தூரத்தில் எங்கோ கேட்ட வாகன ஒலியில் கண் விழித்த அகல்விழி, அவசரமாய்ப் படுக்கையைச் சுற்றிவைத்துக்கொண்டே அருகில் தூங்கிய மகன் கானகனையும், மகள் கானகியையும் எழுப்பிப் பல்துலக்கிப் படிக்கச்சொல்லிவிட்டு அந்தச் சின்ன வீட்டின் ஓரமாய் இருந்த அடுக்களைக்குள் புகுந்தாள்.
தண்ணீரைக் கொதிக்கவைத்து பிள்ளைகள் இருவருக்கும் தேநீரைத் தயார் செய்தபடியே நேரத்தைப் பார்த்தாள். மணி 4. 50 எனக்காட்டியது மொபைல் போன். ஐந்து மணிக்குப் போனால் தான் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் நேரத்திற்கு அவர்களுக்கு உணவை எடுத்துக்கொண்டு வந்துவிட்டுப் போக முடியும்.
எண்ணங்களினூடே கை தன்பாட்டில் வேலை பார்த்தது. பிள்ளைகள் இருவருக்கும் அருகில் தேநீர் கப்புகளை வைத்துவிட்டு மடக்கென்று இரண்டே மடக்கில் தனது தேநீரை அருந்தியவள் வேலைக்காக விரைந்தாள்.
அவர்களது குடியிருப்பிற்கு எதிரே உயரமாய் மாளிகை போல காட்சிகொடுத்த அந்த வீட்டில்தான் கானகிக்கு வீட்டு வேலை. எஜமானியம்மாவும் அவரது ஒரே மகனும் தான் வீட்டில். அறுபதைத் தொட்டுவிட்ட தாயாருடன் முப்பத்தைந்து நாற்பதைக்கடந்தும் திருமணம் ஆகாமல் வாழ்ந்த மகன் ஈகைமாறன். ஏதோ பெரிய உத்தியோகத்தில் இருப்பவர். அவரை வீட்டில் காண்பது அரிது, காலையில் சாப்பிட்டுவிட்டுப் போனால் இரவில் தான் வீடு திரும்புவார். சமையல் வேலை மட்டும் என்பதால் சமையலறையை விட்டு எப்போதும் வெளியே வராத, மாலை ஐந்து மணிக்கே இரவு உணவை முடித்துவிட்டுத் தன் வீட்டிற்கு வந்துவிடும் அகவிழி அவரைக் கண்டதே கிடையாது.
கணவனை இழந்து அநாதரவாய் அந்த ஊருக்கு வந்தவளை அந்த வீட்டில் வீட்டுவேலை செய்ய ஆள் தேவை எனக் கூட்டிவந்து சேர்த்துவிட்டது அந்த வீட்டில் தோட்டவேலை செய்யும் முத்தண்ணா தான். முத்தண்ணாவின் மனைவியும் அங்கேதான் வேலை. தோட்டத்தில் கணவனோடு சேர்ந்து வேலை செய்வதுடன் கூட்டிப்பெருக்கி எடுபிடி வேலைகளையும் அவர்தான் கவனிப்பார். அடுப்படியில் தீயோடு வேகும் பணி எப்போதும் அகல்விழியினுடையதுதான். அவளுக்கும் பிள்ளைகளுக்கும் மூன்றுவேளை உணவை எடுத்துச்செல்லவும் அனுமதித்திருந்தார், அந்த வீட்டு எஜமானி. சம்பளமாகக் கிடைக்கும் பணத்தில் பிள்ளைகளின் படிப்பு, இதர செலவுகள் தவிர ஒரு பகுதியைச் சேமிக்கவும் செய்தாள் அகல்விழி.
எட்டாம் வகுப்பில் மகனும், ஆறாம் வகுப்பில் மகளும் என இருபிள்ளைகளின் படிப்புச் செலவே அதிகமாய் இருந்தது, அந்த ஏழைத்தாய்க்கு. நெருப்பைத் தின்று தாய் தங்களை வளர்ப்பதை உணர்ந்து பிள்ளைகளும் நன்றாகவே படித்தனர்.
காலை விடிந்தால் மாலை வரை பம்பரமாய்ச் சுழலும் அவள், இரவில்தான் சற்று ஓய்வாக அமர்வாள். அவ்வேளையில் தான், பத்திரிகைகள் படிப்பதுண்டு. வாரப் பத்திரிகைகளில் கவிதைப்பகுதி அவள் அதிகமாக விரும்பிப் படிக்கும் ஒன்று. கவிதைகள் எழுதுவதும் வாசிப்பதும் அவளுக்கு மிகப் பிடித்த விடயம். பள்ளி நாட்களில் ஆசையாகக் கவிதைகளை எழுதியதுண்டு, பலரது பாராட்டும் பெற்றதுண்டு.
தாளில் எழுத்துக்களை மேய்ந்த பார்வை வெறித்தபடி இருக்க அவளது எண்ணங்கள் கடந்த காலத்தை நோக்கி ஓடியது. பள்ளியில் படுசுட்டி அவள், காலம் வறுமையிலும் மகிழ்வாய்க் கரைந்தது அவளுக்கு. உயர்தரம் வரைதான் எல்லாம். அதன் பின்னர் வயதான பெற்றோர் யாரோ ஒருவனை அவளுக்காகப் பார்த்துப் பேசிமுடிவு செய்ய, அவளும் கனவுகளுடன் கல்யாணமாகிப் போய்விட்டாள். சில நாட்களில் தான் கணவனது சுயரூபம் தெரிந்தது. குடிக்கும் போதைக்கும் அடிமையான அவனுடன் குடும்பம் நடத்துவதே பெரியபாடாக, ‘கவிதை எங்கே, கற்பனை எங்கே’ எனப் பறந்துவிட்டிருந்தது.
அதன் பின்னர் அவனது அடாவடியில் காலம் பாரமாய் நகர, தற்கொலை முயற்சிகளிலும் அவள் தோற்றுப் போய் வயிற்றில் கருவைச் சுமந்த போது இருளில் சிறு பொறியாய் வெளிச்சம் தெரிந்தது அவளுக்கு. கணவன் மாறாத போதும் அவள் மாறிக்கொண்டாள், சாகவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து.
மூத்தமகன் கானகன் பிறந்து பத்தாம் நாளே கணவன் குடித்துவிட்டுபோட்ட ரகளையில் தாங்க முடியாது தாய்வீடு வந்துவிட்டாள். மறுநாளே கணவன் கண்ணீரோடு வந்து நின்றதும் புத்தி சொல்லி அனுப்பிய பெற்றவர்களைக் குறை கூடச் சொல்ல முடியாது அவனோடு சென்று விட்டாள். ஒன்று மட்டும் எண்ணிக்கொண்டாள், இனிமேல் அவன் அடித்தாலும் கொலையே செய்தாலும் தாய்வீடு வருவதில்லை என்பதே அது.
இரண்டாண்டில் மகள் கானகியும் பிறந்துவிட, வறுமை அவளது தொண்டையை நெரித்த போதும் அப்பப்போ கூலி வேலைக்குச் சென்று தனது உணவை விடுத்தும் சுருக்கியும் குடும்பத்தைச் சமாளித்துக்கொண்டாள்.
திடீரென ஒருநாள் குடிக்கச் சென்ற இடத்தில் நடந்த கைகலப்பில் வெட்டுப்பட்ட கணவன் அதன் பின்னர் பிணமாகவே வீடுவந்து சேர்ந்தான். தன் துக்கத்தை அழுது தீர்க்கவும் அவள் விரும்பவில்லை. அவளது கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை. கல்லு போல அமர்ந்திருந்தவள், அவளை, வாய்க்கரிசி போட அழைத்தபோது தான் ஒரே ஒரு துளி கண்ணீரை விட்டாள். அதுவும் அறுகருசி பெற்ற ஐந்து ஆண்டிற்குள் அவனுக்கு வாய்க்கரிசி போடுகின்றோமே என்ற துயரில் மட்டுமே.
ஊர் ஏதேதோ பேசிக்கொண்டது, அவள் மனம் எதையும் சிந்திக்கும் நிலையில் இல்லை. இத்தனை நாள் அவள் நாயாய்ப் பேயாய் அலைந்தபோது கதைக்காத, பார்க்காத ஊர் அவளைப்பற்றி என்ன சொன்னால்தான் என்ன? மௌனமாக இருந்துவிட்டாள்.
குழந்தைகள் வீறிட்டு அழுதபோதுதான் சுயநினைவிற்கு வந்தாள். இனிமேல், இங்கு இருப்பதே கேவலம் என எண்ணியவள், பஸ்ஸில் புறப்பட்டு வந்து சேர்ந்த இடத்தில் கண்ட உறவுதான் முத்தண்ணாவின் மனைவி. ஏழை வாசம் ஏழைதான் அறிவார். பேருந்தில் வரும்போது பழகிய பழக்கமாய் உறவாகிப் போனவர்கள். முத்தண்ணா குடும்பம் தான் அவளுக்கு பெரும் உதவி. வீடு பார்த்துத் தந்தது மட்டுமன்றி வேலையும் வாங்கித்தந்தனர்.
இன்றுவரை அவளது குடும்ப வண்டி நிம்மதியாய் ஓடிக்கொண்டிருக்கின்றது.
"அம்மா பசிக்கிது" மகளின் குரலில் கோடாய் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி எழுந்து நடந்தாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எஜமானி வீட்டில் விருந்து நடந்தது. சமையலை முடித்துவிட்டு அவள் வெளியே வரவும் அடுக்கடுக்காய் மனிதத் தலைகள் தெரியவும் அவசரமாய் விரைந்து நடந்தவள் கல் தடுக்கி விழுந்துவிடப்போக, “பாத்து...பாத்து” சாதாரணமாய் அவளது கரம் பற்றித் தூக்கிவிட்டுச் சென்றது யாரென்று அவளுக்குத் தெரியாது.
படபடப்புடன் கைகளை விடுவித்துக்கொண்டவள் கையிலிருந்து விழுந்த பையைத் தூக்கிக்கொண்டு விரைந்து நடந்தாள். சிலஆண்டுகள் கடந்து அவளது மேனியில் பட்ட ஆணின் ஸ்பரிசம் ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வை உண்டு பண்ண, அந்தக் கரம் பட்ட இடத்தைத் துடைத்தபடியே விரைந்துவிட்டாள்.
அவளுக்குக் கவிதைகள் என்றால் கொள்ளை பிரியம். அதுவும் வாரப்பத்திரிகையில் வரும் 'வித்தகன் ' எழுதும் கவிதைகள் நிறையவே பிடிக்கும். தான் வாசித்த ஒவ்வொரு கவிதைக்கும் தவறாது வாழ்த்து அனுப்பிவிடுவாள். அன்றும் கவிதைக்கான தனது வாழ்த்தை எழுதி முத்தண்ணாவின் மகளிடம் தபாலில் சேர்க்குமாறு கொடுத்துவிட்டு வீடுவந்தாள்.
இரண்டு நாட்களில் எஜமானி வீட்டிற்கு வந்திருந்த ஒரு தபாலை வாங்கிய போதுதான் கவனித்தாள் அது 'வித்தகன்' என்ற பெயரிற்கு வந்திருந்தது. அந்நேரம், அவ்விடம் வந்த எஜமானி, அதனை வாங்கியபடி, “அது பத்திரிகை அலுவலகத்தில் இருந்து மகனுக்கு வந்திருக்கு,” என்றார். ஒரு கணம் இனிமை பூத்தது அகல்விழிக்குள்.
‘அவள் நேசிக்கும் கவிதைகளின் சொந்தக்காரன் அந்த வீட்டில் உள்ளவரா?’ அவளது தொடர் கவனிப்பு அதை உறுதிப்படுத்தியது. ஒருநாள் முத்தண்ணாவின் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்பதால் அறையைச் சுத்தம் செய்யச் சென்ற அகல்விழி, அவரது அறையில் எழுதிக்கிடந்த கவிதைத் தாள்களைக் கண்டதும் தனது எண்ணத்தை உறுதிப்படுத்திக்கொண்டாள்.
அதன்பின்னர் அடிக்கடி அவரைச்சந்திக்க நேர்ந்தது. வெள்ளை மனம் கொண்ட அவள், 'தனக்கு கவிதைகள் பிடிக்கும் என்பதையும் அவரது கவிதைகளை விரும்பி வாசிப்பதையும் பல கடிதங்கள் வாழ்த்தி எழுதியதையும் கொட்டிவிட்டாள்.' அவளை வியப்பாய் பார்த்த ஈகைமாறன், அந்தக் கணத்தில் அவளை ஒரு தோழியாய் உணரத்தொடங்கினான். அவளது பிள்ளைகள் இருவரின் மீதும் அதிக அக்கறையும் அன்பும் காட்டினான். தான் வெளியே போகும் போது அவளது பிள்ளைகளையும் கூட்டிச்சென்றான்.
“அம்மா ஈகைமாறன் சேர் ரொம்ப நல்லவர், இல்லம்மா?” என, பிள்ளைகளே சொல்லுமளவிற்கு நடந்துகொண்டான்.
கடந்துவந்த நாட்கள் இருவரையும் அதிகம் பேசவைத்தது. அவளுக்கு இருந்த கவி ஆர்வம் பற்றி கண்டுகொண்டவன் அவளையும் எழுதச் சொன்னான்.
“இனி எங்கய்யா, காலம் போயே போச்சு” என்றவளை விசித்திரமாய் பார்த்தவன், “என்ன நல்லா வயது போன ஆள் மாதிரிக் கதைக்கிறாய்?” என்றான்.
விரக்தியாய் ஒரு புன்னகை அவளிடம் இருந்து.
நாட்கள் இருவருக்கும் உண்டாக்கிய புரிதலில் அவளைக் கண்டதும் “ சாப்பிட்டியா?” என்பதே ஈகைமாறனின் முதல் கேள்வியாக இருக்கும். மனத்தில் ஒரு நேசம் சுரக்கத் தலையை மட்டும் ஆட்டிவைப்பாள் அவள். அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று ஒருநாள் வேலைக்குப் போகாதபோது தேடிவந்துவிட்டான். நடுங்கிய படி படுத்திருந்த அவளைக் கண்டவன், பதற்றத்துடன் முத்தண்ணாவை அழைத்து மருந்தும் பானமும் வாங்கிவரச்செய்து தன் கையாலேயே கொடுக்க, அவள் வாங்க மறுத்துவிட, “பேசாம குடி, சொல்லுங்க முத்தண்ணா” என அவரையும் இழுக்க, “குடியம்மா” அவரும் சொல்ல வாங்கிக்குடித்தாள்.