்றி, புதுப்பிறப்பு எடுக்க வைத்திருந்தது.
இங்கே வந்து மூன்று மாதங்கள் ஓடியே போயிருந்தன. நாங்களும் ரவுடிதான் என்பதுபோல் நடந்த சின்ன சின்ன ராக்கிங், வெல்கம் பார்ட்டி என்று எல்லாம் முடிந்து, பல்கலைக்கழக வளாகம், தங்கும் விடுதி, அவற்றின் சுற்று வட்டாரங்கள் என்று பழகி, கற்கைகள் மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்திருந்தன.
முதல் இரண்டு வார இறுதிகளில் மட்டுமே அடுத்தடுத்து வவுனியா சென்று வந்தவள் அதன் பிறகு இங்கே நண்பர்களும் ஊரும் பிடிபட்டதும் மாதத்துக்கு ஒரு முறையாக வவுனியாப் பயணத்தைச் சுருக்கிக்கொண்டு ஊர் சுத்த ஆரம்பித்திருந்தாள். ஒவ்வொரு வாரமும் சென்று வருவது மிகுந்த அலுப்பைத் தருவதும் ஒரு காரணமாயிற்று.
கூடவே கட்டுப்பாடுகள் இல்லாத, பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் முடக்கி வைக்காத வாழ்வு தேனாய் இனித்தது. ஒரு சுதந்திர உணர்வு. இந்த உலகத்தைச் சொந்தக் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிட்டது போன்று, அவள் வளர்ந்துவிட்டது போன்று அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் வாழ்க்கை ரசிக்கும்படியாக மாறிற்று.
விடுதியின் ஒவ்வொரு அறையும் சின்ன சின்னக் கூடுகளாக அடைக்கப் பட்டிருந்தாலும் கூடியிருந்து கும்மாளமடிப்பது, ஒற்றைக் கட்டிலில் ஒன்பது பேர் சேர்ந்திருந்து சிரித்துப் பிரள்வது, தெரியாத மொழியைப் படு பிழையாகப் பேசி அதற்கொரு சிரிப்பு, சுவையே இல்லாத உணவு கூடப் புது அனுபவம் தந்தது.
இதோ இன்னும் சற்றுநேரத்தில் அவள் வகுப்பில் இருக்க வேண்டும். ஆயத்தமாகு என்று அறிவு அறிவுறுத்தினாலும் அவர்களின் விடுதியின் பால்கனி போன்ற அமைப்பில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.
ஈரலிப்பான காற்று தேகத்தை நனைத்துப் போயிற்று. “ஸ்ஸ்ஸ்…” கட்டிக்கொண்டு நின்ற கைகளாலேயே இரண்டு பக்கமும் சூடு பறக்கத் தேய்த்து விட்டவளுக்கு அந்த பால்கனி, அதனைச் சுற்றி நிற்கும் அரைச்சுவர் இரண்டும் அவள் வீட்டின் மொட்டை மாடியை நினைவூட்டிற்று. கூடவே, அங்கே குடியிருக்கிறவனையும்.
அன்று, அவளின் பொருள்களைக் கொண்டுபோய் விடுதியின் முன் விறாந்தையில் அவன் வைத்துவிட்டு வருவதற்கிடையிலான இடைவெளியில் மின்னல் விரைவில் அவன் தந்த பரிசைத் திருப்பி வைத்திருந்தாள். உண்மையில் ஒருவிதக் குருட்டுத் தைரியம்தான். வைத்தபிறகு அப்படி நடந்திருக்க வேண்டாமோ என்று நினைத்தாள்தான். கண்டு பிடித்துக் கடினமான வார்த்தைகளை வீசி விடுவானோ என்று பயந்தாலும் வீம்பு விடவில்லை.
அம்மா அப்பாவை இழந்துவிட்டு வந்திருக்கிறான் என்று அறிந்தபோது அந்தச் சின்ன வயதில் ஆழமான அன்பு ஒன்று அவன்பால் அவளுக்குள் சுரந்திருந்தது. பிறத்தி ஆணாக, ஏன் ஆணாகக் கூட அவனைப் பிரித்துப் பார்த்ததில்லை. அப்படி ஒரு பிடிப்பு, பாசம், பற்று, அன்பு என்று அதற்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம்.
அவள் வாழ்க்கையை இரண்டாகப் பிரிப்பதானால் அதனை அனந்தனின் வருகைக்கு முன், அனந்தனின் வருகைக்குப் பின் என்று பிரிக்கலாம். அவ்வளவு மாற்றத்தை அவள் வாழ்வில் உண்டாக்கியவன்.
அப்படியானவனை அவளுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று அவனுக்கே தெரியும். அப்பாவின் வட்டித் தொழிலை எந்தளவில் வெறுக்கிறாள் என்றும் தெரியும். அதுவரை கூலிக்கு ஆட்களை வைத்து மிரட்டிக்கொண்டிருந்த அப்பா அவனையும் ஒரு அடியாளாக்கி வைத்திருக்கிறார். அதைச் செய்யாதே என்று சொன்னால் மாட்டானாமே!
அந்தக் கோபத்தில்தான் கதைக்காமல் விட்டாள். அப்போதாவது மாறுவான் என்று அவள் எண்ணியிருக்க, அவனோ தந்தையின் வட்டித் தொழிலை இன்னும் பெரிதாக்கியது மட்டுமல்லாமல் அவரை ஒரு தாதாவாக்கி தன்னையும் பயிற்சி பெற்ற ஒரு ரவுடியாக மாற்றிக்கொண்டு நிற்கிறான்.
அதற்கு அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? மறைமுகமாக அவன் சொல்ல வருவது என்ன? அவளை விடவும் அவன் பார்க்கும் அந்த ரவுடித் தொழில் அவனுக்கு முக்கியம் என்பதுதானே?
இதில் பரிசைக் கொண்டுவந்து தருவானாம், அவள் வாங்க வேண்டுமாம். திமிர் என்ன அவனுக்கு மட்டுமே சொந்தமானதா என்ன? அதுதான் திருப்பி வைத்தாள்.
‘நான் மாறமாட்டேன் போடி’ என்று சத்தமே இல்லாமல் எப்படி அவன் அவளுக்கு உணர்த்துகிறானோ அதே போலத்தான் அவளும். நீ திருந்தாமல் உன்னோடு எந்தவித சமாதானத்துக்கும் நான் தயாரில்லை என்று அன்று காட்டினாள்.
ஆனால், அதற்கும் அந்த மண்டைக்கனம் பிடித்தவன் அவளைச் சும்மா விடவில்லையே!
அனந்தன் வந்து அழைத்துவருவான் என்று அமிர்தவல்லி அவ்வளவு சொல்லியும் கேளாமல், ‘இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக’ என்பதுபோல, அவள் வாழ்வில் முதன் முறையாக அவளே இரயிலில் தனியாகப் பயணித்து, வவுனியாவில் சென்று இறங்கியபோது, அவனது அந்த அடர் சிவப்பு பஜிரோ அவளுக்காகக் காத்திருந்தது. அதில் சாய்ந்து நின்றபடி அவனும் இவளையே பார்த்திருந்தான்.
மென் முறுவலோடு கையைக் கட்டிக்கொண்டு, மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்து நின்றபடி அவள் சொல்கிறவற்றை ரசித்துக் கேட்ட அனந்தன் இவனன்று! இவன் வேறு யாரோ! இறுகிய தோற்றமும் கடின முகமும் பார்க்கிறவர்கள் நெஞ்சினுள் ஒருவித அச்சத்தை வரவைக்கிற இவனை அவளுக்குப் பிடிக்கவே இல்லை!
அவனை நெருங்க நெருங்க அவளை ஒருவிதப் பயமும் நடுக்கமும் சேர்ந்து வந்து ஆட்டியது. திரும்பி ஓடவா முடியும்? என்னவோ பெரிய துணிச்சல்காரியைப் போன்று அவனைப் பாராமல் அவனை நெருங்கினாள்.
அவள் கொண்டுவந்த பையை வாங்கிப் பின்னால் போட்டுவிட்டு அவன் பஜிரோவில் ஏறிக்கொள்ள பக்கத்து இருக்கையை அவளும் நிறைத்துக்கொண்டாள்.
அவனோடு கதைக்காமல் விட்ட பிறகு இங்கிருந்த காலத்தில் இந்த பஜிரோவில் ஏறுவதையும் நிறுத்தியிருந்தாள். இன்று இப்படி அவனோடு பயணிப்பது ஒருவித அந்நியத் தன்மையைத்தான் கொடுத்தது. என்னவோ உரிமையற்ற ஒருவரின் இடத்தில் அமர்ந்திருப்பது போன்றதொரு உணர்வு. இனி அவர்கள் இருவராலும் பழையமாதிரி பழகவே முடியாது போலும். உள்ளே வலித்தது. ஒரு நெடிய மூச்சுடன் அவள் நிமிர, வீதியோரமாக பஜிரோவை ஒதுக்கி நிறுத்தினான் அவன்.
ஏதோ அலுவல் போலும் என்று அவள் நினைத்து முடிக்க முதலே, பின்னால் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து பஜிரோவின் டாஷ் போடின் மேலே வைத்தான். அவளுக்கு ஒரு முறை திக் என்று இருந்தது. அன்று அவன் தந்து அவள் திருப்பி வைத்த அதே பரிசுப் பெட்டி. திருப்பி வைக்க முடியாத நிலையில் நிறுத்தித் தருகிறான். உள்ளம் கொதிக்க ஆரம்பிக்க முகத்தை வெளியே திருப்பிக் கொண்டவளுக்கு மெலிதாக வியர்க்காமல் இல்லை.
ஆனால், அவன் எதுவும் பேசவில்லை. ஏன் அப்படிச் செய்தாய் என்று கேட்டுக்கொண்டு வரவும் இல்லை. மாறாக, சீட்டை இன்னும் நன்றாக இழுத்துப் போட்டுகொண்டு, இலகுவாகக் கால்களை நீட்டிச் சாய்ந்துக்கொண்டு, கைகள் இரண்டையும் சீட்டின் தலையின் மீது கோர்த்தபடி கண்களை மூடிக்கொண்டான்.
நிரல்யாவுக்குக் கோபம் வந்தது. நீ தரும் எதுவும் எனக்கு வேண்டாம் என்று தூக்கி எறியும் ஆவேசம் வந்தது. அதைச் செய்யும் துணிவற்று அவளும் பிடிவாதமாக அமர்ந்திருந்தாள்.
வந்து இறங்கிவிட்டேன் என்று சொன்ன மகள் இன்னும் வந்து சேரவில்லையே என்றெண்ணி அமிர்தவல்லிகூட அழைத்துவிட்டார். சுந்தரலிங்கம் கூட எங்கே நிற்கிறீர்கள் என்று அவனை அழைத்து விசாரித்திருந்தார். வந்துகொண்டிருக்கிறோம் என்றவன் அப்போதும் அசையவில்லை.
அதை அவள் எடுக்காமல் அவன் நகரப் போவதில்லை. வெளியே காட்டமுடியா சினமும் சீற்றமும் அவளுக்குள் பொங்கிற்று. அது ஆத்திரமாக மாற, விறுவிறு என்று அந்தப் பரிசைப் பிரித்தாள். அது ஒரு கைச்செயின். அன்றைக்கு அவள் கழற்றிக் கொடுத்ததற்குப் பதிலாக வாங்கியிருக்கிறான் என்று விளங்கிற்று. அது ஒற்றை செயினில் குண்டுகள் கோர்க்கப்பட்டது என்றால் இது மூன்று வரிசையில் ஓவல் வடிவிலான தங்கள் குண்டுகள் சேர்க்கப் பட்டிருந்தன. அந்த மூன்று வரிசையும் ஒற்றை செயினில் முடிந்திருந்தது. நல்ல மனநிலையில் இருந்திருக்க நிச்சயம் விழிகளை விரித்து ரசித்திருப்பாள். இப்போதோ அதன் அழகை உணராமல் பிரித்த வேகத்திலேயே கையில் அணிந்தும் கொண்டாள். அதன் பிறகுதான் பஜிரோவைக் கிளப்பினான் அனந்தன்.
எத்தனை திமிர் இவனுக்கு? அகங்காரம் பிடித்தவன். அவளுக்குள் அடக்க முடியாத ஆத்திரம் கிளம்பிற்று. அது கண்ணீரை உற்பத்தி செய்ய முயல, அவன் முன்னே அழுது விடவே கூடாது என்கிற பிடிவாதத்தோடு இறுகிப்போய் அமர்ந்திருந்தாள்.
வீட்டின் முன்னே கொண்டுவந்து பஜிரோவை நிறுத்தினான் அனந்தன். ஒருகணம் அசையாமல் அமர்ந்திருந்தவள் அவனைத் திரும்பியும் பாராமல், “இந்த நிமிசம் நீங்க நினைச்சதைச் சாதிச்சு இருக்கலாம். ஆனா, நீங்க செய்ற ஒவ்வொண்டும் உங்கள வெறுக்கத்தான் வைக்குது. இங்க இருந்து போகோணும் எண்டு நான் நினைச்சதுக்கு நீங்கதான் காரணம். இனி இங்க வரவே கூடாது எண்டு நினைக்கவும் வச்சிடாதீங்க.” என்றுவிட்டு இறங்கிப் போனாள்.
அப்படியே அமர்ந்துவிட்டான் அனந்தன். அவள் வீசிய வார்த்தைகளின் அதிர்விலிருந்து வெளிவர அவனுக்கு நிறைய நேரம் பிடித்திருந்தது. அடுத்தவாரம் அவள் போனபோதும் ஏற்றிச் செல்ல வந்திருந்தான்தான். அவ்வளவுதான். அவளை ஏற்றுவதையும் இறக்குவதையும் மட்டுமே தன் வேலையாகப் பார்த்துக்கொண்டான். இவள் நிற்கும் நாள்களில் கண்களில் படவே மாட்டான். வாசலில் நிற்கும் பஜிரோவை வைத்துத்தான் அவன் வீட்டில் நிற்கிறானா இல்லையா என்று கண்டுபிடிப்பாள் நிரல்யா.
அவன் பற்றிய எண்ணங்களில் திளைத்திருந்தவளின் கை, எப்போதும்போல மற்றக் கையில் கிடந்த செயினை வருடிற்று. ஒரு நெடிய மூச்சுடன் பல்கலைக்குத் தயாராகச் சென்றாள்.
*****
திரும்புகிற பக்கமெல்லாம் அடர்ந்த மரங்களின் கூட்டணி. அவற்றினோடு ஒரு நடை. அவளின் முன்னும் பின்னும் தொடர் வண்டியாய்ச் சலசலத்தபடி போகும் இளவட்டங்களின் உற்சாகக் குரல்கள். பிடித்திருந்த குடையையும் மீறி முகம் நனைத்துப்போன மெல்லிய சாரல் என்று ஏதோ ஒரு கற்பனை உலகில் சஞ்சரித்தபடி, பல்கலையை நோக்கி நடந்துகொண்டிருந்தாள் நிரல்யா.
திடீர் என்று மழை சடசடவென்று கொட்ட ஆரபிக்க, யாரோ ஒருவன் ஓடிவந்து அவள் தோளை உரசியபடி அவளின் குடைக்குள் புகுந்திருந்தான். “அம்மா!” சத்தமில்லாமல் அலறியவள் பக்கத்தில் வந்துகொண்டிருந்த தோழி சரண்யாவின் கையை இறுக்கிப் பற்றியிருந்தாள்.
கொஞ்ச நாள்களுக்கு முதல் வரை ராக்கிங் என்கிற பெயரில் வேறு பேயோட்டி இருந்தார்களே. அவளுக்கு வெகு நெருக்கத்தில் குடைக்குள் நின்றவனைக் கண்டு உயிரே போயிற்று.
அவளின் அலறலில் திரும்பிப் பார்த்தவன், அவள் நெற்றியில் இருந்த பொட்டினைக் கண்டுவிட்டு, “தெமலதா?” என்றான் அவளையே குறுகுறு என்று பார்த்தபடி.
அவன் தமிழா என்று கேட்டதே இனம் தெரியாக் கலக்கத்தை உண்டாக்க, “ஒவ்…ஒவ் அய்யே.(ஓம்… ஓம் அண்ணா.)” என்று உளறிக்கொட்டினாள்.