• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 24

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 24

அன்று ஆதினிக்குப் பிறந்தநாள். இருபத்தியோராவது வயதைப் பூர்த்தி செய்திருந்தாள். எல்லாளனைத் தவிர்த்து எல்லோரும் அழைத்து வாழ்த்தினார்கள். அவன் எங்கே என்று அவளாகக் கேட்கவில்லையே தவிர, வாழ்த்தாமல் விடமாட்டானே, என்ன செய்கிறான் என்கிற யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.

அந்த யோசனையோடே பல்கலை சென்று திரும்பியவளைக் குணசேகரன் வீட்டு விறாந்தையில் அமர்ந்திருந்த எல்லாளன், வரவேற்றான்.

இதை அவள் எதிர்பார்க்கவே இல்லை. ஆனந்தமா, அதிர்ச்சியா என்று தெரியாத ஒரு உணர்வில் அப்படியே நின்றாள். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு காண்கிறாள். களையும் கம்பீரமும் கூடித் தெரிந்தான்.

அவன் பார்வையும் காந்தமாய் அவளில்தான் கவ்வி நின்றது. மெல்லத் தலையசைத்து வா என்று அழைத்தான்.

“உங்களப் பாக்கத்தான்மா வந்திருக்கிறார்.” என்றார் குணசேகரன்.

அவளுக்கும் புரிந்தது. ஆனால் ஏன்? ஒரு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதற்கு அங்கிருந்து இங்கு வந்தானா? அல்லது, ஏதும் அலுவலாக வந்த இடத்தில் அவளையும் பார்த்துக்கொண்டு போக எண்ணினானா? குணசேகரன் வீட்டினரின் முன்னே எதையும் கேட்க விரும்பாமல் அமைதி காத்தாள்.

பகல் பொழுதே வந்து, சாப்பிட்டு, இளைப்பாறியும் முடித்துவிட்டான் என்று அவர்களின் பேச்சிலிருந்து தெரிந்தது.

“வெளிக்கிட்டுக்கொண்டு வாறியா, வெளில போயிட்டு வருவம்?” என்று அழைத்தான் எல்லாளன்.

சரி என்று தலையை அசைத்துவிட்டு போய், முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டு வந்தாள்.

இருவரும் வீதியோரமாக நடந்துகொண்டிருந்தனர். இருவரிடமும் ஒருவித அமைதி. திரும்பி அவளைப் பார்த்தான். ஒரு ஜீன்ஸ் டொப்பில் இருந்தாள். கொழும்புத் தண்ணீருக்குப் போலும், இன்னுமே பளபளப்பாக மாறியிருந்தாள்.

அதைவிடவும் அவளிடம் தென்படும் இந்த மௌனம்தான் புதிது. அது நீண்டு கொண்டே போகவும், “என்னடியப்பா கதைக்கிறாயே இல்ல. வந்தது பிடிக்கேல்லையா?” என்று, அவனே அவர்களுக்கிடையிலான மௌனத்தை உடைத்தான்.

“இல்ல. அப்பிடி இல்ல. எதிர்பாக்கேல்ல. அதான்.” திடீர் என்று அவனைக் கண்டதில், இல்லாத பழைய கோபத்தை இழுத்துப் பிடிக்கவும் முடியாமல், இயல்பாகக் கதைக்கவும் இயலாமல் துண்டு துண்டாகப் பதில் சொன்னாள்.

பார்வை ஒருமுறை அவளிடம் சென்று வர, “கொஞ்ச நாளாவே பாக்கோணும் மாதிரித்தான் இருந்தது. அதுதான் பிறந்தநாளச் சாட்டா வச்சு வந்திட்டன்.” என்றான்.

ஓ! அப்போ, அவளைப் பார்க்க என்றே வந்திருக்கிறான். அந்தளவுக்கு என்ன? மனம் குழம்பிற்று.

“எங்க போவம்?”

அந்த நொடியில் அவளுக்கு எதுவுமே தோன்ற மாட்டேன் என்றது.

“கோல் பேசுக்கு(காலி முகத்திடல்) போவமா?” அவனே திரும்பவும் கேட்டான்.

அவள் சம்மதிக்க, எதிரில் வந்த ஆட்டோவை மறித்து அவளோடு ஏறிக்கொண்டான். அப்படி ஏறும் போதும், ஆட்டோவிலிருந்து இறங்கும் போதும், நடக்கும் போதும் அவளைத் தன் கைப்பிடியிலேயே வைத்துக்கொண்டான்.

அப்படி, நீண்ட நாள்களுக்குப் பிறகு, அவனுடைய பாதுகாப்பின் கீழ் இருப்பது, ஒரு விதத் தைரியத்தைத் தந்தது. கவனமாக இருக்க வேண்டும், பொறுப்பாக நடக்க வேண்டும் என்றிருந்த நினைப்பெல்லாம் போய், என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ள அவன் இருக்கிறான் என்கிற பெரும் நம்பிக்கை. மனமும் உடலும் தளர்ந்தாற்போல் ஒரு ஆறுதல். எந்தப் பயமுமற்றுச் சுற்றுப்புறத்தைப் பராக்குப் பார்த்தாள்.

கடற்கரை அந்தப் பக்கம். இவர்கள் இந்தப் பக்கத்திலிருந்து வீதியைக் குறுக்கிடுவதற்காக நின்றிருந்தார்கள். அவன் கவனம் முழுக்க முழுக்க அங்குமிங்கும் சரக் சரக்கென்று விரைந்துகொண்டிருந்த வாகனங்களின் மீது மட்டுமே இருந்தது.

வேண்டுமென்றே அவன் கையை விட்டுச் சற்றே விலகினாள். அனிச்சைச் செயலாக அவளை இழுத்துத் தன்னருகிலேயே வைத்துக்கொண்டது, அவன் கரம். திரும்பி அவனைப் பார்த்தாள். அவனுக்குத் தான் என்ன செய்தோம் என்பது கவனத்திலேயே இல்லை. இப்போதும் அவன் பார்வை வீதியில்தான் இருந்தது.

அவளுடைய பாதுகாப்பு அவனுடைய இரத்தத்திலேயே ஊறிப் போன ஒன்றோ? மெல்லிய சிரிப்பு ஒன்று கிளுக் என்று மலர்ந்து விட, வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

மாலைப்பொழுதாகிவிட்டதில் கடற்கரை நிறைந்திருந்தது. ஓரிடத்தில் இருவரும் அமர்ந்துகொண்டனர்.

“பிறகு?” அவன் பேச்சை ஆரம்பித்தான்.

“என்ன பிறகு?”

“எப்பிடி இருக்கிறாய்?”

“நல்லாருக்கிறன்.”

“படிப்பு?

“அதுவும் நல்லாத்தான் போகுது.”

இளமுறுவல் ஒன்று முகத்தில் மலர, “கொழும்புக்கு வந்து மாறிட்டியா? இல்ல, திடீர் எண்டு நான் வந்ததால இப்பிடி இருக்கிறியா?” என்று வினவினான் அவன்.

தன் அமைதியை மனத்தில் வைத்துக் கேட்கிறான் என்று விளங்கிற்று. இருந்தும், “எப்பவும் மாதிரித்தான் இருக்கிறன்.” என்று சொன்னாள்.

“இல்லையே! இந்த அமைதியான நல்ல பிள்ளை புதுசாத் தெரியிறாளே.

இப்படி அவளோடு சிரித்துக் கதைக்கும் அவன் கூடத்தான் புதிதாகத் தெரிகிறான். அவள் என்ன அதைக் கேட்டுக்கொண்டா இருக்கிறாள்?

“இப்ப என்ன செய்யோணும் எண்டு சொல்லுறீங்க? கத்திக் கூச்சல் போடோணுமா?” கோபம் போல் காட்டி அதட்டினாள்.

அதற்குப் பதில் சொல்லாமல், “சரி, கையத் தா!” என்று கேட்டு, அவள் மடியிலிருந்த கரத்தைத் தானே பற்றிக் குலுக்கி, “இருபத்தொரு வயசுக் குமரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்றான் அவன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவளுக்குச் சட்டென்று முகம் சூடாகிற்று. அவன் கையின் கதகதப்பு வேறு, கையின் வழியே தேகமெங்கும் பரவி, நெஞ்சுக்குள்ளேயே இறங்கியது.

“பிறந்தநாளே முடியப் போகுது. இப்ப வந்து சொல்லுறீங்க!” தன் மனவுணர்வுகளை மறைப்பதற்காகவே சொன்னாள்.

“எப்பிடியோ முடிய முதல் சொல்லீட்டன்தானே!” என்றவன், ஜீன்ஸ் பொக்கெட்டிலிருந்து அவளுக்கென்று வாங்கிவந்த மோதிரத்தை எடுத்து, அவள் விரலில் தானே அணிவித்துவிட்டான்.

இரண்டு மெல்லிய கம்பிகள் சிறிய இடைவெளியில் சுற்றிவர, நடுவில் பறக்கும் நட்சத்திரம் ஒன்று வீற்றிருந்து, அவள் விரலை வசீகரித்தது.

“இது நிச்சய மோதிரம் இல்ல. பிறந்தநாள் பரிசும் இல்ல. இந்தப் பிறந்தநாளில எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு எண்டு சொல்லுற மோதிரம்.” என்றான் அவள் முகம் பார்த்து.

இதை ஆதினி எதிர்பார்க்கவே இல்லை. அவனும் சும்மா சொல்லவில்லை என்று, இங்கு வந்ததிலிருந்து அடிக்கடி அவளில் படியும் பார்வையும், அதில் இருந்த வித்தியாசமும் சொல்லின. இதைச் சொல்லத்தான் அங்கிருந்து வந்தானா? மனதில் மெல்லிய சாரல் வீச, பதில் எதுவும் சொல்லத் தோன்றாமல் அமைதி காத்தாள்.

“இதுக்கும் பதில் சொல்ல மாட்டியா?” என்றவனுக்கு அவள் இன்னுமின்னும் புதிதாய்த் தெரிந்தாள்.

முன்னர் எப்படியெல்லாம் மல்லுக்கு நிற்பாள்? கண்களில் எந்தச் சலனமும் இல்லாமல், கைகளில் நடுக்கமும் இல்லாமல், அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்தவளாயிற்றே! ஆனால் இன்று? அவன் பார்வையையே தவிர்க்கிறாள்.

சத்தமாகச் சிரித்தான் எல்லாளன்.

ஆதினிக்கு அவன் தன்னைப் பார்த்துத்தான் சிரிக்கிறான் என்று தெரிந்தது. அதில் உண்டான கோபத்தோடு, “என்ன?” என்றாள் அதட்டலாக.

ஒன்றுமில்லை என்பது போல் தலையை அசைத்தவனின் சிரிப்பு மட்டும் குறைவதாக இல்லை.

சற்று நேரம், கொழும்பு எப்படி இருக்கிறது, படிப்பு எப்படிப் போகிறது என்று அவள் வாயைப் பிடுங்கினான். அகரனுக்கு அழைத்து அவளைப் பேச வைத்தான். அவள் வேண்டாம் என்று சொன்னதைக் காதில் விழுத்தாமல், நாளாந்தம் போடக்கூடிய மாதிரி உடைகள் வாங்கிக் கொடுத்தான். பயணத்திற்கு நேரமாக உணவையும் வெளியே முடித்துக்கொண்டு வீடு திரும்பினர்.

அப்போதே ஆதினியின் மனம் மெல்ல மெல்லக் கனக்க ஆரம்பமாயிற்று. கையில் இருந்த பைகளை அறைக்குள் கொண்டுபோய் வைத்துவிட்டுத் திரும்பியவள், தன் பின்னாலேயே வந்தவனைக் கவனிக்காமல் விட்டதில், அவனோடு மோதிக்கொண்டாள்.

“பாத்து பாத்து!” என்று அவளைப் பற்றி நிறுத்தினான் எல்லாளன்.

தன் கையில் இருந்தவற்றையும் அவளுக்குப் பின்னால் இருந்த மேசையில் எட்டி வைத்துவிட்டு, “அப்பிடி இவ்வளவு பெரிய உருவம் வாறதே தெரியாம வந்து மோதுற அளவுக்கு என்ன யோசின?” என்று வினவினான்.

அவளாலேயே ஏன் இப்படி ஆகிறோம் என்று கணிக்க முடியாதபோது, அவனிடம் என்ன என்று சொல்லுவாள்? “ஒண்டுமில்ல.” என்றாள் அவனைப் பாராமல்.

தான் புறப்படுவதால்தான் என்று விளங்கிற்று. நெருங்கிச் சென்று அவளைத் தேற்ற மனம் உந்திற்று. இருவரும் அவளுடைய அறைக்குள் நின்றாலும் வாசலருகில்தான் நின்றிருந்தனர். அறைக்கதவும் திறந்துதான் இருந்தது. சாற்றுவது அழகாய் இராது. அதில், “திரும்பவும் நேரம் கிடைச்சா வாறன், சரியா?” என்றான் அவள் கைபற்றி அழுத்திக் கொடுத்தபடி.

அவள் தலையை மட்டும் ஆட்டினாள்.

அந்த நொடியில் அவனுக்குள்ளும் ஒரு மாற்றம். அவளை அணைத்துக்கொள்ள வேண்டும் போலொரு உந்துதல். சூழ்நிலையும் படிக்கிறவளைக் குழப்பக் கூடாது என்கிற எண்ணமும் கட்டுப்படுத்த, பேர்சிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தான்.

“இல்ல. என்னட்ட இருக்கு.”

“என்ன இது புதுசா வேண்டாம் எண்டெல்லாம் சொல்லுறாய்? நீயா என்னட்ட பறிச்சது எல்லாம் மறந்திட்டுது போல!” என்று அவள் கையில் பணத்தைத் திணித்தான்.

பயணத்திற்குத் தயாராகி எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு வாசல் வரைக்கும் வந்தவன், திரும்பி அவளைப் பார்த்தான். ஆதினியும் சொல்லத் தெரியாத தவிப்பை நெஞ்சில் சுமந்தபடி அவனையேதான் பார்த்திருந்தாள்.

ஒரு கையால் அவள் தோளைச் சுற்றி அணைத்து, “கவனமா இரு. நல்லாப் படி, என்ன?” என்றான் இதமாக.

வெளியே காட்டிக்கொள்ளவில்லையே தவிர, முற்றிலுமாக உடைந்து போனாள் ஆதினி. அழுகை கூட வரப் பார்த்தது. அவனோடே போய்விட வேண்டும் போலொரு துடிப்பு. அடக்கிக்கொண்டு தலையை மட்டும் அசைத்தாள்.

எப்படி இத்தனை மாற்றம் என்று தெரியவில்லை. மாறிப்போனாள் என்பது மட்டும் உண்மை.

ஊரில், இவர்கள் எல்லோரினதும் பாதுகாப்பில், பயம் இல்லாமல், சுதந்திரப் பறவையாக எப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தோம் என்று இன்று புரிந்தது. இங்கும் எந்தக் குறைவும் இல்லைதான். பெண் பிள்ளை இல்லாத குணசேகரன் வீட்டுக்கு அவள் செல்லப் பெண்தான். என்றாலும்…

அவனும் அதை உணர்ந்தான் போலும். “உங்களிட்டச் சொல்லுறதே பிழை எண்டு தெரியும் அங்கிள். எண்டாலும் அவளக் கொஞ்சம் பாத்துக்கொள்ளுங்கோ.” என்று எல்லாளனும் குணசேகரனிடம் சொன்னான்.

அவர்கள் இருவருக்குமான உறவை நண்பன் மூலம் அறிந்திருந்தவரும், “ஒண்டுக்கும் கவலைப்படாமப் போயிட்டு வாங்கோ எல்லாளன். அவா என்ர மகள். அவாவைக் கவனமாப் பாக்கிறது என்ர பொறுப்பு!” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அறைக்கு வந்த ஆதினி, கண்களில் படர்ந்திருந்த மெல்லிய நீர்ப் படலத்துடன் அவன் அணிவித்துவிட்ட மோதிரத்தையே பார்த்திருந்தாள்.

பிரிக்கமுடியாத பிணைப்பொன்று அவர்களுக்குள் உருவாகிவிட்டது புரிந்தது.

ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவன் பரிசு தருவது வழமைதான். அது அவளாக அவனைத் தொந்தரவு செய்து, தனக்கு வேண்டியதைப் பிடுங்கிக்கொண்டதாக இருக்கும்.

ஆனால் இது? அவனாகத் தந்தது. ‘என்ன உங்களுக்குப் பிடிக்குமா?’ என்று என்றோ அவள் கேட்ட கேள்விக்குப் பதிலாகத் தந்தது. மிக மிகப் பிடித்திருந்தது.

அங்கே, புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்த எல்லாளனுக்கும் அவள் நினைவுதான். பிரிவு அன்பை வளர்க்கும் என்பது எத்தனை பெரிய உண்மை?

அவள் கொழும்பு வந்ததில் இருந்தே அவனுக்குள் மாற்றம்தான். நாளாக நாளாக அது வளர்ந்துகொண்டேதான் போயிற்று. இல்லாமல், ஒழுங்காக உறங்குவதற்குக் கூட நேரம் இல்லாமல் அலைகிறவன், கொழும்பு வரை மெனக்கெட்டு வருவானா?

அவன் புறப்பட்டபோது அவளிடம் தெரிந்த தவிப்பு, அவள் நிலையும் இதேதான் என்று சொன்னதில், உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பிற்று.
 

Goms

Active member
அப்பா எல்லாளா உனக்கு காதல் வர வைக்க அவ அவ்வளவு தூரமா போகணுமா?🥰🥰
 
Top Bottom