நீ தந்த கனவு - 37

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 37

ஆதினியின் வீட்டுக்குச் சற்று முன்னாலேயே ஜீப்பை நிறுத்தினான் எல்லாளன். அவள் கேள்வியாகப் பார்க்க, அவளை இழுத்து முகம் முழுக்க முத்தமிட்டான். எதிர்பாராமல் திடீரென்று அவன் நிகழ்த்திய முத்தத் தாக்குதலில் தன்னை நிலைநிறுத்துவதற்குள் அவள் இதழ்களைக் கொய்தான். சற்றே அழுத்தமான உறவாடல்.

“காண்டீபன்ர பிரச்சினை நடுவுக்க வந்திட்டுது. அதுக்கு முதல் வரைக்கும் நீ வரப்போறாய் எண்டு எவ்வளவு ஆசையா இருந்தனான் தெரியுமா. ஆனா நீ? ஆருக்குத் தெரியும் எண்டு கேக்கிறாய் என்ன? இனிக் கேக்கமாட்டாய்!” என்று சீறிவிட்டு அவளை விட்டான் அவன்.

அவன் தோளிலேயே இரண்டு போட்டுவிட்டு வந்த ஆதினிக்கு அன்றைய இரவு உறக்கமற்றே கழிந்தது. ஆனாலும் காண்டீபனைச் சந்திப்பதற்காகக் காலையிலேயே எழுந்து தயாராகினாள்.

என்றைக்குமே அவனைப் பார்க்கப் போகிறோம் என்றாலே உற்சாகம் பொங்கும்; உதட்டோரம் சிரிப்பு மின்னும். அந்தளவில் பேச்சு, செயல், பார்வை என்று அனைத்தாலும் சீண்டி, அவளை ஒருவழியாக்கிவிடுவான். அப்படியானவனை இன்றைக்கு எப்படிச் சிறைக் கம்பிகளுக்கப்பால் பார்க்கப் போகிறாள்? நினைக்கையிலேயே நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.

‘இன்னும் கொஞ்ச நாள்தான் அண்ணா. நீங்க வெளில வந்திடுவீங்க.’ கைப்பேசி, ஸ்கூட்டியின் திறப்பு, பேர்ஸ் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வேகவேகமாகக் கீழே இறங்கி வந்தவளின் காதில், ‘கல்லூரி மாணவர்களுக்குப் போதைப் பொருட்களை விநியோகம் செய்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் காண்டீபன் சம்மந்தன், காவல்துறையினால் நேற்றுக் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைக்குப் போதைத் தடுப்புப் பிரிவின் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின்(Criminal Investigation Department) கீழ் மாற்றப்பட்டார்.’ என்கிற செய்தி, பெரும் இடியாக வந்து விழுந்தது.

விறுவிறு என்று ஓடிப்போய்த் தோலைக்காட்சியின் முன்னே நின்றாள்.

‘எதிர்காலச் சந்ததியினருக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டிய விரிவுரையாளரின் மோசமான இச்செய்கையினால், பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கொடுத்த முறைப்பாட்டின் பெயரில், இரகசியமாக விசாரணையை மேற்கொண்டபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதை அடுத்து, விசாரணைக்காக சி.ஐ.டியினரின் தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.’ என்கிற செய்தியின் பின்னே, கைகளில் விலங்கிடப்பட்டு, காவல் நிலையத்திலிருந்து வெளியே அழைத்து வரப்படும் காண்டீபனைக் காட்டிக் கொண்டிருந்தனர்.

அவனை இப்படி ஒரு கோலத்தில் கண்ட ஆதினிக்கு விழிகள் கரித்து, தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது.

‘மூன்று வருடங்களுக்கு முன்னர், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி, உயர் மன அழுத்தத்துக்கு உள்ளாகித் தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவியின் தற்கொலையின் பின்னாலும், காண்டீபன் சம்மந்தன் இருக்கலாம் என்கிற வலுவான சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை தொடரும் என்று, போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் குற்றவியல் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்…’ என்று தொடர்ந்த செய்தி, ஆதினியின் தலையில் பெரும் இடியாகவே இறங்கிற்று.

பணிக்குச் செல்வதற்குத் தயாராகி வந்த அகரனும் அந்தச் செய்தியைக் கேட்டுப் புருவங்களைச் சுருக்கினான். வழக்கின் திசையே மாறிப் போயிற்றே. அதைவிட, இது எல்லாம் ஒற்றை இரவில் எப்படி நடந்தது? அதுவும் தொலைக்காட்சியில் செய்தி வரும் அளவுக்கான இந்த வேகம், என்னவோ சரியில்லை என்று சொல்லிற்று.

அதற்குமேல் நொடியும் தாமதிக்காமல் வாசலுக்கு ஓடினாள் ஆதினி.

“ஆதி நில்லு, நான் கூட்டிக்கொண்டு போறன்!” என்ற அகரனின் அவசரக் குரல், அவளை எட்டவே இல்லை.

அவள் அங்குச் சென்று சேர்ந்தபோது, அந்தச் சூழலே மிகுந்த பதட்டத்தில் இருந்தது. பத்திரிக்கை, தொலைகாட்சி நிருபர்கள் குவிய ஆரம்பித்திருந்தனர். அவசர நிலை ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டது போன்று, அங்கும் இங்குமாகக் காவல்துறை ஆட்கள் நடந்துகொண்டிருந்தனர். எல்லோர் முகத்திலும் ஏதோ ஒரு தீவிரம். இந்தளவில் அப்படி என்ன பெரிதாக நடந்து விட்டது? அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

நொடி நேரத்தைக் கூட வீணாக்க விரும்பாதவளாக உள்ளே விரைந்தாள். அங்கே, மூவர் கொண்ட ஒரு குழுவிடம் மிகத் தீவிரமாக வாதிட்டுக்கொண்டு நின்றிருந்தான் எல்லாளன். அவன் காக்கி உடையில் இருக்க, மற்ற மூவரும் சாதாரண உடையில் இருந்தாலும் அவர்கள், குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் என்று பார்க்கவே தெரிந்தது.

அவள் அவர்களை நெருங்கியபோது, “அவர் உங்கட ஃபிரெண்டாம் எண்டு கேள்விப்பட்டனாங்க எல்லாளன். பெத்த அம்மாவா இருந்தாக் கூடச் சட்டம் வளையக் கூடாது! அத நினைவில் வச்சிருங்க! எங்களைத் தடுக்கிற அதிகாரமோ, கேள்வி கேக்கிற உரிமையோ உங்களுக்கு இல்ல. எங்களை எங்கட வேலையப் பாக்க விடுங்க!” என்று சொல்லிக்கொண்டிருந்தார், அந்த மூவரில் நடுவில் நின்றவர்.

அவர்தான் அந்தக் குழுவுக்குத் தலைமை அதிகாரி என்று புரிந்தது.

அதற்குமேல் அவர்களிடம் செல்லாது நின்றுவிட்டவளின் விழிகள், காண்டீபனைத் தேடிச் சுழன்றன. அவள் தனிமையை உணர்ந்தபோது தோள் தாங்கியவன்; இரத்த பந்தமே இல்லாமல் அண்ணனாகத் தன்னை உணர்த்தியவன்; அவனுக்குத் துணை வேண்டுகிற இந்த நிமிடத்தில் அவனருகில் போய்விட முடியாத அந்த நிலை, அவள் மனத்தை அறுத்தது.

அப்போது, அங்குக் கதிரவன் வருவதைக் கண்டவள், அவனை இழுத்துக்கொண்டு காவல்நிலையக் கட்டடத்தை விட்டு வெளியே வந்து, “எங்க காண்டீபன் அண்ணா? ஏன் இப்பிடித் திடீர் எண்டு கேஸே வேற மாதிரித் திரும்பி இருக்கு?” என்று படபடத்தாள்.

அவன் முகத்திலும் மிகுந்த இறுக்கம். “எங்களுக்கும் இன்னும் ஒண்டும் டீடெயிலா தெரியேல்ல, மேம். விடிய எஸ்பிட்ட இருந்து சேருக்கு ஓடர் வந்திருக்கு. சேர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். அதுதான் சீ.ஐ.டி ஒபீஸரிட்ட சேர் கதைச்சுக்கொண்டு இருக்கிறார். கேஸ் நாங்களே நினைச்சுப் பாக்காத அளவில பெருசா இருக்கு மேம்!”

அவளாலும் அதை ஊகிக்க முடிந்தது. குற்றவியல் விசாரணைப் பிரிவின் கீழ் சென்ற வழக்கை இனி யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எதுவானாலும் நீதிமன்றின் மூலமாகத்தான் அணுக முடியும். அதுவரைக்கும் காண்டீபன் அண்ணாவின் நிலை?

“அண்ணா எங்க?”
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“பின்னால இருக்கிறார்.” காவல் நிலையத்தின் பின் பகுதிக்கு அழைத்துச்சென்று காட்டினான்.

சுவரோரமாக இருந்த மரக்குற்றி ஒன்றில் அமர்ந்து, சுவரில் தலையைச் சாய்த்து, விழிகளை மூடி இருந்தான் காண்டீபன். அவன் மடியில் கிடந்த கைகளில் விலங்கு. ஆதினியின் விழிகள் மளுக்கென்று நிறைந்து போயின. அழக் கூடாது; அவன் முன்னே உடைந்துவிடக் கூடாது என்றுதான் நினைக்கிறாள். தாயைக் கண்ட கன்றாக மனம் துடிக்கையில் எங்கே?

எந்த எண்ண அலைகள் உந்தியதோ. விழிகளைத் திறந்து இவள் புறம் பார்த்தான் காண்டீபன். இவள் என்றதும் உதட்டோரம் அரும்பிய மென் புன்னகையோடு, வா என்று தலையை அசைத்தான்.

கன்றுக் குட்டியாக அவனிடம் ஓடினாள் ஆதினி.

“கங்கிராட்ஸ் மா!”

இந்த நேரத்தில் கூட அவளை மறக்கவில்லையே! உடைந்து போனாள் ஆதினி. “என்னண்ணா இதெல்லாம்?” என்றாள் கண்ணீரினூடு.

உயிர்ப்பற்ற ஒரு சிரிப்புடன், “உனக்குத்தான் இந்த அண்ணா நல்லவன். மற்ற ஆக்களுக்கு இல்ல!” என்று மெல்லிய குரலில் சொன்னான்.

அவள் தலை இல்லை என்று அசைந்தது. “எனக்குத் தெரிஞ்ச காண்டீபன் அண்ணாவால ஆருக்கும் கெட்டது செய்யேலாது.” என்றாள் உறுதியான குரலில்.

வாய்விட்டுச் சிரித்தான் அவன். இக்கட்டு நிறைந்த அந்த நேரத்திலும் சிரிக்கிறவனைக் கண்ணீரோடு பார்த்தாள் அவள்.

“இப்பிடி ஒரு தங்கச்சி கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கோணும். ஆனா, நீ அடிக்கடி சொல்லுவியே, என்னட்ட ஏதோ ஒரு மர்மம் இருக்கு எண்டு. அது உண்மை. நான் தமயந்திக்கு போதையைப் பழக்கினது பொய்யில்ல.”

அவள் அதைக் கேட்டெல்லாம் உடையவில்லை. அதற்கு மாறாக, “நீங்க ஒரு விரிவுரையாளன். ஆருக்கோ எதையோ படிப்பிக்க நினைச்சிருக்கிறீங்க. மற்றும்படி என்ர காண்டீபன் அண்ணா நல்லவர்தான்!” என்றாள் அசைக்க முடியாத நம்பிக்கையோடு.

அவன் தொண்டை ஒருமுறை ஏறி இறங்கிற்று. அவளையே இமைக்காது பார்த்துவிட்டு, “அந்தளவுக்கு என்னை நம்புறியா?” என்றான் ஆழ்ந்த குரலில்.

ஆம் என்று தலையசைத்தாள் ஆதினி. அவன் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம். விலங்கினுள் சிக்கியிருந்த கைகள் இரண்டையும் உயர்த்தி, அவள் தலையைக் கலைத்துவிட்டான். ஆதினியின் விழிகள் மீண்டும் கண்ணீரைக் கொட்டின.

“அழக் கூடாது! எங்கட ஆதினி ஸ்ட்ரோங் கேர்ள். முதல் கேஸ் நல்ல ஸ்ட்ரோங்கான கேஸா எடுத்து நடத்து. நீதிபதி இளந்திரையன் சேரின்ர மகள் எண்டுற நிலை மாறி, ஆதினின்ர அப்பா நீதிபதி இளந்திரையன் எண்டுற பெயர் வரோணும். செய்வியா?” என்று கேட்டான்.

அவளும் தலையை அசைத்தாள். “உங்களுக்கும் நான் இருக்கிறன் அண்ணா. ஒண்டுக்கும் கவலைப்படாதீங்க! கெதியில(விரைவில்) உங்கள நான் வெளில கொண்டு வருவன்.” அவசரமாகச் சொன்னாள்.

ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான் அவன்.

அப்போது எல்லாளனோடு அங்கே வந்தாள் மிதிலா. அவள் விழிகள் பரிதவித்தபடி கணவனைத் தேடி அலைந்தன. கைகளில் விலங்கு மாட்டிய நிலையில் அவனைக் கண்டதும் வாயை மூடிக்கொண்டு அழுதாள்

“மிது…” என்றபடி எழுந்து, அவளிடம் சென்றவனுக்கும் தொண்டைக்குள் எதுவோ சிக்கிக்கொண்ட உணர்வு. அவளை அணைக்கத் துடித்தான். விலங்கிட்ட கைகளோடு முடியவில்லை. “அழாத மிது. இதெல்லாம் ஒண்டுமே இல்ல.” என்றான் கரகரத்த குரலில்.

“இது ஒண்டுமே இல்லையா? என்ன கதைக்கிறீங்க?” என்றவள் வேகமாக அவன் கைகளுக்குள் புகுந்துகொண்டாள்.

“மிது, வயிறு…” என்றவனின் பதட்டத்தை எல்லாம் அவள் பொருட்டில் கொள்ளவில்லை. இரவிரவாகத் தனியாகக் கிடந்து தவித்த தவிப்புக்கு அவனும் அவனது அருகண்மையும் மட்டுமே தேவையாக இருந்ததில் அவனை அணைத்துக்கொண்டாள்.

“என்ன தீபன் இதெல்லாம்? என்ன நடக்குது? எனக்கு ஒண்டுமே விளங்குதே இல்லையேப்பா!” தவித்த குழந்தையாகத் தன் முகம் பார்த்து வினவியவளுக்கு என்ன ஆறுதலைச் சொல்வான்? எது சொன்னாலும் அவள் மனம் ஆறுமா?

உடைந்து நொருங்கிப் போயிருந்தவர்களை எல்லாம் இப்போதுதானே கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டினான். அவனில்லாமல் மீண்டும் நொறுங்கிவிட மாட்டார்களா? நெஞ்சு அழுதது. பெரும் வலி ஒன்று தாக்கியது.

எல்லாவற்றையும் தனக்குள்ளேயே போட்டு மறைத்துக்கொண்டான். கருவைத் தாங்கும் அவள் மனத்தைத் திடப்படுத்துவது முக்கியமாகப் பட, “ஒண்டும் நடக்கேல்ல. நீ அழுது உடம்பைக் கெடுக்காத? நான் கெதியா வந்திடுவன். அதுவரைக்கும் அப்பாவையும் மாமியையும் கவனமாப் பாத்துக்கொள்.” என்றான்.

என்னால் அது முடியுமா என்பது போல் நோக்கினாள் அவள்.

“உன்னால ஏலும் மிது. எனக்குத் தெரியும், என்ர மனுசி கெட்டிக்காரி. தைரியமா இருக்கோணும். முந்தியாவது நாங்க தனிய. இப்ப எல்லாளன் இருக்கிறான். ஆதினி இருக்கிறாள். பயப்பிடாத, என்ன?” தன் மனம் படும் பாடுகளை எல்லாம் மறைத்துக்கொண்டு சொன்னான்.

“ஆர் இருந்தாலும் எனக்கு நீங்க இருக்கிற மாதிரி வராதே தீபன்?” கண்ணீரோடு தழுதழுத்தாள்.

காண்டீபனின் பேச்சு அப்படியே நின்று போனது. விழிகளில் நீர் சேர ஆரம்பிக்கவும் வேகமாக முகத்தைத் திருப்பித் தன்னைச் சமாளிக்க முயன்றான்.

ஆழ்ந்த மூச்சுகளை இழுத்துவிட்டுத் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, “நான் எங்க போகப் போறன்? கொஞ்ச நாள் பக்கத்தில இல்லாம இருக்கப் போறன். பிறகு வருவன்தானே?” என்றான் கனிவுடன்.

அந்த மூவர் குழு இவனை நோக்கி வருவது தெரிந்தது. அவன் புறப்படும் நேரம் வந்து விட்டது. இனி எப்போது இவர்களை எல்லாம் பார்ப்பானோ? நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது.

திரும்பி எல்லாளனைப் பார்த்தான். விறைத்த தேகமும் இரும்பைப் போன்று இறுகிய முகமுமாக நின்றிருந்தான் அவன். அவன் முன்னே வந்து நின்றான் காண்டீபன். இருவரின் பார்வைகளும் சந்தித்தன.

“நீயும் நானும் பிரிஞ்சேதான் இருக்கோணும் போல!” கரகரத்த குரலில் சொன்னான்.

உள்ளுக்குள் மொத்தமாக நொறுங்கினான் எல்லாளன். ஆனாலும் அணிந்திருக்கும் காக்கிச் சட்டைக்கு நியாயம் செய்கிறவனாக, விறைப்புடன் அப்படியே சிலையென நின்றிருந்தான்.

இது அவனே எதிர்பார்க்காத ஒன்று. அவன் கையை மீறிய நிலை. அதுதான் நெஞ்சை அறுத்தது. அன்று தெரியாமலே கையை விட்டான். இன்று தெரிந்தும் கைப்பற்றிக் கரையேற்றிவிட முடியாமல் நிற்கப்போகிறானா? பெரும் போராட்டம் ஒன்று அவனுக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தது.

நண்பனை இறுக்கி அணைக்கவேண்டும் போல் இருந்தது காண்டீபனுக்கு. ஆனால், அவன் இப்போது காவல் அதிகாரி. நெஞ்சை பெரும் துக்கப் பந்து ஒன்று வந்து அழுத்த, “நீ கவனமடா! எப்பவும் இந்த யூனிபோர்மை மட்டும் கழட்டிப் போடாத!” என்றவன் அதன் பிறகு யாரிடமும் எதுவும் பேசவில்லை.

விடாமல் அழுதுகொண்டிருந்த மிதிலாவிடம் மட்டும், “சும்மா சும்மா அழாத மிது! தண்டனை கிடைச்ச பிறகு, எனக்கு மட்டும் தலைவர்களின்ர பிறந்தநாள்களும் சுதந்திர தினங்களும் வராமையா போகப் போகுது. வரும்! அப்ப நானும் வருவன்!” என்றுவிட்டுச் சென்று, வாசலில் நின்றிருந்த வாகனத்தினுள் ஏறி அமர்ந்தான்.

அதன் பிறகு அவன் யாரையும் திரும்பிப் பார்க்கவே இல்லை. வாகனம் புறப்பட்டது. அப்போதும் ஒருவிதப் பிடிவாதத்துடன் இவர்களின் புறம் திரும்பாமலே அமர்ந்திருந்தவன், அவர்கள் பார்வைக்கு மறையப்போகிறார்கள் எனும் நொடியில் வேகமாகத் திரும்பி, அவர்கள் நால்வரையும் பார்த்துத் தலையை மெதுவாக அசைத்து விடைபெற்றுக்கொண்டான்.
 

Indhumathy

New member
ஒருத்தன் சிக்கிட்டான்னு மொத்த கேசையும் அவன் பேர்ல எழுதப் பார்க்குறாங்க 😡😡😡😡
 
Top Bottom