• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 16

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 16


என் அன்புக் கண்மணிக்கு இந்த அப்பம்மாவின் அன்பும் ஆசியும் என்று ஆரம்பித்திருந்த அந்த வரிகளிலேயே இளவஞ்சிக்குக் கண்களில் கண்ணீர் மணிகள் திரள ஆரம்பித்தன.

அவள் குழந்தையாக மாறுமிடம் அந்தத் தையல் இல்லையா!

என் இறப்பின் இறுதி வரையிலும் அந்த நல்லூரானிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். என்றைக்கும் இதை வாசிக்கும் நிலை உனக்கு வந்துவிடவே கூடாது என்பதுதான். நீ என் பேத்தி. குணாளனின் மகள். தையல்நாயகியின் தைரியமும் நிமிர்வும் கொண்ட நிர்வாகி. அப்படித்தான் என்றும் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை!


ஆனால், இதை வாசிக்கும் நிலை என்றாவது ஒரு நாள் உனக்கு வந்தால் நீ கலங்கக் கூடாது கண்ணம்மா!

இரத்தக்கறையில் மிதந்தபடி நடு வீதியில் உயிரற்றுக் கிடந்த மகளை என் இரண்டு கைகளாலும் தூக்கியிருக்கிறேன். என் வாழ் நாளுக்கு மட்டுமில்லை, உன் வாழ் நாளுக்கும் அந்தத் துன்பம் போதும்.

என் பேத்தியின் கண்ணீர் துடைக்க நானில்லா நாள்களில் நீ கலங்கிவிடக் கூடாது என்று நினைத்தேன். அதனால்தான் என்றும் உனக்கு இது தெரிய வந்துவிடக் கூடாது என்று உன் அப்பாவிடம் சொல்லியிருந்தேன்.

ஆமாம், உன் அப்பா குணாளன்தான்! என்றைக்கும் அவன் மட்டும்தான் உன் அப்பா! மணமாக முதலே உன்னை மகளாக வரித்தவன். ஒருவன் தந்தையாக இருக்க இதைவிட வேறென்ன தகுதி வேண்டும் சொல்?

ஆனாலும் என் மனத்தில் ஒரு அந்தரிப்பு. நான் இல்லா நாள்களில் என் பேத்தி எதையெல்லாம் சந்திக்க நேரிடுமோ என்கிற பயம். அதனால் மட்டுமே இதை எழுதுகிறேன்.

உன்னால் சமாளிக்கவே முடியாது என்கிற நிலை வந்தால் மட்டுமே என் பேத்தியிடம் இதை நீ கொடுக்க வேண்டும் என்று உன் அப்பாவிடம் சொல்லியிருக்கிறேன் என்கிற பெரிய அறிமுகத்தின் கீழே, இளவஞ்சியின் கதையை எழுதியிருந்தார் தையல்நாயகி.

தன் இளமைக்காலத்தில் கனவுகளைச் சுமந்து சுற்றிய வாசவி,
டைப்பிங் கிளாஸ் சென்று வருகையில்தான் பாலகுமாரனுக்கு அறிமுகமானார்.

துருதுருவென்று இருக்கும் சூட்டிகையான பெண்ணான அவரை, பாலகுமாரனுக்கு மிக மிகப் பிடித்தது. விடாமல் பின்னாலேயே சுற்றினார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்தார்கள். ஒரு நாள் கோயிலில் வைத்து நெற்றியில் திலகமிட்டு, பூவையும் வைத்துவிட்டவரைக் கணவராகவே வரித்துக்கொண்டிருந்தார் வாசவி.

அப்படி மனத்தளவில் கணவனாக ஏற்ற மனிதருக்குத் தன்னிடம் இல்லை என்று சொல்ல எதுவுமில்லை என்றெண்ணி நம்பிப் பழகினார். அதன் எதிரொலி வயிற்றில் குழந்தை.

அவர்களுக்கு வேண்டுமானால் யாருமில்லா நேரத்தில் கோயிலில் வைத்து அவர் தீட்டிவிட்ட குங்குமம் போதுமான இருக்கலாம். சமூகத்துக்கு அது போதாதே! வாசவி திருமணத்திற்கு கேட்டபோதுதான் பிரச்சனையே ஆரம்பமாயிற்று.

தன் தாய்மாமனைக் குறித்து மிகவுமே கலங்கினார் பாலகுமாரன். வாசவியைப் பொறுக்கச் சொன்னார். அப்படி வாசவியே பொறுக்கத் தயாராக இல்லை என்கையில் அவர் வயிற்றில் இருக்கிற குழந்தை பொறுக்குமா?

மிகவுமே கண்டிப்பான அன்னையிடம் எதையும் சொல்லப் பயந்து பாலகுமாரனை இன்னுமின்னும் நெருக்க ஆரம்பித்தார் வாசவி. அதனால் பாலகுமாரன் ஓடி ஒளியத் தொடங்கினார். கோபமடைந்த வாசவி அவரை அவர் வீட்டுக்கே சென்று பார்த்தபோதுதான் விடயம் சக்திவேல் பார்வைக்கு வந்தது.

கொதித்துப்போனார் மனிதர்.

அவரின் இளம் வயதில் பாலகுமாரனின் அன்னை சாவித்திரியின் நகைகளை வைத்துத்தான் தொழில் ஆரம்பித்தார். இருவரும் சரி சமமான பங்குதாரர்கள். பாலகுமாரனுக்கு வெளியில் பெண் பார்த்துக் கட்டி வைத்தால் தொழிலில் சரி பங்கு அவருக்குக் கொடுக்க வேண்டி வரும். அதிகாரம் பிரிக்கப்படும். அவர் மட்டுமே ராஜாவாகக் கோலோச்ச முடியாது.

இங்கேயானால் அவர் காட்டுவதுதான் லாபம். அவர் கொடுப்பதுதான் அவர்களின் பங்கு. இதுவே வெளியிலிருந்து வருகிற பெண் எப்படி இருப்பாள், அவள் வீட்டினர் என்னவெல்லாம் செய்வார்கள் என்று அவரால் சொல்ல முடியாது.

இப்படி இருக்கையில்தான் வாசவி பற்றித் தெரிய வந்தது. யாரோ ஒரு பெண்வீட்டை எண்ணியே பலதையும் யோசித்தவர் அவர். அதுவே தொழிலில் முழுமுதல் எதிரியாக உருவெடுத்துக்கொண்டிருக்கும் தையல்நாயகியின் மகள் என்றால் விடுவாரா?

அவர்களின் தொடர்பை வேரோடு அறுத்தெறிய நினைத்தார்.

இதில் ஜானகிக்கு வேறு பாலகுமாரனின் மீது காதல். அவரும் தடுக்கவில்லை. இன்னுமே சொல்லப்போனால் அவன்தான் உன் வருங்காலக் கணவன் என்று சொல்லி, அந்த ஆசையை ஆழமாகப் பதித்துவிட்டதே அவர்தான்.

வாசவி மீது ஆத்திரம் கொண்டவர் வீடு தேடி வந்தவளைத் தகாத வார்த்தைகள் பேசி விரட்டி அடித்தார். திருமணத்திற்கு முதலே வயிற்றில் வாங்கியவள் எப்படியானவளாக இருப்பாள் என்று சாவித்திரியின் நெஞ்சில் நஞ்சை விதைத்தார். என்னைத் தாண்டிப் போனாயானால் தொழிலில் நயா பைசா தரமாட்டேன் என்று பாலகுமாரனை மிரட்டி அடக்கிவைத்தார்.

பாலகுமாரனுக்குச் சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தார். தொழிலில் சரி பாதிப் பங்கு இவர்களதாக இருந்தாலுமே மாமனின் தயவில் மாமனை அண்டி வாழ்ந்து பழகியவர். இயல்பிலேயே அமைதியான சுபாவமும், அன்னைக்கு அடங்கிய மகனாவும் இருந்த பாலகுமாரனும் அன்னை, மாமனின் பேச்சுக்கு அடங்கிப்போனார். இன்னுமே வாசவியின் பார்வையில் படாமல் ஓடி ஒளிய ஆரம்பித்தார்.

வாசவியால் அதற்குமேல் அந்த நாள்களில் பாலகுமாரனைச் சந்தித்துப் பேச முடியவில்லை. அதில் வேறு வழியற்று அன்னையிடம் விடயத்தைப் பகிர்ந்தார்.

அனைத்தையும் அறிந்த தையல்நாயகி வாசவியைப் போட்டு அடித்தார். சக்திவேலிடம் நியாயம் கேட்டுக்கொண்டு போனார்.

அன்னை, மகள் இருவர் மேலும் இருந்த வன்மம் மொத்தத்தையும் சக்திவேல் தையல்நாயகியிடம் கொட்டினார். தொழிலில் போட்டிபோட்டு வெல்ல முடியாமல் மகளைக் கொண்டு பிழைக்கப் பார்க்கிறாயா என்று கேட்டார்.

மனத்தளவில் மடிந்தே போனார் தையல்நாயகி. ஆனாலும் மகள் வாழ்க்கையை எண்ணிப் பொறுமை காத்தார். உங்கள் சொத்தில் ஒரு ரூபாய் வேண்டாம், உங்கள் மருமகனையும் சேர்த்து நான் பார்த்துக்கொள்கிறேன், மகள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உரிய மதிப்பை வாங்கிக் கொடுங்கள் என்று கெஞ்சிப் பார்த்தார்.

எதற்கும் அசையவில்லை சக்திவேலர். இன்னுமே சொல்லப்போனால் தொழிலில் தன்னைச் சீண்டும் அந்தப் பெண், தன்னிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதைக் கண்டு வக்கிரமாக ரசித்தார். அதனால் அவர் பேச்சில் ஆணவமும் அகங்காரமும் அளவுக்கதிகமாகவே தெறித்தன.

ஆனாலும் அவரையும் தாண்டிப் பாலகுமாரனோடு பேச முயன்றார் தையல்நாயகி. மகளின் இந்த நிலைக்கு நீ என்ன நியாயம் சொல்லப்போகிறாய் என்று கேட்டார்.

அவருக்குப் பதில் சொல்லாமல், அந்த முதுகெலும்பு அற்ற மனிதர், மாமனின் பின்னே பதுங்கிக்கொண்டதைக் கண்டு தையல்நாயகிக்கு வெறுத்தே போயிற்று.

இப்படியான ஒரு கோழையை தன் மகள் நேசித்தது மாத்திரமல்லாமல் தன்னையே கொடுத்திருக்கிறாளே என்றெண்ணி வேதனை கொண்டார்.

அதையும் விட மாமனின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டு, வாசவியோடு பழகியது உண்மை, ஆனால் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நான்தான் தந்தை என்பதற்கு என்ன சாட்சி என்று கேட்ட பாலகுமாரனை அடிக்கவே போய்விட்டார் தையல்நாயகி.

இந்தளவில் கேவலமான ஒருவனோடு வாழப்போகும் வாழ்க்கை என்றுமே தன் மகளுக்குச் சுகிக்காது என்று புரிந்து போயிற்று. கூடவே, இப்படியான உறவுகளுக்கு மத்தியில் என்ன வாழ்க்கையை அவள் வாழ்ந்துவிடுவாள் என்றும் தோன்றிவிட, மண்ணள்ளித் திட்டிவிட்டு வந்துவிட்டார்.

ஆனால், மனத்தில் மட்டும் அவர்கள் முன்னாலேயே என் மகளை வாழவைத்துக் காட்டுகிறேன் என்று ஒரு ஓர்மம். முதலில் குழந்தை பிறக்கட்டும் என்று எண்ணிக்கொண்டார்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
பாலகுமாரன் குழந்தையைக் குறித்து அப்படிச் சொன்னதைக் கேட்ட வாசவியும் மொத்தமாக நொருங்கிப்போனார். சட்டப்படி போவோமா என்று கேட்ட அன்னையிடம் இன்னும் அவமானப்பட்டுச் சந்தி சிரிக்கத் தெம்பில்லை என்றுவிட்டார்.

தையல்நாயகி தன் வாழ் நாளில் இடிந்து அமர்ந்தது அந்த நாள்களில்தான். அவர்கள் சொன்ன வார்த்தைகளினால் நெஞ்சில் தீப்பற்றி எரிந்தாலும், சதா கண்ணீரிலேயே கரையும் மகளையும் கவனித்துக்கொண்டு, தொழிலையும் பார்த்துக்கொண்டு, இன்னுமின்னும் எகத்தாளத்தோடும் எக்களிப்போடும் போட்டி போட்ட சக்திவேலரையும் சமாளித்துக்கொண்டு என்று அத்தனையையும் தனியொருத்தியாகவே தாங்கிக்கொண்டார்.

இத்தனைக்கு மத்தியிலும் புத்திசாலித்தனமாக யோசித்து, ஊருக்குள் செய்தி கசிய முதல், வாசவியின் கழுத்தில் தாலிச்செயின் போல் ஒன்றைப் போட்டு, திருகோணமலையில் இருக்கும் தங்கை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருந்தார். கேட்கிறவர்களிடம் எல்லாம் கணவன் தொழிலுக்காகச் சிங்கப்பூர் சென்றிருக்கிறான் என்று சொல் என்றும் சொல்லிக்கொடுத்திருந்தார்.

குழந்தை பிறக்கட்டும், அதன் பிறகு அவள் வாழ்க்கைக்கு ஏதாவது செய்யலாம் என்று தனக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்.

ஆனால், சக்திவேலர் மீதிருக்கும் கோபம் அத்தனையையும் தொழிலில் வெறியோடு காட்டினார். அவரால் சக்திவேலருக்குத் திருப்பி அடிக்க முடிந்த ஒரே இடம் அதுவாகத்தான் இருந்தது.

சக்திவேலரும் அதன் பிறகு தாமதிக்கவில்லை. அவசரம் அவசரமாக ஜானகிக்கும் பாலகுமாரனுக்கும் திருமணம் முடித்துவைத்தார்.

அதையறிந்த வாசவி மொத்தமாய் உடைந்துபோனார். தன்னை உயிராக நேசித்து, தன்னோடு உறவாடிய மனிதரால் இன்னொரு பெண்ணை நெருங்க முடிகிறதா என்ன என்று எண்ணியெண்ணி அழுதார்.

நாளடைவில் இளவஞ்சி பிறந்தாள். அச்சு அசல் தையல்நாயகியைப் போலவே இருந்தாள். ஆனால், இடுப்புக்குக் கீழே, பின் பக்கத்தில் இருந்த பெரிய கரிய மச்சம், அவள் யார் பிள்ளை என்று அடித்துச் சொல்லிற்று.

அதைப் பார்க்கும் பொழுதுகளில் எல்லாம் அழுதே தீர்த்தார் வாசவி. ஒரு மாதம் கடந்த நிலையில் யாரிடமும் சொல்லாமல் மகளையும் தூக்கிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தார்.

இவள் உன் மகள்தான். நீ சொன்னதுபோல் நான் ஒழுக்கம் தவறியவள் இல்லை என்று நிரூபித்துவிடும் வேகம். அவரின் கெட்ட காலமா, இல்லை பாலகுமாரனுக்கு அந்தக் கடவுள் இன்னுமே துணைபோக நினைத்தாரா தெரியாது, அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்த பாலகுமாரன், வீதியில் வைத்தே வாசவியைக் கண்டுவிட்டார்.

கண்டவர் நடுங்கியே போனார். சக்திவேலரைப் போல் பத்து மடங்கு ஆணவமும் அகங்காரமும் கொண்ட பெண் ஜானகி. அவருக்கு இது தெரியவந்தால் தன் வாழ்க்கை மொத்தமாக நரகமாகிவிடும் என்கிற பயத்தில் தன் மனிதத் தன்மை மொத்தத்தையும் இழந்துவிட்ட பாலகுமாரன், தன்னைத் தேடி வந்த வாசவியைத் தகாத வார்த்தைகளால் விளாசினார்.

அதுவும் மகளின் பின் பக்கத்தில் இருந்த மச்சத்தை வாசவி காட்டியபோது, அவர் கழுத்தைப் பற்றி நெரித்த பாலகுமாரன், “இந்தப் பிள்ளை வேணுமெண்டா எனக்குப் பிறந்ததா இருக்கலாம். ஆனா நீ என்னோட மட்டும்தான் அப்பிடியெல்லாம் இருந்தாய் எண்டுறதுக்கு என்னடி சாட்சி?” என்று கேட்டுவிட, சுவாசிக்க கூட முடியாமல் அப்படியே நின்றுவிட்டார் வாசவி.

மார்பு துடித்தது. ஆங்காரம் எழுந்தது. கண்மண் தெரியாத ஆத்திரம் கிளம்பிற்று. அழுகை வெடித்தது. அத்தனை உணர்வுகளையும் காட்ட முடியாத பேதையாகச் சிலையாகிப்போனார்.

வாழும் ஆசை போயிற்று. தன்னைத் தானே தண்டித்துக்கொள்ளும் ஆத்திரம் உண்டாயிற்று. அதனால் மட்டுமே தன் மனத்தின் கொதிப்பும் கொந்தளிப்பும் அடங்கும் என்று தெரிந்துவிட,

‘என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நீங்கள் சொன்னதையும் கேளாமல் நியாயம் கேட்டுக்கொண்டு போய்த் தோற்றுவிட்டேன் அம்மா.


எனக்கான நியாயம் கிடைக்காமல் போனதைக் கூட என் தவறுக்கான தண்டனையாக எண்ணிப் பொறுத்துக்கொள்ள முடிந்த என்னால், என் பிள்ளைக்கான நியாயம் கிடைக்காமல் போவதைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

ஆனால், அவளுக்கான நியாயத்தை இன்னும் எப்படி வாங்கிக்கொடுக்க என்று தெரியவில்லை. போராட ஆரம்பித்தால் என் மானம்தான் இன்னுமே சந்தி சிரிக்கும். அதனால் எனக்கு வாழ விருப்பமில்லை. காதலைக் கொட்டிய கண்கள் என்னை வெறுப்புடனும், என்னை அள்ளியணைத்த கைகள் என் கழுத்தைப் பற்றியதையும் கடந்து வாழும் தைரியம் எனக்கில்லை.

இவ்வளவு காலமும் நான் உங்களுக்குப் பாரமாக இருந்தேன். இனி என் மகளுமா? நல்ல மனிதனுக்கு மகளாகப் பிறக்காத பாவத்தை அவளும் அனுபவிக்கட்டும். அநாதை இல்லத்தின் வாசலில் அவளைப் போட்டுவிட்டேன். கடவுளின் கருணை இருந்தால் அவள் எப்படியாவது பிழைத்துக்கொள்ளட்டும்.’ என்று கடிதம் எழுதி, போஸ்ட்டில் அனுப்பிவிட்டு, சொன்னதுபோல் இளவஞ்சியை ஒரு அநாதை இல்லத்தின் வாசலில் போட்டுவிட்டு நடந்து வந்தவர், எதிரில் வந்த பேருந்தில் மோதுண்டு, தன் இறப்பைத் தானே தேடிக்கொண்டிருந்தார்.

என் மகளை இரத்த வெள்ளத்தில் உயிரற்றுப் பார்த்தது போதாது என்று என் வீட்டின் ராணியை அநாதை இல்லத்தில் கண்டெடுத்தேன்.


வாழ்க்கையில் நான் உடைந்த தருணங்கள் மிக மிகக் குறைவு கண்ணம்மா! அன்று என் வம்சம் நான் உயிருடன் இருக்கையிலேயே அநாதையாக இருந்ததைக் கண்டு இன்னொருமுறை மரித்துப் போனேன்.

எனக்குச் சவால்கள் பிடிக்கும். தடைகளைத் தாண்டுகிற ஒவ்வொரு பொழுதுகளிலும் பெருமையாக உணர்வேன். அதற்கென்று இன்னும் எதையெல்லாம்தான் தங்குவது. ஆனாலும் ஒரு பிடிவாதத்தோடு அதிலிருந்தும் மீண்டேன். உன்னையும் தைரியமானவளாக, திடமானவளாக வளர்த்திருக்கிறேன்.

என்றைக்கும் நீ உடையக் கூடாது. துணிந்து நில். எதிர்த்து நில். இந்தத் தையல்நாயகியும் அந்தத் தையல்நாயகியும் என்றைக்கும் உனக்காகத்தான் இருக்கிறோம்.

இப்படிக்கு என் கண்ணம்மாளின் அப்பம்மா என்று எழுதி மிக அழகாகக் கையொப்பமிட்டிருந்தார்.

அதில் கூட அவர் அம்மம்மா என்று தன்னைக் குறிப்பிடவேயில்லை.

அதற்குமேல் முடியாமல் நெஞ்சு வெடித்துவிடுமோ என்கிற பயத்தில் படார் என்று கையிலிருந்த கொப்பியை மூடிவிட்டாள் இளவஞ்சி.

கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. நெஞ்சினில் இரத்தம் வடிந்தது. ஆத்திரத்தில் நெஞ்சு கொதித்தது. ஆவேசத்தில் உடம்பெல்லாம் படபடத்தது. சக்திவேல், பாலகுமாரன் இருவர் கழுத்தையும் நெரித்துக் கொள்ளும் வெறி வந்தது.

அவள் குடும்பத்துக்கு இத்தனையையும் செய்துவிட்டு, ஒரு உயிர் போவதற்கே காரணமாக இருந்துவிட்டு, இன்னுமே அவள் முன்னால் ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் நிமிர்ந்து நிற்க எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.

அதைவிட அவள் அன்னையின் உயிரைப் பறித்தவர்களின் வீட்டுக்கே வாழப்போயிருக்கிறாள் அவள். வழிந்த கண்ணீரை ஆத்திரத்தோடு சுண்டி எறிந்தாள்!

இரத்தத்தில் உறைந்து கிடந்த உயிரற்ற மகளின் உடலைத் தூக்கும் நிலை ஒரு தாய்க்கு வந்தால் அவர் என்ன பாடு பட்டிருப்பார்? ஒரு பெண் உயிரைத் துறக்கிற அளவுக்குத் துணிந்திருக்கிறார் என்றால் அவர் எந்தளவில் நொந்துபோயிருப்பார்?

அதனால்தான் அவளின் அப்பம்மா சக்திவேலர் குடும்பத்தின் மீது அத்தனை வெறுப்பைச் சுமந்திருந்தாரா? அவள் மனத்திலும் தீராப் பகையையும் வெறுப்பையும் வளர்த்தாரா? இதனால்தான் உன் விரலை வைத்தே உன் கண்ணைக் குத்துகிறேன் என்று அவளைத் தையல்நாயகிக்குத் தலைவியாக்கினாரா?

இதெல்லாம் தெரியாமல் அந்த நயவஞ்சகக் கூட்டத்திடம் தையல்நாயகியைக் கொடுத்துவிட்டு நிற்கிறாள் அவள்.
அவளின் அப்பம்மாவின் ஆத்மா எத்தனை கொந்தளித்திருக்கும்? கடவுளே!

இல்லை! இனி விடமாட்டாள்! அவளுடையது இல்லை என்கிற வரையில்தான் அவர்களின் ஆட்டம். இனி அவளும் ஆடுவாள். முடிந்தால் சமாளித்துப் பார்க்கட்டும்!

மனம் வீறுகொள்ள ஆனந்திக்கு அழைத்துப் படபடவென்று உத்தரவுகளைப் பிறப்பித்தாள். கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளின் நெஞ்சினில் பெரு நெருப்பொன்று கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருந்தது.
 
Last edited:
Top Bottom