நீ தந்த கனவு - 40

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 40


எல்லாளனுக்கு வந்த அவசர அழைப்பில்தான் அடுத்த நாள் விடிந்தது. இடி விழுந்தாற்போல் காதில் விழுந்த செய்தியில் ஓடிப்போய்த் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.

அதில், அவசரச் செய்தியாக, ‘சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளுக்கிடையில் நடந்த பயங்கர மோதலில், விசாரணைக் கைதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர் காண்டீபன் சம்மந்தன் என்று, சிறைக்காவல் அதிகாரியினால் இனம் காணப்பட்டார்.’ என்று போய்க்கொண்டிருந்ததைக் கேட்டு, மயங்கிச் சரிந்தாள் மிதிலா.

சம்மந்தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுந்தார்.

அதிர்ச்சி, திகைப்பு என்பதெல்லாம் சாதாரண வார்த்தைகள். அதையும் தாண்டிய சிந்திக்கவியலா நிலையில் இடிந்து நின்றாள் ஆதினி. இல்லை! இருக்காது! அப்படி இருக்கக் கூடாது என்று சொல்லிச் சொல்லியே அதிர்ந்தது அவள் நெஞ்சு.

ஆனால், நீ பார்த்ததும் கேட்டதும் உண்மைதான் என்றது தொலைகாட்சி. கலவரம் நிகழ்ந்த சிறைச்சாலை அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்க, அதற்கு நடுவில் கால்களும் கைகளும் திசைக்கொன்றாக விசிறப்பட்டு, வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட உடலாகத் தரையில் கிடந்தான் காண்டீபன்.

என்னவோ சுவரைத் துளைத்து ஓட்டையைப் போட்டது போன்று, அவன் நெற்றியைத் துளைத்திருந்தது குண்டு. அவனையே திரும்ப திரும்பக் காட்டிக்கொண்டிருந்தனர்.

நேற்றுத்தானே பார்த்தாள். கனிவுடன் சிரித்தானே. கண்ணீரை அடக்கியபடி பார்த்தானே! கடைசியாக வாகனம் மறையும் முன் திரும்பி அவன் பார்த்த பார்வை கண்ணுக்குள்ளேயே நின்றது. அதுதானோ அவனுடைய இறுதி விடைபெறல்?

“ஆதினி! இங்க பார்! ஆதினி! நான் கதைக்கிறது விளங்கேல்லையா?” அவளைப் பிடித்து உலுக்கினான் எல்லாளன்.

அப்போதும் தொலைக்காட்சியையே வெறித்துக்கொண்டிருந்தவளிடம் எந்த அசைவும் இல்லை.

எல்லாளனுக்கு நெஞ்சுக்குள் ஒருமுறை திக் என்றது. ஏற்கனவே மயங்கி விழுந்த இருவரும் எழுந்துகொள்ளும் வழியைக் காணோம். அவர்களுக்குத் தண்ணீர் தெளித்து, தட்டிப் பார்த்து எதுவும் சரி வராமல் ஆம்புலன்சுக்கும் அகரனுக்கும் அழைத்துச் சொல்லியிருந்தான்.

மிதிலாவின் அன்னை நடப்பது எதுவும் தெரியாமல் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். இப்போது இவளும் திக்பிரம்மை பிடித்தவள் போலிருக்கிறாளே!

“ஆதிம்மா, கொஞ்சம் நிதானத்துக்கு வாடி. நான் அவசரமாப் போகோணும்.” திரும்பவும் அவன் போட்டு உலுக்கிய உலுக்கில் திடுக்கிட்டு விழித்தது போன்று அவனைப் பார்த்தாள் ஆதினி.

“இது பொய்… பொய்தானே?” ஆம் என்று சொல்லிவிடு என்று அழுதன அவள் விழிகள்.

அவனும் அப்படிச் சொல்லத்தான் ஆசைப்பட்டான். உண்மை வேறாயிற்றே.

“ஆதினி!” என்றவனும் மேலே பேச முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
ஆனால், இரத்தமெனச் சிவந்திருந்த அவன் கண்களும், அந்தக் கண்கள் சுமந்திருந்த மரண வலியும், கருமை படிந்திருந்த முகமும் உன் காதுகளுக்கு வந்த செய்தி உண்மைதான் என்று அவளுக்கு உறுதிபடுத்த, அந்த நொடியில் வெடித்துச் சிதறினாள் ஆதினி.

“அண்ணா!” என்ற கதறல், அந்த வீடெங்கும் ஓங்கி ஒலித்தது.

அவன் நெஞ்சிலும் பெரும் ஓலம். அவள் தலையை இழுத்துத் தன் மார்பில் அழுத்தினான். இறுக்கி மூடிய விழிகளிலிருந்து விழுந்த கண்ணீர் துளிகள், மீசையை நனைத்துக்கொண்டு ஓடின. உடலெல்லாம் நடுங்கியது.

ஒரு நாளுக்கு முன்னர்தானே ஒன்றாக உண்டார்கள். இவன் மடியில் தலை வைத்துப் படுத்தானே! ‘ஓடி ஓடிக் களச்சிட்டன் மச்சான்.’ என்றவன் இன்று நிரந்தர ஓய்வுக்கே போய்விட்டான்!

‘காண்டீபா!’ அவன் உயிர் கதறியது. ‘என்னடா நடந்தது உனக்கு? ஏன் இப்பிடி ஒரு அவலச் சாவு வந்தது? ஏனடா ஏனடா என்ன விட்டுட்டுப் போய்ட்டாய்?’ என்று கத்தியது. ஆனால், அழவோ அரற்றவோ நேரமில்லை. அடுத்ததைப் பார்த்தாக வேண்டும். கதிரவன் வேறு அழைப்புவிடுத்துக்கொண்டே இருந்தான்.

இதற்குள் ஆம்புலன்ஸ் கூவிக்கொண்டு வந்து நின்றது. பின்னோடே சியாமளா, சாந்தி இருவரையும் அழைத்துக்கொண்டு ஓடி வந்தான் அகரன்.

அவனிடம் மூவரையும் ஒப்படைத்துவிட்டு, சிறைச்சாலைக்குப் பறந்தான் எல்லாளன்.

*****

எல்லாளன் பார்க்காத கொலைகளும் இல்லை; கொலை வழக்குகளும் இல்லை. கோரமாகக் கொல்லப்பட்டு, சிதைக்கப்பட்ட பல உடல்களை உள்ளத்தில் சிறு சலனம் கூட இல்லாது ஆராய்ந்திருக்கிறான்; அந்த வழக்குகளைப் புலன்விசாரணை செய்திருக்கிறான்; வெற்றியும் கண்டிருக்கிறான்.

ஆனால் இன்று, வெட்டிச் சாய்க்கப்பட்ட மரமாக வீழ்ந்து கிடக்கும் நண்பனைக் கண்டபோது நெஞ்சை அடைத்தது. தேகமே நடுங்கிற்று. கண்கள் சிவந்து கண்ணீர் சேர்ந்தது. முகத்தைத் திருப்பிக் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

அவன் உயிர் பிரிந்த இடம் சோக் பீஸினால் அடையாளம் இடப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டவனுக்குப் பெரும் ஆக்ரோசம் ஒன்று வெடித்துக்கொண்டு கிளம்ப, சிறைக்காவலதிகாரியை நோக்கி விரைந்தான்.

என்னாகப் போகிறதோ என்கிற கலவரத்துடன் அவன் பின்னே ஓடினான் கதிரவன்.

“எப்பிடி நடந்தது இது? அவன்ர உயிர் போற வரைக்கும் நீங்க எல்லாரும் எங்க இருந்தனீங்க?” முகத்துக்கு நேராகவே வந்து நின்று உறுமியவனைக் கண்டு, அடித்து விடுவானோ என்று உள்ளுக்குள் நடுங்கினார் சிறைக்காவலதிகாரி.

“சேர் பிளீஸ், நாங்க கவனமாத்தான் இருந்தனாங்க. எப்பவும் போல விடியக்காலம திறந்து விட்டனாங்க. என்ன நடந்தது, எப்பிடி நடந்தது எண்டு தெரிய முதலே எல்லாமே முடிஞ்சுது.”

“என்ன எல்லாம் முடிஞ்சுது? போயிருக்கிறது ஒரு உயிர். இதுதான் நீங்க பாத்த காவலா?”

அவனுடைய உறுமலில் அவருக்கும் கோபம் வந்தது. “என்னவோ நாங்க வேடிக்கை பாத்த மாதிரிச் சொல்லுறீங்க சேர். தடுத்தனாங்க, எல்லாரையும் அடக்கினனாங்க. என்ன, அதுக்கிடையில இப்பிடி ஒரு சம்பவம் நடந்திட்டுது. இந்தக் கலவரத்தில் ரெண்டு கொன்ஸ்டபிள்ஸுக்கு பெரிய பெரிய காயம் சேர்.” என்றார்.

“ஓ! அவேக்குக் காயம். ஆனா, கைதிக்குச் சாவு. சரி சொல்லுங்க, சிறைக்க இருந்த ஒருத்தனுக்குத் துவக்கு எப்பிடிக் கிடச்சது?”

அதுவரையில் திடமாக நின்று பதில் சொன்னவர் இப்போது திணறினார்.

“தெ…ரியாது சேர். அதத்தான் நாங்களும் விசாரிச்சுக்கொண்டு இருக்கிறம்.”

“என்ன தெரியாது? நீங்கதானே இங்க இன்சார்ஜ். பிறகு எப்பிடி உங்களுக்குத் தெரியாம வந்தது? இல்ல, உங்கட அனுமதியோடதான் வந்ததா?” என்றதும் அவருக்கு உதற ஆரம்பித்தது.

“சேர் ப்ளீஸ், இப்பிடி ஒண்டு நடந்தா எனக்குத்தான் பிரச்சினை வரும் எண்டு எனக்குத் தெரியும். தெரிஞ்சும் அப்பிடிச் செய்வன் எண்டு நினைக்கிறீங்களா?”

அவர் என்ன சொன்னாலும் நம்ப அவன் தயாராயில்லை. “எல்லா இடமும் சீசீடிவி கமரா இருக்குத்தானே? போடுங்க பாப்பம்!” என்றான்.

அவரோ சொல்வதறியாது தடுமாறினார்.

“என்ன நிக்கிறீங்க? போடுங்க!”

“சேர்… அது அது வேல செய்யேல்ல.”

“வெக்கமா இல்ல இப்பிடிச் சொல்ல?” என்று அடுத்த நொடியே சீறினான் எல்லாளன். “துவக்கு வந்த விதம் தெரியாது, கமரா வேல செய்யேல்ல. கலவரத்தைத் தடுக்கத் துப்பில்லை எண்டா இங்க இருந்து என்ன ம… புடுங்குறீங்க?” என்றவனின் கேள்வியில், அவர் முகம் கறுத்துச் சிவந்து சிறுத்துப் போனது.

“சேர் மரியாதையாக் கதைங்க. நானும் நீங்க வேல செய்ற அதே டிப்பார்ட்மெண்ட்லதான் இருக்கிறன். எப்பிடியும் கதைக்கலாம் எண்டு நினைக்காதீங்க. திடீர் எண்டு நடந்த கலவரம் சேர். ஆனாலும், எவ்வளவோ முயற்சி எடுத்தும் தடுக்கேலாமப் போயிற்றுது. அதுக்கு என்ன செய்யச் சொல்லுறீங்க? தவறு எங்கயும் நடக்கிறதுதான்!”

அடுத்த நொடியே அவரைச் சுவரோடு சுவராகச் சாய்த்தவனின் துப்பாக்கி, அவர் தொண்டைக் குழிக்குள் இறங்கி இருந்தது. “இப்ப என்னையும் எவனாலயும் தடுக்கேலாது. அப்ப நான் இறக்கவா குண்ட? சொல்லுங்க! இறக்கவா? இறக்கிப்போட்டுத் தவறு நடந்திட்டுது எண்டு சொல்லவா?” நெற்றி நரம்புகள் அத்தனையும் புடைக்கக் கத்தியவனைக் கண்டு, உயிரே போனது அவருக்கு.

“சே…ர் ப்…ளீஸ்ஸ்…”

“போனது ஒரு உயிர். கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லாம இருந்திட்டுத் தவறி நடந்திட்டுதா? இதுல கோபம் வேற வருது உனக்கு?”

எல்லாளன் இருக்கும் மனநிலைக்குக் குண்டை இறக்கினாலும் இறக்கிவிடுவான் என்கிற பயத்தில், “சேர், கொன்ட்ரோல் சேர். அவரை விடுங்க.” என்று அவனை அவரிடமிருந்து பிரித்து நிறுத்துவதற்குள் பெரும் பாடுபட்டுப் போனான் கதிரவன்.

சிறைக்காவல் அதிகாரியால் சுவாசிக்கக் கூட முடியவில்லை. கழுத்தைத் தடவி, இருமிச் செருமித் தொண்டையைச் சீர் செய்ய முயன்றார். கண்முன்னே மரணத்தை அவன் காட்டியதில் தொண்டையெல்லாம் உலர்ந்துபோனது.

எப்போது துப்பாக்கியின் லொக்கை ரிலீஸ் செய்தான், எப்போது லோட் செய்தான் என்று அவராலேயே கணிக்க முடியாத வேகத்தில் தொண்டைக்குள் துப்பாக்கியைத் திணித்துவிட்டிருந்தவனின் ஆக்ரோசம் கண்டு, அவர் நெஞ்சுக்கூடு நடுங்கியது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ஆனாலும் தன் பதவிக்கான அதிகாரம் சீண்டப்பட்டுவிட்ட சீற்றத்தோடு, “இத நான் சும்மா விடமாட்டன் சேர். கொம்ளைண்ட் குடுப்பன்.” என்றவரிடம், “என்ன …. எண்டாலும் குடு!” என்றான் எல்லாளன், தன் தலையின் மயிரை இழுத்துக் காட்டி.

அவர் முகம் கன்றிப்போனது.

எல்லாளனை வெளியே அழைத்து வந்தான் கதிரவன்.

“சேர் பிளீஸ், கொஞ்சம் நிதானத்துக்கு வாங்க. ஜெயிலுக்க துவக்கு வந்திருக்கு. கமரா ஒண்டு கூட வேல செய்யேல்ல. காண்டீபன் சேர சுட்டவன் போன மாதம்தான் ஜெயிலுக்கு வந்திருக்கிறான். காண்டீபன் சேர் வந்த அடுத்த நாளே அவரைச் சுட்டிருக்கிறான். இதையெல்லாம் யோசிச்சுப் பாத்தா, இது ஒரு நாளில போட்ட பிளான் இல்ல சேர். இங்க எல்லாத்தையும் செட் பண்ணிட்டுத்தான் காண்டீபன் சேர இங்க வரவழைச்சு இருக்கிறாங்கள். கச்சிதமாக் காரியத்தை முடிச்சும் இருக்கிறாங்கள்.”

ஆக, அவன் பயந்தது சரிதான். அவனைக் கொண்டே கைது செய்து, அவனைக் கொண்டே காரியம் சாதித்திருக்கிறான் அந்தச் சத்தியநாதன். இதில், அவன் உள்ளுக்குள் இருப்பதுதான் பாதுகாப்பு என்று நினைத்த தன் முட்டாள் தனத்தை எண்ணி, நெற்றியில் அறைந்து கொண்டான் எல்லாளன்.

‘நீ இருக்கிறாய் மச்சான் எண்டு சொன்னியேடா… இண்டைக்கு நீ சாகிறதுக்கு நானே காரணமாயிட்டேனேடா!’ அவன் மனம் பெரிதாக ஓலமிட்டது.

நினைக்க நினைக்க நெஞ்சு கொதித்தது. நீதி, நியாயம், நேர்மை, சட்டம் அத்தனையையும் தூக்கிப் போட்டுவிட்டு வேட்டையாடத் துடிக்கும் மிருகத்தின் நிலையில் இருந்தான் எல்லாளன்.

“இதுக்குக் காரணமான சத்தியநாதன் எனக்குப் பதில் சொல்லியே ஆகோணும் கதிரவன். என்ன எண்டாலும் அவன் என்னில கை வச்சிருக்கலாம். காண்டீபனத் தொட்டிருக்கக் கூடாது. தொட்டே இருக்கக் கூடாது! இனி அவனை விடமாட்டன்!” அமைதியாக ஒலித்த அவன் குரலின் பின்னே, மிகுந்த பயங்கரம் ஒன்று ஒளிந்து கிடப்பதை, அவனோடே பயணிக்கும் கதிரவனால் உணர முடிந்தது.

“நிச்சயமா சேர். விடுறேல்ல! நானும் விடமாட்டன்!” அவனுக்கிணையான உறுதியுடன் சொன்னான்.

*****

அடுத்த இரண்டு நாள்களும் மரண ஓலத்திலேயே கழிந்தது. காண்டீபனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் கூட, தாம் கேட்டதையும் பார்த்ததையும் பொய் என்று சொல்லிவிட மாட்டார்களா என்கிற அனைவரின் நம்பிக்கையையும் பொய்யாக்கிக்கொண்டு, அவன் உடல் அவன் வீட்டு விறாந்தையில் கிடத்தப்பட்டிருந்தது.

ஊரே குழுமியிருந்தது. மாதவன், அஞ்சலி, சாகித்தியன், அஜய், பல்கலைக்கழக மாணவர்கள் என்று நிரம்பியிருந்தது வீடு. கண்ணுக்குத் தெரியாத மிகுந்த பாதுகாப்புடன் இளந்திரையன் கூட வந்துவிட்டுப் போனார். அழுதழுது முடியாமல் போயிருந்த ஆதினி, சியாமளாவின் கவனிப்பில் இருந்தாள்.

காண்டீபனின் தலைமாட்டில், தரையில் சரிந்து கிடந்தாள் மிதிலா. இந்த இரண்டு நாள்களிலேயே எலும்புக்கூடாகத் தேய்ந்திருந்தாள். கதறித் தீர்த்தத்தில் உடலின் வலு மொத்தமாகத் தீர்ந்திருந்தது.

வைத்தியசாலையில் வைத்துப் பார்த்தும் அவள் மனதோ உடம்போ தேறுவதாக இல்லை. காண்டீபனின் இறுதி அடக்கத்திற்காக தாதி ஒருவரும் அவளோடு வந்திருந்தார். உறக்கமா மயக்கமா என்று தெரியாத நிலை. கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது.

திரும்பி வருவேன் என்று அவ்வளவு உறுதியாகச் சொன்னானே! அவள் கணவன் சொன்ன சொல் தவறுகிறவன் இல்லையே! பிறகு எப்படி இது மட்டும் தவறிப் போனது? வயிற்றைத் தடவிப் பார்த்தாள். அவன் தந்த பரிசு, பக்குவமாக இன்னும் அங்கேதான் இருந்தது. கொண்டாட அவன்தான் இல்லை. இனி இல்லவே இல்லையாம்! நாசி விடைத்துக் கண்ணீர் பெருகியது.

‘இண்டைக்கு ஆதினி வந்திடுவாள்’ என்று சந்தோசச் சிரிப்புடன் சொல்லிவிட்டுப் பல்கலைக்குப் புறப்பட்டுப் போனவனைத் தூக்கிக்கொண்டு வந்து கிடத்தியிருக்கிறார்கள். கொழுகொம்பைச் சுற்றியே படரும் கொடி போன்று, அவள் உலகம் சுழன்றதே அவனைச் சுற்றித்தான். இனி?

‘தீபன்…’ அவள் உயிர் ஓலமிட்டது. வலுவான கரங்களைக் கொண்டு அவன் அணைக்கும் அணைப்புக்கு மனமும் உடலும் ஏங்கிற்று. அவன் பேச்சு, அவன் சிரிப்பு, அவன் சீண்டல் எதுவுமே இனி இல்லை. எப்படி அது முடியும்?

இதே வீட்டில்தானே அத்தனை இனிமையான நினைவுகளையும் தளும்பத் தளும்பத் தந்திருந்தான். இனி?

விழிகளை இறுக்கி மூடியவளின் உடல் அழுகையில் குலுங்கிற்று. அருகில் இருந்த தாதிப் பெண்ணும் விழிகள் கலங்க, அவளைத் தடவிக்கொடுத்தார்.

சடங்குகள் அதுபாட்டுக்கு நடக்க ஆரம்பித்தன. எல்லாளன் மொட்டை அடித்து, மீசை வழித்து, நெற்றி, நெஞ்சு, முதுகு, கைகளில் எல்லாம் பட்டை போட்டு, கொள்ளி வைக்கத் தயாராக நின்றான். கொவ்வைப் பழமாகச் சிவந்த கண்களும், கற்பாறை போன்று இறுகிப்போன முகமுமாக நின்றவனை யாராலும் நெருங்க முடியவில்லை.

இன்னும் கொஞ்ச நேரத்தில் மகனின் உடலும் இங்கிருந்து போய்விடும் என்று நினைக்க நினைக்க, சம்மந்தனின் நெஞ்சில் தீரா வலி. அவருக்கு இழப்பொன்றும் புதிதில்லை. நாட்டுப் போருக்குக் கொஞ்சம், தன் நேர்மைக்குக் கொஞ்சம் என்று வாழ்ந்த ஊர், பார்த்த தொழில், மனைவி, மற்றொரு மகன், கால்கள் என்று, அவர் இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல! இன்றோ, கடைசியாக எஞ்சியிருந்தவனைக் கூடக் கொடுத்துவிட்டாரே!

சுயமாக இயங்க முடியாமல் போனபோது கூட மகன் இருக்கிறான் என்று நம்பிக்கை கொண்டவர், இனி எப்படி வாழ்வார்? யாருக்காகத்தான் வாழ்வார்?

துக்கம் பெருகியது. நெஞ்சை அடைத்தது. இதயம் வெடிக்கும் போலிருந்தது. அவர் மகனைத் தழுவிய அந்த மரணம் மட்டும் தள்ளி நின்று இன்னும் அனுபவி என்றது.

காண்டீபன் தன் இறுதிப் பயணத்தை ஆரம்பிக்கப்போகிறான் என்றதும், அவரையும் அழைத்துச் சென்று அருகில் அமர்த்தினான் எல்லாளன். அவர் விழுந்துவிடாதபடிக்கு இருவர் பிடித்துக்கொண்டனர்.

மகனை ஆரத்தழுவி அழுதுவிட முடியாமல் நின்ற அந்த நிலையில்தான், தான் முடமாகிப் போனோம் என்பதை முதன் முதலாக உணர்ந்தார். தளர்ந்து போன தேகம் தீப்பற்றிக்கொண்டது போன்று எரிந்தது. இதற்குக் காரணமானவர்களை மண்ணோடு மண்ணாக்கிவிட ஆவேசம் கொண்டது. விழிகளில் பெரும் சீற்றம். அருகில் நின்ற எல்லாளனின் கையைப் பற்றி இழுத்தார். அவன் திரும்பிப் பார்த்தான்.

“என்ர மகன் உன்ன நினைச்சு நினைச்சே வாழ்ந்தவன். ஒரு நாள் கூட அவன் உன்ன மறந்ததே இல்ல. அவனுக்கு நீ ஏதாவது செய்ய நினைச்சா, அவன்ர சாவுக்கு நீதி வாங்கித் தா. காலையும் இழந்து, பெத்த பிள்ளையையும் பறி குடுத்திட்டு நிக்கிறன் நான். எனக்கு நீதி வேணும். என்ர பிள்ளையை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவங்கள நீ விடக் கூடாது! அதப் பாக்காம நான் சாகமாட்டன்.” ஆவேசம் மிகுந்து கத்தியவர், “உன்ர அம்மா அப்பாவை, என்ர மகனை எல்லாம் காவு வாங்கினவங்களை சும்மா விட்டுடாத தம்பி, விட்டுடாத!” என்றபடி அவனைக் கட்டிக்கொண்டு கதறித் தீர்த்தார்.

நிலைகுலைந்துபோனான் எல்லாளன். அவன் விழிகளில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.

அவரைத் தன் இரு கைகளாலும் அரவணைத்துக்கொண்டான். கோரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்த பெற்றோரின் நினைவு வந்தது. நெற்றிப் பொட்டைக் குண்டு துளைத்திருக்க மல்லாந்து கிடந்த நண்பன் கண்களுக்குள் வந்தான். முகம் மிக மிகப் பயங்கரமாக மாறியது. இதற்கெல்லாம் காரணமானவனின் அத்தனை எலும்புகளையும் எண்ணிவிடும் ஆவேசத்தில் கை நரம்புகள் புடைத்தன.

திரும்பிக் காண்டீபனின் முகத்தைப் பார்த்தான். சில நொடிகளுக்குப் பார்த்துக்கொண்டே இருந்தான். பின் திரும்பி, “நீங்க கேட்டது நடக்கும் மாமா. அது வரைக்கும் அழாதீங்க!” என்றவன் அவர் கண்களைத் துடைத்துவிட்டான்.

கடைசியில் அந்த வீடு தன் சோபையை இழக்க, சொந்தமும் பந்தமும் கதறிக் கண்ணீர் வடிக்க, ஒப்பாரி ஓலத்துடன் விடைபெற்ற அந்த ஆறடி ஆண்மகன், ஒரு பிடிச் சாம்பலாக எஞ்சிப் போனான்.
 

Ananthi.C

Active member
முடியல..... எத்தனை முறை படித்தாலும் கதறி கதறி அழ வைக்கும் பதிவு....... நீங்க தான் காண்டீபனுக்கு அநியாயம் செய்துட்டீங்க....
 

Indhumathy

New member
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நிதா சிஸ் ஏன் இப்படி 😢😢😢😢 நிஜமாவே காண்டீபன் இல்லையா 🥺🥺🥺🥺 ஏத்துக்கவே முடியல 💔💔💔💔💔💔💔
 
Top Bottom