“என்ன மாமா இது? அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல. கொஞ்சம் நிதானமா இருங்க.” என்றவனையும் பச்சை குத்தும் அளவுக்குப் போனவளின் நெஞ்சின் உறுதி கொஞ்சம் மிரட்டித்தான் பார்த்தது. ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “இனி என்ன செய்யப் போறீங்க?” என்று வினவினான்.
“என்ன செய்யச் சொல்லுறாய்? அண்டைக்கே இவளை உனக்குக் கட்டிவைக்காம நம்பிப் படிக்க அனுப்பினதுக்குப் பாடம் படிப்பிச்சு இருக்கிறாள். மனம் விட்டே போச்சு எனக்கு. வாற ஆத்திரத்துக்கு நீ எவனையும் கட்ட வேண்டாம், காலத்துக்கும் வீட்டோடையே இரு எண்டுதான் சொல்ல வேணும் மாதிரி இருக்கு. ஆனா பெத்திட்டனே. பெத்த கடமையைச் செய்து முடிக்கத்தானே வேணும்.” என்றார் பெரும் கசப்புடன்.
அதற்கு ஒன்றும் சொல்லப் போகவில்லை அவன். மனத்தில் இருப்பதை எல்லாம் கொட்டட்டும் என்று விட்டான். சற்று அவர் அமைதியானதும் அருந்தக் கொடுத்துவிட்டு, சந்திரனை கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு அவரோடு வீட்டுக்குப் புறப்பட்டான்.
அவனைக் கண்டதும் கண்கள் கலங்கி மன்னிப்புக் கேட்ட அமிர்தவல்லியையும் சமாதானம் செய்து, கையோடு இருவரையும் சாப்பிட வைத்து, அப்படியே அவர்களின் அறையில் விட்டுவிட்டு, “எதையும் யோசிக்காதீங்க மாமா. என்ன எண்டு பாக்கலாம். இப்ப ரெண்டுபேரும் கொஞ்சம் படுத்து எழும்புங்க.” என்றுவிட்டு அவன் வெளியே வந்தபோது, முகம் சோர்ந்து, தலை கலைந்து, கண் மடல்களெல்லாம் வீங்கி, நலுங்கிய வீட்டுடையுடன் மாடியேறிக்கொண்டு இருந்தாள் நிரல்யா.
அவன் விழிகள் அவன் அனுமதி இல்லாமலேயே அவள் பச்சை குத்திய இடத்தைத் தேடிற்று. கைகள், கால்கள், காதுக்குக் கீழே, கழுத்து எங்கும் காணவில்லை. வெளியே தெரியாத இடம் ஊகித்ததும் அவன் மூச்சு சீறலாக வெளிப்பட்டது.
அவனைக் கண்டதும் அவள் தயங்கி நிற்க,
பார்வையாலேயே அவளை எரித்துவிட்டுப் போனவனின் நெஞ்சம் கொதித்தது. இனித் தன் சிந்தையில் கூட அவளை வரவிடக் கூடாது என்கிற பிடிவாதத்துடன் அடுத்து வந்த நாள்களைக் கடத்தினான். ஆனால், அதற்காக நெஞ்சுக்குள் பெரும் போராட்டம் நடத்திச் சோர்ந்தான். வெளியில் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று நடிக்கவேண்டி இருந்தது.
அவன் மனத்தை அறிந்திருந்த சுந்தரலிங்கத்தால் வாய்விட்டு எதையும் கேட்க முடியவில்லை. ஆசை காட்டி மோசம் செய்தது போலாயிற்றே என்று உள்ளுக்குள் அரிக்கும் இந்தத் துன்பத்தைத் தாங்க முடியாமல், “உனக்குக் கலியாணத்துக்குப் பாக்கட்டா?” என்றார்.
ஒருகணம் தடுமாறினாலும், “முதல் அவளுக்கு முடிங்க மாமா.” என்றான்.
“அவளுக்குச் செய்ய என்ன இருக்கு? அவன் வந்ததும் கட்டி வைக்கிறதுதானே.” என்றார் கசந்த குரலில்.
“முதல் அத முடிப்பம். இப்ப எனக்கு என்ன அவசரம்?”
மகளை மனத்தில் வைத்து இப்படிச் சொல்கிறானோ என்று தோன்றியதும் அவருக்குக் கவலையாயிற்று.
உண்மையில் அன்று அவனை ஏன் அழைத்து வந்தார் என்று கேட்டால் அவரிடம் பதில் இல்லை. ஒற்றைப் பெண் குழந்தையோடு நின்று போனதில் ஒரு மகனுக்கான ஏக்கம் அவருக்கும் அமிர்தவல்லிக்கும் அந்த நாள்களில் இருந்துகொண்டேதான் இருந்தது. அதனாலோ என்னவோ துக்கம் விசாரிக்கப் போனபோது அம்மா அப்பா இருவரையும் இழந்துவிட்டு, தவித்த குழந்தையாய் நின்றவனை அப்படியே விட முடியாமல் போயிற்று. அவர் பாக்கும் தொழிலினால் தனக்கும் மனைவிக்கும் ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் தன் மகளும் இப்படித்தானே நிற்பாள் என்று தோன்றிவிடவும் மேலே யோசிக்கவில்லை. அழைத்து வந்துவிட்டார். அமிர்தவல்லிக்கும் அவன் பெறாமகனாகிப் போனான். தொழிலுக்குள் அவன் நுழைந்தது அவரே எதிர்பாராத ஒன்று. சந்தோசத்தைத் தந்த அதே நேரம் அவனையும் இதற்குள் கொண்டு வருவது சரியா என்கிற கேள்வியும் இருக்கத்தான் செய்தது. ஆனால், அவன் தொழிலை நேர்த்தியாகவும் இன்னும் சிறப்பாகவும் நடத்த ஆரம்பித்து, அவருக்கான மதிப்பையும் மதியாதையையும் பன்மடங்காய் உயர்த்தித் தரத் தொடங்கவும் யாவருமே அவனைப் பற்றிக்கொண்டார்.
அதன் பிறகு அவர் மனத்தில் அவனுக்கும் நிரல்யாவுக்குமான இடம் ஒன்றேதான். அதுவும் இன்றைய நிலைமையில் மகளை விடவும் அவனுக்கான இடம் உயர்வுதான். அப்படியானவனுக்கு தான் நியாயம் செய்யவில்லை என்று மனம் உறுத்தவும், “என்னில் கோவமா? அதா கலியாணம் வேண்டாம் எண்டு நிக்கிறாய்?” என்றார் அவன் முகத்தையே பார்த்து
“என்ன மாமா சும்மா சும்மா கண்டதையும் யோசிக்கிறீங்க போல. கலியாணம் வேண்டாம் எண்டு நான் சொல்லேல்லையே. அவளுக்கு முதல் முடியட்டும். பிறகு கட்டாயம் நானும் கட்டுறன். அவளின்ர பொறுப்பு உங்களுக்கு மட்டுமில்ல எனக்கும் இருக்கு.” என்றுவிட்டு எழுந்து போனான்.
இப்படியான ஒருவனைத் தவற விட்டுவிட்டாளே மகள் என்று உள்ளுக்குள் இப்போதும் அழுதார் சுந்தரலிங்கம்.
அடுத்து வந்த யாரும் எதைப்பற்றியும் அவளோடு கதைக்கவே இல்லை. அமிர்தவல்லி முற்றிலும் அவளை விட்டு ஒதுங்கி இருந்தார். சாப்பிட குடிக்க என்று எதையும் கவனிக்கவும் இல்லை, கேட்கவும் இல்லை. என்னவோ எல்லாம் விட்ட நிலை. பசித்தால் சாப்பிடத் தெரியாத? சாப்பாடு எப்போதும் இருக்கும் என்கையில் போட்டுச் சாப்பிடட்டும் என்று விட்டுவிட்டார்.
என்னவோ அவளுக்கு இந்த முறை அழுகை வரவில்லை. தான் செய்ததற்கு இது தேவைதான் என்று எண்ணிக்கொண்டாள். தீவிலிருந்து திரும்பிய சிசிரவோடு அறையில் இருந்தே மெல்லிய குரலில் கதைத்தாள்.
“அவேக்கு எல்லாம் தெரிஞ்சிட்டுது சிசிர.” என்றதும், “நிரா?” அவன் திகைத்துப் போனான்.
“என்ன சொன்னவே? பழைய மாதிரி ஏதும் பிரச்சினையா?”
“இல்ல இல்ல. நான்தான் அவேய… இட்ஸ் ஓகே! எப்பிடியும் இதத் தவிர்த்து இருக்கேலாது. எக்ஸாம் முடிஞ்சதும் கட்டாயம் நீங்க வாங்க. வந்து அப்பாவோட கதைங்க. பிறகு திரும்பப் போகலாம்.” என்றாள் கண்ணீரை அடக்கித் தன்னைத் திடமாகக் காட்ட முயன்றபடி.
“நிரா, என்னம்மா?”
அவனின் அந்த அன்பான அழைப்பில் உடைய பார்த்தவள், “உண்மையா ஒண்டும் இல்ல. ஆனா, நீங்க வராம விட்டுடாதீங்க ப்ளீஸ்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
பச்சை குத்தியத்தைப் பற்றி இப்போதே அவனுக்குச் சொல்லி, அவனையும் கவலைப்பட வைக்க விருப்பமில்லை அவளுக்கு. பரீட்சையை எல்லாம் நல்லபடியாக முடித்துக்கொண்டு வரட்டும், நேரிலேயே காட்டுவோம் என்று எண்ணிக்கொண்டாள்.
சிசிரவுக்கு மனதே சரியில்லை. அவள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்று உறுதியாக எண்ணினான். சோர்ந்து, பொலிவிழந்திருந்த முகம் வேறு உறுத்தியது.
தொடரும்…