அவள் ஆரணி - 11

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 11

ஆரணியின் தொண்டையை ஆத்திரமா அழுகையா என்று பிரிக்கமுடியாத துக்கம் ஒன்று அடைத்துக்கொண்டிருந்தது. அன்றைக்கு எப்படி அவனுடைய பேச்சைக் காதில் விழுத்தாமல் இழுத்துக்கொண்டு போனாளோ அதே மாதிரி, வேறு வேலை தேடலாம் என்று அவள் சொன்னதைக் காதிலேயே விழுத்தாமல் இப்போது அவன் போயிருந்தான். முற்றத்தில் அவனுடைய வண்டியும் அவளைப்போலவே தனித்து நின்றது. அதற்கும் ஏதோ பழுது. ஸ்டார்ட் வர மறுத்தது.

இப்படியே இருந்தால் விசர் பிடித்துவிடும் என்பதில், வரும்போதே வாங்கி வந்த கோழி இறைச்சியை யூ டியூப் பார்த்துச் சமைத்தாள். வீட்டை ஒதுக்கி, வேலைகளை முடித்து, குளித்து, அவள் சாப்பிட்டு முடித்தபோது வீட்டுக்குள் நுழைந்த காரைக் கண்டு விழிகளை விரித்தாள். ஆனால், ‘ஆர் ஜே இண்டஸ்ட்ரீஸ்’ என்று இலட்சினை பொறிக்கப்பட்டு, டிரைவர் என்று அப்பட்டமாக அடித்துச் சொல்லும் பிரத்தியேக ஆடையில் இறங்கியவனைக் கண்டதும், நெஞ்சுக்குள் என்னவோ செய்தது.

பார்க்கும்போதே மதிக்கத் தோன்றும் உடையில், குளிரூட்டப்பட்ட அறையில், அவனைக் காண ஆசைப்பட்டது என்ன காணும் காட்சி என்ன? வேகமாக அறைக்குள் நுளைந்து, டெரெஸ்ஸில் சென்று அமர்ந்துகொண்டாள்.

காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தவனைக் கண்டதும் தன்னை மறந்து, “என்ன அண்ணா ஆளே மாறிப்போய் வாறீங்கள்?” என்றாள் கயலினி.

இத்தனை நாட்களாக முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிந்த தங்கை கதைப்பாள் என்பதை எதிர்பாராத நிகேதனின் நடை ஒருநொடி தேங்கிற்று. இருந்தும் நிற்காமல், “வேலைக்கேற்ற உடுப்பு.” என்றுவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

டெரசுக்கு வந்து, “எடியேய் மனுசி, வேலைக்குப் போய்ட்டு வாற மனுசனை இப்பிடியாடி வரவேற்கிறது.?” என்றபடி அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தான்.

ஆரணியால் அவனைப்போன்று இலகுவாகக் கேலி பேச முடியவில்லை. “உனக்குக் கவலையா இல்லையாடா?”

இல்லை என்று தலையசைத்து, பற்கள் தெரியப் புன்னகைத்தான் அவன்.

“பொய் சொல்லாத.” அவள் விழிகளில் தவிப்பு. தன்னால் தான் இந்த வேலைக்குப் போகிறானோ என்று மனது அந்தரித்தது.

“போடி விசரி!” என்றபடி அவளை அணைத்துக்கொண்டான் அவன். “உண்மைய சொல்லப்போனா, இங்க இருந்து போறவரைக்கும் மனதில பெரிய பாரமாத்தான் இருந்தது. ஆனா, அந்தக் கார்ல ஏறி இருந்ததும் அது இல்லாம போயிட்டுது. நானும் வேலைக்குப் போறன். உழைக்கப்போறன். என்ர ஆராவ சொந்தக் காசில நல்லா வச்சிருக்கப் போறன் எண்டுதான் பட்டது. இது போதாதுதான்! நல்ல வருமானம் வாற ஒரு வேலை வேணும்தான். ஆனா, இப்ப இந்த நிமிசம் நான் நிம்மதியா இருக்கிறன். சந்தோசமா இருக்கிறன். நீயும் அப்பிடித்தான் இருக்கவேணும். இது முடிவில்ல, ஆரம்பம் எண்டு நினை.” என்றான் அவள் முகம் பார்த்து.

அந்த நிலை நெஞ்சை அறுத்தாலும் தன்னைத் தேற்றிக்கொள்வதைத் தவிர அவளுக்கும் வேறு வழி இல்லை!

“இப்ப வீட்டுக்க வரேக்க கயல் கதைச்சவள். ஒரு வேலை எப்பிடி ஆட்களை மாத்துது எண்டு கவனி. எல்லாம் மாறும். இதுவும் மாறும்! அதால சும்மா கவலைப்படாம ஒரு தேத்தண்ணி கொண்டுவா!” என்று அவளை அனுப்பிவைத்தான் அவன்.

தேநீரைக் கொண்டுவந்து தந்தவளிடம், “வெளிக்கிடு, கடைக்குப் போயிட்டு வருவம்!” என்றான்.

“காசு?”

“சம்பளத்தை இண்டைக்கே தந்திட்டார் அங்கிள்.”

“ஓ..!” அவர்களின் நிலை உணர்ந்து நடந்திருக்கிறார். மனதுக்கு சற்றே ஆறுதலாக இருக்க, “சும்மா செலவு செய்றதை விட்டுட்டு, பைக்கத் திருத்த குடு நிக்ஸ். அதுதான் முக்கியம்!” என்று பொறுப்பாக எடுத்துச் சொன்னாள் அவள்.

“இப்ப பைக்குக்கு என்ன அவசரம் ஆரா? ‘சும்மா அலைய வேண்டாம். காரை நீயே வச்சிரு. என்னை ஏத்தி இறக்கினா போதும்’ எண்டுதான் அங்கிள் சொன்னவர். அதால, இப்ப எனக்கு பைக் தேவைப்படாது. இந்த மாதம் வீட்டுக்கும் உனக்கும் கொஞ்சம் தேவையானதுகள் வாங்குவம். அடுத்த மாதம் பைக்கை பாப்பம்!” என்றவன், குளித்துவிட்டு வந்து சாப்பிட்டு அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

“பரவாயில்ல மச்சி! வேலைக்குப்போன முதல் நாளே கட்டினவள கார்ல கூட்டிக்கொண்டு போற அளவுக்கு வளந்திட்டடா!” அவனைச் சீண்டியபடி ஏறிக்கொண்டவளும் மனச் சஞ்சலங்கள் அகன்று சந்தோசத்தில் இருந்தாள்.

காற்றே புகாதபடிக்கு மூடப்பட்டிருந்த வீட்டுக்குள் மெல்லிய ஒளிக்கீற்று ஒன்று படரத்தொடங்கிவிட்டதே! நிகேதன் சொன்னதுபோல, பிழைத்துவிடுவோம் என்கிற நம்பிக்கை வந்திருந்தது.

அவளுக்கு உள்ளாடைகளும், மாற்றுடையும், வீட்டுக்குத் தேவையான பொருட்களும் என்று பார்த்துப்பார்த்துக் கச்சிதமாக வாங்கிக்கொண்டவள் கொண்டுபோனதில் பாதியைக்கூடச் செலவுசெய்யவில்லை.

“இது என்னத்தையடி காணும்?” என்று கோபப்பட்டவனை, “இருக்கிற எல்லாத்தையும் செலவு செய்துபோட்டு அந்தரம் அவசரத்துக்கு என்ன செய்றது நிக்கி?” என்று கேட்டு அடக்கினாள்.

அரிசி, மா, சீனி, தேயிலை, அவ்வப்போது கொறிக்க பிஸ்கெட்டுகள் கொஞ்சம், பருப்பு வகைகள் என்று நிறையவே இருந்த பைகளை நான்கு ஐந்து முறைக்குக் கணவனும் மனைவியுமாகச் சமையலறைக்குள் கொண்டுசென்று வைக்கும் வரையில் விறாந்தையில் அமர்ந்திருந்த அமராவதியும் கயலினியும் அசையவேயில்லை. கடைசியாக உடுப்பு பாக்கினை எடுத்துக்கொண்டு ஆரணி வரவும், “எனக்கும் வாங்கினீங்களா அண்ணா?” என்று ஆர்வமாகக் கேட்டாள் கயலினி.

இல்லையே என்று சொல்லமுடியாமல் தடுமாறி நின்றான் அவன். முதன் முதலாக அவனிடம் ஒன்றைத் தங்கை கேட்கிறாள். அதுவும் உரிமையாக. வாங்கிவர மறந்துபோனானே.

அவன் நிலையை ஒற்றைப் பார்வையில் கணித்த ஆரணி, “எனக்கு ஒரு நைட்டியும், உள்ளுடுப்பும், வெளில போட ஒரு செட் பாவாடை சட்டையும் தான் வாங்கினான் கயல். கொஞ்சநாள் போகட்டும் உனக்கும் வாங்குவம்.” என்றாள் சமாதானமாக.

“உங்கட மனுசிய கண்டதும் என்னை மறந்திட்டீங்க என்ன?” குரலடைக்கக் கேட்ட தங்கையைப் பார்க்க முடியாமல் ஆரணியை முறைத்தான் நிகேதன்.

அவன்தான் யோசிக்கவில்லை என்றால் அவளும் சிந்தித்து நடக்கவில்லையே! ஆரணிக்கு அவனின் பார்வையோடு சேர்த்து கயலினியின் கேள்வியும் கோபத்தைக் கிளப்பியது.

“பாத்தோன்ன உடுப்பு பாக்கை கண்டு பிடிச்சவளின்ர கண்ணுக்கு, இவ்வளவு நாளும் நான் ஒரேயொரு நைட்டியை வச்சு போட்டது மட்டும் தெரியவே இல்லப்போல!” சினத்துடன் மொழிந்துவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டாள்,
ஆரணி.

சட்டென்று கிடைத்த பதிலடியில் கலங்கிச் சிவந்துவிட்ட முகத்தோடு அழுகையை அடக்கிக்கொண்டிருந்த மகளின் கோலத்தைக் காணமுடியாமல், “அது அவளின்ர மனுசன். அவேன்ர காசு. அவள் வாங்குறாள். நமக்கு இந்த வீட்டுல மூண்டு நேரமும் சாப்பாடு கிடைக்கிறதே பெரிய விசயம். இதுல நீ உடுப்புக்கும் ஆசைப்பட்டா கிடைக்குமா? உன்ர அண்ணா கொழும்பில இருக்கிறான், அவனைக்கேளு வாங்கித் தருவான்!” என்றார் அன்னை.

“தேவையில்லாம கதைக்காதீங்கம்மா. அவளுக்கு மாத்திப்போட ஒண்டும் இல்லை எண்டுதான் வாங்கினது. அதால கயலை யோசிக்கேல்ல நான். இந்தா, இதுல ரெண்டாயிரம் இருக்கு, உனக்கு விருப்பமானதை வாங்கு!” என்று, பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுத்தான் நிகேதன்.

“இல்ல, எனக்கு வேண்டாம்!” கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரோடு மறுத்தாள் கயல்.

“அப்ப, அம்மா சொன்னமாதிரி நான் உனக்கு அண்ணன் இல்லை எண்டுதான் நீயும் சொல்லுறியா?” என்று கேட்டான் அவன். இல்லை என்று மறுத்தாள் அவள். “அப்ப பிடி!” என்று கைக்குள் திணித்துவிட்டு அறைக்குள் வந்தான், நிகேதன்.

உடை மாற்றியபடி அனைத்தையும் கேட்டிருந்தவள் உள்ளுக்குள் வந்தவனிடம் எதுவும் கதைக்கவில்லை.

“நீயும் அவளுக்கு எதையாவது எடுத்திருக்கலாம் ஆரா. இனி மறக்காத!” என்றவனின் முன்னால் போய்நின்று அவன் முகத்தை நேராகப் பார்த்தாள், ஆரணி.

“ஆளுக்கு ஒவ்வொண்டு எடுத்துக்கொண்டு வர நாங்க ஒண்டும் ஷொப்பிங் போகேல்ல. அதைவிட, என்னை ‘உங்கட மனுசி’ எண்டுறாள் அவள். அதைக் கொஞ்சம் நீயும் கவனி!” என்றவள், தன்னுடைய கூர்மையான நாக்கு இன்னும் வேறு எதையும் பேசி அவனை நோகடித்துவிடுமோ என்று அஞ்சி, வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.

ஆரணியின் கோபத்தில் இருந்த நியாயம் நிகேதனைத் தாக்கிற்று. சமையலறையில் தனியாக நின்று பொருட்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு இருந்தவளை கூப்பிட்டுச் சமாதானம் செய்ய மனம் உந்தியது. அந்தச் சின்ன வீட்டில் அம்மாவையும் தங்கையையும் வைத்துக்கொண்டு அறைக்குள் வா என்று எப்படி அழைப்பது?

மறைமுகச் சமாதான முயற்சியாக, “போய் அண்ணிக்கு உதவி செய் கயல்!” என்றான், தங்கையிடம்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“இப்பதான் கொலீஜால வந்தவள். சாப்பிட்டுக் கொஞ்சம் களை ஆறட்டும்!” என்றார் அமராவதி கயலினியை முந்திக்கொண்டு.

அவன் விடவில்லை. “அங்க என்னம்மா வெட்டி முறிக்கிற வேலையா? சும்மா ஒதுக்கிறதுக்கு ஹெல்ப் தானே. போய்ச் செய் கயல்!” என்றவனின் விழிகள் கயலையே கூர்ந்தன.

அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், அவளும் எழுந்து சென்றாள்.

“நானே செய்வன். நீ போய்ப் படி!” என்று திருப்பி அனுப்பிவைத்தாள், ஆரணி.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று கயல் அறைக்குள் ஓடிவிட, அதற்குமேல் எதுவும் செய்ய முடியாதவனாக அங்கேயே அமர்ந்திருந்தான், நிகேதன். அவன் பார்வை அவனுக்கு முதுகைக் காட்டியபடி வேலைகைளைப் பார்த்துக்கொண்டிருந்தவளின் மீதே இருந்தது.

அவன் வீட்டில் இருக்கும் பொழுதுகளில் அவனை விட்டு விலகமாட்டாள் ஆரணி. கதைப்பதற்கு யாருமற்று காலையில் இருந்து தனியாகவே இருப்பதாலோ என்னவோ மாலையில் அவன் வந்துவிட்டால் அவனோடு ஒட்டிக்கொண்டும் உரசிக்கொண்டும் தனகிக்கொண்டும் இருந்து அவன் பொறுமையைத்தான் சோதிப்பாள். அப்படியானவள் இன்று அவன் வீட்டில் இருந்தும் தனியாக ஒதுங்கி நிற்கிறாள்.

கயல் சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆரணியும் இத்தனை நாள் தன் மனதிலிருந்த குறையைத்தான் சொன்னாள். அவளைப் பிடிக்கிறதோ இல்லையோ, ஒரு பெண் மாற்றுடை கூட இல்லாமல் இருக்கிறாள் என்று தெரிந்தும் மனிதாபிமானத்தோடு உதவாத தங்கை மீதுதான் பிழையும் கூட. மூத்தவன் தான் உன் அண்ணன் அவனிடம் கேள் என்று அன்னை சொன்னபோது, நானும் உனக்கு அண்ணாதான் என்று தன் உரிமையை நிலைநாட்டப் பணம் கொடுத்ததோடு அவனும் நிறுத்தியிருக்க வேண்டும். மாறாக, அவளின் அண்ணனாகவே ஆரணியைக் கடிந்தவன், தான் அவளுக்குக் கணவனும் கூட என்பதை அக்கணத்தில் சிந்திக்க மறந்துதான் போனான்.

திருமண வாழ்க்கை புதிது. மனைவி, தங்கை, தாய் என்று மூவரையும் ஒரு சமநிலையில் கொண்டுபோகும் வித்தையும் அவனுக்குப் புதிதுதானே. முதன் முதலில் உருவான சிக்கலில் அவன் சறுக்கிவிட்டது புரிந்துபோயிற்று!

எழுந்து சமையலறைக்குச் சென்றான். அவனது அரவம் உணர்ந்தும் திரும்பிப் பார்க்காததிலேயே அவளின் கோபத்தின் அளவை உணர்ந்தான். போடி என்று முறுக்கிக்கொண்டு போகமுடியவில்லை. தொண்டையைச் செருமினான். பாத்திரங்களை எடுத்து அங்கும் இங்கும் வைத்தான். அவள் அசையவேயில்லை. கஷ்டம் தான்போல! உதட்டைப் பிதுக்கியவனும் தோல்வியை ஒப்புக்கொள்வதாக இல்லை.

“நான் ஏதாவது செய்யவா?”

“தேவையில்லை. எல்லாம் முடிஞ்சுது!”

அவனை வெட்டுவதிலேயே குறியாக இருக்கிறாள் என்று விளங்கிற்று.

“எனக்குத் தேத்தண்ணி வேணும்.” என்றுவிட்டு அறைக்குள் நுழைந்து டெரெசில் அமர்ந்துகொண்டான்.

எப்படியும் கொண்டு வரத்தானே வேண்டும்! அந்த எண்ணம் தந்த சிரிப்பில் மீசைக்கடியில் உதடுகள் விரிந்தன. அவன் எதிர்பார்த்ததுபோலவே தேநீர் கோப்பையுடன் வந்தாள் அவள். அங்கிருந்த மரக்குற்றியின் மேல் கோப்பையை வைத்துவிட்டுத் திரும்பி நடந்தவளை இழுத்துத் தன்னருகில் இருத்திக்கொண்டான்.

“விடு நிக்கி!” என்றபடி அவள் திமிர, உதட்டில் விரல் வைத்து பக்கத்து அறையில் தங்கை இருப்பதைச் சைகையில் காட்டினான். அதை உணர்ந்து அவள் அமைதியான அந்தக்கணமே வேகமாக அவள் இதழ்களைச் சிறை செய்தான் அவன்.

சத்தமின்றி விடுபடப்போராடியவள், அவன் பிடிவாதம் உணர்ந்து மெல்ல மெல்ல அடங்கினாள். அலைப்புற்றுக் கொண்டிருந்த மனது அந்த முத்தத்தில் அப்படியே அமைதியாகிப்போனது என்னவோ உண்மைதான். தான் விட்ட தவறை விளக்கும் வகை தெரியாமல் உதடுகள் வழியே அவன் மன்னிப்பை வேண்ட அதை உணர்ந்தவளோ கண்ணீரின் வழியே அதை ஏற்றுக்கொண்டாள்.

அவள் தைரியசாலிதான். ஒற்றை வார்த்தைக்குப் பத்து வார்த்தைகள் திருப்பிக் கொடுப்பாள் தான். அது மற்றவர்களுக்கு. அவனுடைய சின்னச் சிடுசிடுப்பைக் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதை உணர்ந்தவனும் அவளைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான். கன்னம் வருடி அவளின் முகம் பார்த்தான்.

நடந்ததைப்பற்றிப் பேச இருவருக்குமே வாய் வரவில்லை. அதைவிட மனமில்லை. சற்று நேரத்துக்குமுன் பெரிதும் சஞ்சலப்பட்டிருந்த இருவர் மனமும் இப்போது நிறைந்து நிர்ச்சலனமாய் மற்றவர் மீது நேசத்தைச் சொல்லியபடி இருந்தது. இதைச் சாதித்துக்கொடுத்தது ஒற்றை முத்தம்!

ஆரணியின் முகத்தில் முறுவல் அரும்பிற்று. அவளையே கவனித்துக்கொண்டு இருந்தவன் சிறு சிரிப்புடன் என்ன என்று புருவம் உயர்த்தினான். “ஒரு கிஸ்ஸ தந்து நடந்தத ஒண்டுமே இல்லாம ஆக்கிட்டடா!” என்றாள் அவள்.

அவனுடைய சிரிப்பு விரிந்தது. “இதேமாதிரி எப்பவும் சிரிச்சமுகமாவே இரடி! இல்லாட்டி என்னவோ செய்யுது!” என்றவன் ஆசையோடு மீண்டும் ஒருமுறை தன் உதடுகளை அவளின் இதழின் மீது ஒற்றி எடுத்தான்.

அதன் பின்னான நாட்கள் பெரிய சலசலப்பற்று நகர்ந்தது. நிகேதனிடம் மட்டும் தேவையானவற்றைப் பேசும் அளவுக்கு அமராவதியும் கயலினியும் முன்னேறி இருந்தனர். ஆரணியோடான உறவு அப்படியே இருந்தது. எப்போது சமாதானமாகி வருகிறார்களோ அப்போது வரட்டும் என்று அவளும் விட்டுவிட்டாள்.

வேலைகளுக்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுகளுக்கும் சென்றுவந்தான், நிகேதன். ஒன்றில் கிடைக்கவில்லை அல்லது ராஜேந்திரனிடம் வாங்கும் சம்பளத்தை விடக் குறைவான தொகை சொன்னதில் இவன் மறுத்தான்.

அன்று, அவன் வேலை முடிந்து வந்தபோது வீட்டினரோடு அவர்களின் தெருவிலேயே இருக்கும் பகவதி ஆன்ட்டியும் நின்றிருந்தார். “என்ன?” என்றான் ஆரணியிடம்.

“அங்கிளுக்கு இண்டைக்கு இரவு ஒரு மணிக்கு ஃபிளைட்டாம் நிக்ஸ். வேன் காரன் வாறன் எண்டு சொல்லிப்போட்டு, மறந்துபோய் வேற ஹயர் போய்ட்டானாம். இப்ப அவசரத்துக்கு வேற வேன் காரர் ஒருத்தரும் அம்பிடேல்லையாம்(அகப்படவில்லையாம்). நீ கூட்டிக்கொண்டு போவியா எண்டு கேட்டவா.” என்று விசயத்தைச் சொன்னாள், ஆரணி.

“போறதுக்கு மட்டும் குறைஞ்சது ஏழு மணித்தியாலம் பிடிக்கும் நிக்கி. போய்வந்து ரெஸ்ட் எடுக்காம நீ வேலைக்கும் ஓடவேணும்.” ராஜசேகருக்கு வேலை நேரத்துக்குப் பிறகு அவரது காரை அவன் என்ன செய்கிறான் என்பது பற்றிக்கூடக் கவலையில்லை. ஆனால், வேலைக்கு லீவு எடுப்பதோ பிந்தி வருவதோ பிடிப்பதில்லை. அதனால் அதையும் எடுத்துச் சொன்னாள், ஆரணி.

எஞ்சி இருப்பது அவன் மட்டுமே என்றாகிப்போக, மறுத்துவிடுவானோ என்று பயந்துபோனார் பகவதி. “காசு கூட எண்டாலும் போட்டுத்தாறன், மாட்டன் எண்டு சொல்லாம வாய்யா!” என்றார் கெஞ்சலாக.

“அது ஒண்டும் வேண்டாம். நீங்க வேகமா வெளிக்கிடுங்கோ. நான் குளிச்சிட்டு ஓடிவாறன்!” என்று அவரை அனுப்பி வைத்துவிட்டு, முதல் வேலையாக ராஜசேகரனுக்கு அழைத்து விடயத்தைச் சொன்னான்.

அவர் சம்மதித்ததும், “அங்கிளுக்கு ஓகேயாம்! நீ ஒரு பிளாஸ்க்ல தேத்தண்ணியும், தண்ணியும் எடுத்து வை. சாப்பாடு வேண்டாம்.” என்றான் ஆரணியிடம்.

“நானும் வரட்டாடா? நித்திரை கொள்ளாம போய்வர வேணும். இடைல நிக்கவும் ஏலாது. எனக்குப் பயமா இருக்கு!” மனதில் சஞ்சலத்துடன் கேட்டாள், அவள்.

“கார் டிக்கில ஸூட்கேஸ் எல்லாம் வைக்கலாமோ தெரியாது. சீட் அதுக்கும் வேணும். நீயும் வந்தா கஷ்டம். ஆன்ட்டியும் வாறா தானே. நான் அவவோட கதைச்சுக்கொண்டு வந்திடுவன். அப்பப்ப நேரம் கிடைக்கேக்க ஃபோன் பண்ணுறன்.” என்றவன், வேகமாகக் குளித்துத் தயாராகி வந்தான்.

ஆரணிதான் அவனை அனுப்பிவிட்டு மனம் முழுக்கப் பயத்தைச் சுமந்தபடி அலைந்துகொண்டிருந்தாள். இதுவரை இப்படியான பெரும் தூரங்கள் அவன் பயணித்ததில்லை. இந்த நீண்ட தூரப்பயணம் முற்றிலும் புதிது. கடவுளை வேண்டியபடி இரவு ஒரு கண் தூங்காமல் விழித்திருந்தவளுக்கு, காலையில் ஏழுமணிக்கே பிரசன்னமாகி நிம்மதியைக் கொடுத்தான், நிகேதன்.

உறக்கமற்று நீண்ட தூரம் வாகனமோட்டியதில் சிவப்பேறிய கண்கள், களைத்துச் சோர்ந்த முகம், கலைந்த கேசம், கசங்கிய ஆடை என்று முற்றிலும் ஓய்ந்துபோயிருந்தான். பகவதி அம்மா ஆயிரம் நன்றிகளைச் சொல்லி விடைபெற்றுக்கொள்ள, அறைக்குள் வந்ததும் சட்டைப் பையிலிருந்து இருபதினாயிரம் ரூபாயை எடுத்து அவளின் கையில் திணித்தான். “சரியா அரைமணி நேரம் கழிச்சு எழுப்பிவிடு ஆரா!” என்றுவிட்டு உடைகூட மாற்றாமல் கட்டிலில் விழுந்தான்.

போய்வந்த ஹயருக்கான பணம் என்று தெரிந்தது. சொன்னதுபோலவே அரைமணி நேரத்தில் எழுந்து, குளித்து வேலைக்குத் தயாரானவனைப் பார்க்கப் பாவமாய்ப் போயிற்று. இன்னுமே கண்கள் நெருப்புத் துண்டுகளாகச் சிவந்துபோய்க் கிடந்தது.

“இண்டைக்கு ஒருநாள் அங்கிளிட்ட லீவு கேட்டுப் பாக்கிறியா?” அவனருகில் அமர்ந்து கேட்டாள், ஆரணி.

“கேக்கவே ஏலாது ஆரா. கட்டாயம் வேலைக்கு வரவேணும் எண்டு நேற்றே சொல்லிட்டார்.” என்றவன், அவளின் மடியில் தலை சாய்த்துக்கொண்டான்.

மெல்ல கேசத்தை வருடிக்கொடுத்தாள் ஆரணி. இன்னுமொரு பத்து நிமிடங்களை உறக்கத்தில் கழித்தவன் எழுந்து புறப்பட, “இந்தக் காசை கொண்டுபோய்க் குடு நிக்கி! அவரின்ர கார் எல்லா.” என்று சொல்ல, அவனும் வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.

அங்கே ராஜசேகரிடம் கொடுக்க, அவன் முகத்தைப் பார்த்துவிட்டு, “இரவிரவா நித்திரை முழிச்சு ஓடினது நீ. பிறகு ஏன் காச எனக்குத் தாறாய்? நீயே வச்சிரு. பெட்ரோல் மட்டும் நிரப்பிவிடு!” என்று முடித்துவிட்டார், அவர்.

அவரளவில் சத்தியநாதனின் மருமகன் அவரது டிரைவர். அதுவே போதுமாயிருந்தது. இந்தப் பணமெல்லாம் எந்த மூலைக்கு.
 

Goms

Member
பரவாயில்லை. ராஜசேகரின் இந்த உதவி போதும் நிகேதன் கொஞ்சம் முன்னேறுவதற்கு.
அம்மாவும், தங்கையும் எவ்வளவு சுயநலமாக இருக்கிறார்கள்?🤔
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom