நீ தந்த கனவு - 2

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 2


இன்றைய பிரதான செய்திகள்!


பூநகரி - நாச்சிக்குடா பிரதேசத்தில் நடந்த இரட்டைக்கொலைக் குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை; நீதிபதி குழந்தைவேலு இளந்திரையன் அதிரடித் தீர்ப்பு!

2014ம் ஆண்டு 6ம் மாதம் 21ம் திகதி அன்று, பூநகரி - நாச்சிக்குடாப் பகுதியில் இருந்த வீடொன்றில் வசித்து வந்த, கந்தவனம் இராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி இராமச்சந்திரன் ஆகிய இருவரும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.


இத்தம்பதி கொலை தொடர்பில், கிளிநொச்சியைச் சேர்ந்த சத்தியசீலன் மற்றும் அவனது சகோதரன் சதீஸ்வரன் ஆகிய இருவருக்கும் எதிராகக் கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இருந்தும், சந்தேக நபர்கள் இந்தியாவுக்குத் தப்பியோடிய காரணத்தினால், இவ்வழக்கு நிலுவையிலேயே இருந்து வந்தது. ஆறு வருடங்களுக்குப் பிறகு, 2022ம் ஆண்டு மூன்றாம் மாதம் 17ம் திகதி அன்று, அவர்களது மூத்த சகோதரன் திருமணத்தின்போது, கிளிநொச்சித் திருமண மண்டபத்தில் வைத்து, யாழ். மாவட்ட உதவிக் காவல் ஆணையர் எல்லாளன் இராமச்சந்திரன் தலைமையில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொல்லப்பட்டவர்களின் மகள், பொலிஸார், நிபுணத்துவச் சாட்சிகள் மற்றும் எதிரிகள் தரப்புச் சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, முதலாவது எதிரியான சத்தியசீலன், பரமேஸ்வரி என்பரை உயிர் போகும் படி கூரிய ஆயுதத்தினால் தாக்கி, அவரது நகைகளைக் கொள்ளையிட்டமை, இராமச்சந்திரனை உயிர் போகும் வரை கூரிய ஆயுதத்தினால் தாக்கியமை அனைத்தும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அதனால், அவரைக் குற்றவாளியாக உறுதி செய்து, பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இரட்டைத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்படுவதாக, நீதிபதி குழந்தைவேலு இளந்திரையன் உத்தரவிட்டார்.

அத்துடன் தூக்குத் தண்டனைக் குற்றவாளியை இலங்கை ஜனாதிபதி தீர்மானிக்கும் நாளில், உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டுத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

அதேவேளை, இரண்டாவது எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள், நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றும் தீர்ப்பளித்தார்.

அத்துடன் மிகச் சிறப்பாகச் செயற்பட்டு, முறையான சாட்சியங்களோடு குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்திய யாழ். காவல்துறைக்கும் தனது பாராட்டினைத் தெரிவித்தார்.

வவுனியா பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு…

அந்தப் பிரதான செய்திகள் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது. அதைச் செவிமடுக்காது, இலக்கற்று வெறித்தபடி யாழ். நீதிமன்ற வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் தன் ஜீப்பில் சாய்ந்து நின்றிருந்தான் எல்லாளன்.

காலையிலேயே வழக்கு முடிவடைந்திருந்தது. நடந்தது, தமிழர் பிரதேசத்தையே உலுக்கிய கொடூரக் கொலைகள் என்பதாலும், எட்டு வருடங்களாகத் தீர்ப்பளிக்கப்படாமல், சந்தேக நபர்களைப் பிடிக்க முடியாமல், பிடித்த பிறகும் பணமும் அரசியல் செல்வாக்கும் புகுந்து விளையாடிக் கொண்டிருந்ததாலும், அது எல்லோர் கவனத்தையும் பெற்றிருந்தது.

இத்தனை குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் காவல்துறை சிறப்பாகச் செயற்பட்டது என்றால், எதற்கும் அஞ்சாமல் தீர்ப்பை வழங்கியிருந்தார் இளந்திரையன். அதனாலேயே தொலைக்காட்சிகள் இந்தச் செய்தியினை மீள் ஒளிபரப்புச் செய்துகொண்டே இருந்தன.

பொது மக்களாகக் கேட்கிறவர்கள் இதைக் குறித்து மெய் சிலிர்க்கலாம்; தங்களின் நீதித்துறையும் காவல்துறையும் சிறப்பாகச் செயற்பட்டதாகப் பெருமை கொள்ளலாம். ஆனால், பணம் ஒரு பக்கம், பதவி ஒரு பக்கம், செல்வாக்கு இன்னொரு பக்கம், அரசியல்வாதிகளின் அதிகாரவர்க்கத்தின் குறுக்கீடு மற்றொரு பக்கம் என்று, அவன் சந்தித்தவைகள் ஒன்றா இரண்டா?

அத்தனையையும் தாண்டி, குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றித் தண்டனையும் வாங்கிக்கொடுத்துவிட்டான். அவனுடைய எட்டு வருடப் போராட்டம் இன்றைக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், வந்து என்ன பயன்? போனவர்கள் திரும்பியா வரப் போகிறார்கள்?

அப்போது, பின்னிருந்து அவன் தோளைத் தட்டியது ஒரு கரம். திரும்பிப் பார்க்க அகரன் நின்றிருந்தான்.

“டேய்! நீ எங்கயடா இஞ்ச?” மெல்லிய ஆச்சரியம் குரலில் ஓங்கி நிற்கக் கேட்டான் எல்லாளன்.

“சும்மாதான், வா! உன்னப் பாத்துக்கொண்டு போவம் எண்டு வந்தனான்.” அவனை கண்டீனுக்கு இழுத்துக்கொண்டு நடந்தபடி சொன்னான் அவன்.

“ஆரு நீ! என்னப் பாக்க வவுனியாவில இருந்து யூனிபோர்மை கூட மாத்தாம வந்திருக்கிறாய்?” என்றவனின் கேள்வியில் கண்ணடித்துவிட்டுச் சிரித்தான் அகரன்.

“சத்தியமா ரெண்டு நாள் லீவுல உன்னையும் பாக்கத்தான் வந்தனான்.”

இரண்டு காக்கிகளும் ஆளுக்கொரு கோப்பிக் கோப்பைகளுடன் அந்தக் கண்டீனின் ஒரு பக்கமாகக் கரை ஒதுங்கின. சில நொடிகள் இருவரும் கோப்பியை மாத்திரமே பருகினர். எல்லாளனின் பார்வை எங்கு என்றில்லாமல் இருக்க, அகரன் அவனை ஆராய்ந்தான்.

அமைதியாக இருக்கும் அவன், தனக்குள் எந்தளவிற்குக் கொந்தளித்துக்கொண்டிருப்பான் என்று தெரியும். அதனால்தானே வந்தான். “அதுதான் எல்லாம் முடிஞ்சுதே மச்சான், விடு!” என்றான் ஆறுதலாக.

“என்னடா முடிஞ்சது? ஒருத்தன் தப்பிட்டானேடா. அவன் சந்தோசமா வெளில இருக்கப்போறான்! எட்டு வருசமா நாயா அலஞ்சும் அவனை விட்டுட்டனே!” பொறுக்க முடியாமல் தன் தொடையிலேயே ஓங்கிக் குத்தினான். “இனி வெளில இருந்து இன்னும் எத்தின பேரின்ர குடியக் கெடுக்கப்போறானோ தெரியாது!” பல்லைக் கடித்தவனுக்கு அவனைச் சில்லுச் சில்லாக நொறுக்கிப்போடும் ஆத்திரம்.

“விடடா! இந்தக் கேஸ்ல இருந்துதானே தப்பியிருக்கிறான்? இனி என்ன நல்லவனா இருக்கப்போறானா? இல்ல, வேற எதுலயும் மாட்டாம இருக்கப்போறானா? கட்டாயம் திரும்பவும் மாட்டுவான். அப்ப பாப்பம், நீ பொறுமையா இரு!”

“இன்னுமா?” என்றான் விரக்தியோடு. “ஒண்டுக்கு ரெண்டு உயிரடா. சும்மா போகேல்ல. துடிக்க துடிக்கப் போயிருக்கு. அம்மா பாவமடா. சும்மா கத்தி கையில கீறினாலே அழுவா. அவாவைப் போய்...” என்றவன் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ஆத்திரம், வெறி, ஆக்ரோசம் அத்தனையும் ஒன்றாகச் சேர்ந்து அவனுக்குள் எரிமலையாகக் கொதித்தன. வீடு புகுந்து அவர்களை வெட்டிப் போடும் ஆத்திரம் எழுந்தது.

ஆனால், அவனுடைய உத்தியோகம் அதிகாரத்தை மாத்திரம் தருவதில்லையே! சில நேரங்களில் கைகளைக் கட்டிப் போட்டும் விடுகிறதே! இதில், இன்னும் பொறு என்றால் எத்தனை வருடங்களுக்கு?

வார்த்தைகளை நம்பாமல் எழுந்து வந்து நண்பனை அணைத்து, முதுகில் தட்டிக்கொடுத்தான் அகரன். அந்த அணைப்பு அவன் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி விட்டது போலும்.

“இண்டைக்கு இருக்கிற இந்த நான், நான் இல்லயடா. என்ர ஆசை, கனவெல்லாம் வேற மச்சி. சின்னதா ஒரு வீடு. டீச்சிங் வேல. மனசுக்குப் பிடிச்சவளோட ஒரு எளிமையான வாழ்க்கை. எங்களோடயே அம்மா அப்பாவ வச்சுப் பாக்கோணும். அதே ஊர்லயே தங்கச்சியையும் கட்டிக் குடுத்திட்டு, நினைக்கிற நேரமெல்லாம் அவளைப் போய்ப் பாத்துக்கொண்டு, ஆணும் பெண்ணுமா ரெண்டு பிள்ளைகள் எண்டு இவ்வளவுதான்டா ஆசைப்பட்டனான். எல்லாமே போச்சு... எல்ல்லாமே போச்சு!” என்றவனின் நினைவுகள் எல்லாம் சுழன்றடிக்க ஆரம்பித்தன. விழிகளை இறுக்கி மூடித் தன்னை நிலைநிறுத்த முயன்றான்.

அந்த ‘எல்லாமே போச்சு’க்குப் பின்னால் இருந்த குமுறலை உணர்ந்த அகரனின் மனமும் கனத்துப் போனது.

“அம்மா அப்பா இனித் திரும்பி வரப் போறேல்ல மச்சான். ஆனா, அவே எப்பவும் உன்னோடதான் இருப்பினம். மற்றும்படி மிச்சம் எல்லாம் நடக்குமடா. கேஸ்தான் முடிஞ்சுதே. ஒரு நல்ல பெட்டையாப் பாத்துக் கட்டு. உன்ர தங்கச்சி உனக்குப் பக்கத்திலதான் இருப்பாள். அதுக்கு நான் கேரண்டி. ஆணும் பெண்ணுமா ரெண்டு பிள்ளை என்ன நாலு எண்டாலும் பெறு. வாழ்க்கை சந்தோசமா மாறும்.” என்றவனின் பேச்சில் அவனுடைய ஆழ்மனத்தில் அழியாமல் இருக்கும் அந்த முகம், கண்களில் வந்து மின்னியது.

காதலா என்றால் அவனுக்குத் தெரியாது என்பான். ஆனால், இன்று வரையில் மறக்க விடாத அளவுக்கான பெரும் ஈர்ப்பொன்று, வாலிபம் எய்திய நாள்களில் இருந்தது உண்மை.

எதிர்காலத்தை அவளோடு கற்பனை செய்து தனக்குள் ரசித்திருக்கிறான். பல இனிய கனவுகளைக் கண்டிருக்கிறான். கற்பனையில் மிதந்திருக்கிறான். அனைத்தும் போயே போச்சு!

எங்கு இருக்கிறாளோ, எப்படி இருக்கிறாளோ தெரியாது. இத்தனை வருடங்களில் திருமணம் ஆகியிருக்கலாம்; அவனை மறந்திருக்கலாம்; இப்போது அவளுக்குப் பிள்ளைகள் கூட இருக்கலாம். என்றாவது ஒருநாள் பார்ப்போமா என்று நினைக்கிற ஒவ்வொரு பொழுதுகளிலும் பார்த்துவிடக் கூடாது என்றும் எண்ணிக்கொள்வான்.

“என்னடா யோசினை?”

“அது ஒண்டுமில்ல. நீ முதல் உன்ர தொங்கச்சிட்டச் சேட்டையக் கொஞ்சம் குறைக்கச் சொல்லிச் சொல்லி வை மச்சான். இல்ல, நான் எப்ப விசர்ல இருக்கிறனோ அப்ப நல்லா வாங்கிக் கட்டுவாள், பார்!” என்றான் சீறலாக.

அகரனின் உதட்டில் மெல்லிய முறுவல் அரும்பிற்று. அவர்கள் இருவருக்கும் ஒத்தே போகாது. இவன் தீவிரமான எண்ணங்களும் செயல்களும் கொண்டவன். அவளுக்குத் தீவிரத்தின் பொருளே தெரியாது. இருவரும் எப்போதும் முட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். அதில் நடந்ததை விசாரித்தான்.

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, “ஒரு ஏஎஸ்பியா இருந்துகொண்டு, பொது ஆளான அவளுக்கு சல்யூட் அடிச்சுப் பிரச்சினையை முடிச்சு வை எண்டு வாயால சொல்லவாடா ஏலும்? அந்த அரை லூசனுக்குச் செய்யடா எண்டு கண்ணால சொல்லுறன், அவன் மாட்டன் எண்டு விறைச்சுக்கொண்டு நிக்கிறான். அவளிட்டயே நல்லா வாங்கிக் கட்டு எண்டு விட்டுட்டு வந்திட்டன்.” என்றான் கடுப்புடன்.

“பிறகு?”

“என்ன பிறகு? சல்யூட்டும் அடிச்சு, கையெடுத்தும் கும்பிட்ட பிறகுதான் போனவளாம்!”

அதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்தான் அகரன்.

“இதுல எள்ளுவய கொள்ளுவய எண்டு பட்டப்பேர் வேற. டியூட்டில நிக்கேக்க என்னடா இதெல்லாம்? கொஞ்சம் சொல்லி அடக்கி வை மச்சான். உன்ரயும் அங்கிளின்ரயும் முகத்துக்காகத்தான் பொறுக்க வேண்டி இருக்கு!” என்று பொருமினான் எல்லாளன்.

“இதை உன்ர அங்களிட்டயே சொல்ல வேண்டியதுதானே?” அவனைச் சீண்டும் சிரிப்புடன் சொன்னான் அகரன்.

அது முடிந்தால் அவன் ஏன் இவனிடம் புலம்பப்போகிறான்? அப்படி ஏதும் சொல்லப்போனால் அந்த மனிதர் இவனுக்குத்தான் பதினைந்து வருடக் கடூழியச் சிறைத் தண்டனையை விதிப்பாராக இருக்கும். அவனை முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

“பிறகு என்னத்துக்கு என்னட்டச் சொல்லுறாய்? நீதித்துறையே அவளின்ர கைக்க இருக்கேக்க காவல்துறையால ஒண்டும் செய்யேலா மச்சி!”

“நீயெல்லாம் ஒரு ஏஎஸ்பி! இப்பிடிச் சொல்ல வெக்கமா இல்ல?”

“டேய்! சும்மா இரு. அவள் சின்ன பிள்ளை. சந்தோசமா இருக்கட்டும். அவளை மாதிரி ஒரு நாள் என்ன ஒரு மணித்தியாலமாவது எங்களால இருக்கேலுமா சொல்லு? எப்ப பார் கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு எண்டு... கொடுமை!” என்றவனின் பார்வை திடீரென்று திசை மாறியது. கண்ணும் முகமும் மலர்ந்தன. எதிரில் வந்து கொண்டிருந்த சியாமளாவைப் பார்த்து, வா என்பதாகத் தலையை அசைத்து முறுவலித்தான்.

அழுத அடையாளங்களைச் சுமந்திருந்த அவள் முகம், இவனைக் கண்டதும் மலர்ந்தது. மென் முறுவலுடன் வந்து எல்லாளனின் அருகில் அமர்ந்துகொண்டாள்.

“இப்ப சந்தோசமா?” தங்கையின் முகம் பார்த்து வினவினான் எல்லாளன்.

“ம்ம்! இனித்தான் அண்ணா, அம்மா அப்பான்ர ஆத்மா சாந்தி அடையும்!” விழிகள் கரிக்கச் சொன்னாள் அவள்.

எல்லாளனும் அப்படித்தான் நினைத்தான். இருந்தாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. “இனி அழுறேல்ல. நாங்க ஆசைப்பட்டது நடந்திட்டுது. குற்றவாளிக்குத் தண்டனை வாங்கிக் குடுத்திட்டோம். இனி நீ சந்தோசமா இருக்கோணும்.” என்று அவன் சொல்லும்போதே, “அதுதான், அவளைச் சந்தோசமா வச்சிருக்கத்தான் நானும் ஓடி வந்தனான்.” என்றான் அகரன், வேண்டுமென்றே.

“என்னவோ என்னைப் பாக்க வந்ததாச் சொன்னியேடா?”

“உன்னையும் எண்டுதான் சொன்னனான் மச்சி.” கண்கள் மட்டும் நகைக்கச் சொன்னான் அகரன்.

“அப்பிடியெல்லாம் போலீஸ்காரனோட என்ர தங்கச்சிய அனுப்பேலாது!”

“அப்ப நான் என்ர தங்கச்சியோட கதைக்க வேண்டி வரும்.” அகரன் கைப்பேசியை ஜீன்ஸ் பொக்கெட்டிலிருந்து எடுக்க, “ஐயா ராசா! நீ இவளைக் கூட்டிக் கொண்டே போ! என்னை விட்டுடு!” என்று, கையெடுத்துக் கும்பிடாத குறையாகச் சொன்னான் எல்லாளன்.

“அந்தப் பயம் இருக்கட்டும்!” என்று நகைத்தான் அகரன்.

அப்போது கதிரவனிடமிருந்து எல்லாளனுக்கு அழைப்பு வந்தது.

“சேர், இங்க ஒரு தற்கொலை கேஸ். ஏஎல் படிக்கிற பிள்ளை தூக்குல தொங்கியிருக்கிறா.”

“ஓ! ஸ்பொட்டுக்கு உடனேயே போங்க! நானும் இப்ப வாறன்.” அழைப்பைத் துண்டித்தபடி எழுந்தான் எல்லாளன்.

“சரி மச்சான், புது கேஸ் ஒண்டு வந்திருக்கு. நான் அங்க போகோணும். நீங்க கவனமாப் போங்க.” இருவருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
 
Top Bottom