நீ தந்த கனவு - 16

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 16


அஜய் கொழும்புக்கு ஓடி வந்து ஒரு வாரமாயிற்று. தரமில்லாத விடுதி ஒன்றின், காற்றே இல்லாத அறைக்குள் அடைபட்டுக் கிடந்ததில், அவனுக்கு வாழும் வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று.

எதிர்காலத்தின் நிலை என்ன என்கிற கேள்வி மருட்டியது. இரவுகளில் உறக்கம் இல்லை. பகல்களில் நிம்மதி இல்லை. ஒவ்வொரு நொடித்துளியும் என்னாகுமோ, யாரும் வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று, நெஞ்சு நடுங்கிக்கொண்டே இருந்தது.

அறைக்கு வெளியே காலடிச் சத்தங்கள் கேட்டாலே பதறினான். ஒழுங்கான உறக்கமில்லை; உணவில்லை. இந்த நான்கு நாள்களையும் கடப்பதற்குள்ளேயே முழு நரகத்தை அனுபவித்திருந்தான்.

இப்போதெல்லாம் இப்படி வந்தது தவறோ, அங்கேயே இருந்து பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்க வேண்டுமோ என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.

அவன் தலைமறைவாகிவிட்டான் என்று நண்பர்களுக்குச் செய்தி போயிருக்கும்; ஊராருக்குத் தெரிந்திருக்கும். சாகித்தியன் அவனைப் பற்றி என்ன நினைப்பான்? இனி எப்படிப் பல்கலைக்கழகத்தில், அந்த ஊரில் தலை காட்டுவான்? முழு எதிர்காலமும் பாழாகிப் போயிற்றே.

விரலில் அணிந்திருந்த மோதிரத்தை வைத்துத்தான் இந்த ஹோட்டல் அறைக்கான செலவையும், இத்தனை நாள்களுக்கான உணவையும் பார்த்தான். இன்னும் சொற்பமே மிஞ்சிக் கிடந்தது. அது முடிந்த பிறகு?

ஆக, அதற்கு முதல் ஏதாவது செய்தாக வேண்டும்.

என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு ஆதினிக்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பார்த்தான். பலனில்லை.

கொஞ்ச நேரம் யோசித்துவிட்டுக் கைகள் நடுங்க தந்தைக்கு அழைத்தான்.

“ஹலோ” அவரின் குரல் நலிந்து ஒலித்தது.

“அப்பா…” என்றவனுக்கு மேலே வார்த்தைகளே வரவில்லை. “எனக்கு... அங்க வரப் பயமா இருக்கு.” என்றான் திக்கித் திணறி.

அந்தப் பக்கத்திலிருந்து சத்தமே இல்லை. அஜய்க்கு அழுகை வரும்போல் இருந்தது. “அப்பா...” என்றான் மீண்டும்.

“ம்... இருக்கிறன். என்ன செய்யலாம் எண்டு யோசிச்சனான். நீ பேசாம அனுராதபுரத்தில இருக்கிற சித்தி வீட்டுக்கு வா.” ஒட்டாத குரலில் குரலில் சொன்னார் அவர்.

பெற்ற பாவத்திற்கு இதையும் செய்வோம் என்று நினைக்கிறாரோ? “போலீஸ் கண்டு பிடிக்காதா?” பெற்ற தந்தையிடம் தன்னைக் குறித்து இப்படியெல்லாம் பேசும் நிலை உண்டானதில் வெட்கினான்.

“கொழும்பிலேயே நிண்டாத்தான் பிடிப்பாங்கள். நீ இங்க கொழும்புக்கு டிக்கட் வாங்கினது, அங்க ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து வெளில போனது எல்லாம் கவனிச்சு இருக்கினம். அதால உன்னக் கொழும்பிலதான் தேடுவினம். நீ அனுராதபுரம் வாறதுதான் நல்லது. அங்க வந்ததும் சித்தின்ர நம்பர்ல இருந்து கதை. இனி உன்ர ஃபோன பாவிக்காத!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.

சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் அஜய். ஏன் இப்படி நடந்தாய் என்று கேட்காத அவரின் செய்கையில் தனக்குள் குன்றினான். அவருக்கும் சேர்த்து எவ்வளவு பெரிய அவப்பெயரை உண்டாக்கிவிட்டான். எப்படியாவது இதிலிருந்து வெளியே வர வேண்டும். எப்படி என்றுதான் புரியமாட்டேன் என்றது. ஆதினியிடம் ஏதாவது வழி கேட்கலாம் என்றுதான் அழைத்தான். அவளும் கை விட்டுவிட்டாள். இனி?

ஆனால், இந்த நான்கு நாள்களும் கும்மிருட்டாகத் தெரிந்த வாழ்வில் தந்தையின் துணை இருக்கிறது என்கிற நம்பிக்கை சிறு தெம்பைத் தர, வேகமாக அனுராதபுரத்துக்குப் புறப்பட்டான்.

*****

நண்பர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று தன் வட்டத்தினருக்குப் புது இலக்கத்தினைக் கொடுத்திருந்த ஆதினி, பழைய கைப்பேசியைப் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் அது, அவளின் மேசை இழுப்பறைக்குள்தான் இன்னும் இருந்தது. அன்று காலையில் பல்கலைக்குச் செல்வதற்காகக் குளியலறை சென்று வந்தவளின் காதில், பழைய கைப்பேசியின் ஓசை விழவும் எடுத்துப் பார்த்தாள்.

அஜயின் பெயரைக் கண்டதும் திக் என்று இருந்தது. அவனால் கற்றுக்கொண்ட அனுபவப் பாடம், இந்த முறை யோசிக்காமல் செயலாற்ற விடவில்லை. அதில்தான் அழைப்பை ஏற்காமல் விட்டாள்.

கூடவே, ஒரு பெண்ணின் தற்கொலைக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பான் என்று சந்தேகிக்கப்படுகிறவனின் அழைப்பைப் புறம் தள்ளிவிட்டுப் போகவும் விருப்பமில்லை.

இதற்கு முதல் தெரியாமல் செய்த தவறுக்குத் தன்னால் முடிந்ததாக எண்ணி, எல்லாளனிடம் சொல்வோமா என்று யோசித்தாள். அவனைப் பார்க்கவோ, அவனோடு கதைக்கவோ விருப்பம் இல்லை. அதில், வேகமாகப் புறப்பட்டு, கதிரவனின் பொறுப்பில் இருக்கும் காவல் நிலையத்திற்குச் சென்றாள்.

அந்தக் காலை நேரத்தில் அவளைக் கண்டதும், ‘இண்டைக்கு என்ன ஏழரையக் கூட்டப் போறாளோ?’ என்றுதான் கதிரவனுக்கு ஓடியது. கூடவே என்ன, ஏது என்று கேட்காமல் துரத்தி விடுவோமா என்கிற அளவுக்கு ஒரு கோபமும் முகிழ்த்தது.

அவன் பதவியும், அதற்குண்டான நடைமுறைகளும், பொறுப்பும் அவனைத் தடுத்துப் பிடிக்க, எதையும் காட்டிக்கொள்ளாமல் அழைத்துச் சென்று, அமர வைத்தான்.

“சொல்லுங்கோ, என்ன விசயமா என்னைப் பாக்க வந்திருக்கிறீங்க?”

அவன் முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லை. மறைக்க முயன்றும் முடியாத ஒரு வெறுப்புதான் தெரிந்தது. ஆதினிக்கு முகம் கன்றிவிடப் பார்த்தது. அதை மறைத்துக்கொண்டு வந்த விசயத்தைச் சொன்னாள்.

“ஓ!” என்று கேட்டுக்கொண்டவனுக்கு இதை எல்லாளனிடம் சொல்வதை விட்டுவிட்டுத் தன்னிடம் ஏன் வந்தாள் என்கிற கேள்வி உண்டாயிற்று.

அதை வெளியே காட்டாமல், “நீங்க ஒண்டுக்கும் யோசிக்காதீங்க. இனி அவன் எடுத்தா எப்பவும் கதைக்கிற மாதிரியே கதைங்க. போனமுறை மாதிரி ஏதும் உதவி கேட்டாலோ, வெளில சொல்ல வேண்டாம் எண்டு எதையாவது சொன்னாலோ மட்டும் எங்களிட்டச் சொல்லுங்க. எதையும் நீங்களாத் தூண்டித் துருவப் போக வேண்டாம். அவனாச் சொன்னாக் கேட்டு வச்சுக்கொள்ளுங்க. அந்தளவும் போதும்.” என்றான்.

சரி என்று கேட்டுக்கொண்டு எழுந்து புறப்பட்டாள். அவளின் ஸ்கூட்டி வரையிலும் கூடவே வந்தான் கதிரவன். அவள் புறப்படும் வேளையில் என்ன தோன்றியதோ, “கவனமாப் போவீங்கதானே?” என்றான்.

“ம்.” என்றவளுக்கு இந்த அக்கறையும் கவனிப்பும் அவளுக்கானதா என்கிற கேள்வி எழுந்ததும் முகம் வெளிப்படையாகவே கன்றிப் போனது. அதற்குமேல் சமாளிக்க முடியாமல், “சொறி!” என்றாள், தடுமாறும் குரலில்.

மெல்லிய ஆச்சரியம் விழிகளில் படர்ந்தாலும் கேள்வியாகப் பார்த்தான் கதிரவன்.

“அது… இவ்வளவு நாளும் உங்களிட்ட நடந்துகொண்ட முறைக்கு.”

இதைக் கதிரவனால் நம்பவே முடியவில்லை. அவள் மீது வெறுப்பிருந்தாலும் எல்லாளனுக்காகவும் இளந்திரையனுக்காகவும் மட்டும்தான் வாசல் வரைக்கும் வந்ததும், கவனமாகப் போவாயா என்று கேட்டதும். அவளானால் மன்னிப்புக் கேட்கிறாள்.

“பரவாயில்ல விடுங்க!” என்றான் தன்னை மீறி.

அது கூட அவளை இன்னுமே குன்ற வைக்க, ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து வெளியேறினாள்.

*****
பல்கலையில் மூன்றாவது பாடவேளை முடிந்திருந்தது. இலேசாக வயிறு கடிக்கவும் எதையாவது கொறிப்போம் என்றெண்ணி வெளியே வந்த ஆதினி, அவளை நோக்கி வந்துகொண்டிருந்த எல்லாளனைக் கண்டதும் ஒரு கணம் நின்றாள்.

அவன் மீது மலையளவு கோபம் இருந்த போதிலும் அந்தப் பெரிய பல்கலை வளாகத்தில், காக்கி உடையில், கம்பீரமாக நடந்து வந்தவனைக் கண்டு, ஒரு கணம் தடுமாறித்தான் போனாள்.

இத்தனைக்கும் பிறகுமா? மனம் கசந்து விட, வேகமாகப் பார்வையை அகற்றப் போனவள், அந்த வளாகத்தில் ஆங்காங்கே நின்றிருந்த மாணவர்களும் அவனைக் கவனிப்பதைக் கண்டு, சினம் கொண்டாள்.

சாதாரண உடையிலாவது வந்திருக்கலாம். இனி என்ன? அவளைத் தேடி வந்து கதைத்து, மொத்த மாணவர்களின் வாய்க்கும் விருந்து வைக்கப் போகிறானா? அவனுக்கும் அவளுக்கும் எதிர்காலத்தில் திருமணம் என்று, அவள் உளறியது வேறு இன்னுமே உலவிக்கொண்டு இருக்கிறதே!

அவனைக் காணாதது போன்று விறுவிறு என்று கண்டீனை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அதற்கு விடாமல், வேக எட்டுகளில் விரைந்து வந்து, “நான் உன்னத் தேடி வந்தா, நீ எங்க போறாய்?” என்றான் எல்லாளன்.

“உங்களை ஆரு இஞ்ச வரச் சொன்னது?” நடையை நிறுத்தாது மெல்லிய குரலில் சிடுசிடுத்தாள்.

அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “உனக்குப் பசி போல. வா, சாப்பாடு வாங்கித் தாறன்.” என்றான் அவன்.

நடை நிற்க, அவனை நேராகப் பார்த்து, “என்ன விசயம்?” என்றாள் நிதானமாக.

சீறுவாள், சினப்பாள் என்று நினைத்ததற்கு மாறான இந்த நிதானம் உள்ளூர வியப்பைத் தோற்றுவிக்க, “சாப்பிட உனக்கு என்ன வேணும்?” என்று கேட்டான் அவன்.

“என்ன விசயம் எண்டு கேட்டனான்?”

“உனக்கு என்ன வேணும் எண்டு நானும் கேட்டனான்.” என்றான் அவனும்.

அவள் அவனிடமிருந்து பார்வையை அகற்றாமல் நிற்கவும் சின்ன முறுவல் ஒன்று அவன் உதட்டினில் அரும்பிற்று. “நில்லு, வாறன்.” என்று சொல்லிவிட்டு கண்டீனுக்கு நடந்தான்.

விழிகளை ஒருமுறை மூடித் திறந்தாள் ஆதினி. இப்படி, திடீர் என்று அவன் காட்டும் அணுக்கத்தை அறவே வெறுத்தபடி, அங்கிருந்த வாங்கிலில் சென்று அமர்ந்துகொண்டாள்.

அவள் மனத்தை முதன் முதலாகச் சலனப்படுத்தியவன் அவன்தான். இருந்தாலும் அவனை விட்டு விலகி நிற்கவே விரும்பினாள். சிறிது நேரத்தில் தனக்கு ஒரு பால் தேநீரும், அவளுக்குத் தேநீரோடு ரோல்சும் வாங்கி வந்தான் அவன்.

“சாப்பிடு!” அந்த வாங்கிலில் தானும் அமர்ந்துகொண்டு, இருவருக்கும் நடுவில் தட்டை வைத்துவிட்டுச் சொன்னான்.

அப்போதும் அவள் அமைதியாகவே இருக்க, “அஜய் திரும்ப எடுத்தவனா?” என்று தன் தேநீரை உறிஞ்சியபடி வினவினான்.

‘ஓ! இதற்குத் தானா?’ என்று உள்ளே ஓட, “இல்ல.” என்றாள்.

“அவனைப் பற்றி என்னட்டச் சொல்லியிருக்கலாமே? என்னத்துக்குக் கதிரவனைத் தேடிப்போய்ச் சொன்னனீ?”

“உங்களப் பாக்கவோ, உங்களோட கதைக்கவோ விருப்பம் இல்ல. அதாலதான். போதுமா?” இனியாவது எழுந்து செல் என்பது போல் இருந்தது அவள் பதில்.

அது அவனுக்கு விளங்காமல் போகுமா? இருந்தும், “கதிரவனிட்ட ஏன் சொறி சொன்னனீ?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“அது உங்களுக்குத் தேவை இல்லாத விசயம்!”

“அதுதான் எனக்கு முக்கியமான விசயமே! செய்தது பிழை எண்டு உணர்ந்து நீ கேக்கிற மன்னிப்பை மற்றவே ஏற்கிற மாதிரி, அவே கேக்கிற மன்னிப்பை நீயும் ஏற்கலாம்!” என்றான் அவன்.

அதாவது அவன் தங்கையும் அவள் தமையனும் செய்தவற்றை மன்னிக்கட்டுமாம். அதுவரை அவள் காத்துவந்த பொறுமை பறக்க, “நான் என்ன செய்யோணும் எண்டு நீங்க சொல்லாதீங்க. வந்த வேல முடிஞ்சுது எண்டா நடவுங்க!” என்றாள் எரிச்சலோடு.

அப்போதும் அவன் அசையவில்லை. “என்னை எவ்வளவு மோசமா எல்லாம் கதைச்சிருக்கிறாய்? என்னோட பிடிக்காத சண்டையையா கதிரவனோட பிடிச்சனி? அப்ப என்னட்டயும்தானே நீ மன்னிப்புக் கேக்கோணும்? அதுதான், அந்த மன்னிப்பையும் கேட்டு வாங்கிக்கொண்டு போவம் எண்டு வந்தனான்.” என்று சீண்டினான்.

அந்தச் சீண்டல் ஆதினிக்கு இரசிக்கவில்லை. மாறாக எரிச்சல்தான் மண்டியது. அவன் தன் இயல்பை மீறி இப்படி அவளோடு நல்ல முறையில் கதைக்க முயல்வது, ஒருவித நடிப்போ என்று தோன்றிவிட, விருட்டென்று எழுந்து நடக்க முனைந்தாள்.

அதற்கு விடாமல் அவள் கையைப் பற்றித் தடுத்து, “வாங்கின ரோல்ஸை சாப்பிட்டுப் போ!” என்றான்.

“நீங்க விடுங்க என்னை!” அவ்வளவு நேரமாக இருந்த நிதானத்தைத் தொலைத்துவிட்டு அவனிடமிருந்து கையை இழுத்துக்கொண்டாள் ஆதினி.

அவனும் அவளோடு மல்லுக்கட்டப் போகவில்லை. “சரி, நீ சாப்பிடு!” என்றான் தன்மையாக.

“உன்ர முகமே சரியில்லையாம் எண்டு கதிரவன் சொன்னான். அதுதான் பாத்துக்கொண்டு போவம் எண்டு வந்தனான். இனி அஜயும் உனக்கு கோல் பண்ண மாட்டான். ஒண்டுக்கும் யோசிக்காத!” என்றான் இதமான குரலில்.

“அதே மாதிரி என்னில என்ன கோவம் இருந்தாலும் உனக்கு ஒரு பிரச்சினை வந்தா, எனக்குச் சொல்லவோ, என்னக் கூப்பிடவோ யோசிக்காத, சரியா?” சொல்லிக்கொண்டே எழுந்து, ஒரு ரோலை எடுத்து அவள் வாயருகில் நீட்டினான்.

அஜய் பற்றிய யோசனையில் இருந்தவள் நடப்பதை உணராமல், வாயைத் திறந்து வாங்கினாள். அதன் மிகுதியைத் தான் உண்டபடி, ஒரு தலையசைப்போடு அவளிடம் விடைபெற்றுப் போனான் அவன்.

நடப்பதை நம்ப முடியாமல் ஆதினியின் விழிகள் விரிந்து போயின.

*****

காவல் நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த எல்லாளன் மனத்தில் ஆதினியைக் குறித்த யோசனைதான்.

காவல் நிலையத்திற்கே வந்து மன்னிப்புக் கேட்டாள் என்று கதிரவன் சொன்னதை, அவனால் நம்பவே முடியவில்லை. அந்தளவுக்கு என்னாயிற்று என்றுதான் பார்க்க ஓடி வந்திருந்தான்.

இறுக்கம் என்பது அவன் இயல்பு. கூடவே, கண்டிப்பையும் கடுமையையும் இயல்பாகவே கொண்டவன். அவனோடு காவல்துறையில் பணி புரிகிறவர்களுக்கே அவனிடம் பயம் கலந்த மரியாதை இருக்கும்.

அவளிடம் மட்டும் அவனுடைய எந்த அதட்டல், அதிகாரங்களும் செல்லுபடியாகாது. அவன் பதவிக்கான மதிப்போ, பார்க்கும் தொழிலுக்கான மரியாதையோ கிடைக்கவே கிடைக்காது. பிறத்தி ஆண் என்று கூடப் பார்க்கமாட்டாள். ஒற்றைக்கு ஒற்றை வாடா என்பதுபோல் மல்லுக்கட்டி, கோபப்பட்டு அவனை உண்டு இல்லை என்றாக்குவாள்.

அப்படியானவள் இன்றும் கோபப்பட்டாள்தான். அதில் முன்பிருந்த காரம் இல்லை. அவனை யாரோவாகத் தள்ளி நிறுத்தும் தொனிதான் தெரிந்தது.

அது அவனையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தது.


*****

அஜய்க்கு அனுராதபுரம் சென்று சேரும் வரைக்கும் நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொண்டே இருந்தது. அவனை வரவேற்ற சித்தியின் முகத்திலும் பதட்டம். அவனால் தங்களுக்கும் ஏதும் பிரச்சனை வந்துவிடும் என்று நினைக்கிறாரோ? யாராக இருந்தாலும் அப்படித்தானே நினைப்பார்கள். அதிலொன்றும் தவறில்லையே!

முகக் கன்றலை மறைத்து அவரோடு பேசச் சிரமப்பட்டான். குளித்து, உடை மாற்றி, அவன் மாலை உணவை முடித்தபோது, யாரோ வீட்டின் கதவைத் தட்டினார்கள்.

விழுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தவனின் நெஞ்சு படபட என்று அடித்துக்கொண்டது. கதவைத் திறக்கப் போன சித்தியையே மிகுந்த பதட்டத்துடன் பார்த்திருந்தான்.

பொறியில் இரை வைத்துக் காத்திருந்த எல்லாளன், வீட்டின் உள்ளே நுழைந்து, அலுங்காமல் குலுங்காமல் அவனை அப்படியே அள்ளிக்கொண்டான்.

அஜய் இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்பாவுமா இவர்களுக்கு உடந்தை? அதனால்தான் அவனிடம் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லையோ?

யாழ்ப்பாணம் வந்தடைந்து, காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட கணமே அவனுக்கான விசாரணையும் ஆரம்பித்தது.

நடந்தவற்றைப் பார்த்த சாட்சி யாருமில்லை. சாமந்தி எழுந்து வந்து சொல்லப் போவதில்லை. அவனாக வாயைத் திறக்காத வரைக்கும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்கிற குருட்டு நம்பிக்கையில், சும்மாதான் கொழும்பு சென்றேன் என்றுதான் ஆரம்பத்த்தில் சாதித்தான்.

அதன் பிறகு எல்லாளன் கவனித்த கவனிப்பில், ஆலைக்குள் சென்ற கரும்பு சக்கையாக வெளிவருவது போல், உடல் முழுவதும் உயிர் வலியைத் தரும் காயங்களைச் சுமந்து வன்ஹான். தன் முன்னே நிற்பவனை நிமிர்ந்து பார்க்கவே நடுங்கினான்.

“சொல்லு!”

அதற்குமேல் எதையும் மறைக்கும் தெம்பு அஜய்க்கு இல்லை.

“எனக்கு அவளைப் பிடிக்கும் சேர். சொல்லப் பயம். படிக்கிற பிள்ளையைக் குழப்பக் கூடாது, எக்ஸாம் முடியட்டும் எண்டு நினைச்சிருந்தன். ஒரு நாள்… ஒரு நாள்...” என்றவனுக்கு மேலே சொல்ல முடியாமல் அழுகை வந்தது.

எதையும் அவன் திட்டமிட்டு நிகழ்த்தவில்லை. நடந்ததை அன்று அவனுமே எதிர்பார்க்கவில்லை. அதுவே, இன்றைக்கு அவனை எங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது என்று துடித்தான்.

“ஒரு நாள் சாகித்தியனத் தேடி அவேன்ர வீட்ட போனனான். பெல் அடிக்க, வந்து திறந்தது சாமந்தி. பாக்கவே வித்தியாசமா இருந்தாள். என்னைப் பாத்துக் கோணலாச் சிரிச்சாள். எனக்கு ஒண்டும் விளங்கேல்ல. ஒரு நாளும் அவள் அப்பிடி இல்ல. என்னோட கதைச்சதே இல்ல. ஆனா அண்டைக்கு, சாகித்தியன் எங்க எண்டு கேக்க, வா எண்டு கையைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு அவளின்ர அறைக்க கூட்டிக்கொண்டு போனவள். பிறகு… பிறகு... சத்தியமா நான் அத எதிர்பாக்கவும் இல்ல, பிளான் பண்ணவும் இல்ல. அவள்... அவள்தான் சேர்... அது... பிழை நடந்திட்டுது சேர். அவள் சுய நினைவிலேயே இல்ல. பயத்தில அங்க இருந்து ஓடி வந்திட்டன் சேர்.” அவனுக்கு எல்லாளனின் முகம் பார்க்கவே வெட்கமாக இருந்தது.

“அதுக்குப் பிறகு அதைப் பற்றி அவள் உன்னோட கதைக்கேல்லையா?”

“அதுதான் சேர் எனக்கும் குழப்பம். சாகித்தியனிட்டச் சொல்லி, பிரச்சினை பெருசாகப் போகுது எண்டு நான் பயந்துகொண்டு இருக்க, அப்பிடி ஒண்டும் நடக்கவே இல்ல. ஒரு கிழமைக்குப் பிறகு சாகித்தியனோட அவேன்ர வீட்டைப் போனனான். அவளும் என்னைப் பாத்தவள். ஆனா ஒண்டும் கதைக்கேல்ல.”

“இது எப்ப நடந்தது?”

அவன் சொன்ன திகதி, அவள் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முதலாக இருந்தது.

“போதைய அவளுக்கு நீயா பழக்கினது?”

“இல்ல சேர். கடவுள் சத்தியமா இல்ல சேர். எனக்கு அவள் போதை மருந்து எடுத்திருக்கிறாள் எண்டுறதே, நீங்க எல்லாரும் சொல்லித்தான் தெரியும். அப்பிடி ஒரு சந்தேகம் வந்திருந்தா, எங்களுக்க நடந்தத மறைச்சாலும் அத சாகித்தியனிட்டச் சொல்லியிருப்பன் சேர். செத்த வீட்டில அவளை உயிர் இல்லாத உடம்பாப் பாக்கவே ஏலாம இருந்தது. அழுகை வந்தது. அதைப் போலீஸ் கவனிச்சிட்டினம். பிடிபட்டா போதையப் பழக்கி, அவள் சாகிறதுக்கும் நான்தான் காரணம் எண்டு சொல்லிப்போடுவினமோ எண்டு பயந்துதான் ஓடி ஒளிஞ்சனான். நான் செய்தது பிழைதான். ஆனா, வேணுமெண்டு செய்யேல்ல சேர்.”

“நீ ஏன் அவள் வித்தியாசமா நடந்ததைச் சாகித்தியனுக்குச் சொல்லேல்ல?”

“எப்பிடி உனக்குத் தெரியும் எண்டு கேட்டா, என்ன சொல்லுறது எண்டுற பயம். அதைவிட, அவளே ஒண்டும் சொல்லாம இருக்கிறாள். நானாச் சொல்லிப் பிரச்சினையப் பெருசாக்க வேண்டாம் எண்டு நினைச்சன். முதல் அத எப்பிடி… அவனிட்டச் சொல்லுறது எண்டு… அதைவிட, அவளுக்கு எல்லாம் போதைப் பழக்கம் இருக்கும் எண்டு நான் யோசிக்கவே இல்ல சேர். அவ்வளவு நல்ல பிள்ளை. கெட்டிக்காரி. அவள் அவள்...” என்றவனுக்கு மேலே வார்த்தைகள் வர மறுத்தன.

முகத்தை மூடிக்கொண்டு அழுதான். என்ன இருந்தாலும் ஆசையாக நேசித்த பெண்ணாயிற்றே!

“இன்னும் ஏதாவது மறைக்கிறியா?” விழிகள் இரண்டும் கூர் ஈட்டியாக அவன் நெஞ்சைத் துளைக்க வினவினான் எல்லாளன்.

“இல்ல சேர். உண்மையா இல்ல. இதத் தவிர வேற ஒண்டும் நான் செய்யேல்ல சேர். பயத்திலதான் கொழும்புக்கு ஓடினான்.”

“இன்னும் எதையாவது மறைச்சியோ, அதுக்குப் பிறகு காலம் முழுக்கக் கவலைப் படுற மாதிரிப் போயிடும்!” என்று அவனை எச்சரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் எல்லாளன்.
 
Top Bottom