அத்தியாயம் 18
யாழ் பல்கலையின் விவசாயப் பீடம், கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்திருந்தது. நிரல்யா அங்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடியிருந்தன. இந்தமுறை சுந்தரலிங்கம் எங்கும் தங்கிப் படிப்பதற்கு அனுமதிக்கவில்லை. இங்கிருந்து தினமும் அவளை அழைத்துச் சென்று, திருப்பிக் கூட்டிக்கொண்டு வருவதற்கு என்றே பிரத்தியேகமாக ஒருவர் காருடன் நியமிக்கப்பட்டிருந்தார்.
அது இலகுவே இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரப் பயணம். தினமும் போய் வருவதற்கு மட்டும் மூன்று மணி நேரங்களைச் செலவழிக்கவேண்டியிருந்தது. ஆனாலும் பரவாயில்லை என்றுவிட்டார் சுந்தரலிங்கம்.
ஆரம்பத்தில் அந்த வேலையை அனந்தன்தான் பார்த்தான். அவனுக்கு இங்கே கடையையும் வட்டித் தொழிலையும் பார்த்து, அவளோடும் தினமும் அலைவது மிகுந்த சிரமம் என்பதில் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள்.
இன்று வாகன ஓட்டி விடுமுறை எடுத்திருந்ததால் அனந்தன்தான் அவளை அழைத்துச் செல்வான். சரியான நேரத்துக்குத் தயாராகி அவள் கீழே வந்தபோது, அங்கே அனந்தன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
இப்படி உண்ணும் வேளைகளில் மட்டுமே அந்த வீட்டிற்குள் அவனைக் காண முடியும். மற்றும்படி அவசியம் தவிர்த்து விறாந்தைக்குக் கூட வரமாட்டான். பெரும்பான்மை அவர்களின் கடை மற்றும் வட்டித் தொழில் சம்மந்தமான பேச்சுகள் என்பதால் முற்றத்தில் நின்று, பெண்கள் இருவரினதும் காதுகளை எட்டாத வகையில் சுந்தரலிங்கத்தோடு கதைத்துவிட்டு, வீட்டின் பின் பக்கமாக மேலே ஏறிவிட்டான் என்றால் அந்த வீட்டுக்கும் அவனுக்குமான தொடர்பு அறுந்துவிடும்.
அவளும் வந்து அமர, சம்பலோடு சேர்த்து இடியப்பமும் சொதியும் பரிமாறினார் அமிர்தவல்லி. அவளும் உண்பதில் கவனம் செலுத்தினாள்.
“இண்டைக்கு கம்பஸ் எத்தினைக்கு முடியும் பிள்ளை?” என்ற அமிர்தவல்லியின் கேள்விக்கு, “மூண்டு மணியாகும் அம்மா.” என்று பதில் சொன்னாள் நிரல்யா.
“உனக்கு ஓகேயாப்பு?”
“அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல மாமி.”
அவ்வளவுதான் அந்த மூவரும் பேசிக்கொண்டவை. அவள் இங்கேயே வந்துவிட்டதில் பெரியவர்களுக்கு நிம்மதிதான் என்றாலும் அந்த வீட்டின் பழைய சந்தோசம் காணாமலேயே போயிற்று.
முன்னர் எல்லாம் உணவு வேளைகளில் அனந்தன்தான் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுவிட்டுப் போவான். இப்போது அவளும்.
அந்தளவில் ஒரு இறுக்கம் அந்த வீட்டிற்குள் படர்ந்தே கிடந்தது. யாரும் இயல்பாய் இல்லை. இயல்பாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டனர்.
உண்மையிலேயே அவனை மறந்துவிட்டாளா, இல்லை அவர்கள் அறியாமல் இன்னும் அந்தத் தொடர்பு இருக்கிறதா என்கிற கேள்விகள் அவர்கள் மனத்தில் அரித்துக்கொண்டே இருந்தன. அவளைப் பழையபடி நம்பப் பயந்தனர்.
உடைந்த பாத்திரத்தை எப்படி ஒட்டினாலும் அடையாளம் தெரியும் என்பதுபோல், என்னதான் அனைத்தையும் தம் கட்டுக்குள் கொண்டு வந்தாயிற்று என்று எண்ணினாலும் ஒரு பயம் இல்லாமல் இல்லை. அவள் மீதான கண்காணிப்புத் தொடர்ந்துகொண்டே இருந்தது. அதுவே அவளை அங்குப் பழையபடி இருக்கவிடாமல் செய்ததென்றால் மற்றவர்களால் அவளோடு எப்போதுபோல இருக்க முடியாமல் போயிற்று.
அவளின் வயதிற்குக் கண்ணனுக்குக் குளிர்ச்சியாக ஒருவனைப் பக்கத்தில் பார்த்ததும் மனத்தை அலைபாய விட்டுவிட்டாள். இப்படித் தள்ளி வந்துவிட்டால் கண்ணில் படாதது கருத்திலும் பதியாமல் போய்விடும் என்றுமட்டும் நம்பினர்.
ஆனாலும் கூட அவள் படிப்பு எப்போது முடியும், எப்போது அனந்தனுக்குக் கட்டி வைக்கலாம் என்று காத்துக்கொண்டு இருந்தார் சுந்தரலிங்கம்.
இப்போதெல்லாம் அவள் தொடர்பான எந்த முடிவுகளும் அவளிடம் இல்லை. சுந்தரலிங்கம் எடுக்க அதை அனந்தன் நடைமுறைப்படுத்தினான். அவர்கள் சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளையாகிப்போனாள் நிரல்யா.
வெளியே செல்வது, பழைய நண்பர்களைச் சந்திக்க நினைப்பது, தேவையான பொருட்கள் வாங்க கடைகளுக்குப் போவதெல்லாம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தன. என்ன என்றாலும் அமிர்தவல்லி அல்லது அனந்தன் உடனிருப்பார்கள்.
உணவு முடிந்ததும் புறப்பட்டனர். இன்னும் அதே சிவப்பு நிற பஜிரோ. யன்னல்களைத் திறந்துவிட்டிருந்தான். அவன் வீதியில் கவனமாய் இருக்க, அவள் நகரும் தெருவோரத்தில் பார்வையைப் பதித்திருந்தாள்.
வெயில் முற்றிலும் வந்துவிடாத காலை நேரத்துக் காற்று மனத்துக்கு இதமாய் வீசினாலும் சிசிரவின் நினைவுகள் வந்து அவள் இதயத்தைக் கனமாக்கின.
இந்த மூன்று மாதங்களில் இன்னும் ஒரு தடவை கூட இருவரும் பார்க்கவோ, பேசவோ இல்லை. புதுக் கைப்பேசி, மடிக்கணனி எல்லாம் இங்கே பல்கலையில் சேர்ந்ததும் சுந்தரலிங்கம் வாங்கிக் கொடுத்திருந்தார். ஆனாலும் கூட அவள் அவனோடு கதைக்க, ஏன் குறுந்தகவல் அனுப்பக் கூடப் போகவில்லை. காரணம் அருகில் இருக்கிறவன்.
அன்று, பேராதனை பல்கலையில் சிசிரவிடம் கண்ணீரோடு விடைபெற்று வெளியே வந்தவளை நண்பர் நண்பிகள் சூழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் சொல்லிக்கொண்டு புறப்பட ஆயத்தமானவளைத் தனியாகச் சந்தித்திருந்தான் மகிந்த.
அருகில் இருக்கிறவன் காலி வரைக்கும் சென்று, அவர்களின் தேநீர்க் கடையை அடித்து நொறுக்கியிருக்கிறான் என்று அவன் மூலம் அறிந்ததும் விக்கித்துப்போனாள். நம்பவே முடியவில்லை. நடந்த விடயத்தில் சரி சமமான பங்கு அவளுக்கும் உண்டு. அப்படியிருக்க அவனை அடித்து, பல்கலையில் வைத்து அவமானப்படுத்தியது போதாது என்று எளிய மனிதர்களின் வாழ்வாதாரத்தில் கையை வைத்திருக்கிறார்கள் என்றால் என்ன மனிதர்கள் இவர்கள் என்று கொதித்துப்போனாள்,
இதில், “இத நீ அவனிட்டப் போய்க் கேக்காத. உனக்குத் தெரிய வேண்டாம் எண்டுதான் சொன்னவன். அப்பிடி இருந்தும் நான் சொல்லுறதுக்குக் காரணம், கடையத் திரும்பப் போடுறதுக்கு அவன்ர பைக்கை வித்திட்டான். இப்ப வெளிநாட்டுக்குப் போற செலவுக்கு இருக்கிற காணிய விக்கப் போறானாம். அது அவன்ர அம்மம்மா அவன்ர அம்மாக்குக் குடுத்தது. அது ஒண்டுதான் அவேக்குச் சொந்தம் எண்டு இருக்கிறதும். அத வித்துப்போட்டு இவன் வெளிநாட்டுக்குப் போயிடுவான். அவன்ர அம்மாவும் அப்பாவும் ஒரு பொம்பிளைப் பிள்ளையோட எங்க போய் இருப்பினம் சொல்லு?” என்று மகிந்த கேட்டபோது அவளிடம் பதில் இல்லை.
மளுக்கென்று நிறைந்து வழிந்துவிட்ட கண்ணீரை வேகமாகத் துடைத்துக்கொண்டு, திரும்ப திரும்பக் கலங்கிய விழிகளைச் சிமிட்டித் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றாள்.
எல்லாம் அவளால்தானே. அவள் மீது அவன் கொண்ட நேசத்தினால் உண்டானது. நீயும் வேண்டாம் உன் குடும்பத்தினால் உண்டான அவமானமும் வேண்டாம் எண்றுவிட்டுப் போக அவனுக்கு எவ்வளவு நேரமாகும்? அப்படி இல்லாமல் அவள் வேண்டும் என்பதற்காகத் தன் குடும்பத்தையும் சேர்த்து வருத்த நினைக்கும் அவனுக்கு என்ன செய்யப் போகிறாள் அவனுடைய நிரா?
அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் சொல்லியே ஆகவேண்டியது என்பதில் தொடர்ந்து சொன்னான் மகிந்த. அதற்கு முதல் அவன் சரண்யாவைப் பார்க்க, அவள் இவளுக்கு அருந்தத் தண்ணீர் கொடுத்தாள்.
நிரல்யா தண்ணீரை அருந்திக் கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும், “பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு இருக்கிறதையும் கைய விடுற கதையாப் போகப்போகுது எண்டு பயமா இருக்கு நிரல்யா. எவ்வளவு சொன்னாலும் கேக்கிறான் இல்ல. போயே தீருவன் எண்டு நிக்கிறான். அங்க போன பிறகும் சிலவுக்கு இவன் என்ன செய்வான்? வேலை பாத்துக்கொண்டே படிக்கிறது எல்லாம் ஈஸி இல்ல. அப்பிடி வேலை செய்து உழைக்கிற காசு காணுமா எண்டும் தெரியாது. இங்க காணிய வித்துப்போட்டு வாடகை வீட்டுக்குப் போனா வாடகையும் கட்டி, அந்தக் குடும்பம் வாழுற அளவுக்கான வருமானம் தேத்தண்ணிக் கடையில இருந்து வருமா எண்டும் தெரியாது. அவன்ர தங்கச்சி இப்பதான் ஸ்கூல் முடிச்சிருக்கிறாள். இனி அவளின்ர படிப்புக்கும் சிலவு இருக்கு. என்னைக் கேட்டா குடும்பத்தையும் பாத்துக்கொண்டு அவன் இங்க படிக்கிறதுதான் நல்லம் எண்டு சொல்லுவன். அவன்ர அம்மா அப்பா பாவம். உலகம் தெரியாத, ஊரோடயே வாழ்ந்த மனுசர். இவன் சொல்லுறதக் கண்ணை மூடிக்கொண்டு செய்வினம். நீ ஒருக்கா அவனோட கதைக்கிறியா? என்ன சொன்னாலும் கேக்காம தன்ர முடிவிலையே நிக்கிறான்.” என்று சொன்னான்.
அவளுக்கு எதையும் யோசிக்க முடியவில்லை. அவன் சொல்ல சொல்ல மூளை எல்லாம் விறைத்த நிலை. இன்னுமே தன் வீட்டினரின் ஈவிரக்கமற்ற செய்கையை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் நின்றாள். நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று விளங்கவே இல்லை. கூடவே, சொந்தமாய் இருக்கிற ஒற்றைக் காணியை விற்று, தன் குடும்பத்தைப் பெரும் சிரமத்தில் தவிக்க விட்டு என்றாலும் வெளிநாடு போகும் அளவுக்கு அவன் மனநிலை இருந்த போதிலும் அந்தக் கோபத்தைத் தன்னிடம் காட்டாதவனின் அன்பு அவள் விழிகளை மீண்டும் பனிக்க வைத்தது. அதுதான் அவள் அவ்வளவு கெஞ்சியும் போயே தீருவேன் என்று நின்றிருக்கிறான்.
வசதிதான் இல்லை. அதற்கென்று முதுகெலும்பும் இல்லையா என்ன? இல்லை, அவன் சாப்பிடும் சோற்றில் உப்புத்தான் இல்லையா? இப்போது அவளுக்கும் அவன் வெளிநாடு போவதுதான் சரி என்று பட்டது. ஆனால் எப்படி?
“சீனியர், எனக்குத் தெரியும் எண்டு நீங்களும் அவருக்குச் சொல்ல வேண்டாம். ஆனா…” என்றவளுக்கு இதற்கு என்ன செய்வது என்று அவசரத்துக்குப் பிடிபட மாட்டேன் என்றது. ஆனால், ஏதாவது செய்தேயாக வேண்டும் என்கிற வைராக்கியம் நெஞ்சில் உண்டாயிற்று.
அதில், “என்ன செய்றது எண்டு இந்த நிமிசம் எனக்கும் தெரியேல்ல சீனியர். ஆனா ஏதாவது செய்வன். அவரைக் காணிய விக்க விடாதீங்க.” என்றவள் அவன் கைப்பேசி எண்ணை எழுதி வாங்கி, மறைத்து வைத்துக்கொண்டாள்.
“அங்க கம்பஸ்ல சேர்ந்ததும் என்னோட படிக்கிற யாராவது ஒருத்தின்ர நம்பர்ல இருந்து உங்களோட கதைக்கிறன். அவருக்கு எவ்வளவு தேவை, எப்ப தேவை எண்டு சொல்லுங்க. அதுக்கு நான் ஏற்பாடு செய்றன். மற்றது அந்தக் காச நீங்கதான் அங்க வந்து வாங்கவேண்டி வரும். சீனியர் நீங்க எனக்கு அண்ணா மாதிரி. இந்த உதவியக் கட்டாயம் செய்வீங்களா? அவர் பாவம்.” என்று கண்கள் கலங்கிவிடவும் அவனுக்கும் நெஞ்சுக்குள் என்னவோ அடைக்கும் உணர்வு.
அவர்கள் இருவரையும் அவனும்தானே பார்த்துக்கொண்டு இருக்கிறான். அதில், “கட்டாயம்! உங்க ரெண்டு பேருக்காகவும் நிச்சயமாச் செய்வன். இப்ப மட்டும் இல்ல, எப்ப என்ன உதவி எண்டாலும் எனக்குச் சொல்ல மறக்காத. நான் இருக்கிறன் உங்களுக்கு. உன்ர பிரெண்டும் இருப்பாளா எண்டு கேள்.” என்றான் பக்கத்தில் மெலிதாகக் கலங்கிவிட்ட விழிகளோடு நின்றிருந்த சரண்யாவைப் பார்வையால் காட்டி.
“நான் எப்பவும் இருப்பன்.” என்றாள் அவள் அவனை நேராகப் பார்த்து.
“பிறகு என்ன, நீயும் உன்ர நம்பரை தா. ஏதும் அவசரம் எண்டால் கதைக்க உதவும்.” என்று அவள் கைப்பேசி எண்ணையும் வாங்கிக்கொண்டான் மகிந்த.
அதன் பிறகு அவளின் நண்பர்கள் ஜீப் வரையிலும் கூட வந்து, எதிர்காலத்துக்காய் வாழ்த்தி, கண்ணீரும் அணைப்புமாகவே அவளுக்கு விடைகொடுத்திருந்தனர்.
அந்தக் கண்ணீர் அவளை அனந்தனின் சந்தேகப் பார்வையிலிருந்து காப்பாற்றியிருந்தது. அல்லது, அவளின் அழுத முகத்தை மட்டுமே காரணமாக வைத்து எதையும் கேட்கவிடாமல் செய்தது என்றும் சொல்லலாம். அவளும் தப்பித்துக்கொண்டாள். ஆனால், அவன் மீதான வெறுப்பொன்று அவள் மனத்தில் படிந்து போயிற்று.
வீட்டுக்கு வந்த பிறகு சிசிரவைச் சந்தித்துப் பேசியதை, சத்தியத்தை மீறியதைச் சொல்லிவிடுவானோ என்று அவள் பயந்ததற்கு மாறாக, வாயைத் திறக்காமல் இருந்து அவளைக் காப்பாற்றியிருந்தான் அனந்தன்.
இப்படி ஏன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி நடக்கிறான் என்று புரியவே இல்லை.
யாழ் பல்கலையின் விவசாயப் பீடம், கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்திருந்தது. நிரல்யா அங்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடியிருந்தன. இந்தமுறை சுந்தரலிங்கம் எங்கும் தங்கிப் படிப்பதற்கு அனுமதிக்கவில்லை. இங்கிருந்து தினமும் அவளை அழைத்துச் சென்று, திருப்பிக் கூட்டிக்கொண்டு வருவதற்கு என்றே பிரத்தியேகமாக ஒருவர் காருடன் நியமிக்கப்பட்டிருந்தார்.
அது இலகுவே இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரப் பயணம். தினமும் போய் வருவதற்கு மட்டும் மூன்று மணி நேரங்களைச் செலவழிக்கவேண்டியிருந்தது. ஆனாலும் பரவாயில்லை என்றுவிட்டார் சுந்தரலிங்கம்.
ஆரம்பத்தில் அந்த வேலையை அனந்தன்தான் பார்த்தான். அவனுக்கு இங்கே கடையையும் வட்டித் தொழிலையும் பார்த்து, அவளோடும் தினமும் அலைவது மிகுந்த சிரமம் என்பதில் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள்.
இன்று வாகன ஓட்டி விடுமுறை எடுத்திருந்ததால் அனந்தன்தான் அவளை அழைத்துச் செல்வான். சரியான நேரத்துக்குத் தயாராகி அவள் கீழே வந்தபோது, அங்கே அனந்தன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
இப்படி உண்ணும் வேளைகளில் மட்டுமே அந்த வீட்டிற்குள் அவனைக் காண முடியும். மற்றும்படி அவசியம் தவிர்த்து விறாந்தைக்குக் கூட வரமாட்டான். பெரும்பான்மை அவர்களின் கடை மற்றும் வட்டித் தொழில் சம்மந்தமான பேச்சுகள் என்பதால் முற்றத்தில் நின்று, பெண்கள் இருவரினதும் காதுகளை எட்டாத வகையில் சுந்தரலிங்கத்தோடு கதைத்துவிட்டு, வீட்டின் பின் பக்கமாக மேலே ஏறிவிட்டான் என்றால் அந்த வீட்டுக்கும் அவனுக்குமான தொடர்பு அறுந்துவிடும்.
அவளும் வந்து அமர, சம்பலோடு சேர்த்து இடியப்பமும் சொதியும் பரிமாறினார் அமிர்தவல்லி. அவளும் உண்பதில் கவனம் செலுத்தினாள்.
“இண்டைக்கு கம்பஸ் எத்தினைக்கு முடியும் பிள்ளை?” என்ற அமிர்தவல்லியின் கேள்விக்கு, “மூண்டு மணியாகும் அம்மா.” என்று பதில் சொன்னாள் நிரல்யா.
“உனக்கு ஓகேயாப்பு?”
“அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல மாமி.”
அவ்வளவுதான் அந்த மூவரும் பேசிக்கொண்டவை. அவள் இங்கேயே வந்துவிட்டதில் பெரியவர்களுக்கு நிம்மதிதான் என்றாலும் அந்த வீட்டின் பழைய சந்தோசம் காணாமலேயே போயிற்று.
முன்னர் எல்லாம் உணவு வேளைகளில் அனந்தன்தான் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுவிட்டுப் போவான். இப்போது அவளும்.
அந்தளவில் ஒரு இறுக்கம் அந்த வீட்டிற்குள் படர்ந்தே கிடந்தது. யாரும் இயல்பாய் இல்லை. இயல்பாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டனர்.
உண்மையிலேயே அவனை மறந்துவிட்டாளா, இல்லை அவர்கள் அறியாமல் இன்னும் அந்தத் தொடர்பு இருக்கிறதா என்கிற கேள்விகள் அவர்கள் மனத்தில் அரித்துக்கொண்டே இருந்தன. அவளைப் பழையபடி நம்பப் பயந்தனர்.
உடைந்த பாத்திரத்தை எப்படி ஒட்டினாலும் அடையாளம் தெரியும் என்பதுபோல், என்னதான் அனைத்தையும் தம் கட்டுக்குள் கொண்டு வந்தாயிற்று என்று எண்ணினாலும் ஒரு பயம் இல்லாமல் இல்லை. அவள் மீதான கண்காணிப்புத் தொடர்ந்துகொண்டே இருந்தது. அதுவே அவளை அங்குப் பழையபடி இருக்கவிடாமல் செய்ததென்றால் மற்றவர்களால் அவளோடு எப்போதுபோல இருக்க முடியாமல் போயிற்று.
அவளின் வயதிற்குக் கண்ணனுக்குக் குளிர்ச்சியாக ஒருவனைப் பக்கத்தில் பார்த்ததும் மனத்தை அலைபாய விட்டுவிட்டாள். இப்படித் தள்ளி வந்துவிட்டால் கண்ணில் படாதது கருத்திலும் பதியாமல் போய்விடும் என்றுமட்டும் நம்பினர்.
ஆனாலும் கூட அவள் படிப்பு எப்போது முடியும், எப்போது அனந்தனுக்குக் கட்டி வைக்கலாம் என்று காத்துக்கொண்டு இருந்தார் சுந்தரலிங்கம்.
இப்போதெல்லாம் அவள் தொடர்பான எந்த முடிவுகளும் அவளிடம் இல்லை. சுந்தரலிங்கம் எடுக்க அதை அனந்தன் நடைமுறைப்படுத்தினான். அவர்கள் சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளையாகிப்போனாள் நிரல்யா.
வெளியே செல்வது, பழைய நண்பர்களைச் சந்திக்க நினைப்பது, தேவையான பொருட்கள் வாங்க கடைகளுக்குப் போவதெல்லாம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தன. என்ன என்றாலும் அமிர்தவல்லி அல்லது அனந்தன் உடனிருப்பார்கள்.
உணவு முடிந்ததும் புறப்பட்டனர். இன்னும் அதே சிவப்பு நிற பஜிரோ. யன்னல்களைத் திறந்துவிட்டிருந்தான். அவன் வீதியில் கவனமாய் இருக்க, அவள் நகரும் தெருவோரத்தில் பார்வையைப் பதித்திருந்தாள்.
வெயில் முற்றிலும் வந்துவிடாத காலை நேரத்துக் காற்று மனத்துக்கு இதமாய் வீசினாலும் சிசிரவின் நினைவுகள் வந்து அவள் இதயத்தைக் கனமாக்கின.
இந்த மூன்று மாதங்களில் இன்னும் ஒரு தடவை கூட இருவரும் பார்க்கவோ, பேசவோ இல்லை. புதுக் கைப்பேசி, மடிக்கணனி எல்லாம் இங்கே பல்கலையில் சேர்ந்ததும் சுந்தரலிங்கம் வாங்கிக் கொடுத்திருந்தார். ஆனாலும் கூட அவள் அவனோடு கதைக்க, ஏன் குறுந்தகவல் அனுப்பக் கூடப் போகவில்லை. காரணம் அருகில் இருக்கிறவன்.
அன்று, பேராதனை பல்கலையில் சிசிரவிடம் கண்ணீரோடு விடைபெற்று வெளியே வந்தவளை நண்பர் நண்பிகள் சூழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் சொல்லிக்கொண்டு புறப்பட ஆயத்தமானவளைத் தனியாகச் சந்தித்திருந்தான் மகிந்த.
அருகில் இருக்கிறவன் காலி வரைக்கும் சென்று, அவர்களின் தேநீர்க் கடையை அடித்து நொறுக்கியிருக்கிறான் என்று அவன் மூலம் அறிந்ததும் விக்கித்துப்போனாள். நம்பவே முடியவில்லை. நடந்த விடயத்தில் சரி சமமான பங்கு அவளுக்கும் உண்டு. அப்படியிருக்க அவனை அடித்து, பல்கலையில் வைத்து அவமானப்படுத்தியது போதாது என்று எளிய மனிதர்களின் வாழ்வாதாரத்தில் கையை வைத்திருக்கிறார்கள் என்றால் என்ன மனிதர்கள் இவர்கள் என்று கொதித்துப்போனாள்,
இதில், “இத நீ அவனிட்டப் போய்க் கேக்காத. உனக்குத் தெரிய வேண்டாம் எண்டுதான் சொன்னவன். அப்பிடி இருந்தும் நான் சொல்லுறதுக்குக் காரணம், கடையத் திரும்பப் போடுறதுக்கு அவன்ர பைக்கை வித்திட்டான். இப்ப வெளிநாட்டுக்குப் போற செலவுக்கு இருக்கிற காணிய விக்கப் போறானாம். அது அவன்ர அம்மம்மா அவன்ர அம்மாக்குக் குடுத்தது. அது ஒண்டுதான் அவேக்குச் சொந்தம் எண்டு இருக்கிறதும். அத வித்துப்போட்டு இவன் வெளிநாட்டுக்குப் போயிடுவான். அவன்ர அம்மாவும் அப்பாவும் ஒரு பொம்பிளைப் பிள்ளையோட எங்க போய் இருப்பினம் சொல்லு?” என்று மகிந்த கேட்டபோது அவளிடம் பதில் இல்லை.
மளுக்கென்று நிறைந்து வழிந்துவிட்ட கண்ணீரை வேகமாகத் துடைத்துக்கொண்டு, திரும்ப திரும்பக் கலங்கிய விழிகளைச் சிமிட்டித் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றாள்.
எல்லாம் அவளால்தானே. அவள் மீது அவன் கொண்ட நேசத்தினால் உண்டானது. நீயும் வேண்டாம் உன் குடும்பத்தினால் உண்டான அவமானமும் வேண்டாம் எண்றுவிட்டுப் போக அவனுக்கு எவ்வளவு நேரமாகும்? அப்படி இல்லாமல் அவள் வேண்டும் என்பதற்காகத் தன் குடும்பத்தையும் சேர்த்து வருத்த நினைக்கும் அவனுக்கு என்ன செய்யப் போகிறாள் அவனுடைய நிரா?
அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் சொல்லியே ஆகவேண்டியது என்பதில் தொடர்ந்து சொன்னான் மகிந்த. அதற்கு முதல் அவன் சரண்யாவைப் பார்க்க, அவள் இவளுக்கு அருந்தத் தண்ணீர் கொடுத்தாள்.
நிரல்யா தண்ணீரை அருந்திக் கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும், “பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு இருக்கிறதையும் கைய விடுற கதையாப் போகப்போகுது எண்டு பயமா இருக்கு நிரல்யா. எவ்வளவு சொன்னாலும் கேக்கிறான் இல்ல. போயே தீருவன் எண்டு நிக்கிறான். அங்க போன பிறகும் சிலவுக்கு இவன் என்ன செய்வான்? வேலை பாத்துக்கொண்டே படிக்கிறது எல்லாம் ஈஸி இல்ல. அப்பிடி வேலை செய்து உழைக்கிற காசு காணுமா எண்டும் தெரியாது. இங்க காணிய வித்துப்போட்டு வாடகை வீட்டுக்குப் போனா வாடகையும் கட்டி, அந்தக் குடும்பம் வாழுற அளவுக்கான வருமானம் தேத்தண்ணிக் கடையில இருந்து வருமா எண்டும் தெரியாது. அவன்ர தங்கச்சி இப்பதான் ஸ்கூல் முடிச்சிருக்கிறாள். இனி அவளின்ர படிப்புக்கும் சிலவு இருக்கு. என்னைக் கேட்டா குடும்பத்தையும் பாத்துக்கொண்டு அவன் இங்க படிக்கிறதுதான் நல்லம் எண்டு சொல்லுவன். அவன்ர அம்மா அப்பா பாவம். உலகம் தெரியாத, ஊரோடயே வாழ்ந்த மனுசர். இவன் சொல்லுறதக் கண்ணை மூடிக்கொண்டு செய்வினம். நீ ஒருக்கா அவனோட கதைக்கிறியா? என்ன சொன்னாலும் கேக்காம தன்ர முடிவிலையே நிக்கிறான்.” என்று சொன்னான்.
அவளுக்கு எதையும் யோசிக்க முடியவில்லை. அவன் சொல்ல சொல்ல மூளை எல்லாம் விறைத்த நிலை. இன்னுமே தன் வீட்டினரின் ஈவிரக்கமற்ற செய்கையை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் நின்றாள். நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று விளங்கவே இல்லை. கூடவே, சொந்தமாய் இருக்கிற ஒற்றைக் காணியை விற்று, தன் குடும்பத்தைப் பெரும் சிரமத்தில் தவிக்க விட்டு என்றாலும் வெளிநாடு போகும் அளவுக்கு அவன் மனநிலை இருந்த போதிலும் அந்தக் கோபத்தைத் தன்னிடம் காட்டாதவனின் அன்பு அவள் விழிகளை மீண்டும் பனிக்க வைத்தது. அதுதான் அவள் அவ்வளவு கெஞ்சியும் போயே தீருவேன் என்று நின்றிருக்கிறான்.
வசதிதான் இல்லை. அதற்கென்று முதுகெலும்பும் இல்லையா என்ன? இல்லை, அவன் சாப்பிடும் சோற்றில் உப்புத்தான் இல்லையா? இப்போது அவளுக்கும் அவன் வெளிநாடு போவதுதான் சரி என்று பட்டது. ஆனால் எப்படி?
“சீனியர், எனக்குத் தெரியும் எண்டு நீங்களும் அவருக்குச் சொல்ல வேண்டாம். ஆனா…” என்றவளுக்கு இதற்கு என்ன செய்வது என்று அவசரத்துக்குப் பிடிபட மாட்டேன் என்றது. ஆனால், ஏதாவது செய்தேயாக வேண்டும் என்கிற வைராக்கியம் நெஞ்சில் உண்டாயிற்று.
அதில், “என்ன செய்றது எண்டு இந்த நிமிசம் எனக்கும் தெரியேல்ல சீனியர். ஆனா ஏதாவது செய்வன். அவரைக் காணிய விக்க விடாதீங்க.” என்றவள் அவன் கைப்பேசி எண்ணை எழுதி வாங்கி, மறைத்து வைத்துக்கொண்டாள்.
“அங்க கம்பஸ்ல சேர்ந்ததும் என்னோட படிக்கிற யாராவது ஒருத்தின்ர நம்பர்ல இருந்து உங்களோட கதைக்கிறன். அவருக்கு எவ்வளவு தேவை, எப்ப தேவை எண்டு சொல்லுங்க. அதுக்கு நான் ஏற்பாடு செய்றன். மற்றது அந்தக் காச நீங்கதான் அங்க வந்து வாங்கவேண்டி வரும். சீனியர் நீங்க எனக்கு அண்ணா மாதிரி. இந்த உதவியக் கட்டாயம் செய்வீங்களா? அவர் பாவம்.” என்று கண்கள் கலங்கிவிடவும் அவனுக்கும் நெஞ்சுக்குள் என்னவோ அடைக்கும் உணர்வு.
அவர்கள் இருவரையும் அவனும்தானே பார்த்துக்கொண்டு இருக்கிறான். அதில், “கட்டாயம்! உங்க ரெண்டு பேருக்காகவும் நிச்சயமாச் செய்வன். இப்ப மட்டும் இல்ல, எப்ப என்ன உதவி எண்டாலும் எனக்குச் சொல்ல மறக்காத. நான் இருக்கிறன் உங்களுக்கு. உன்ர பிரெண்டும் இருப்பாளா எண்டு கேள்.” என்றான் பக்கத்தில் மெலிதாகக் கலங்கிவிட்ட விழிகளோடு நின்றிருந்த சரண்யாவைப் பார்வையால் காட்டி.
“நான் எப்பவும் இருப்பன்.” என்றாள் அவள் அவனை நேராகப் பார்த்து.
“பிறகு என்ன, நீயும் உன்ர நம்பரை தா. ஏதும் அவசரம் எண்டால் கதைக்க உதவும்.” என்று அவள் கைப்பேசி எண்ணையும் வாங்கிக்கொண்டான் மகிந்த.
அதன் பிறகு அவளின் நண்பர்கள் ஜீப் வரையிலும் கூட வந்து, எதிர்காலத்துக்காய் வாழ்த்தி, கண்ணீரும் அணைப்புமாகவே அவளுக்கு விடைகொடுத்திருந்தனர்.
அந்தக் கண்ணீர் அவளை அனந்தனின் சந்தேகப் பார்வையிலிருந்து காப்பாற்றியிருந்தது. அல்லது, அவளின் அழுத முகத்தை மட்டுமே காரணமாக வைத்து எதையும் கேட்கவிடாமல் செய்தது என்றும் சொல்லலாம். அவளும் தப்பித்துக்கொண்டாள். ஆனால், அவன் மீதான வெறுப்பொன்று அவள் மனத்தில் படிந்து போயிற்று.
வீட்டுக்கு வந்த பிறகு சிசிரவைச் சந்தித்துப் பேசியதை, சத்தியத்தை மீறியதைச் சொல்லிவிடுவானோ என்று அவள் பயந்ததற்கு மாறாக, வாயைத் திறக்காமல் இருந்து அவளைக் காப்பாற்றியிருந்தான் அனந்தன்.
இப்படி ஏன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி நடக்கிறான் என்று புரியவே இல்லை.