அவள் ஆரணி - 12

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 12


அந்தப்பயணம் அவர்கள் வாழ்வில் இன்னொரு படியாகவே அமைந்துபோயிற்று! அதற்குப்பிறகு அப்படியான ஹயர்கள் வந்தால் மறுக்காமல் சென்றான், நிகேதன். கூலியையும் அவன் அளவாக வாங்கியதில் ஹயரும் நன்றாகவே வந்தது.

தன் உறக்கத்தை விற்று அவன் உழைத்துக்கொண்டு வருவதில், செலவுகளில் மிகக் கவனமாக இருந்தாள், ஆரணி. நிகேதனின் சம்பளத்தில் மாதச் செலவைப் பார்த்துக்கொண்டு ஹயர் போய்வரும் பணத்தை சேமித்துக்கொள்வாள். இப்படி இருக்கையில்தான் சின்ன மகனின் ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாட மன்னாருக்கு வரப்போவதாக அறிவித்தார், சகாதேவன்.

“அண்ணி கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் ஆரா. நீ எதையும் பெருசா எடுக்காத!” என்றான், நிகேதன்.

ஆரணி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள். “பெருசா எடுக்காத எண்டால்? எனக்கு விளங்க இல்ல நிக்ஸ்.”

அவள் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் அவன் முகத்தில் முறுவல் அரும்பிற்று! “என்ன ஆளடி நீ? எல்லாத்துக்குமே சண்டைக்கு நிப்பியா?” என்றபடி அவளைத் தன் கைகளுக்குள் இழுத்துக்கொண்டான். “அவா நல்லவா தான். இல்லாம இவ்வளவு காலம் எங்கட குடும்பத்தை பாக்க அண்ணாவை விட்டிருக்க மாட்டா. ஆனா, எப்ப என்ன கதைப்பா, எப்பிடி நடப்பா எண்டு எனக்கும் வடிவா(தெளிவா) தெரியேல்ல ஆரா. நான் நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்காமயும் போகலாம். இல்லாம அவா ஏதாவது உன்ர மனம் நோகிற மாதிரி கதைச்சாலோ நடந்தாலோ கொஞ்சம் சமாளி.”

அவளுக்குப் புரியவில்லை. நியாயமற்ற எதற்கும் அவள் திருப்பிக் கதைக்கப் போவதில்லை. பிறகும் ஏன் இப்படிச் சொல்கிறான்?

“எங்களுக்காக நிறையச் செய்திருக்கிறா. அதால அவா கூடக்குறைய கதைச்சாலும் நாங்க ஒதுங்கிப் போயிடுவோம்.” என்றான் விளக்கம் போல.

காதலித்த நாட்களிலேயே இதைப்பற்றி அவன் சொல்லியிருக்கிறான்தான். அதற்காக அவளையும் அடங்கிப்போ என்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

“எனக்காக..” என்றான் கெஞ்சலாய்.

மறுக்கப்போனவள் அவனின் அந்த ‘எனக்காக’வில் அப்படியே தேங்கினாள். அவன் அப்படிக் கேட்டபிறகு அவனுக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய அவளால் இயலாது. ஆனால், அப்படியான சூழ்நிலைகளை எப்படிக் கடப்பாள்? இதுவரை பழக்கமில்லாத ஒன்றாயிற்றே. கண்களில் கலக்கம் சூழ அவனைப் பார்த்தாள். “என்னால முடியவே முடியாத ஒண்டை நீ கேக்கிறாய் எண்டு உனக்கு விளங்குதா நிக்ஸ்?”

ஆம் என்பதாகத் தலை அசைத்தவனின் அணைப்பு இறுகிப்போயிற்று! மனதிலும் பாரமேறிற்று! அவனுக்காக இனி என்ன நடந்தாலும் அவள் பொறுத்துப் போவாள். அவளைக்கொண்டு ஒரு பிரச்சனையும் கிளம்பாது. அதுதான் ஆரணி; அவள் அவன்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழமும் அதுதான். ஆனால், அவள் என்னாவாள்?

“நானும் உன்ன அப்பிடியே விட மாட்டன் ஆரா. நான் இல்லாத நேரம் மட்டும் கொஞ்சம் கவனமா இரு!” என்றவன், அவளைத் தேற்றுகிறவனாக தன் உதடுகளை அவள் நெற்றியில் ஒற்றி எடுத்தான். அப்படியே அவன் மார்பில் சுருண்டுகொண்டாள் ஆரணி.

அவள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. உணர்வுகளாகட்டும், பதிலடியாகட்டும் நாம் என்ன கொடுக்கிறோமோ அதை அப்படியே திருப்பிக் கொடுக்கிறவள். அதேநேரம் சிறு அவமதிப்பைக் கூட அனுமதிக்கமாட்டாள்.

ஆனால் மாலினி? அவர் யாருடன் எப்படி நடப்பார் என்று யாருமே கணிக்க முடியாது. வரப்போகிறார்களாம் என்று அறிந்ததில் இருந்து இன்னதுதான் என்றில்லாத கலக்கம் அவனுக்குள் சூழ்ந்துபோயிற்று! முடிந்தவரை சமாளிப்போம் என்று காத்திருக்க அவர்களும் வந்து இறங்கினார்கள்.

ஆறுமாத வயிற்றையும் நரை முடிகளையும் தாங்கிக்கொண்டு நிகேதனின் அண்ணா என்று சொல்லும் முகச் சாயலுடன் இருந்தார் சகாதேவன். கழுத்துவரை மட்டுமே முடி நிற்க, சற்றே மெல்லிய உடல்வாகுடன் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மா என்று சொல்ல முடியாத அளவில் இளமையாக இருந்தார் மாலினி.

இருவருமே அவளுடன் நல்லுறவு கொண்டாடச் சற்றும் தயாராக இல்லை என்று பார்வையிலேயே உணர்த்தினர். காட்டிக்கொள்ளாமல் இன்முகமாகவே வரவேற்று உபசரித்தாள்.

அமராவதி அம்மாவுக்கு அவர்களைக் கண்டதுமே பத்து வயது குறைந்துபோயிற்று! அந்தளவில் மகன், மருமகள், பேரப்பிள்ளைகளை ஓடி ஓடிக் கவனித்தார். விழிகள் விரியப் பார்த்துக்கொண்டிருந்த ஆரணிக்கு, சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது.

மதியப்பொழுது(மதியம் என்றால் மத்தியானம் அல்ல நிலவு வருகிற இரவினைக் குறிக்கும்.) என்பதால் ஆரணி தேனீருக்குத் தண்ணீர் வைக்க, “மாலினிக்குச் சீனி கொஞ்சம் கூடவா வேணும். மூத்தவனுக்கு டீ போடு. பிள்ளைகளுக்கு நல்லா ஆத்தவேணும்!” என்று, அருகில் வந்து சொல்லிவிட்டுப் போனவரை கைவேலையை விட்டுவிட்டுத் திரும்பிப் பார்த்தாள், ஆரணி.

கொழும்பிலிருக்கும் மகனது மாத்திரமல்ல மருமகளதும் பேரப் பிள்ளைகளினதும் நாக்கின் ருசியை அறிந்து வைத்திருக்கிறவர், அருகிலிருக்கும் மகனது பசியை ஆரம்ப நாட்களில் எப்படி உணராமல் போனார்? உதட்டோரம் சின்னதாய் வளைந்தது, அவளுக்கு.

“அங்கேயும் இங்கயும் ஓடாம இங்க வந்து இருங்கம்மா!” தாயின் பரபரப்பை உணர்ந்தாற் போல் சொன்னார், சகாதேவன்.

“எவ்வளவு நாளைக்குப்பிறகு குடும்பத்தோட வந்திருக்கிறாய். சும்மா குந்தியிருந்து கதைக்கச் சொல்லுறியோ?” என்றவரின் முகத்தில் பெரிய மகன் வந்ததில் உண்டான பூரிப்பும் சந்தோசமும் இன்னுமே அடங்கியிருக்கவில்லை.

“கொஞ்சநேரம் இருந்து கதைக்கிறதால ஒண்டும் நடக்காதம்மா. சொல்லுங்க, எப்பிடி இருக்கிறீங்க? உடம்பு என்ன சொல்லுது?” என்று விசாரித்தார் சகாதேவன்.

“உடம்புக்கு என்ன. அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு.”

“மனமா சரியில்ல? அதுக்கு நீங்கதானே மாமி காரணம். செல்லம் குடுத்து கெடுத்துப்போட்டு இப்ப சலிச்சா சரியா?” என்றார் மாலினி.

அமராவதி அம்மாவின் முகம் சுருங்கிப்போனது. ஆனாலும், வாயை மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தார்.

“நடந்த விசயத்த திரும்பத் திரும்பக் கதைக்கிறதில அர்த்தம் இல்ல மாலினி. அந்தக் கதையை விடு!” என்றார் சகாதேவன்.

அவருக்கு என்னவோ அவன் உழைக்க ஆரம்பித்துவிட்டதும் தன்னிடம் ஒரு ரூபாய் காசுக்கும் வராததும் பிழைத்துவிடுவார்கள் என்கிற எண்ணத்தை உண்டாக்கியிருந்தது. எனவே, “உனக்குக் கைச் செலவுக்கு என்ன மாதிரி, காசு இருக்கோ?” என்று தங்கையை விசாரித்தார்.

“ஓம். சின்னண்ணா ஒவ்வொரு கிழமையும் செலவுக்குத் தாறவர்.” அங்கிருந்த நிகேதனைப் பார்த்துவிட்டுப் பதில் சொன்னாள், கயலினி.

“ஓ..! அப்ப உன்ர சின்ன அண்ணா நல்ல பொறுப்பு எண்டு சொல்லுறியோ கயல்?” என்று நக்கலாய் கேட்டார், மாலினி. அவருக்கு பொறுப்பே இல்லாத நிகேதனையும் பிடிக்காது. அவனையெல்லாம் நம்பி வந்த ஆரணி மீதும் மதிப்பில்லை.

“அண்ணா கேட்டதுக்குத்தான் நான் பதில் சொன்னான்.” அவளுக்கு மாலினியைப் பிடிக்கவே பிடிக்காது. அண்ணா முதல் அம்மா வரை அவரைச் சமாளித்தே போவதில் அவளால் மனதில் இருப்பதை வெளிக்காட்ட முடிவதில்லை.

இதையெல்லாம் கேட்டபடி சமையலறையில் ஒரு தட்டினை எடுத்துவைத்து வாங்கி வைத்திருந்த ‘லெமன் பஃப்’ மற்றும் ‘சொக்லேட் கிறீம்’ பிஸ்கட்டுகளை அழகாக அடுக்கினாள் ஆரணி.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
சமாளித்துப்போக நினைக்கும் சகாதேவன், மனதின் வெறுப்பைக் காட்டும் மாலினி, மருமகளுக்கு நல்ல மாமியாராக நடக்க முயலும் மாமியார், இந்தப் பக்கமா அந்தப் பக்கமா என்றில்லாமல் தடுமாறும் கயல் என்று, அவளால் எல்லோரினதும் மனநிலையையும் கணிக்க முடிந்தது.

அதற்குள் கொதித்துவிட்டிருந்த தண்ணீரில் அமராவதி அம்மா சொன்னதுபோலவே அவர்களுக்கான தேநீரைத் தயாரித்துவிட்டு கூடவே நிகேதனுக்கும் அமராவதிக்கும் சேர்த்து ஒரே தட்டில் எடுத்துக்கொண்டாள்.

கயலினியை அழைத்துப் பிஸ்கட் ட்ரேயினைக் கொடுத்து அனுப்பிவிட்டு, தேநீர் தட்டினை எடுத்துக்கொண்டுபோய், சகாதேவனுக்கு முதலிலும் பிறகு நிகேதனுக்கும் கொடுத்துவிட்டு மாலினி அமராவதி என்று வர, கவனித்துக்கொண்டிருந்த மாலினிக்கு முகம் கடுத்தது.

நிகேதனுக்கு ஆரணியின் செயலில் மனதில் இதம் பரவிற்று! அதுநாள் வரையில் அந்த வீட்டில் அவன் ஒரு செல்லாக்காசு; பொறுப்பற்றவன். ஏன், சற்று முன் வரையிலும் கூட அவனைப்பற்றிய இளக்காரமான பேச்சுத்தான் நடந்துகொண்டிருந்தது. மனதில் வெம்பியபடி அமைதியாக அமர்ந்திருந்தவனுக்கு அவள் ஆற்றிய அச்சிறு செயல் மனத்துக்குப் பெரும் ஆறுதலைத் தர, சிறு முறுவலை அவளுக்குப் பரிசளித்தபடிதான் கோப்பையை வாங்கிக்கொண்டான்.

“கயல், உனக்கு கிட்சனுக்க இருக்கு போய் எடுத்துக்கொண்டு வா!” என்றுவிட்டு, பால் தேநீரை எடுத்துச் சின்னவர்களுக்குப் பக்குவமாகக் கொடுத்தாள்.

அவளுக்கு ஏனோ குறுகுறு என்று அவளைப் பார்ப்பதும் அவள் பார்க்கையில் சிறு கூச்சத்துடன் வேறிடம் பார்ப்பதுமாக இருந்த அவர்களை மிகவுமே பிடித்துப் போயிருந்தது.

“உங்களுக்கு என்ன பெயர்?” எட்டுவயதான மூத்தவனிடம் கேட்டாள்.

“ஆரியன்..” வெட்கத்தோடு சிரித்துக்கொண்டு சொன்னான் அவன்.

“உங்களுக்கு சேர்?” அவள் போட்ட சேரில், ஆரியன் கிளுக் என்று சிரிக்க, சின்னவருக்கோ பெரும் வெட்கமாயிற்று. அதை அடக்க முயன்றபடி, “ஆதவன்.” என்றான் அவன்.

“உங்களுக்குத்தானே நாளைக்குப் பிறந்தநாள்? என்ன கேக் வாங்குவம்? ஸ்பைடர் மேன், பேட் மேன்? இல்ல மேக் குயின்?”

அவன் தாயைப் பார்க்க, பதில் சொன்னால் அது ஆரணியை மதித்தது போலாகிவிடும் என்று மகனின் பார்வையை அலட்சியம் செய்து, “என்ன நிகேதன், ட்ரைவர் வேலை எப்படிப் போகுது?” என்று ஆரம்பித்தார், மாலினி.

“இந்த ஜொப் கிடைக்கோணும் எண்டுதான் இத்தனை வருசமா அலைஞ்சீங்க போல. கோட்டு சூட்டுப் போட்டுத்தான் போறனீங்களோ?” அவரின் எள்ளல் சிரிப்பில் அவனின் தன்மானம் ஊசலாடியது.

ஆரணி ஒருகணம் துடித்துப்போனாள். அவள் நாயகனாகப் போற்றும் ஒருவனை எள்ளி நகையாடுகிறார் அவனின் அண்ணி. கல்லூரியில் அவளைக் கட்டியிழுத்த அவனது நிமிர்வு இங்கே நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவளின் வாயையும் அல்லவா கட்டிப்போட்டுவிட்டான். தன்னால் இயன்றதாகக் கண்ணால் தேற்ற முனைந்தாள்.

“நல்லா போகுது!” என்றான் நிகேதன் எதையும் காட்டிக்கொள்ளாத குரலில்.

“நல்லாத்தானே போகவேணும். சொந்தக்காரன் எண்டுற உரிமையோட எங்கட பாக்டரில வேலை செய்ய விரும்பாத உங்களுக்கு, உங்கட மனுசி வாங்கித் தந்த ட்ரை..வர் வேலை எல்லா.” அந்த ட்ரைவரை அவர் இழுத்த இழுவையில் அத்தனை நக்கல்.

“இது நிரந்தரம் இல்லத்தானே!” என்றான் அவனும் தளராமல்.

“ஓமோம்! உண்மைதான். உங்கட மாமனார் கூப்பிட்டுச் சொத்தையெல்லாம் எழுதி வைக்கப்போறாராம் என்ன! பேப்பர்ல நியூஸ் வந்திருந்தது.”

வேகமாக நிகேதன் ஆரணியைப் பார்த்தான். அவள் வாயைத் திறந்தால் மாலினியே தாங்கமாட்டார். ஆனால், அவளோ ஆதவனின் பக்கத்தில் அமர்ந்திருந்து அவன் அருந்துவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

அவனுக்காக.. அவன் கேட்டதற்காக மட்டுமே இந்த அமைதி! ஆனால், இந்த அமைதியைக் கடைப்பிடிப்பதற்காகத் தனக்குள் எத்தனை தூரத்துக்குப் போராடுவாள் என்று அவனுக்குத் தெரியும்.

“மாமனாரின்ர சொத்தில வாழ எனக்கு விருப்பமில்லை அண்ணி. ட்ரைவர் வேலையா இருந்தாலும், நானா தேடின வேலை. நானா உழைச்சு சம்பாதிக்கிற காசு. அதுதான் எனக்கும் மரியாதை. என்ர மனுசிக்கும் கௌரவம்!” இதற்குமேல் பேச்சை வளர்த்தால் தன் தமயனைப் பற்றிப் பிழையாகத் தானே கதைக்கவேண்டி வந்துவிடுமோ என்று அஞ்சி அங்கிருந்து எழுந்தான் அவன். “இரவு சாப்பாட்டுக்கு என்னவோ வாங்கவேணும் எண்டு சொன்னனீ எல்லா ஆரா. வந்து என்ன எண்டு சொல்லு வாங்கிக்கொண்டு வாறன்!” என்றபடி தங்களின் அறைக்குள் சென்றான்.

ஆரணியும் பின்னால் செல்ல, “காசு கணக்கு வழக்கு எல்லாம் மருமகளின்ர கைல குடுத்திட்டிங்க போல மாமி.” என்று மாலினி சொல்வதும், “என்னவோ நானா ஆசைப்பட்டுக் குடுத்தமாதிரி கேக்கிறாய் பிள்ள. அவளின்ர புருசன் உழைக்கிறான். அவள் வச்சிருக்கிறாள். எங்களை வீட்டைவிட்டுத் துறத்திவிடாமல் வச்சிருக்கிறதே பெருசு எண்டு இருக்கிறம் நாங்க.” என்று அமராவதி சொல்வதும் இருவரின் காதிலும் விழுந்தது.

அறைக்குள் வந்ததும் நிகேதன் என்னவோ சொல்ல வெளிக்கிட, வாயில் விரலை வைத்துத் தடுத்து வெளியே கேட்கும் என்று சைகை செய்தாள் ஆரணி.

“நீ போய்ச் சின்ன ஆட்களுக்கு அப்பமும் எங்களுக்கு மசாலா தோசையும் கட்டிக்கொண்டு வா! கொஞ்சமா பழங்களும். நாளைக்கு விடிய சாப்பிட்ட பிறகு பிள்ளைகளுக்குக் குடுக்கலாம்.” என்றவள், கப்போர்ட்டின் உள்ளிருந்து காசினை எடுத்துக் கொடுத்தாள்.

அவள் அருகில் நெருங்கி, “நாளைக்கு அண்ணி என்ன செலவு வைப்பா எண்டு தெரியா ஆரா. வேணும் எண்டே செய்யக்கூடிய ஆள். சமாளிக்க இருக்கா? இல்ல யாரிட்டையும் மாறவேணுமா?” என்று மெல்லக் கேட்டான் அவன்.

யாரிடம் போய் மாறுவான்? ஆயினும், சமாளிக்க நினைத்து அப்படிக் கேட்டது மனத்தைத் தொட நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். தன் வீட்டினரைப்பற்றி மாலினி கதைத்தபோது அவன் முகத்தில் தெரிந்த கோபம் மனதுக்கு இதமளித்திருந்தது. அறை வாயிலை ஒருமுறை பார்த்துவிட்டு, கண்ணால் அவனை இன்னுமே தன்னருகில் அழைத்தாள். என்னவோ சொல்லப்போகிறாளாக்கும் என்று அவன் குனிய, தன் உதடுகளை அவன் கன்னத்தில் ஒற்றி எடுத்துவிட்டு, “அதெல்லாம் இருக்கு. நீ யோசிக்காம போய்ட்டுவா!” என்றாள் அவள்.

வெளிச்சம் போட்டது போன்று அவன் முகம் மலர்ந்தது. உதட்டசைவால் அவளுக்குத் தானும் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான்.

 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom