வெளிச்சக்கீற்று

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
“மகளும் இருக்கோ?” சுசீலாவின் காதோரமாகச் சரிந்து வினவிய சிந்தாமணிக்கு அவ்வளவு நேரமாக இருந்த ஆர்வம் அப்படியே வடிந்து போயிற்று. பக்கத்தில் மகன் இருப்பதையும் மறந்துபோயிருந்தார்.

அந்த ஒற்றைக் கேள்வியே நடப்பதைச் சொல்லிவிட, அகத்தியனின் முகம் கோபத்தில் சிவந்தது. தமக்கையை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, விருட்டென்று எழுந்துபோனான்.

முழுக் காரியமும் கெட்டுப்போன கவலையுடன், “இன்னொரு சின்ன மகளும் இருக்கிறா.” என்றார் சுசீலா.

“ஓ!” சிந்தாமணியின் பார்வை யசோதினியை அளந்தது.

மனத்தை நிறைக்கும் முகம். ஒடிசலான, உயர்ந்த தேகம். உண்மையில் அவர் மகனுக்கு மிகுந்த பொருத்தமாக இருப்பாள். இரண்டு பெண் பிள்ளைகள் என்றதுதான் இடித்தது. சும்மாவே இன்னும் கலியாணத்துக்கு அவன் சம்மதிக்கவில்லை. இதோ, இப்போதுகூட கோபத்தோடுதான் எழுந்து போனான். இதில், இரண்டு பிள்ளைகள் என்றால் ஊரைவிட்டே ஓடிவிடுவானாக இருக்கும்.

சுசீலாவை மட்டுமே எதிர்பார்த்து வந்த யசோதினி, அங்கிருந்த புதியவர்களைக் கண்டு, சுசீலாவுக்குத் தெரிந்தவர்கள் போலும் என்றுதான் முதலில் எண்ணினாள். ஆனால், அவள் மேல் ஆராய்ச்சியாகப் படிந்த அவர்கள் பார்வையும், விருட்டென்று எழுந்துபோன அந்த மனிதனின் செயலும் அப்படியில்லை என்று சொல்லிற்று.

அப்படி என்ன என்கிற கேள்வி உள்ளே ஓடினாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. மூவருக்கும் பொதுவான ஒரு முறுவலோடு மருந்தை எடுத்து சுசீலாவிடம் கொடுத்தாள்.

“நன்றியம்மா கொண்டுவந்து தந்ததுக்கு. இந்தக் காலாலதான் இவ்வளவும். இல்லாட்டி நானே வந்து வாங்கி இருப்பன்”.

“இதில என்ன இருக்கு? பக்கத்திலதானே. நான் சில நேரம் பூந்தோட்டம் வரைக்குமே கொண்டுபோய்க் குடுத்திருக்கிறன். இண்டைக்கு மகிளாவும் பார்மசில நிக்கிறதால ஒரு பிரச்சினையும் இல்ல.” மருந்தின் தொகையைச் சொல்லி, அவர் தந்த பணத்தை எண்ணி வாங்கிக்கொண்டாள்.

“அது மருந்துக்கு. இது கொண்டுவந்து தந்ததுக்கு.” பெட்ரோலுக்கும் பணம் கொடுத்தார் சுசீலா.

“அதெல்லாம் வேண்டாம் அக்கா. பார்மசில நோட் பண்ணிவிட்டா மாத முடிவில காசு தருவினம். சரியக்கா, நேரமாகுது நான் வெளிக்கிடப்போறன்.” நயமாகவே மறுத்தவள் மற்ற இருவருக்கும் மெல்லிய தலையசைப்பைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டாள்.

அவள் கண்ணுக்கு மறையும் வரையில் அமைதியாக இருந்துவிட்டு, என்ன சொல்வார்கள் என்று தெரிந்திருந்தாலும் அவர்களைக் கேள்வியாக ஏறிட்டார் சுசீலா.

“ரெண்டு பிள்ளைகளோட, அதுவும் இவ்வளவு வளந்த பிள்ளையோட எங்களுக்குச் சரி வராது சுசீலா.”

“பரவாயில்லை அக்கா. எனக்குத் தெரிஞ்ச, நல்ல பிள்ளை எண்டதும் சும்மா உங்களுக்குக் காட்டிப் பாத்தனான்.” தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு சொன்னவர், அதே புரோக்கரின் நம்பரை அவர்களுக்கும் கொடுத்தார்.

இவை அனைத்தும் நடந்து முடிந்த பிறகுதான் அங்கு வந்தான் அகத்தியன். அவன் முகம் இறுகிக் கிடந்தது.

“தம்பி, சும்மா சும்மா கோவப்படாத. நான் உனக்கு நடந்ததச் சுசீலாக்குச் சொன்னனான். அப்பதான் இந்தப் பிள்ளையை வரச் சொன்னவள். அந்தப் பிள்ளைக்கே இங்க என்ன நடந்தது எண்டு தெரியாது. அதால நீ எதையாவது சொல்லாத!” என்றார் சிந்தாமணி வேகமாக.

சுசீலாவும் இருந்ததில் அவனாலும் தன் கோபத்தை அவரிடம் வெளிப்படையாகக் காட்ட முடியாமல் போயிற்று.

*****

பார்மசிக்கு வந்த யசோதினிக்கு அவர்கள் பற்றிய யோசனைதான். அந்த ஆண் எழுந்துபோன வேகமும், பெண்கள் இருவரும் பார்த்த பார்வையும் சாதாரணமாகத் தெரியவில்லை. அடுத்தமுறை சுசீலாவைப் பார்த்தால் கேட்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு தன் வேலைகளைப் பார்த்தாள்.

கோயிலில் இருந்து வீடு வந்த சுசீலாவுக்கு மனதே சரியில்லை. இரு தரப்பும் நல்ல மனிதர்கள். அவர்களை இணைக்க முடியாமல் போயிற்றே! இரண்டு சின்னக் குழந்தைகள். அவர்களை ஒரு பெரும் தடையாகப் பார்ப்பது மனத்தைப் பிசைந்தது. கூடவே, இதை யசோதினியிடம் சொல்லாமல் இருப்பது தவறு என்று மனம் எடுத்துரைக்க, அவளுக்கு அழைத்து நடந்ததைச் சொன்னார்.

“சொல்லாம கொள்ளாம உங்களைக் கூப்பிட்டுக் காட்டினதுக்குக் குறை நினைக்காதீங்கோம்மா. உங்கள நேராப் பாத்தா சில நேரம் பிடிக்கும் எண்டு நினைச்சன். அதைவிட, அவே ஓம் எண்டு சொல்லாம உங்களுக்கு நம்பிக்கையைத் தாறதும் பிழை எல்லோ. ஆனா, அவன் கலியாணமே வேண்டாம் எண்டு நிக்கிறான்.” என்றார் நயமாக.

அதுதான் அவ்வளவு வேகமாக எழுந்து ஓடினானா என்று உள்ளூர ஓட, “எனக்கு விளங்குது அக்கா. நான் குறையும் நினைக்கேல்ல. ஆனா, இனி இது வேண்டாம். எனக்கு உண்மையா இப்ப அந்த ஐடியா இல்ல.” என்று நல்ல மாதிரியே சொல்லிவிட்டு வைத்தாள்.

சுசீலாவுக்கு மிகுந்த ஏமாற்றம். அதற்குமேல் செய்வதற்கும் ஏதுமில்லை என்று புரிந்ததில் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டார்.

*****

அன்று, இரவு உணவுக்கு வந்த அகத்தியன் மிகுந்த இறுக்கத்துடன் இருந்தான். அம்மாவும் மகளும் அவனறியாமல் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர். அமைதியாகவே உணவை முடித்துக்கொண்டு அறைக்குள் புகுந்துகொண்டான் அவன்.

ஒரு வார்த்தை கூடப் பேசாமல் சென்றவனின் செயல் பாதிக்க, “என்னம்மா இவன் இப்பிடி இருக்கிறான்?” என்று கவலையோடு வினவினார் சிந்தாமணி.

“விடுங்கம்மா. இவ்வளவு நாளும் பேசாம இருந்த நாங்க, இண்டைக்குத் திடீர் எண்டு பொம்பிளை பாக்கிற அளவுக்குப் போய்ட்டம் எண்டுற கோவம் போல. அதுக்கெண்டு இப்பிடியே விடேலுமா? மூண்டு வருசம் விட்டது காணாதா?” என்ற இந்திரா, அவரை உறங்க அனுப்பிவிட்டுத் தானும் உறங்கச் சென்றாள்.

கட்டிலில் சரிந்திருந்த அகத்தியன் மிகுந்த கோபத்தில் இருந்தான். அவனுக்கும் அப்பா இல்லை. அவனுடைய இருபத்தி நான்காவது வயதில் காலமாகியிருந்தார். அதன்பிறகு, வவுனியா டவுனில் அவர் நடத்திக்கொண்டிருந்த பலசரக்குக் கடையை அவனே பொறுப்பெடுத்து நடத்த ஆரம்பித்திருந்தான். அந்த நேரம், அவனை விடவும் மூன்று வயது மூத்த இந்திராவும் சுகாதாரத் திணைக்களத்தில் வேலையில் இருந்தாள்.

தந்தை இறந்து ஒரு வருடம் கழிந்த பிறகு, வயதாகிறது, இனியும் விட முடியாது, திருமணத்துக்குப் பார்ப்போம் என்று சொன்னபோதெல்லாம் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தாள் இந்திரா. திடீரென்று ஒருநாள், கஜேந்திரனை அழைத்து வந்து காதலிக்கிறேன் என்று சொல்லவும் கலங்கிப்போனார் சிந்தாமணி.

அதுவும், பல்கலையில் படிக்கும் காலத்திலேயே பார்த்துப் பழகியதாகவும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அவன், கடந்த மூன்று வருடங்களாக இங்கிலாந்தில் வேலை பார்த்தான் என்றும், அதனால்தான் திருமணத்தைத் தள்ளிப்போட்டாள் என்றும் சொன்னதை அம்மா மகன் இருவராலும் நம்பவே முடியவில்லை.

கஜேந்திரனைப் பற்றி விசாரித்தார்கள். அவர்கள் இவர்களை விட வசதியில் பல மடங்கு உயர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அதுவேறு கலக்கத்தை உண்டாக்கிற்று. ஆனால், அந்தப் பயத்திற்கு அவசியமே இல்லை என்பதுபோன்று, அவன் வீட்டினர் இவர்கள் காதலுக்குப் பச்சைக் கொடியைக் காட்டினர். கூடவே, பெண்ணெடுத்துப் பெண் கொடுக்கும் முகமாக, பொறுப்பான, நல்ல பிள்ளையான அகத்தியனுக்குத் தம் செல்ல மகளைக் கொடுக்க விரும்புகிறோம் என்று சொன்னபோது, ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கிப் போயினர். பொருத்தமும் அமோகமாகப் பொருந்தி இருந்தது. சவீதாவுக்கும் அகத்தியனுக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்துப்போனது வேறு, தித்திப்பின் அளவைக் கூட்டிற்று.

இரண்டு திருமணங்களும் ஒரே நாளில் எந்தக் குறையும் இல்லாமல் நடந்தன. அவர்கள் வாழ்க்கையும் இனிதாகவே நகர்ந்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 6


அடுத்த நான்காம் மாதமே இந்திரா தாய்மையுற்றாள். எல்லோர் பார்வையும் எதிர்பார்ப்புடன் சவீதா புறம் திரும்பிற்று.

“அண்ணி பெத்தா நானும் பெற வேணுமா? முதல் அண்ணி பெத்து முடிக்கட்டும். இல்லாட்டி, என்னை ஒருத்தரும் கவனிக்காயினம்.” என்றுவிட்டாள் சவீதா.

அவள் அப்படித்தான். எல்லோரும் அவளைத் தாங்கவேண்டும் என்று நினைப்பாள். எல்லோரிடம் இருந்தும் அவளுக்கான கவனிப்புக் குறையாமல் கிடைத்துவிட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பாள். அதுவும், அகத்தியன் என்றால் எதிர்பார்ப்பின் அளவு பல மடங்கு.

தாய் தமக்கையிடம் சற்று நேரம் அதிகமாகப் பேசிக்கொண்டு இருந்துவிட்டால் போதும். அவள் பக்கத்தில் இருக்கையில் அவன் கவனம் வேறு எதிலும் குவிந்துவிட்டாலும் போதும். முகத்தைத் தூக்கிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவாள். நான் உனக்கு முக்கியமில்லை, என்னோடு நீ பாசமில்லை என்று முறுக்குகிறவளைக் கொஞ்சிக் குழைந்து சமாதானம் செய்வான் அகத்தியன்.

அவளுக்குத் தெரியாமல் சின்னதாக ஒரு காரியம் செய்யக் கூடாது. வெளியே எங்கும் மினக்கெடக் கூடாது. கடை, கடைவிட்டால் அவளோடுதான் இருக்கவேண்டும். வெளியில் எங்கு என்றாலும் அவளோடுதான் போக வேண்டும். தனியாகச் சென்று யாரோடும் கைப்பேசியில் பேசிவிட முடியாது. யார், என்ன, ஏன் தனியாகப் போய்ப் பேசினாய் என்று கேட்டுக் குடைந்து எடுத்துவிடுவாள். வார இறுதிகள் அவளுக்கானவை. கடையின் கணக்குவழக்கில் இருந்து அவனுடைய வைப்புச் சொப்பு வரை அனைத்தும் அவளுக்குக் கீழ் சென்றிருந்தது.

சில நேரங்களில் என்ன இது, இப்படி நெருக்குகிறாளே என்று இருக்கும். என்னவோ நாலு சுவற்றுக்குள் அடைத்து வைத்தது போன்று உணர்வான். அதுவும் அம்மா அக்காவுக்கு ஏதாவது அவன் செய்ய விரும்புகிறபோது முட்டுக்கட்டை போடுவதும், அங்குச் செல்வதைத் தடுக்கும்போதும் மெய்யாகவே கோபம் வந்துவிடும். பொறுமையாகத் தன்னை விளக்கவும் முயல்வான். ஆனாலும், அவனையே சுற்றி சுற்றி வந்து, அவனைத் தன் கைகளுக்குள் இழுத்துக்கொள்ள முனையும் மனைவியின் முயற்சிகள் கசந்ததில்லை. சின்ன சிரிப்புடன் அவள் இழுவைக்கே சென்றுவிடுவான். தன்னையே சுற்றிவரும் அவள் மீது அவனும் பித்தாகத்தான் இருந்தான்.

அவளையும் கூட்டிக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றினான். அவள் பார்க்க ஆசைப்படும் இடங்களுக்கெல்லாம் கூட்டிக்கொண்டு போனான். பொறுப்பும் இனிப் பெரிதாக இல்லை என்பதில் அவள் ஆசைப்படும் துணிமணி, நகைநட்டு எதுவாயினும் வாங்கிக் கொடுத்துவிடுவான். சேமித்த பணத்தில் வாங்கிய காணியைக்கூட அவள் பெயரில்தான் எழுதினான்.

அவள் வந்த காலமோ என்னவோ, அவ்வளவு காலமாக வாடகைக்கு நடத்திய கடையை, கடை உரிமைக்காரர் விற்கப் போகிறேன் என்றதும் லோன் எடுத்து, சொந்தமாகவே வாங்கிப் போட்டான். வியாபாரமும் சூடு பிடித்துவிட, அவர்கள் வாழ்வில் குறை என்று சொல்வதற்கு எதுவுமில்லை.

இந்திராவுக்கு மகள் தாமினி பிறந்தாள். மீண்டும் எல்லோர் கவனமும் சவீதா புறம் திரும்பிற்று.

“நாங்களும் அதுக்குத்தான் வெய்ட்டிங்.” என்றாள் சவீதா. அவள் சொல்லப்போகும் அந்த நல்ல செய்திக்காக மொத்தக் குடும்பமும் காத்திருக்க ஆரம்பித்தது.

மீண்டும் ஒரு மூன்று மாதம் கடந்தது. அப்போதும் அவள் ஒன்றும் சொல்லாததால், “எதுக்கும் ஒருக்கா டொக்ட்டரிட்ட போயிற்று வந்தா என்னம்மா?” என்று ஏக்கமாகச் சிந்தாமணி கேட்டது, சுற்றிச் சுழன்று சவீதாவின் அன்னை தவமலர் மூலம் இந்திராவிடம் வந்து நின்றது.

“உங்கட அம்மாவுக்கு அப்பிடி என்ன அவசரம்? ஒரு பேரக்குழந்தை இருக்குத்தானே. முதல் ஆஸ்பத்திரி, டொக்டர் எண்டு இப்பவே அலைய, கலியாணம் கட்டிப் பத்து வருசமா போயிற்றுது? நானும் என்ன உங்கட அம்மா மாதிரி, மூத்தது பேத்தி வேண்டாம், பேரன்தான் வேணும் எண்டு நிண்டேனா, இல்ல, உடனேயே ஒரு பேரனைப் பெத்துத் தாங்கோ எண்டு சொன்னேனா? செல்லமா வளத்த மகள் சந்தோசமா இருப்பா எண்டு நம்பித்தான் உங்கட தம்பிக்குக் கட்டி வச்சது. இப்பிடி அழவைக்க இல்ல!” என்று கோபப்பட்டுவிட, இதென்ன புதுப் பூகம்பம் என்று திகைத்துப்போனாள் இந்திரா.

அகத்தியனைத் தனியாகப் பிடித்து, “அம்மா ஆசையில தானேடா கேட்டவா. அதுவும், ‘நாங்களும் அதுக்குத்தான் பாத்துக்கொண்டு இருக்கிறோம்’ எண்டு அவள் சொன்ன பிறகுதானே. அத ஏன் இவள் மாமி வரைக்கும் கொண்டு போனவள்?” என்று கோபமும் ஆதங்கமுமாக வினவினாள்.

அவனுக்கும் அந்த விடயத்தில் மனைவி மீது அதிருப்திதான். அவனிடம் சொல்லியிருக்கலாம். “எனக்கு இது ஒண்டும் தெரியாதக்கா. இப்பதான் சவீதா சொன்னவள். ஆஸ்பத்திரிக்கு அம்மா போகச் சொன்னது அவளுக்குப் பிடிக்கேல்ல போல. எனக்கு ஏதும் குறை இருக்கும் எண்டு மாமி சொல்லாம சொல்லுறாவோ எண்டு கேட்டு அழுறாள்.” என்றவனுக்கும் அன்னை அதைக் கேட்காமல் இருந்திருக்கலாம் என்கிற எண்ணம்தான்.

“அடேய், உன்னையும் சேத்துத்தான் போய்ப் பாத்துக்கொண்டு வரச்சொல்லி அம்மா சொன்னவா. சரி விடு, நான் அம்மாட்டச் சொல்லுறன். இனிக் கேக்க மாட்டா. ஆனா நீ சொல்லு, இப்போதைக்கு வேண்டாம் எண்டு ஏதும் பாதுகாப்பா இருக்கிறீங்களா?” என்று வினவினாள்.

தமக்கையிடம் இதையெல்லாம் பேச ஒரு மாதிரி இருந்தாலும், “அப்பிடி ஒண்டும் இலையேக்கா. அவளும் என்னட்ட ஒண்டும் விவரமாச் சொன்னது இல்ல.” என்றவனுக்குக் குழப்பம்.

அவனறிந்து, திருமணமானதில் இருந்தே அவர்கள் எந்தக் கவனத்தோடும் இல்லை.

அவன் கேட்டபோது கூட, ‘அதைப்பற்றி எல்லாம் அம்மாவோடயும் மாமியோடயும் நான் கதைச்சிட்டன். என்ன செய்யோணும் எண்டு எனக்குத் தெரியும். நீங்க உங்கட மனுசிய எப்பிடிச் சந்தோசமா வச்சிருக்கிறது எண்டுறதை மட்டும் பாருங்க.’ என்று மையலுடன் சொல்லியிருந்தாள்.

பெரியவர்களின் வழிகாட்டலில் அவள் கவனமாக இருக்கிறாள் என்றதற்கு மேல் அவன் யோசிக்கப் போகவில்லை. அதையெல்லாம் தமக்கையிடம் சொல்லி, அவர்கள் மனத்தில் மனைவி மீதான அதிருப்தியை உருவாக்க விரும்பாமல் அவளிடமே சென்று நின்றான்.

அவள் அதற்கும் குதித்தாள். “என்ன இது, ஆளாளுக்குப் பிள்ளை இல்லையா, பிள்ளை இல்லையா எண்டு கேக்கிறீங்க? அத முடிவு செய்ய வேண்டியவள் நான். நீங்களோ உங்கட அம்மா, அக்காவோ இல்ல, விளங்கினதா? உங்கட அக்காக்கு வயசு போகுது. அதால, அவசரமா ஒரு பிள்ளையைப் பெத்தா. அதுக்காக நானும் உடனே பெற வேணுமா? என்ன அரியண்டம் இது? ஒரு வாழ்க்கையைச் சந்தோசமா வாழவிடாம!” என்று சினத்துடன் சீறினாள்.

சில நேரங்களில் இதே எண்ணம் அவனுக்கும் வருவதுண்டு. திருமணமாகி இரண்டு வருடங்கள் கூட முடியாத நிலையில் ஏன் இவ்வளவு அவசரம் என்று யோசித்திருக்கிறான்.

அதில், பதிலுக்குக் கோபப்படாமல், “நீ சொல்லுறது சரிதான். ஆனா, இவ்வளவு நாளும் எப்பிடிப் பாதுகாப்பா இருந்தாய் எண்டு சொல்லு. இப்பவும் அப்பிடித்தான் இருக்கிறியா? அப்பிடி ஏதும் எண்டா அதையும் சொல்லு. இன்னும் ஒரு வருசத்துக்கோ ரெண்டு வருசத்துக்கோ பிள்ள பெறுற ஐடியா எங்களுக்கு இல்லை எண்டு சொல்லிவிடுறன். அப்பிடிச் சொல்லீட்டா அவேயும் கேக்காயினம். நீ, நாங்களும் அதுக்குத்தான் வெயிட்டிங் எண்டு சொன்னதாலதான் இப்பிடிக் கேக்கினம்.” என்று பொறுமையாக எடுத்துச் சொன்னான்.

“அதுக்காக இப்பிடித்தான் ஆளாளுக்கு நோண்டுவீனமா? பிள்ளை தங்காட்டி நான் என்ன செய்ய? இப்ப நான் ஒண்டும் கவனமா இல்ல.” என்று அழுதவளைக் கண்டு, அவனுக்கும் கவலையாயிற்று.

அதற்குமேல் எதையும் கேட்க மனம் வராமல், “சரியம்மா. அதுக்கேன் அழுறாய்? இனி இதைப் பற்றிக் கதைக்க வேண்டாம் எண்டு நான் சொல்லி விடுறன். நீ கவலைப்படாம இரு. என்ர மனுசியக் காலத்துக்கும் சந்தோசமா வச்சிருக்க வேணும் எண்டு நான் நினைச்சா, நீ இப்பிடித்தான் அழுவியா?” என்று அவளை அணைத்து, முகத்தைத் துடைத்துவிட்டான்.

“என்னை இப்பிடி அழ வைக்கிறது மாமியும் அண்ணியும்தான்.” சலுகையுடன் முறையிட்டாள் அவள்.

“சரி சரி, இனி அவே ஒண்டும் கேக்காயினம். நீ விடு.”

மீண்டும் ஒரு மூன்று மாதங்கள் ஓடிற்று. அகத்தியனும் இதைப் பற்றிப் பேசவேண்டாம், அவள் மிகவும் மனவுளைச்சலில் இருக்கிறாள் என்று சொல்லிவிட்டதால் அவன் வீட்டினர் வாயைத் திறக்கவே இல்லை.

ஆனால், இவர்களுக்கு இருக்கிற தவிப்பும் எதிர்பார்ப்பும் சவீதாவுக்கோ, அவள் அன்னைக்கோ இல்லை என்பது இந்திராவை நெருடிக்கொண்டே இருந்தது. அவர்கள் மீது ஐமிச்சம் உண்டாயிற்று. அதைவிட, அகத்தியனின் வாயைப் பிடுங்கியதில், பெரியவர்கள் சொன்னதின்படிதான் இத்தனை காலமும் அவள் கவனமாக இருந்திருக்கிறாள் என்கிற தகவலும் இடித்தது. அப்படி, அவள் அன்னையிடம் கேட்டிருந்தால், அவர் நிச்சயம் அதைப்பற்றி இவளிடம் சொல்லியிருப்பார். மறந்தாரோ என்று சும்மா விசாரித்துப் பார்த்தாள்.

“இல்லையேம்மா, சவீதா என்னட்ட ஒண்டும் கேட்டது இல்லையே. ஏன், ஏதும் சொன்னவளா?” என்று திருப்பிக் கேட்டார் சிந்தாமணி.

ஆக, சவீதா பொய் சொல்லியிருக்கிறாள். அது ஏன்? அவளிடம் கேட்க முடியாது. கேட்டால் அடுத்த பிரச்சனையைக் கிளப்பக் கூடும். தவமலர் கூட, இந்தப் பேச்சை அவள் எடுத்துவிடாதபடிக்குக் கொஞ்சம் இறுக்கமாக நடக்கிறாரோ என்கிற ஐமிச்சம் இந்திராவுக்கு வந்திருந்தது. என்ன செய்வது என்று யோசித்துவிட்டு, அகத்தியனைத் தனியாகச் சென்று செக் செய்யச் சொன்னாள்.

அன்றைக்கு அழுததின் பிறகு, இன்னும் குழந்தை தங்கவில்லையே என்று தன்னிடம் கூடச்
சொல்லிக் கவலைப்படாத மனைவியின் மெத்தனப் போக்கு, அவனையும் உறுத்தியதில் தன்னைப் பரிசோதனைக்கு உட்படுத்தினான் அகத்தியன். கூடவே, அவனுக்குத்தான் ஏதுமோ என்கிற கேள்விக்கான பதிலையும் கண்டுபிடிக்க விரும்பினான்.

ஆனால், அவனுக்கு எந்தக் குறையும் இல்லை என்று பரிசோதனை முடிவு சொல்லவும் அக்காவும் தம்பியும் இன்னுமே குழம்பிப் போயினர்.

இப்போது, அவளுக்குத்தான் ஏதோ கோளாறு என்று தெளிவாயிற்று. இது, அன்னை மகள் இருவருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான், தானும் கஜேந்திரனும் காதலித்ததை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, தம்பிக்கு அவளைக் கட்டிவைத்தார்களோ என்று தோன்றியதும் மொத்தமாகத் தன் நிம்மதியைத் தொலைத்தாள் இந்திரா.

அப்படியேதும் என்றால் அது எவ்வளவு பெரிய ஏமாற்று? இதற்கு அவள் கணவனும் உடந்தையா என்ன? கடவுளே, அப்படித்தான் என்றால் இரண்டு குடும்பங்களினதும் நிலை என்ன? கண்ணீரும் கவலையும் அவள் உறக்கத்தைப் பறித்துவிட, அதற்குமேல் முடியாமல் கணவனை நேராகவே கேட்டாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவன், அவள் மீதுதான் கோபப்பட்டான். “என்ன விசர்க் கதை கதைக்கிறாய்? அப்பிடி எதுவும் இருக்காது. இவ்வளவு பெரிய விசயத்த அம்மா மறைப்பாவா? உனக்கு முதல் ஏன் இவ்வளவு அவசரம்? அவே ரெண்டுபேருக்கும் இன்னும் வயதிருக்கு இந்திரா. கொஞ்ச நாளைக்குப் பேசாம இரு எண்டு எத்தின தரம் சொல்லுறது?” என்று சினந்தான்.

“என்ன வயதிருக்கு? பிள்ளை இப்போதைக்கு வேண்டாம் எண்டு சொன்னா அது வேற. நாங்களும் அதுக்குத்தான் பாத்துக்கொண்டு இருக்கிறோம் எண்டு சவீதா சொன்னவள். சொல்லியே ஆறு மாதம் முடிஞ்சிது. ஆனா, அவளா இதுவரைக்கும் ஒண்டும் கேட்டது இல்ல. இந்த ஃபைலை பாருங்க, தம்பிக்கு ஒரு குறையும் இல்லையாம்.” என்று வைத்தியப் பரிசோதனையைக் காட்டினாள்.

வாங்கிப் பார்த்தவனின் புருவங்களும் சுருங்கின.

“மாமி இதைப்பற்றிப் பெருசா அலட்டவே இல்ல. சவீதாவும் நடக்கிறதுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை எண்டமாதிரி இருக்கிறாள். உண்மையச் சொல்லுங்க, உங்களுக்கு இதைப்பற்றி ஏதும் தெரியுமா, என்னட்ட எதையும் மறைக்கிறீங்களா?” விழிகளில் கூர்மையுடன் அவள் கேட்க, முகம் இறுக அவளை நிமிர்ந்து பார்த்தான் கஜேந்திரன்.

கணவனின் அந்த நேர்ப் பார்வையை எதிர்கொள்ள இயலாமல், முகத்தைத் திருப்பிக்கொண்டவளின் விழிகள் கலங்கிப் போயின. அதன்பிறகு பேசியவளின் குரல் தழுதழுத்தது.

“அவன் எனக்காக, என்னை நம்பிக் கட்டினவன். உங்கட தங்கச்சி எண்டுற ஒற்றை நம்பிக்கைலதான் நாங்க விசாரிக்கவும் இல்ல. எனக்கு அப்பா இல்ல. அந்த இடத்தில இருக்கிறவன் அவன். இப்ப வரைக்கும் எனக்கு எல்லாம் செய்றதும் அவன்தான். அவனுக்குக் கெட்டதா எதுவும் நடக்கக் கூடாது. இதுக்குமேல என்ன செய்றது எண்டு சத்தியமா எனக்குத் தெரியவும் இல்ல. நானோ அம்மாவோ எதையாவது கேட்டுக்கொண்டு போனா அதையே சாட்டா வச்சு மாமி சண்டைக்கு வருவா. இதுக்கு ஒரு முடிவை நீங்கதான் வாங்கித் தரவேணும். அவனுக்கு நீங்க அத்தான். அவன்ர வாழ்க்கை நல்லாருக்கோணும் எண்டுற அக்கறை உங்களுக்கும் இருக்கும் எண்டு நினைக்கிறன்.” என்றவள், அதற்குமேல் அதைப்பற்றி அவனிடம் பேசப்போகவில்லை.

நேர்மை மிகுந்த கணவன், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வைத் தேடித் தருவான் என்று நம்பினாள். கஜேந்திரனும் அவள் நம்பிக்கையைப் பொய்யாக்கவில்லை. இந்தளவு தூரத்திற்கு வந்தபிறகு, இதற்குள் மறைந்து கிடக்கும் விடயம் என்ன என்று அறிய விரும்பி, அன்னையிடம் நேராகப் பேசினான்.

மகனே தலையிட்ட பிறகு, தவமலரால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.

இத்தனை நாள்களாக ஆடிய நாடகத்தைத் தொடர முடியாமல், “அவளுக்கு பிசிஓஎஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) பிரச்சினை தம்பி. பெரிய பிள்ளையானதில இருந்தே இருந்திருக்கு. நாங்க கவனிக்கேல்ல. அது மோசமாகி, பெரிய பெரிய நீர்க்கட்டி எல்லாம் வந்து, பிள்ளை ஏலாமையே போய்ட்டாள். நாங்க கவனிச்சுக் கொண்டுபோனது ஆக லேட்டாம். வேற வழி இல்லாம கர்ப்பப்பை எடுக்கவேண்டி வந்திட்டுது.” என்று அழுதார்.

அதிர்ந்து நின்றான் கஜேந்திரன். தங்கைக்கு நடந்தது பெரும் துயர்தான். அதற்கென்று அவன் மனைவியின் குடும்பத்துக்கு அவர்கள் செய்தது எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்? அவனையும் சேர்த்தல்லவா முட்டாளாக்கி இருக்கிறார்.

“எனக்கு ஏனம்மா சொல்லேல்ல? இத நான் எப்பிடி அங்க போய்ச் சொல்லுவன்? எவ்வளவு பெரிய பிழையச் செய்துபோட்டுச் சாதாரணமாச் சொல்லுறீங்க.” என்றதும் கோபம் வந்தது அவருக்கு.

“என்ன பெரிய பிழை? இதே, கட்டின பிறகு நடந்திருந்தா என்ன செய்திருப்பினம்? உன்னை மாதிரி ஒரு பெடியன் எங்க தேடினாலும் கிடைக்குமாமோ அவேக்கு? உன்னையும் குடுத்து, தங்கச்சியையும் குடுத்திருக்கிறம். எங்கட மொத்தச் சொத்தும் அவேக்குத்தான் போகப்போகுது. அது கசக்குதாமா அவேக்கு? பிள்ளை பிறக்காது. அவ்வளவு தானே? மற்றும்படி அவளில குறை சொல்ல என்ன கிடக்கு? பிள்ளையே வேண்டாம், எனக்கு நீ உனக்கு நான் எண்டு வாழுவம் எண்டு சொல்லுற இந்தக் காலத்தில, இதையெல்லாம் ஒரு விசயம் எண்டு நீயே பெருசாக்காத தம்பி.” என்றவரை நம்ப முடியாமல் வெறித்தான் கஜேந்திரன்.

“இதுக்கு நீங்களும் கூட்டாப்பா?” அந்த வீட்டின் வாயில்லாப் பூச்சியான தந்தை கதிரேசனிடமும் கோபப்பட்டான்.

“நீங்க வெளிநாட்டில இருந்த சமயம், தங்கச்சிக்குக் காய்ச்சலாம் எண்டு ஆஸ்பத்திரில வச்சிருந்து அம்மா கூட்டிக்கொண்டு வந்தவா தம்பி. மற்றும்படி, உங்களுக்கு மாதிரி எனக்கும் இப்பதான் தெரியுது.” என்றார் அவர்.

எல்லாமே வெறுத்துவிட, சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறினான் கஜேந்திரன்.

அகத்தியன் குடும்பம் இதையறிந்து மொத்தமாக உடைந்து போயிற்று. சிந்தாமணி தாங்க முடியாமல் உடைந்து அழுதார். ஒரே மகன். அவன் வம்சமே தழைக்காது என்றால் என்ன கதை?

“கடவுள் சத்தியமா எனக்கு இதெல்லாம் தெரியாது மாமி. தெரிஞ்சா இப்பிடி ஒண்ட நடக்கவிட்டிருக்க மாட்டன் எண்டுதான் ரெண்டு பேருமாச் சேர்ந்து மறச்சிருக்கினம். உண்மையா சொறி அகத்தியன்.”

எதையும் வாய் திறந்து பேசும் நிலையில் அவன் இல்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் உடலும் உயிருமாக வாழ்ந்த ஒருத்தி, அவனை ஏமாற்றியிருக்கிறாள். அதுவும் எந்த விடயத்தில்? தினம் தினம், மாதா மாதம் ஏமாற்றப்பட்டிருக்கிறான். மிகவும் அவமானமாக உணர்ந்தான். என்ன நினைத்திருப்பாள் அவனைப்பற்றி?

திருமணமாகி எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள். சுற்றி எல்லோரும் இருப்பதால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை, வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை, சந்தோசமாக இருக்க முடியவில்லை என்று சொல்லி, அவள்தான் அவளுக்குச் சீதனமாகத் தந்த வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போனாள்.

அக்கா அத்தானுக்கு அது உதவியாக இருக்கும் என்றெண்ணி அவனும் சம்மதித்திருந்தான். கூடவே, சில நேரங்களில் இவனிடம் அவள் அதிகப்படியாக நடந்துகொள்ளும் பொழுதுகளில் தாய் தமக்கையின் முன் இவன் சங்கடத்துக்குள்ளாகிவிடுவான். அவளையும் விட்டுக்கொடுக்க முடியாமல், அவர்களிடம் என்ன சொல்வது என்றும் தெரியாமல் திணறுவதற்கு இது எவ்வளவோ மேல் என்று எண்ணியிருந்தான்.

அவளுக்கான மாதவிடாய் நாள்களில், அவள் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டு அவனை இங்கே அனுப்பிவிடுவாள். கேட்டதற்கு, தனக்கு மிகவும் வயிற்றுவலியாக இருக்கும் என்றும், அந்த நாள்களில் அவனுக்குத் துன்பம் தர விரும்பவில்லை என்றும் சொன்னபோது உருகித்தான் போனான். அவசியமில்லை, இங்கேயே இரு, நானே உன்னைப் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதை அவள் கேட்டதே இல்லை.

அவன் மாமியாரும், ‘பரவாயில்ல தம்பி, இங்க நானும் சும்மாதானே இருக்கிறன். எனக்கும் மாதத்தில நாலு நாள் மகள் என்னோட இருந்தமாதிரி இருக்கும்.’ என்று சொல்லியிருந்தார். அதற்குமேல் அவன் மறுத்ததில்லை. எல்லோரும் ஒரே ஊர் என்பதும் அவர்களுக்கு வசதியாகிப் போயிற்று. கூடவே, தாய் தமக்கையைப் பார்க்க, அவர்களோடு இருக்கக் கிடைக்கும் நாள்களாக அவனும் அந்த நாள்களைப் பயன்படுத்திக் கொள்வான்.

தன் மீதான அன்பில்தான் அப்படியெல்லாம் நடக்கிறாள் என்று அவன் எண்ணியிருந்தது பொய்யாகி, நாடகமாடியிருக்கிறாள் என்கிற உண்மை வெறுப்பாக அவன் நெஞ்சுக்குள் இறங்கிற்று.
பல உண்மைகள் அதன் பிறகுதான் புலப்பட்டது.

அன்பு என்கிற பெயரில் அவனை அங்கிங்கு அசையவிடாது கட்டிப் போட்டிருக்கிறாள். என்றாவது ஒருநாள் இதெல்லாம் தெரிய வந்து, பிரச்சனை வந்தால் கூட அவன் எதுவும் செய்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவன் உழைப்பு முழுவதையும் தன் கைவசப்படுத்தியிருக்கிறாள் என்று அறிந்தபோது வெட்கிப்போனான் அகத்தியன்.

எந்தளவுக்கு அவளை நம்பியிருந்தால் சின்ன உறுத்தல் கூட இல்லாது அத்தனையையும் செய்திருப்பான்.

உண்மையில் இன்று கடையைத் தவிர்த்து அவனிடம் எதுவும் இல்லை. வங்கியில் இருக்கும் வைப்புப் பணம் அவள் பெயரில், வாங்கிய காணி அப்படி. நகை நட்டுகள் கூட அவளுக்கானவை. கடையைக்கூட அவள் பெயரில் வாங்கியிருப்பான். கடனை மனைவி தலையில் கட்ட மனமில்லாமல் விட்டதில் அது தப்பியிருந்தது.

காசு பணத்தைத்தான் விட்டாலும் வாழ்க்கை? தன்னைச் சுற்றிப் பின்னப்பட்ட வலையைப் பற்றிய கவனமே இல்லாமல் மயங்கிக் கிடந்திருக்கிறான். அந்த நொடியில் தன்னையே வெறுத்தான் அகத்தியன். தாய் தமக்கையை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தனக்குள் குறுகினான். மாமியாரும் சேர்ந்து அவனை முட்டாளாக்கி இருக்கிறாரே!

நினைக்க நினைக்க வெட்டிப்போடும் வெறியே கிளம்பிற்று. அவள் முகம் பார்க்கவே பிடிக்காமல் போயிற்று. தமக்கை வீட்டிலேயே இருந்துகொண்டான். இரண்டு நாள்கள் பொறுத்துப் பார்த்த சவீதா, மூன்றாம் நாள் தமையன் இல்லாத நேரமாகப் பார்த்து வந்தாள்.

“அதென்ன பிள்ளை பெத்துத் தந்தாத்தான் என்னோட வாழுவீங்களோ? இல்லாட்டி இல்லையோ? அப்ப, உங்களுக்கு நான் பிள்ள பெத்துப் போடுற மெசினா? இப்பிடியொரு நிலைமை உங்களுக்கு வந்திருந்தா என்ன செய்திருப்பீங்க? இப்ப என்ன, இன்னொருத்தியக் கட்டி வாழப்போறீங்களா? இல்ல, கட்டாமலேயே…” என்று, அவள் சொன்ன வார்த்தைகளை விடவும் சொல்லாமல் விட்ட வார்த்தைகளின் பின்னிருந்த அர்த்தத்தில் அருவருத்துப்போனான்.

அவனுக்குள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த ஆத்திரத்தோடு அவளிடம் கதைக்கப் போனால் ஏதும் விபரீதமாகிவிடுமோ என்று பயந்துதான் இங்கேயே இருந்தான். அதற்கு என்னவெல்லாம் சொல்லிவிட்டாள்?

“என்ன சவீதா கதைக்கிறாய்?” ஆற்றமாட்டாமல் இந்திரா இடைபுக, “போதும் நிப்பாட்டுங்க! எல்லாம் உங்களாலதான். நிம்மதியா இருந்த எங்கட வாழ்க்கையை நாசமாக்கினதே நீங்கதான். இனியும் ஏதாவது கதைச்சுக்கொண்டு வந்தீங்க, குடும்பமாச் சேந்து பிள்ளை வேணும் எண்டு என்னைக் கொடுமை செய்றீங்க எண்டு போலீஸ்ல கொம்ளைண்ட் செய்வன்.” என்றதும் அகத்தியன் அதிர்ந்துபோனான்.

வேகமாகத் திரும்பி அம்மாவையும் அக்காவையும் பார்த்தான். நம்ப முடியாத திகைப்பில் சிலையாகிப் போயிருந்தனர். சிந்தாமணி நெஞ்சைப் பற்றிக்கொண்டு கண்ணீருடன் அவனைப் பார்த்தார்.

அதற்குமேல் அவன் அங்கிருக்கவில்லை. அவர்கள் இருவருமாவது நிம்மதியாக இருக்கட்டும் என்றெண்ணி அவளுடனேயே புறப்பட்டிருந்தான்.

இன்னும் பிரச்சனைகள் பெரிதாகிவிடுமோ என்கிற பயத்தில் கஜேந்திரனிடம் இதைச் சொல்லாமல் மறைத்தாள் இந்திரா.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 7


யாரிடமும் இந்த உண்மையைச் சொல்லாமலேயே அகத்தியனுக்கும் அவளுக்குமான திருமணத்தைத் தவமலர் பேசி முடித்தபோது சவீதா பயந்து நடுங்கினாள்தான். இதெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று மறுக்கவும் செய்தாள். ‘நீ பேசாம இரு. நான் என்ன செய்றன் எண்டு எனக்குத் தெரியும்!’ என்று அவர் அதட்டியபோது, அவளும் அமைதியாகிவிட்டாள்.

திருமணம் ஆகாமலே போய்விடுமோ என்கிற பயம் அடி நெஞ்சில் இருந்தது ஒரு காரணமென்றால் பெரும் காரணமாக அமைந்தவன் அகத்தியன். அவன் தோற்றமும் குணமும் வெகுவாகவே ஈர்த்தது. அவளை அவன் பார்க்கும் பார்வையில் இருந்த மையல், அவளை மொத்தமாகச் சுருட்டி இழுத்திருந்தது.

திருமணம், அதன்பிறகான இனிய வாழ்க்கை என்று அவன் மீது பித்தாகிப்போனாள். அதுவும், அவள் மீது உயிரையே வைத்திருக்கும் அவன், அவளின் விருப்பு வெறுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் அவன் பிள்ளை பிறக்காது என்பதைப் பெரிதாக எடுக்கமாட்டான் என்று நம்பினாள். அந்த நம்பிக்கை இருந்தாலும், உயிரும் உடலுமாக வாழ்ந்தாலும் அடித்தளம் பொய்யில் அமைக்கப்பட்டது என்கிற உண்மை, நெஞ்சை உறுத்திக்கொண்டே இருந்ததில் உள்ளூர ஒரு பயம் இருந்துகொண்டேதான் இருந்தது.

அவள் பயந்தது போலவே அனைத்தும் நடக்கவும் பதறிப் போனாள். இத்தனை நாள்களாக நீதான் உலகம் என்று வாழ்ந்தவன் ஒரு பிள்ளைக்காக அவளை வெறுப்பானா? அன்னை வீட்டுக்குப் போகும் அந்த நான்கு நாள்களில் கூட, ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு வந்து, அவளைக் கொஞ்சிவிட்டுப் போகிறவன் அவள் முகமே பாராமல் இருப்பானா? அப்படி, அவனால் இருக்க முடிகிறதா? பொருளற்ற ஆத்திரம் வந்தது. நெஞ்சு பதறியது. ஒருவிதப் பதற்றம் அவளைப் பற்றி ஆட்டியது. தன் கைப்பொருள் களவு போய்விடுமோ என்று பயந்தாள். எதையாவது செய்து அவனைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க அவசரப்பட்டாள்.

அதற்கு மாறாக, முழு நாளையும் வெளியிலேயே செலவிட்டான் அகத்தியன். கடையே கதியென்று கிடந்தான். நேரம் சென்றுதான் வீடு வந்தான். அப்படி வந்தாலும் குளித்து, உடையை மாற்றிக்கொண்டு கண்ணை மூடிப் படுத்துவிடுவான். அவள் முகம் பார்க்க மறுத்தான். சாப்பிடுவதுகூட இல்லை.

பொறுத்து பொறுத்துப் பார்த்தவளால் நான்கு நாள்களுக்கு மேல் முடியவில்லை. அவளைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறான்? இப்படியே விலகி விலகி முற்றிலுமாக விலகப் போகிறானா? அப்படி நினைத்ததும் பயமும் பதற்றமும் கூடிப்போனது. அதற்கு விடக்கூடாது. விடவே கூடாது!

“என்ன, என்னவோ வாழ்க்கையே அழிஞ்சவன் மாதிரி நாடகமாடுறீங்க. பிள்ளைதானே இல்ல. நான் இருக்கிறன் தானே? நான் என்ன தொடக்கூடாத அளவுக்குக் கெட்டுப் போனவளா? முகமே பாக்கிறீங்க இல்ல. ஒரு நாள் கூட உன்ன விட்டு விலகியிருக்கேலாது எண்டு சொல்லுவீங்க. எல்லாம் நடிப்புப் போல. இல்ல, புதுசா பிள்ளை தரக்கூடிய எவளையாவது தேடிட்டீங்களா?” என்றாள் அகங்காரம் கொண்டு.

நடந்தவற்றைக் கடந்து வரத் தனக்குள் மிகவும் போராடிக்கொண்டிருந்தவன், திரும்ப திரும்பத் தரமற்றுப் பேசும் அவள் பேச்சை ஜீரணிக்க முடியாமல் விழிகளை இறுக்கி மூடினான். ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுத் தன்னைச் சற்று நிதானப்படுத்திக்கொண்டு, விழிகளைத் திறந்து அவளைப் பார்த்தான்.

“இவ்வளவு மோசமாக் கதைக்கிற உனக்கு, நீ செய்தது எவ்வளவு பெரிய துரோகம் எண்டு விளங்கவே இல்லையா?” மிகுந்த நிதானத்தோடு வினவினான்.

“அப்ப உங்களுக்குப் பிள்ளைதான் முக்கியம். பிள்ளை இல்லாட்டி என்னோட வாழமாட்டீங்க?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.

“நான் பிள்ளையைப் பற்றிக் கதைக்கவே இல்ல. நீ ஏன் இதைப் பற்றி முதலே சொல்லேல்ல எண்டு கேக்கிறன். கலியாணத்துக்குப் பிறகாவது சொல்லி இருக்கலாமே. இந்த மாதம் பிள்ளை வந்திடும், அடுத்த மாதம் பிள்ளை வந்திடும் எண்டு நம்பிக்கொண்டு இருந்த என்னைப் பாக்க உனக்கு எப்பிடித் தெரிஞ்சது? அடி முட்டாள் மாதிரியா?” அவன் பேச்சில் மெல்லிய சூடேறிற்று.

அவளுக்கு முகம் கன்றிச் சிவந்தது. நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. என்றாலும், “இப்பவே இப்பிடி நடக்கிற நீங்க, சொல்லி இருந்தா கட்டி இருப்பீங்களா? அதுதான் சொல்லேல்ல.” என்றாள் தன் தப்பை ஒப்புக்கொள்ளாமல்.

“இப்பிடி இன்னும் எவ்வளவு காலத்துக்கு மறைக்கலாம் எண்டு அம்மாவும் மகளுமா பிளான் போட்டிருந்தீங்க? காலம் முழுதுக்குமா?”

“என்னைப் பற்றி மட்டும் கதைங்க. என்ர அம்மாவை இங்க இழுக்க வேண்டாம்!” முகம் கோபத்தில் சிவக்க அறிவித்தாள்.

அது அவனைச் சீற்றம் கொள்ள வைத்தது. பொறுமையும் பறக்க, “அந்தப் பொம்பிளைய இழுக்காம வேற ஆர இழுக்கச் சொல்லுறாய்? அவாவும் நீயுமாச் சேந்துதானே என்னை முட்டாளாக்கி இருக்கிறீங்க.” என்றான் கண்களில் அனல் பறக்க.

“இப்ப என்ன எண்டுறீங்க அதுக்கு?”

அவளின் அந்தத் திமிர் அவனை உசுப்பிப் பார்த்தது. “என்னவோ? எவ்வளவு திமிர் உனக்கு? எனக்கு ஏதும் வரக்கூடாத வியாதி வந்திருந்து, அதைச் சொல்லாம உன்னைக் கட்டி இருந்தாலும் இப்பிடித்தான் நிப்பியா நீ?” என்றான் சினத்தோடு.

ஒருமுறை அவளுக்குத் திக் என்று இருந்தது. வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “இப்ப என்னத்துக்குத் தேவையில்லாம கதைக்கிறீங்க? இப்பிடியே இன்னும் எத்தின நாளைக்கு முகத்தைத் திருப்பிக்கொண்டு இருக்கப் போறீங்க? அதைச் சொல்லுங்க.” என்று தன் விசயத்துக்கு வந்தாள்.

“ஆருக்குத் தெரியும்? மனதுக்க விசத்தை வச்சுக்கொண்டு வெளில பல்லைக் காட்டி இழைய நான் என்ன நீயா?” என்றான் அவன் வெறுப்புடன்.

ஒரு கணம் விக்கித்து நின்றாள் சவீதா. உண்மை சுட்டது. அடுத்த நொடியே அதற்கும் சேர்த்து ஆத்திரம் கொண்டு, “அப்பிடியென்ன பெரிய கேவலமான வேல செய்தனான்? நீங்க இருக்க இன்னொருத்தனைத் தேடிப் போனேனா? இல்ல, உங்களுக்கு நல்ல மனுசியா இருக்கேல்லையா? சரி சொல்லுங்க, இப்ப என்ன செய்யப் போறீங்க அதுக்கு?” என்றாள் மீண்டும்.

அது தெரியாமல்தானே அவனும் தவிக்கிறான். இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் என்ன முடிவு? யோசிக்க யோசிக்கப் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“உங்கட பிளான் என்ன எண்டு தெரியாது எண்டு நினைச்சீங்களா? கொஞ்சக் காலத்துக்கு இப்பிடியே இருந்துபோட்டு, பிள்ளை பிறக்காது, ஏமாத்திட்டாள் எண்டுறதையே சாட்டா வச்சு, என்னை விட்டுட்டு இன்னொருத்தியக் கட்டிப் பிள்ளையப் பெறத்தானே யோசிக்கிறீங்க. அப்பிடி ஏதும் பிளான் போட்டீங்க எண்டு வைங்க, என்ர கைய நானே அறுத்துப்போட்டு, நீங்க அடிச்சுக் கொடுமை செய்றீங்க எண்டு ஊருக்கே சொல்லுவன்!” கண்களில் நெருப்புப் பறக்க மிரட்டினாள் அவள்.

ஒருமுறை விழிகளை மூடித் திறந்துவிட்டு இழுத்து மூச்சை விட்டான் அகத்தியன். அதுசரி! ஏமாற்றிக் கட்டியவள். வாழ்ந்த வாழ்க்கையைக் கூடப் பொய்யாக வாழ்ந்தவள். அவளுக்கு இப்படித்தானே ஓடும். வெறுப்புடன் அவளை வெறித்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து போனான்.

அப்படியே நின்றுவிட்டாள் சவீதா. அவன் பார்த்த பார்வை அவளை நிலைகுலையைச் செய்தது. அதிலிருந்த வெறுப்பையும் விலகலையும் கண்டு பயந்தாள். பெரிதாகக் கோபப்படக்கூட மாட்டான். அதுவும், அவள் என்று வந்துவிட்டால் குழைவதும் கொஞ்சுவதும் மட்டும்தான். அப்படியானவன் பார்த்த பார்வை? தன் நிம்மதியை இழந்தாள் சவீதா. அந்தப் பார்வையை ஏற்றுக்கொள்ள முடியாமல் துடித்தாள். மீண்டும் பழையபடி அவனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர என்ன வழி என்று யோசித்தாள்.

அப்படி யோசித்து அவள் எடுத்த முயற்சிகளால், அவளை அறியாமலேயே அவனுக்கு நரகத்தைக் காட்டினாள்.

வீடு வரக் கொஞ்சம் பிந்தினாலும் கடைக்கு வந்து சண்டையிட்டாள். தான் நினைத்தபடிதான் அவன் நடக்கவேண்டும் என்றாள். தமக்கை தாயைப் பார்க்கப் போக விடவில்லை. அவர்கள் இங்கே வந்தாலும் சண்டை பிடித்தாள். வார்த்தைகளால் அவனைக் குத்திக் குதறினாள். எப்போது கதைக்கப் போனாலும் அது பெரும் சண்டையில் மாத்திரமே முடிந்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தனை நாள்களும் கடையின் கணக்கு வழக்கில் இருந்து அனைத்தும் அவள் பொறுப்பில் இருந்ததில் இன்னும் நன்றாகவே மாட்டிக்கொண்டான் அகத்தியன். அவளிடம் கொடுத்து வைத்த பணத்தை எல்லாம் தேவைக்குத் தரமாட்டேன் என்றாள். ஒரு ரூபாய் கொடுப்பதற்கும் ஆயிரம் காரணம் கேட்டாள். அதன்பிறகான வியாபாரப் பணத்தை அவனே வைத்துக்கொள்ள, அதற்கும் ஒரு சண்டை.

“என்ர மனுசி எண்டு உன்ன நம்பினதுக்கு நல்லாப் படிப்பிக்கிறாய் பாடம்!” கசப்புடன் சொல்லிவிட்டுப் போனான் அவன்.

ஒழுங்கான உணவில்லை, உறக்கமில்லை, ஓய்வில்லை, நிம்மதி இல்லை. அகத்தியன் ஒரு பைத்தியக்காரனைப்போல் மாறிப்போனான். தாய் தமக்கையிடம் கூட மனம் விட்டு எதையும் சொல்ல முடியவில்லை. சும்மாவே என்ன செய்கிறார்களோ, எப்படி இருக்கிறார்களோ என்று அஞ்சி நடுங்கும் அவர்களிடம் எதையென்று சொல்லுவான்? முதல், இதையெல்லாம் யாரிடமும் சொல்லப் பிடிக்கவில்லை. அவமானம் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்றது.

தன் திருமண வாழ்க்கை, இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்துகொண்டு போவதை எண்ணி, மனத்துக்குள் அழுதான்.

வீட்டுக்குப் போனால்தானே சண்டைக்கு வருவாள் என்று கடைக்குப்போன இந்திராவும் சிந்தாமணியும் அவன் கோலத்தைக் கண்டு திகைத்துப் போயினர். சந்தோசமாக வாழவேண்டும் என்று செய்துவைத்த திருமணம், அவனை எப்படியாக்கி வைத்திருக்கிறது என்று துடித்தனர்.

கஜேந்திரனிடம் சொன்னபோது, என் தங்கையா என்று அவன் நம்ப மறுத்தான். அவன் மூலம் தவமலர், கதிரேசன், சவீதா என்று எல்லோரையும் ஒன்றாக அமர்த்திவைத்து இதற்கு என்ன தீர்வு என்று பேசினார்கள்.

இரு பக்கமும் மாறி மாறிக் கதைவழிப்பட்டனர். தம் பக்க நியாயத்தை ஆளாளுக்கு எடுத்து வைத்தனர். வீட்டுக்கு வருவதில்லை, அவளோடு கதைப்பதில்லை, அவளுக்குத் தேவையானவற்றைப் பார்ப்பதில்லை, அவளோடு இணக்கமாக இருப்பதில்லை, அவன் போக்குக் கொஞ்சமும் சரியில்லை என்று தன் பக்கக் குறைகளை எல்லாம் கண்ணீருடன் அடுக்கினாள் சவீதா.

வாயைத் திறக்காமல் இறுகிப்போய் அமர்ந்திருந்தான் அகத்தியன்.

தவமலருக்கு மகள் சொன்னவற்றைக் கேட்டுத் தாங்கவில்லை. “என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறார் உங்கட மகன்? நான் நினைச்சிருந்தா உங்கட மகளை வாழவிடாமையே செய்திருப்பன். தங்கச்சிக்கு இப்பிடி ஒரு பிரச்சினை தம்பி, அவளுக்கு ஒரு கலியாணத்தைச் செய்து வச்சுப்போட்டு நீ கட்டு எண்டு ஒரு வார்த்த சொல்லி இருந்தா போதும். காலம் முழுக்க உங்கட மகள் உங்கட வீட்டிலேயே இருந்திருப்பா. உங்கட மகளும் வாழட்டும், என்ர மகளும் வாழட்டும் எண்டு நினைச்சு ஒண்டு செய்தா, இப்பிடித்தான் நடப்பீங்களா? குடும்பம், குழந்தை எண்டு உங்கட வீட்டுப் பிள்ளை சந்தோசமா இருக்கிறாதானே எண்டுற நினைப்பு இப்பிடியெல்லாம் செய்ய வைக்குதா? பிள்ளை பிறக்க வழி இல்லை எண்டதும் என்ன பாடெல்லாம் படுத்திறீங்க? சேச்சே! நீங்களுகளும் பொம்பிளைகள்தானே? இப்பிடித்தான் இன்னொரு பொம்பிளைப் பிள்ளையின்ர குறையச் சாட்டா வச்சு அவளின்ர வாழ்க்கையோட விளையாடுவீங்களா?” என்றதும் வாயடைத்துப் போயிற்று.

பேச்சின் திசையையே திருப்பிவிட்டாரே!

ஆனாலும் அமைதியாகப் போக முடியாமல், “பிள்ளை பிறக்காது எண்டுறது இங்க விசயம் இல்ல மாமி. சவீதா ஏன் இப்பிடி அவனைப் பாடாய்ப் படுத்திறாள்? அவனுக்கு வீட்டில நிம்மதி வேண்டாமா? அவன் என்ன பிழை செய்தவன் எண்டு தினம் ஒரு சண்டை பிடிக்கிறாள்? அவள் சொல்லுறதை மட்டும் கேக்கிற நீங்க, அவன்ர பக்கம் இருக்கிற நியாயத்தைப் பாக்கவே மாட்டீங்களா? பிழையையும் செய்துபோட்டு எப்ப பாத்தாலும் சண்டை சண்டை எண்டா அவனும் என்ன செய்வான்?” என்று, அவருக்கு அவர் மகளை விளங்கவைக்க முயன்றாள் இந்திரா.

“பின்ன, அவள் பயப்பிடுவாள் தானே? இதச் சாட்டா வச்சு உங்கட தம்பி அவளை விட்டுட்டுப் போறதில குறியா இருந்தா விடுவாளா? நடந்தது என்னவா இருக்கட்டும். கலியாணம் முடிஞ்சு இத்தனை காலம் வாழ்ந்தவருக்கு இப்ப கசக்குதாமோ? அப்ப அவள் நாலு கேள்வி கேப்பாள்தானே?” என்றதும் அங்கிருக்க முடியாமல் விருட்டென்று எழுந்து போனான் அகத்தியன்.

அவன் போவதைப் பார்த்திருந்துவிட்டு, “இப்ப என்ன? நீங்க உங்கட மகளைச் சந்தோசமா வாழ வச்சுக்கொண்டு என்ர மகளை வேண்டாம் எண்டு அனுப்பப் போறீங்களா?” என்று கேட்டார் தவமலர்.

அப்படித்தான் என்று எப்படிச் சொல்லுவார்கள்? என்ன நடந்திருந்தாலும் ஒரு பெண்ணை அப்படி அனுப்ப முடியுமா? அதுவும் குழந்தை பிறக்க வழியில்லை என்பதற்காக?

பதிலற்று அவர்கள் நிற்க, “என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. நீங்க செய்ற எல்லாத்தையும் பாத்துக்கொண்டு மேல ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு எல்லாரும் பதில் சொல்லியே ஆகோணும். ஆனா, என்ன நடந்தாலும் உன்ர மனுசிய விட்டுப்போட்டு வா தம்பி எண்டு, என்ர மகனை நான் கூப்பிட மாட்டன். அவனும் அப்பிடிப் பொறுப்பைத் தட்டிக் கழிச்சுப்போட்டு வரமாட்டான். என்ர பிள்ளைகளை நான் அப்பிடி வளக்கவும் இல்ல.” என்றுவிட்டுப் போனார் அவர்.

அன்னையும் மகளும் மூச்சு விடக்கூட முடியாதவர்களாக அமர்ந்திருந்தனர். அன்னையின் பேச்சில் பெரிதாக உடன்பாடு இல்லாத போதிலும் நடுவில் தங்கையின் வாழ்க்கை இருப்பதில் கஜேந்திரனாலும் மனைவி வீட்டினருக்காகப் பேச முடியாமல் போயிற்று. “விடு, கொஞ்ச நாள் போக எல்லாம் சரியாப் போகும்.” என்று இந்திராவைத்தான் சமாதானப்படுத்தினான்.

இப்படி, அவர்கள் வாயை தவமலர் அடைத்துவிட்டதில் சவீதாவுக்கு மிகுந்த ஆனந்தம். இனி அடங்கி, நல்ல பிள்ளையாக இருப்பான் என்று நம்பினாள்.

அவளின் நம்பிக்கைக்கு மாறாக, அகத்தியன் அன்றைக்குப் பிறகு இன்னுமே விலகிப்போனான். அவனால் முடியவில்லை. மனத்தில் இருப்பதைக் கொட்ட முடியாமல், ஒரு வடிகால் இல்லாமல் அவன் நெஞ்சைப் போட்டுப் பெரும் பாரம் அழுத்தியது. இவர்களை எல்லாம் பாராத தூரம் சென்றுவிட முடியாதா என்று துடித்தான்.

ஒருமுறை கடைக்குச் சாமான்கள் கொள்முதல் செய்ய என்று கொழும்பு சென்றவன், மூன்று நாள்களுக்கு ஹோட்டல் அறையிலேயே தங்கிவிட்டான். உண்மையில் பெரும் ஆசுவாசமாக இருந்தது. அந்த மூன்று நாள்களும்தான் கொஞ்சமேனும் நிம்மதியாக மூச்சுவிட்டான். அவன் திரும்பி வந்தபோது, எல்லோரையும் அழைத்து வைத்து, மீண்டும் ஒரு பெரும் பூகம்பத்தையே கிளப்பியிருந்தாள் சவீதா.

அவன் தன்னை விட்டு விலக முயல்கிறான் என்றாள். கொழும்பில் யாருடனோ தொடர்பு என்றாள். கொள்வனவு விசயமாக அவன் ஒரு பெண்ணுடன் பேசியதைக் குறித்து அவளோடு தொடர்பு என்றாள்.

அதற்குமேல் அவனால் பொறுக்க முடியாமல் போயிற்று. செய்வதை எல்லாம் செய்துவிட்டு அவன் ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கும் அவளைச் சும்மா விட மனம் வராமல், “என்னை என்ன உன்ன மாதிரி ஏமாத்துக்காரி எண்டு நினைச்சியா? கண்டவளோடயும் கதைக்க. நான் இப்பிடித்தான் இருப்பன். உனக்கு இருக்க விருப்பம் இல்லாட்டி நீ எங்கயாவது போ!” என்று வெடித்துவிட்டுப் போனான்.

வாழும் வீடே வெறுத்துப்போனது. அடுத்தடுத்த நாள்களில் கடையிலேயே தங்கிக்கொண்டான். அந்தக் கோபத்தில் சிந்தாமணிக்கு அழைத்துக் கத்தினாள் சவீதா. தவமலரும் நியாயம் கேட்டுக்கொண்டு வந்தார். கஜேந்திரனுக்கு நிம்மதி பறிபோனது. யார் பக்கம் நிற்பது என்று தெரியாத நிலை. “வரவர உன்ர தம்பி செய்றதும் சரியில்ல இந்திரா!” என்றான் மனைவியிடம் கடுமையாக.

மகளின் வாழ்விலும் பிரச்சனைகள் வந்துவிடுமோ என்று பயந்தார் சிந்தாமணி. அவனுக்கு எடுத்துக் கஜேந்திரன் இந்திராவிடம் கோபப்பட்டதைச் சொன்னார். தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் அகத்தியன்.

எவ்வளவு நேரம் கடந்ததோ, ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு எழுந்து வீட்டுக்குச் சென்றான்.

அதன்பிறகு நேரத்துக்கு வீட்டுக்கு வந்தான், அவள் தருவதைச் சாப்பிட்டான், அவள் என்ன கதைத்தாலும் வாயை மூடிக்கொண்டு இருக்கப் பழகினான்.

அத்தனைக்கும் காரணம் அவன் தமக்கை. அதோடு, அவனைத் தேடிவந்து, தனியாகச் சந்தித்து, அன்னையும் தங்கையும் நடந்துகொள்ளும் முறைக்கு மன்னிப்புக் கேட்ட கஜேந்திரன், தன் தங்கையை விட்டுவிடாதே என்று மறைமுகமாகக் கேட்டுக்கொண்டதும் காரணமாயிற்று.

அடிமனத்திலிருந்து அவளை வெறுத்தாலும் கூட, விவாகரத்து வரை அவனும் யோசித்ததில்லை. என் மனம் ஆறுகிற வரைக்கும், நான் சமாதானமாகிற வரைக்கும் என்னை என் பாட்டுக்கு விட்டால் போதும் என்பதுதான் அவன் தேவையாக இருந்தது. அதைக் கஜேந்திரனிடம் சொல்லியிருந்தான். அவனும் தங்கையோடு கதைப்பதாகச் சொன்னான்.

ஆனால், யார் என்ன சொன்னாலும் விளங்கிக்கொள்ள சவீதா தயாராயில்லை. அவனை இன்னுமின்னும் நெருக்கினாள். பழையபடி அவள் ஆடு ராமா என்றதும் ஆடும் கணவனாக அவனை மாற்றிவிடும் வேகம் இருந்தது அவளிடம்.

எல்லாவற்றையும் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டவனால் அவள் தன்னுடன் இழைய வந்ததைத்தான் பொறுக்கவே முடியாமல் போயிற்று.

வெறுப்புடன் விலகிப் போனான். அப்போதும் பிடித்து வைத்து, “இவ்வளவு நாளும் இனிச்சது இப்ப கசக்குதா? ஒழுங்கு மரியாதையாப் பழையமாதிரி இருங்க. இல்லையோ, உங்கட அக்கான்ர வாழ்க்கையையும் வீணாக்கி விட்டுடுவன். அண்ணாக்கு முன்னால எல்லாத்தையும் சொல்லிக் கண்ணைக் கசக்கிக்கொண்டு நிண்டன் எண்டா காணும். உங்கட குடும்பமே அழும்.” என்றதும் அவனால் முடியவே இல்லை. அருவருப்புடன் அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.

“என்ன பொம்பிளையடி நீ? உனக்கு வெக்கமாவே இல்லையா? உன்ர பேச்சும் செயலும் சீ எண்டு போகுது எனக்கு!” என்றுவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவனுக்கு மூச்சு முட்டிப் போயிற்று.

தரையில் விழுந்து அடிபட்டவளின் முகம், அவமானத்திலும் ஆத்திரத்திலும் சிவந்து கொதித்தது.

முற்றத்தில் வந்து நின்றான் அகத்தியன். மனம் முழுக்கப் புழுக்கம். தன்னைச் சுற்றிச் சூழ்ந்திருந்த இருளுக்குள் தனக்கான வெளிச்சத்தைத் தேடினான். கீற்றாய்க் கூட எதுவும் தென்பட மறுத்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ஆசைப்பட்டுக் கட்டியவளை, உயிராய் நேசித்த மனைவியை அடி மனத்தில் இருந்து வெறுக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டதை எண்ணித் துடித்தான். மனம் மெல்ல மெல்ல முடியாது முடியாது என்று முரண்ட ஆரம்பித்திருந்தது.
இப்படியே எத்தனை நாள்களுக்கு அவனால் வாழ்ந்துவிட முடியும்? அவன் அடங்கிப் போக போக, அவள் இன்னுமின்னும் மிதிக்கிறாளே!

அப்படியே எவ்வளவு நேரம் நின்றானோ! ஒரு கட்டத்தில் உடலும் மனதும் சோர்ந்து துவண்டது. வீட்டுக்குள் சென்று, மீண்டும் அவளை எதிர்கொள்வதை நினைக்கவே கசந்தது. வேறு வழி இல்லை. அவனுக்கு விதித்தது இதுதான் போலும். கலைந்து கிடந்த கேசத்தை இரண்டு கைகளாலும் கோதியபடி உள்ளே வந்தான்.

அங்கே, அவர்கள் அறையின் கதவு உட்புறமாகத் தாழிடப் பட்டிருந்தது. இத்தனை நாள்களாக மிரட்டிக்கொண்டிருந்தது போன்று, தன்னைத் தானே எதுவும் செய்து கொண்டாளோ என்று நினைத்ததும் அவனுக்கு நெஞ்செல்லாம் உலர்ந்து போயிற்று.

ஓடிப்போய்ப் படபடவென்று கதவைத் தட்டினான். சத்தமே இல்லை. பயந்தே போனான். தொண்டை எல்லாம் வறண்டு போனது.

நடந்ததற்கு மன்னிப்புக் கேட்டு, இனி இப்படி நடக்கமாட்டேன் என்று சொல்லி, உன் விருப்பம் போலவே நடக்கிறேன் என்று கெஞ்சியும் அவளிடம் இருந்து பதிலே இல்லை.

அவனுக்குக் கைகால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. கதவை உடைக்கப் பார்த்தான். தேக்குமரக் கதவு. அசைந்து கொடுக்கவே இல்லை. அவன் உடம்பு புண்ணானதுதான் மிச்சம். வீட்டைச் சுற்றி ஓடிப்போய் யன்னல் கதவைப் படாத பாடுபட்டுத் திறந்தான்.

அங்கே அவள், கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். காதுகளில் ‘ஹெட்போன்ஸ்’.

அவனால் நம்பவே முடியவில்லை. இப்படி, முழுதாக இருந்துகொண்டா அவன் கத்திய கத்தலுக்கும் பதறிய பதற்றத்துக்கும் அசையாமல் இருந்தாள்? இருந்த பதற்றமெல்லாம் வடிய உடலில் இருந்து ஆறாய் வழிந்தோடியது வியர்வை. அப்படியே மண் தரையில் சரிந்தவனுக்கு எல்லாமே விட்டுப்போன உணர்வு. கழிவிரக்கம் கொண்டான். தன் நிலையை எண்ணிக் கண்ணீர் கூட வரப்பார்த்தது. அப்படியே கண்களை மூடிச் சுவரில் தலையைச் சாய்த்தான்.

ஒரு கெட்ட பழக்கம் இல்லை; எந்தப் பெண்ணையும் தவறாகப் பார்த்தது இல்லை; கோபப்பட்டுக் கத்துவதைக் கூட விரும்பாதவன்; இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக வாழ விரும்புகிறவன்; நல்ல உழைப்பாளி; கட்டியவளைக் குறையில்லாமல் வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன். அவனுக்கா இப்படி ஒரு நிலை?

நெஞ்சின் நடுக்கமும் உடலின் பதற்றமும் அடங்க நெடுநேரமாயிற்று. மீண்டும் எழுந்து அவளைப் பார்த்தான். இப்போது படுத்திருந்தாள்.

“ஏன் சவீதா இப்பிடி எல்லாம் செய்றாய்?” மனம் விட்டுவிட்ட குரலில் வினவினான்.

“கதவைத் திற ப்ளீஸ். ஏன் இப்பிடி என்னைப்போட்டு வதைக்கிறாய்?” கோபப்படக்கூட அவனால் முடியவில்லை.

“நான் என்ன பிழை செய்தனான் உனக்கு? நீ செய்த துரோகத்தைக் கூடக் கடந்து வரத்தானே பாக்கிறன். ஆனாலும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்கிறாய்?”

அவள் பதில் சொல்லவே இல்லை.

“சவீதா.” அவள் பெயரையே கெஞ்சலாக்கினான்.

“கதவைத் திற சவீதா.”

அவள் திரும்பிப் படுத்தாள்.

“நீ ஏதும் செய்திடுவியோ எண்டு எனக்குப் பயமா இருக்கு. ப்ளீஸ், கதவை மட்டும் திறந்து விடு. நான் உள்ளுக்க வரக்கூட இல்ல.” என்று கூடச் சொல்லிப்பார்த்தான்.

அவள் அப்படியேதான் இருந்தாள்.

எக்கேடாவது கெட்டுத் தொலையட்டும் என்று போகப் பயந்தான். இவ்வளவு தூரத்துக்கு வீம்பு பிடிக்கிறவள் அவனை அடக்குவதற்காக என்னவும் செய்வாள்.

ஒரு கட்டத்துக்குமேல் அவளிடம் கெஞ்சுவதற்குக் கூட அவனிடம் வலுவில்லாமல் போயிற்று. மீண்டும் தலையைப் பற்றியபடி அங்கேயே அமர்ந்துகொண்டான்.

எதையும் சிந்திக்கக்கூட முடியவில்லை. பனியில் உறைந்த சிலையைப் போன்று அங்கேயே அமர்ந்திருந்தான்.

விடிந்தது. அவள் கழிவறை செல்வதற்காக அறையை விட்டு வெளியே வந்த நேரத்தில் ஓடிப்போய் அறையின் தாழைக் கழற்றி எறிந்தான். அவனை மிரட்ட நினைக்கிறவளுக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தெரிந்தாலும் ஒரு ஆத்திரம்.

அவனுக்கான அன்றைய சோதனைகள் முடிந்த பாடில்லை போலும். அவளிருக்கும் அந்த வீட்டில் இருக்கப் பிடிக்காமல் கடைக்கு வந்தவனை காவல்துறை வந்து அழைத்துக்கொண்டு போனது.

மனைவியை அடித்துக் கொடுமை செய்தானாம் என்று அவன் மனைவியே புகார் கொடுத்திருந்தாள். சான்றாக, அவன் தள்ளிவிட்டுக் கட்டிலில் இருந்து விழுந்தபோது தேய்த்த காயத்தையும் காட்டியிருக்கிறாள். கேட்டவனின் முகம் செத்துச் சுண்ணாம்பாயிற்று.

ஏன், எதற்கு என்று விசாரித்தவர்களிடம் என்ன சொல்வான்? என்னை நெருங்கினாள், தள்ளிவிட்டேன் என்றா? ஒன்றுமே சொல்லாமல் அமர்ந்திருந்தான். வீட்டினருக்குக் கூடத் தெரியப்படுத்தவில்லை. ஒருவித ஆத்திரம். அதை, யார் மீதும் இறக்கிவைக்க முடியாமல் போனதில் தன்னையே தண்டித்துத் தீர்க்க முயன்றான்.

இது, கணவன் மனைவி சண்டை என்பதில் அன்றைய நாள் முழுவதும் காவல் நிலையத்திலேயே வைத்திருந்துவிட்டு, இரவான பிறகு இனியாவது ஒழுங்காக இரு என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

ஆனால், அந்த இடைவெளிக்குள் காண்கிற காவலர்கள் எல்லோரும் கேட்ட கேள்விகளிலும் பார்த்த பார்வையிலும் கூனிக் குறுகிப் போனான்.

இனி முடியாது. அவன் மனது அடித்துச் சொன்னது. அக்காவுக்காகக் கூட அவனால் அவளைப் பொறுத்துப் போகவே முடியாது. அறுந்து விழுகிறேன் என்று அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கயிறு அறுந்தே போயிற்று.

அடுத்தநாள் காலையில் எழுந்து வந்து கதவைத் திறந்த இந்திரா கண்டது, கசங்கிய ஆடைகளோடு தலை கலைந்து, கண்கள் சிவந்து, உறக்கமே இல்லாத முகத்துடன் ஒரு பைத்தியக்காரனைப்போல் வாசலில் நின்றிருந்த அகத்தியனைத்தான்.

“ஐயோ தம்பி, என்னடா உனக்கு நடந்தது?” ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டு அழுதவளிடம், “இதுக்கு மேலயும் என்னால ஏலாக்கா. எனக்கு எதையாவது செய்து இந்தக் கொடுமையில இருந்து விடுதலை வாங்கித் தாங்க. மூச்சு முட்டியே செத்திடுவன் போல!” என்றான் எல்லாம் வெறுத்த குரலில்.

மகளின் சத்தத்தில் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்த சிந்தாமணி, மகன் சொன்னதைக் கேட்டு இடிந்துபோனார். அவனை இப்படிப் பார்க்கவா அவர் உயிரோடு இருக்கிறார்?

அப்போதுதான் எழுந்து, காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்த கஜேந்திரனும் அகத்தியனைக் கண்டு அதிர்ந்துதான் போனான். அதைவிட, அவன் சொன்னவை? அந்த வீட்டிலிருக்கும் யார் முகத்தையும் அவனால் பார்க்க முடியாமல் போயிற்று.

இத்தனை நாள்களாகத் தங்கைக்காக என்று மனச்சாட்சியை மறைத்து வைத்துவிட்டு நடமாடியது உறுத்தியது.

அதன்பிறகு எதையும் யோசிக்கவில்லை இந்திரா. அவனுக்கு சவீதாவிடம் இருந்து விடுதலையை வாங்கிக் கொடுத்துவிட்டே ஓய்ந்தாள். கொடுக்கவே மாட்டேன் என்று நின்ற சவீதாவையும், அவளோடு சேர்ந்து இவர்களை ஒருவழியாக்கிய தவமலரையும் கஜேந்திரன் சமாளித்திருந்தான்.

இப்படி, முதல் பாதி பொய்யான சந்தோசத்திலும், அடுத்த பாதி கசப்பான நரகத்திலும், கடைசிப் பாதி காலைச் சுற்றிய பாம்பிடம் இருந்து விடுபடுவதிலும் என்று அவன் திருமண வாழ்வு, வாழ்க்கை முழுவதற்குமான பெரும் பாடத்தைக் கற்பித்துவிட்டுத்தான் போயிருந்தது. அப்படியிருக்க, இன்னொரு பெண்ணை நம்பித் தன் வாழ்க்கையை மீண்டும் கொடுப்பானா?
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 8



அன்று, தூரிகாவின் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பெற்றார் சந்திக்கும் நாள். ஆசிரியர்களைச் சந்தித்து, அவள் பற்றிய குறை நிறைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு வந்தாள் யசோ.

அதே ஆசிரியர் பெற்றார் சந்திப்புக்காகக் கணவனோடு வந்திருந்த இந்திரா, யசோவைக் கண்டுவிட்டு, “டக்கெண்டு திரும்பிப் பாக்காம உங்கட இடப்பக்கமாப் பாருங்கோ கஜன். லைட் ப்ளூ கலர் சாறி, மகளோட போறா. அவாவத்தான் அண்டைக்குப் பாத்தனாங்க. இங்க பள்ளிக்கூடம் விட வரேக்க, பிள்ளையைக் கூட்டிக்கொண்டு போகேக்க எல்லாம் அடிக்கடி கண்டிருக்கிறன். பாக்க நல்ல மாதிரித்தான் தெரியிறா. இன்னொரு சின்ன மகளும் இருக்காம். இல்லாட்டித் தம்பிக்குக் கேட்டிருக்கலாம்.” என்று கணவனுக்குக் காட்டினாள்.

“ரெண்டு பிள்ளைகள் இருந்தா என்ன இந்திரா? தாமினியையே அப்பிடிக் கவனமாப் பாக்கிறவன், அந்தப் பிள்ளைகளை விட்டுடுவானா? அது பிறகு. அதுக்கு முதல், அவனை ஒரு கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்ல வை!” தன் வீட்டினரால்தான் அவன் தனியாக நிற்கிறான் என்கிற எண்ணம், அவன் மனத்திலும் இருந்ததில் சொன்னான்.

அவனே எத்தனையோ முறை சொல்லிவிட்டான். அகத்தியன் அசைந்து கொடுக்கவே இல்லை. ஒரு அளவு தாண்டி அவனாலும் வற்புறுத்த முடியவில்லை.

“அது உண்மைதான். எண்டாலும் இவா வேண்டாம். வளந்த பிள்ளைகள் இருக்கிற வீட்டில அவன் என்னத்தப் பெருசா வாழ்ந்திடுவான்? காலத்துக்கும் அந்தப் பிள்ளைகளுக்காக ஓடத்தான் சரியா இருக்கும். அந்தப் பிள்ளைகளும் இவனைத் தகப்பனாப் பாக்குங்களா தெரியாது. ஏற்கனவே ரெண்டு எண்டேக்க இன்னொரு பிள்ளை பெறுர ஐடியாவே வராது. காலத்துக்கும் அவன் தனக்கெண்டு ஒரு பிள்ளை கூட இல்லாம வாழுறதா? வேறதான் பாக்க வேணும்.” என்று சொன்னவள், இனியும் அவனை விடக்கூடாது எனும் முடிவுக்கு வந்திருந்தாள்.

அன்று இரவு, கடையை மூடிவிட்டு வந்தவனுக்கு உணவைப் போட்டுக் கொடுத்துவிட்டு, “சுசீலாக்கா ஒரு புரோக்கரின்ர நம்பர் தந்தவா. அவர், ரெண்டாம் தாரமாக் கட்டுற ஆக்களுக்கு எண்டே பாக்கிறவராம். அவரிட்ட உன்ர குறிப்பக் குடுக்கப்போறன்.” என்று அறிவித்தாள்.

சாப்பிடுவதை நிறுத்திவிட்டுத் தமக்கையை நிமிர்ந்து பார்த்தான் அகத்தியன். “இந்தக் கொஞ்ச நாளாத்தான் நிம்மதியா இருக்கிறன். அது பிடிக்கேல்லையா உங்களுக்கு?” என்றான் புருவச் சுளிப்புடன்.

நெஞ்சுக்குள் சுருக்கென்று வலித்தாலும், “நிம்மதி சரி சந்தோசமா இருக்கிறியா? விடிஞ்சா உன்ர பாட்டுக்குக் கடைக்குப் போறாய். இரவானா வந்து சாப்பிட்டுப் படுகிறாய். இதுக்குப் பெயர் வாழ்க்கையா?” என்று ஆதங்கத்துடன் கேட்டாள் தமக்கை.

“அதுக்காகத் தலையக் கொண்டுபோய்த் தண்டவாளத்தில குடுக்கச் சொல்லுறீங்களா?” என்றதும் அவளுக்குக் கோபமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது.

“என்னடா கதைக்கிறாய்? அப்ப என்ன உன்ர கொத்தான் தலையைக் கொண்டுவந்து தண்டவாளத்துக்கையா வச்சிருக்கிறார்?”

“அத, அத்தானக் கேட்டாத்தான் தெரியும்.” என்றான் அவன் சிரிக்காமல்.

“டேய்!” என்றவளால் அதற்குமேல் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஆனாலும், காரியத்தில் கண்ணாக இருக்கிறவளாக, “ஒண்டுக்கு ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகளை வச்சிருக்கிற அந்தப் பெட்டையே இன்னொரு கலியாணத்துக்கு ரெடி. உனக்குத்தான் விசர் பிடிச்சிருக்கு.” என்றதும் அவன் முகம் மாறிப் போயிற்று.

“அக்கா, எனக்கு விருப்பம் இல்லை. அது வேற. அதுக்கு ஆரோ ஒருத்தியப் பற்றி இப்பிடிக் கதைப்பீங்களா நீங்க?” என்று கண்டித்தான்.

“அவவைப் பற்றி நான் ஏன் கதைக்கிறன்? அவாவே கட்ட ரெடி உனக்கு என்ன பிரச்சினை எண்டுதான் கேக்கிறன். நல்ல ஒருத்திக்காக இப்பிடியே இருந்தாலும் பரவாயில்ல. பார் அவளை. தனக்கு ஒரு கலியாணம் நடந்து, டிவோர்சான எண்ணமே இல்லாம சுத்துறாள். மாமி அவளுக்கே வெளிநாட்டு மாப்பிள்ளை பாக்கிறாவாம். நீதான் என்னவோ வாழ்ந்து முடிச்சவன் மாதிரி ஆளும் கோலமும் தாடியும் எண்டு கன்றாவியாத் திரியிறாய்.” என்றாள் முகத்தைச் சுளித்துக்கொண்டு.

“விடுங்க அக்கா!” என்றான் அக்கறையற்று.

அதன்பிறகு அவள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் காதில் விழுத்தாதவனின் செய்கை, இந்திராவுக்குக் கோபமூட்டியது. ஒரு அளவுக்குமேல் அவனோடு வாதாடினால் இப்படி அமைதியாக இருந்தே மறுப்பைக் காட்டிவிடுவான்.

இந்தமுறை விடவே கூடாது என்று முடிவுபண்ணி, “எனக்குத் தெரியாது! நான் ஒரு பெட்டையைப் பாப்பன். நீ கட்டுறாய். அவ்வளவுதான். இல்லையோ, உன்ர கொத்தானையும் அவரின்ர வீட்டுக்கு அனுப்பிப்போட்டு, உன்னோட நானும் தனியா இருக்கிறன்.” என்று அறிவித்தாள்.

அதற்கெல்லாம் அசராமல், “நான் உங்கட கண்ணுக்கு முன்னால இருக்கிற வரைக்கும்தானே இப்பிடியெல்லாம் வெருட்டுவீங்க. இல்லாம எங்கயாவது போய்ட்டா?” என்று அமைதியாகக் கேட்டவனைக் கண்டு, அதிர்ந்துபோனாள் தமக்கை.

“டேய், என்ன கதைக்கிறாய்? வெருட்டிப் பாக்கிறியா?”

“பின்ன, வேற என்ன கதைக்க? உங்கள அப்பிடிப் பாக்கவா அந்தப் பாடெல்லாம் பட்டனான்?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

அவளுக்கு விழிகள் கலங்கிப் போயின. “அப்ப, எனக்கு மட்டும் உன்ன இப்பிடிப் பாக்கச் சந்தோசமா இருக்கும் எண்டு நினைக்கிறியா?” தழுதழுத்த குரலில் வினவினாள்.

“அதுக்கு என்னக்கா செய்யச் சொல்லுறீங்க? எனக்கு விதிச்சது அவ்வளவுதான்.”

“அப்பிடி விடேலுமாடா? முதல், எல்லாரும் அவள மாதிரி இல்ல தம்பி. நல்ல பிள்ளைகள் ஓராயிரம் பேர் இருக்கினம்.”

“நானும் இல்லை எண்டு சொல்லேல்லையே! தப்பித்தவறி திரும்ப வாறவளும் அப்பிடியானவளா இருந்திட்டா என்ன செய்வீங்க எண்டுதான் கேக்கிறன். முதல் எனக்குக் கலியாண வாழ்க்கையில விருப்பமே இல்லாமப் போயிற்றுது.”

வேதனையோடு பார்த்தாள் தமக்கை. தன்னிச்சையாய் முதல் திருமணமும், அது முற்றான நாள்களில் அவன் முகத்தில் தெரிந்த செழிப்பும் நினைவில் வந்தது.

“அப்பிடி எல்லாம் சொல்லாதையடா!” என்றாள் கண்ணீரினூடு. “அவளின்ர சொந்த அண்ணாதான் இவர். இவருக்கும் அவளுக்கும் ஏதாவது ஒரு குணம் ஒரே மாதிரி இருக்கா சொல்லு? ரெத்த சம்மந்தமான சகோதரமே ஒருத்தர மாதிரி இன்னொருத்தர் இல்ல. இதில நீ, ஒருத்தி மாதிரித்தான் இன்னொருத்தியும் இருப்பாள் எண்டு சொல்லுறது என்ன கதையடா?”

அவள் என்ன சொல்லியும் அவன் முடிவிலிருந்து அவனால் மாற முடியவில்லை. வாதத்தை வலுவாக எடுத்து வைப்பது வேறு! களத்தில் இறங்கி வாழ்ந்து பார்ப்பது வேறு! அவன் சூடு கண்ட பூனை. அவனால் இன்னொரு முறையும் சூடு வாங்க முடியவே முடியாது!

“நீங்க என்ன சொன்னாலும் என்னால ஏலாது. என்ன இப்பிடியே விட்டுடுங்க!” என்றுவிட்டு எழுந்து போனான்.

அன்னை மகள் இருவர் முகமும் சோர்ந்து போயிற்று.

“சரி விடுங்கம்மா. இண்டைக்குத்தானே ஆரம்பிச்சு இருக்கிறம். போக போக வழிக்கு வருவான்.” என்று அன்னையைத் தேற்றினாள் இந்திரா.

சொன்னது போலவே இந்திரா விடவில்லை. கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் அவனைக் கரைக்கும் முயற்சியில் இறங்கினாள்.

*****
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அன்று, பள்ளிக்கூடத்திலிருந்து மகளை அழைத்துக்கொண்டு பார்மசிக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் யசோதினி. என்ன சொல்லித் தந்தார்கள், என்னவெல்லாம் நடந்தது என்று தூரிகாவிடம் கேட்டுக்கொண்டு வந்துகொண்டிருந்தவள், மறுபக்கத்தில் அகத்தியனும் சிந்தாமணியும் நிற்பதைக் கண்டாள்.

அவன் பைக்கை ஆராய்ந்துகொண்டிருந்தான். அருகில் இருந்த கல்லில் சோர்வுடன் அமர்ந்திருந்த சிந்தாமணி, சேலைத் தலைப்பால் தன்னைப் போர்த்திக்கொண்டிருந்தார்.


அவர்களைக் கடந்து வந்திருந்தாலும் அப்படியே போக மனம் வரவில்லை. சிந்தாமணியின் இயலாத தோற்றம் அவளைத் தொந்தரவு செய்தது. மனம் கேளாமல் மீண்டும் திருப்பிக்கொண்டு வந்து, “ஏன் இங்க நிக்கிறீங்க அன்ட்ரி? உடம்புக்கு ஏதும் ஏலாம இருக்கா?” என்று வினவினாள்.

யாருக்கோ கைப்பேசியில் அழைத்துக்கொண்டிருந்த அகத்தியன் திரும்பிப் பார்த்தான். அவனால் அவளை யார் என்று இனங்கண்டுகொள்ள முடியவில்லை. அம்மாவுக்குத் தெரிந்தவள் போலும் என்றெண்ணிக்கொண்டு, மறுபுறம் அழைப்பை ஏற்றவரோடு பேசினான்.

“ஓம் பிள்ளை, பிரஷர் கூடிப்போச்சுது. ஒரே தலைச் சுத்தல். ஆஸ்பத்திரிக்கு எண்டு வெளிக்கிட்டு வந்தா மோட்டச்சைக்கிள் பழுதாயிற்றுது. என்னை ஒரு ஆட்டோவில அனுப்பிவிடு தம்பி எண்டு சொன்னாலும் கேக்கிறான் இல்ல. எங்கயாவது விழுந்து எழும்பிடுவேனாம் எண்டு சொல்லுறான்.” என்றார் அவர் சோர்ந்த குரலில்.

“பின்ன, நீங்க இருக்கிற நிலைக்குத் தனியா விடேலுமா?” கைப்பேசியைப் பொக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு வந்தவனின் முகத்தில் மிகுந்த எரிச்சல் கோடுகள்.

“வேகமா வரச்சொல்லி எப்ப சொன்னனான். இப்பதான் வெளிக்கிடுறானாம். அவன் வந்து நாங்க போய்… பேசாம ஒண்டு செய்வம். பைக் இங்கயே நிக்கட்டும். நீங்க வாங்க, நாங்க ஆட்டோல போவம்.”

“உனக்கு என்ன விசராப்பு? எவனாவது பைக்கை தூக்கிக்கொண்டு போய்ட்டா என்ன செய்றது? எனக்கு ஒரு அவசரமும் இல்ல. அவன் வரட்டும். நீ அமைதியா இரு.” என்றார் சிந்தாமணி.

அவர்களின் நிலை மிக நன்றாக விளங்கிவிட உதவ முன்வந்தாள் யசோதினி.

“நீங்க என்னோட வாங்கோ அன்ட்ரி. நான் கூட்டிக்கொண்டு போறன்.”

“ஏன், அவாக்கு இருக்கிற வருத்தம் போதாது எண்டு ஸ்கூட்டில கூட்டிக்கொண்டு போய் விழுத்தி எழுப்பவா?” யார் மீதென்றில்லாமல் இருந்த எரிச்சலில் சுள்ளென்று கேட்டான் அகத்தியன்.

ஒருவிதத் திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள் யசோ. கடுகடு என்று நின்றிருந்தான் அவன்.

என்ன மனிதன் இவன்? உதவ வந்த ஒரு பெண்ணிடம் இப்படித்தான் எரிந்து விழுவானா? அதைவிட, அப்படி எத்தனை பேரை அவள் விழுத்தி, அவன் பார்த்தானாம் என்று கேட்க வாய் உன்னினாலும் அடக்கினாள்.

பதில் சொல்லாமல் தவிர்ப்பதுதான் இவனுக்குத் தக்க பாடம் என்று எண்ணிக்கொண்டு, “என்ர அம்மாவை ஏத்திப் பழக்கம்தான் அன்ட்ரி. நீங்க வாங்க. உங்களைப் பாக்கவே தெரியுது, நல்லா ஏலாம இருக்கு எண்டு.” என்றாள் சிந்தாமணியிடம்.

சிந்தாமணிக்கும் போனால் என்ன என்று நினைக்கும் அளவில்தான் உடல்நிலை இருந்தது. அதில் மகனுக்கு உடன்பாடில்லை என்று தெரிந்ததில், “இல்லயம்மா பரவாயில்ல. நீங்க போங்கோ. இப்பதான் பிள்ளையைப் பள்ளிக்கூடத்தால கூட்டிக்கொண்டு வாறீங்க போலக்கிடக்கு. முதல் அவாக்குச் சாப்பாட்டைக் குடுங்கோ. பசிக்கப்போகுது.” என்று, ஸ்கூட்டியில் யசோவுக்குப் பின்னிருந்த தூரிகாவிடம் பார்வை சென்றுவரச் சொன்னார்.

“ஒருநாள் லேட்டானா ஒண்டும் நடக்காது அன்ட்ரி. நேரத்தை மினக்கெடுத்தாம நீங்க வாங்கோ.”

நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தான் அகத்தியன்.

அவள் தனக்குப் பதில் சொல்லாமல் தவிர்ப்பதும், பிடிவாதமாக நின்று அன்னையை அழைப்பதும் அவனைச் சீண்டாமல் இல்லை. இருந்தாலும், அன்னையின் நிலையே முதன்மையானதாகத் தெரிய, “உங்களுக்கு அவாவத் தெரியும் எண்டா போங்கவன் அம்மா. நிக்க நிக்க உங்கட முகமும் சோர்ந்துகொண்டு போகுது. சின்னவாவ நான் கூட்டிக்கொண்டு வாறன்.” என்றவனை சிந்தாமணி மெல்லிய அதிர்வோடு பார்த்தார் என்றால், யசோதினி பொருள் விளங்காப் பார்வை பார்த்தாள்.

அது கருத்தில் பதிந்தாலும் கவனத்தில் எடுத்து யோசிக்க நேரமில்லாமல், “இது பள்ளிக்கூடம் முடியிற நேரம். கராஜ் காரன் வர எவ்வளவு நேரமாகுமோ தெரியா. நீங்க போங்கோ. இல்ல, உங்க மூண்டுபேரையும் ஒரு ஆட்டோ பிடிச்சு அனுப்பிவிடுறன்.” என்றவன், ஆட்டோ ஏதும் வருகிறதா என்று வீதியை அலசினான்.

அவளை ஆட்டோவில் அனுப்பிவிட்டு அவளின் ஸ்கூட்டியை என்ன செய்வானாம்? முகத்தில் அடித்தாற்போல் பேசுகிறவனுக்கு மண்டைக்குள் ஒன்றுமில்லை போலும்! “அதெல்லாம் வேண்டாம். நீங்க வாங்கோ அன்ட்ரி. தூரி முன்னுக்கு வாம்மா.” என்றாள் யசோ.

சிந்தாமணி எழுந்துகொள்ள, தூரிகாவும் துள்ளிக்கொண்டு இறங்கி வந்து முன்னால் ஏறிக்கொண்டாள்.

“ரெண்டு பேரையும் கூட்டிக்கொண்டு போறது பயம். அவா என்னோட நிக்கட்டும். நான் கூட்டிக்கொண்டு வாறன்.” என்றான் அவன் மீண்டும்.

அப்படி, அவனை நம்பி மகளை விட்டுவிட்டுப் போவாள் என்று நினைத்தானாமா? யசோ மறுத்துரைக்கும் முன், “நான் இப்பிடி நிப்பன் அங்கிள். அம்மம்மாவையும் ஏத்திக்கொண்டு அம்மா எங்களை நெடுக இப்பிடிக் கூட்டிக்கொண்டு போறவா.” என்று வேகமாகப் பதில் சொன்னாள் தூரிகா.

சின்னவள் அப்படிச் சொன்ன பிறகு அவனால் ஒன்றும் சொல்ல முடியாமல் போயிற்று. ஆனாலும், மனத்தில் இருந்த பயத்தில், “கவனம். வேகமாப் போகாதீங்க. அம்மாக்கு ஸ்கூட்டி பழக்கம் இல்ல.” என்றான்.

யசோதினிக்கு உள்ளூர எரிச்சல்தான் உண்டாயிற்று. அப்போதும் அவனுக்குப் பதில் சொல்லாது, “அன்ட்ரி, பயப்பிடாம என்னை இறுக்கிப் பிடிச்சுக் கொள்ளுங்கோ. நான் மெதுவாத்தான் போவன், சரியா. ஏதும் எண்டால் உடனே சொல்லவேணும்.” என்றுவிட்டு, மிக லாவகமாக, அவர் பயப்படாத வகையில் ஸ்கூட்டியைச் செலுத்தினாள்.

முகத்தில் படர்ந்த சினத்துடன் போகிறவர்களையே பார்த்திருந்தான் அகத்தியன். கோபத்தை விடுத்து அவன் பேசியும் பதில் சொல்லவில்லையே அவள். அவ்வளவு திமிர். அவள் மீதிருந்த எரிச்சலையும் தாண்டிக்கொண்டு, அவள் ஸ்கூட்டியை வலு கவனமாகச் செலுத்துவது கவனத்தில் பதிந்தது.

அதன் பிறகுதான் அன்னையும் அவளும் அவனை ஏன் அப்படிப் பார்த்தார்கள் என்று யோசித்தான். அவளைத் தெரியுமா என்று கேட்டபோதுதான் பாத்தார்கள். அப்படியானால் அவனுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டும். இவளை எங்கே பார்த்தேன் என்று ஓடிய சிந்தனை, அந்த அம்மா மகள் சோடி கோயிலில் பார்த்தவர்களை நினைவூட்டிவிட, ‘அட! அந்த இரண்டு பெண் பிள்ளைகளின் அம்மா.’ என்று கண்டுபிடித்தது.

அதற்குமேல் அவளைப் பற்றி யோசிக்க அவனுக்கு நேரமில்லை. கராஜ்காரனிடம் பைக்கை ஒப்படைத்துவிட்டு, போகிறவழியில் பற்றிஸ், வடை இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் கட்டிக்கொண்டு ஆட்டோவில் வைத்தியசாலைக்குச் சென்று சேர்ந்தான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அதற்குள் சிந்தாமணியை வைத்தியரிடம் காட்டி, அவரை வோர்ட்டில் சேர்ப்பித்திருந்தாள் யசோதினி. களைத்துத் தெரிந்தவருக்கு ஏதாவது அருந்த வாங்கி வரலாம் என்று அவள் செல்ல, அங்கேயே அமர்ந்திருந்த தூரிகாவைத் தன்னருகே அழைத்தார் சிந்தாமணி.

“பிள்ளைக்கு என்ன பெயர்?”

“கி. தூரிகா.”

முகத்தில் முறுவல் அரும்ப, “எத்தினையாம் வகுப்புப் படிக்கிறீங்க?” என்று, அவள் தலையை வருடிவிட்டபடி வினவினார்.

“தரம் மூண்டு.”

“பிள்ளை கெட்டிக்காரி போல இருக்கே. பாட்டுப் பாடத் தெரியுமா?”

“ஓ! தோட்டம் நல்ல தோட்டம் பாடவா?” ஆர்வமாக வினவினாள் அவள்.

“ம் பாடுங்கோ பாப்பம்.”

“தோட்டம் நல்ல தோட்டம்
நம்மைச் சொக்க வைக்கும் தோட்டம்
கூட்டமாக நாமும் ஒன்றாய்க்
கூடி ஆடும் தோட்டம்
வண்ண வண்ண மலரால்
நம்மை மகிழ வைக்கும் செடிகள்
தின்ன தின்னப் பழங்கள்
மேலும் தின்னக் கொடுக்கும் மரங்கள்” என்று, வகுப்பில் சத்தமாகப் பாடுவது போலவே பாடியவளை, அப்படியே அள்ளியணைக்கும் ஆசை உண்டாயிற்று.

அப்போதுதான் அங்கே வந்து சேர்ந்தான் அகத்தியன். அவள் பாடிய சத்தத்தில் அவன் முகத்திலும் முறுவல். அங்கிருந்த சிலரின் பார்வையும் சின்ன சிரிப்புடன் அவளில்தான்.

“என்னடா ஆஸ்பத்திரில பாட்டுச் சத்தம் கேக்குதே எண்டு பாத்தா எங்கட தூரிகா.” என்றவனின் பேச்சில் அவள் முகத்தில் பெரிய புன்னகை.

“நல்ல வடிவாப் பாடுறீங்க செல்லம்.” என்று பாராட்டிவிட்டு, கையில் இருந்த பையை அவளிடம் நீட்டினான்.

“இதில பற்றிசும் வடையும் இருக்கு. பிள்ளைக்குத்தான்.”

“இல்லை அங்கிள். வேண்டாம். அம்மா சாப்பாடு பார்மசில வச்சிருக்கிறா.” என்று மறுத்தாள் அவள்.

“இருந்தா என்ன? அதோட சேத்து இதையும் சாப்பிடுங்கோ.”

“இல்ல, வேண்டாம்.” தலையையும் பெரிதாக மறுத்து அசைத்துச் சொன்னாள் அவள்.

அப்போது, ஏதோ ஒரு பானத்தைக் கொண்டுவந்தாள் யசோதினி. அங்கே நின்ற அகத்தியனைக் கண்டது போலவே காட்டிக்கொள்ளாமல், “கொஞ்சமாக் குடிங்கோ அன்ட்ரி. குடிச்சிட்டு மருந்தைப் போடுங்கோ. பெரும்பாலும் பின்னேரம் வீட்டை விட்டுடுவினம் எண்டு நினைக்கிறன்.” என்றாள்.

“விட்டுட்டா நல்லமாச்சி. என்னால இங்க நிக்கேலாது.” அவள் தந்த பானத்தைப் பருகியபடி சொன்னார்.

“இருங்கம்மா, டொக்டரப் பாத்துக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு அகத்தியன் போக, “அப்ப நாங்க வெளிக்கிடட்டுமா அன்ட்ரி?” என்று வினவினாள் யசோதினி.

“ஓமாச்சி. உங்களுக்கு நேரமாகுது என்ன? பிள்ளையும் இன்னும் சாப்பிடேல்லை. நீங்க செய்தது பெரிய உதவியம்மா.” என்றவருக்கு இந்தப் பெண்ணைத்தானே வேண்டாம் என்றோம் என்று மனத்தில் குத்தியது.

அதற்கென்று இப்போதும் சம்மதிக்க முடியவில்லை.

அதில், “போதும் போதும் எண்டுற அளவுக்குக் குடும்பச் சுமையச் சுமந்திட்டான். கலியாண வாழ்க்கைலயும் அவன் பட்டது நிறைய. இனி அமையிற வாழ்க்கையாவது நல்லதா அமையவேணும் எண்டுதான் உங்களை வேண்டாம் எண்டு சொன்னனாங்க. அதைக் குறையா நினைக்காதீங்கோம்மா.” என்றார் கெஞ்சலாக.

முதலில் இதை ஏன் சொல்கிறார் என்று அவளுக்கு விளங்கவில்லை. அடுத்த நொடியே, தான் எதையோ அவரிடம் எதிர்பார்த்துத்தான் இந்த உதவியைச் செய்ததாக நினைத்துவிட்டாரோ என்று தோன்றியதும் முகம் மாறாமல் காப்பது பெரும் சிரமமாயிற்று.

அவரை நேராகப் பார்த்து, “அந்த இடத்தில நீங்க இல்ல வேற ஆர் நிண்டிருந்தாலும் நான் இதத்தான் செய்திருப்பன் அன்ட்ரி. அப்பிடி நான் செய்ததுக்குப் பின்னால, ஏலாம இருந்த ஒரு வயதான அம்மாவுக்கு உதவுற எண்ணம் மட்டும்தான் இருந்ததே தவிர, வேற ஒண்டும் இல்ல. அந்தளவுக்கு மோசமான குணம் எனக்கில்லை. தயவு செய்து நீங்களும் அப்பிடி நினைச்சிராதீங்கோ.” என்றாள் தெளிவாக.

“ஐயோ இல்லையம்மா. நானும் உங்களப் பிழையா நினைக்க…” என்றவரை இடைமறித்து, “கிட்டத்தட்ட என்ர அம்மான்ர வயசு உங்களுக்கு. பெருசாப் பழக்கம் இல்லாட்டியும் உங்களத் தெரியும் எனக்கு. அதாலதான் பாத்திட்டும் பாக்காத மாதிரிப் போக மனம் வரேல்ல. இதைத் தவிர வேற எந்த நோக்கமும் எனக்கு இல்ல அன்ட்ரி.” என்று இன்னும் தெளிவாக அவள் சொன்னபோது, அங்கு வந்து சேர்ந்தான் அகத்தியன்.

அதற்குமேல் அங்கு நிற்கவில்லை அவள். “சரி அன்ட்ரி, உடம்பப் பாத்துக்கொள்ளுங்கோ. நாங்க வாறம்.” என்றுவிட்டு மகளோடு புறப்பட்டாள்.

அப்போதுதான் கையில் இருந்த பையை உணர்ந்து, “இது உங்கட மகளுக்குத்தான் வாங்கினான். வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டா. சாப்பாடு பார்மசில இருக்காம்.” என்று, அதை அவளிடம் நீட்டினான்.

அவளும் வாங்கவில்லை. தாய் ஒரு விளக்கம் சொல்ல, மகன் உணவு வாங்கித் தந்து கடனைத் தீர்க்கப் பார்க்கிறானா?

உள்ளுக்குள் எழுந்த சீற்றத்தை அடக்கி, “உண்மைதான். அங்க சாப்பாடு இருக்கு. பிறகு அதைக் கொட்டவேண்டி வந்திடும். அதைவிட, இது எதையும் எதிர்பாத்து நான் எதையும் செய்யேல்ல.” என்றுவிட்டு நடந்தாள் அவள்.

குழம்பிப்போனான் அகத்தியன். “சின்ன பிள்ளை சாப்பிடேல்லை, எங்களுக்காக மினக்கெடுறா எண்டுதானேம்மா இத வாங்கினான். அதுக்கேன் இப்பிடிச் சொல்லிப்போட்டுப் போறா.” என்றான் ஒன்றும் விளங்காமல்.

“அது… என்னாலதான் தம்பி.” என்றவர் நடந்ததைச் சொல்ல, “என்னம்மா நீங்க?” என்றான் அவன் சலிப்புடன்.

“அவா செய்தது எவ்வளவு பெரிய உதவி. அதுவும் தேவையான நேரத்தில. அதைக் கேவலப்படுத்திற மாதிரி எல்லாம்மா கதைச்சிருக்கிறீங்க. முதல் ஏன் இதையெல்லாம் கதைக்கப் போனனீங்க?” என்றவனுக்கு அவள் கோபத்தில் இருக்கும் நியாயம் புரிந்தது.

“இல்லையப்பு. நானும் வேணுமெண்டு சொல்லேல்ல. அவா கலியாணத்துக்குப் பாத்துக்கொண்டு இருக்கிற பிள்ளை. உனக்கும் நாங்க பாக்கிறோம் எண்டு தெரிஞ்சிருக்கும். அதில, வீணா ஆசைய வளத்திடக் கூடாது என்டுதானப்பு சொன்னனான். அது இப்பிடியாகும் எண்டு நினைக்கேல்ல.” என்றவருக்கும் இப்போது, அப்படிக் கதைத்திருக்க வேண்டாம் என்றுதான் தோன்றிற்று.

“அருமையான பிள்ளை தம்பி. நானும் விழுத்திப்போடுவாவோ எண்டு பயந்தனான். ஆனா, அவ்வளவு பக்குவமா கூட்டிக்கொண்டு வந்தவா. தாய்க்காரி ஸ்கூட்டியை நிப்பாட்டிப்போட்டு வாறதுக்கிடையில, சின்னவா கவனமா வாங்கோ அம்மம்மா எண்டு கையப் பிடிச்சுக் கூட்டிக்கொண்டு வந்தவா. பக்கத்திலேயே நிண்டு எல்லாம் கவனிச்சுச் செய்தவா. சின்னவளும் ஒரு குழப்படி செய்யேல்ல.”

“அப்பிடியெல்லாம் செய்தவாக்குத்தான் நீங்க இப்பிடிக் கதைச்சிருக்கிறீங்க.” என்று கடிந்தான் அவன்.

அவர் முகம் வாடிப்போயிற்று.

அதுவும் பிடிக்காமல், “சரி விடுங்க. திரும்ப எப்பயாவது பாத்தா நல்லாக் கதைங்க.” என்றான்.

“ஓம் அப்பு. ஒருக்கா வீட்டுக்குக் கூப்பிட்டுச் சாப்பாடு குடுக்கோணும். உண்மையாவே கெட்டிக்காரி. ஆம்பிளைத் துணை இல்லாம, வேலையும் பாத்து, ரெண்டு பிள்ளைகளையும் நல்லபடியா வளக்கிறது எல்லாம் இந்தக் காலத்தில சாதாரண விசயம் இல்லையப்பு. ரோசக்காரியும்.”

ரோசக்காரிதான். இல்லாமல் அம்மா சொன்னதற்கு அவனிடம் காய்ந்துவிட்டுப் போவாளா?
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 9


இந்திரா மீண்டும் தாய்மை அடைந்திருந்தாள். யாருமே எதிர்பாராத, மிக இனிமையான அதிர்ச்சி. அவர்களின் வீடே வெளிச்சம் போட்டது போன்று பிரகாசமாயிற்று.

தாமினியின் மூன்றாவது வயதிலிருந்தே ஆவலாக எதிர்பார்த்து, நடக்காமல் போய், ஒரு குழந்தைதான் போலும் என்று ஏற்றுக்கொண்ட பின் இது நிகழ்ந்திருந்தது. கணவனும் மனைவியும் சந்தோசத்தில் திக்குமுக்காடி நின்றனர்.

விவாகரத்தானதிலிருந்து சவீதா இங்கு வருவதில்லை. நல்ல நாள்கள், விசேச நாள்கள் என்றால் மட்டும் தவமலரும் கதிரேசனும் வந்துவிட்டுப் போவார்கள். இந்தமுறை, செய்தி அறிந்த தவமலர், சவீதாவையும் அழைத்துக்கொண்டு வந்தார். அங்கிருந்த எல்லோர் முகமும் மாறிப் போயிற்று.

திகைப்பும் செய்வதறியாத தடுமாற்றமுமாகத் திரும்பி அகத்தியனைப் பார்த்தாள் இந்திரா. முகம் இறுக, எழுந்து உள்ளுக்கு நடந்தான் அவன். மருமகன் வீட்டினரைக் கவனித்தேயாகவேண்டிய கட்டாயத்தில்
அவர்களை வரவேற்று, அமரவைத்தார் சிந்தாமணி.

கஜேந்திரனுக்கும் அந்தக் கடினமான சூழ்நிலையைக் கையாள்வது சிரமமாக இருந்தாலும், மீண்டுமொருமுறை தந்தையாகியிருக்கும் சந்தோசமான இந்த நேரத்தில் அவனும் ஒன்றும் சொல்லவில்லை.

அதன்பிறகு, அடிக்கடி அவளோடு வந்துபோனார் தவமலர். இந்திராவும் சிந்தாமணியும் தடுக்க முடியாமல் நின்றனர்.

கஜேந்திரன் வேறு, “அவள் செய்தது எல்லாம் பிழைதான். எனக்கும் அவன்ர வாழ்க்கை இப்பிடியானதில சரியான கவலைதான் இந்திரா. அதுக்காக இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஒதுக்கி வைக்கிறது, சொல்லு? அதோட, நீ எப்பிடி உன்ர தம்பிக்கு அக்காவோ அப்பிடித்தான் அவளுக்கு அண்ணி. அதுக்கேற்ற மாதிரிக் கொஞ்சம் சமாளிச்சு நடக்கப்பார்.” என்று சொல்லிவிட, இந்திராவால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.

அதன்பிறகு, மெல்ல மெல்ல எந்தத் தயக்கமும் இல்லாமல் வந்துபோக ஆரம்பித்தாள் சவீதா. ‘அண்ணி, இது நீங்க கட்டாயம் சாப்பிட வேணுமாம், உடம்புக்கு பலம் சேர்க்குமாம் எண்டு அம்மா தந்துவிட்டவா.’ என்று சொல்லிக்கொண்டு, அடிக்கடி எதையாவது கொண்டுவந்தாள்.

இந்திராவை உடற்சோர்வோடு சேர்த்து இதுவும் எரிச்சலாக்கிற்று. “எனக்கு ஒண்டும் வேண்டாமாம் எண்டு சொல்லிவிடு சவீதா. இல்லாட்டியும் அம்மா இருக்கிறா, செய்து தருவா. மாமிக்கு ஏன் வீண் சிரமம்?” என்று சொல்லிப்பார்த்தாள்.

“நல்ல கதையா இருக்கே அண்ணி. பிறக்கப்போறது எங்கட வீட்டு வாரிசு. நாங்க கவனிக்காம ஆரு கவனிக்கிறது? எனக்கும் அம்மாக்கும் உங்களுக்குச் செய்றதை விட வேற என்ன வேல இருக்கு?” என்றவளின் வாயிலேயே குத்தவேண்டும் போலிருந்தது இந்திராவுக்கு.

அதுவும், அகத்தியன் வரும் நேரங்களைக் கணித்து வந்து நிற்பதும், இயல்பு போன்று, ‘சாப்பாடு போடவா அகத்தியன்’, ‘தேத்தண்ணி குடிக்கிறீங்களா?’ என்று அவனைக் கவனிக்க முயல்வதும் என்று, அவர்கள் மூவருக்கும் சொந்த வீட்டையே நரகமாக்கிக்கொண்டிருந்தாள் அவள்.

அதிலிருந்து, வீட்டில் இருக்கும் நேரத்தைச் சுருக்கிக்கொள்ள ஆரம்பித்தான் அகத்தியன். முப்பதின் பின்பகுதிக் காலத்தில் கருவுற்றிருப்பதால் இந்திரா வேலையை விட்டிருந்தாள். அதில், கஜேந்திரனுக்கு நேரமில்லாத நாள்களில் தாமினியை அழைத்துவரும் பொறுப்பை ஏற்றிருந்தான் அவன். அவளைக் கொண்டுவந்து விட்டுவிட்டு, உணவையும் முடித்துக்கொண்டு போவது வசதியாக இருந்தது.

இப்போதெல்லாம் பகலில் வருவதேயில்லை. தாமினியையும் தன்னுடன் கடையிலேயே வைத்துக்கொண்டான். பகல் உணவைக் கடையில் உண்டான்.

அதைத் தாங்க முடியாமல், “இப்பிடி சவீதா அடிக்கடி வந்து போறது சரியா வராது கஜன். அவன் சாப்பிடக்கூட வீட்டுக்கு வாறானே இல்ல.” என்று கணவனிடம் சொன்னாள் இந்திரா.

“என்ன கதைக்கிறாய் நீ? அவன் வராட்டி வரச்சொல்லி அவனிட்டச் சொல்லு. என்ன இருந்தாலும் அவள் என்ர தங்கச்சி. ஒரேடியா வெட்டிவிடேலாது. இங்க நடக்கிற நாலு நல்லது கெட்டதுக்கு அவள் வந்து போகத்தான் வேணும். அப்ப எல்லாம் என்ன செய்யப் போறானாம் உன்ர தம்பி? அவே ரெண்டு பேருக்கையும் இருந்த உறவு முடிஞ்சிது. இப்ப அவள் என்ர தங்கச்சி. அவன் உன்ர தம்பி. அத மட்டும் மனதில வச்சு நடக்கச் சொல்லு!” என்று கண்டிப்புடன் சொல்லிவிட, அதற்குமேல் அவளால் ஒன்றும் செய்ய இயலாமல் போயிற்று.


*****


தாமினியைப் பள்ளிக்கூடத்துக்கு விடப் போகும்போதோ, அழைத்துவரச் செல்லும்போதோ பள்ளிக்கூட வாசலில் வைத்து யசோதினியை அடிக்கடி காண்பான் அகத்தியன். அறிந்தவன் என்று சிறு தலையசைப்பைக் கூடத் தரமறுப்பாள் அவள். அதற்குக் காரணம் அன்னையின் பேச்சு என்று தெரிந்தது. அவனாக நாடிச்சென்று விளக்கம் கொடுக்க ஏதோ ஒன்று தடுத்தது. அதில் அவனும் ஒதுங்கிக்கொண்டான்.

ஆனால் அன்று, அவளைக் காண்போமா என்று விழிகளால் அலசினான். அவளும் வந்தாள். தாமினி முதலாம் வகுப்பு என்பதில் முதலே வந்திருந்தாள். இருந்தாலும் காத்திருந்தான். தூரிகா வந்ததும் தன் பைக்கை அவளருகில் கொண்டுசென்று நிறுத்தினான்.

சிறு திகைப்பும் கேள்வியுமாகத் திரும்பிப் பார்த்தாள் அவள். அந்தப் பார்வை கருத்தில் பதிந்தாலும் காட்டிக்கொள்ளாமல், ஒரு மருந்துச் சீட்டினை சட்டைப் பொக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டி, “இது உங்கட பார்மசில இருக்கா? ஒரு மூண்டு இடத்தில கேட்டுட்டன். இல்லை எண்டு சொல்லிட்டினம். அக்காக்கு அவசரமா வேணும்.” என்றான்.

வாங்கிப் பார்த்தாள். தாய்மையுற்ற பெண்கள் எடுப்பது என்று பெயரைப் பார்க்கவே விளங்கிற்று. “இருக்கவேணும். எதுக்கும் பொறுங்கோ, கேட்டுட்டுச் சொல்லுறன்.” என்றவள், உடனேயே மகிளாவுக்கு அழைத்து விசாரித்துவிட்டு, “இருக்காம். நான் எடுத்து வைக்கிறன். நேரம் இருக்கேக்க வந்து வாங்குங்கோ.” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.

இந்த இடைவெளிக்குள் இருவரின் பின்னேயும் அமர்ந்திருந்த சின்னவர்கள், தமக்குள் அறிமுகமாகி இருந்தனர். அவர்களும் கையாட்டி விடைபெற்றுக் கொண்டனர்.

அவள் ஸ்கூட்டியை கொண்டு சென்று பார்மசி வாசலில் நிறுத்த, அதனருகில் அகத்தியனின் பைக்கும் வந்து நின்றது. இதை எதிர்பாராத யசோ, என் பின்னாலேயே வந்தானா என்கிற புருவச் சுளிப்புடன் திரும்பிப் பார்த்தாள்.

அகத்தியனுக்கு எரிச்சல்தான் மிகுந்தது. என்ன இது, எப்போது பார்த்தாலும் இப்படிப் பார்ப்பது? அவனை என்ன, விடலைப் பெடியன் போன்று அவள் பின்னால் சுற்றுவதாக நினைக்கிறாளா?

“இப்பவே வாங்கி வச்சிட்டா எனக்கு ஈஸி. இன்னொருக்கா வந்துபோக நேரமிருக்காது. அதோட, நீங்க எந்த பார்மசில வேலை செய்றீங்க எண்டும் எனக்குத் தெரியாது.” என்றான் எரிச்சலை அடக்கிய குரலில்

அப்போதுதான் தன் தவறு புரிய, “சொறி!” என்றாள் முணுமுணுப்பாக. கையோடு, அவனுக்குத் தேவையான மருந்தை எடுத்துக்கொடுத்தாள். இதற்குள், தூரிகாவுடன் நன்றாகச் சேர்ந்துகொண்ட தாமினிக்கு அங்கிருந்து போக மனமில்லை.

“நீங்களும் வாறீங்களா? என்ர மாமா, கடைல கரம்போர்ட் வச்சிருக்கிறார். விளையாடலாம்.” தூரிகாவிடம் ஆசையாக வினவினாள்.

தூரிகாவுக்கும் போக ஆசையாகத்தான் இருந்தது. அனுமதிக்காக அன்னையைப் பார்த்தாள்.

மகளின் அந்த ஆவல் நிறைந்த பார்வை, யசோதினியைப் பாதித்தது. ஆனால், மகளை அனுப்பி அவர்கள் மகனைப் பிடிக்கப் பார்க்கிறாள் என்கிற பேச்சு வந்தாலும் வரும் என்று உள்ளே ஓட, “அவாக்கு நேரமில்ல செல்லம். ஹோம்வேர்க் செய்யோணும். படிக்கோணும். வாற கிழமை மன்த்லி எக்ஸாம் வேற வருது.” என்று, நல்லபடியாகவே சின்னவளிடம் சொன்னாள்.

“கொஞ்ச நேரம் விளையாடிப்போட்டுப் படிக்கிறோம் அன்ட்ரி. ப்ளீஸ்!”

அப்படி அவள் தலை சரித்துக் கெஞ்சியபோது யசோவுக்கு மறுக்க மனமேயில்லை. ஆனாலும் கூட, “இல்லை அம்மாச்சி. எனக்கு அது சிரமமடா. இன்னொரு நாளைக்குப் பாப்பம். சரியா?” என்றாள் கனிவாகவே.

முதலாளிக்குப் பிடிக்காது என்பதில் அவளை இங்கே நின்று தூரிகாவுடன் விளையாடும்படி சொல்லவும் முடியவில்லை.

ஒற்றைப் பிள்ளையாக இருந்து, செல்லம் கொஞ்சி அனைத்தையும் சாதித்துப் பழகிய தாமினியும் விடுவதாக இல்லை. “இன்னொரு நாளைக்கும் வரட்டும் அன்ட்ரி. இண்டைக்கும் விடுங்கோ, ப்ளீஸ் ப்ளீஸ்.” என்று கெஞ்சினாள்.

“இப்பிடிக் கெஞ்சினா அன்ட்ரி பாவமெல்லா. எக்ஸாம் எல்லாம் முடியட்டும். பிறகு ஒரு நாளைக்குக் கட்டாயமா விடுறன். ஓகே!” என்று முடித்தாள்.

தாமினியின் முகம் அப்படியே வாடிப்போயிற்று. அவள் விடமாட்டாள் என்று உறுதியாகத் தெரிந்துவிட்டதில் சரியென்று தலையசைத்தாள்.

இதையெல்லாம் பார்த்திருந்த அகத்தியனுக்குக் கோபம்தான் வந்தது. சின்ன பிள்ளைகள், ஒரு கொஞ்ச நேரத்திற்குச் சேர்ந்திருந்து விளையாடினால்தான் என்ன? “தாமினி நாலுமணி வரைக்கும் நிப்பா. பிறகு, அத்தான் வந்து கூட்டிக்கொண்டு போயிடுவார். அதுக்குப் பிறகு நானே தூரிகாவைக் கொண்டுவந்து விட்டுவிடுறன்.” என்று தானும் கேட்டுப் பார்த்தான்.

“நேரமில்லை எண்டு கொஞ்சத்துக்கு முதல்தான் சொன்னீங்க.” என்றாள் அவள் உடனேயே.

அவன் முகம் மெலிதாகக் கன்றிற்று. மேலே அவனைக் கதைக்கவும் விடாமல், “அது எப்பிடியும் சரிவராது. விடுங்கோ!” என்றுவிட்டாள் அவள்.

பார்வையாலேயே எரித்துவிட்டுப் போனான் அகத்தியன். ஒரு சின்ன பெண்ணுக்கு மனமிரங்காத இவள் எல்லாம் என்ன பெண்?
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom