வாசகர்களுக்கு அன்பான வணக்கம்!
எழுத ஆரம்பித்து எட்டு வருடங்கள் முழுமையடைந்த நிலையில், என் இருபதாவது நாவலான, "இயற்கை" வழியாக மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி! இதைச் சாத்தியமாக்கிய வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும், தொடர்ந்து என் கதைகளைப் புத்தகவடிவில் உங்கள் கைகளுக்குக் கொண்டுவரும் ஸ்ரீ பதிப்பகத்தினருக்கும் சந்தோசமாக எழுதக் கூடிய இலகுவான மனநிலையைத் தரும் என் குடும்பத்தினருக்கும் முதற்கண் அன்பும் நன்றியும்!
இக்கதை, என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு முதல் எழுத ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக குருவி கூடு கட்டுவது போலவே தான் எழுதி முடித்திருக்கிறேன்.
பயணங்கள், அதுவும் இயற்கையோடு பயணப்படுவதை பெரிதும் விரும்பும் நாங்கள், நிறைய நாட்கள் திட்டமிட்டு, கனவு என்றே சொல்லலாம், 2018 கோடை விடுமுறையில் 'சான்ஸ்பிரான்சிஸ்கோவிலிருந்து நயாகரா வரை' இரு கிழமைகளுக்கு ‘ரோட் ட்ரிப்’ செல்லத் திட்டமிட்டோம். நெதர்லாந்தில் இருந்து புறப்பட்டு வெற்றிகரமாக அந்தப் பயணத்தை முடித்து, பின் கனடா சென்று அங்கிருக்கும் எங்கள் உறவுகளோடு சேர்ந்து சுற்றி விட்டு வந்தோம்.
முழுமையாக இரு மாதங்கள்; ஒவ்வொரு நாளுமே மறக்கவியலா பல அழகிய நினைவுகளை, சந்தோசத் துளிகளை மனதில் பதித்திட்ட அந்த அனுபவங்களை வைத்தே இக்கதை நகர்கிறது. கதையில் வரும் மலர் பாத்திரம், என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய மாமியை(கணவரின் தாயார்) மனதில் கொண்டும், மிகுதி ஒவ்வொருவரும் என் உற்ற உறவுகளை மனதில் வைத்தும் அவர்களின் குணாதிசியங்களோடே இயல்பாக எழுதியுள்ளேன். அடுத்து, வெளிநாடு வாழ் இளைய தலைமுறை பற்றிய பார்வை, கதைகள், படங்களில் ஏன் நம் சொந்த நாட்டு உறவுகள் மத்தியில் உள்ள பொதுவான பார்வையில் எனக்கு எப்போதுமே முரண் உண்டு. ஏனென்றால் தளம்பித் திரியும் மனிதர்கள் எல்லா இடங்களுக்கும் எல்லா காலகட்டத்திற்கும் பொது! இங்கு வளரும் பிள்ளைகள், முற்று முழுதான வேறுபட்ட சூழலில், தாம் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் பலவற்றையும் சமயோசிதமாகச் சமாளித்து ‘நான் இன்னார்’ என்பதில் உறுதியாக நிற்பது காண்கையில் மிகுந்த சந்தோசமாக உணர்கிறேன். அதை, எங்கள் வீட்டு இளையவர்கள் மூலம் இக்கதையில் சொல்ல முயன்றிருக்கிறேன். எல்லாமே வளர்ப்பில்தான். கதையில் மலரும் நேசம் மட்டும் முற்றிலும் கற்பனை! ஹா...ஹா...
எப்படி இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிமிடத் துளியையும் நாங்கள் இரசித்து மகிழ்ந்தோமோ அப்படியே உங்களையும் இரசித்து மகிழச் செய்யும் வகையில் கதை நகர்த்தியுள்ளேன் என்று நம்புகிறேன். இனி, நீங்கள் தான் சொல்லவேண்டும்.
20 . "இயற்கை"
Last edited: