நீ வாழவே என் கண்மணி - 2

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-2

இரண்டாயிரத்து எட்டாம் வருடம் நாட்டுப்பிரச்சனை மெல்ல மெல்ல அதிகரிப்பதை உணர்ந்து, அவனை சுவிசுக்கு அனுப்பப் பெற்றவர்கள் தயாரானபோது, அவளைப் பிரியப்போகிறோம் என்கிற துயர் கொடுத்தத் துணிச்சலில்தான் அவளிடம் முதன் முதலாக அவன் கதைத்ததே!

ஒருநாள் மாலை, அவர்கள் வீட்டுக்கு முன்னால் நின்ற கொண்டல் மரத்தில், அவள் பார்க்கும் வகையில் ஒரு துண்டைச் செருகிவிட்டுச் சென்றான் நிர்மலன். யாரும் பார்க்காத நேரம் பார்த்து அதை எடுத்துப் படித்தாள் அவள். அதில் எழுதியிருந்ததன் படி கோவிலுக்கு அவள் வந்து சேர்ந்தபோது மெல்லிய இருள் கவியத் தொடங்கியிருந்தது.

முதன் முதலாகத் தனிமையில் சந்திக்கிறார்கள்.

படபடப்பும் பயமுமாக அவனருகில் வந்து நின்றவளிடம், “சுவிசுக்கு போகப்போறன்..” என்று அவன் சொன்னதும், அதிர்ச்சியில் விரிந்த அவள் விழிகளிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டிற்று!

அந்தக் கண்ணீரைக் கண்டபோது எந்தளவு தூரத்துக்கு வலித்ததோ அந்தளவு தூரத்துக்கு நெஞ்சு நிறைந்துபோனது. காதலியின் கடைக்கண் பார்வைக்கே தவமாய்த் தவமிருந்தவன் அவன். அந்தக் கண்களிலிருந்து கண்ணீர் அவனுக்காக வழிந்தால்?

நெஞ்சில் நிறைந்திருந்த நேசம் உந்த சட்டென்று அவளின் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் துடைத்துவிட்டான்.

“நீ இப்பிடி அழுதா நான் எப்பிடிப் போறது?”

“நீங்க இல்லாம எப்பிடி… நான் தனியா…” சிவந்திருந்த விழிகள் மீண்டும் கலங்க அவன் முகம் பார்த்து ஏக்கத்தோடு அவள் கேட்டபோது, காலம் காலமாய்க் காதலோடு வாழ்ந்துவிட்ட திருப்தியை அனுபவித்திருந்தான் நிர்மலன்.

ஒவ்வொரு நாட்களையும் வாழ்கிறோம் தான். ஆனால், சில நாட்கள் தான் நம் வாழ்க்கையாகிப் போகிறது. அந்த நாட்களில் தான் மொத்த வாழ்க்கையையுமே வாழ்ந்திருப்போம். அப்படித்தான் அவனும்! அன்றுதான் வாழ்ந்தான். அந்த நாள் தான் அவனது மிகுதி வாழ்க்கையாகவும் மாறிப்போனது!

“ஏன் தனியா? போகேக்க எப்பிடியாவது ஒரு செல் வாங்கித் தந்திட்டுப் போறன். ஒவ்வொரு நாளும் எடுப்பன். ஸ்கைப்ல கதைக்கலாம். சரியா?” இதமாகச் சொன்னான்.

அவள் தெளியாத முகத்தோடு தலையசைக்க, “இவ்வளவு நாளும் கண்ணால பாத்துகொண்டு மட்டும் தானே இருந்தோம். இனி கதைக்கப் போறோமே. அத நினச்சுப்பார்.” என்றான் குறும்புச் சிரிப்போடு.

அப்போதுதான் அதுநாள் வரை அவர்களைத் தடுத்து நிறுத்தியிருந்த வெட்கத்தையும் கூச்சத்தையும் தடுமாற்றத்தையும் உடைத்துக்கொண்டு, அவர்கள் இருவரும் பேசிக்கொள்கிறார்கள் என்பதே புலப்பட, வெட்கத்தோடு புன்னகைத்தாள் அவள். அவன் சொன்ன சேதி நெஞ்சை அழுத்தியதில் அதை உணரத் தவறியிருந்தாள்.

“இப்போதைக்கு நல்லா படி. எனக்கு அங்க விசா கிடைச்சதும் முதல் வேலையா உன்ன கூப்பிட்டுடுவன். அதால கவலைப்படாம இரு என்ன!” என்றான் கனிவோடு.

சம்மதமாகத் தலையசைத்தாள்.

விழிகளில் கலக்கம் சூழ, நிமிர்ந்து அவனையே பார்த்து, “என்னை மறந்திட மாட்டிங்க தானே…” என்று கேட்கையிலேயே கேவல் வெடித்தது. “பிறகு… பிறகு நான் செத்திடுவன்…” என்றாள்.

அன்று துடித்துப்போனான் நிர்மலன். இன்று நெஞ்சு கொதித்தது. எப்படியெல்லாம் ஏமாந்திருக்கிறான். எவ்வளவு பெரிய பச்சோந்தி அவள்! அவனை இளிச்சவாயனாக மாற்றியவள் மீது ஆத்திரமும் ஆவேசமும் பொங்கிற்று!

இன்று காதலின் வலி அவனிடம் இல்லைதான். மருந்தாக வந்து மனக்காயத்தை ஆற்றியவள் அவன் மனைவி! அவனது காதலும் நேசமும் பாசமும் அவளிடம் மட்டும்தான். ஆனால், ஒரு ஏமாற்றுக்காரியை நம்பினேனே, அவளிடம் ஏமாந்து போனேனே என்பதுதான் இன்னும் நெஞ்சில் நின்றது.

அன்று சற்றும் உணரவில்லையே! மகுடிக்கு மயங்கும் பாம்பாய் அவளிடம் மயங்கிக் கிடந்தானே! அந்தளவுக்குச் சிறந்த நடிகை அவளா? அல்லது, மிக மோசமான ஏமாளி அவனா? ஆத்திரமும் ஆவேசமும் தான் வந்தது.

ஆனால் அன்றோ, “உன்ன மறந்திட்டு நீ இல்லாம உயிரோட இருப்பன் எண்டு நினைச்சியா?” என்றான் உள்ளம் உருக. அவள் முகம் தாமரையாக மலர்ந்தபோது, அந்த மலரை வாடாமல் பாதுகாப்பேன் என்று சபதமும் பூண்டான்!

அதன்பிறகு அவன் சுவிசுக்கும் வந்துவிட, அவர்களின் காதல் செல்பேசி வழியாக ஆத்மார்த்தமாக வளர்ந்துகொண்டே இருந்தது. அப்படித்தான் அவன் நினைத்திருந்தான்.

வருடம் இரண்டாயிரத்து ஒன்பது! உலகத் தமிழர்களையே உலுக்கிப்போட்ட கோர வரலாறு நடந்த வருடமது! உயிர்களும், உடல்களும், அற்புதக் காதல்களும், உயிரினும் மேலான பெண்களின் கற்புகளும் கயவர்களால் களவாடப்பட்ட வருடம்! இன்னும் பல்லாயிரம் வருடங்கள் கடந்தாலும் ஆறாத வடுவை ஆழமாகப் பதித்துவிட்ட வருடமது!

உள்நாட்டு யுத்தம் உச்சத்தைத் தொட்டதில், இடம்பெயர்வில் ஆளாளுக்குத் தொலைந்து போனதில் அவளின் இருப்பு எங்கே என்று தெரியாது அவன் துடித்துப்போனான்.

அவளின் குடும்பத்தில் யாரையும் காணோம்!

உயிரோடு இருக்கிறாளா? இருந்தாலும் நலமாக இருக்கிறாளா? என் கண்மணி என்னென்ன துயர்களை அனுபவிக்கிறாளோ? துணைக்கு நான் இல்லாமல் போனேனே. நான் இங்கே பாதுகாப்பாக இருக்க அவள் அங்கே என்ன பாடு படுகிறாளோ? கடவுளே எல்லோரையும் காப்பாற்று. அவளையும் பாதுகாத்துக்கொள் என்று அவன் மனமும் உதடுகளும் இடைவிடாது உச்சரித்தபடியே இருந்தன. உறக்கம், உணவில்லாது பைத்தியகாரனாகவே மாறிப்போனான்.

ஒரு வழியாக நடந்த கோரங்கள் எல்லாம் முற்றுக்கு வந்து வீட்டினரின் தொடர்பு கிடைத்ததும், அவள் எப்படி இருக்கிறாள் என்று எடுத்ததுமே கேட்கத் துடித்த நாவைப் பெரும் பாடுபட்டு அடக்கி, பெற்றவர்களை விசாரித்து, சொந்தங்களை விசாரித்து, பிறகு ஊராரை விசாரிக்கிறேன் பேர்வழி என்று அவளைப் பற்றிச் சுற்றிவளைத்து அவன் கேட்டபோது, “அவேன்ர குடும்பம் உயிரோட இருக்கோ இல்லையோ தெரியாது தம்பி.” என்றார் பத்மாவதி.

வந்த கோபத்துக்கு அவரிடம் தன்னை மறந்து கத்திவிட்டு வைத்துவிட்டான். உடலின் நடுக்கம் தீரவே நீண்ட நேரமெடுத்தது.

அவனின் அவள் எப்படி அவனை விட்டுவிட்டுப் போவாள்? இங்கே அவன் இதயம் இன்னும் துடித்துக்கொண்டுதானே இருக்கிறது. இருக்காது! கடைசிவந்தாலும் இருக்காது. அவள் உயிரோடு நன்றாக இருப்பாள். என்னைத் தொடர்பு கொள்வாள் என்று மனம் அழுத்திச் சொன்னது.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அவளின் அழைப்புக்காகக் காத்திருந்தான்.

அடுத்த நிமிடமோ செவிகளை வந்தடைந்த செய்திகள் ஒவ்வொன்றுமே அவன் குலையை நடுங்க வைத்தன. மனம் நடுங்க, தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் நண்பர்கள் என்று ஒவ்வொருவராகத் தேடித்தேடி அழைத்து, “கண்மணிய பாத்தீங்களாடா?” என்று கேட்டபோது, யாருக்கும் அவளைப் பற்றித் தெரியவில்லை. நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தது. வீட்டிலோ பெண் பார்க்கத் தொடங்கியிருந்தனர். நிர்மலன் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தான்.

அவனது முயற்சி மட்டும் ஓயவேயில்லை. நீண்டநாள் தவத்துக்குக் கிடைத்த பலன்போல், நண்பன் ஒருவன் வவுனியா அகதிகள் முகாமில் அவளைக் கண்டேன் என்று சொன்னபோது அழுதே விட்டான் நிர்மலன்.

போதும்! இது போதும்! இனி எப்படியும் அவளைத் தேடிக் கண்டு பிடித்துவிடுவேன். எப்படி இருந்தாலும் அள்ளி அணைத்துக்கொள்வேன். அவளிடம் எப்படியடி இருக்கிறாய், என்ன கஷ்டம் எல்லாம் பட்டாய் என்று கேட்டு, அவள் பட்ட துயர்களையும் துன்பங்களையும் நான் வாங்கிக்கொண்டிட வேண்டும்!

எனக்கு ஏனடி அழைத்துக் கதைக்கவில்லை என்று கேட்டு இரண்டு திட்டுத் திட்ட வேண்டும்!
 

நிதனிபிரபு

Administrator
Staff member
நெஞ்சம் உந்த, நண்பனிடம் வவுனியாவில் போய் அவளைப் பார்க்கச் சொல்ல, அவனோ தன் மனைவி வயிற்றில் குழந்தையோடு வைத்தியசாலையில் இருக்கிறாள் என்றான். இவனின் தவிப்பையும் உணர்ந்து அவன் அவனது நண்பன் ஒருவனை வவுனியாவுக்கு அனுப்பினான். அங்கே, முகாமில் யாரும் உள்ளே போகவும் முடியாது, வெளியே வரவும் முடியாது. முகாமில் யார் யாரையோ பிடித்து, கெஞ்சி, தன் செல்பேசியை அவர்களின் மூலம் அவளிடம் கொடுத்துவிட்டு அவன் இவனுக்குச் சொல்லி, அந்த நம்பருக்கு இவன் அழைத்த அந்த நிமிடம்… அவளின் குரலைக் கேட்டுவிட அவனது ஆவி முதற்கொண்டு அந்தம் அத்தனையும் தவியாய்த் தவித்துப்போனது.

“ஹலோ…” மெலிந்து நலிந்து கேட்ட குரலில், எத்தனை எத்தனையோ கேள்விகள் கேட்டுவிடத் துடித்தவனின் அத்தனை துடிப்பும் அடங்க, அவளின் குரலை உள்வாங்கித் தன் உயிருக்குள் நிரப்பிக்கொண்டான்.

‘என் கண்மணி…’ அவனது உயிர்மூச்சு உச்சரித்தது!

முன் நெற்றிக் கேசத்தை அப்படியே ஒரு கைக்குள் அடக்கிக்கொண்டு காதில் செல்லைப் பொருத்தியபடி அப்படியே சோபாவில் கண்களை மூடிச் சாய்ந்துவிட்டான் நிர்மலன்.

“ஹ…லோ! நி…ர்…ம…லன்.” உடைந்து கேட்ட குரலில் அவனும் உள்ளுக்குள் உடைந்துபோனான்.

“ம்ம்.”

“நிர்மலன், எனக்கு… எனக்குக் கலியாணம் முடிஞ்சுது. அதால இனி எனக்கு எடுக்காதிங்கோ. நான் சந்தோசமா வாழுறன். திரும்பத் திரும்ப எடுத்து அதைக் கெடுத்துப்போடாதிங்கோ.” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமலேயே கைபேசியை அணைத்திருந்தாள்.

துடித்துப்போனான் நிர்மலன்.

அவள் தான் பட்ட துன்பங்களைச் சொல்வாள், கண்ணீர் விட்டழுவாள், என்னை எப்ப கூப்பிடப் போறீங்க என்று கேட்பாள், நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிடக் கூடாது. அவளைத் தேற்ற வேண்டும். தைரியம் கொடுக்க வேண்டும் என்று எத்தனையோ நினைத்து வைத்தவன் சத்தியமாக இதை நினைக்கவே இல்லை.

அவனுடைய வாழ்க்கையே அவள்தான் என்று அவனிருக்க, அவள் தனக்கென்று ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டதும் அல்லாமல், அவளது சந்தோசத்தைக் கெடுக்க வேண்டாமாமா?

அவள் வாழ்வில் அவன் இல்லாமல் சந்தோசம் என்ற ஒன்று உண்டா என்ன? அப்படியெதுவும் அவனுக்கில்லையே?

மீண்டும் மீண்டும் பலமுறை அவன் முயன்றபோது அதற்குப் பிறகு அவள் கதைக்கவே இல்லை. மறுத்துவிட்டாள்.

அவள் சொன்னதை நம்பவும் முடியாமல், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் திரும்பவும் பைதியமாகிப்போனான் அவன். வாழ்க்கையே கசந்தது. யாரையும் நம்பப் பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக்கொண்டால் என்ன என்றுகூட யோசித்தான். எதிர்காலக் கற்பனைகள் அத்தனையிலும் அவனோடு அவள் இருந்தாளே. அந்த எதிர்காலம் முற்றிலுமாகச் சூன்யமாய்த் தெரிந்தது. ஒருகட்டத்தில் அது ஆக்ரோசத்தை கொடுத்தது.

‘எனக்குக் கல்யாணம் முடிஞ்சுது… நான் சந்தோசமா வாழுறன்… அதைக் கெடுத்துப்போடாதிங்கோ…’ இந்த வார்த்தைகளே அவனைச் சாகவும் வைத்தது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற ஆவேசத்தையும் கொடுத்தது.

நம்பிக்கைத் துரோகி அவளே ‘சந்தோசமாக’ வாழும்போது அவன் ஏன் சாவைப் பற்றி யோசிக்க வேண்டும்?

தாயின் விடாத தொல்லையும் சேர்ந்துகொள்ள ஒரு வருடம் கழிந்தபோதுதான் திருமணத்துக்குச் சம்மதித்தான். உஷா அவன் வாழ்வின் பொற்காலம் தான். அவளின் அன்பு மெல்ல மெல்ல அவனை முற்றிலுமாக மீட்டுக்கொண்டு வந்தது. ஆரம்ப நாட்களில் அவனின் ஓட்டுதல் இல்லாத தண்மையைக்கூட பொறுத்துப்போய், அவனை மாற்றி உயிர்ப்புள்ள மனிதனாக மாற்றித் தந்த பெருமை அவளுக்கு மட்டுமே உண்டு. ஆனாலும், உள்ளே ஒரு வெறி. அவள் முன்னால் போய் நிற்க வேண்டும். நான் சந்தோசமாக வாழும் வாழ்க்கையைப் பார் என்று காட்ட வேண்டும்! நீ இல்லாமல் நான் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை என்று முகத்தில் அறைந்தாற்போல் அவளை உணரவைக்க வேண்டும்!

அவளிடம் ஏமாந்ததை எண்ணி இன்றும் நெஞ்சு கொதித்தது.
வீதியால் செல்கையில் அவள் வீட்டைப் பார்த்தான். பாழடைந்து, பழுதடைந்து, பற்றைகள் மூடிக் கோரமாய்க் காட்சியளித்தது!

‘அவளும் இப்படித்தான் இப்போது இருப்பாள்!’

அடுத்தவாரம் சுவிசுக்க திரும்ப வேண்டும் என்கிற அளவில் நாட்கள் நெருங்கிவிட, அன்று எல்லோருமாகப் பக்கத்து ஊர் கோவிலுக்குச் சென்றார்கள். அவனுடைய அம்மாதான் ஏதோ வேண்டுதல் என்று அழைத்துச் சென்றார்.

காரிலிருந்து இறங்கியதுமே அவன் செல்வங்கள் அங்குமிங்கும் ஓடத்தொடங்கினர். உஷா பூசைப் பொருட்களைக் கையில் வைத்துக்கொண்டு பிள்ளைகளை அடக்க முடியாமல் சிரமப்பட, “நீ போ. பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு நான் வாறன்.” என்று உஷாவைப் பெற்றவர்களுடன் அனுப்பிவைத்தான்.

ஒரு வழியாகப் பிள்ளைகளைச் சமாளித்துக் கூட்டிக்கொண்டு கோவிலுக்கு அவன் சென்றபோது, சக்கர நாற்காலியில் இருந்த ஒரு பெண்ணின் தலையைக் கண்ணீரோடு அம்மா தடவிக்கொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் பக்கவாட்டுத் தோற்றம்தான் தெரிந்தது.

யார் என்கிற கேள்வி எழுந்தாலும் அவனுக்கும் மனம் பாரமாகிப் போயிற்று. முழங்காலோடு ஒரு காலில்லை என்று பார்க்கவே தெரிந்தது.

அங்கவீனர்கள் உற்பத்தி செய்யப்பட்ட தேசமல்லவா நம் தேசம்!

பிள்ளைகளோடு அவன் அவர்களை நெருங்க, அவ்வளவு நேரமும் அவனது தாயோடு கதைத்துக் கொண்டிருந்தவள் முகத்தைத் திருப்பி இவன் மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தாள். உஷாவின் கரங்கள் இரண்டையும் பற்றி, மென் புன்னகையோடு என்னவோ கதைத்தாள்.

அப்போதுதான் முகம் தெரிந்தது! தெரிந்த கணத்தில் அதிர்ந்துபோய் நின்றுவிட்டான் நிர்மலன்.

கண்மணி!

இது… அவளல்லவா!

‘எனக்குக் கல்யாணம் முடிஞ்சுது. நான் சந்தோசமா இருக்கிறன்… அதைக் கெடுத்துப்போடாதிங்கோ.’ நெஞ்சில் அறைந்தது அந்த வார்த்தைகள். இதுதானா அவள் சொன்ன சந்தோசம்? இதைத்தானா அப்படிச் சொன்னாள்?

நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. எத்தனை ஆத்திரம்? எவ்வளவு ஆவேசம்? எவ்வளவு கோபம்? கடவுளே!

கால்கள் அவளை நோக்கி நகர மறுத்தன! கண்கள் அவளைவிட்டு அகல மறுத்தன! இதயத்தை மட்டும் தனியே இழுத்தெடுத்து யாரோ கசக்கிப் பிழியும் வலி!

‘இனி என்ன செய்வேன்?’ திரும்பியே வரமுடியாத பாதையில் பயணித்துவிட்டானே!

கட்டாயம் அவன் சுவிசுக்குத் திரும்பத்தான் போகிறான். தன் வாழ்க்கையைப் பார்க்கத்தான் போகிறான். குழந்தைகளோடு சந்தோசமாக இருக்கத்தான் போகிறான். மனைவியோடு வாழத்தான் போகிறான். ஆனாலும், இனி என்றைக்குமே இறக்கிவைக்க முடியாத பாரம் நெஞ்சை அழுத்தப் போகிறது. கட்டையோடு கட்டையாகப் போனால் மட்டுமே அது காணாமல் போகும் போலும்! அதுகூட உறுதியில்லை!

அவன் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே தாயிடம் ஓடிய குழந்தைகளைக் கைகளை நீட்டி அழைத்தாள். கூச்சமும் வெட்கமுமாய்த் தாயின் கால்களைக் கட்டிக்கொண்டு முகத்தை மறைத்தவர்களிடம் என்னவோ கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாள். சற்று நேரத்திலேயே இருவரும் அவளோடு சேர்ந்துகொண்டனர். தன் நெஞ்சோடு அரவணைத்துக் கொஞ்சினாள். கண்களில் அத்தனை கனிவு! முகத்திலோ சாந்தம்!

தன் இழப்பை உணரவேயில்லையா அவள்! உயிரிலிருந்து உதிரம் கசிய, அந்த வலியைத் தாங்கமுடியாமல் அங்கேயே நின்றிருந்தான் நிர்மலன்.

அவனுடைய கண்மணியைக் கை விட்டுவிட்டானே!

அவனது மகளை மார்போடு அணைத்துக்கொண்டு திரும்பி அவனைப் பார்த்தாள். மென்மையாகப் புன்னகைத்தாள். அவனால் தான் அவளை எதிர்கொள்ள இயலவில்லை.

பார் பார் என்று தன் சந்தோசத்தைக் காட்ட வந்தவன் அவளைப் பார்க்க முடியாமல் நின்றான். அவள் வாழும் வாழ்க்கையைக் கண்கொண்டு காணமுடியாமல் நின்றான். வாய் திறந்து கதைக்ககூட இயலாமல் எல்லோரையும் இழுத்துக்கொண்டு திரும்பினான்.

“இங்க ஏனம்மா தனியா இருந்து கஷ்டப்படுறாய். அங்க… எங்கட ஊருக்கே வாவன். நாங்க எல்லோரும் இருக்கிறோம் தானே.” அவளின் நிலையைத் தாங்கமுடியாமல் கண்ணீரோடு சொன்னார் அவன் அன்னை, பத்மாவதி.

அதற்கு எதுவுமே சொல்லாத அவளின் கண்கள் அவனிடம் சொன்னது,


காலங்கள் கடந்தாலென்ன
கனவுகள் சிதைந்தாலென்ன
பாதைகள் மாறினாலென்ன
உன்மேல் நான் கொண்ட
உயிர் நேசம் சொல்கிறது
நெஞ்சே… நீ வாழ்க!

 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom