அவள் ஆரணி - 19

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 19



“என்ன சொன்னவர் சுகிர்தன்?” செண்டரை விட்டு வெளியே வந்ததுமே கேட்டாள் ஆரணி.

“லோனுக்குத்தான் வாங்கினவராம். கொஞ்சம் முதல் குடுக்கவேணுமாம். காணி வீடு சொந்தமா இருந்ததால அதைக்காட்டி எடுத்திருக்கிறார் போல.” என்று விளக்கம் சொன்னான் அவன்.

“நாங்களும் வாங்குவமா? எங்கட வீடும் சொந்தக்காணில தானே இருக்கு.”

ஆரணியின் கேள்வியில் அவளைத் திரும்பிப் பார்த்தான் அவன்.

“வாங்கி?”

“ட்ரிப் ஓடலாம் தானேடா.”

நடந்தபடி சற்றுச் சிந்தித்துவிட்டு அவன் மறுத்துத் தலையசைத்தான்.

“அப்பிடி வேன் வாங்கினா ரெண்டு வேலையையும் விடவேண்டி வரும் ஆரா. அப்பிடி விட்டா அந்த ரெண்டு சம்பளமும் வருமானமா இதுல வருமா தெரியாது. லோன் கட்டவேணும். வேனுக்கு எண்டு மாதா மாதம் ஏதோ ஒரு செலவு வரும். வாகனம், ஒரு நேரம் உழைச்சுத்தரும். இன்னொரு நேரம் அதுக்கும் மேலால கொண்டுபோயிடும். முதல் எங்களிட்ட கொஞ்சமாவது முதல் வேணும். அவர் அந்த வேன் செக்கண்ட் ஹாண்ட் தான் வாங்கினவராம். அதுக்கே நாற்பது லட்சம் முடிஞ்சதாம்.” நிகழ்காலச் சிக்கல்களை எடுத்துரைத்தான் அவன்.

“இப்ப வாற நாலு ஐந்து ட்ரிப்பை வச்சு மாத வருமானம் கிடைக்கும் எண்டு நம்புறதே முட்டாள் தனம். மெயினா ஒரு உழைப்பை வச்சுக்கொண்டு சைட் பிஸ்னஸ் மாதிரி அதை வச்சிருக்கிறது வேற. அதையே மெயினா செய்றது வேற.” என்று மேலும் எடுத்துச் சொன்னான் அவன்.

எல்லாம் சரிதான். என்றாலும்.. ராஜேந்திரனிடம் இருந்து அவனை வெளியே கொண்டுவருவதற்கு இது ஒன்றுதான் நல்ல வழியாகப் பட்டது அவளுக்கு.

“சுகிர்தனும் எங்களை மாதிரித் தானே நிக்கி. அந்த வேனை வச்சுத்தான் அவரும் நீ சொன்ன செலவு எல்லாம் பாக்கிறார். அவரால முடியும் எண்டேக்க ஏன் எங்களால முடியாது? எங்களுக்கு நானும் உழைக்கிறன் தானே. குடும்பச் செலவை என்ர சம்பளம் பாக்கும். உனக்கு நேரம் இல்லாததால தான் நைட் ட்ரிப் மட்டும் போறாய். இதுவே வேன் இருந்தா எந்த ட்ரிப் வந்தாலும் போகலாம். எப்ப வந்தாலும் போகலாம். சுகிர்தன் மாதிரி கார்மெண்ட்ஸ் ஹயர் ஓடலாம்.” அவளுக்கு ஏனோ அந்த ஐடியாவை அப்படியே விட்டுவிட மனமேயில்லை.

“நீ சொல்லுறது எல்லாம் சரி எண்டு வச்சாலும் முதலுக்கு எங்க போறது?” என்றான் அவன்.

அந்தக் கேள்விக்குத்தான் அவளிடமும் பதில் இல்லை. வாடிவிட்ட முகத்தோடு நின்றவளைப் பாக்கப் பாவமாக இருந்தது அவனுக்கு. “ஒண்டுக்கும் கவலைப்படாத. கொஞ்ச காலம் போகட்டும். என்ன செய்றது எண்டு பாப்பம்.” என்று தேற்றிவிட்டு அவளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.

“பள்ளிமுனைக்கு விடு நிக்கி!” எப்போதெல்லாம் மனது சரியில்லாமல் போகிறதோ அப்போதெல்லாம் அவள் தேடுவது அந்த இடத்தைத்தான். “உன்ர மனதை என்ன கிடந்து அரிக்குது?” இதமான குரலில் வினவினான் அவன்.

“தெரியாடா. நினைக்கிற வேகத்துக்கு முன்னுக்கு வர ஏலாம இருக்கே எண்டு இருக்கு. ஒரு வழி கிடைச்சிருக்கு; அதைப் பிடிச்சுக்கொண்டு போவம் எண்டு பாத்தா ஆயிரம் தடை!” மனச்சோர்வுடன் சொன்னாள் அவள்.

“அப்பிடி ஏன் நினைக்கிறாய்? இப்பிடி யோசிச்சு பார். நாங்க கலியாணம் கட்டேக்க எங்களிட்ட என்ன இருந்தது? ஒண்டுமே இல்ல. ஒரு வேலை கூட இல்ல. ஆனா இண்டைக்கு, ஒண்டுக்கு மூண்டு வேலை கைல இருக்கு. அதோட சைட் பிஸ்னஸ்ஸா ஹயர் ஓடுறன். சீட்டுப் போட்டிருக்கிறாய். குட்டியா ஒரு சேமிப்புச் செய்றாய். எங்களுக்குத் திருமணம் நடந்து ஒரு வருசம் இன்னும் முடியேல்ல. அதுக்குள்ள எவ்வளவு பெரிய முன்னேற்றம் சொல்லு?” என்றான் அவன்.

அவள் முகம் பட்டென்று மலர்ந்தது. “ஓம் என்னடா! இத நான் யோசிக்க இல்லையே. விடு மச்சி! நாங்க சாதிக்கிறம்! நினைச்சதை செய்து காட்டுறோம்! ஓகே?” என்றாள் உற்சாகமாய்.

“டன்!” என்றவனும் வண்டியை மன்னாரின் பள்ளிமுனை நோக்கி விரட்டினான்.

மனதிலிருந்த பாரம் அகன்றுபோயிருந்ததில் பின்னால் அமர்ந்திருந்த ஆரணி, சிறகில்லாமல் வானில் பறந்துகொண்டிருந்தாள்.

“லவ் பண்ணின காலத்துக்கே போனமாதிரி இருக்கு மச்சி!”
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவள் சொன்னதைக்கேட்டு கண்ணாடி வழியே கிண்டலாய்ப் பார்த்தான் அவன். “இன்னுமே நாங்க அந்தக் காலத்தில மட்டும் தான் இருக்கிறம்.”

சிரிப்பு வந்தது ஆரணிக்கு.“அலையாதயடா!” என்று அவன் முதுகிலேயே ஒன்றுபோட்டாள்.

“என்னடி அலையிறன்? நான் என்ன ஊரான் வீட்டுச் சொத்துக்கா அலையிறன்? அவனவன் வெளில லவ்வர்ஸா காட்டிக்கொண்டு உள்ளுக்க எல்லாத்தையும் முடிக்கிறான். நாங்க ஊருக்கு கணவன் மனைவியா காட்டிக்கொண்டு உள்ளுக்கு லவ்வர்ஸா வாழுறம். இந்தக்கொடுமையை எங்கபோய்ச் சொல்லுறது?”

“எப்பிடியோ அலையிறதை ஒத்துக்கொள்ளுறாய் தானே.” என்று சிரித்தாள் அவள்.

“போடி!” கண்ணாடி வழியாக அவன் முறைக்க, கண்ணைச் சிமிட்டி உதட்டைக் குவித்து முத்தமிட்டாள் ஆரணி.

ஆசையாக அவளைப் பார்த்தான் நிகேதன். ஓய்வின்றி ஓடும் அவன் வாழ்க்கையின் இளைப்பாறும் ஆலமரமாக இருப்பது அவளும் அவளின் அருகாமையும் தான். இந்தக் குறும்பு, இந்தத் துடிதுடிப்பு, இந்த வாய் இல்லையேல் அவன் தொலைந்துபோயிருப்பானாய் இருக்கும்.

“என்னைப் பாத்தது போதும் நிக்ஸ். கொஞ்சம் ரோட்டையும் பாத்து ஓட்டு.”

அதற்குள், பள்ளிமுனையில் எண்ணூறு வருடப் பழமையைப் பறைசாற்றியபடி நிமிர்ந்துநின்ற பெருக்க மரத்தடிக்கு வந்திருந்தனர் இருவரும்.

பைக்கை ஒரு கரையோரமாக நிறுத்தினான் நிகேதன். இறங்கியதும் ஓடிப்போய் அந்த மரத்தைச் சுற்றி அமைத்திருந்த கட்டில் அமர்ந்துகொண்டாள் ஆரணி.

ஆப்பிரிக்க நிலப்பகுதிகளில் அதிகம் வளரக்கூடிய baobab மரக்குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பெருக்கமரம் கிட்டத்தட்ட 19,5 மீற்றர் சுற்றளவில் பெருத்து நின்றுகொண்டிருந்தது. தென்னாசியாவிலேயே பெரிய சுற்றளவைக்கொண்ட இம்மரத்தினை அண்ணளவாக இருபது மனிதர்கள் மனிதச்சங்கிலி போன்று கைகளைக் கோர்த்துச் சுற்றி நின்றால் மட்டுமே சுற்றிப்பிடிக்க முடியும்.

அந்தக்காலத்தில் கடல் சார்ந்த வாணிபம் செய்தவர்கள் இம்மரத்தை இங்கே கொண்டுவந்திருக்கலாம், அல்லது அவர்கள் பயன்படுத்திய குதிரைகளின் சாணத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எது எப்படியானாலும் எங்கோ ஒரு தேசத்தில் பிறந்த விதை இங்கே விழுந்து அது மரமாகி இன்று மன்னாரின் ஒரு முகமாகிப் போயிருக்கிறது.

தான் விழுந்த மண்ணை உயிராய் நேசித்து, இறுகப் பற்றிப்பிடித்தபடி, ஆழமாய் வேரூன்றி ஆடாமல் அசையாமல் நிமிர்ந்து நிற்கும் அம்மரத்தைப் பார்க்கும் பொழுதினில் எல்லாம், அவர்களின் நேசத்தைப்போலவே என்று எண்ணிக்கொள்வாள் ஆரணி.

இன்றும் அந்த மரத்தையே அவள் பார்த்துக்கொண்டிருக்க, “என்ன மேடம், ஆழமா யோசிக்கிறீங்க போல இருக்கு!” என்றபடி அவளருகில் வந்து அமர்ந்தான் நிகேதன்.

“இந்த மரத்துக்கும் மண்ணுக்குமான சொந்தம் மாதிரியே கடைசிவரைக்கும் நானும் நீயும் இருக்கோணும் நிக்கி!” ஆழ்ந்த குரலில் அந்த மரத்தையே பார்த்துச் சொன்னாள் ஆரணி.

அவன் சிரித்தான். “ஏன், எண்டைக்காவது என்னை விட்டுட்டுப்போற ஐடியா இருக்கா உனக்கு?” என்றான் கேலியாக.

“உன்ன விட்டா உயிர் போயிடும் நிக்கி!”

“கன்னத்திலே ஒண்டு போட்டன் எண்டா தெரியும்! பாத்தாச்சு எண்டா வா போவம்!” எரிச்சலுடன் எரிந்து விழுந்தான் அவன்.

“பாத்தியா உனக்குக் கோவம் வருது!”

“விசரி மாதிரி கதைச்சா கோவம் வராம வேற என்ன வரும்?” இன்னும் அவன் சூடு குறையவில்லை.

“சரிசரி கோவிக்காத! என்னை ஒரு ஃபோட்டோ எடுத்துவிடு.” ஓடிப்போய்ப் பெருக்க மரத்தருகில் நின்றுகொண்டு சொன்னாள்.

“எத்தனை தரமடி(தரம்-தடவை) எடுப்பாய்? எனக்குத் தெரிஞ்சு நான் மட்டுமே இந்த மரத்தோட வச்சு உன்ன அம்பது ஃபோட்டோ எண்டாலும் எடுத்திருப்பன்.” என்றபடி, ஐம்பத்தியோராவதை எடுத்தான் அவன்.

நன்றாக எடுத்திருக்கிறானா என்று பார்த்து, அது திருப்தியாகாமல் இன்னொரு ஃபோட்டோ எடுக்கக்கேட்டு, அவன் முறைக்க, கெஞ்சிக்கொஞ்சி தனக்குப் பிடித்தமாதிரி எடுத்தபிறகே அவனை விட்டாள் ஆரணி.

“இனியாவது போவமா?”

“அவசரமா போய் அப்பிடி என்ன வெட்டிக்கிழிக்கப்போறாய்? அதிசயமா இண்டைக்கு லீவு எடுத்து என்னை வெளில கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாய். இனி இன்னும் எத்தனை வருசம் கழிச்சு இப்பிடி ஒரு சான்ஸ் எனக்குக் கிடைக்குமோ தெரியாது. அதால இருட்டினபிறகுதான் வீட்டை போறது!” என்று அடம் பிடித்து அவனோடு அங்கேயே அமர்ந்துகொண்டாள், ஆரணி.

அப்போதுதான், இப்போதெல்லாம் அவளுக்கென்று அவன் நேரம் ஒதுக்குவதே இல்லை என்று புத்தியில் பட்டது. முன்னராவது வீட்டுப் பொருட்கள் வாங்க, அத்தியாவசிய அலுவல்கள் பார்க்க என்றாவது இருவருமாகப் போய்வருவார்கள். அவன் இரண்டு வேலை பார்க்கத் தொடங்கியபிறகு அதுவும் இல்லை.

காதலித்த நாட்களில் வாரத்தில் ஒருநாளாவது அவளோடு அவன் வந்தே ஆகவேண்டும். இல்லையோ அவனை உண்டு இல்லை என்றாக்கிவிடுவாள். இப்போதோ அதை ஒரு குறையாக அவனிடம் அவள் கொண்டு வந்ததே இல்லை. மனம் கனத்துப்போய்விட ஆரணியைத் திரும்பிப் பார்த்தான்.

தங்கள் வாழ்க்கையை வறுமைக்குக் காவு கொடுத்துவிட்டார்களோ? அவளின் சந்தோசத்தை அவன் தன் உழைப்புக்கு இரையாக்குகிறானோ? அவளின் உலகத்தை அவனளவில் மட்டுமே சுருக்கிவிட்டானோ? நிறையக் கேள்விகள் அவனிடம் நியாயம் கேட்டன.

“என்னைக் கட்டினதுக்கு எண்டைக்காவது வருத்தப்பட்டிருக்கிறியா ஆரா?”

அதுவரை நேரமும் எடுத்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாவில் ஏற்றுவதில் கவனமாக இருந்தவள் வேகமாக நிமிர்ந்து அவனை முறைத்தாள்.

“ஏன்? தொரைக்கு நான் அலுத்துப்போயிட்டனோ?”

அவன் முகத்தினில் முறுவல் மலர்ந்தது. “என்ன ஆளடி நீ? இருபத்திநாலு மணிநேரமும் சண்டைக்குத் தயாராவே இருப்பியா?” என்று சிரித்தவனின் மனதில் இருந்த பாரம், அந்தக் கணத்தில் கரைந்துதான் போயிற்று!

இன்னும் கொஞ்சகாலம்.. அதன்பிறகு அவனது இதயராணியை ராணியாகவே வாழவும் வைப்பான்!

நாட்கள் நகர்ந்தது. ஆரணி சொன்னதைச் செய்தாள். ஹயர் போவதால் வரும் காசைத் தானே எடுத்து வைத்துக்கொண்டாள். கூடவே முடிந்தவரை வீட்டுச் செலவை இன்னுமே குறைத்தாள். அவளின் சம்பளமும் அப்படியே சேமிப்பில் சேர்ந்தது. சீட்டு ஒரு பக்கமாகப் போய்க்கொண்டிருந்தது. எப்படியாவது ஒன்றிரண்டு லட்சங்களையாவது சேமித்துவிடவேண்டும் என்பது அவளின் முடிவு! இப்படியிருக்க, கயலினி படிப்பை முடித்து, யாழ்ப்பாண கிராமப்புற பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக நியமனம் பெற்றாள்.

தினமும் போய்வருவது என்பது இயலாத காரியம் என்பதில், பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலேயே கயலினிக்கு ஒரு அறை பார்த்துக் கொடுத்தான் நிகேதன். அவள் புறப்படும் நாள் வந்தபோது, “கொஞ்ச நாளைக்கு நானும் அவளோடேயே இருந்து இடம், வேலை எல்லாம் பழகின பிறகு வாறன் தம்பி!” என்று தானும் புறப்பட்டார் அமராவதி.
 

Goms

Member
ஆரணியும் நிகேதனும் முன்னேறுகிறவரை எங்கள் இதயமும் பாரமாகத்தான் இருக்கும்.

என்ன மாமியும், கயலும் தனிக் குடித்தனம் போறாங்களா?? நல்லது. கொஞ்ச காலம் ஆரணியும், நிகேதனும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.💞💞💖💖💖💞💞
 
Top Bottom