• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - 6

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 6


விக்ரமும் யாமினியும் கோவிலிலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர். இருவருக்குமிடையே அமைதி. எப்போதும் போலச் சந்தனாவை தன் இடுப்பில் அடித்திருந்தாள் யாமினி. பிள்ளையைத் தா என்று கேட்டும் அவனிடம் கொடுக்கவில்லை. சின்ன விசயத்தில் கூடத் தான் அவனுக்குச் சாதகமாக நடந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தாள். அந்தக் குட்டியோ தன் சிம்மாசனமான தாயின் இடுப்பில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்து இவனைப் பார்த்துப் பச்சரிசிப் பற்களைக் காட்டிக்கொண்டிருந்தாள்.

அவளைப் பார்க்கப் பார்க்க, அவள் சொன்ன ‘அப்பா’ காதுக்குள் நின்று ரீங்காரமிட, சந்தனாவை விட்டுவிட்டுப் போய்விட முடியும் போலில்லை அவனுக்கு. ஏதோ கண்ணுக்குத் தெரியாத பாசம் கட்டியிழுத்தது.

யாமினியைப் பார்த்தான். இவனைத் திரும்பிப் பார்க்கக் கூடாது என்கிற முடிவோடு நேர் பார்வையோடு நடந்துகொண்டிருந்தாள். மெலிந்த மேனிக்குள் நிறைந்து கிடக்கும் அந்த நிமிர்வு அவன் மனதை அப்படியே கவர்ந்தது.

கோவிலில் அவள் கலங்கிப்போய் அமர்ந்திருந்ததைக் கண்டதும் என்னென்னவோ சொன்னான்தான். அது அப்போதைக்கு அவளின் ஆறுதலுக்கு மட்டுமே! ஆனால், இதோ இப்போது கூடக் குழந்தையை அவள் சுமப்பதைப் பார்க்கையில் என்னிடம் தா என்று கேட்டு வாங்கிக்கொள்ளத்தான் ஆசை. அவள்தான் மறுத்துவிட்டாளே!

‘பிடிவாதம் தான்.’ மனதில் சொல்லிக்கொண்டான்.

‘நானும் விடமாட்டன்!’

சலனப்படாமல், தடுமாறாமல் தன் பிடியில் நிற்பவளைத் தன்னிடம் கொண்டுவரச் சொல்லி ஒரு குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்தது.

‘ஆனா, ஏன் மறுக்கிறா? என்ன நம்பேல்லையா? இல்ல. அதையும் தாண்டி என்னவோ இருக்கு!’ மனம் அடித்துச் சொல்ல, மெல்லப் பேச்சுக் குடுத்தான்.

“ஏன் உனக்கு இந்தக் கலியாணத்தில விருப்பம் இல்ல?”

‘திரும்பவுமா?’ என்று கலக்கமாகப் பார்த்தாள்.

“முதல் கண்ணால கதைக்கிற வேலைய விட்டுட்டு வாயால சொல்லு. நீ என்னைக் கட்டுறியோ இல்லையோ இனி சந்தனாவுக்கு நான்தான் அப்பா. அவளின்ர கடமைய யார் தடுத்தாலும் செய்வன். அது நீயா இருந்தாலும் சரிதான்.” கூடவே பிறந்த பிடிவாதம் தலைதூக்கச் சொன்னான் அவன்.

‘என்ன இது இப்படி மிரட்டுறானே. இவ்வளவு நேரமும் நல்லாக் கதைச்சான். நல்ல மனுசன்போல எண்டு நினச்சு முடிக்கேல்ல அதுக்குள்ள மிரட்டுறான்.’ மீண்டும் கலங்கிப்போய்ப் பார்த்தாள்.

“சொல்லு!” என்றான் மீண்டும் தன் பிடியிலேயே நின்று.

“தெரியேல்ல. ஆனா பயமாயிருக்கு.”

“என்ன பயம்?”

“இருக்கிற நிம்மதியும் போயிடுமோ எண்டு.”

“இந்தப் பயம் என்னட்ட மட்டும்தானா? இல்ல, யார் கேட்டாலுமா.”

“இந்தளவு தூரத்துக்கு விளக்கமா சொன்னதே உங்களுக்கு மட்டும்தான்.”

அந்தப் பதிலில் மனம் ஓரளவுக்குச் சமன்பட்டது.

“ஊர்ல ஒருத்தரோட கதைக்கிறேல்ல. உனக்கெண்டு ஒரு பிரெண்ட்ஸ் இல்ல. ஒரு வீடு இல்ல. கதைக்கப் பேசக்கூட ஆக்கள் இல்ல. பேச்சுல பார்வைல கூட இறுக்கமா இருக்கிறதும், யாருக்கும் இடம் குடுத்தா ஆபத்தில முடிஞ்சிடுமோ எண்டு உனக்குள்ளேயே இறுகி இறுகி இன்னும் எத்தினை நாளைக்கு இப்பிடியே இருப்பாய்?” என்று அவன் கேட்டபோது,

‘இதென்ன என்ர மனதுக்குள்ள நுழைஞ்சு பாத்த மாதிரியே சொல்றானே.’ என்று அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டாள் யாமினி.

“உன்ன விடு. இவள் குழந்தை. இப்ப ஒண்டும் தெரியாது. வளந்த பிறகு? அவளுக்கு ஒரு பள்ளிக்கூடம், அங்க நாலு பிரெண்ட்ஸ், அவேன்ர வீடு எண்டு வரேக்க என்ன செய்வ? அங்கயும் நாலு ஆம்பிளையள் நாலு விதமாப் பாக்கத்தான் செய்வீனம். அப்பவும் உன்ன மாதிரியே இவளையும் எங்கயும் விடாம வச்சிருக்கப் போறீயா? உன்ன மிரட்டச் சொல்லேல்ல நான். அந்தளவு தூரத்துக்கு இனிமேல் உன்னையும் அவளையும் நானும் விட மாட்டன். நீ என்னைக் கட்டினாலும் கட்டாட்டியும் உங்க ரெண்டு பேருக்கும் துணையா இருப்பன். ஆனா, நான் அங்கயும் நீயும் இவளும் இங்கயும் எண்டு ஏன் இருக்கோணும்? வளந்த பிறகு அப்பா எண்டு அவள் என்னைக் காட்ட, நான் உனக்கு யார் எண்டு நீ சொல்லுவ?” என்று கேள்விகளால் அவளைத் துளைத்து எடுத்துவிட்டான் விக்ரம்.

அதிர்ந்துபோய் நின்றுவிட்டாள் யாமினி. இதெல்லாம் அவள் யோசிக்காததோ அவளுக்குத் தெரியாததோ இல்லை. அவன் வாயால் கேட்கையில் மிகவும் பயங்கரமாகத் தோன்றியது. இதில், இனிக் குழந்தையை விடமாட்டேன் என்று முதலில் சொன்னவன், இப்போது அவளையும் விடமாட்டேன் என்கிறானே. அதுவேறு அடுத்த அதிர்வாக இருந்தது.

“இந்த விசயத்த விடு எண்டு சொன்னீங்களே…” மெலிந்த குரலில் சொன்னாள். மனச்சுமை மீண்டும் ஏறிவிட்டதில் அந்தக் கண்களில் அத்தனை கலவரம்!

மனதைப் பிசைந்தது விக்ரமுக்கு. ஆனால், பேசாமல் நிரந்தரத் தீர்வு கிட்டாதே!

“விடச் சொல்லித்தான் சொன்னனான். ஆனா ஏன் விடவேணும்? இவ்வளவு பிடிவாதமா நிண்டு நீ ஏன் மறுக்கிறாய்? அது தெரியோணும் எனக்கு!” என்றான் அழுத்தமாக.

‘இதென்ன இப்படி ஒரே பிடியாய் நிண்டு கேக்கிறார்?’ என்று யாமினி மிரண்டுபோய் அவனைப் பார்த்தாள்.

“எனக்கு அம்மா அப்பா கிடையாது. அண்ணா தங்கை எண்டும் யாரும் இல்ல. உன்னக் கட்டினா என்ர சொந்தம் முழுக்க நீயும் ரெண்டு பிள்ளைகளும் மட்டும்தான். உன்னத் தாண்டிப் போகமாட்டன். விளங்கிக்கொள்ளு! இப்ப இந்த நிமிசம் உன்ன உயிரா நேசிக்கிறன், அது இது எண்டு பொய்சொல்ல விருப்பம் இல்ல. ஆனா, நீதான் வேணுமெண்டு உள் மனசு அழுத்தமாச் சொல்லுது. எனக்கு ஒரு மனுசி மட்டும் வேணுமெண்டா யார வேணுமெண்டாலும் கட்டிப்போட்டுப் போவன். எனக்குத் தேவை சந்தனா. அவள கண்ணுக்குள்ள பொத்திவச்சு வளக்கிற நீ!” என்றான் அவன் தெளிவாக.

இதற்கிடையில் அவளின் வீட்டருகே வந்திருந்தனர். படலையைத் திறந்து, அவளுக்கு வழியை விட்டு நின்று, “போ! போய் நல்லா யோசி. யோசிச்சு நல்ல பதிலாச் சொல்லு. நீ என்ன பதிலச் சொன்னாலும் நான் சொன்னது மாறாது.” என்றுவிட்டு அசோக்கின் வீட்டுக்கு நடந்தான் அவன்.

பொம்மையென உள்ளே சென்றவள், ஒரு பாயை விரித்துத் தலையணையைப் போட, சந்தனா அவளின் சேலை ஒன்றைத் தரையில் தேயத் தேய இழுத்துக்கொண்டு வந்தாள். அதை அவளுக்காக இவள் விரித்துவிட, தாயும் மகளுமாகப் படுத்துக்கொண்டனர். கை தன்பாட்டுக்கு மகளின் நெஞ்சை வருடிக் கொடுத்தாலும் யாமினியின் நினைவுகள் அவள் வசமில்லை. விக்ரம் சொன்ன திசையிலும் சிந்திக்கவில்லை. உண்மையிலேயே மனதில் ஏறிய பாரத்தில் எதையும் சிந்திக்கும் சக்தி அற்றவளாக அப்படியே கிடந்தாள்.

வீட்டுக்குச் சென்ற விக்ரமும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் புகுந்துகொண்டான்.

முதலில் குழந்தையைத்தான் பிடித்தது. அவளைப் பற்றி அசோக்கின் பேச்சு ஒருவிதமான பரிதாபத்தை அவள் மீது உருவாக்கியதுதான். ஆனால் அது ஈர்ர்ப்போ வேறு எதுவுமோ அன்று. அவளும் தானும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றுபோலத் தோன்றவும் பெண் கேட்கச் சொன்னான்.

அவளுடன் கதைக்கக் கதைக்க, அவளின் மறுப்பும் தயக்கமும் மணந்தால் அவளைத்தான் மணக்க வேண்டும் என்கிற பிடிவாதத்தை அவனுக்குள் விதைத்துக் கொண்டிருந்தது. சொன்னது போலவே இனிமேல் அவர்கள் இருவரையும் அவனால் விட முடியாது.

அவளுடைய அச்சத்தில் இருக்கும் நியாயம், மறுக்கும் பாங்கு, கத்திக் கூச்சல் போடாமல் ஒதுங்கிப் போகும் குணம் எல்லாமே அவள்தான் வேண்டும் என்று நினைக்க வைத்தது.

நன்றாக யோசிக்கட்டும் என்று அவளைத் தொந்தரவு செய்யாமல் இருந்தான். ஆனால், காலையிலிருந்து உறங்கும் வரை அவளும் மகளும் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனித்துக்கொண்டே இருந்தான்.

எப்போதும் உண்டுவிட்டுச் சும்மாவே இருக்கிறோம் என்று அன்று மாலை அசோக்கையும் இழுத்துக்கொண்டு நடக்கப் போனான்.

“என்னவாமடா அந்தப் பிள்ள?” விசாரித்தான் அசோக்.

“பயப்படுறாள் மச்சான். குழந்தையக் கை விட்டுடுவேனோ எண்டு.”

“ம்ம்…” விக்ரமின் பேச்சை உள்வாங்கியபடி நடந்தான் அசோக்.

“நீ நல்லவன் எண்டு உனக்குத் தெரியும், எனக்குத் தெரியும். அந்தப் பிள்ளைக்குத் தெரியாதுதானே. அது பயப்படுறதுலயும் நியாயம் இருக்குத்தானேடா. அப்பிடித்தானே ஊர் உலகத்துலயும் நடக்குது.” என்றான் தனக்குத்தானே விளக்கம்போல.

“உண்மைதான். ஆனா, நானும் அவளைக் கட்டாம இங்க இருந்து போகமாட்டன்.”

“டேய் என்னடா?” அதிர்ந்துபோனான் அசோக்.

“இப்பிடி ஒரு முடிவா நிக்காத விக்ரம். தப்பித்தவறி கல்யாணம் நடக்காட்டி நீ வேற தேடுற ஆளும் இல்ல.” நண்பனை அறிந்தவன் பதறிப்போய்ச் சொன்னான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“நடக்காட்டித்தானே?” அசோக்குக்கு இருந்த பதற்றம் அவனுக்குச் சற்றுமில்லை.

அவனைத் திரும்பிப் பார்த்தான் அசோக். “அந்தளவுக்கு அந்தப் பிள்ளையப் பிடிச்சிருக்கா?”

முதலில் ஒன்றும் சொல்லவில்லை விக்ரம். கொஞ்சத் தூரம் நடந்தான். பின், “தெரியேல்ல மச்சான். ஆனா, இனி அவளை என்னால விட ஏலாது.” என்றான்.

“என்ன பதிலடா இது?” குழம்பிப்போய்க் கேட்டான் அசோக்.

அதே குழப்பம்தானே அவனுக்குள்ளும். அவளிடம் நேரடியாகவே கல்யாணம் பற்றிப் பேசிவிட்டு, குழந்தையின் மனதில் தான்தான் அப்பா என்று பதிந்துபோன பிறகு, தனக்கும் அவள்தான் வேண்டும் என்று மனம் சொன்னபிறகு அவனால் அவளைக் கட்டாமல் இருக்க முடியாது. ஆனால் பிடித்தம்? தெரியவில்லை!

கதைத்துக்கொண்டே யாமினியின் வீட்டருகே வந்துவிட்டிருந்தனர் இருவரும்.

“ப்பா…” என்றபடி குடு குடுவென்று ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டாள் சந்தனா.

“என்ன...து? அப்பா...வா?” அதிர்ச்சியாகிவிட்டான் அசோக்.

அவனையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவர்கள் இருவருமே இல்லை. மாலை நேரக் குளியல் போட்டு, முகம் முழுவதும் பௌடரால் அபிசேகம் செய்திருக்க, பெரிய கறுப்புப் பொட்டுடன் காலைக் கட்டிய குழந்தையை, “ஹேய் செல்லம்மா.” என்றபடி அவன் தூக்கிக்கொள்ள, சின்னவள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சினாள்.

கண்ணிமைக்கவும் மறந்து வாயைப் பிளந்தபடி பார்த்திருந்தான் அசோக்.

மகளின் பின்னால் ஓடிவந்த யாமினி மூவரையும் பார்த்ததும் பதறிப்போனாள். அதுவும், குழந்தை அப்பா என்றபடி விக்ரமின் கழுத்தைக் கட்டிக்கொண்டிருப்பதை அசோக் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று கண்டதும் முகம் கருத்துப் போனது. “சந்தனா இறங்கு!” என்றாள் அதட்டலாக.

“ம்ஹூம்! ப்பா… ப்பா…” என்று அவன் கழுத்தை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள் குழந்தை.

பதறிப்போய் அவசரமாக அசோக்கைப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். மிகுந்த அவமானமாகிப் போயிற்று. அவனின் அம்மாவிடம் கல்யாணம் வேண்டாம் என்று அவ்வளவு திடமாக மறுத்துவிட்டு, இந்தப் பக்கம் குழந்தைக்கு விக்ரமை அப்பாவாகக் காட்டியிருக்கிறாளே என்று நினைப்பானே. அழுகையே வந்துவிடும் போலாயிற்று அவளுக்கு.

பதட்டத்தில் என்ன செய்கிறோம் என்பதையும் மறந்து விக்ரமை நெருங்கி, “சந்தனா வா!” என்றபடி குழந்தையை அவனிடமிருந்து பிரிக்க முயன்றாள்.

சின்னவள் சிணுங்கத் தொடங்கவும், “விடு யாமினி! எதுக்குப் பிள்ளையப் பிடுங்குறாய்?” என்று அவளின் கையைப் பற்றித் தடுத்துச் சொன்னான் விக்ரம்.

பதறி விலகினாள் யாமினி. கை கால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கின அவளுக்கு. “அவளை இறக்கி விடுங்கோ!” என்றாள் அதட்டலாக.

“இருக்கட்டும் விடு! ஓடிவந்து ஆசையாக் காலைக் கட்டுற பிள்ளைய ஏன் இறக்கோணும்?” சந்தனாவின் தலைக் கேசத்தை ஒதுக்கிவிட்டபடி சொன்னான் விக்ரம்.

‘ஐயோ! விளங்கிக் கொள்கிறான் இல்லையே…’ என்று தவித்தாள் யாமினி.

அசோக் இன்னும் தங்களையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது வேறு இன்னும் பதற வைத்தது.

“இறக்கி விடுங்கோ முதல்!” என்றாள் திரும்பவும். குரல் இன்னும் அழுத்தமாக வந்தது.

வீதியால் போனவர்கள் சுவாரசியமாக இவர்களைத் திரும்பிப் பார்க்கவும், “ப்ச்! முதல் வீட்டுக்க போ நீ!” என்று அவள் தோளைப் பற்றித் திருப்பிவிட்டு, குழந்தையோடு தானும் நடந்தான் விக்ரம்.

அசோக் என்பவன் அவன் நினைவிலேயே இல்லை.

விழுந்தடித்துக்கொண்டு உள்ளே சென்றவள், “இனியாவது அவளை இறக்கி விடுங்கோவன்!” என்றாள் ஆற்றாமையில் விளைந்த கண்ணீரும் பதட்டமுமாக.

“ஏன்?” புருவங்கள் சுருங்கக் கேட்டான் விக்ரம். அவளின் அளவுக்கதிகமான இந்தப் பதட்டம் ஏன் என்று அவனுக்கு விளங்கவில்லை.

“உங்கட பிரெண்ட் என்ன நினைப்பார்? பாக்கிறவே என்னத்தான் பிழையாச் சொல்லுவீனம். இவள் வேற அப்பா எண்டு கத்துறாள்.”

“இதத்தான் நேற்றே சொன்னனான் உனக்கு. அவளுக்கு நான்தான் அப்பா. உனக்கு நான் யார் எண்டு நீதான் முடிவு செய்யோணும். ஊர் பாக்குது உலகம் பாக்குது என்றதுக்காக, பிள்ள அப்பா எண்டு ஓடி வரேக்க என்னை யாரோ மாதிரி போகச் சொல்றியா?” என்றான் அதட்டலாக.

அப்பா என்று சொல்லச் சொல்லி அவன் சொல்லிக்குடுக்கவில்லை. அவளாக நினைத்துக் கூப்பிடும்போது, வந்து காலைக் கட்டும்போது அவன் என்ன செய்ய?

முன்னாள் மனைவியின் இந்நாள் கணவனுக்குப் பிறந்த குழந்தையைக் கூட வெறுக்க முடியாதவனால், தன்னை அப்பா என்று கூப்பிடும் குழந்தையை, தான் பாசம் வைத்துவிட்ட செல்வத்தை வெறுக்க முடியுமா?

யாமினிக்கு அழுகை வந்துவிட்டது. “என்னை ஏன் இப்பிடிச் சித்ரவதை செய்றீங்கள்? நான் உண்டு என்ர பிள்ளை உண்டு எண்டு நிம்மதியா இருந்தனான். திடீரெண்டு வந்து எல்லாத்தையும் தலைகீழா மாத்திப்போட்டு இப்ப என்னைப் பிழை சொல்றீங்கள். இந்த ஊருல உங்களுக்கு வேற பொம்பிளையலே கிடைக்கேல்லையா? என்ன விட்டுடுங்கோவன்.” முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு அழுதவளைப் பார்க்க மனம் கனத்துப்போனது அவனுக்கு. இந்தக் கண்ணீருக்குக் காரணம் அவன்தானே.

“யாமினி, என்ன இது? அழாத. குழந்தை பாக்கிறாள் எல்லோ.” என்றபடி அவளின் தலையை அவன் வருட, “கடவுளே! தயவுசெய்து என்னைத் தொடாதீங்கோ.” என்று வேகமாகப் பின்னுக்கு நகர்ந்தவள் இன்னும் அழுதாள்.

விக்ரமுக்கு என்ன சொல்லி அவளைச் சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை. அதுநாள் வரை கம்பீரமாக நிமிர்ந்து நின்றவளின் கண்ணீரைக் காண முடியவில்லை.

கையிலிருந்த குழந்தையோடு சட்டென்று வெளியேறி நடக்க, “பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வெளிய போகாதீங்க. யாரும் பாத்தா?” என்று அதற்கும் பதறினாள் அவள்.

இப்போது அவனுக்கு மெய்யாகவே கோபம் வந்துவிட்டது. வேகமாக அவளை நெருங்கி வந்து, “இப்பிடி வீட்டுக்க மட்டும் யாரும் பாக்காத நேரம் பிள்ளையத் தூக்கினா உனக்குச் சரியா?” என்று கேட்டான்.

கன்னத்தில் வழிந்த கண்ணீர் கூட அப்படியே உறைய அதிர்வுடன் அவனையே பார்த்தாள் யாமினி. அது இதைவிட இன்னும் கேவலம் இல்லையா!

“என்னை என்னதான் செய்யச் சொல்றீங்கள். ஊர் பாத்தா என்னைத்தானே கேவலமாக் கதைக்கும். சும்மாவே ஒருத்தரும் என்ன மதிக்கிறேல்ல. இதுவும் தெரிஞ்சா…” நடுங்கிற்று அவள் குரல்.

“கல்யாணத்துக்குச் சம்மதிச்சா எல்லாப் பிரச்சினையும் முடிஞ்சிடும்தானே.” பொறுமையாகக் சொன்னான் விக்ரம்.

“அதத் தவிர வேற வழியே இல்லையா?” இயலாமையுடன் கேட்டாள் அவள்.

அழுது சிவந்த முகம். ஓய்ந்துபோன தோற்றம். கலக்கத்தில் தவித்த விழிகள். இதற்கு ஏதாவது தீர்வைச் சொல்லேன் என்று நின்றவளைப் பார்த்து, “உனக்கு என்னைப் பிடிக்கேல்லையா யாமினி?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான் விக்ரம்.

அந்தக் குரல் அவளை என்னவோ செய்தது. அவனை நிமிர்ந்து பார்க்கவும் வைத்தது. அவனுடைய தோற்றம் அப்போதும் கருத்தில் பதியவில்லை. அந்தளவுக்குக் கலங்கிப்போயிருந்தாள்.

“நான் அந்தளவுக்கு யோசிக்கவே இல்லை. எனக்கு என்ர பிள்ளை மட்டும் போதும். கல்யாணமும் வேண்டாம் நீங்களும் வேண்டாம். அவளை என்னட்டையே தந்திட்டுப் போங்கோ. இனிமேலும் தயவுசெய்து இங்க வராதீங்கோ. எங்கள எங்கட பாட்டுக்கு நிம்மதியா இருக்க விடுங்கோ, ப்ளீஸ்.” என்றாள் கண்ணீரோடு.

இதற்குமேல் என்ன சொல்லி அவளைச் சம்மதிக்க வைக்க என்று தெரியாத இயலாமை தந்த கோபத்தில், “இந்தா பிடி! உன்ர மகளை உன்னட்டையே தந்திட்டன். அவள் அப்பா அப்பா எண்டு ஏங்கிறதுதான் உனக்குச் சந்தோசம் எண்டா நான் என்ன செய்ய?” என்றுவிட்டு, கழுத்தைக் கட்டிக்கொண்டு போக மறுத்துக் கத்திய சந்தனாவைத் தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து அவளிடம் கொடுத்துவிட்டு, அந்தச் சின்ன மொட்டின் கதறலைக் கேட்கும் சக்தி அற்றவனாகக் கிட்டத்தட்ட அங்கிருந்து விரைந்து மறைந்தான்.
 

Goms

Active member
யாமினி பயப்படுவது நியாயம் தானே, திடீரென்று வந்து கல்யாணத்துக்கு கேட்டா, அவனைப்பற்றி முழுதும் தெரியாது. குட்டி வேறு அப்பா என்று முடிவு செய்திட்டாள். என்ன செய்ய போறாள்?🤔
 
Top Bottom