• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - 1

நிதனிபிரபு

Administrator
Staff member
நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - நிதனிபிரபு

அத்தியாயம் 1


ஜெர்மனியின் பிரங்க்ஃபுவர்ட் நகரம்! எப்போதும்போல மிக மிகச் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அங்கே, நகர்ப்புறத்தில் அமைந்திருந்த தன் வீட்டு பால்கனியில் கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் விக்ரம். செய்வதற்கு எத்தனையோ வேலைகள் இருந்தாலும் எதையும் பாராது அப்படியே நின்றிருந்தான். மனதில் உற்சாகமில்லை. உடலிலோ அது மருந்துக்கும் இல்லை. மகன் டெனிஷ் பள்ளிக்கூடம் சென்றிருந்தான்.

அலுவலகம் போக வேண்டும் என்று மண்டைக்குள் மணியடித்தாலும், ‘அங்கே போயும் எதைச் செய்ய. எப்பவும் பார்க்கிற அதே வேலைதானே.’ என்று சலிப்பாக இருந்தது.

அவன் ஒன்றும் சோம்பேறி அல்லன்! சொல்லப்போனால் மற்றவர்களை விடவும் போர்க்குணம் மிக்கவன்!

வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும், மனைவியையும் மகனையும் நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்று எண்ணி அல்லும்பகலும் போராடி உழைத்தான். ஒரு தொழிலாளியாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்து, கைப்பேசிகளுக்குப் பணமேற்றும் தொழிலைச் சுயமாகத் தொடங்கி, அதைப் பெருக்கி இன்று நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறான். ‘டெனிஷ் மொபைல்’ என்றால் தரமானதும் நியாயமானதும் என்று எல்லோருக்கும் தெரியும். அவனது வளர்ச்சி இன்று அவனையும் மீறியது!

ஆனால், அந்த அசுரத்தனமான போராட்டமும் ஓட்டமும் அவனது உயிர்நாடியையே அவனிடமிருந்து பிடுங்கிவிட்டிருந்தது!

உழைப்பு உழைப்பு என்று பணத்தைத் தேடி ஓடியவன், தன் காதல் மனைவி மகனைக் கவனித்துக்கொண்டு அவனோடு பின்வருவாள் என்று நினைக்க, அவளோ அவன் தலையில் இடியையே இறக்கிவிட்டாள்!

ஒருநாள் நள்ளிரவில் வீடு வந்து உறங்கிக் கொண்டிருந்தவனை வந்து எழுப்பினாள் யாஸ்மின். அவன் மனைவி! ஜெர்மனிய பெண்.

“என்னம்மா? கொஞ்சம் தூங்கவிடு.”

“உன்னப் பாக்க கீழ ஒருத்தன் வந்திருக்கிறான்.”

“என்னைப் பாக்கவா? யாரது?” புருவங்களைச் சுருக்கினான். என்னதான் கடுமையான உழைப்பாளியாக இருந்தாலும் தொழிலை வீடுவரை கொண்டு வருகிறவன் அல்லன் அவன்.

தெரிந்தவராக அல்லது சொந்தக்காரராக இருந்தால் அவள் அறியாத நபர் என்று அவனுக்கு யாருமில்லை.

“யாரது உனக்குத் தெரியாம?” என்று கேட்டுக்கொண்டே முகம் கழுவப் போக, அவளோ பதில் சொல்லாமல் கீழே இறங்கி ஓடினாள்.

‘இவள் என்ன ஒண்டுமே சொல்லாம போறாள்?’ எண்ணம் ஓட, முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து ஒரு சட்டையை எடுத்து மாட்டியபடி கீழே இறங்கினான்.

ஒரு ஜெர்மனியன். அவன் இதுநாள் வரை பார்த்ததே இல்லை. இவன் கீழே செல்லவும் எழுந்து கைகொடுத்தான். அவனை அமரும்படி இருக்கையைக் காட்டிவிட்டு தானும் அமர்ந்துகொண்டே மனைவியைக் கேள்வியாகப் பார்த்தான்.

அவளோ, இவனைப் பாராது மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை மீண்டும் அடுக்கிக்கொண்டிருந்தாள். முகத்தில் பதட்டம். கைகளில் நடுக்கம்.

“நாம் ஏற்கனவே சந்திச்சு இருக்கிறமா?” முன்னால் அமர்ந்திருந்தவனிடம் கேட்டான்.

“இல்லை. நான் யாஸ்மின்ர நண்பன்.” என்றான் அவன்.

‘நண்பனா? இத நீ ஏன் சொல்லேல?’ கேள்வியாக அவன் மனைவியை ஏறிட, அவளோ இவன் கண்களைப் பாராது, “அவன நான் காதலிக்கிறன் விக்கி. உன்ன விவாகரத்துச் செய்துபோட்டு அவனக் கட்டப்போறன்.” என்றாள்.

அதிர்ந்துபோய் மனைவியைப் பார்த்தான் விக்ரம். அவள் சொன்னதன் சாராம்சத்தைக் கிரகித்துக்கொள்ளச் சற்று நேரம் பிடித்தது. கிரகித்துக்கொண்டதும் சித்தம் கலங்குவது போலிருந்தது. பேச்சு மறக்க, மூச்சு அடங்க அவள் சொன்னதை நம்ப முடியாமல் உள்ளுக்குள்ளேயே சிதைந்தான்.

அவனுடைய காதல் மனைவி யாஸ்மின். அவள் இன்னொருவனைக் காதலிக்கிறாளா? பள்ளிப்பருவத்தில் தொடங்கி நல்ல நண்பர்களாக இருந்து, அவன் எடுத்த பாடத்தையே அவளும் எடுத்து, அவன் சேர்ந்த கல்லூரிக்கே சேர்ந்து, அவனுடைய வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான கட்டங்களிலும் கூட இருந்து, தாயும் தந்தையும் விபத்தில் இறந்தபோது அன்னையாக இருந்து அவனைக் காத்தவள் இன்னொருவனைக் காதலிக்கிறாளா?

அவனுக்கும் அவளுக்கும் எப்போது காதல் மலர்ந்தது என்று கேட்டால் அவனுக்கும் தெரியாது, அவளுக்கும் தெரியாது. ஒருவருக்கொருவர் நேசத்தைப் பரிமாறிக்கொண்டார்களா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஒருவரை ஒருவர் மனதால் புரிந்துகொண்ட, தெரிந்து கொண்ட பந்தம் அவர்களது!

அந்தளவு புரிந்துணர்வோடு வாழ்ந்தவர்களின் வாழ்வில் இயல்பாகப் பற்றிக்கொண்ட நேசம், திருமணம் என்கிற புனிதமான பந்தத்தைப் பூண்ட இத்தனை நாட்களில் கடிந்தொரு சொல் அவளை அவன் சொல்லியிருக்க மாட்டான்.

அப்படி அவன் சொல்லும்படி அவள் நடந்ததில்லை. அந்தளவுக்கு அவனைப் புரிந்துகொண்டு வாழ்ந்தவள் இன்னொருவனைத் தேடியோட என்ன காரணம்?
அதிர்ச்சி மெல்ல மெல்ல அடங்க அந்த இடத்தைக் கண்மண் தெரியாத கோபம் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

அந்த நேரம், “மிஸ்டர் விக்ரம்…” என்று அந்த அவன் ஆரம்பிக்க, ‘நீ பேசாதே!’ என்பதாகக் கையை நீட்டித் தடுத்தான். முகம் கடினப்பட்டு இறுகிற்று!

ஆத்திரத்தை அடக்க நினைத்தவனின் கழுத்தோர நரம்புகள் புடைத்தன. கண்கள் சிவக்க கை முஷ்டிகள் இறுகின.

கலவரமாகத் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர் அந்த இருவரும்.

அந்தநொடியில் நொடித்துப்போனது விக்ரமின் உள்ளம்! பிரத்யேகமான பார்வைப் பரிமாற்றங்களும், பரிபாஷைகளும் மனைவி என்கிறவள் கணவனோடு அல்லவோ நடத்த வேண்டும்!

இங்கே அவளுக்கு யார் கணவன்? தன் நிலையை மிகக் கேவலமாக உணர்ந்தான்!

“விக்கி… நான் சொல்றதக் கொஞ்சம்…” என்று ஆரம்பித்த யாஸ்மினை விக்ரமின் பொசுக்கும் பார்வை அடக்கியது.

அவனின் பக்கமாகத் திரும்பி, “நீ போகலாம்!” என்றான் உறுமலாக.

தயக்கத்தோடு எழுந்தவன் யாஸ்மினைப் பார்த்தான்.

“உனக்கு நான் பிறகு போன் பண்றன் டிம்(Tim). நீ இப்ப போ.” என்றாள் அவள்.

சரி என்று தலையை மெலிதாக அசைத்துவிட்டு அவன் போக, அவனோடு தானும் வெளியே நடந்தாள் யாஸ்மின்.

சோஃபாவின் கைப்பிடியில் முழங்கையை ஊன்றி, கையால் நெற்றியைப் பற்றித் தேய்த்து விட்டுக்கொண்டே பார்வையைத் திருப்பியவனின் விழிகளில், டிம்மின் காரருகே நின்றிருந்த யாஸ்மினும் டிம்மும் பட்டனர்.

அவனது கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு யாஸ்மின் என்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள். பல்லைக் கடித்துக்கொண்டு முகத்தை இவன் திருப்பப் போக, டிம்மின் தோளில் சாய்ந்துகொண்டாள் யாஸ்மின். அவனோ இவளை அணைத்துக்கொண்டு என்னவோ சொன்னான்.

அணைப்பதும் தோள் சாய்வதும் அவர்களுக்குப் பெரிய விடயமன்று! ஆனால், யாஸ்மின் சற்றுமுன் சொன்ன விசயத்தை அறிந்த பிறகும் அதைச் சாதாரணமாக எடுக்க முடியவில்லை.

அவன் இரத்தம் கொதித்தது. அதைவிட மனைவியைக் காதலியாக அன்றுவரை நெஞ்சில் சுமந்தவனின் இதயம் தூள் தூளாக உடைந்தது.

வெறும் பயலாக இருந்தவனை நெஞ்சில் கொண்ட நேசத்துக்காக மட்டுமே அன்று கரம் பிடித்தவளை, யாரும் எட்ட முடியாத உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டானே! ஆசைப் பட்டது மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றியும் காட்டினானே!

அவள் ஆசைப்பட்டாள் என்று புத்தம் புதுக்கார். அவள் ஆசைப்பட்டாள் என்றுதான் இந்த வீட்டையும் கட்டினான். யாரோ அவர்களின் விருப்பத்துக்குக் கட்டிய வீட்டை நாம் வாங்குவதா? நமக்குப் பிடித்த விதமாக நாம் கட்டுவோம் என்று அவளின் ஆசைப்படி கட்டிய வீடு இது.

அவளின் பார்வை ஆசையோடு ஒரு பொருளின் மீது படிந்தால் அடுத்த நிமிடமே அதை வாங்கிக் கொடுத்துவிடுவானே.

பணமிருந்தால் எதுவும் செய்யலாம்தான். ஆனால், அவன் கொட்டிய நேசம்? காட்டிய காதல்?

தமிழர்கள் மட்டுமல்ல, அவர்களை அறிந்த ஜெர்மனியர்கள் கூட, “உன் கணவன் நல்ல காதலன்.” என்று சின்ன பொறாமையோடு சொல்லும் இடத்தில் அவன் வாழவைக்க, அவள் இன்னொருவனைத் தேடுவாளா?

மனம் உலைக்கலமெனக் கொதித்துக்கொண்டிருந்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவனை அனுப்பிவிட்டு அவள் வீட்டுக்குள் வந்தபோது, மனம் விட்டே போயிற்று விக்ரமுக்கு!

இன்னொருவனின் தோள் சாய்ந்தவளை வெறுப்போடு பார்த்தான்.

அவன் முன்னால் அவள் தயங்கி நின்றாள்.

“உனக்கு எதில குறை வச்சனான் எண்டு இப்படி நடந்தாய் யாஸ்மின்? காதல்லையா? உன்மேல வச்ச அன்பிலா? நம்பிக்கையிலா? பணத்திலா, வசதியான வாழ்க்கையிலா? எதில குறை வச்சனான்?” கிட்டத்தட்ட கர்ஜித்தான்.

விக்ரமின் உக்கிரத்தில் அவள் தேகம் நடுங்கிற்று! “இந்தக் காசும் பணமும் எனக்கு வேணும் எண்டு என்றைக்காவது நான் சொன்னேனா விக்கி? எப்போதுமே வேலை வேலை எண்டு நீ போனா நான் யாரோட கதைக்கிறது? சிரிக்கிறது?”

“அப்படி என்ன வருசக் கணக்கிலா உன்னவிட்டுப் பிரிஞ்சனான்? எங்க போனாலும் கடைசியா இங்கே தானே வந்தேன். நீயும் பிள்ளையும்தானே என்ர உலகமே. உலகம் பூராச் சுத்தினாலும் என் உலகம் உன் காலடிதானே. அது உனக்கும் தெரியும். பிறகும் ஏன்… ஏன் இப்படியெல்லாம்… என்ர வாழ்க்கையைத் திரும்பிப் பாத்தா எந்த இடத்திலையும் நீயில்லாம எதுவும் இல்லையே யாஸ்மின். இனி… இனி மட்டும் எப்படி?” தொண்டை அடைத்தது அவனுக்கு.

“என்னைக் கொஞ்சம் விளங்கிக்கொள் விக்கி.” அவள் தவிப்போடு சொல்ல, அவனோ எரிமலையென வெடித்தான்.

“இனியும் உன்ன விளங்கி நான் என்ன செய்ய? என்ர மனுசி பிள்ளையையும் நல்லபடியா பாத்துக்கொண்டு எனக்காகக் காத்திருப்பாள் எண்டு நம்பித்தானே ஒவ்வொரு முறையும் இந்த வீட்ட விட்டு வெளியே போவன். அந்த நம்பிக்கைக்கு நல்ல பதில் சொல்லிட்ட! இனியும் உன்ன விளங்கிக்கொள்ள என்ன இருக்கு?”

அவனுக்குத் தன் மனதைப் புரிய வைக்கவே முடியாது என்று தெரிந்துபோக, “நான் அவனத்தான் கட்டப்போறன் விக்கி. எனக்கு விவாகரத்து வேணும்.” என்றாள் யாஸ்மின் முடிவாக.

தன் மனதை அறிந்தும், அதில் எவ்வளவு தூரத்துக்கு அவள் உயிரோட்டமாகக் கலந்திருக்கிறாள் என்று தெரிந்தும் அப்படிச் சொன்னவளை வெறித்தான்.

“நான் தரமறுத்தா?”

“நீ என்னட்ட கேக்காத விளக்கத்தை எல்லாம் கோர்ட்ல சொல்லி விவாகரத்து வாங்குவன்.”

முற்றிலுமாக உடைந்து போனான் விக்ரம். கோர்ட்டுக்குப் போனால் இதையெல்லாம் பார்க்கும் மகனின் மனநிலை என்னாகும்?

அன்றுவரை அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தவன், அவளின் மனம் கோண நடக்காதவன் தன் மனதைக் கல்லாக்கிக்கொண்டு அதையும் கொடுத்தான்.

வேறு என்னதான் செய்வதும்?

அவனை வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டு, தனக்கான அடுத்த துணையாக இன்னொருவனைத் தேர்வும் செய்துவிட்டு, அவனைத் தன்னிடமே அவள் அறிமுகப் படுத்தியபோது அவனால் என்ன செய்துவிட முடியும்? அப்படிச் செய்தாலுமே அதில் ஏது பலன்?

காதலித்துக் கட்டிய கணவனைப் பற்றி அவள் சிந்திக்கவில்லை. பத்துமாதம் சுமந்து பெற்ற மகனைப் பற்றி யோசிக்கவில்லை. அவர்கள் மூவரினதும் எதிர்காலம் பற்றிக் கவலைப்படவில்லை. அவள் இல்லாமல் அவனும் மகனும் என்னாவார்கள் என்றுகூடச் சிந்திக்கவே இல்லையே.

“மகன் என்னட்ட இருக்கட்டும்.” அவளின் முகம் பாராது அவன் சொன்னபோது, கலங்கிய விழிகளை மூடித்திறந்து சம்மதித்துவிட்டு அவனைப் பிரிந்து சென்றாள் யாஸ்மின்.

இதெல்லாம் நடந்து நான்கு வருடங்கள் ஓடியிருந்தன. இருபத்திமூன்று வயதில் நடந்த திருமணம் இருபத்தியெட்டு வயதில் முறிந்தே போயிற்று! ஆனாலும், அன்றைய நினைவுகள் இன்றும் மனதில் ரணமாய்க் கிடந்தன. கண்களை இறுக மூடிக்கொண்டு சிலையென அப்படியே நின்றான் விக்ரம்!

அன்று அவள் என்ன சொல்ல வந்தாள் என்பது இன்று அவள் சொல்லாமலே புரிந்தது அவனுக்கு.

முகம் பார்த்துச் சிரிக்க ஒருவரின்றி, மனதிலிருப்பதைக் கொட்ட ஒரு துணையின்றி, தலை சாய ஒரு மடியின்றி, சிகை கோத இரு கரங்களின்றி அவன் வாழ்க்கையே மரத்துப்போயிற்று!

அந்தத் தனிமையை அது தரும் வலியை இன்று அவன் உணர்கிறான்தான். ஒரு பெண்ணாக, மனைவியாக அவளின் உணர்வுகளையும் விளங்கிக்கொள்ள முடிகிறதுதான். ஆனால், ஒரு தாயாக? தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து, மகனை முற்றிலுமாக மறந்து இன்னொரு வாழ்க்கையைத் தேடிப்போக எப்படி முடிந்தது?

எந்தக் கோணத்திலிருந்து சிந்தித்தாலும் இந்தக் கேள்விக்கு மட்டும் அவனிடம் நியாயமான பதில் இல்லவே இல்லை. நியாயப்படுத்தவும் விரும்பவில்லை!

அன்று தாய்க்காக ஏங்கிய குழந்தையை வைத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டான்? தன்னோடு வைத்துக்கொண்டது பெரும் தவறோ? தாயிடமிருந்து பிள்ளையைப் பிரித்துவிட்டேனோ என்று எப்படியெல்லாம் துடித்துப்போனான்.

ஆயினும், பிள்ளையைப் பற்றிச் சிந்தியாது தன் வாழ்க்கையைத் தேடிப் போனவளிடம் அவனை விடவும் விருப்பமில்லை. பிள்ளைமீது பாசம் இருந்திருக்க அவளால் இப்படியொரு காரியத்தைச் செய்திருக்க முடியாதே! பிறகும் ஏன் மகனை அவளிடம் கொடுக்க வேண்டும்?

ஆனால், அந்த மகனைத் தாயின் ஏக்கத்திலிருந்து வெளியே கொண்டுவர ஆறு மாதத்துக்கும் மேலாகிப் போனது விக்ரமுக்கு. அத்தனை வேலைகளையும் பொறுப்பையும் நண்பனிடம் கொடுத்துவிட்டு வீட்டோடு இருந்துகொண்டான். எந்தக் காரணத்துக்காகவும் மகனையும் இழக்க அவன் தயாரில்லை. ஒருமுறை பட்ட காயமே போதும்!

உண்ணும் உணவு முதல்கொண்டு, குளியலுக்கு, விளையாட்டுக்கு, டிவி பார்ப்பதற்கு, உறங்குவதற்கு என்று அத்தனைக்கும் அன்னைக்காக ஏங்கிய மகனை ஒரு நிலைக்குக் கொண்டுவருவதற்குள் அவன் பட்டுவிட்ட பாடு சொல்லி மாளாது.

அவளை மறக்க முயலும் ஒவ்வொரு நொடியிலும் அம்மாவுக்காக உதடு பிதுக்கி அழுது பிள்ளை நினைவு படுத்தும்போது, தன் வலி ஒரு பக்கம், மகனின் வலி ஒரு பக்கம் என்று அந்த நாட்கள் நரகத்திலும் நரகம்தான்.

தாயுமானவனாகவே மாறி ஒரு வழியாக மகனை அந்தத் தவிப்பிலிருந்து வெளியே கொணர்ந்துவிட்டான். இன்று வரையிலும் தாய் என்கிற ஒருத்திக்காக மகன் ஏங்கிவிடக் கூடாது என்பதில் மிகவுமே கவனமாக இருக்கிறான். அந்தளவில் அவனுக்கு வெற்றியே! அந்தளவில் மட்டும்தான்! இதோ இன்றுவரை நெஞ்சைத் திண்ணும் அந்த ரணத்திலிருந்து அவனால் வெளியே வரவே முடியவில்லை.

அப்போது அவனது கைபேசி அழைத்தது. சலிப்புடன் பொக்கெட்டுக்குள் கையை விட்டு எடுத்துக் காதுக்குக் கொடுத்து, “சொல்லடா…” என்றான், அழைப்பது நண்பன் அசோக் என்றறிந்து.

“என்ன மச்சான்? ஏன் ஒருமாதிரிக் கதைக்கிறாய்?”

“தெரியேல்லடா. என்னவோ எல்லாமே மனம் விட்டுப்போன மாதிரி இருக்கு.” எல்லையற்ற வலியும் விரக்தியும் அவனிடத்தில்.

விக்ரமைப் பற்றி முழுவதும் அறிந்தவன் அசோக். இன்னொரு திருமணம் செய்துகொள் என்று எத்தனையோ தடவைகள் சொல்லிவிட்டான். கேட்ட பாடே இல்லை.

“தனிமை இவ்வளவு கொடுமையா இருக்கும் எண்டு நான் நினச்சே பாக்கேல்ல அசோக். சிலநேரம் வாழ்க்கையே வெறுத்துப்போகுது. ஆறுதலுக்குக் கூடப் பக்கத்தில ஒருத்தர் இல்ல மச்சான்.” சொல்லிக்கொண்டு போனவனுக்குக் குரல் அடைத்துக்கொண்டது.

இன்று அவன் எப்படித் தாயாகத் தாரமாக அவனைத் தாங்க ஒரு உயிரைத் தேடுகிறானோ, அன்று அவளும் அப்படித்தான் தன் அருகண்மையைத் தேடி இருப்பாளோ என்று தோன்றவும், காலம் கடந்து உரைத்த உண்மையின் கசப்பைத் தாங்க முடியாமல் நின்றான் விக்ரம். பிள்ளையை அவன் தாங்குவான். அவனை?

அசோக்குக்கும் பேச்சே வரவில்லை. இப்படியெல்லாம் மனத்தைத் தளர விடுகிறவன் அல்லன் விக்ரம். அதோடு, எதையும் இலேசில் வெளியில் சொல்லவும் மாட்டான். அப்படியானவன் இப்படிப் புலம்புகிறான் என்றால்?

“இதுக்குத்தான் சொன்னனான் இன்னொரு கல்…” என்று ஆத்திரத்தோடு ஆரம்பித்துவிட்டு, இதை இப்போது கதைப்பது உசிதமல்ல என்றுணர்ந்து அதை நிறுத்தினான்.

ஏற்கனவே நொந்துகொண்டு நிற்பவனிடம் கத்தி என்ன பிரயோசனம்?

“நேரம் ஆகிட்டுது, ஒபீஸ்க்கு உன்னை இன்னும் காணேல்லையே எண்டுதான் எடுத்தனான். இண்டைக்கு நீ வராத. நானே எல்லாத்தையும் பாக்கிறன். நீ ஒண்டையும் யோசிக்காம நிம்மதியா இரு.” என்றுவிட்டுக் கைப்பேசியை அணைத்தான்.

விக்ரமுக்கு ஏனோ யாஸ்மினைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவள் எப்படியிருக்கிறாள், அவள் வாழ்க்கை எப்படிப் போகிறது, இப்போது எப்படியிருப்பாள் என்று தெரிய வேண்டும் போலிருந்தது.

உடனேயே சொல்லாமல் கொள்ளாமல் அவள் வீட்டுக்கே போனான்.
 

Goms

Active member
யாஸ்மின் மாதிரி பெண் யாரும் உண்டா? 🤔
என்னதான் கணவன் கவனிக்கவில்லை என்றாலும், குழந்தையைக் கூட இப்படி விட்டுச்செல்ல எப்படி மனம் வந்தது? கணவனிடம் தன் மனநிலையைச் சொல்லி புரியவைப்பதை விட்டுவிட்டு, இப்படி இன்னொரு துணை தேட முடியுமா?🤔
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom