நீ தந்த கனவு - 17

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 17


இளந்திரையனைப் பார்க்க அவர்களின் வீட்டுக்கு வந்திருந்தான் எல்லாளன். ஆதினியைச் சமாதானம் செய்துவிட்டால் அவரோடு கதைப்பது இலகுவாக இருக்கும் என்று எண்ணித்தான் இத்தனை நாள்களும் அவரோடான சந்திப்பைத் தள்ளிப்போட்டிருந்தான்.

அவள் இப்போதைக்கு மலையிறங்குவது போலில்லை. அதில், அவரைப் பார்த்து விடுவது என்று முடிவெடுத்திருந்தான்.

அனுபவம் மிக்க மனிதர் அவர். தன் மனத்திலிருப்பதைக் காட்டிக்கொள்ளாமல் அவனைச் சாதாரணமாகவே எதிர்கொண்டார்.

அதுவே தவறிழைத்தது போன்ற சங்கடத்தில் ஆழ்த்த,
“சொறி அங்கிள்.” என்று சொன்னான் எல்லாளன்.

“பிழையான எண்ணத்தோட கதைக்காட்டியும் சியாமளா கதைச்ச விதம் பிழைதான் அங்கிள். அதுக்கு அண்டைக்கே அவளைக் கண்டிச்சிட்டன். இனி இப்பிடி ஏதும் நடக்காது. அதே மாதிரி உங்களுக்கு நான் தந்த சம்மதமும் எண்டைக்கும் மாறாது!” என்று தன் நிலையையும் அவருக்குத் தெரியப்படுத்தினான்.

அவரின் தலை மறுப்பாய் அசைந்தது. “இனி அந்தச் சம்மதத்துக்கு எந்த அர்த்தமும் இல்ல எல்லாளன். எதுவா இருந்தாலும் என்ர பிள்ளைக்குப் பிடிக்காதது, விருப்பம் இல்லாதது நடக்காது.” என்றார் தெளிவாக.

“அண்டைக்கு உங்கள நான் மறைமுகமா வற்புறுத்தினது உண்மைதான். அதுக்குக் காரணம், செல்லமா வளத்த பிள்ளையை நல்லவன் ஒருத்தன்ர கைல பிடிச்சுக் குடுத்திடோணும் எண்டுற ஆசையும், கண்ணுக்கு முன்னால இருக்கிற திறமையானவனக் கைநழுவ விட்டுடக் கூடாது எண்டுற அவசரமுமே தவிர, என்ர பிள்ளையைக் கட்டிக் குடுக்க ஏலாம இல்ல.” என்று சொன்னவரை முகம் கன்ற வேகமாக இடை மாறித்தான் எல்லாளன்.

“பிளீஸ் அங்கிள், இப்பிடியெல்லாம் நீங்க விளக்கம் சொல்ல வேண்டாம். எனக்கு உங்களையும் தெரியும், உங்கட மனதையும் தெரியும். நானும் உங்கள அப்பிடி நினைக்கேல்ல. யோசிக்காம ஓம் எண்டு சொல்லவும் இல்ல. இதை நீங்க நம்போணும். இனி ஆதினி என்ன முடிவு எடுப்பாளோ எனக்குத் தெரியாது. ஆனா, எனக்கு அவள்தான். உங்களுக்கு நான் தந்த சம்மதத்தின்ர பொருள் என்னளவில எண்டைக்கும் மாறாது, அங்கிள்.”

இதையெல்லாம் ஏற்கனவே அவர் யோசித்திருந்தார். அதனால், அவன் சொன்னதைத் தலையசைத்து ஏற்றுக்கொண்டவர், “உங்களுக்கும் என்ர பிள்ளைக்கும் கலியாணம் நடந்தா, அதைவிடப் பெரிய சந்தோசம் எனக்கு வேற எதுவும் இருக்கப் போறேல்ல எல்லாளன். ஆனா, ஏற்கனவே சொன்ன மாதிரி, இனி எதுவா இருந்தாலும் அவான்ர விருப்பம்தான்.” என்று முடித்துக்கொண்டார்.

அதன் பிறகான அவர்களின் பேச்சு, ஊருக்குள் நடக்கும் பிரச்சனைகளுக்குத் தாவி இருந்தது. அவரின் அறையிலிருந்து அவன் வெளியே வந்தபோது, ஆதினி மாடியிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தாள்.

அவன் ஒருவன் அங்கு நிற்கிறான் என்று காட்டிக்கொள்ளாமல் அவள் வாசலுக்கு நடக்க, “எங்க வெளிக்கிட்டுட்டாய்?” என்று கேட்டு அவளை நிறுத்த முயன்றான்.

அவன் நிற்பதையே அலட்சியம் அவன் குரலையா செவிமடுக்கப் போகிறாள்? தொடர்ந்து நடந்தாள்.

“ஆதினி!”

எரிச்சலுடன் திரும்பியவள் பார்வையில் சினம் மிகுந்திருந்தது. “இப்ப என்ன வேணும் உங்களுக்கு?”

“ஒரு தேத்தண்ணி. ரெண்டு பேருக்கும் ஊத்திக்கொண்டு வா, குடிப்பம்.” அவனும் இளந்திரையனும் பேசிக்கொண்டு இருந்தபோது சாந்தி கொண்டுவந்து தந்தார்தான். என்றாலும் இன்னுமொரு முறையும் அவனுக்கு வேண்டும் போல்தான் இருந்தது.

“சாந்தி அக்காவைக் கேளுங்க, தருவா.”

“ஏன், நீ தரமாட்டியா?”

“எனக்கு ஊத்தத்(ஊற்ற) தெரியாது.”

“இவ்வளவு வாயடிக்கிற உனக்கு ஒரு தேத்தண்ணி ஊத்தத் தெரியாதோ?”

அர்த்தமே இல்லாத தர்க்கம். என்னவோ அவனுக்கு இருக்கிற அழுத்தங்களுக்கு இவளோடு மல்லுக்கட்டுவது மனத்தை இலேசாக்குவது போலிருந்தது.

“இப்ப என்ன வே…” என்று திரும்பவும் கேட்க ஆரம்பித்தவள், அவன் மீண்டும் தேநீரில் வந்து நிற்பான் என்று தெரிந்து, வாயை இறுக்கி மூடிக்கொண்டாள்.

எல்லாளனுக்குச் சிரிப்பு வந்தது. சாந்தி அக்காவை அழைத்துத் தேநீருக்குச் சொல்லிவிட்டு, “வந்து இரு. அந்த அஜயைப் பற்றி உன்னட்டச் சொல்லோனும்.” என்றான்.

அப்படி அவன் என்னதான் செய்தான் என்று அறிந்துகொள்ள வேண்டி, ஆதினியும் வந்து அமர்ந்தாள். அவனும் நடந்ததை எல்லாம் சொன்னாள். அவளுக்கு மிகுந்த அதிர்ச்சி.

“இப்ப விளங்குதா? அவன் என்னத்துக்கு உன்னோட அங்க வந்தவன் எண்டு? வேவு பாக்க வந்திருக்கிறான். என்ன நடக்குது எண்டு ஆராய வந்திருக்கிறான். தன்னைப் பற்றி ஏதாவது சந்தேகம் வந்திருக்கா எண்டு கவனிக்க வந்திருக்கிறான். ஆரா இருந்தாலும் கொஞ்சம் கவனமா இரு, பொறுப்பா நட எண்டு இதுக்குத்தான் சொல்லுறது. நீ கேக்கவே மாட்டாய். கவனமா இருக்கவும் மாட்டாய். அந்தக் கோபத்திலதான் என்னென்னவோ கதைச்சு, அது...” நடந்ததைப் பற்றிப் பேச வேண்டாம் என்று அவன் பேச்சை நிறுத்தி விட, அவளுக்கு முகம் கன்றிப் போனது.

அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் அவளின் பொறுப்பற்ற செய்கைகளை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுவது போலிருக்க, அவன் முகம் பார்க்க முடியவில்லை.

கன்றிச் சிவந்திருந்த முகமும், அவன் பார்வையைத் தவிர்க்கும் விதமும் ஏதோ ஒரு விதத்தில் அவனைப் பாதித்தது. அவளைச் சமாதானம் செய்துவிட விரும்பி, “விடு! இனிக் கவனமா இரு, போதும்!” என்றான் தன்மையாக.

“அவன் ஒரு உதவி கேட்டான், நீ செய்தாய். உன்னளவில அவ்வளவுதான். அது எனக்கு விளங்குது. ஆனா, ஆராவது வந்து எதேற்சையா உதவி கேக்கிறதுக்கு நீ சாதாரண வீட்டுப் பிள்ளை இல்ல. எங்க மூண்டு பேர்ல ஆரோ ஒருத்தர்ல இருக்கிற கோபத்தைக் காட்டவோ, இல்ல, எங்களை அடக்க நினைச்சோ உன்னை ஒரு துருப்புச் சீட்டாப் பயன்படுத்த சான்சஸ் இருக்கு. இத உன்னப் பயப்பிடுத்தச் சொல்லேல்ல. எப்பவும் கவனமா இருக்கோணும் எண்டுறதுக்காகத்தான் சொல்லுறன். அதே மாதிரி, உனக்கு அப்பிடி ஒண்டும் வராது. வர நாங்க விடமாட்டம், சரியா?” என்றான் கனிவோடு.

பெரிய அக்கறை! உதட்டோரம் வளைய, “அதுதான் அண்டைக்கு ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் விசாரிப்பன் எண்டு சொன்னீங்க போல! இதில நீயும் சேர்ந்துதான் கொன்றியா எண்டு கேள்வி வேற!” என்றாள் அவள் ஏளனமாக.

அவனுக்குப் பேச்சற்றுப் போனது.

“இவ்வளவு நாளும் பொறுப்பில்லாமத்தான் இருந்திருக்கிறன் எண்டு எனக்கும் விளங்குதுதான். அதுக்காக, நீங்க எல்லாரும் சேர்ந்து செய்தது இருக்குத்தானே…” என்றவள், மேலே பேச முடியாமல் விருட்டென்று எழுந்து வீட்டுக்குள் நடந்தாள்.

அப்படியே அமர்ந்துவிட்டான் எல்லாளன். அவள் பேசிவிட்டுச் சென்ற விடயமும் விதமும் மனத்தை என்னவோ செய்தது.

திடீரென்று எல்லாளனின் கைப்பேசி அனுங்கியது. அப்போதுதான் தன்னிலையை மீட்டு அழைப்பை ஏற்றான்.

“சேர், ஆளைப் பிடிச்சாச்சு! சாமந்தி கேஸ் இனி முடிவுக்கு வந்திடும்.” அந்தப் பக்கமிருந்து உற்சாகமாக அறிவித்தான் கதிரவன்.

“உண்மையாவா? ஆர் அவன்?”

“டியூஷன் வாத்திதான் சேர். ஆனா என்ன, இவன் ஸ்பெஷல் கிளாஸ் எண்டு எல்லா டியூஷன் செண்டர்ஸுக்கும் மாறி மாறிப் போவானாம். அதுலதான் முதல் எங்களிட்ட மாட்டேல்ல. நீங்க சொன்ன மாதிரி ஒரே நேரத்தில எல்லா டியூஷன் செண்டர்ஸையும் வளைச்சுப் பிடிச்சதாலதான் மாட்டினவன். பைக் சீட்டுக்குள்ள லொலி, ஊசி, டேப்லட்ஸ் எண்டு எல்லாமே இருந்தது. அவனும் ஒத்துக்கொண்டுட்டான்.”

“ஓ! அந்தளவுக்கு நல்லவனா? ஆளை ஸ்டேஷனுக்கு கொண்டுவாங்க. நானும் வாறன்.” என்றுவிட்டு ஸ்டேஷனுக்கு விரைந்தான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
மெல்லிய உயர்ந்த தேகத்தோடு, மூக்குக் கண்ணாடி அணிந்து, மரியாதைக்குரிய ஒரு ஆசிரியனின் அத்தனை அம்சங்களோடும் இருந்தான் அவன்.

ஏற்கனவே பயத்தில் வெளிறியிருந்த அவன் முகம், எல்லாளனைக் கண்டதும் இன்னுமே இரத்தப் பசையை இழந்தது. தானாகவே எழுந்து நின்றான்.

“சாமந்தியத் தெரியுமா?”

“தெ…தெரியும்.”

“எப்பிடி?”

“க…ணக்குப் பாடம் என்னட்டத்தான் படிச்சவா.”

“படிக்க வந்த பிள்ளைக்குத்தான் இதெல்லாம் பழக்கினியா நீ?”

அவனின் உறுமலில் சகலமும் அடங்கியது அவனுக்கு.

“சொல்லடா! இது மட்டும்தானா? இல்ல, வேற சேட்டையும் விட்டியா?”

“சேர்...” புரிந்தும் புரியாமலும் நடுங்கினான் அவன்.

“என்னடா சேர்? நான் என்ன கேக்கிறன் எண்டு உனக்கு விளங்கேல்ல?”

“இல்ல சேர். வேற எதுவும் இல்ல.”

“அப்பிடி எதுவும் இல்லாமத்தான் அந்தப் பிள்ளை தூக்குல தொங்கினவளா?” என்று கேட்டு, அவன் கவனித்த கவனிப்பில் நார் நாராகிப் போனான், அந்த ஆசிரியன்.

“பெயர் என்ன?”

“மாதவன்.”

“மாதவன்! ஒரு பொம்பிளைப் பிள்ளைக்கு, அதுவும் நல்லாப் படிக்கிற பிள்ளைக்கு, பிழையான பாதையைக் காட்டிக் கெடுத்து, கடைசில உயிரையே விட வச்சிட்டியேடா!”

“இல்ல சேர். நானாக் குடுக்கேல்ல. அவளாத்தான் வந்து வாங்குவாள்.”

“அவள் கேட்டா நீ குடுப்பியா? உன்ர வீட்டில இதே மாதிரி ஒரு பொம்பிளைப் பிள்ளை இருந்து, அவள் கேட்டாலும் இப்பிடித்தான் குடுப்பியா?” என்றதும் குலுங்கி அழுதான் அவன்.

“தெரியாமச் செய்திட்டன் சேர். பிளீஸ் சேர். சொறி சேர்!”

“ஏனடா இப்பிடிச் செய்தனி? சொல்லு! ஏன் இப்பிடிச் செய்தனி?” உக்கிரம் கொண்டு அவனை உலுக்கினான்.

“காசுக்காக… சொறி சேர்.”

அவனின் எந்தக் கதறலையும் எல்லாளன் காதில் வாங்கவே இல்லை. அத்தனையும் ஊமை அடிகள். இவன் சாமந்தியை உடலளவிலும் துன்புறுத்தினானா, இல்லை, போதை மட்டும்தானா என்று அவனுக்கு உறுதியாக அறிய வேண்டியிருந்தது. அதில், ஈவு இரக்கமே காட்டவில்லை.

“ஐயோ சேர்! அந்தப் பிள்ளையின்ர நிகத்தைக் கூட நான் தொட்டது இல்ல சேர்!” என்று கதறிய பிறகுதான் விட்டான்.

“இந்தப் போதைப்பொருள் எல்லாம் உனக்கு எப்பிடிக் கிடைக்குது? இத முதல் சும்மா குடுத்தியா நீ? அதுக்குப் பதிலா அவளிட்ட என்னடா வாங்கினாய்?”

“அது ஒரு கடை இருக்கு சேர். மாதத்தில ரெண்டு தரம் கேள்விக்குறி போட்டு மெசேஜ் வரும். நான் என்னட்ட இருக்கிற காசுத் தொகையைச் சொன்னா, அதுக்கு ஏற்ற மாதிரி அந்தக் கடைல பொருள் வந்திருக்கும். நான் காசக் குடுத்திட்டு அத வாங்கிக்கொண்டு வருவன். ஆனா, அது ஆர், என்ன எண்டு எல்லாம் எனக்குத் தெரியாது. கறுப்பு பைக், கறுப்பு உடுப்பு, கறுப்பு ஹெல்மெட் போட்ட ஒருத்தன் கொண்டுவருவான்.”

இங்கேயும் ஒரு கறுப்பாடு. விழிகள் இடுங்க அவனை நோக்கினான் எல்லாளன்.

அவன் கண்களில் தெரிந்த சந்தேகத்தில் பதறி, “உண்மையா சேர். ஒரே ஒருக்காத்தான் அவனை அப்பிடிக் கூடப் பாத்திருக்கிறன். அதுதான் முதல் தடவ. பிறகு அந்தக் கடைல காசக் குடுத்திட்டுப் பொருளை வாங்குவன். சாமந்திக்கும் நானா குடுக்கேல்ல சேர். என்னட்ட இருக்கு எண்டு அவளுக்கு எப்பிடித் தெரிய வந்தது எண்டும் தெரியாது. அவளாத்தான் வந்து கேட்டவள். முதல் காசு தந்தவள். பிறகு பிறகு நகை தந்தவள். கடைசில காசு, நகை ஒண்டும் இல்லை எண்டு கெஞ்சினவள். நான் குடுக்கேல்ல.” என்று இனியும் அடிவாங்கத் தெம்பில்லாமல், அவசரம் அவசரமாக அனைத்தையும் ஒப்பித்தான்.

“அதென்ன அவளுக்கு நீயாக் குடுக்கேல்ல. அந்தளவுக்கு நல்லவனா நீ?” என்றதும் அவன் முகம் கறுத்தது.

“அது… அது படிக்கிற பிள்ளைகளுக்கு வித்தா கெதியா பிடிபட்டுடுவன் எண்டு…” அவன் முகம் பாராமல் பதில் சொன்னவனை, பார்வையாலேயே பொசுக்கினான் எல்லாளன்.

“எங்க அந்தக் காசு நகை எல்லாம்?”

“அதையெல்லாம் அந்த அவனே கொண்டு போயிடுவான்.” என்றதும் பளார் என்று விழுந்தது ஒரு அறை.

“திரும்பவும் பொய்யாடா?”

“ஐயோ சேர். உண்மையா எல்லாம் அவனிட்டக் குடுத்திட்டன். என்ர பங்கைக் காசாத்தான் எடுப்பன். கடைசியாத் தந்தது ஒரு தோடு மட்டும் வீட்டை இருக்கு.” என்றதும், எங்கே வைத்திருக்கிறான் என்று கேட்டு, உடனேயே ஆளை அனுப்பி அதை எடுப்பித்தான்.

அதே நேரம், அவன் சொன்ன கடைக்கும் போலீசை அனுப்பி விசாரித்தான். அவன் சொன்னது உண்மைதான். கூடவே, அந்தக் கடைக்காரரையும் மிரட்டி, இதைச் செய்ய வைத்திருப்பது தெரியவந்தது. எதைக் கொடுத்து எதை வாங்குகிறார்கள் என்று கூட அறியாமல் இருந்தார், அந்தக் கடைக்காரர்.

சாகித்தியனும், “சேர், சாமந்தி அவளின்ர எக்கவுண்ட்ல இருந்த காசு எல்லாம் எடுத்திருக்கிறாள். தப்பித்தவறி தனக்கு ஒண்டு நடந்திட்டா எண்டு பயந்து, அவளுக்கும் தெரிஞ்ச இடத்திலதான் அம்மா நகைகளை ஒளிச்சு வச்சிருக்கிறா. அதுல இருந்தும் நிறையச் சின்ன சின்ன நகைகளைக் காணேல்லையாம் எண்டு அம்மா சொல்லுறா. இந்தத் தோடும் அவளின்ரதான்.” என்று, அந்தத் தோடு சாமந்தியினதுதான் என்பதை உறுதிப்படுத்தினான்.

மீண்டும் அந்த விசாரணை அறைக்கு எல்லாளன் வந்தபோது, ஒரு மூலையில் சுருண்டிருந்தான் மாதவன். இவனைக் கண்டதும் உயிர்ப்பயம் கண்ணில் தெரிந்தது.

“நீ வித்த. அவள் வாங்கினாள். ஆனா, என்னத்துக்குத் திடீரெண்டு தூக்குல தொங்கினவள். அந்தளவுக்கு அவளை என்னடா செய்தாய்? தவறா வீடியோ ஏதும் எடுத்தியா? இல்ல, அவளிட்டச் சேட்டை ஏதும் விட்டியா?” என்று திரும்பவும் தன் விசாரணையை ஆரம்பித்தான்.

“இல்ல சேர். அப்பிடி ஒண்டும் நடக்கேல்ல. ஏன் செத்தவள் எண்டு உண்மையா எனக்குத் தெரியாது. ஆனா, கடைசி நேரம் அவளிட்டக் காசு இருக்கேல்ல எண்டு நினைக்கிறன். சரியான டிப்ரெஷன்ல இருந்தவள். பிறகு காசு தாறன், ஒரு லொலியாவது தாங்க எண்டு எவ்வளவோ கெஞ்சினவள். நான் குடுக்கேல்ல. வேணுமெண்டா இன்னொரு ஆளச் சேத்துவிடச் சொன்னனான்.” என்றதும் புருவத்தைச் சுருக்கினான் எல்லாளன்.

“அது… அது பப்ளிக்கா நாங்க விக்கேலாது எண்டபடியா, இன்னொரு ஆளுக்கு இதப் பழக்கிவிட்டா இவளுக்கு ஃபிரீயா கிடைக்கும்...” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, சுர் என்று சினம் உச்சிக்கு ஏற, எட்டி அவனை உதைத்தான் எல்லாளன்.

“ஏன்டா தறுதலையே! ஒருத்தின்ர வாழ்க்கையை நாசமாக்கினது காணாது எண்டு, இன்னொரு பிள்ளையையும் கெடுக்கப் பாத்தியா?”

“அது அதுதான் எங்களுக்கான ஓடர்(ஆர்டர்). ஒரு ஆளிட்ட எப்பவும் காசு இருக்காது. போதை பழகின பிறகு அது இல்லாமயும் இருக்கேலாது. அப்ப, இப்பிடிச் சொன்னாத்தான் இன்னொரு ஆளச் சேர்த்து விடுவினம். அப்பதான் கஸ்டமர் கூடும் எண்டு. ஆனா, சாமந்தி ஆரையும் என்னட்டக் கொண்டுவரேல்ல. எனக்குத் தெரிஞ்சு, சாமந்தி போதை இல்லாம இருக்கேலாமத்தான் பிழையான முடிவு எடுத்திருக்கோணும் சேர். மற்றும்படி நான் ஒண்டும் செய்யேல்ல.” என்றவனைக் கவனித்துக்கொள்ளும்படி கதிரவனிடம் கண்ணைக் காட்டிவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினான் எல்லாளன்.
 
Top Bottom