3. உங்கள் விருப்பை வெளிப்படையாக சமரசங்களின்றிச் சொல்ல முடிந்ததா? அவ்விருப்புகள் வெற்றி பெற்றனவா?
என்னால் என் மனதில் படுவதைச் சொல்லாமல் இருக்கவே முடியாது! ஆனால், எல்லாமே நிறைவேறுமா என்றால் இல்லைதான். அப்படி இல்லாத பட்சத்தில் எனக்கு அதற்கு முறையான விளக்கம் வேண்டும். அந்த விளக்கத்தை 'ஆமாம்! அது சரிதான்' என்று என் மனம் ஏற்கவேண்டும். அது தவிர்த்து, என் விருப்பத்தை நான் முக்கியமற்றதாக தூக்கிப்போட்டுவிட்டு போகிறேன் என்றால் அந்த விடயத்தின் மீது எனக்கு பெரிய ஆவல் இல்லை என்று பொருள்.
இதையும் தாண்டி என் விருப்பங்களை நான் சொல்லாமல் விடுகிற ஒருவர் என்றால் என் அம்மாதான். அதற்கு காரணமும் அதை நான் சொல்வதால் அவர் காயப்பட்டுவிடுவாரோ என்கிற ஒற்றை யோசனை மட்டுமே! அவரிடம் நான்தான் சமரசம் ஆவேன். ஏனோ, சின்னதாய் அவரின் மனதை சினுங்க வைக்கக்கூட என்னால் முடிவதில்லை. அப்பா, அவர் இருந்தவரை ஒரே ஒரு விடயத்தை தவிர எதற்கும் என்னை கட்டாயப்படுத்திய நினைவு இல்லை. அதனாலோ என்னவோ அவரின் விருப்பங்களை நானே கவனித்து நிறைவேற்ற ஆசைப்பட்டிருக்கிறேன்.
4. இதுவரைக்கும் நீங்கள் இக்கேள்வியை யார் யாரிடம் எச்சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளீர்கள்.
5. உங்களை நாடிவந்த அவர்களின் விருப்புகள் உரிய அங்கீகாரம் பெற்றனவா?
இந்த இரண்டு கேள்விக்குமே பொதுவான பதில் தரலாம் என்று நினைக்கிறேன்.
அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அவர் விரும்பியதை செய்தும் கொடுத்திருக்கிறேன். சகோதரிகளின் குழந்தைகளுக்கும் அதே. சகோதரிகளிடம் கேட்கவே மாட்டேன். சண்டைக்கு வேண்டுமென்றால் நன்றாகப் போவேன்.
அப்பா; அவரிடம் பலமுறை கேட்டிருக்கிறேன். எதையுமே வாய் திறந்து சொல்லவே மாட்டார். நானாகக் கவனித்து அவருக்குப் பிடித்தவற்றைச் செய்து கொடுத்திருக்கிறேன். 'நான் தான் ஒண்டும் வேண்டாம் எண்டு சொன்னனான் எல்லா பிள்ளை' என்று சொன்னாலும், மெல்லிய சந்தோசச் சிரிப்பில் சுருங்கும் அவரின் கண்ணோரத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகை.
என் கணவர், அவர் கேட்டால் தலைகீழாக நின்றேனும் செய்வேன். அப்படி அவர் கேட்பது மிக மிகக் குறைவு.
அடுத்து என் குழந்தைகள்: அவர்கள் என்ன கேட்டாலும் செய்துகொடுக்க விருப்பம். நியாயம் இல்லை, அல்லது அது அதிகம், இந்த வயதில் தேவை இல்லை என்றால் நிச்சயம் மறுத்துவிடுவேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அத்தியாவசியம் அல்லாத ஆனால் அவர்கள் விரும்புகிற ஒன்றாக இருந்தால், அதைச் செய்யலாம் பாதகமில்லை என்று உணர்ந்தால் நிச்சயம் அதற்கு ஒரு விலை வைப்பேன். கூடுதலாக நான் சொல்வது இன்ன பாடத்தில் நீங்கள் இன்ன மார்க்ஸ் எடுத்தால் அதை செய்து தருவேன் என்பது.
இவர்களை எல்லாம் தாண்டி நான் நேசிக்கும் மனிதர்கள். உண்மையிலேயே அந்தளவு மனதுக்கு நெருக்கமானவர்களாக யாரையுமே கொண்டுவரமாட்டேன். அப்படிக் கொண்டுவந்தால், அப்போதும் அவர்களிடம் கேட்டு ஒன்றைச் செய்ய நான் விரும்புவது குறைவு. அவர்களுக்கு என்ன விருப்பம் என்று அவர்களே அறியாமல் அறிந்து செய்வதில் ஒரு அலாதிப் பிரியம் உண்டு!