நீ வாழவே என் கண்மணி - 3

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-3


நாட்கள் ஒன்றும் அப்படியே உறைந்துவிடவில்லை. அவனது வாழ்க்கையும் எங்கும் தேங்கிவிடவில்லை. மனைவி பிள்ளைகளோடு சுவிசுக்கு வந்து சேர்ந்துவிட்டான். வழமைபோல வீடு, வேலை, மனைவி, பிள்ளைகள் என்று அவனது பொழுதுகள் கழிந்துகொண்டுதான் இருந்தது. எதுவும் மாறவில்லை.

ஆனால், மனது? அதிலே ஏறிவிட்டிருந்த பாரம்? ஐயோ… அவளை விசாரிக்காமல் அப்படியே கைகழுவி விட்டோமே என்று நெஞ்சை அரிக்கும் அந்த வலி? சக்கரநாற்காலியில் அவளைக் கண்ட காட்சி? அவனைக் கண்டதும் விழிகளை மலர்த்தி அவள் சிந்திய புன்னகை? இனி என்ன செய்யப் போகிறேன் என்று உள்ளத்தை அழுத்தும் வேதனை? எதுவும் அகலமறுத்தது.

அவள் சொன்ன வார்த்தைகளை அப்படியே நம்பியவன், அவன்மீது அவள் கொண்ட காதலை ஏன் நம்பாமல் போனான்? ‘நீ மறந்தால் இறந்துவிடுவேன்’ என்றாளே, அதை எப்படி மறந்தான்? இனி என்ன செய்வான்? எதுவுமே முடியாதே.

ஊர்ப்பக்கம் அவள் வராமல் இருந்ததற்கான காரணம் கூட, அவள் வந்தால் அவளின் நிலைபற்றி அவனுக்குத் தெரியவரும், அதைத் தங்கமாட்டான், அந்தக் குற்ற உணர்ச்சி கூட அவனுக்கு வேண்டாம் என்பதா? ஐயோ கண்மணி.. என்னை முழுக்க முழுக்க கெட்டவனாக ஏனடி மாற்றினாய்? தனக்குள் கிடந்தது துடித்தான் நிர்மலன்.

எந்த நிலையிலிருக்கிறாள் என்று அறிந்துகொண்ட இன்றும் எதுவும் செய்ய முடியாத கையறு நிலை வேறு அவனை இன்னுமே வதைத்தது!

சிரிப்பைத் தொலைத்து, சதா சிந்தனையின் வசமாயிருக்கும் கணவனை உஷாவும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். என்னவோ கிடந்து அவன் மனதை வாட்டுகிறது என்று மட்டும் தெரிந்தது. அவனாகச் சொல்லுவான் என்று எதிர்பார்க்க, எதையுமே பகிர்ந்தானில்லை.

அன்று சனிக்கிழமை. மற்றைய நாட்களானால் சனியில் வீட்டிலேயே இருக்க விடமாட்டான். ஞாயிறுகளில் கடைகள் பூட்டு என்பதால், சனிக்கிழமைகளில் சாப்பாடு முதற்கொண்டு அவர்களின் பொழுது கழிவது முழுக்க வெளியேதான். அவள் ஏதாவது விசேசமாகச் சமைக்கிறேன் என்றாலும் முறைப்பான். அப்படியானவன், பிள்ளைகளைக் கூட வெளியே கூட்டிச் செல்லாமல் சோபாவில் கண்களை மூடிச் சரிந்திருந்தான்.

அதற்குமேல் அவனாகச் சொல்லட்டும் என்று காத்திருக்கும் பொறுமையின்றி, பிள்ளைகளை அவர்களின் அறையில் விளையாட விட்டுவிட்டு அவனருகில் வந்து அமர்ந்தாள் உஷா.

அவளை உணர்ந்து அவன் பார்க்க, “என்னப்பா? என்ன கிடந்து உங்கட மனதை அரிக்குது? எனக்குச் சொல்ல மாட்டீங்களா?” என்று, மென்மையாக அவன் கன்னம் வருடிக் கேட்டாள்.

அவன் விழிகளில் பெரும் வலி.

“சொன்னா நீ தங்கமாட்ட உஷா.” விழிகள் எங்கோ தொலைவை வெறிக்கத் துயரோடு சொன்னான்.

அவளுக்கும் சுருக்கென்று நெஞ்சில் வலித்தது.

“துணையா நீங்க நிக்க மாட்டீங்களா?”

அந்த வார்த்தைகள் மனதைத் தொட்டுவிட நெஞ்சோடு மனைவியை அணைத்துக்கொண்டான் நிர்மலன். விழிகளினோரம் கசிந்தது அவனுக்கு. கணவனின் மார்பில் தலை சாய்த்தது அவளுக்கும் பெரும் ஆறுதலாய் இருந்தது.

“உன்னை மாதிரியே என்னை நம்பின ஒருத்திக்குத் துரோகம் செய்திட்டன்.” அவள் முகத்தைப் பற்றி, அவள் விழிகளையே பார்த்துச் சொன்னான் அவன். ஐயோ ஐயோ என்று அவன் நெஞ்சு கிடந்து தவிப்பதை அவன் கண்களில் கண்டாள்.

கேட்டதும் துடித்துப்போனாள். அவள் விழிகளும் தானாய் கலங்கிற்று! ஆனால், நிதானமாக யோசித்தாள். அவளுடைய கணவனால் ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்ய முடியாது! அவளுக்குத் தெரியும்! நம்பிக்கை பிறந்தது.

“என்ன நடந்தது?” கலக்கமின்றி இதமாகக் கேட்டாள்.

“நான் சொல்லப்போறது உன்ர மனதுக்கு இதம் தராதம்மா.” வேதனையோடு சொன்னான் நிர்மலன். அவளையும் கைவிட்டு, இவளுக்கும் மறைத்து என்று என்னவோ அவன் மிகுந்த தரம் தாழ்ந்து போய்விட்டது போலுணர்ந்தான்.

“கவலையும் தராதப்பா” நம்பிக்கையோடு சொன்னாள் உஷா.

“என்னைப்பற்றி உங்களுக்கும் உங்களைப்பற்றி எனக்கும் தெரியாம இருக்க நானும் நீங்களும் நேற்று கல்யாணம் முடிச்ச புதுத் தம்பதிகள் இல்ல. எட்டு வருசம் வாழ்ந்திருக்கிறோம். ரெண்டு பிள்ளைகள் இருக்கு. எனக்கு என்ர மனுசனைப் பற்றியும் தெரியும். அவருக்கு என்னை எவ்வளவு பிடிக்கும் எண்டும் தெரியும். அதால ஒண்டுக்கும் யோசிக்காம நீங்க சொல்லுங்கோ!” அனுசரனையாக அவள் சொல்லிமுடிக்க முதலே, ஆறுதல் தேடும் குழந்தையாய் மனைவியை இறுக்கி அணைத்திருந்தான் நிர்மலன்.

எவ்வளவு பெரிய வார்த்தைகள்! அவளே உணர்ந்திருக்க மாட்டாள், இந்த வார்த்தைகள் தன் கணவனை எந்தளவுக்கு ஆற்றுப்படுத்தும் என்று. தெம்பூட்டும் என்று. ‘கடவுளே.. என்ர வாழ்க்கையில எத்தனை அற்புதமான பெண்களைத் தந்திருக்கிறாய்.’ அவனது நலத்தை மட்டுமே நாடும் அவள். அவனை உயிராய் நம்பும் இவள்!

மென்மையாகக் கேசத்தைக் கோதிக்கொடுத்தாள் உஷா.

அவளது வருடலிலும் அணைப்பிலும் தைரியம் வரப்பெற்றவன் மனைவியிடம் தன் இளமைக்காலத்து காதலைச் சொன்னான்.

“அவள் எங்க இருக்கிறாள், அவளின்ர நம்பர் என்ன எண்டு எனக்குத்தான் எதுவும் தெரியாது. ஆனா அவளுக்கு, என்ர வீட்டு விலாசத்தில இருந்து நம்பர் வரைக்கும் எல்லாம் தெரியும். அவளை நான் துலைச்சுப்போட்டு(தொலைத்துவிட்டு) நிக்கிற மாதிரி அவளும் என்னைத் தேடித் தவிக்கக்கூடாது எண்டு எதையுமே நான் மாத்த இல்ல. எல்லாம் இருந்தும் அவள் என்னைத் தேடிக் கூப்பிடேல்ல எண்டதும் அவளின்ர உயிருக்கு ஏதும் நடந்திட்டுதோ எண்டுதான் பயந்துகொண்டு இருந்தனான். ஒருவழியா கண்டுபிடிச்சுக் கதைச்சா கல்யாணம் நடந்திட்டுது எண்டு சொல்லுறாள். என்னால நம்பவும் முடியேல்ல நம்பாம இருக்கவும் முடியேல்ல. உண்மையாவே யாரையோ கட்டியிருக்கிறாள்; அதாலதான் அவள் என்னைத் தேட இல்ல. தொடர்புகொள்ளவும் இல்ல. நானா தேடிக் கண்டுபிடிச்சதும் உண்மையைச் சொல்லி இருக்கிறாள் எண்டு அவ்வளவு கோவம். அப்பதானே, முகாமில சனம் எல்லாம் ஒண்டா இருக்கேக்க அவன் இவளைக் கட்டினது, இவள் அவனைக் கட்டினது எண்டு ஆயிரம் கதைகள் வந்தது. அப்படி இவளும் எண்டு.. உயிரோட இருந்தும் அவள் என்னைத் தொடர்பு கொள்ளாம இருக்க வேற எந்தக் காரணமும் இல்லையே. அந்தளவு தடுமாறிப்போற ஆளா அவள் எண்டு அவளை வெறுத்த அளவுக்கு இந்த உலகத்தில வேற ஆரையுமே வெறுக்கேல்ல நான்.” எப்படியெல்லாம் வெறுத்தோம் என்கிற நினைவில் தாங்கமாட்டாமல் தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டான் நிர்மலன்.

“பிறகு உன்னோட கலியாணம். ஆரம்பம் எந்த உணர்வுமே இல்லாமத்தான்.. அம்மாவோட நச்சரிப்புத் தாங்காமத்தான் உன்னைக் கட்டினான். ஆனா, என்ர வாழ்க்கை நானே எதிர்பார்க்காத அளவு சந்தோசமா மாறிப்போச்சு. நீ மாத்திப்போட்டாய். எல்லாம் நிறைவா இருந்தும் மனதில மட்டும் ஒரு கோபம். என்னை ஏமாத்திப்போட்டாள், துரோகம் செய்திட்டாள் எண்டு. அவளை நம்பி ஏமாந்துட்டனே எண்டு. இந்தமுறை இலங்கைக்குப் போனதே ‘சந்தோசமா’ வாழுறன் எண்டு சொன்னியே, நான் வாழுற சந்தோசமான வாழ்க்கையைப் பார், என்ர மனுசி பிள்ளைகளைப் பார் எண்டு காட்டத்தான். ஆனா, அண்டைக்குக் கோயில்ல வச்சு சக்கர நாற்காலியில அவளைக் கண்ட அந்த நிமிசம்.. நான் செத்தே போய்ட்டன் உஷா. அவள் சொன்ன சந்தோசம் அதுதானா எண்டு. என்னை என்னாலேயே மன்னிக்க முடியேல்லை.” சொன்னவன் தன்னையே வெறுத்தான். தன் முட்டாள் தனத்தை எண்ணி ஓராயிரம் முறை நொந்தான்.

“இதுல இவ்வளவு நாளும் அவளைப்பற்றி நினைவு வரேக்க அவ்வளவு கோபம் வரும். அவளை மகா கேவலமானவளா நினைச்சிருக்கிறன். ஆனா யோசிச்சுப் பார்த்தா பக்கா சுயநலவாதியா நான்தான் நடந்திருக்கிறன். துணையா நிண்டிருக்க வேண்டிய நேரத்தில கடவுளே.. என்ன நினைச்சிருப்பாள்.. ஒரு வார்த்த சொன்னதும் ஓடிப்போயிட்டான் எண்டு தானே.” அவனால் அவனையே மன்னிக்க முடியவில்லை.

நெஞ்சில் முட்டி மோதிய எண்ணங்களை எல்லாம் ஒரே மூச்சில் அவன் கொட்டி முடித்தபோது, ‘அந்தப் பெண்ணா? எவ்வளவு அன்பும் சாந்தமுமாய்க் கதைத்தாள். கடவுளே..!’ உஷாவின் கண்களில் கண்ணீர் பொல பொல என்று கொட்டியது. மனம் இயல்பாய் அந்தப் பெண்ணின் இடத்தில் தன்னை வைத்துப் பார்த்தது. எவ்வளவு அருமையான ஒரு துணையையும் வாழ்க்கையையும் இழந்துவிட்டாள்.

அதைக் கண்டவன் துடித்துப்போனான்.

“டேய் உஷ்! உனக்கு மறைக்க நினைக்கேல்லடா. நீயும் என்னைப் பிழையா நினைக்காத. அவளுக்கு நான் செய்ததே போதும்! ஒருத்திய நம்பி ஏமாந்திட்டன் எண்டு சொல்ல தன்மானம் இடம் தரேல்லடி. நீ இல்லாட்டி இண்டைக்கு நான் என்ன நிலைல இருந்திருப்பன் எண்டே எனக்குத் தெரியாது. என்ன நம்புடா!” மனைவியின் கண்ணீரைக் கண்டு பரிதவித்துப்போனான் அந்தக் கணவன்.

“இல்லையப்பா. நான் அதுக்கு அழ இல்ல. அண்டைக்கு அவா சொன்ன பொய்யால தானே இண்டைக்கு நீங்க எனக்குக் கிடைச்சு இருக்கிறீங்க. ஆனா அவா பாவம் எல்லோ. குடும்பமும் இல்லாம நீங்களும் இல்லாம.. கடவுளே காலும் இல்லாம..” என்னவோ தனக்கே நடந்துவிட்டது போல் துடித்துப்போனாள்.

நிர்மலனைப் போன்ற ஒருவனை விட்டுக்கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய இழப்பு? கணவனைக் கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“அதுதானம்மா என்ர கவலையும். எல்லாத்தையும் இழந்து, அகதியா, அகதிமுகாமில அனாதையா நிண்ட அந்த நேரத்திலேயும் அவள் எனக்காகப் பொய் சொல்லியிருக்கிறாள். இப்பகூட, அவளின்ர நிலை எனக்குத் தெரியவந்தா நான் குற்ற உணர்ச்சில துடிப்பன் எண்டுதான் ஊர் பக்கமே வராம இருக்கிறாள் போல. அப்பிடியானவளைப்பற்றி நான் யோசிக்கவே இல்லையே. அந்த நேரம் இங்க எனக்கு விசா கிடைச்சிட்டுதுதான். ஆனா, இலங்கைக்கு போகேலாது. எண்டாலும், வேற ஆக்களிட்ட சொல்லி விசாரிச்சு இருக்கலாம். அம்மாவை கதைக்கச் சொல்லி இருக்கலாம். எத்தனையோ வழி இருந்தும் அவளை இப்படி விட்டுட்டேன் எண்டு அதுதானம்மா தாங்க முடியேல்ல. அதைவிட இவ்வளவு நாளும் நெஞ்சில கோபத்தை வளத்து வச்சு.. நினைவு வாற நேரமெல்லாம் அவளைத் திட்டி..” அவனுக்கு விசர் பிடித்துவிடும் போலிருந்தது. அவன் அவனாக இல்லை. குழம்பித் தடுமாறி நிதானமிழந்து நின்றான்.

உஷாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கணவனுக்கு ஆறுதலாக அவனருகிலேயே அமர்ந்திருந்தாள். “வேணுமெண்டு நீங்க எதையும் செய்யேல்லப்பா. மனதைப் போட்டுக் குழப்பாதீங்கோ. இதெல்லாம் நடக்கவேணும் எண்டு இருந்திருக்குப் போல.” இதமான வார்த்தைகளைக் கொண்டு அவனுக்கு ஆறுதல் சொன்னவள், அவன் கரத்தை தன் கரங்களினுள் பொத்தி வைத்திருந்தாள்.

நிர்மலனுக்கு மனைவியோடு கதைத்தது பெரும் ஆறுதலாக இருந்தது. தெளிவாகச் சிந்திக்கும் அளவுக்கு வந்திருந்தான். அந்த நிலைக்கு அவன் மனைவி அவனைக் கொண்டு வந்திருந்தாள்.

“அவளோட ஒருக்கா கதைக்கவா?” சட்டென்று கேட்டான்.

மெல்லிய அதிர்வு உஷாவுக்குள். கணவனின் மீது சந்தேகமல்ல. அவனைப்பற்றியும் அவனது மனதைப்பற்றியும் அவளுக்குத் தெரியும். அவளது மனதுதான் பெண் மனதாய் ‘முன்னாள் காதலி’ என்கிற நினைவில் ஒருமுறை தடுமாறியது. ஆனாலும், மறைத்துக்கொண்டாள்.

“கதைங்கப்பா.”

ஒருகணமேயானாலும் அவள் விழிகளில் வந்துபோன அதிர்வை அவன் கண்டுகொண்டான். அவளின் நாடியைப் பற்றித் தன் முகம் பார்க்கவைத்தான்.

“என்னில நம்பிக்கை இல்லையா?” அவள் விழிகளையே பார்த்துக் கேட்டான்.

“இல்லையப்பா. அப்பிடி இல்ல. ஆனா ஒரு நிமிசம் என்ர மனம் தடுமாறிட்டுது. உங்கள நம்பாம இல்ல." கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தாலும் மனதிலிருந்து சொன்னாள்.

அவளை மார்போடு அணைத்துக்கொண்டான் அவன். சற்று நேரம் அவள் தலையை வருடிக்கொடுத்தான். உஷா தேறிக்கொண்டாள். தானே நிமிர்ந்து முகத்தைத் துடைத்துக்கொண்டு அவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தாள்.

“நீங்க கதைங்கப்பா.” என்றாள் கலக்கமற்று.

“நல்லா யோசிச்சு சொல்லு! அவளுக்கு ஒரு வழி செய்யாம இனி என்னால நிம்மதியா இருக்கேலாது. அடிக்கடி அவளோட கதைக்கவேண்டி வரும். இலங்கைக்குப் போகவேண்டி வந்தாலும் வரும்.”

“நீங்க செய்ற எல்லாத்துக்கும் நானும் துணையா இருப்பன்!” ஒற்றை வரியில் அவன் மனதின் பாரத்தை ஒன்றுமேயில்லாமல் ஆக்கினாள்.

பிள்ளைகளைக் கவனிக்க உஷா நகர்ந்துவிட, தாயிடமிருந்து அவளின் இலக்கங்களைப் பெற்று அவளுக்கு அழைத்துவிட்டுக் காத்திருந்தவனின் இதயம், எல்லாவற்றையும் மீறித் தடதடத்தது. எப்படி அவளை எதிர்கொள்ளப் போகிறான்? என்ன கதைப்பான்? என்ன கேட்பான்? அவர்களின் உரையாடல் எந்த உறவின் பெயரில் நடக்கும்?

அந்தப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது.

‘கதைப்பது நான்தான்’ என்று எப்படிச் சொல்வதென்றே தெரியாமல் நின்றான்.

ஹலோ நான் நிர்மலன்’ என்பானா? அல்லது, மொட்டையாக ‘நிர்மலன் கதைக்கிறேன்’ என்பானா? ஒருகாலத்தில் அவளின் அவனாக இருந்தவனால் இன்று முற்றிலும் அந்நியனாக நின்று கதைக்கமுடியவில்லை. அவளின் அவனாகவும் நிற்கமுடியாமல் கூசினான்.

ஆனால், அவள் கண்டுகொண்டாள்.

“நி..ர்..ம..ல..ன்” அன்றுபோலவே அவனது பெயரை ஒவ்வொரு எழுத்தாக மெல்ல உச்சரித்தாள்.

‘நான்தான் என்று எப்படி அவளுக்குத் தெரியும்? எந்த உள்ளுணர்வு உணர்த்தியது? நீயில்லாது போனால் இறந்துவிடுவேன் என்றவள், உயிரோடு இருந்துகொண்டு இன்னொருத்தியிடம் அவனைக் கொடுத்தாளே, அந்த நேசம் கண்டு பிடித்ததோ?’

அழவேண்டும் போலிருந்தது. ஏனடி என்னை இப்படி யாரோவாகத் தள்ளி நிற்கவைத்தாய் என்று கேட்கவேண்டும் போலிருந்தது.

திருமணம் குழந்தைகள் மனைவி எல்லாவற்றையும் தாண்டி அவன் மனம் ஒருகணம் உறைந்தது. இதயத்தில் ஒரு வலி! இறக்கமுடியாத பாரம். அவளிடம் கூடக் கொட்டிவிட முடியாத எண்ணங்கள்! என்ன செய்யப் போகிறான்?

இவ்வளவு எண்ணங்களும் மனதில் பொங்கி எழுந்தபோதும், “ம்ம்..” என்று மட்டும் சொன்னான்.

“சுகமா இருக்கிறீங்களா?” மெலிந்து நலிந்த குரலில் ஆவலைத் தேக்கிக் கேட்டாள்.

இன்னுமின்னும் என் நலத்தை மட்டுமே நாடி என்னடி காணப்போகிறாய்?

“ம்ம்..” என்றான்.

‘இவ்வளவு நாளும் உன்னைப்பற்றி யோசிக்காம சுகமாத்தான் இருந்தனான். சந்தோசமாத்தான் வாழ்ந்தனான்.’ துக்கப் பந்தொன்று அவன் தொண்டையை அடைத்துக்கொண்டிருந்தது.

“உஷா, ஆரன், மானசி? எல்லாரும் சுகமா?”

“ம்ம்.”

“ரெண்டுபேரும் அருமையான பிள்ளைகள் நிர்மலன். கவனமா பாருங்கோ. நல்லா படிக்க வைங்கோ. ஆரன் அப்பிடியே சின்னதில உங்களைப் பாத்த மாதிரியே இருக்கிறார். கண்ணுக்கயே நிக்கிறார். ‘நீங்க இன்னும் நடக்கப் பழக இல்லையா’ எண்டு அண்டைக்கு என்னைப் பாத்துக் கேக்கிறார் நிர்மலன்.” அவளே சொல்லிவிட்டு அதை ரசித்து அவளே மென்னகை சிந்தினாள்.

அவளிடம் எதையும் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதையும் மறந்து அழுதுவிடுவான் போலிருந்தது. ‘கண்மணி..’ அவன் உயிர் அழுதது.

பெரியவளாகும் வரைக்கும் அவள் இப்படித்தான். சலசல நீரோடைதான். எந்த நேரமும் எதையாவது சொல்லிச் சிரித்துக்கொண்டிருப்பாள். அந்த நாட்கள் அப்படியே உறைந்திருக்கக் கூடாதா?

“உஷா அருமையான பிள்ளை. கதச்சது கொஞ்ச நேரம்தான். அதுக்குள்ள அவ்வளவு அன்பா கதச்சவா.”

இவளால் இப்படியெல்லாம் கதைக்க எப்படி முடிகிறது? அவனால் வாயைத் திறக்கக் கூட முடியவில்லையே.

அவளுடைய அவனை இன்னொருத்திக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, அவளைப்பற்றியும் அவளது குழந்தைகளைப் பற்றியும் இவளால் எப்படி இவ்வளவு இலகுவாகப் பேசமுடிகிறது. அவனுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.

“நிர்மலன்.. கதைங்கோவன். ஏன் பேசாமலேயே இருக்கிறீங்கள்?” பெரும் ஏக்கத்துடன் கேட்டாள்.

அவளுக்கு அவன்மீது எந்தக் கோபங்களும் இல்லை. குற்றச் சாட்டுக்களும் இல்லை. மாறாக அவன் கதைத்து அவள் கேட்டு நெஞ்சம் நிறைய ஆசைகொண்டாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
வாடிப்போயிருக்கும் செடி நீருக்காகத் தாகத்துடன் காத்திருப்பதில்லையா? அப்படி இருந்தது அவள் கேட்டவிதம்.

“உனக்குக் கவலையாவே இல்லையா?” கேட்டே விட்டான் நிர்மலன். அவனால் முடியவில்லை. நடிக்க முடியவில்லை. ஒன்றுமே நடக்காதது போல் பேச முடியவில்லை.

அவளை வெறுத்த நாட்களில் கூட மறக்கமுடியாமல் கிடந்த நினைவுகள். இன்று.. நெஞ்சை ரணப்படுத்திக் காயப்படுத்தி இரத்தத்தைக் கசியவைத்தது.

அவ்வளவு நேரமாக மெல்லிசைபோலப் பேசிக்கொண்டிருந்தவள் இப்போது அமைதியானாள்.

ஆனால் அவன் வாயைத் திறந்தான்.

“பதில் சொல்லு கண்மணி!”

அந்தக் ‘கண்மணி’யில் அவள் உடைந்தாள். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவன் வாயிலிருந்து அவள் பெயர் உதிர்கிறது. அவனின் கண்ணின் மணியாக இருந்தவள் இன்றைக்கு வெறும் கண்மணி. யாருமே அற்ற அநாதை கண்மணி. அவனைக்கூட தாரை வார்த்துக்கு கொடுத்துவிட்ட பாவப்பட்ட கண்மணி. அவளது கண்மணிகளிலிருந்து நீர்மணிகள் உருண்டு மார்பை நனைத்தன. கடிதங்கள் எழுதும் நாட்களில் எல்லாம் காதல் சொட்டும் கண்களை வரைந்து அருகில் மணி என்றுதான் எழுதுவான். அவனது ‘கண்ணான கண்மணியாம்’. இன்று? அவனில்லாத அநாதை கண்மணி!

இன்றும் அவளிடம் அந்தக் கடிதங்கள் இருக்கிறது. அத்தனை இடர்பாடுகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியிலும் குடும்பம் முதற்கொண்டு சொந்தபந்தம் வரைக்கும் எல்லாவற்றையும் தொலைத்தாலும் அவன் வரைந்த மடல்களை மட்டும் தொலைக்கவேயில்லை. அவைதான் அவளின் ஆறுதல், ஆசுவாசம் எல்லாமே!

“நீங்க சந்தோசமா வாழவேணும் எண்டுதான் ஆசைப்பட்டனான். இவ்வளவு நாளும் எப்பிடி இருக்கிறீங்கள் எண்டு தெரியாம இருந்தது. இப்ப நீங்க மனுசி பிள்ளைகள் எண்டு சந்தோசமா வாழுறதைப் பாத்த பிறகு நிம்மதியா இருக்கிறன். எதுக்குக் கவலை?” கரகரத்த குரலில் மெல்ல வினவினாள்.

என்ன இவள்? அவனை இன்னுமின்னும் மோசமானவனாக மாற்றிக்கொண்டு இருக்கிறாளே. ‘கொஞ்சம் திட்டனடி! எப்படியடா நான் ஒரு வார்த்தை சொன்னதும் அப்படியே என்னைக் கைகழுவி விட்டுட்டுப் போனாய் எண்டு கேளடி.’ அவன் உள்ளம் அழுதது. என்ன செய்தும் தீர்க்க முடியாத பாவத்தை இழைத்துவிட்டானே!

“நீ சந்தோசமா இருக்கிறியா கண்மணி?”

அவள் காதினுள் ஆழ்ந்து ஒலித்தது அவன் குரல்.

சந்தோசமாக இருக்கிறாளா? அவள் அவளையே கேட்டுக்கொண்டாள். இதழலோரம் விரக்தியான புன்னகை ஒன்று தவழ்ந்தது. ஏன் இருக்கிறாள், யாருக்காக இருக்கிறாள் என்றே தெரியாமல் இருப்பவள் எப்படிச் சந்தோசமாக இருக்க முடியும். அரும்பிய கண்ணீரை கண்களைச் சிமிட்டி சரி செய்தாள்.

கண்ணயரும் ஒவ்வொரு இரவிலும் அவள் கேட்பது ‘காலையில் விழிக்கக் கூடாது.’ என்றுதான். ஆனால் என்ன தினமும் விழித்துவிடுகிறாள்.
கடவுளால் கூட இரக்கம் காட்டப்படாத அவள் எப்படி இருப்பாள்?

“எனக்கு என்ன குறை? நான் சந்தோசமாத்தான்..” எனும்போதே, “பொய் சொல்லாத கண்மணி!” என்று பொறுக்கமுடியாமல் சீறிவிட்டான் நிர்மலன்.

அந்த வார்த்தைகள் அவனை எப்படிக் கொல்லும் என்று தெரியாதா?

“ஏன் கண்மணி? ஏன் அப்பிடிச் சொன்னனீ? காலத்துக்கும் எதையும் மாத்த முடியாத நிலைல என்ன நிக்க வச்சிட்டியே? ஏன் கண்மணி? இந்த நிலைல நீ இருக்கிறது தெரிஞ்சும் கையைக் கட்டிக்கொண்டு நிக்க வச்சிட்டியே.. ஏன் கண்மணி?” தாங்கமுடியாமல் குமுறினான். “இனி என்னால என்னடி செய்யேலும்? உன்ன பாத்து சாகிற வரைக்கும் அழப்போறன். அதுதான் உன்ர விருப்பமா? அதுக்குத்தான் ஆசைப்பட்டியா?”

இதென்ன? அவன் ஏன் இத்தனை துயர் கொள்கிறான்? காரணமே இல்லாமல். மனம் பரிதவித்துப் போக அவசரமாகச் சொன்னாள் அவள்.

“நீங்க இப்படிக் கலங்க அவசியமே இல்ல நிர்மலன். அந்த நேரம் எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. அடிபாட்டுல என்ர குடும்பம் அழிஞ்சு, நான் படுகாயம் பட்டு, அண்ணாவும் வீரச்சாவு எண்டு தெரிஞ்சபிறகு அநாதை மாதிரி வீதில கிடந்த நேரம் எல்லாமே மரத்துப் போச்சு. வலி, அழுகை, கதறல், காயம், ரெத்தம் எண்டு காதில கேட்டதும் கண்ணால பாத்ததும் மரண ஓலத்தை மட்டும் தான். ஒற்றைத் துணி கூட இல்லாத வெறும் உடம்பு, பாதி உடம்பு, காயப்பட்ட உடம்பு எண்டு பாத்துப் பாத்து உணர்வு எல்லாம் செத்துப் போச்சு நிர்மலன். இதெல்லாம் மெல்ல மெல்ல ஆறி வந்த பிறகும் விரக்தியின் உச்சத்தில தான் இருந்தனான். வாழ்க்கையில பற்று இல்ல. வாழ விருப்பம் இல்ல. ஒரு காலும் இல்ல. உயிர் வாழவே பிடிக்கேல்ல. எனக்கு எப்ப சாவு வரும் எண்டுதான் நினைச்சு இருக்கிறன். உங்கள்ள கூட அந்த நேரம் காதல் இருந்ததா எண்டு எனக்குத் தெரியாது. பிறகு எப்பிடி உங்களுக்கு நான் ஒரு நல்ல துணையா இருப்பன் சொல்லுங்கோ? உங்களை எப்படிச் சந்தோசமா வச்சிருப்பன் சொல்லுங்கோ? நீங்க வாழ வேண்டாமா? அண்டைக்கு நான் பட்டுப்போன மரம். துளிர்க்காது எண்டு நினைச்சன். ஆனா நீங்க.. என்ர நிர்மலன் வாழுற காலம் வரைக்கும் சந்தோசமா வாழவேணும். அதுதான் அப்படிச் சொன்னனான்.” கரகரத்த குரல் என்றாலும் மென்மையாகச் சொன்னவளின் வார்த்தைகளில் அவன் விழிகளில் இருந்து இரு கண்ணீர் துளிகள் கழன்று விழுந்தன.

“அண்டைக்கு நான் யோசிக்காம கதைக்க இல்ல நிர்மலன். எனக்குக் கல்யாணம் நடந்திட்டுது எண்டு சொல்லேக்கையே உங்களோட நான் சேரக் கூடாது எண்டு முடிவு செய்துதான் சொன்னனான். உண்மைய சொல்லி இருந்தா கடைசிவரைக்கும் என்னைக் கைவிட்டிருக்க மாட்டீங்க எண்டும் எனக்குத் தெரியும். நாங்க சேராம இருந்ததுக்கு நான் மட்டும் தான் காரணம். உங்களுக்கு இந்தக் குற்ற உணர்ச்சி தேவையே இல்ல. நீங்க கண்டதையும் நினச்சு உங்களை வருத்தாதீங்கோ.”

இப்போது கூட அவனைத் தேற்றும் அவளை என்ன செய்ய?

“நான் உன்னை வெறுத்திடுவன் எண்டு கூட நீ யோசிக்க இல்லையா?”

“உயிரா நேசிச்ச மனம் ஏமாற்றத்தை தாங்காம பொங்கும் தானே.” அதற்கும் அவளிடம் பத்திலிருந்தது.

துக்கத்தில் தொண்டை அடைத்தது அவனுக்கு. “தெரிஞ்சும் என்னை அந்த நிலைல நிப்பாட்டிப்போட்டாய்!” குற்றம் சாட்டினான் அவன்.

அதனால் பாதிப்படையவில்லை அவள்.

“பரவாயில்ல நிர்மலன். இண்டைக்கு நீங்க வாழுற இந்த வாழ்க்கையைப் பார்க்கேக்க நான் செய்தது சரி எண்டுதான் இப்பவும் என்ர மனம் சொல்லுது. அதால எனக்குக் கவலையே இல்ல.” மனதாறச் சொன்னாள்.

“உன்னைப்பற்றி யோசிக்கவே மாட்டியா நீ?” தொண்டை அடைக்கக் கேட்டான்.

“என்னைப்பற்றித் தனியா யோசிக்க ஒண்டும் இல்ல. எனக்கு நீங்க சந்தோசமா இருக்கவேணும். எந்தக் கவலையும் இல்லாம நிம்மதியா குழந்தை குட்டிகளோட உங்கட மனுசியோட நிறைவா வாழவேணும்.”

‘போடி! நீயும் உன்ர காதலும்!’ இயலாமை கோபமாகப் பொங்கியது.

தன் மனதை உணர்த்திய நிறைவோடு இணைப்பை அவள் துண்டித்துவிட்டாள். அவளின் நினைவுகளைத் துண்டிக்கமுடியாமல் அந்த உரையாடலிலேயே சுழன்றுகொண்டிருந்தது நிர்மலனின் மனம்.


உன்னோடு நான் கண்ட
கற்பனைகள் அத்தனையும்
என் துணையோடு
நிறைவேறிக் கொண்டிருக்க,
என் கண்மணி
துடுப்பற்ற படகாய்
துணையற்று நீ நிற்கக்கண்டு
துடிதுடித்துப் போகிறதடி
உனைச் சுமந்த நெஞ்சமது!
நான் வாழவே நீ வழி தந்தாய்.
நீ வாழவே என் கண்மணி
என்ன செய்யப் போகிறேன்?
 
Top Bottom